இந்தியக் கலைச்செல்வம்/பாரத சமுதாயம் - கலைகள்

விக்கிமூலம் இலிருந்து
1
பாரத சமுதாயம் -
கலைகள்
பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய!

என்று கவியரசர் பாரதியார் சென்ற அரை நூற்றாண்டிற்கு முன்பே கட்டியங் கூறி பாரதசமுதாயத்தை வாழ்த்தியிருக்கிறார். இப்படித்தான் இமயம் முதல் குமரி வரை, துவாரகை முதல் காமரூபம் வரை பரந்து கிடக்கும் இந்தப் பாரத சமுதாயம் ஒரே நாடு, அதில் வாழ்பவர்கள் எல்லாம் ஒரே இனத்தவர் என்ற ஒருமைப்பாட்டுணர்ச்சி மக்கள் உள்ளத்தில் வளர வகை செய்திருக்கிறார்.

பாரத பூமி பழம் பெரும் பூமி
நீரதன் புதல்வர்; இந் நினைவகற்றாதீர்

என்று இந்த அகண்ட பாரதத்திலுள்ள மக்களை எல்லாம் கூவிஅழைத்துக் குரல் கொடுத்திருக்கிறார்.

அத்தகைய அகண்ட பாரதத்தின் பண்புகள், கலைகள், நாகரிகம், கலாச்சாரம் எல்லாம் ஒரே படித்தாய் உருவாகி வந்திருப்பதும் நாம் அறிந்ததே. அவற்றில் கலைகள் இந்தப் பாரத சமுதாயத்தில் எப்படி உருப்பெற்று வளர்ந்திருக்கின்றன என்பதைப் பற்றியே ஒரு பேச்சு இன்று.

முதலில் கலைகள் என்றால் என்ன? என்று ஒரு சிறு விளக்கம் தெரிந்து கொள்ளலாம். 'கடவுள் என்றால் யார்?' என்று கேட்டால் கூட எளிதில் சுட்டிக்காட்டி விடலாம் போல் இருக்கிறது. கலை என்றால் என்ன என்று சொல்வது எளிதாக இல்லை. கலை என்றால் அழகின் சாஸ்திரம் என்பார் ஒருவர். அழகுணர்ச்சிக்குத் திருப்தி அளிக்கக் கூடிய தெல்லாம் கலை என்பார் இன்னொருவர். கலை என்பது அழகு ணர்ச்சியிலே பிறந்து அவனுக்கு ஆனந்தம் அளிப்பது என்பார் மூன்றாவது நபர். இந்த விளக்கங்கள் எல் லாம் கலை என்றால் என்ன என்று விளக்கி விடுகின்றனவா என்ன?

இறைவனது அருளைத் துணை கொண்டு மனிதன் தனது, கற்பனையினால் சிருஷ்டிப்பதுதான் கலை. கலை என்பதற்கு கற்பனா சிருஷ்டி. சிந்தனை செய்கின்ற மனிதன், கற்பனாசக்தியாகிய புஷ்பக விமானத்தில் ஏறி ஆகாய வீதிகளில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகிறான், இந்த 'விதமாக சிந்தனையில் பிறக்கின்ற கற்பனா சிருஷ்டியைச் சப்த சித்திரத்திலும், வர்ணப் பூச்சுகளிலும் கல்லுருவங்களிலும் பரிணமிக்கும்படி செய்கின்றவன் எவனோ அவனே கவிஞன், அவனே ஓவியன், அவனே சிற்பி, அவனது சிருஷ்டியே கலை. கலை உண்மைக்கும் உலகியலுக்கும் மாறுபட்டதன்று. உலகியலில் காணுகின்ற உண்மைகளை எடுத்துக் காட்டி, மக்கள் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை ஒரு உன்னத நிலைக்கு உயர்த்துகிற திறம் படைத்ததுதான் கலை, கலை அந்த அந்த நாட்டின் கலாச்சாரத்தை விளக்கும். சான்றாக அமையும். இந்தியக் கலைகள் இருபத்தி நான்கு என்று ஒரு கணக்கு.

ஆய கலைகள்
அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும்
என்னம்மை

என்று தமிழ்க் கவிதையில் கலைகளின் அதி தேவதையாகிய - கலைமகள் பேசப்படுகிறாள். இலக்கியம், இலக்கியத்தோடு தொடர்பு கொண்டவை, வீட்டிலும், வாழ்விலும் அழகையும் சுவையையும் உண்டாக்குபவை, அலங்காரங்களுக்கானவை, அறிவு விருத்திக்கு உதவுபவை, விளையாட்டுக்களை வளர்ப்பவை போன்று பல பல துறைகளில் இக்கலைகள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இத்தனையையும் பற்றி ஒரு ஜாபிதா கொடுக்கவோ, அவற்றுக்கு விளக்கம் தரவோ நான் முற்படப் போவதில்லை. அழகுக் கலைகள் என்ற அருங்கலைகளில் முதலிடம் பெறும் கவிதை, இசை, சித்திரம், நடனம் என்னும் கலைகளைப் பற்றி மட்டும். ஒரு சில வார்த்தைகள் சொல்ல முனைகின்றேன். இந்த அருங் கலைகள் ஒருவருக்குக் கைவரப் பெறுவது ஏதோ இறை அருளால்தான் ஏற்பட வேண்டுமே ஒழிய, கற்றுத் தெளிவது அல்ல அவை, இதை அழகாக சில்ப ரத்தினம் என்ற கதை தெளிவாக்குகிறது. பாரத சமுதாயத்தில் கவிதைக் கலை எப்படிச் சிறப்புற்றிருந்தது என்று முதலில் தெரிந்து கொள்வோம். வேதங்கள் மிக மிகத் தொன்மையானவை, அவைகளில் ரிக் வேதம் முழுவதும் கவிதையாகவே உருவாகியிருக்கிறது என்பர். அதன் பின் இதிகாச காலத்தில் வான்மீகரது ராமாயணமும் வியாசரது மகாபாரதமும் நல்ல கவிதைகளில் உருவான காவியங்கள். துளசி தாஸரது ராம சரித்திர மானஸ், அதன் பின் எழுந்த மீராபாய் பஜன், கபீர் தாஸரது பாடல்கள் எல்லாம் ஹிந்தியில் எழுந்த கவிதைகள். மராத்திய நாட்டிலே துக்காராமும், ஆந்திர நாட்டிலே வேமன்னாவும், சிறந்த கவிதைகள் எழுதிய கவிஞர்கள் என்பர். இப்படி வட நாட்டிலே கவிதை வளர்ந்த போது தென் தமிழ் நாட்டில் சங்க காலத்துப் புலவர்களும், சிலப்பதிகாரம் முதலிய பஞ்ச காவியம் எழுதிய கவிஞர்களும் நல்ல கவிதையை வடித்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பின்தான் கவிச்சக்ரவர்த்தி கம்பனும், சேக்கிழாரும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் அருமையான கவிதைகளை உருவாக்கி கவி உலகை வளப்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் எழுந்தவர்கள் புலமைமிக்கவர்களாக இருந்திருக்கிறார்களே ஒழிய சிறந்த கவிதையை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. நம்முடைய பரம்பரையிலே கவியரசர் பாரதியும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் ஒப்பற்ற கவிஞர்களாக விளங்கியிருக்கிறார்கள். இதே. இருபதாம் நூற்றாண்டில் புகழ் பெற்ற கவியரசர் ரவீந்திரரும் அற்புதம் அற்புதமான கவிதைகள் இயற்றியிருக்கிறார். இத்தனை கவிஞர்களும் பாரத சமுதாயம் ஒரே நாடு என்ற உணர்வு உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 'செப்பு மொழி பதினெட்டு உடையவள் பாரத மாதா' என்றிருந்தாலும் அவள் சிந்தனை எல்லாம் ஒன்றாகவே இருந்திருக்கிறது.

என் நாட்டு மக்கள் அனைவரும்
ஒன்றாய் உயிரும் உள்ளமும் இசைந்து
வென்று வாழ்வுற விமலனே அருள்க!

என்று தாகூர் பாடும்போது அத்தனை கவிஞர்களும் சேர்ந்து குரல் எழுப்புவதாகவே தெரிகிறது. இப்படித்தான் கவிதைக் கலை பாரத சமுதாயத்தில் வளர்ந்திருக்கிறது.

கவிதையை ஒட்டியே இசையும் வளர்ந்திருக்கிறது நம் நாட்டில். அந்த இசை எல்லோருடைய இதயங்களையும் இசைக்கும் ஆற்றலை உடையதாக இருந்திருக்கிறது. இன்னும் மக்கள் பாடும் இசையும், வாத்தியங்கள் மூலம் இசைக்கும் இசையும், நாடெங்கும் பரவி இருக்கின்றன. தென்னாட்டில் ஒரு நாதசுரம் என்றால் வடநாட்டில் ஒரு ஷெனாய் என்று வாத்தியங்களில் கூட ஒரு ஒருமைப்பாட்டைக் காண்கிறோம். தமிழிசையில் பண்கள் சிறப்பானதாக இருந்து நாட்டில் இசை வளர்ந்திருக்கிறது. கர்நாடக சங்கீதம் நம் காதுகளுக்கு இனிமையாய் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதையே வடநாட்டுச் சகோதரர்கள் அனுபவிக்கும் அளவுக்கு வளர்த்திருக்கறோம். பாரத நாட்டு இசையின் சிறப்பைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு தனிப்பேச்சே பேச வேண்டுமேயொழிய, ஒரு சிறிய பேச்சில் இடைப் பரவலாகக் கூறிவிட முடியும் என்று தோன்றவில்லை. பாரத சமுதாயத்தின் சிறந்த கலைகள் சிற்பம், ஓவியம், நாட்டியம் என்பவைதாம். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவையும், இவற்றோடு ஒன்றிய கவிதையும் இசையும் சமயச் சார்புடையவைகளாகவே வளர்ந்திருக்கின்றன. அதனால்தான் இக்கலைகள் அனைத்துமே நாட்டில் எழுந்த கோயில்களைச் சுற்றிச் சுற்றியே வளர்ந்திருக்கின்றன.

கோயில்கள் என்ற உடனேயே நம் நாட்டுக் கோயில்களும், அதன் நிர்மாணமும் அங்கு வளர்ந்த கலைப் பெரும் செல்வங்களும் நம் கண்முன் வந்து போகும். பாரதத்தின் சிற்பச் செல்வங்கள் எல்லாம் நம் கோயில்களுக்குள்ளேயே பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்லலாம். சைவக் கோயிலானாலும் சரி, சமண பௌத்த ஆலயங்கள் ஆனாலும் சரி எல்லா இடத்திலும் சிற்பங்கள் நிறைந்தே இருக்கக் காண்கிறோம். 'சித்திரத்தில் மிக உயர்ந்த சிற்ப நூலின் அற்புதம் சின்னச் சின்ன ஊரில் கூட இன்றும் எங்கும் காணலாம் என்பது இன்றைய கவிஞன் வாக்கு. வடநாட்டில் ரிஷிகேசம் ஆனாலும், ஹரித்வார் ஆனாலும், காசி ஆனாலும், கயா ஆனாலும், கஜுராஹோ ஆனாலும், கல்கத்தா ஆனாலும், புவனேசுவரம் ஆனாலும், ஜகந்நாதம் ஆனாலும், எங்கும் சிற்ப வடிவங்களே நிறைந்திருக்கக் காண்கிறோம். குடை வரைகள் எல்லாம் ஒரே சிற்ப வடிவங்கள் தாம். எல்லோரா குடை வரைகளுக்குச் சென்றால் அதிலும் கைலாய நாதர் குடைவரையைக் கண்டால் நாம் நிற்பது இவ்வுலகில் தானா என்றே ஐயம் எழும். 'இப்படியன் இந்நிறத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாதவனே கடவுள்' என்று! கடவுளை உருவிலியாகவே கூறியிருந்தாலும், அந்த உருவம் இல்லாத இறைவனை எண்ணற்ற உருவங்களில் செதுக்கியும், வடித்தும் நிறுத்தி இருக்கிறார்கள் கலைஞர்கள். பத்ரிநாதனும், கேதாரநாதனும், விஸ்வநாதனும், ஜகந்நாதனும், ரங்கநாதனும், ராமநாதனும் பாரத நாட்டின் எல்லைக் காவலர்களாக அமைந்து இச் சிற்பக் கலை நாளும் வளர வகை செய்திருக்கிறார்கள். அபூ மலையில் உள்ள சமணக் கோயில்கள் இரண்டும், குஜராத்தில் பல பகுதிகளில் காணும் சமணர் கோயில்களும் மற்றைய கோயில்களுக்கு சளைத்தவை இல்லைதான். மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜுராஹோ கோயில்கள் கோனார சூரியனார் கோயில் முதலியவைகளில் ஆண் பெண் உறவை விளக்கும் சிற்பங்கள்தாம் எத்தனை எத்தனை! பெண்களின் வனப்பை எல்லாம் எடுத்துக் காட்டும் சிற்பங்களே எண்ணற்றவை. புவனேஸ்வரத்தில் சிற்ப அழகைவிட கோயில் நிர்மாண அழகு சிறப்பான அம்சமாக இருப்பதைக் காண்கிறோம். வேங்கடம் முதல் குமரி வரை பரந்து கிடக்கும் தமிழகத்திலோ கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு கோயிலும் ஒரு அற்புதக் கலைக் கூடம். பல்லவரும் சோழரும் நாயக்கரும் பாண்டியரும் போட்டி போட்டுக் கொண்டு கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். சிற்பக் கலையை வளர்த்திருக்கிறார்கள். மாமல்லபுரமும் காஞ்சியும் பல்லவர் காலத்தியவை என்றால், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் முதலியவை சோழர் காலத்துக் கலை வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக் காட்டு, மதுரை, ராமேஸ்வரம், சீரங்கம், கிருஷ்ணாபுரம். எல்லாம் நாயக மன்னர்களின் கலை ஆர்வத்துக்கு சான்று பகர்கின்றன. பாரத சமுதாயத்தில் தமிழ்நாட்டை மட்டும் பார்த்து விட்டால் சிற்பக் கலையின் சிகரத்தையே கண்டு விட்டவர்கள் ஆவோம்.

சிற்பக் கலையில் மட்டும்தான் பாரதம் சிறத்திருந்தது. என்பதில்லை. சித்திரக் கலையிலும் சிறந்தே விளங்கியிருக்கிறது, அஜந்தா ஓவியங்கள் அழியா அழகுடன் எழுதப் பெற்று மங்காப் புகழ் பெற்றன. துடன் போதிசத்துவர், புத்தர், அரசிளங்குமரிகள், அழகிய நங்கையர் பலரும் உருப்பெற்றனர். இவை எல்லாம் பௌத்த சந்நியாசிகளால் எழுதப்பட்டவை என்று அறிகிறபோது நாம் அப்படியே அதிசயித்து நிற்கிறோம். அதுவும் இன்றைக்கு ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் அவை தீட்டப் பெற்றிருந்தும் இன்று வரை அழியா ஓவியமாக அவை நிற்கின்றன. இந்த அழியா வண்ணக்கலை மேல் நாட்டாருக்கும் கை வராத ஒன்று. வடநாட்டில் இக்கலை வளர்த்த பெருமக்கள் மொஹலாயர் என்பதும், அவர்களுக்குப் பின்பே பஹாரி, பசோலி, காங்ரா முதலிய ஓவிய மரபுகள் தோன்றின என்பதும் வரலாறு. தென்னகமாகிய தமிழகத்தில் சிற்பக் கலை சிறப்புற்றிருந்த அளவுக்கு சித்திரக்கலை உயரவில்லை என்றாலும், அஜந்தா மரபினைச் சித்தன்ன வாசலில் கண்டு மகிழ்கிறோம். பனைமலை திலைமலைபுரத்துச் சித்திரங்களில் பெரும் பகுதி அழிந்து போய்விட்டன. என்றாலும் எஞ்சி நிற்கும் ஒரு சில பகுதிகளே அவைகளின் சிறப்பைக் கூறப் போதுமானவை. இச்சித்திரக்கலை சோழர் காலத்தில் பழைய்படி சிறப்புப் பெற்றிருக்கிறது. தஞ்சை ராஜராஜன் கட்டிய பெரிய கருவறை யைச் சுற்றிய பிரகாரத்திலே தீட்டியுள்ள சித்திரங்கள் ஏதோ அதிர்ஷ்ட வசத்தால் நமக்குக் காட்சிப் பொருட்களாகக் கிடைத்தன. அச்சித்திரங்களின் சிறப்பை அறியாத யாரோ பின்னால் அவைகளின் பேரில் சுதை பூசித் தங்கள் கைத்திறனைக் காட்டியிருக்கின்றனர். அங்கு உருவாகியிருக்கும் திரிபுராந்தகர் சித்திரம் ஒன்றே பற்பல வடிவங்களை ஒருங்கே இணைத்துச் சித்திரம் தீட்டுவதில் மேல் நாட்டாருக்குத் தமிழர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று கட்டியம் கூறும். காஞ்சி கைலாசநாதர் கோயில் ஓவியங்கள் எல்லாம் சிதைந்து போய்விட்டன

ஆந்திர நாட்டில் சோம பள்ளி, தாடிப் பத்திரி, ஹம்பி முதலிய இடங்களிலும் சித்திரங்கள் எழுதப்பெற்றிருக்கின்றன, இவை எல்லாம் விஜயநகர காலத்துச் சிற்பங்கள். இப்படி ஓவியக் கலை நாளும் வளர்ந்து பாரத சமுதாயக் கலைகளில் சிறந்ததொரு இடம் பெற்றிருக்கின்றன.

சிற்பம், சித்திரம் முதலிய கலைகளைப் போலவே நடனமும் ஒரு அற்புதக் கலை. மேலை நாடுகளில் எல்லாம் அங்கங்களை அசைப்பதும், குதிப்பதும், கிறுகிறு என்று சுற்றுவதுமே நடனம் என்று எண்ணியிருக்கின்றனர். இந்திய நடனக் கலையோ ஹஸ்த முத்திரைகளிலும், தாளலயங்களிலும் உணர்ச்சிக்கு உருவம் கொடுப்பதிலும் முக்யத்வம் வாய்ந்ததாக இருக்கிறது. வடக்கே மணிபுரி, கதக், யக்ஷகானம் - என்றெல்லாம் உருப்பெற்றிருக்கிறது. தென்னாட்டிலோ குச்சிபுடி, கதகளி, பரத நாட்டியம் என்னும் வகையில் இந்நடனங்கள் சிறப்புற்றி ருக்கின்றன. எல்லா நடன வகைகளிலும் நடனம் ஊடுருவி நிற்கும் நவரசங்களையும் அபிநயம் மூலமாகவே நடனம் ஆடுபவர்கள் உருவாக்கிக் காட்ட வல்லவர்கள். இந்நடனக் கலைகளில் எல்லாம் சிறப்பான கலை பரத நாட்டியம்தான் என்று எல்லோரும் ஒருமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள். இது நமது தமிழ் மக்களின் தனி உடைமை, பரத நாட்டியம் பயில்வது என்பது சிரமமானதுதான் என்றாலும் நாளடைவில் பயிற்சியில் தேறத் தேற, ஆடுவதில் ஒரு மகிழ்ச்சியும் இன்பமுமே தோன்றும். கைவழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்லும் வகையில் கண்ணும் கைகளும் சேர்ந்து ஒரு உணர்ச்சியை உருவாக்கிக் காட்டும். நடனத்தில் லயித்து, அதில் ஈடுபாடு ஏற்பட்டுவிட்டால், உடல் முழுவதுமே இசை பாடுவது போன்ற உணர்ச்சி ஏற்படும். ஆடுபவர்களின் கற்பனை வளத்துக்கு எவ்வளவோ இடம் உண்டு. இக்கலையில் ஆடை அணிகள் அவ்வளவு முக்கியமில்லை என்றாலும், ஆடுவதற்கு வசதியாக இருப்பதற்காகவும், நடனத்துக்கு மேலும் அழகும் கவர்ச்சியும் ஊட்டுவதற்காகவும் பரத நாட்டியத்துக் கென்றே அமைந்த உடை வகைகளும் உள. இப்படி, பரதநாட்டியக் கலை சிறப்பான அம்சமாகவே நமது சமுதாயத்தில் வளர்ந்து வந்திருக்கிறது.

பாரத நாட்டுக் கலைகளின் சிறப்பைப் பற்றி எல்லாம் ஓரளவு தெரிந்து கொண்டோம். இவற்றின் முக்கியம் என்னவென்றால், பாஷையும் பழக்க வழக்கங்களும் வேறுபட்டிருந்தாலும், எல்லாக் கலைகளிலும் ஒருமைப்பாடு உயிரோட்டத்துடன் நிற்கப் பார்க்கிறோம். தமிழரும், மராத்தியரும், வங்காளியரும் பஞ்சாபியரும், அஸ்ஸாமியரும், ஆந்திரரும், தனித்தனியே கலை வளர்த்தார்கள் என்றாலும், எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பாரத சமுதாயத்தை, அவற்றின் சிறப்பியல்களுக்கு ஏற்ற வகையில் ஒரு ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றன. அதனால் பலரும் பலபடப் பேசினாலும்,

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு

என்று பாரதியாரோடு சேர்ந்து நம்மால் கட்டியம் கூற முடிகிறது.