அலை ஓசை/புயல்/"லலிதா! பயமாயிருக்கிறது...!"

விக்கிமூலம் இலிருந்து


ஜூன் மாத ஆரம்பத்தில் புதுடில்லியில் வெப்பநிலை 110 டிகிரிக்கு வந்திருந்தது. பகலில் வெளியில் கிளம்பியவர்கள் சுண்ணாம்புக் காளவாயில் தங்களைப் போட்டு விட்டதுபோல் தவித்தார்கள். இரவில் வீட்டில் இருந்தவர்கள் செங்கல் சூளையில் போட்டவர்களைப்போல் வெந்தார்கள். பகலிலும் சரி, இரவிலும் சரி, காற்று அடித்தால் நெருப்பாக அடித்தது. எந்தப் பொருளைத் தொட்டாலும் தணலைப்போல் சுட்டது. விளாமிச்ச வேர் தட்டிகளில் விடப்பட்ட ஜலம் கீழே சொட்டும்போது வெந்நீராக மாறிச் சொட்டியது!" புதுடில்லியில் வீற்றிருந்து இந்திய தேசத்தின் மீது செங்கோல் செலுத்தி வந்த வைஸ்ராய்ப் பிரபுவும், அதிகார வர்க்கக் கணங்களில் பெரும்பாலோரும் மூளைக் கொதிப்புக்கு அஞ்சிச் சிம்லா மலையுச்சிக்குப் போய்விட்டார்கள். சௌந்தரராகவனும் சீதாவுங்கூடச் சிம்லாவுக்குப் போவதாக இருந்தது. காமாட்சியம்மாள் தனக்கு மலைவாசம் ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டி ருந்தாள். இந்தச் சமயத்தில் ஊரிலிருந்து அவளுடைய தமையன் குமாரிக்குக் கலியாணம் என்று கடிதம் வந்தது. ஊருக்குப் போய் ஒரு மாதத்துக்குள் வருவதாகச் சொல்லி விட்டுக் காமாட்சி அம்மாள் போய் விட்டாள். ஆனால் எதிர்பாராத ஏதோ முக்கியமான வேலை வந்து விட்டபடியால் ராகவன் அந்த வருஷம் சிம்லாவுக்குப் போக முடியவில்லை. "நீ மட்டும் குழந்தையை அழைத்துக் கொண்டு போய் வருகிறாயா? எத்தனையோ ஸ்திரீகள் தனியாகப் போகிறார்கள்; பயம் ஒன்றுமில்லை" என்று ராகவன் சொன்னான். "அதெல்லாம் முடியாது! நீங்கள் வராமல் எனக்கு மட்டும் தனியாக மலைவாசம் என்ன வந்தது? போக மாட்டேன்!" என்று சீதா கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.

ராகவனும் சீதாவும் மலைவாசம் வேண்டாமென்று டில்லியில் இருந்துவிடத் தயாராயிருந்தாலும், அவர்கள் வீட்டு வேலைக்காரன் அப்படியிருக்கச் சம்மதிக்கவில்லை. அவன் நேபாள தேசத்திலிருந்து வந்தவன். "இந்த உஷ்ணத்தை என்னால் சகிக்க முடியாது!" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தவன், ஒரு நாள் திடீரென்று சொல்லிக் கொள்ளாமலேயே நடையைக் கட்டிவிட்டான். வீட்டு வேலைக்காரிக்குக் கூட அன்றைக்கு என்னமோ பைத்தியம் பிடித்துவிட்டது. "மூன்று நாள் லீவு வேண்டும்" என்று எஜமானியைக் கேட்டாள். "முடியாது" என்று சீதா சொன்னாள். "அப்படியானால் உங்கள் வேலை வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள். ஆகவேதான் சீதா குழந்தையுடன் அன்று மாலை வீட்டில் தனியாக இருந்தாள். எட்டு மணி வரையில் வஸந்தி, "அப்பா எப்ப வதுவா?" என்று கேட்டுக் கொண்டிருந்து விட்டுத் தூங்கிப் போய் விட்டாள். குழந்தை தூங்கிய பிறகு சீதா தனிமையை அதிகமாக உணரத் தொடங்கினாள். அன்றைக்கு ராகவன் ஆபீசுக்குக் கிளம்பியபோது, "இன்றைக்கு எப்படியாவது சூரியா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவனை அழைத்துக்கொண்டு வந்து சேருகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போனான். அதனாலேதான் இன்னும் வரவில்லையோ என்னமோ? சூரியாவைத் தேடிக் கொண்டிருக்கிறாரோ, என்னமோ? சூரியா மட்டும் இன்றைக்கு வரட்டும்; அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்! லலிதாவுக்கு என்னவெல்லாம் எழுதியிருக்கிறான்? ரஜினிபூர் ஏரி சம்பவத்தைப் பற்றி இவன் எதற்காக எழுத வேண்டும்? அப்படியே இவன் எழுதினாலும் அவள் வேறே தன் அகத்துக்காரரிடம் சொல்லியிருக்கிறாள்! அவர்கள் எல்லாரும் இவரைப் பற்றித்தான் என்ன நினைத்துக் கொள்ளுவார்கள்....

என்ன வேணுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். அந்தப் பட்டிக்காட்டு ஜன்மங்கள் என்ன நினைத்துக் கொண்டால் இங்கே யாருக்கு என்ன? இருந்தாலும் லலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கலாம். பார்க்கப் போனால் அவளைத் தவிர நமக்குத்தான் யாரிருக்கிறார்கள்! தாரிணியின் சிநேகிதத்தைப் பற்றிப் பிரமாதமாக நினைத்தோமே? டில்லிக்கு வந்த பிறகு அவள் ஒரு தடவையாவது வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. லலிதாவாயிருந்தால் இப்படியிருப்பாளா? எப்படியும் பழைய சிநேகிதத்துக்கு இணையாகாது. புது சிநேகிதமெல்லாம் ரயில் சிநேகிதம் மாதிரிதான். இந்த முடிவுக்கு வந்த சீதா லலிதாவுக்குப் பதில் எழுதத் தொடங்கினாள். "என் உயிருக்குயிரான லலிதா! உன்னுடைய விவரமான கடிதம் கிடைத்தது, ரொம்பவும் சந்தோஷம் அடைந்தேன். தேவபட்டிணத்தில் நடந்த குப்பைத்தொட்டி எலெக்ஷனைப் பற்றி எழுதியிருந்தது ரொம்ப வேடிக்கையாயிருந்தது. அதனால் உன்னுடைய சிநேகிதியை நீ இழந்துவிட்டதையும் கவனித்தேன். உனக்கு நன்றாக வேணும், லலிதா! நான் ஒருத்தி உன் பிராண சிநேகிதி இருக்கும்போது வேறொரு சிநேகிதம் நீ எவ்வாறு செய்து கொள்ளலாம்? ஆகையினால்தான் கடவுள் உன்னை இந்த விதமாகத் தண்டித்திருக்கிறார்.

ஆனால் நானும் இங்கே சில புதிய சிநேகிதங்கள் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ரஜினிபுரத்துத் திவான் குமாரிகளைப் பற்றி முன் கடிதத்தில் எழுதியிருக்கிறேன் அல்லவா? அவர்கள் மூன்று வாரத்துக்கு முன்னால் இங்கே வந்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்கும் வந்தார்கள். எல்லோருமாக வைஸ்ராய் அரண்மனையில் நடந்த 'கார்டன் பார்ட்டி'க்குப் போயிருந்தோம். அம்மம்மா! அதைப்பற்றி நான் என்னவென்று சொல்வது? அரபிக் கதைகளில் நாம் படித்திருக்கும் அற்புதக் காட்சிகளையும் சினிமாக்களில் பார்த்திருக்கும் அதிசயக் காட்சிகளையும் மிஞ்சிவிட்டது. வைஸ்ராய் தோட்டத்தின் அழகைச் சொல்வேனா? அங்கேயிருந்த புஷ்பச் செடிகளையும் அலங்கார விருட்சங்களையும் வர்ணிப்பேனா? மரங்களுக்குள்ளேயும் செடிக்களுக் குள்ளேயும் மறைத்துக் கண் கூசாதபடி விளக்குப் போட்டிருந்த அதிசயத்தைச் சொல்வேனா? அங்கே வந்திருந்த சீமான்களையும் சீமாட்டிகளையும் அவர்களுடைய அலங்கார உடைகளையும் ஆபரணங்களையும் வர்ணிப்பேனா? லலிதா! வெள்ளைக்கார ஸ்திரீகள் பளபளவென்று ஜொலித்த கறுப்பு உடைகளை அணிந்து வந்திருந்தார்கள். நம்முடைய நாட்டு ஸ்திரீகள் பலர் நம்முடைய நாட்டு வழக்கப்படி பல வர்ணச் சேலைகளை உடுத்திக்கொண்டு வந்திருந்தார்கள். ஒவ்வொரு புடவையும் ஒவ்வொரு மோஸ்தர். அவர்கள் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்களும் அப்படியே, எல்லாம் ஒரே ஜொலிப்புத்தான் எனக்குத் திக்பிரமை யாயிருந்தது. ஆனால் திவானுடைய பெண்கள் பாமாவும் தாமாவும் இந்த மாதிரி 'பார்ட்டி'களுக்குப் பல தடவை போய்ப் பழக்கப்பட்டவர்களாதலால் அவர்களுக்குச் சகஜமாயிருந்தது. அஙகே வந்திருந்தவர்களில் அநேகம்பேரை அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

என்னைப் பலருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு நம்மைப் புதிதாக அறிமுகப்படுத்தியதும் அவர்கள் உடனே, 'ஹவ் டு யூ டு' என்று கேட்கும் அழகு ஒன்றே போதும்! லலிதா, வெள்ளைக்காரர்களைப் பற்றி அவர்கள் அப்படி, இப்படி என்று ஓயாமல் தூஷித்துக் கொண்டிருப்பதனால் என்ன பிரயோசனம்? அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. முக்கியமாக, ஒருவருக்கொருவர் மரியாதையாக எப்படி நடந்து கொள்வது என்பதை வெள்ளைக் காரர்களிடமிருந்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தேவப்பட்டணம் தேர்தலைப் பற்றி நீ எழுதியிருந்தாயே? இங்கிலீஷ்காரர்களின் தேசத்திலுந்தான் தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிந்துவிட்டால், ஜயித்தவர்களைத் தோற்றவர்கள் தான் முதல் முதலில் பாராட்டுவார்களாம். நம்முடைய ஊரில் தேர்தலில் எதிர்க் கட்சியில் இருந்து விட்டால் அப்புறம் ஜன்ம சத்துருக்களைப் போல் நடந்து கொள்கிறார்கள் என்ன மூடத்தனம்! நவநாகரிகத்தின் அலங்காரங்களைப் பற்றிக் குறை சொல்லி உனக்கு முன்னே எழுதியிருந்தேன் அல்லவா? அந்த விஷயத்தில் கூட என்னுடைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன். வைஸ்ராய் மாளிகையில் நடந்த பார்ட்டியில் பார்த்தபோதுதான், 'லிப் - ஸ்டிக்' போட்டுக் கொள்வதிலும் ஒரு அழகு இருக்கிறது என்று எனக்குத் தெரிந்தது. இவர் கூட அடிக்கடி 'ரோமாபுரியில் இருக்கும் போது ரோமர்கள் செய்வது போலச் செய்ய வேண்டும்' என்ற இங்கிலீஷ் பழமொழியை எடுத்துச் சொல்வார். நானும் புதுடில்லியில் இருக்கும்போது புதுடில்லிக்காரர்களைப் போலத் தான் நடந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன். நம்முடைய பட்டிக்காட்டு வழக்கந்தான் சரியான வழக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் யார் கேட்பார்கள்? நீ தான் சொல்லேன்! நம்முடைய பாட்டிகள் முகத்தில் ஒரு வீசை மஞ்சளை அரைத்துப் பூசிக் கொண்டிருந்தார்கள்.

அப்படிச் செய்து கொள்ள நமக்கு இப்போதெல்லாம் பிடிக்கிறதா!.... சூரியா உனக்கு என்னவெல்லாமோ எழுதியிருக்கிறான் என்று தோன்றுகிறது அதையெல்லாம் நீ நம்ப வேண்டாம். சூரியா இங்கே வந்தால் அவனைச் சண்டை பிடிக்கலாம் என்று இருக்கிறேன். அவன் பார்க்காத விஷயத்தைப் பற்றி யாரோ சொன்னதை வைத்துக் கொண்டு எதற்காக எழுதுகிறான்? அவனுக்கு யார் சொல்லியிருக்கக்கூடும் என்றும் தெரியவில்லை. ஒருவேளை, தாரிணி என்கிறவளைப்பற்றி எழுதியிருந்தானே, அவள்தான் ஏதாவது சொன்னாளோ, என்னமோ? அப்புறம் யோசித்துப் பார்க்க பார்க்க, அவள் பேரில் எனக்குச் சந்தேகம் உதிக்கிறது. அவள் விஷயம் எல்லாமே மர்மமாயிருக்கிறது. டில்லிக்கு வந்த பிறகு ஒரு தடவை கூட அவள் என்னை வந்து பார்க்கவில்லை. அதற்குப் பதிலாகச் சூரியாவைப் பார்த்துப் பொய்யும் புளுகும் சொல்லி வைத்திருக்கிறாள். நான் ஏரித் தண்ணீரில் விழுந்து முழுகும்போது என் அகத்துக்காரர் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா? அது சுத்தப்பொய். அந்த ஏரியில் எங்கேயும் கழுத்துக்கு மேலே ஆழம் இல்லை என்று படகுக்காரன் சொன்னானாம். அதனாலேதான் இவர் கவலையின்றிப் படகிலிருந்தபடியே என்னை எடுத்து விடலாம் என்று இருந்தார். அதற்குள்ளே இந்தத் தாரிணி என்கிறவள் தனக்கு நீந்தத் தெரிகிற பெருமையைக் காட்டுவதற்காகத் தண்ணீரில் குதித்து விட்டாள். என்ன இருந்தாலும் புருஷர்கள் செய்ய வேண்டிய காரியத்தை ஸ்திரீகள் செய்தால் அவ்வளவு நன்றாயில்லைத்தான்! இந்த மாதிரி முந்திரிக் கொட்டை ஜன்மங்களும் உலகத்தில் இருக்கின்றன என்ன செய்யலாம்.

நான் ஜலத்தில் மூழ்கி மூர்ச்சை போட்டு விட்டேன் என்பது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் அலை பாதி; பயம் பாதி. அலை மோதித் தலைக்கு மேலே போனபோது முழுகிப் போய்விட்டதாகவே எண்ணிக் கொண்டு விட்டேன். லலிதா இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி பயமாயிருக்கிறதடி! காரணமில்லாமலே திடீர் திடீர் என்று பயம் உண்டாகிறது. ஏதாவது வியாதிதானோ என்னமோ தெரியவில்லை. ராஜம்பேட்டைப் பட்டிக்காட்டிலே யென்றால், 'சங்காதோஷம்' என்றும், 'பேய் பிசாசு' என்றும் ஏதாவது கதை கட்டி விடுவார்கள். பாட்டிமார்கள் 'பில்லி சூனியம்' என்றும், 'ஏவல் வினை' என்றும் கதை கட்டி விடுவார்கள். அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆகையினால்தான் ஏதாவது வியாதியாயிருக்குமோ என்று பயப்படுகிறேன்.... இப்போது கூட பார்! திடீரென்று என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்கிறது! கை நடுங்குகிறது... ஜன்னலுக்கு வெளியே செடிகளின் சலசலப்புச் சத்தம் கேட்டால் எதற்காக நான் பயப்பட வேண்டும்?... வீட்டில் ஒருவரும் இல்லாவிட்டால் தான் என்ன? அடுத்த பங்களாவில் ஜனங்கள் இருக்கிறார்கள். ஒரு கூப்பாடு போட்டால் உடனே வந்து விடுவார்கள்.... அப்படியிருக்க, என்னுடைய பயத்துக்குக் கொஞ்சம் கூடக் காரணமேயில்லை!..." இந்த இடத்தில் சீதா கடிதத்தை நிறுத்தினாள். பயத்துக்குக் காரணமே இல்லை என்பது உண்மைதானா? லவலேசமும் காற்று அடிக்கவில்லையே? காற்றே இல்லாதபோது செடிகள் எப்படிச் சலசலக்கும்? ஜன்னல் வழியாகப் பார்க்கக்கூடாது என்ற மனத்தின் உறுதியை மீறி அவளுடைய கண்கள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தன.

பார்த்த நேரம் ஒரு வினாடிதான். உடனே கண்கள் இந்தப் பக்கம் திரும்பின வெளியே பார்த்த அந்த ஒரு வினாடி நேரத்தில் செடிகளின் மறைவில் ஒரு முக்காடு அணிந்த உருவம் போவது போலக் காணப்பட்டது. அது வெறும் பிரமையா? அல்லது உண்மையா? பிரமையோ, உண்மையோ, சீதாவின் நாக்கு பயத்தினால் தொண்டைக்குள்ளே போய்விட்டது போலத் தோன்றியது. கூச்சல் போட விரும்பினாள் ஆனால் சத்தம் வெளியில் வரவில்லை. கால்களும் கைகளும் நடுங்கின. பற்கள் ஒரு நிமிஷம் கிட்டிப் போயிருந்தன. அடுத்த நிமிஷம் கடகடவென்று அடித்துக் கொண்டன. பயப்பிராந்தி நீங்கிப் பழைய நிலைமை அடைவதற்கு ஐந்து நிமிஷம் ஆயிற்று. சீ இதென்ன பைத்தியக்காரத்தனம்! இது என்ன வீண் பயம்? இவ்விதம் எண்ணி லலிதாவுக்கு எழுதிய கடிதத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மறுபடியும் எழுத முயன்றாள். ஆனால் என்ன எழுதுவதென்று தோன்றவில்லை. விஷயம் ஒன்றும் மனதிற்கு வரவில்லை. அதற்குப்பதிலாக, "வாசற் கதவையும் கொல்லைக் கதவையும் தாளிட்டோ மா?" என்ற எண்ணம் தோன்றியது. வேலைக்காரி கோபித்துக் கொண்டு போனவள் ஒருவேளை பங்களாவில் கொல்லைக் கதவை கூடத் தாள் போட்டிருக்கமாட்டாள். ஆனால் ஒரு நாளும் இல்லாத பயம் இன்றைக்கு மட்டும் என்ன வந்தது? பயம் ஒன்றும் இல்லாவிட்டாலும் வாசற் கதவையும் கொல்லைக் கதவையும் தாளிட்டு வைப்பதே நல்லது. அதனால் கெடுதல் ஒன்றும் இல்லையல்லவா?...

இவ்வாறு முடிவு செய்து சீதா தைரியமாக எழுந்து சென்று வாசற்பக்கம் வந்தாள். சந்தடியே இல்லாதிருந்த சாலையின் இரு புறமும் உற்றுப் பார்த்தாள். கார் ஒன்றும் வரக் காணோம். கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். கொல்லைக் கதவையும் பார்த்து, ஒருவேளை திறந்திருந்தால் தாளிட்டு விட வேண்டியதுதான். இப்படி நினைத்துக் கொல்லைப் பக்கம் அடிஎடுத்து வைத்தபோது ஆ! அது என்ன சத்தம்? துப்பாக்கிச் சத்தம் இல்லை; இடி இடிக்கும் சத்தம் இல்லை; புலி உறுமும் சத்தம் இல்லை; பாம்பு சீறும் சத்தமும் இல்லை; குழாயிலிருந்து ஜலம் விழும் சர்வ சாதாரணமான சத்தம் தான்! அந்தச் சத்தம் ஸ்நான அறையி லிருந்து வந்து கொண்டிருந்தது! மறுபடியும் சீதாவின் நாக்கு அவளுடைய தொண்டைக்குள்ளே மடங்கிச் சென்று அடைத்துக் கொண்டது. அவளுடைய கால்கள் மேலே ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாமல் நின்ற இடத்திலேயே வேரூன்றி நின்றன. தனக்குத் தெரியாமல் வீட்டுக்குள் யாரோ புகுந்து கொல்லைப்புறத்து ஸ்நானஅறைக்குள் சென்றிருக்க வேண்டும்; தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டிருக்க வேண்டும் அது யாராயிருக்கும்?