அலை ஓசை/பூகம்பம்/கலியாணமும் கண்ணீரும்

விக்கிமூலம் இலிருந்து

ராஜம்பேட்டை அக்கிரகாரம் திமிலோகப்பட்டது. கிட்டாவய்யர் வீட்டுக் கலியாணம் என்றால் சாதாரண விஷயமா? விவாக தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலேயே மேளம் கொட்டியாகிவிட்டது. பிறகு ஊரில் எந்த வீட்டிலும் அடுப்பு மூட்டப் படவில்லை. எல்லாருக்கும் சாப்பாடு கிட்டாவய்யர் வீட்டிலேதான். வீதி முழுவதும் அடைத்துப் போட்டிருந்த பந்தலில் ஊர்க்குழந்தைகள் சதா காலமும் கொம்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள். மாட்டுச் சதங்கைகளில் சத்தம் கேட்டவண்ணமாக இருந்தது. வண்டிகளுக்கும் ஓய்ச்சல் ஒழிவென்பதே கிடையாது. கலியாணத்துக்கு முதல் நாள் இரண்டு கலியாணத்துக்குச் சம்பந்திகளும் வந்துவிட்டார்கள். பிறகு ஊருக்கு உற்சவத்தோற்றம் உண்டாகிவிட்டது. தேர்த் திருவிழா மாதிரி ஜே ஜே என்று ஏகக்கூட்டம். ஜான வாச ஊர்வலம் மேளதாளங்களுடனும் மத்தாப்பு வாண வேடிக்கைகளுடனும் அமோகமாக நடந்தது. இவ்வளவு குதூகலத்துக்கும் உற்சாகத்திற்குமிடையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் எல்லாரும் கொஞ்சம் மனச் சஞ்சலத்தை உண்டாக்கி வந்தது. அது சீதாவின் தகப்பனார் துரைசாமி ஐயர் இன்னும் வந்து சேரவில்லையே என்பதுதான். ஆனால் இது காரணமாகச் சீதாவின் கலியாணத்தை நிறுத்தி வைக்கும் பேச்சு ஏற்படவில்லை. ராஜம்மாளின் மனம் எத்தகைய வேதனை அடைந்திருந்ததென்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம். ஆயினும் அவள் அதை வெளியில் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. தன்னுடைய கணவர் வந்து சேராவிட்டாலும் கலியாணத்தை நடத்திவிட வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டாள். இந்தக் கலியாணத்தை மனப்பூர்வமாக ஆமோதித்து துரைசாமி ஐயர் எழுதியிருந்த கடிதம் அவளுக்கு இந்த விஷயத்தில் மிக்க ஒத்தாசையாயிருந்தது.

அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்த பிறகு சம்பந்திகளுக்குச் சிறிது ஏற்பட்டிருந்த தயக்கமும் நீங்கிவிட்டது. பிறகு எல்லாருமே ரயில்வே உத்தியோகத்தைப் பற்றிப் பரிகாசமாகப் பேசி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர், "எனக்குச் சீமந்தக் கலியாணம் வருகிறது. மூன்று நாள் லீவு வேண்டும்!" என்று கேட்டதற்கு வெள்ளைக்கார மேல் உத்தியோகஸ்தர், "அதெல்லாம் முடியாது; சீமந்தக் கலியாணத்தைப் பர்த்திக்கு ஆள் போட்டு நடத்திக் கொள்!" என்று பதில் சொன்னாரல்லவா? இந்தக் கதையை பலவிதமாக மாற்றி ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். இரவு பத்து மணிவரையில், அதாவது கடைசி ரயிலுக்குக் கூடத் துரைசாமி வரவில்லையென்று ஏற்பட்ட பிறகு கிட்டாவய்யர் தம் சகோதரியுடன் ஆலோசனை செய்தார். ராஜம்மாளின் தமக்கை அபயாம்பாளும் அவளுடைய கணவரும் சீதாவைக் கன்னிகாதானம் செய்துகொடுக்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. "சீதா கொடுத்து வைத்த புண்ணியசாலி; அதனாலேதான் வைதிக ஆசார அனுஷ்டானமுள்ள தம்பதிகள் அவளைக் கன்னிகாதானம் செய்து கொடுக்க நேர்ந்திருக்கிறது" என்று ராஜம்மாள் தன் மனத்தைத் திருப்தி செய்துகொண்டாள்.

அபயாம்பாளுடைய பெருமைக்கோ அளவேயில்லை. 'இப்படி அந்தப் பிராமணர் பண்ணிவிட்டாரே?" என்று புகார் சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக ஓடி ஓடிக் காரியங்களைச் செய்தாள். "நாளைக்குப் பொழுது விடிந்தால் நான் பட்டுப்பாயில் உட்கார்ந்தேயிருக்க வேண்டும். ஒரு காரியமும் செய்ய முடியாது. இன்றைக்குச் செய்தால்தான் செய்தது!" என்று பறந்தாள். கிட்டாவய்யர் தாம் செய்யவேண்டிய காரியங்களிலெல்லாம் லலிதாவையும் சீதாவையும் சரி சமமாகப் பாவித்தே, சகல கலியாண ஏற்பாடுகளும் செய்தார். பெண்ணுக்கு முகூர்த்தப் புடவையாகட்டும், மாப்பிள்ளைக்கு முகூர்த்த வேஷ்டியாகட்டும், ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமமாக வாங்கியிருந்தார். ஆனால், வீட்டு ஸ்திரீகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சீர்வரிசைகளில் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்தது. சரஸ்வதி அம்மாள் தன் மகள் லலிதாவுக்கு ஒரு விதமாகவும் சீதாவுக்கு ஒரு விதமாகவும்தான் செய்தாள். சரஸ்வதி அம்மாளின் தாயார் இந்த வித்தியாசம் காட்டுவதில் மும்முரமாக இருந்தாள். ஆனால் ராஜம்மாளின் தமக்கை அபயாம்பாளோ அந்த மாதிரி ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் அக்கறை காட்டினாள். அடிக்கடி ராஜம்மாளிடம் வந்து "இதென்னடி அநியாயம்? இந்த மாதிரி ஒரு கண்ணுக்கு வெண்ணையும் இன்னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் தடவுவது உண்டா? இரண்டு கண்களையும் சமமாகப் பாவிக்க வேண்டாமா?

இப்படிப் பாரபட்சம் செய்கிறாளே மன்னி? மன்னி செய்கிறது ஒரு பங்கு என்றால் அவள் அம்மா செய்கிறது மூன்று பங்கா யிருக்கிறது. நானும்நீயும் இந்த வீட்டில் பிறந்தவர்கள்தானே? லலிதாவுக்கு இருக்கிற பாத்தியதை சீதாவுக்கு இல்லாமல் போய்விட்டதா" என்று புலம்பினாள். அவளைச் சமாதானப்படுத்துவது ராஜம்மாளுக்குப் பெரும் வேலையாயிருந்தது. "நீ வாயை மூடிக் கொண்டு இரு, அக்கா! அந்த மனுஷர் இப்படி வருவதாகச் சொல்லி வராமல் மோசம் பண்ணிவிட்டதற்கு ஏதோ இந்த மட்டில் நடக்கிறதே என்று நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தக் காலத்தில் யாருக்கு யார் இவ்வளவு தூரம் செய்வார்கள்? அண்ணாவின் நல்ல குணத்தினால் இதுவாவது நடக்கிறது! இல்லாவிட்டால் என் கதி என்ன? பகவானுடைய அருளால் எனக்கு வாய்த்திருக்கிற மாப்பிள்ளையும் சம்பந்திகளும் 'அது இல்லை; இது இல்லை' என்று குற்றம் சொல்லாதவர்கள். அப்படியிருக்க நீ எதற்காக வீணில் அலட்டிக் கொள்கிறாய்? நடந்தவரையில் சந்தோஷப்பட வேண்டாமோ!" என்று ராஜம்மாள் அக்காவுக்கு ஆறுதல் கூறினாள்.

சீதாவுக்கு மனதிற்குள் எவ்வளவோ குறை இருக்கத்தான் செய்தது. அப்பா வராமல் இருந்துவிட்டாரே என்று ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. லலிதாவுக்குச் செய்கிற மாதிரி தனக்குச் செய்வாரில்லையே என்று துக்கம் பீறிக் கொண்டு வந்தது. அந்த மாப்பிள்ளை சம்பந்திகளுக்கு நடக்கிற உபசாரங்கள் தன்னை மணக்க வந்த மணவாளனுக்கும் அவளைச் சேர்ந்தவர்களுக்கும் நடக்கவில்லையே என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதையெல்லாம் சீதா மனத்திற்குள் அடக்கிக் கொண்டு, "நடக்கட்டும்! நடக்கட்டும். லலிதாவுக்கு எவ்வளவு வேணுமானாலும் நடக்கட்டும். ஆனால் நான் அடைந்த பாக்கியம் அவளுக்கு ஏது? என் கணவருக்கு அவள் கணவன் இணையாவானா?" என்று எண்ணி முகமலர்ச்சியுடன் இருந்து வந்தாள்.

இவர்கள் எல்லாரைக் காட்டிலும் அதிகமான மன வேதனைக்கு உள்ளாகியிருந்தான் சூரியா. இதற்குக் காரணம் கலியாணத்திற்கு முதல் நாள் ராஜம்மாள் பெயருக்கு வந்த ஒரு தந்திதான். வழக்கம்போல் தபால் வாங்குவதற்குத் தபால் ஆபீஸுக்குப் போயிருந்தபோது, தபால் ரன்னர் தனியாகக் கொண்டு வந்திருந்த தந்தியையும் அவன் வாங்கிக் கொண்டான். அதைப் பிரித்துப் படித்ததும் அவன் திடுக்கிட்டுச் சொல்ல முடியாத மனக் குழப்பத்துக்கு ஆளானான். "கலியாணத்தை நிறுத்திவிடவும், காரணம் நேரில் வந்து தெரிவிக்கிறேன் துரைசாமி" என்று அந்தத் தந்தியில் எழுதியிருந்தது. அது விஷயமாக என்ன செய்வது என்று சூரியாவுக்கு இலேசில் தீர்மானம் செய்ய முடியவில்லை. சீதாவின் கலியாண விஷயமாக மொட்டைக் கடிதங்களை எழுதிய விஷமிகள் இந்தத் தந்தியையும் கொடுத்திருக்கலாம். ஏன் கொடுத்திருக்கக்கூடாது? அநேகமாக உண்மை அப்படித்தான் இருக்கும்.ஆனால் தந்தியை மற்றவர்களிடம் காட்டினாலும் அதைப் பற்றிச் சொன்னாலும் பெருங்குழப்பம் உண்டாகிவிடும்.

அது பொய்த் தந்தி என்று அவர்கள் நம்புவது கடினம். எல்லா ஏற்பாடுகளும் நடந்து சம்பந்திகளும் வந்து இறங்கிய பிறகு கலியாணத்தை நிறுத்துவது என்பது எவ்வளவு அசம்பாவிதம்? சீதாவும் அவள் தாயாரும் எவ்வளவு துக்கம் அடைவார்கள்? எல்லாருக்குமே எவ்வளவு அசந்துஷ்டி உண்டாகும்? சம்பந்திகள்தான் என்ன நினைப்பார்கள்? ஊரார் என்ன சொல்வார்கள்? சுற்றுப்புறத்துக் கிராமவாசிகள் எல்லாம் கேலி பண்ணிச் சிரிப்பார்களே? ஒரு பொய்த் தந்தி இவ்வளவு விபரீதங்களையும் விளைவிப்பதற்கு இடங்கொடுத்து விடுவதா? எது எப்படியிருந்தபோதிலும் இந்தத் தந்தியை இப்போது எல்லாரிடமும் காட்டிக் குழப்பம் விளைவிக்கக்கூடாது என்று சூரியா முடிவு செய்தான். இராத்திரிக்குள் எப்படியும் துரைசாமி ஐயர் வந்து விடக்கூடும். அவர் வந்த பிறகு அப்படி அவசியமாயிருந்தால் கலியாணத்தை நிறுத்திக் கொள்ளட்டும். அப்போது கூட அவரைக் காரணம் கேட்டு வாதாடிப் பார்ப்பது தன்னுடைய கடமை. எது எப்படியானாலும் தந்தியைப் பற்றி இப்போது பிரஸ்தாபிக்கக் கூடாது. ராத்திரியும் துரைசாமி ஐயர் வராவிட்டால் பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு முடிவு செய்திருந்த சூரியா ராத்திரி வந்து சேரும் வண்டியிலும் துரைசாமி ஐயர் வராமற் போகவே முன்னைக் காட்டிலும் அதிகக் குழப்பத்தில் ஆழ்ந்தான். ஜானவாஸ ஊர்வலம் எல்லாம் நடந்த பிறகு தந்தியைப் பற்றிப் பிரஸ்தாபிப்பது மேலும் கஷ்டமாகிவிட்டது. யாரோ ஒரு முட்டாள் மடையன், பொறாமைப் பிசாசு, கொடுத்திருக்கக் கூடிய பொய்த் தந்தி காரணமாக இவ்வளவு ஏற்பாடுகளும் நின்று போவதால் சீதாவுக்கும் ராஜம்மாளுக்கும் ஏற்படக்கூடிய அதிர்ச்சியை நினைத்தபோது சூரியாவுக்குத் தந்தியைக் கொடுக்கும் தைரியம் தனக்கு வரவே வராது என்று தோன்றிவிட்டது. "கடவுள் விட்ட வழி விடட்டும்; நடந்தது நடக்கட்டும்; தந்தியை அமுக்கி விடுவதுதான் சரி" என்று முடிவு செய்தான். ஆனால் அமுக்கிய தந்தி அவனுடைய மூளைக்குள் இருந்து தொல்லைப்படுத்திக் கொண்டேயிருந்தது. இரவில் ஒரு கணமும் தூக்கமில்லாமல் செய்து கொண்டிருந்தது. மறுநாள் பொழுது விடிவதற்குள் கலியாண முகூர்த்தத்துக்குரிய ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. பத்து மணிக்குள்ளே முகூர்த்தமாகையால் ஒரே பரபரப்பாகக் காரியங்கள் நடைபெற்றன. "முகூர்த்தம் வந்து விட்டது! சீக்கிரம்! சீக்கிரம்!" என்று தலைக்குத் தலை கூச்சல் போட்டார்கள். மாப்பிள்ளைகள் இரண்டு பேரும் காசி யாத்திரை புறப்பட்டுப் பத்து அடி தூரம் போகக்கூட இடங்கொடுக்கவில்லை.

"எல்லாம் சட்பட் என்று நடந்தன. கன்னிகாதான - திருமாங்கல்ய தாரணத்துக்கு உரிய நல்ல முகூர்த்தம் வந்தது. இரட்டை நாதஸ்வரங்கள் காதைத் துளைக்கும்படி கிறீச்சிட தவுல் வாத்தியங்களை அடித்த அடியில் வீடெல்லாம் கிடுகிடுக்க, வேத மந்திர கோஷங்கள் வானை அளாவ, வீட்டு ஸ்திரீகள் நூற்றெட்டு அபஸ்வரங்களுடன் "கௌரீ கல்யாணம்" பாட, சீதாவின் கழுத்தில் ஸ்ரீ சௌந்திரராகவன் திருமாங்கல்யத்தைக் கட்டினான். அதே சமயத்தில் பட்டாபிராமன் லலிதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி முடிச்சுப் போட்டான். திருமாங்கல்யதாரணம் ஆனபிறகு பரபரப்பும் சத்தமும் ஓரளவு அடங்கின. வீட்டுக்குள்ளே அத்தனை நேரம் நெருக்கி அடித்துக்கொண்டு வியர்க்க விருவிருக்க உட்கார்ந்திருந்தவர்கள் இனித் தங்களுடைய பொறுப்புத் தீர்ந்தது என்பது போலக் கொஞ்சம் காற்று வாங்க வாசற்பக்கம் சென்றார்கள்; சூரியாவும் வெளியே வந்தான். காலையிலிருந்து உள்ளுக்கும் வாசலுக்கும் ஆயிரம் தடவை நடந்திருந்த சூரியாவின் மனம் இப்போது சிறிது அமைதி அடைந்தது. "கலியாணம் நடந்துவிட்டது. இனி மாறுவதற்கில்லை" என்ற எண்ணம் அவனுக்கு அந்த நிம்மதியை அளித்தது. சற்று நேரத்திற்கெல்லாம் வண்டி மாட்டின் சதங்கை சத்தம் 'ஜில் ஜில்' என்று கேட்டது. தெரு முனையில் கிட்டாவய்யரின் பெட்டி வண்டி வந்தது. முதல் நாள் மாலை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்க் காத்துக் கொண்டிருந்த வண்டிதான்.

அது வெற்று வண்டியாக வரவில்லை. உள்ளே உட்கார்ந்திருந்தவர் பம்பாய் அத்திம்பேராகத்தான் இருக்க வேண்டும். சூரியா பரபரப்புடன் வண்டியை எதிர் கொண்டழைப்பதற்கு முன்னால் சென்றான். கலியாணப் பந்தலின் முகப்பில் வண்டி நின்றது. வண்டியில் இருந்தவர் இறங்குவதற்குள்ளே சூரியா, "அத்திம்பேரே! என்ன இப்படிச் செய்து விட்டீர்களே! உங்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து இங்கே எல்லாருடைய கண்ணும் பூத்துப் போய் விட்டது!" என்று சொன்னான். வண்டிக்குள் இருந்தது துரைசாமி ஐயர்தான். அவர் சூரியாவை ஏற இறங்கப் பார்த்தார். "என் பெயர் சூரியா. சீதாவின் அம்மாஞ்சி நான்?" என்று சூரியா தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். "ஓகோ! கிட்டாவய்யரின் இரண்டாவது பையனா?" "ஆமாம், அத்திம்பேரே! ஏன் இத்தனை தாமதமாய் வந்தீர்கள்? பதினைந்து நிமிஷந்தான் ஆயிற்று திருமாங்கல்ய தாரணம் நடந்து. பெரிய அத்தையும் அவளுடைய அகத்துக்காரரும் கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள்." "என்ன? என்ன? திருமாங்கல்யதாரணமா! யாருக்கு? எப்போது?" "ஏன்? லலிதா, சீதா இரண்டு பேருக்குத்தான்." "சீதாவுக்கா? சீதாவுக்குக் கூடவா? மாப்பிள்ளை யார்?"

"சௌந்தரராகவன் தான்! என்ன அத்திம்பேரே? உங்களுக்குக் கலியாணக்கடுதாசி வரவில்லையா? ஆனால் உங்களுக்குத்தான் முன்னமே தெரியுமே? தில்லியிலிருந்து எழுதியிருந்தீர்களே!" "நான் ஒரு தந்தி கொடுத்திருந்தேனே?" என்று துரைசாமி ஐயர் கேட்ட போது அவருடைய பேச்சுக் குளறியது. "தந்தியா? ஒன்றும் வரவில்லையே? என்ன தந்தி?" என்று சூரியா துணிச்சலாகக் கேட்டான். சீதாவின் கலியாணத்தை நிறுத்தி விடும்படி தந்தி கொடுத்திருந்தேன். அது வரவில்லையா?" சூரியா தன் மனக் குழப்பத்தைச் சமாளித்துக்கொண்டே, "அத்திம்பேரே! இப்போது நினைவு வருகிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் ஒரு தந்தி வந்தது. கலியாணத் தடபுடலில் அதை நான் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. அதை அத்தையிடம் கொடுக்கவும் சந்தர்ப்பப் படவில்லை. இதுதானா நீங்கள் கொடுத்த தந்தி?" என்று சட்டைப்பையில் துழாவித் தந்தியை எடுத்துக் கொடுத்தான்.

துரைசாமி ஐயர் தந்தியைப் பிடித்துப் பார்த்தார். "ஆமாம் இதுதான்! ஆகா! இது ஏன் நேற்றைக்கே வரவில்லை? பட்டிக்காடு ஆனபடியால் இப்படித் தாமதித்து வந்ததாக்கும். எல்லாம் கடவுளுடைய செயல், நாம் என்ன செய்யலாம்? சூரியா! இந்தத் தந்தியைப்பற்றி ஒருவரிடமும் சொல்லாதே" என்றார். "ஆம் அத்திம்பேரே! இனிச் சொல்லி என்ன பிரயோஜனம்? நடந்தது நடந்து விட்டது!" என்றான் சூரியா. "ஆமாம்; நடந்தது நடந்து விட்டது, கடவுளுடைய சித்தம் அப்படி!" என்று சொல்லி விட்டுத் தந்தியைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டார் துரைசாமி. இதுவரை சீதா அடிக்கடி தன் கடைக் கண்ணால் மாப்பிள்ளை சௌந்தரராகவனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று வாசலில் வாசற்படி வழியாகத் தன் தந்தை வருவதைப் பார்த்தாள். அவ்வளவு நேரமும் அவள் மனத்திற்குள் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிக்கொண்டு வந்துவிட்டது. விசித்து விசித்து விம்மி விம்மி அழத்தொடங்கினாள். கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகியது.

ராஜம்மாள் உணர்ச்சி மிகுதியினால் செயலற்றுத் தூணோடு தூணாக நின்றாள். ஆகையால் அவளால் பெண்ணைத் தேற்றுவதற்கு முடியவில்லை. அந்தக் கடமையை, சீதாவைச் சற்று முன்னே கன்னிகாதானம் செய்து கொடுத்த அபயாம்பாள் செய்தாள். "அசடே! எதற்காக அழுகிறாய்! அப்பாதான் வந்து விட்டரே! இந்த மட்டும் வந்தாரே என்று சந்தோஷப்படு!" என்றாள். சீதாவின் மாமியாரும் அருகில் வந்து தேறுதல் கூறினாள். பக்கத்தில் உட்கார்ந்து சீதாவின் புடவைத் தலைப்பையும் மாப்பிள்ளையின் அங்கவஸ்திரத்தின் முனையையும் முடிச்சுப்போட முயன்று கொண்டிருந்த சுண்டுப்பயல் கூடத் தேறுதல் கூறினான். "அழாதே! அத்தங்கா! அழுதால் கண்மையெல்லாம் கன்னத்தில் வழிந்துவிடும்!" என்று சொன்னான். துரைசாமி ஐயர் வந்து சீதாவின் அருகில் உட்கார்ந்து, "அழாதே அம்மா! ரயில் இப்படி மோசம் செய்து விட்டது! இல்லாவிடில் நான் வராமல் இருப்பேனா?" என்று சொல்லிச் சீதாவின் முதுகை மிருதுவாகத் தட்டிக் கொடுத்தார்.

அப்படியும் அழுகை நிற்காததைக் கண்ட சௌந்தரராகவன் இலேசாகத் தன் மனைவியின் கரத்தை தொட்டு, "சீதா!" என்றான். சீதாவின் கண்ணீர்ப் பெருக்கு உடனே நின்றது. அவள் கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்த தன் வட்டமான பெரிய கண்களால் சௌந்தரராகவனை ஒரு தடவை பார்த்தாள். அந்த பார்வையில் எத்தனையோ விஷயங்கள் பொதிந்து கிடந்தன. வாயினால் விவரிக்க முடியாத இதயத்தின் மர்மச் செய்திகள் எவ்வளவோ அந்தப் பார்வையில் செறிந்திருந்தன. காதல் என்னும் அகராதியின் உதவி கொண்டு சௌந்தரராகவன் அந்தப் பார்வையின் பொருள்களை அறிந்து கொண்டான்.