அலை ஓசை/பிரளயம்/சீதாவின் பெருமிதம்

விக்கிமூலம் இலிருந்து

பன்னிரண்டாம் அத்தியாயம் சீதாவின் பெருமிதம்

"சீதா! வாடி, அம்மா! நான் சகல விஷயமும் கேள்விப்பட்டேன்! மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயிக்கிறதற்காக நீ ரொம்பப் பாடுபடுகிறாயாம், எனக்கு ரொம்ப சந்தோஷம். சொந்த மனுஷாள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்? இந்த மாதிரி சமய சந்தர்ப்பத்துக்கு ஒத்தாசை செய்வதற்காகத்தானே பந்துக்கள் வேண்டும் என்கிறது?" என்றாள் சரஸ்வதி அம்மாள். சூரியா சொன்னதிலிருந்து மாமியின் மனோபாவத்தைச் சீதா கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்த போதிலும் சரஸ்வதி அம்மாள் இவ்வளவு அன்பும் ஆதரவுமாகப் பேசியது சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "மாமி! நீங்கள் வந்துவிட்டீர்கள் அல்லவா! என்னுடைய தலைப்பொறுப்பு நீங்கிற்று. இனிமேல் எல்லாம் உங்கள் பாடு! இன்னும் இரண்டு நாளில் நான் ஊருக்குப் புறப்பட வேண்டும்!" என்று சொன்னாள். "ஊருக்குக் கிளம்புகிறாயா? அழகாய்த் தானிருக்கிறது! நான் வந்துவிட்டேனே என்று சொல்கிறாயா? நான் நாளைக்கே ஊருக்குப் போய்விடுகிறேன், சீதா!...." "மாமி! மாமி! சத்தியமாய் நான் அதற்காகச் சொல்லவில்லை. உங்கள் பேரில் எனக்கு என்ன விரோதமா? எப்போதாவது உங்க ளுடைய வார்த்தையை எதிர்த்து நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா? உண்மையாகவே நான் ஊருக்குப் போக வேண்டும் என்றிருக்கிறேன்..." "எல்லாம் மாப்பிள்ளைக்கு எலெக்ஷன் ஆன பிற்பாடு போகலாம். நீ சொல்லித்தான் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறாராம். நீ மீட்டிங்கில் பேசுகிறாயாம்; பாடுகிறாயாம். உன்னால்தான் மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகப் போகிறதென்று இந்த ஜில்லாவெங்கும் பேச்சாயிருக்கிறது. அப்படியிருக்க, நீ திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்றால், மாப்பிள்ளைக்கு யார் ஒத்தாசை செய்வார்கள்?"

"உங்களுடைய மாப்பிள்ளைக்கு யாருடைய ஒத்தாசையும் வேண்டியதில்லை. அவருடைய சாமர்த்தியத்துக்கு இன்னொருத்தரின் ஒத்தாசை எதற்கு? அதிலும் என்னால் என்ன பிரமாதமாகச் செய்துவிட முடியும்? உங்களுடைய பெண் லலிதா அடிக்கடி 'அஸ்து' சொல்லாமலிருந்தால் அதுவே மாப்பிள்ளைக்கு பிரமாத ஒத்தாசையாயிருக்கும். இந்த அதிசயத்தைக் கேளுங்கள், மாமி! உங்கள் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறது பற்றி இந்த தேவபட்டணத்தில் உள்ள அத்தனை ஜனங்களும் சந்தோஷப்படுகிறார்கள். யாரிடம் இவர் போனாலும் 'உங்களுக்குத்தான் எங்களுடைய ஓட்டு!" என்று சொல்லுகிறார்கள். ஆனால் லலிதாவுக்கு மட்டுந்தான் இது ஒன்றும் பிடிக்கவில்லை. ஓயாமல் முணு முணுத்துக் கொண்டிருக்கிறாள். மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றதனால் ஏதோ குடி முழுகிப் போய்விட்டது போல் சண்டை பிடிக்கிறாள். அவருக்கும் 'சீ!' என்று போய் விடுகிறது! அவர் மனம் வெறுத்து 'எனக்கு இந்த எலெக்ஷனும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம்! எங்கேயாவது காசி ராமேஸ்வரத்திற்குப் போய் விடுகிறேன். இல்லாவிட்டால் திருவண்ணாமலைக்குப் போய் ரமண ரிஷிகளின் ஆசிரமத்தில் சேர்ந்துவிடுகிறேன்' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். இன்று காலை முதல் பாருங்கள், இரண்டு பேருக்கும் ஒரே சண்டை!...." சரஸ்வதி அம்மாள் கோபத்தோடு தன் குமாரி லலிதாவைப் பார்த்து, "ஏண்டி லலிதா! இப்படித்தான் செய்கிறதா? அழகாயிருக்கிறதடி! உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன? யாராவது கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கூத்தடிக்கிறாயா? இனிமேல் அந்த மாதிரியெல்லாம் வாயைத் திறந்து சொல்லக் கூடாது! இல்லா விட்டால், இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு!"

"சரி, அம்மா! நான் போய்விடுகிறேன்!" என்று லலிதா விளையாட்டுப் புன்சிரிப்புடன் கூறினாள். "பார்த்தீர்களா, மாமி இவள் சொல்வதை? ஊருக்குப் போய் விடுகிறாளாம்! நன்றாயிருக்கிறதல்லவா கதை? நாளைக்கு மாப்பிள்ளை எலெக்ஷனில் ஜயித்ததும், இவளைச் 'சேர்மனுடைய ஒயிப்' என்றும், 'மிஸ்ஸஸ் சேர்மேன்' என்றும் கொண்டாடப் போகிறார்களா? வேறு யாரையாவது கொண்டாடப் போகிறார்களா? டீ பார்ட்டி களுக்கும் டின்னர்களுக்கும் இவளை அழைத்து மாலை போடப் போகிறார்களா? வேறு யாரையாவது அழைத்து மாலைப் போடப் பாகிறார்களா? 'எங்கள் வீட்டுக் கலியாணத்துக்கு வரவேண்டும்', 'எங்கள் வீட்டுக் கிரஹப்பிரவேசத்துக்கு வரவேண்டும்' என்று இவளை வருந்தி வருந்தி அழைக்கப் போகிறார்களா? வேறு யாரையாவது அழைக்கப் போகிறார்களா? குரூப் போட்டோ வில் இவள் அகத்துக்காரர் பக்கத்தில் ஜம்மென்று உட்காரப் போகிறாளா? வேறு யாராவது உட்காரப் போகிறார்களா? அதெல்லாம் தெரியாமல் இவள் ஓயாமல் ஏதாவது நிஷ்டூரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் இவளுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டும்!" "கொஞ்சம் சொல்கிறது என்ன? நிறையச் சொல்லுகிறேன். இவள் மாத்திரம்தான் இப்படி என்று நினைக்காதே. இவளுடைய அண்ணா இருக்கிறானே, உன்னுடைய அம்மாஞ்சி சூரியா, அவனும் இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறான். எலெக்ஷனுக்கு நின்று விட்டதால் ஏதோ குடி முழுகிவிட்டது போல உளறுகிறான். 'வாயை மூடிக் கொண்டிரு! மாப்பிள்ளையிடம் ஏதாவது உளறி வைக்காதே!' என்று கண்டித்து அவனை அழைத்துக்கொண்டு வந்தேன்.

அண்ணாவும் தங்கையும் ஒரே அச்சு. இரண்டு பேரும் அப்பாவைக் கொண்டு பிறந்துவிட்டார்கள்! பிதிரார்ஜித நிலங்களையெல்லாம் பிரித்து ஆட்படைகளுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார் பாரு! அப்பாவைப் போலத்தான் பெண்ணும் பிள்ளையும் இருப்பார்கள். எலெக்ஷனுக்கு நிற்கக்கூடாதாம்; பணங்காசு சம்பாதிக்க கூடாதாம். ஆனால் ஜெயிலுக்கு மட்டும் போக வேண்டுமாம்! அடியே, சீதா! உனக்கு இருக்கிற புத்தியிலே எட்டிலே ஒன்று இவர்களுக்கு இருக்கக் கூடாதா?" சீதாவின் உடல் பூரித்தது; உள்ளத்தில் கர்வம் ஓங்கி வளர்ந்தது. தன்னைக் கண்டால் வேப்பங்காயைப் போல் கசந்து கொண்டிருந்த மாமி இப்படித் தன்னைச் சிலாகிக்கும் காலம் ஒன்று வரும் என்று சீதா கனவிலும் எண்ணியதில்லை. அப்படிப்பட்ட காலம் வந்தே விட்டது! இதை நினைத்துச் சீதாவின் நெஞ்சம் பெருமிதத்தினால் வெடித்து விடும் போல் விம்மியதில் வியப்பில்லையல்லவா! லலிதாவுக்கோ அம்மாவின் பேச்செல்லாம் ஒரு விதத்தில் கசப்பாயும் இன்னொரு விதத்தில் சந்தோஷ மாயும் இருந்தது. அம்மாவின் அப்பட்டமான சுயநலப் பேச்சுக் கசப்பாயிருந்தது. தன் அருமைத் தோழியின் விஷயத்தில் அம்மாவின் மனோ பாவம் மாறியது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அளித்தது. இந்த ஒரு நல்ல பயனுக்காகவே தன் புருஷன் தேர்தலுக்கு நின்றது சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது.

"அம்மா! இத்தனை நாளைக்குப் பிறகு இப்போதாவது நீ அத்தங்காள் நல்லவள் என்றும் புத்திசாலி என்றும் ஒப்புக் கொண்டாயே? அதற்காக ரொம்ப சந்தோஷம்?" என்றாள். "அதென்ன அப்படிச் சொல்கிறாய், லலிதா! நான் எப்போதாவது உன் அத்தங்காளைப் பொல்லாதவள் என்றோ அசடு என்றோ சொல்லியிருக்கிறேனா? சீதா! நீயே சொல்லடி, அம்மா! உன்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒழுங்காகக் குடித்தனம் செய்து வாழவில்லையே என்று வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறேன். அது ஒரு தப்பா? அதுவும் ஏதோ அபிமானத்தினால்தான் சொன்னேனே தவிர, வேறு அவர்கள் பேரில் எனக்கு என்ன வருத்தம்? எனக்கு என்ன அவர்கள் கெடுதல் செய்துவிட்டார்கள்? ஊருக்குப் போகிற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம், சீதா! இந்த வீட்டில் இனிமேல் உன் இஷ்டப்படி ஏதாவது நடக்காவிட்டால் என்னைக் கேள்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "மாமி! அதற்காக மட்டும் நான் சொல்லவில்லை. என் குழந்தை வஸந்தியிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, பள்ளிக்கூடம் சாத்தப் போகிறார்கள் என்று. குழந்தையைப் பார்ப்பதற்கு நான் போக வேண்டாமா?" "சூரியாவைப் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வரச் சொன்னால் போகிறது. நீ மட்டும் இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் இந்தண்டை அந்தண்டை போகக் கூடாது." "நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் போக வில்லை, மாமி! சூரியாவையே போக சொல்லுங்கள். ஆனால் உங்கள் பெண்ணிடம் மட்டும் நீங்கள் கொஞ்சம் சொல்லி வையுங்கள். அவள் அபசகுணம் போல எதற்கெடுத்தாலும் 'அஸ்து' என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது..."

"லலிதாவைப் பற்றி இனிமேல் நீ கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம். லலிதா வாயைத் திறந்தால் நீ என்னைக் கேள். நாலு அறை கொடுத்து ஒரு அறையில் தள்ளிக் கதவைப் பூட்டி விடுகிறேன். நாலு வருஷமாய் மாப்பிள்ளை வருமானமே இல்லாமலிருக்கிறார். இந்த சேர்மன் வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று நம்முடைய குல தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். சீமாச்சு மாமா மெனக்கெட்டு வந்து உன்னைப்பற்றி ஏதேதோ புகார் சொன்னார். அதை யெல்லாம் நான் கேட்பேனா? 'போங்காணும்! யார் மேலாவது கோள் சொல்வதே உமக்கு வேலை! உம்முடைய வேலையைப் பாரும்!' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். சீமாச்சு மாமாவுக்கு இப்போதுள்ள சேர்மன் ஜவுளி லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தாராம். அதிலே ரொம்பப் பணம் இவருக்கு லாபமாம். இரண்டு மச்சு வீடு கட்டியாகிவிட்டது! அதற்காகப் பழைய சேர்மனுக்கு சீமாச்சு மாமா விழுந்து விழுந்து வேலை செய்கிறாராம். சிநேகம், பந்துத்வம் எல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. இந்தக் காலத்திலே காசு பணந்தான் பெரிது. சீதா! உன்னைப் போலச் சொந்த மனுஷ்யாளிடம் அபிமானத்துடன் இருப்பவர் களை நான் பார்த்ததேயில்லை. இந்தப் பெண் தத்துப் பித்து என்று என்னவெல்லாமோ பேசியிருந்தும் நீ பொறுமையா யிருந்திருக்கிறாயே? அதைச் சொல்லு! உனக்கு இவள் என்ன வேணுமானாலும் செய்யலாம். தோலைச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலும் தகும்!" என்று சொன்னாள் சரஸ்வதி அம்மாள். சீதா சற்று முன் தான் அடைந்த மனவேதனையை அடியோடு மறந்து, குதூகலத்தினால் மெய்மறந்தாள்.