உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்மை/புதிய நந்தன்

விக்கிமூலம் இலிருந்து

புதிய நந்தன்

ந்தா சாம்பானை, நந்த நாயனாராக்க, சிதம்பரத்தில் அக்கினிப் புடம் போட்ட பின்னர், வெகு காலம் சென்றது.

அந்தப் பெருமையிலேயே, ஆதனூர் சந்தோஷ—அல்லது துக்க—சாகரத்தில் மூழ்கி அப்படியே மெய் மறந்தது.

இங்கிலீஷ் சாம்ராஜ்யம் வந்த சங்கதி கூடத் தெரியாது. அப்படிப்பட்ட நெடுந் தூக்கம்.

இப்பொழுது, ஆதனூரிலே ரயில்வே ஸ்டேஷன், வெற்றிலை பாக்குக் கடை என்ற ஷாப்பு; காப்பி ஹோட்டல் என்ற இத்யாதி சின்னங்கள் வந்து விட்டன. எப்படி வந்தன என்ற சமாசாரம் யாருக்கும் தெரியாது.

ஆனால், நந்தன் பறைச்சேரியில் விடை பெற்றுக் கொண்ட பிறகு, பறைச்சேரிக்கு என்னமோ, கதி மோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான். ஆனால், இப்பொழுது பழைய வேதியரின் வழி, வழி வந்த புதிய வேதியரின், ஆள் மூலம் குத்தகை. சேரிக்குப் புறம்பாக அல்லது தீண்டக் கூடாது என்ற கருத்துடனோ, மரியாதையான தூரத்திலே, ஒரு முனிஸிபல் விளக்கு. அதை ஏற்றுவதைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது. சேரிப் பறையர்கள், ஆண்டையின் அடிமைகள், அத்துடன் அவர்களுக்குத் தெரியாத வெள்ளைத் துரைகளின் அடிமைகள்.

அந்தப் பழைய வேதியரின் வாழையடி வாழையாக வந்த (அவர்கள் குல முறை கிளத்துப் படலம் எந்தப் புராணத்திலும் இல்லை) வேதியர் அக்கிரகாரத்தில் பெரிய பண்ணை. 1000 வேலி நிலம் இத்யாதி வகையறா. இது மட்டுமல்ல. ஒரு பென்ஷன் பெற்ற ஸப் ரிஜிஸ்திரார் விஸ்வநாத ச்ரௌதி: இவருக்குப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலும், இறந்து போன ஸனாதன உண்மைகளிலும் அபார நம்பிக்கை. இதையறிந்து நடப்பவர்கள்தான் அவருடைய பக்தர்கள்.

அவருக்கு ஒரு பையன், பெயர் ராமநாதன். எம்.ஏ.படித்து விட்டு, கலெக்டர் பரிக்ஷை கொடுக்க விருந்தவன். ஏதோ பைத்தியக்காரத் தனத்தினால்—இது அவர்கள் வீட்டிலும், அக்ரகாரத்திலும் உள்ள கொள்கை—சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு விட்டான். பையனுக்கு இதிலிருந்த பிரேமையை, ஒரு நல்ல சம்பந்தத்தில் ஒழித்து விடலாம் என்பது சிரௌதியின் நம்பிக்கை. பிள்ளையின் பேரிலிருந்த அபார வாத்ஸல்யத்தின் பயன்.

2

சேரியிலே கருப்பன் ஒரு கிழட்டு நடைப் பிணம். 60 வயது. பெரிய நயினாரின் தோட்டக் காவல். இதில் ஒரு ஸ்வாரஸ்யம். கருப்பன் சிறு பிராயத்தில் தெரியாத்தனத்தினாலோ, ஐயரவர்கள் இப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கிறபடி, பறக்கிறதுனாலோ, ஒரு நாள் இரவு, அக்ரஹாரத்தில் இருக்கும் தெப்பக் குளத்தில் இறங்கி, ஒரு கை தண்ணீர் அள்ளிக் குடித்து விட்டான். கோயில் தெய்வத்தின் உலாவுப் பிரதிநிதியான சுப்பு சாஸ்திரிகள் கண்டு விட்டார். அக்ரஹாரத்தில் ஏக அமளி. அப்பொழுது சிறுவனாகவிருந்த விஸ்வநாத ச்ரௌதி, தன்னை மீறிய கோபத்தில் அடித்த அடி, கருப்பனைக் குருடாக்கியது. விளையும் பயிர் முளையிலே தெரியாதா?

ஆனால் ச்ரௌதி இளகிய மனம் உடையவர். கருப்பனுடைய ஸ்திதிக்கு மிகவும் பரிதபித்து, தோட்டத்தில் காவல் தொழிலைக் கொடுத்தார். கல்யாணம் செய்து வைத்தார். தோட்டத்திலே குடிசை கட்டிக் கொடுத்தார். பிறகு தங்கக் கம்பியாகி விட்டான் என்று எல்லோரிடத்திலும் சொல்லுவதில் வெகு பிரேமை.

3

தெல்லாம் பழைய கதை.

கருப்பன் குருடனாகி விட்டால், குழந்தைகள் பிறக்காதா? முதலில் ஒரு ஆண் குழந்தை. அவன் பெயர் பாவாடை. ஆண்டை சின்னசாமியும், ஏறக்குறைய இதே காலத்தில்தான் பிறந்தான். இராமநாதன் சில சமயங்களில் தோட்டக் காட்டிற்கு வரும் பொழுது, பாவாடையுடன் கேணியில் முக்குளித்து விளையாடுவதிலும், மரக் குரங்கு விளையாடுவதிலும் பரம உத்ஸாகம்.

அதெல்லாம் பழைய கதை.

இரண்டு பேரும், வித்தியாசமான இரண்டு சமூகப் படிகளின் வழியாகச் சென்றார்கள். இரண்டு விதமாகக் கண்டார்கள்.

பரமண்டலங்களிலிருக்கும் பிதாவாகிய கர்த்தரின் நீதிகளை, ஆதனூரில் பரப்பும்படி ரெவரெண்ட் ஜான் ஐயர் ஒரு தடவை ஆதனூர் சேரிக்கு வந்தார். பாவாடையின் புத்தி விசேஷத்தைக் கண்டு, அவனைத் தம் மதத்தில் சேர்க்க அனுமதித்து விட்டால், பெரிய பண்ணை மாதிரி ஆக்கி விடுவதாக ஆசை காட்டினார். கருப்பனுக்கு, தன் மகன், “இங்குருசி” (English) படிக்க வேண்டுமென்று ஆசை. நீட்டுவானேன்? பாவாடை ஜான் ஐயருடன் சென்றான்.

ரெவரெண்ட் ஜான் ஐயர் வேளாளக் கிருஸ்தவர். முதலில், போர்டிங்கில் போட்டுப் படிக்க வைத்தார். பையன் புத்தி விசேஷம், மிகுந்த பெயருடன் 10 கிளாஸ் படிக்கும் வரை, பிரகாசித்தது. இன்னும் பிரகாசிக்கும். பரமண்டலங்களிலிருக்கும் கர்த்தரின் விதி வேறு விதமாக இருந்தது.

ஜான் ஐயருக்கு ஒரு பெண் உண்டு. மேரி லில்லி என்ற பெயர். நல்ல அழகு.

அவளும், அந்த மிஷன் பள்ளிக்கூடத்தில், ஆண் பிள்ளைகளுடன் படித்தாள். எல்லாவற்றிலும் முதல் மார்க் எடுக்கும், பாவாடையிடம் (இப்பொழுது அவனுக்கு தானியேல் ஜான் என்ற பெயர்) சிறிது பிரியம் நட்பு, வர வரக் காதலாக மாறியது.

கிருஸ்தவ சமுதாயத்தில், இந்துக் கொடுமைகள் இல்லையென்று ஜான் ஐயர் போதித்ததை நம்பி, மனப்பால் குடித்த ஜான் தானியேல், ஒரு நாள் ஐயரிடம் நேரிலேயே தன் கருத்தை வெளியிட்டான்.

ஜான் ஐயரவர்களுக்கு வந்து விட்டது பெரிய கோபம். “பறக் கழுதை! வீட்டை விட்டு வெளியே இறங்கு” என்று கழுத்தைப் பிடித்து, நெட்டித் தள்ளினார்.

மனமுடைந்த தானியேலுக்குப் பாழ் வெளியாகத் தோன்றியது உலகம். இந்த மன நிலைக்கு மதம்தானே சாந்தி என்கிறார்கள். கிருஸ்தவனாக இருந்த பொழுது, வேத புத்தகத்தை நன்றாகப் படித்திருந்தான். சுவாமியாராகப் போய் விட வேண்டுமென்று, கத்தோலிக் மதத்தைத் தழுவி, சுவாமியார் பரிட்சைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவிஸ் பிரதராக (Novice Brother} Father ஞானப் பிரகாசம் மேற்பார்த்த மடத்தில், இரண்டு வருஷங்கள் கழித்தான். சுற்றி நடக்கும் அபத்தங்களும், சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்குச் சற்றும் சாந்தி தராத இருப்புச் சட்டம் போன்ற கொள்கைகளும், அவன் மனத்தில் உலகக் கட்டுப்பாடே ஒரு பெரிய புரட்டு, என்ற நம்பிக்கைகளைக் கிளப்பி விட்டன.

அதனிடமும் விடை பெற்றுக் கொண்டு, திரு. ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு விட்டான். அதிலே அவன் ஒரு பெரும் தீவிரவாதி. இப்பொழுது தோழர் நரசிங்கம் என்ற பெயருடன், தனக்குத் தோன்றிய உண்மைகளை, அதில் ஒரு பைத்தியம் பிடித்தது போல், பிரசாரம் செய்து கொண்டு வந்தான்.

ஒரு தடவை தகப்பனாரைக் காண, ஆதனூருக்கு வந்தான். பழைய எண்ணங்கள் குவிந்திருக்கலாம், அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அவனுக்கு இரண்டு உண்மைகள் தெரிந்தன. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் இடையே எண்ணங்களில், செய்கைகளில், ஏன் எல்லாவற்றிலுமே, ஒரு பெரிய பிளவு இருக்கிறது என்பது ஒன்று. இன்னும் ஒன்று, தான் சென்ற பிறகு, தனக்கு ஒரு அழகான—பறைச்சிகளுக்கும் அழகாயிருக்க உரிமையுண்டு—தங்கை, பதினாறு பிராயத்தாள் இருப்பதையறிந்ததுதான்.

ஆனால், இவர்களை மனிதரின் நிலைமைக்குக் கொண்டு வர, எந்தப் பகீரதன் உண்டாகப் போகிறானோ என்ற மலைப்பு ஏற்பட்டு விட்டது. தனது பிரசங்கங்கள் படித்தவர்களிடத்தில் செல்லும்; இந்த வாயில்லாப் பூச்சிகளிடத்தில்?

4

ராமநாதன் வீட்டில் செல்லப் பிள்ளை. இட்டது சட்டம். பக்கத்து ஜில்லாத் தலைநகரில் மெட்ரிக்குலேஷன் வரை படித்தான். அவனுடைய படிப்பு வேறு ஒரு தினுஸு. கெட்டிக்காரன்; பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல. சிலரைப் போல், பள்ளிக்கூடத்தில் மூழ்கி விடவில்லை. காலத்தின் சக்தி வசப்பட்டு, அதன் நூதன உணர்ச்சிகளில் ஈடுபட்டு இன்பப்பட்டவன்.

சென்னைக்குச் சென்று, மேல்ப் படிப்புப் படித்தான்; எம்.ஏ.வரையில். அதற்குள் 1930 இயக்கம் வந்தது. தந்தை நினைத்த கலெக்டர் பதவியை விட்டு, தடியடி பட்டு ஜெயிலுக்குச் சென்றான்.

ஜெயிலில் இருந்து வந்ததும், ஹரிஜன இயக்கத்தில் ஈடுபட்டான். தகப்பனாருக்கு வருத்தம்தான். ராமநாதனின் அசையாத மனத்தின் முன், ச்ரௌதியின் அன்புதான் நின்றது. கொள்கைகள் பறந்தன.

ஒரு தடவை ஆதனூருக்கு வந்திருந்தான். அப்பொழுது, கருப்பனின் மகளுக்கு வயது வந்து விட்டது. நல்ல இயற்கையின் பூரண கிருபை இருந்தது.

ஒரு நாள் இரவு நல்ல நிலா. தோட்டத்திற்குச் சென்றான். இரவு கொஞ்ச நேரந்தான். அதுவும் ஆதனூரில் கேட்க வேண்டுமா?

தோட்டக் கிணற்றில் யாரோ குதிப்பது போல் சப்தம். ஓடிப் பார்க்கிறான்; ஒரு பெண் உள்ளே, அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. உடனே அவனும் குதித்தான்.

“சாமி,கிட்ட வராதிங்க, பறச்சி, கருப்பன் மவ. சும்மானாச்சிங் குளிக்கறேன்” என்ற குரல்.

“சரி சரி, நீ விழுந்து விட்டாயாக்கும் என்று நினைத்தேன். எறி வா” என்று கரை ஏறினான்.

“இல்லை. சாமி” என்று தயங்கினாள். பிறகு என்ன? இயற்கை இருவரையும் வென்றது.

ராமநாதனுக்கு… பிறகு ஒரு மகத்தான பாபம் செய்து விட்டோம் என்ற நினைப்பு. கருப்பன் மகளுக்கு, சின்னப் பண்ணையின் தயவு கிடைத்ததில் திருப்தி.

ராமநாதன் அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக வாக்களித்தான். ‘அதெப்படி முடியும் சாமி’ என்று சிரித்தாள்.

கருப்பனிடம் போய் நடந்ததைச் சொல்லிப் பெண்ணைக் கொடுக்கும்படி கேட்டான். அவனுக்குப் புதிய கொள்கைகள் எப்படித் தெரியும்?

“அது நயிந்தோ மகாப் பாவம். கண்ணாணே அப்படிச் செய்யக் கூடாது.”

ராமநாதனுக்கு இடி விழுந்தது போலாயிற்று.

5

காத்மா காந்தி தென்னாட்டில் ஹரிஜன இயக்கத்திற்காகப் பிரசாரம் செய்ய வந்தார். ஆதனூரில் ஐந்து நிமிஷம் தங்குதல். எல்லாம் ராமநாதனின் ஏற்பாடு. ச்ரௌதிகள் அவருடன் வாதம் செய்ய புராண அத்தாட்சிகளுடன் தயார். இதில் ச்ரௌதிகளுக்கு இரட்டை வெற்றி என்ற நம்பிக்கை. ஒன்று. காந்தியின் கொள்கையைத் தகர்ப்பது. இரண்டாவது காந்தியின் முன்பே, தன் புத்திரனிடம் சனாதனத்தின் புனிதத்தைக் காண்பிப்பது.

தோழர் நரசிங்கம் காந்தியை எதிர்த்துக் கேள்விகள் கேட்க, ஆதனூருக்கு வந்தான். தங்கையின் சமாசாரம் தெரிந்து விட்டது. தகப்பனாரிடம் கலியாணம் செய்து வைத்து விட வேண்டுமென்றும், அதற்குப் பறையரின் சமுதாயத்தின் கட்டுப்பாட்டால் செய்ய முடியும் என்றும் தெரிவித்தான். தகப்பனாரின் முட்டாள்தனமான நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. ‘பாப்பானின் சாயத்தைத் துலக்கி விடுகிறேன்’ என்று காத்திருந்தான்.

ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருந்த மைதானத்தில், ஒரு மேடை; கியாஸ் லைட்; இத்தியாதி, இத்தியாதி, பெருங் கூட்டம். வெற்றி கொள்ள ஆசைப்படும் சனாதனமும் அதில் கலந்திருக்கிறது.

கருப்பன் கிழவன், ‘மவாத்துமா’ கிழவரைப் பார்க்க ஆசை. கண் எது? அதென்னமோ? குருடருக்கு என்ன செய்ய முடியுமோ?

தட்டுத் தடுமாறிக் கொண்டு வந்தான். எங்கோ தன் மகன் சப்தம் போல் இருக்கிறது என்று தடுமாறிக் கொண்டு ஓடினான்.

மாலைகள் வந்து விட்டனவா என்று கவனித்து ஓடிக் கொண்டிருக்கும் ராமநாதன் சற்றுப் பின்னால் வந்தான், குறுக்குப் பாதை வழியாகத் தோழர் நரசிங்கம் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தான்.

நெற்றிக் கண்ணைத் திறந்த சிவபிரான் போல் தலைப்பு வெளிச்சத்தைப் போட்டுக் கொண்டு, கோஷித்துக் கொண்டு வருகிறது மதராஸ் மெயில். ஆதனூர் அதன் மரியாதைக்குக் குறைந்தது; நிற்காது. நாற்பது மைல் வேகம்.

என்ஜின் டிரைவர் விஸிலை ஊதுகிறான்; கோஷிக்கிறான். குருடன் கம்பி வழியாகவே கடக்கிறான். மனம் குழம்பி விட்டதா?

தூரத்திலிருந்து இருவர், அவனைக் கண்டு விட்டார்கள். மகனும், மருமகனும்; இயற்கைச் சட்டத்தின்படி அப்படித்தான். சமுதாயம் என்ன வேண்டுமானாலும், சொல்லிக் கொள்ளட்டும்.

வேகமாக ஓடி வருகின்றனர்.

வெளிச்சம்; வெளிச்சம்.

மூவரும் சேரும் சமயம். இழுத்து விடலாம்.

“ஐயோ!”

ஹதம். ரத்தக் களரி.

மூவரின் இரத்தங்கள் ஒன்றாய்க் கலந்தன, ஒன்றாய்த்தான் இருக்கின்றன.

இதில் யாரை நந்தன் என்பது?

புதிய ஒளியை இருவர் கண்டனர். இருவிதமாகக் கண்டனர்.

இறந்த பிறகாவது சாந்தியாமா?

சமுதாயத்திற்குப் பலிதான். அதை யார் நினைக்கிறார்கள்.

பத்திரிகையில் பெரிய நீண்ட செய்திகள்…

பிறகு ஆதனூரில்…?

Script error: No such module "Custom rule".

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆண்மை/புதிய_நந்தன்&oldid=1694224" இலிருந்து மீள்விக்கப்பட்டது