ஆழ்வார்கள் வாழித் திருநாமங்கள்

விக்கிமூலம் இலிருந்து

அப்பிள்ளை [தொகு]

திருவாய் மலர்ந்தருளிய [தொகு]

ஆழ்வார்கள் வாழித் திருநாமங்கள் - மூலம்[தொகு]

மண்ணுலகத் துள்ளோர்கள் மகிழ்ந்துவாழ மணவாள மாமுனிகளருள் தன்னாலே
பண்ணருளிச் செயல்விளக்கம் வாழிநாமம் பத்தியுடனிவ் வுலகிற்பயில் வார்கேட்பார்
விண்ணுலகத் தோர்களினுங் கீர்த்தியுற்று விளங்கியிட மெய்ஞ்ஞான வாழ்வுபெற்றே
கண்ணனடி யார்களுடன் கலந்துநாளும் காசினியிற் சதிராகவாழ் வார்தாமே.


வேதத்தின் நுண்பொருளைத் தமிழால் நாளும் விளக்கியிடப் பன்னிருவர் வந்து தோன்றும்
மாதத்தை அவரவர்க ளுதித்த நாளை வாழ்பதியைக் கலைத்தொகையை மனதில் வைத்துப்
போதத்தைத் தருந்தமிழால் வாழி நாமம் பூதலத்திற் பேசுகின்றே னிதனைக் கற்பார்
பாதத்தை யென்முடிமேல் அணியாப் பூண்டு பன்னாளுங் கைகூப்பிப் பணிவேன் யானே.


போதமிகும் பொய்கையார் பூதத்தார் வாழியே
புகழ்பேயார் மழிசையர்கோன் புத்தூரன் வாழியே
நாதமுனி தொழுங்குருகை நாவீறன் வாழியே
நற்பாணன் கொல்லிநகர் நாதனார் வாழியே
ஆதரிக்குந் தொண்டரடிப்பொடி தாள்கள் வாழியே
அருட்கலியன் மதுரகவி யாண்டாளும் வாழியே
ஏதமற்ற நாலாயிரப் பனுவல் வாழியே
இவருதித்த நாள்மாத மெழிற்பதியும் வாழியே.

பொய்கையாழ்வார்[தொகு]

செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே. (1)


பூதத்தாழ்வார்[தொகு]

அன்பே தகளிநூறும் அருளினான் வாழியே
ஐப்பசியி லவிட்டத்தி லவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தைதிரி யிட்டபிரான் வாழியே
எழின்ஞானச் சுடர்விளக்கை யேற்றினான் வாழியே
பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே. (2)


பேயாழ்வார்[தொகு]

திருக்கண்டே னெனநூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்தஐப் பசிசதயம் செனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவே யிடைகழியில் நின்றசெல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான்தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே. (3)

திருமழிசைப்பிரான்[தொகு]

அன்புடனந்தாதி தொண்ணூற் றாறுரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசை யமர்ந்தசெல்வன் வாழியே
இன்பமிகு தையில்மகத் திங்குதித்தான் வாழியே
எழிற்சந்த விருத்தம்நூற் றிருபதீந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெரு்ககில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத் தெழுநூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரனிரு நற்பதங்கள் வாழியே. (4)

நம்மாழ்வார்[தொகு]

ஆனதிரு விருத்தநூறும் அருளினான் வாழியே
ஆசிரிய மேழுபாட் டளித்த பிரான் வாழியே
ஈனமறவந் தாதியெண்பத் தேழீந்தான் வாழியே
இலகுதிருவாய் மொழியாயிர முரைத்தான் வாழியே
வானணியுமா மாடக்குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே (5)

குலசேகரப் பெருமாள்[தொகு]

அஞ்சனமா மலைப்பிறவி யாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை யடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியே
அநவரத மிராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே. (6)

பட்டர்பிரான்/பெரியாழ்வார்[தொகு]

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய வாணிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாள்தான் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழி யறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே. (7)

தொண்டரடிப்பொடியாழ்வார்[தொகு]

மண்டங் குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரைசூ ழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலை யொன்பத்தஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டுதிருப் பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே (8)

திருப்பாணாழ்வார்[தொகு]

உம்பர்தொழும் மெய்ஞ்ஞான முறையூரான் வாழியே
உரோகிணிநாள் கார்த்திகையி லுதித்தவள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்க ரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான்பத்து மருளினான் வாழியே
செம்பதுமை யருள்கூரும் செல்வனார் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே. (9)

கலியன்[தொகு]

கலந்திருக் கார்த்திகைக்கார்த் திகைவந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திக ழாயிரத்தெண் பத்துநாலுரைத் தோன்வாழியே
நாலைந்து மாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற் றிருக்கையிரு மடலீந்தான் வாழியே
இம்மூன்றி லிருநூற்று மூவொன்பான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே. (10)

மதுரகவியாழ்வார்[தொகு]

சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
திருக்கோளூ ரவதரித்த செல்வனார் வாழியே
உத்தரகங் காதீரத் துயர்தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குதிக்க வுகந்துவந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே. (11)

ஆண்டாள்/கோதைநாச்சியார்[தொகு]

திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே. (12)

ஆழ்வார்கள் வாழித்திருநாமங்கள் முற்றும்[தொகு]

ஆசாரியர்கள் வாழித் திருநாமங்கள்

[[]]

[[]]

[[]]

[[]]