அலை ஓசை/பூகம்பம்/சௌந்தர ராகவன்

விக்கிமூலம் இலிருந்து

ஐந்து அடி ஆறு அங்குலம் உயரமும் அதற்குத் தகுந்த வாட்டசாட்டமும் சிற்பி செதுக்கியதுபோல் கம்பீரமாக அமைந்த முகமும் கச்சிதமாகக் கிராப் செய்து நன்கு படியும்படி வாரிவிட்ட தலையும் நாகரிகமான உடையுமாக இதோ மேஜையருகில் நாற்காலியில் அமர்ந்திருப்பவன்தான் நம் கதாநாயகன் சௌந்தரராகவன். அவன் எதிரே மேஜைமீது யாரிடமிருந்தோ அவனுக்கு வந்த கடிதம் ஒன்று இருந்தது. இவன் எழுதத் தொடங்கியிருந்த கடிதம் ஒன்று அதன் பக்கத் திலே கிடந்தது. ஸ்வீடன் தேசத்துப் பேராசிரியர் இப்ஸன் எழுதிய நாடகத் தொகுதிப் புத்தகம் ஒன்று இருந்தது. அதன் அடியில் அன்று வந்த தினப் பத்திரிகையும் இருந்தது. இவற்றைத் தவிர அழகாகச் சட்டமிட்டு மேஜைக்கு அலங்காரமாக விளங்கிய புகைப்படம் ஒன்றும் காணப்பட்டது.

சௌந்தரராகவன் அழகிய நீல நிறப் பௌண்டன் பேனா வைத்திருந்தான். அவனுடைய அழகிய களை பொருந்திய முகத்தில் இப்போது கோபத்தோடு ஏமாற்றமும் துயரமும் குடிகொண்டிருந்தன. அடிக்கடி அவனுக்குப் பெருமூச்சு வந்து கொண்டிருந்தது. அறிவொளி திகழ்ந்த அவனுடைய கண்ணில் வெகு தூரத்திலுள்ள எதையோ பார்க்கும் கனவு மயக்கம் காணப்பட்டது. மேஜை மீதிருந்த புகைப்படத்தைச் சற்று நோக்குவோம். ஆகா! அவள் ஒரு வடநாட்டுப் பெண்; அழகிற் சிறந்த யுவதி. பிராயம் இளம் பிராயமாகத்தான் இருக்கவேண்டும்; ஆயினும் அவளுடைய முழுமதி முகத்தில் உலக அனுபவத்தினாலும் உள்ளத்தின் சிந்தனையினாலும் ஏற்படும் முதிர்ச்சி தோன்றியது.

இவள் யார்? இந்த வடநாட்டு நங்கையின் புகைப்படம் ராவ்பகதூர் பிரம்மஸ்ரீ பத்மலோசன சாஸ்திரிகளின் புதல்வனுடைய மேஜையின்மீது ஏன் இருக்கிறது? அந்தப் படத்தைப் பார்த்துப் பார்த்து இவன் எதற்காகப் பெருமூச்சு விடுகிறான்? நல்லது; மேஜையின் மீதுள்ள கடிதங்களைப் பார்த்து ஏதேனும் விவரம் கண்டுபிடிக்க முடியுமா? என்று பார்ப்போம். கடிதங்கள் மேஜைமீது பிரித்தே வைக்கப்பட்டிருந்தால், ராகவனுடைய தோள் மேலாக அவற்றைப் படிப்பதில் நமக்கு சிரமம் ஏற்படாது. முதலில் ராகவனுக்கு வந்திருந்த கடிதத்தைப் பார்க்கலாம். எழுத்தைப் பார்த்ததும் அது ஒரு பெண்மணியின் கடிதம் என்று தெரிந்து விடுகிறது. ஆங்கிலத்திலே எழுதப்பட்டிருந்த கடிதந்தான். நம்முடைய வாசகர்களின் வசதிக்காக அதைத் தமிழ்ப் படுத்தித் தருகிறோம்.

ஜி.ஐ.பி.மார்க்கம் 21-1-34 ஸ்ரீ சௌந்தரராகவன் அவர்களுக்கு, நமஸ்தே. தாங்கள் பம்பாய்க்கு எழுதிய கடிதம் நான் ரயிலுக்குப் புறப்படுகிற தருவாயில் கிடைத்தது. ஆகையால் ஓடுகிற ரயிலில் இருந்து கொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நாகபுரி ரயில்வே ஸ்டேஷனில் இதைத் தபால் பெட்டியில் போடலாமென்று உத்தேசித்திருக்கிறேன். தங்களுடைய கடிதம், நான் தங்களைப் பிரிந்த பிறகு தங்களுடைய மனோநிலை இன்னதென்பதை நன்கு வெளியிடுகிறது. அதை அறிந்து நான் மிகவும் வருந்தினேன். தங்களை நான் மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொள்வது, கூடிய சீக்கிரத்தில் தாங்கள் என்னை மறந்து விட வேண்டும் என்பதே.

தாங்கள் ஆண் மகன்! இவ்வுலகத்தில் தாங்கள் செய்வதற்கு எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன. அவற்றில் தீவிரமாகக் கவனம் செலுத்தினால் தங்கள் மனோநிலை மாறிவிடும். மனதை மாற்றிக் கொள்வதற்கு வேறு ஒரு நல்ல மார்க்கமும் இருக்கிறது. தங்களுக்குத் தெரியாவிட்டால் தயவுசெய்து தங்களுடைய பூஜ்ய மாதாஜியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளக் கோருகிறேன்.

தங்களுடைய தாயாரிடம் எனக்கு அளவில்லாத பக்தியும் மதிப்பும் ஏற்பட்டன. துர்பாக்கியத்தினால் அவருக்கு மருமகளாக எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. அதனால் அவரிடத்தில் என்னுடைய பக்தி சிறிதும் குறைந்துவிடவில்லை. ஸநாதன ஹிந்து தர்மமே உருவெடுத்ததுபோல் என் கண்களுக்குத் தோன்றிய அந்த மூதாட்டி இந்தப் பதிதையின் காலில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். தினந் தினம் புதுமலர் எடுத்துத் தேவிபராசக்தியைப் பூஜை செய்த அவருடைய புனிதமான கரங்களினால் என்னுடைய பாதங்களைத் தொட்டு, 'பெண்ணே! உன்னை வேண்டுகிறேன்! என் கோரிக்கையை நிறைவேற்று!' என்று கேட்டுக் கொண்டார். அப்படியே செய்வதாக அவருக்கு நான் வாக்குறுதி கொடுத்தேன். அதை நான் அவசியம் நிறைவேற்றுவேன். உலக வாழ்க்கையில் நான் இன்னும் என்னென்ன தீய காரியங்களைச் செய்து என்னுடைய பாவ மூட்டையைப் பெருக்கிக் கொண்டாலும், தங்களுடைய தாயாருக்குக் கொடுத்த வாக்கை அவசியம் நிறைவேற்றி வைப்பேன். அந்த ஓர் எண்ணமாவது இந்த உலக வாழ்க்கையாகிய பெரும் பாரத்தைச் சுமப்பதற்கு வேண்டிய மனோதிடத்தை எனக்கு அளித்துக் கொண்டிருக்கும். அன்பரே!... இப்படி நான் தங்களை அழைப்பதில் தவறு ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். தவறாயிருந்தாலும், இதுவே கடைசித் தடவையாக அத்தவறை நான் செய்வதாக இருக்கலாம். அதற்காக ஆண்டவன் என்னை மன்னித்து விடுவார்.

பம்பாய்க்குத் தாங்கள் எழுதிய கடிதத்தையும் அதற்கு முன்னால் பல சமயங்களில் எழுதியிருந்த கடிதங்களையும் தீயில் போட்டு எரித்துவிட்டேன். அவற்றை வைத்துக்கொண்டிருப்பதால் என்ன பயன்? தாங்களும் தயவு செய்து அவ்விதமே செய்யக் கோருகிறேன். நான் எழுதிய பழைய கடிதங்களையும், இந்தக் கடிதத்தையும், என்னுடைய புகைப்படம் ஒன்று வைத்திருந்தீர்களே அதையும் சேர்த்துத் தீயில் போட்டு எரித்துவிடக் கோருகிறேன். அவற்றை வைத்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? உன்னதமான மலையில் ஏறத் தொடங்குகிறவர்கள் தங்களிடம் உள்ள சாமான்களில் உபயோகமில்லாத வற்றைக் கழித்து விடுவது தான் நல்லது. நாம் இருவரும் இப்போது புதிய பாதையில் போகத் தொடங்கியிருக்கிறோம். புனர் ஜன்மம் எடுத்துப் புதிய வாழ்க்கை தொடங்குகிறோம் என்றே சொல்லலாம். உலகத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தையை எப்படிச் சுமையே இல்லாமல் கடவுள் அனுப்பி வைக்கிறார், பாருங்கள்! பூர்வ ஜன்மத்துப் பழைய மூட்டை முடிச்சுகளை யெல்லாம் தூக்க வேண்டியதாயிருந்தால் குழந்தையானது தன் வாழ்க்கையைச் சௌகரியமாகத் தொடங்க முடியுமா? அம்மாதிரியே நாமும் நம்முடைய புது வாழ்க்கையைத் தொடங்கும்போது பழைய சுமைகளையெல்லாம் தீயிலே போட்டு எரித்துவிடலாம்.

இந்தக் கடிதத்தை முடிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. அடுத்தபடி ரெயில் நிற்கும் ஸ்டேஷன் நாகபுரி என்று அறிகிறேன். வண்டி நிற்கும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சில சில வரிகளாக இத்தனை நேரமும் இதை எழுதிவந்தேன். பக்கத்திலே இருப்பவர்கள், 'என்ன இப்படிப் பிரமாதமாக எழுதுகிறாய்? ஏதாவது பத்திரிகைக்குக் கட்டுரை எழுதுகிறாயா?' என்று அடிக்கடி கேட்பதற்குப் பதில் சொல்லச் சங்கடமாயிருந்தது. நானாவது பத்திரிகைக்குக் கட்டுரை எழுதவாவது? அதற்குப் பிறந்தவர்... சீ! ஏதேதோ பழைய ஞாபகங்கள் வருகின்றன. என்னுடைய பிரயாணத்தின் நோக்கத்தைப் பற்றி எழுதி இதை முடிக்கிறேன்.

பீஹாரில் ஏற்பட்ட பயங்கரமான பூகம்பத்தைப் பற்றித் தாங்கள் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அதன் பலனாக பீகாரில் மக்களுக்கு விளைந்திருக்கும் கோர விபத்துக்களைப் பற்றியும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இயற்கையின் விபரீத கோபத்தினால் கனவிலும் நினைத்திருக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் பீகார் மக்களுக்குச் சேவை செய்யத் தொண்டர்கள் தேவை என்று பீகாரின் தலைவர் பாபு ராஜேந்திரபிரஸாத் விண்ணப்பம் விடுத்திருக்கிறார் அல்லவா? அதற்கிணங்க, பம்பாயிலிருந்து தொண்டர் கோஷ்டிகள் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் புறப்பட்ட தொண்டர் கோஷ்டியில் நானும் சேர்ந்து கொண்டிருக்கின்றேன்...

இந்த ஜன்மம் எடுப்பதற்கு யாருக்கேனும் ஏதாவது உதவி செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அதுவே நான் மனச் சாந்தி அடைவதற்குச் சாதனமாயிருக்கும். வேறு வழியில் நான் மன நிம்மதி அடைய முடியாது. இயற்கையின் கடுஞ்சோதனைக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்குச் சேவைச் செய்யும் சந்தர்ப்பத்தில் இந்த அற்ப உயிரை இறைவன் காணிக்கையாக ஏற்றுக்கொண்டால் அதைக் காட்டிலும் திருப்தியான காரியம் வேறு எதுவும் இராது. தங்களுக்கு என்னால் நேர்ந்த பலவித சங்கடங்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். தயவு செய்து என்னைச் சீக்கிரத்தில் மறந்து விடுங்கள் என்று மறுபடியும் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். இங்ஙனம், தாரிணி.

மேற்கண்ட கடிதத்தைப் படித்துவிட்டுச் சௌந்தரராகவன் பெருமூச்சு விட்டதைப்பற்றி வாசகர்கள் வியப்படைய மாட்டார்கள். சர்வகலா சாலையின் கடுமையான பரீட்சைகளிலெல்லாம் அநாயாசமாக விடை எழுதி வெற்றி பெற்ற மேதாவி இந்தக் கடிதத்துக்குப் பதில் எப்படி எழுதுவது என்று தெரியாமல் திணறியது பற்றியும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்ரீமதி தாரிணி தேவி அவர்களுக்கு, தாங்கள் கருணை கூர்ந்து ரயிலில் பிரயாணம் செய்த வண்ணம் எழுதி அனுப்பிய கடிதம் வந்து சேர்ந்தது. அதில் தாங்கள் எழுதியிருந்த வார்த்தை ஒவ்வொன்றும் என் நெஞ்சைப் பிளந்து எப்படி வேதனை செய்தது என்பதை நீ அறிந்தாயானால்... அதைப் பற்றி உனக்கு எழுதி என்ன பயன்? இரும்பையும் கல்லையும் ஸநாதன தர்மத்தின் கொடும் விதிகளையும் ஒத்த உன்னுடைய ஈரமில்லாத இருதயம் என்னுடைய மன வேதனையை எப்படி அறியப் போகின்றது?.... இவ்வளவுடனே ராகவன் எழுதத் தொடங்கிய கடிதம் நின்று போயிருந்தது. மேலே என்ன எழுதுகிறது என்று யோசித்து ஏதேதோ எழுதிப் பார்த்துச் சரியாகத் தோன்றாமையால் வரிவரியாக அடித்திருந்தான். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், பூஜை வேளையில் கரடி விடுகிறது என்ற பழமொழிக்கு உதாரணமாகும்படியாக, வாசலில் ஒரு குரல், "ஸார்!" என்று கேட்டது.

ராகவன் சற்றுக் கோபத்துடன் எழுந்து வந்து மச்சுத் தாழ்வாரத்தின் ஓரமாக நின்று பார்த்தான். பங்களாவின் தெரு வாசற்கதவண்டை இரண்டு பிராமணோத்தமர்கள் நின்று கொண்டிருக்கக் கண்டான். "யார் அது!" என்ற ராகவனின் குரலைக் கேட்டு அவர்கள் இருவரும் தலை நிமிர்ந்து பார்த்தார்கள். அவர்களில் ஒருவர் நமது நண்பர் ராஜம்பேட்டை கிராம முனிசீப் கிட்டாவய்யர்; இன்னொருவர் பழைய மாம்பலம் வாசியான கிட்டாவய்யரின் சின்ன மாமா சுப்பய்யர்.

சுப்பய்யர் முகத்தைப் பார்த்ததும் அவர் தன் தகப்பனாருக்குத் தெரிந்தவர் என்பதை அறிந்திருந்த ராகவன் "ஓகோ! அப்பாவைப் பார்க்க வந்தீர்களா? இதோ கதவைத் திறக்கச் சொல்கிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சென்றான். அவனுடைய முகம் மறைந்ததும் சுப்பய்யர் கிட்டாவய்யரின் கையைத் தொட்டு, காதோடு ரகசியமாக, "இந்தப் பையன்தான் மாப்பிள்ளை; பார்த்தாயல்லவா?" என்றார். "பையன் முதலில் மாப்பிள்ளையாகட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்!" என்றார் கிட்டாவய்யர்.