அலை ஓசை/பிரளயம்/ராகவன் பகற் கனவு

விக்கிமூலம் இலிருந்து

பதின்மூன்றாம் அத்தியாயம் ராகவன் பகற் கனவு

நீலத்திரைக் கடலைக் கிழித்துக் கொண்டு நீராவிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த எஸ்.எஸ். எலிஸெபத் என்னும் பிரயாணக் கப்பல். அதில் நமது கதாநாயகன் சௌந்தரராகவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். பெரும் பிரயத்தனம் செய்து அந்தக் கப்பலில் சௌந்தரராகவன் இடம் பெற வேண்டியிருந்தது. மகாயுத்தம் முடிந்து ஒரு வருஷம்கூட ஆகவில்லை யாதலால் கப்பல்களில் பிரயாணிகளுக்கு இடம் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. யுத்தம் முடிந்து சில மாதத்துக்கெல்லாம் ராகவன் இங்கிலாந்துக்குச் சென்றான். போதிய காரணமில்லாமல் தன்னைச் சர்க்கார் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடுவது இங்கிலாந்து சென்றதன் நோக்கம். என்னதான் கம்பெனி வேலை என்றாலும், அதில் சம்பளம் எவ்வளவுதான் கிடைத்தாலும், சர்க்கார் உத்தியோகத்துக்கு ஈடாகாதென்பது ராகவனுக்குச் சீக்கிரத்திலேயே தெரிந்து போய்விட்டது. மேலும் எதற்காகத் தன் பேரில் ஒரு வீண் அபாண்டம் சர்க்கார் தஸ்தாவேஜுகளில் இருக்க வேண்டும்? யுத்தத்தில் பிரிட்டன் தோற்றுப் போய் இந்தியாவில் அரசாங்கம் மாறியிருந்தாலும் ஒருவாறு மனநிம்மதி அடைந்திருக்கலாம். ஆனால் யுத்தத்தில் பிரிட்டன் ஜயித்து இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்திருக்கிறது! அவ்விதமிருக்கும்போது சர்க்கார் உத்தியோகத்தை எப்படி அவன் அலட்சியம் செய்ய முடியும்.

ஆரம்ப காலத்தில் ராகவனுடைய பொருளாதார ஞானத்தை மெச்சி உத்தியோகம் கொடுத்த துரை இங்கிலாந் திலேதான் அச்சமயம் இருந்தார். அவரிடம் தன்னுடைய கட்சியைச் சொல்லி முறையிட்டுச் சிபாரிசு பெறலாம் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அந்த ஆசை எவ்வளவு வீண் ஆசை என்பது இங்கிலாந்துக்குப் போன பிறகு தான் தெரிந்தது. யுத்தத்தின் போது ஜெர்மன் விமானங்கள் இங்கிலாந்தின் பெரும் பகுதியைப் பாழாக்கியிருந்தன. கோடானு கோடி பணம் யுத்தத்தில் செலவான காரணத்தினால் இங்கிலாந்து 'இன்ஸால்வெண்ட்' ஆகிவிடுமோ என்று பயப்படும்படியான நிலைமையில் இருந்தது. ஆங்கில மக்கள் போதிய உணவில்லாமலும், உடையில்லாமலும் மற்ற வாழ்க்கை வசதிகள் இல்லாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் ராகவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி யார் உருகிக் கண்ணீர் வடிப்பார்கள்? அவனுடைய குறையைக் காதிலேதான் யார் வாங்கிக் கொள்வார்கள்? ராகவனுக்கு உத்தியோகம் கொடுத்து அவனைச் செல்லப் பிள்ளையைப் போல் நடத்திய துரைகூட இப்போது அவனுடைய புகாரைப் பொருட்படுத்தவில்லை. "மிஸ்டர் ராகவன்! இங்கே நாங்கள் அன்றாடம் ஜீவனம் செய்கிற பாடே பெரும்பாடாக இருக்கிறது. பெரிய பெரிய சீமான்கள் எல்லாருமே தினந்தோறும் க்யூவில் நின்று அரை ராத்தல் ரொட்டி வாங்கிக் கொண்டு வந்து காலட்சேபம் செய்யவேண்டியிருக்கிறது; நீ உனக்கு உத்தியோகம் போனதைப் பற்றிப் பிரமாதப்படுத்துகிறாய்.

உன்னுடைய புகாரை எடுத்துக்கொண்டு நான் இங்கே யாரிடமாவது சிபாரிசு செய்யப் போனால் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்! நீ வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு வேலை கிடைத்தால் நான் கூட வந்துவிடுவேன்! இங்கே நீ வீணாக அலைந்து காலங் கழிக்காதே! இந்தியாவுக்குத் திரும்பிப் போய்க் கிடைத்திருக்கும் உத்தியோகத்தைச் சரியாகக் காப்பாற்றிக் கொள்!" என்று மாஜி வரவு செலவு இலாகாத் தலைவர் கூறிய புத்திமதி ராகவனைத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. அது மட்டுமல்லாமல் துரை இன்னொரு விஷயமும் சொன்னார்:- "ராகவன்! இனிமேல் இந்தியாவில் சர்க்கார் உத்தியோகத்துக்கு முன்னைப் போல் அவ்வளவு மதிப்பு இராது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்து விடுவது என்று இங்கே தொழிற் கட்சி மந்திரிகள் தீர்மானம் செய்து விட்டார்கள். அது சரியான தீர்மானம்! ஏனெனில் எங்களால் இனிமேல் நாற்பது கோடி ஜனங்கள் உள்ள ஒரு தேசத்தைக் கட்டி ஆள முடியாது. அதற்கு வேண்டிய ஆள் பலமும் வசதிகளும் இங்கே இல்லை. இந்தியா சுதந்திரம் பெற்றால் முதலில் காங்கிரஸ்காரர்கள்தான் அதிகாரத்திற்கு வருவார்கள். காங்கிரஸ் அதிகாரத்தின் கீழ் நீ சர்க்கார் உத்தியோகம் பார்க்க விரும்ப மாட்டாய் அல்லவா?" ராகவனுடைய உள்ளம் மேலும் குழப்பத்தை அடைந்தது. துரையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆயினும் சர்க்கார் உத்தியோகம் திரும்பக் கிடைக்கும் என்ற ஆசை போய்விட்டது! நல்லவேளை, கம்பெனி உத்தியோகத்தை அவன் விட்டுவிடவில்லை. நாலு மாதம் லீவு வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தான். திரும்பிப் போய்க் கம்பெனி உத்தியோகத்தை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.

இந்தியாவுக்குப் போகும் கப்பலில் இடம் கிடைப்பது மிகவும் பிரயாசையாயிருந்தது. கப்பலுக்காக காத்திருந்த சமயத்தில் அங்குமிங்கும் அவன் சுற்றியலைந்தான். அப்படி அலைந்த போது அவன் கண்ட காட்சிகளும் கேட்ட விஷயங்களும் அவனுடைய மனதில் ஆச்சரியமான ஒரு மாறுதலை உண்டாக்கின. ஆகா! இந்த இங்கிலீஷ்காரர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய தீரர்கள்? நாட்டின் சுதந்திரத்துக்காக என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நாட்டின் சுபிட்சத்துக்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள்? ஆனால் இந்தியாவில் நாம் இத்தனை காலமும் என்ன செய்து வந்தோம். அன்னியர்களின் கீழ் அடிமை உத்தியோகம் பார்த்து வந்தோம். அதைத் திரும்பப் பெறுவதற்காகக் கெஞ்சி மணியம் செய்ய இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். சீ! இது என்ன மானங்கெட்ட பிழைப்பு? இங்கிலீஷ் படிப்பு என்ன மாதிரி நம்முடைய புத்தியைக் கெடுத்து விட்டது? போனதற்கெல்லாம் பரிகாரமாக, இனிமேல் நடந்து கொள்ளவேண்டும். இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஏதேனும் ஒரு பிரமிக்கும்படியான காரியம் செய்ய வேண்டும்... எஸ்.எஸ். எலிஸபெத் கப்பலின் மேல் தளத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு சௌந்தரராகவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது மேற்கண்டவாறு பற்பல எண்ணங்கள் வந்துபோய்க் கொண்டிருந்தன. மனதை அதன் போக்கிலேயே விட்டபோது பதினைந்து வருஷங்களுக்கு முன் கராச்சியிலிருந்து பம்பாய்க்குக் கப்பலில் பிரயாணம் செய்ததில் வந்து மனம் நின்றது.

ஆகா! அந்தப் பிரயாணம் எவ்வளவு ஆனந்தமாக இருந்தது! அது பெரும்பாலும் சாமான்கள் அடுக்கிய சாதாரண நாலாந்தரமான கப்பல்தான்; இந்தக் கப்பலின் விஸ்தீரணத்திலோ கம்பீரத்திலோ அழகிலோ வசதியிலோ எட்டில் ஒரு பங்குகூட அந்தக் கப்பலில் இல்லை! ஆயினும் அந்தக் கப்பலில் அவன் அப்போது செய்த பிரயாணம் ஆகாய வெளியில் புஷ்ப ரதத்தில் தேவ தேவியர்களுக்கு மத்தியில் கந்தர்வர்களின் கானத்தைக் கேட்டுக் கொண்டு செய்த பிரயாணத்தைப் போல் ஆனந்தமயமாயிருந்தது. காரணம், அதே கப்பலில் தாரிணியும் பிரயாணம் செய்ததுதான். அடடா! என்ன தவறு செய்து விட்டோ ம்? கொஞ்சம் பிடிவாதம் பிடித்துத் தாரிணியைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்திருக்கும்? தாரிணியிடமிருந்து மனம் சீதாவிடம் பாய்ந்தது. தாரிணியைப் புறக்கணித்தது ஒரு பிசகு என்றால், சீதாவை மணந்து கொண்டது அதைவிடப் பெரிய பிசகு. கிட்டாவய்யர் மகள் லலிதாவைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இல்வாழ்க்கை நிம்மதியாகவாவது இருந்திருக்கும். லலிதாவைப் பார்க்க போன இடத்தில் இவள் குறுக்கே வந்து சேர்ந்தாள்! கண்களை அகல விரித்துப் பார்த்து நம்முடைய மதியை மயக்கிவிட்டாள்! ஒரு விஷயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கண்ணழகிலே மட்டும் சீதாவுக்கு இணையில்லைதான். தாரிணியின் கண்களைக் காட்டிலுங்கூடச் சீதாவின் கண்கள் கொஞ்சம் அதிகம் அழகானவை என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் கண்ணழகு மட்டும் ஒரு பெண்ணிடம் இருந்தால் போதுமா? போதாது என்பதற்குத் தன்னுடைய வாழ்க்கையே அத்தாட்சி! அந்தக் கண்களின் வழியாக அவளுடைய உள்ளத்தின் இயல்பைப் பார்க்கும் சக்தி தனக்கும் இல்லாமல் போய்விட்டதே? சீச்சீ! என்ன சஞ்சலபுத்தி? என்ன சண்டை பிடிக்கும் சுபாவம்? என்ன அசூயை? என்ன ஆத்திரம்? பெண்களின் கெட்ட குணங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பிரம்மதேவன் சீதாவைப் படைத்திருக்க வேண்டும்! 'சீதா' என்னும் பெயரைக் காட்டிலும் சூர்ப்பனகை என்னும் பெயர் அவளுக்கு அதிகப் பொருத்தமாயிருக்கும்.

சீச்சீ! இது என்ன எண்ணம்? தவறு முழுவதும் சீதாவினுடையதுதானா? தன் பேரிலும் தவறு இருக்கத்தான் இருக்கிறது! அவளை நடத்தவேண்டியபடி முதலிலிருந்தே நடத்தியிருந்தால் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அடங்கி நடந்திருப்பாள். புது டில்லி நாகரிக வாழ்க்கைக்கு அவளைத் தயார்ப் பண்ண யத்தனித்தது அல்லவா இப்படி வினையாக வந்து முடிந்தது? அவள் சுபாவம் கெட்டுப் போனதற்கு அந்த மடையன் சூரியாவும் ஒரு காரணம். தன்னுடைய அபிப்பிராயங்க ளைக்காட்டிலும் சூரியாவினுடைய அபிப்பிராயங்கள் அல்லவா அவளுக்கு மேலாகப் போயிருந்தன? கடைசியாக எப்படிப் பட்ட படுகுழியில் கொண்டு போய் அந்தப் படுபாவி அவளைத் தள்ளி விட்டான்? இந்த ஸ்திரீகளின் சுபாவமே அதிசயமானது தான்! சூரியாவிடம் அப்படி என்ன அழகை, அற்புதத்தை, இவர்கள் கண்டு விட்டார்களோ, தெரியவில்லை. சீதாவாவது 'அம்மாஞ்சி' என்று சொல்லி உருகிக் கொண்டிருந்தாள். தாரிணிக்கும் சூரியாவுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்குள் எப்படிச் சிநேகம் ஏற்பட முடியும்? ஆகா! சூரியாவைப் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்புவிப்பதற்காகத் தாரிணி எப்பேர்ப்பட்ட சாகஸமான காரியம் செய்தாள்: என்ன துணிச்சல்! என்ன தைரியம்? இரண்டு பேரும் அன்றைக்கு மறைந்தவர்கள் அப்புறம் வெளிப்படவே இல்லை! மத்திய சர்க்காரின் துப்பறியும் இலாகா எவ்வளவோ முயன்றும் பயனில்லை! எப்படி அவர்கள் மாயமாய் மறைந்திருப்பார்கள்?

இதில் ரொம்பவும் விசித்திரமான வேடிக்கை என்னவென்றால், கல்கத்தாவில் சீதாவைத் தாரிணி என்ற பெயரால் கைது செய்து பாதுகாப்பு சிறையிலே வைத்திருந்ததுதான்! இந்த விஷயம் கல்கத்தாவுக்கு வந்து, கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் ராகவனுக்குத் தெரியவந்தது. ஆனாலும் அதைப்பற்றி அவன் நடவடிக்கை ஒன்றும் எடுக்க முடியாமல் இருந்தது. அவள் தாரிணி இல்லை, சீதா என்று தான் சொன்னால், அவள் கைதியானபோது ஏன் அதைச் சொல்லவில்லை என்று கேட்பார்கள் அல்லவா? டில்லியிலிருந்து அவள் கல்கத்தா வந்த காரணம் என்னவென்று கேட்பார்கள் அல்லவா? அந்தக் கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்வது? கிடக்கட்டும், கிடக்கட்டும்! சிறையிலேயே அடைந்து கிடக்கட்டும்; நன்றாக புத்தி வரட்டும்; எல்லாருக்கும் விடுதலை கிடைக்கும்போது அவளுக்கும் விடுதலை கிடைத்து வெளி வரட்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் சீதாவுக்கு இன்னொரு 'சான்ஸ்' கொடுத்துப் பார்க்க வேண்டியதுதான்! அவளுடன் இல்லறம் நடத்த இன்னொரு பிரயத்தனம் செய்ய வேண்டியதுதான்! இவ்விதம் சௌந்தரராகவன் மனமுவந்து தயவு செய்து எண்ணிய தற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று, சீதாவுடன் தான் இல்வாழ்க்கை நடத்தாவிட்டால் பாமா என்கிற பிசாசின் வாயில் விழ வேண்டியிருக்கும்! அது இரும்புச் சட்டியிலிருந்து அடுப்பு நெருப்பில் விழுவது போலாகும் இரண்டாவது காரணம், குழந்தை வஸந்தி, சீமைக்குப் புறப்படுமுன் ராகவன் சென்னைக்குத் தன் மகளைப் பார்க்கப் போயிருந்தான். அப்போது குழந்தை தன் கபடமற்ற கண்களினால் தந்தையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, "அப்பா! அம்மாவை அழைத்து வரவில்லையா?" என்று கேட்டாள். அந்தக் கேள்வியில் தொனித்த ஆதங்கத்தை ராகவனால் மறக்கவே முடியவில்லை. குழந்தையை முன்னிட்டாவது மறுபடியும் ஒரு தடவை குடித்தனம் நடத்திப் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தான். மூன்றாவதாக இன்னொரு காரணமும் இருந்தது; அது கொஞ்சம் விசித்திரமான காரணந்தான்.

ராகவன் புதுடில்லியை விட்டுக் கிளம்புவதற்கு முன்னால் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வீட்டுக்குள் திடீரென்று ஒரு ஸ்திரீ வந்தாள். அவளுடைய தோற்றம் அச்சத்தை அளித்தது. அதைவிட அவள் பேச்சுப் பயங்கரமாயிருந்தது. "நான் யார் தெரியுமா?" என்று கேட்டாள். "தெரியாது!" என்றான் ராகவன். "உன் மனைவி சீதாவின் தாயார் நான்!" என்றாள் அந்த ஸ்திரீ. ராகவன் சிரித்துக் கொண்டே, "சீதாவுக்கு எத்தனை தாயார்?" என்று கேட்டான். "சிரிக்காதே! உன் சாமர்த்தியம் உன்னோடு இருக்கட்டும். சீதா என்னுடைய மகள், வயிற்றில் பெற்ற மகள் அல்ல; ஆனாலும் அதைவிட அதிகம். உன் மனைவி ஒரு ரத்தினஹாரம் போட்டுக் கொண்டிருந்தாளே? அது இருக்கிறதா? அல்லது விற்றுச் சாப்பிட்டு விட்டாயா? என்று கேட்டாள். ராகவன் சிறிது வியப்பும் அச்சமும் அடைந்தான். ஆயினும் வெளிக்கு அதைரியத்தைக் காட்டிக்கொள்ளாமல், "நீ எதற்காகக் கேட்கிறாய்? நீ யார்? உன் பெயர் என்ன?" என்று அதட்டிக் கேட்டான். "சொல்கிறேன், கேள். நான் உன் மாமியார்; என் பெயர் ரஸியா பேகம்; அந்த ரத்தின ஹாரத்தை நான் சீதாவுக்குக் கொடுத்தேன், அதனாலேதான் கேட்கிறேன். அது போனால் போகட்டும். சீதாவை நீ கஷ்டப்படுத்துகிறாய் என்று எனக்குத் தெரியும். உங்களிடமிருந்து தொல்லைப்படுவதைக் காட்டிலும் சிறையிலிருப்பது மேல் என்று எண்ணி அவள் சிறைக்குப் போயிருக்கிறாள். ஒரு நாள் வெளியில் வருவாள். அப்போது அவளை நீ சரியாக நடத்திப் பத்திரமாய்ப் பாதுகாக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உன்னை இந்தக் கத்தியால் ஒரே குத்தாகக் குத்திக் கொன்றுவிடுவேன்!" என்று சொல்லி ஒரு கத்தியை எடுத்துக் காட்டினாள். ராகவன் இப்போது உண்மையாகவே பயந்து நடுங்கிப் போனான். அவனால் வாயைத் திறக்கவே முடியவில்லை. சட்டென்று ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. "ரஜனீபூர் பைத்தியம்" என்று ஒரு ஸ்திரீ ரஜனிபூர் ராஜாவைக் கொல்லப் பார்த்தாள் என்றும் அவள் டில்லியில் திரிந்து கொண்டிருந்தாள் என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். "நீ ரஜனிபூர்...." என்று தயக்கத்துடன் அவன் கேட்க ஆரம்பித்தவுடனே, "ஆமாம்; நான் ரஜனிபூர் மகாராணிதான்! என் அருமை மகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்! இல்லாவிட்டால் உன்னை நிச்சயமாய்க் குத்திக் கொன்று விடுவேன்!" என்று சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ போய்விட்டாள். இந்தச் சம்பவம் கொஞ்ச நாள் வரையில் ராகவனுடைய மனதில் இடைவிடாமல் குடி கொண்டிருந்தது. ரஜனிபூர் பைத்தியம் என்பது யார் என்றும் அவளுக்கும் தன் மனைவி சீதாவுக்கும் என்ன சம்பந்தம் என்றும் அறிந்து கொள்ளப் பெரிதும் ஆவலாயிருந்தது. வேறு வழியில் இதைப்பற்றித் தெரிந்து கொள்ள முடிய வில்லை. சீதாவைக் கேட்டுத் தெரிந்து கொண்டால்தான் உண்டு. நாளடைவில் ரஸியா பேகத்தின் வார்த்தைகளின் வேகம் மறைந்துவிட்டாலும் இன்னமும் உண்மையை அறிந்து கொள்ளும் ஆவல் ராகவனுடைய மனதில் இருக்கத்தான் இருந்தது. அதற்காகவாவது சீதாவை மறுபடியும் கூட்டி வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.... கடற்காற்று சுகமாக அடித்துக் கொண்டிருந்தது. கடல் அலைகளின் ஓசை பின்னணி சங்கீதத்தைப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது. ராகவனுக்குக் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தன்னை அறியாமல் சாய்மான நாற்காலியில் படுத்த வண்ணம் அவன் தூங்கிப் போனான்.

அந்தப் பகற் தூக்கத்தில் ராகவன் ஒரு கனவு கண்டான். ஒரு பெரிய அரண்மனை, அதில் தர்பார் மண்டபம், பளிங்கு மேடையில் முத்து விதானத்தின் கீழ் அமைந்த நவரத்தின சிம்மாசனத்தில் ராணி ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். "ரஜினிபூர் மகா ராணிக்கு ஜே!" என்ற கோஷம் எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்தது. முதலில் தூரத்தில் நின்று பார்த்த ராகவன் அந்தச் சிம்மாசனத்தை நெருங்கிப் போனான். பத்து அடி தூரத்தில் சென்றதும் மகாராணி ராகவனைப் பார்த்துப் புன்னகை புரிந்து, "நான் யார் தெரிகிறதா?" என்று கேட்டாள். "ரஜினிபூர் ராணி!" என்றான் ராகவன். "நன்றாகப் பார்!" என்றாள் ராணி! உற்றுப் பார்த்த போது ராகவனுடைய உள்ளத்தைக் கவர்ந்த வேறொரு முகமாகத் தெரிந்தது. "ஆ! தாரிணி! நீயா?" என்று கேட்டான் ராகவன். "இன்னும் நன்றாய்ப் பார்! பார்த்துச் சொல்லு!" என்றாள் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மாது, ராகவன் பார்த்தான். இப்போது சீதாவின் முகமாகத் தெரிந்தது. "ஆ! சீதா! நீ தானா. தாரிணி மாதிரி எப்போது மாறினாய்!" என்று கேட்டான். "நான் மாறவில்லை, உங்கள் கண்களும் மனமும் மாறிவிட்டன" என்றாள் சீதா. "நான் உன்னைக் கஷ்டப்படுத்தியதை யெல்லாம் மன்னித்துவிடு!" என்றான் ராகவன். "நான் உங்களைக் கஷ்டப்படுத்தியதற்கும் நீங்கள் என்னைக் கஷ்டப்படுத்தியதற்கும் சரியாய்ப் போயிற்று. ஆகையால் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை. குழந்தை வஸந்தி எங்கே?" என்று சிம்மாசனத்தில் கிரீடமணிந்து வீற்றிருந்த சீதா கேட்டாள்.

"ஆகா! வஸந்தியை மறந்து விட்டேனே! இதோ போய் அழைத்து வருகிறேன்!" என்று ஓடத் தொடங்கினான். வஸந்தியை எங்கேயோ விட்டு விட்டு வந்ததாக அவனுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் எங்கே என்பது நினைவில் இல்லை. ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்று கொண்டே ஓடினான். கால் புதைந்த ஆற்று மணலைக் கடந்து ஓடினான். ஓடையில் இறங்கித் தண்ணீரில் நனைந்து கொண்டு ஓடினான். காட்டிலும் மலையிலும் ஓடினான். பெரியதொரு அரண்மனையின் மேல்மாடி முகப்பில் ஓடினான். முதலில் "வஸந்தி!" "வஸந்தி!" என்று கூச்சலிட்டுக் கொண்டே ஓடினான். பிறகு கூச்சல் போடவும் முடியாமல் தொண்டை நன்றாக அடைத்துக் கொண்டது. கால்கள் தடுமாறின; தலைச் சுற்றியது. ஒரு பெரும் பிரயத்தனம் செய்து, "ஐயோ! வஸந்தி!" என்று கூச்சலிட்டான். யாரோ தோளைப் பிடித்துக் குலுக்கினார்கள்; உடனே விழிப்பு வந்து விட்டது. கனவு மயக்கத்தில் வஸந்திதான் என்று நினைத்துக் கொண்டு, "ஆ! என் கண்மணி! வந்து விட்டாயா!" என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்தான். அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கியவள் வஸந்தி அல்லவென்றும் பாமா என்றும் தெரிந்து கொண்டான். தன் மனதிற்குள்ளே, "அட பிசாசே! சற்று நேரம் என்னைச் சும்மா விடமாட்டாய்?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். அந்தக் கனவு கண்டது முதல் ராகவனுக்கு வஸந்தியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அளவின்றிப் பெருகிற்று. குழந்தையை இனிமேல் என்றைக்கும் விட்டுப் பிரிவதில்லை என்று அடிக்கடி தீர்மானித்துக் கொண்டான். கனவை நினைத்துக் கொண்டு அவளுக்கு விபத்து ஒன்றும் நேராமல் இருக்கவேண்டுமே என்று ஓயாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான்.

பம்பாய்த் துறைமுகத்தில் கப்பலிலிருந்து கீழே இறங்கியவுடனே ஆகாய விமானத்தில் ஏறிச் சென்னைப்பட்டணத் துக்குச் சென்றான். பத்மாபுரத்தில் தன் தந்தை பத்மலோசன சாஸ்திரிகளின் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலில் வண்டி ஒன்று காத்துக் கொண்டிருந்தது. 'யாராவது ஊருக்குப் போகிறார்களா?' என்று மனத்தில் நினைத்துக் கொண்டான். டாக்ஸி வண்டியின் சத்தத்தைக் கேட்டு அவனுடைய தாயார் வெளியில் வந்து பார்த்தாள். மகனை ஆவலுடன் வரவேற்றாள். "ஏன்டாப்பா! வருகிறதாகக் கடிதம் கூட எழுதவில்லையே!" என்று ஆவலாகச் சொன்னாள். ராகவன் அதைப்n பொருட் படுத்தாமல், "அம்மா! யாராவது ஊருக்குக் கிளம்புகிறார்களா?" என்று கேட்டான். "ஆமாண்டா, அப்பா! நீ வருகிறது தெரியாதோ இல்லையோ? சூரியா வந்திருக்கிறான். குழந்தை வஸந்தியை அழைத்துக் கொண்டு புறப்படுவதற்கிருந்தான். அதற்குள் நல்லவேளையாக நீ வந்து விட்டாய்!" என்றாள். "குழந்தையை எங்கே அழைத்துப் போவதாகச் சொன்னான்?" "தேவபட்டணத்துக்குத்தான். அங்கே அவள் அம்மா இருக்கிறாள் அல்லவா?" "ஓகோ! அப்படியா!" என்று கர்ஜித்தான் ராகவன். காமாட்சி அம்மாள், "நீ வந்துவிட்டபடியால் இன்றைக்குக் குழந்தை போவதற்கில்லை!" என்றாள். "இன்றைக்கும் இல்லை; என்றைக்கும் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். சூரியாவுடன் ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாராக நின்ற வஸந்தி அப்பாவைப் பார்த்ததும் ஒரே ஓட்டமாக ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள். ராகவன் கால்சட்டைப் பையிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சூரியாவை நோக்கிக் குறி பார்த்து, "அடே காலிப்பயலே! உன்னைப் போன்ற அயோக்கிய சிகாமணியைக் கொன்றால் துளிக்கூடத் தோஷமில்லை!" என்று கர்ஜித்தான். சூரியா ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான்.