இங்கிலாந்தில் சில மாதங்கள்/இரவலர்கள் இல்லை

விக்கிமூலம் இலிருந்து

இரவலர்கள் இல்லை

‘வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்’ என்பது அயோத்தி நகரத்தைப் பற்றிக் கம்பன் கண்ட கற்பனை. வள்ளல்களும் இரவலர்களும் வாழ்ந்த நாடு இது; கவிஞர்கள் புவியாளும் மன்னர்களைப் புகழ்பாடி வாழவேண்டிய சூழ்நிலையும் இந்த நாட்டில் இருந்துள்ளது, அவர்கள் தரும் பரிசிலை நம்பிக் கவிஞர்களின் சிறப்பும் உயர்வும் கிடக்கவேண்டி இருந்தது.

கம்பனுக்கே இந்தப் போக்குப் பிடிக்கவில்லை போலும். ஒரு புரட்சிக் கருத்தைத் தோற்றுவிக்கிறான். இருப்பவர்கள் தம்மை வள்ளல்கள் என்று கூறிக்கொள்வதற்கே காரணம் இல்லாதவர்கள் கையேந்தி நிற்பதால்தான். வறுமை என்ற ஒன்று இருந்தால்தானே வள்ளல் என்ற இனம் ஒன்று தோன்றமுடியும். வள்ளல்களே இருக்கக் கூடாது கொடையாளிகள் இருப்பது நாட்டுக்கு அவமானம் என்ற ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்தான். வறுமையின் வாட்டமே வள்ளல்களின் ஏற்றத்திற்குக் காரணம் என்பதை அறிந்த கம்பன் அந்த நாட்டில் வள்ளல்கள் இல்லை என்ற கற்பனையைத் தோற்றுவித்தான். இது கலை மெரு கோடு கூடிய கூற்று.

மனிதன் தன் மானத்தோடு வாழவேண்டும்; தனக்குச் சேர வேண்டியது அல்லாததைப் பெறுவது இழுக்கு; அது தவறு என்ற உணர்வு தன்மானத்தின் அடிப்படையில் எழுவதாகும். இங்கே பிச்சைக்காரர்கள் குறைந்துவிட்டார்கள்; அதை ஒரு தொழிலாக நடத்தும் கூட்டம் மறைந்து விட்டது என்று கூறலாம். கோயில்களின் முன் தருமசிந்தனை உள்ளவர்கள் செயல்பாட்டுக்குத் துணை செய்ய ஒரு சிலர் கை நீட்டி வாங்கிக் கோயிலை அறநிலையமாக மாற்ற உதவி வருகின்றனர். உழைக்காமல் கையேந்திப் பிழைப்பது பிச்சைத் தொழில்; இன்று அது சுகபோக வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியாக மாறிவிட்டது; எதையும் ‘அது’ தராமல் சாதிக்க முடியாது என்ற நியதி வளர்ந்துவிட்ட பிறகு இனி அதைப் பற்றி எழுதிப் பயன் என்ன? ஒழுங்கீனங்கள் நியதியாகி விட்ட பிறகு நேர்மை என்பதைப் பற்றிப் பேசுவது பழங்காலக் காவியத்தை ரசிப்பது போன்றது ஆகும். இது எந்த அளவு நம் சமுதாயத்தில் ஊடுருவி நிற்கிறது என்பதைப் ‘பணம் பத்தும் செய்யும்’ என்ற தமிழ்த் திரைப்படம் மிக அழகாகக் காட்டியுள்ளது. இலக்கியம் காலத்தின் கண்ணாடி; திரைப்படங்களும் இப்படிக் காலத்தின் கண்ணாடியாக இயங்க முடியும் என்பதற்கு ஊழல் மலிவைப் பற்றிக் காட்டும் இச்சித்திரம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அங்கே கை நீட்டிப் பிச்சை கேட்கும் இரவலர்களைக் காணமுடியவில்லை; லஞ்சம் கொடுத்துக் காரியங்களைச் சாதிக்க முடியும் என்ற சித்தாந்தம் அங்கே குடிபுகவில்லை. இன்று பாரத தேசத்தில் கடும் நோயாகப் பரவி உள்ளது ஊழல் என்பதுதான். இதைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்; தவிர்க்க முடியாத அன்றாட வாழ்க்கை நடைமுறை என்று இது ஆகிவிட்டது. என்ன செய்வது? ‘திரித்தவரை கயிறு’ என்ற சித்தாந்தத்தின் விளைவுதான் இந்த நிலைமை. வாழ்க பாரதம்!