இந்தியப் பெருங்கடல்/புதிய கண்டுபிடிப்புகள்

விக்கிமூலம் இலிருந்து

7. புதிய கண்டுபிடிப்புகள்

விரிவாக நடைபெற்ற இந்தியக்கடல் ஆராய்ச்சியினால் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அவை பின்வருமாறு.

பள்ளத்தாக்குகள்

பரந்த ஒரு பள்ளத்தாக்கு இந்தியக் கடலில் இருப்பதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது 6000 மைல் நீளமும் 25 மைல் அகலமும் உள்ளது. அந்தமான் கடலில் சுமத்ராவிற்கும் பர்மாவிற்கும் இடையில் இது காணப்படுகிறது. கடலில் சுமார் 3 மைல் ஆழத்தில் உள்ளது. இதனை உயரமான மலையுச்சிகள் சூழ்ந்துள்ளன. இவற்றில் மிக உயரமானது, பள்ளத்தாக்கிற்கு மேல் 12000 அடி எழும்பியுள்ளது.

கால்வாய்கள்

பல பெரிய கால்வாய்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சேற்று ஆறுகளால் அரண் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மிகப் பெரியது 4 மைல் அகலமும் 300 அடி ஆழமும் உள்ளது. இது வங்காள விரிகுடாவின் மேற்பரப்புக்குக் கீழ் 2 மைல் தொலைவில் காணப்படுகிறது. இது கங்கையைக் காட்டிலும் 25 மடங்கு அதிக நீரைச் சுமந்து செல்கிறது.

மலைத்தொடர்

கடலடி ஒலிப்புகளின் மூலம் இந்தியக் கடலின் முழுத்தரையும் படமாக்கப்பட்டுள்ளது. இதனால்,

அதில் குடைவுகள், பெரிய மலைத்தொடர்கள், தாழ்வாக அமைந்துள்ள சமவெளிகள் முதலியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர, அதன் விரிவான முதல் படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

காட்டாகச் சிலோனுக்குத் தென்கிழக்காகத் தரையிலிருந்து 14,400 அடி உயரத்திற்கு எரிமலைத் தொடர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிறித்துமஸ் தீவுகளுக்குத் தெற்கே 219 மைல் தொலைவில் எரிமலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று 2500 மீட்டர் ஆழத்திலும் மற்றென்று 3700 மீட்டர் ஆழத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வானிலை

வானிலை பற்றி நிரம்பச் செய்திகள் கிடைத்துள்ளன. தென்மேற்குப் பருவக்காற்று, வட கிழக்குப் பருவக்காற்று, கோடைப் பருவக்காற்று முதலியவை ஆராயப்பட்டுள்ளன. கோடைப் பருவக்காற்று மிக்க வலிமை வாய்ந்தது. இது வட அரைத்திரளைப் பகுதியின் வானிலையைப் பாதிக்கிறது. மேலும், கதிர்வீச்சு அளவீடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றின்படி, அரபிக் கடலிலும் செங்கடலிலும் நேரடிப் பகலவன் கதிர் வீச்சில் 15% முதல் 23% வரை நீராவியினாலும் வாயுவினாலும் உறிஞ்சப்படுகிறது என்பது வெளியாகியுள்ள உண்மையாகும். மேகக் கூட்டங்களிலிருந்து நிலாக்களின் வாயிலாகப் பெற்ற செய்திகளைக் கொண்டு, முழுக்கடலிலும் விழும் பகலவன் கதிர்வீச்சைக் காணும் முறையினை வானிலை அறிஞர்கள் வகுக்க இயலும்.

கதிரியக்க வீச்சின் அளவு

1966-இல் நடைபெற்ற சோவியத்து ஆராய்ச்சியின் கோக்கம், செயற்கை இயற்கைக் கதிரியக்க வீச்சுக்களை ஆராய்ந்து, அவை கடல் நீரிலுள்ள தாவரங்களையும், விலங்குகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிவதாகும். இவ்வாராய்ச்சியின்படி இந்தியக் கடலின் கதிரியக்க வீச்சின் அளவு அதிகம் என்பது அதிர்ச்சி தரக்கூடிய உண்மையாகும். இஃது அட்லாண்டிக் கடலில் உள்ளதைவிட 3 மடங்கு அதிகமாகும். பசிபிக் கடலில கடந்த அணு ஆயுத ஆய்வுகளின் விளைவாக விழுந்த கதிரியக்கத் தனிமங்களின் கழிவுகள், இந்த உயர்வுக்குக் காரணமாகும். அட்லாண்டிக் கடல், இந்தியக் கடல் ஆகியவை மீன்வளம் மிக்கவை. இவ்வளத்தை இக்கதிர்வீச்சு அதிகம் பாதிக்கும்.

குறைந்த அளவு ஆக்சிஜன்

அரபிக்கடல் நீரில் குறைந்த அளவு ஆக்சிஜன் இருப்பது ஜெர்மானிய ஆராய்ச்சியால் வெளியாகியுள்ள உண்மையாகும். இந்நிலை பம்பாயிலிருந்து 150 மைல் தொலைவுவரை உள்ளது. பொதுவாகக் குறைந்த அளவு ஆக்சிஜன் காணப்படும் பகுதிகள் இந்தியக் கடலில் உள்ளன. இதுபோன்று உலகின் வேறு எந்தக் கடலிலும் இல்லை.

வெப்பத் துளைகள்

செங்கடலில் 780 மீட்டர் ஆழத்தில் இரு வெப்பத் துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்துளைகளைச் சூழ்ந்துள்ள பகுதி, அதற்கடுத்துள்ள பகுதியைவிட 8 மடங்கு அளவு உப்பு மிகுந்ததாக உள்ளது. இவை செங்கடலின் மையத்தில் உள்ளன. இவற்றில் வழக்கத்திற்கு மாறன இரும்புப் படிவுகள் 6000 அடி ஆழத்தில் காணப்படுகின்றன. இங்கு வெப்பநிலை 55.9°C. எவரெஸ்ட் உச்சியில் வெப்பக்காற்றைக் காண்பது எவ்வளவு வியப்பாக இருக்குமோ, அவ்வளவு வியப்பாக இக்கண்டுபிடிப்பு உள்ளது. இந்த ஆழத்தில் வழக்கமாக உள்ள வெப்பநிலை 4-5°C ஆகும். அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இவ்வுண்மையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

எண்ணெய் வளம்

1974-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் பம்பாய்க் கடற்கரைக்கு அப்பாலுள்ள கடலின் அடியில் எண்ணெய் (பெட்ரோலியம்) எடுக்க்ப்பட்டது. இப்பகுதிக்குப் பாம்பே ஹை (Bombay High) என்று பெயர். 1976 மேத் திங்கள் 21-ஆம் நாளிலிருந்து எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் அளவு ஆண்டுக்காண்டு உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு, கேரளம், குஜராத், ஒரிசா முதலிய மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்பண்படா எண்ணெயிலிருந்து பெட்ரோல் முதலிய எரிபொருள்கள் கிடைக்கின்றன.

மீள் வனம்

இந்தியக்கடல் மீன்வளம் மிக்கது. காட்டாக, அரபிக் கடலில் ஒமன், மஸ்கட் ஆகிய கடற்கரை வழியாகச் சென்று ஒரு தடவை மீன் பிடித்ததில் 45 நிமிடத்தில் 3 டன் மீன்கள் -கிடைத்தன: உணவுப் பஞ்சத்தை நீக்க, இவ்வளத்தை நன்கு பயன்படுத்தி இந்தியா வழிவகை காணவேண்டும். தவிர, இந்தியக் கடலில் 80 புதியவகை விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கனி வளம்

1872-ஆம் ஆண்டிலேயே இந்தியக் கடலில் மாங்கனிஸ் முண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1962-64-இல் நடந்த இந்தியக்கடல் ஆராய்ச்சியும் இதனை உறுதிப்படுத்தியது. இவை சிறிய உருண்டைகளிலிருந்து பெரிய திரள்கள் வரை உள்ளன. இவை இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் தெற்கே 4000-5000 மீட்டர் ஆழத்தில் உள்ளன; கடலின் அடியில் ஆண்டுதோறும் 10 மில்லியன் டன்கள் உண்டாகின்றன. இவற்றில் மாங்கனிஸ், செம்பு, நிக்கல், மாலிப்டினம் முதலிய உலோகங்கள் உள்ளன.

மேற்குக் கடற்கரையில் ஊட்டச்சத்து மிகுந்த கரிமப்படிவுகளும், பாஸ்பேட் படிவுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை சிறந்த உரமாக அமைந்து, வேளாண்மைத் துறைக்கு அதிகம் பயன்படும்.

இந்தியக் கடல் தரை செங்களிமண்ணில் 220 டிரில்லியன் டன் அலுமினியமும், 650 டிரில்லியன் டன் இரும்பும், 73 டிரில்லியன் டிட்டானியமும், 15 டிரிலலியன் டின், வெனாடியம், கோபால்ட், நிக்கல், செம்பு, காரீயமும் வற்றாது பல ஆயிரம் ஆண்டுகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்திலுள்ள கோபால்ட் 40 ஆண்டுகளுக்கு மட்டுமே வரும். கடலுக்கடியில் உள்ளதோ 200 ஆயிரம் ஆண்டுகளுக்கு வரும்!

தவிரச் செங்கடலின் அடியில் கனிப்பொருள் செறிவுள்ள தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லா நிறங்களிலும் காணப்படுகின்றன. இவற்றில் பொன், வெள்ளி, துத்தநாகம், செம்பு இரும்பு, மாங்கனிஸ் முதலிய உலோகங்கள் அடங்கியுள்ளன. இப்படிவுகள் 7000 அடி ஆழத்தில் கிடைக்கின்றன.

செங்கடலிலுள்ள வடி நிலங்களில் (basin) பெரியவை 8 மைல் நீளமும், 4 மைல் அகலமும் உள்ளவை. இவற்றில் 50 அடி ஆழத்திற்கு நீர் உள்ளது. இந்நீரின் வெப்பநிலை 133°F. செங்கடல் நீரின் பொதுவான வெப்பநிலை 68°F. இங்குக் கடல் நீரின் உப்பளவு மற்றக் கடல்களைக் காட்டிலும் 10 மடங்கு அதிகம் உள்ளது.

செங்கடலில் உள்ள கனிபொருள் படுகைகளின் தடிமன் மட்டும் 300 அடி ஆகும், ஒரு பெரிய வடிநிலத்தில் மட்டும் 130 மில்லியன் டன் செம்பு, துத்தநாகம், வெள்ளி, தங்கம் முதலிய உலோகங்கள் உள்ளன. மேலும், அரபிக் கடலின் பாஸ்பேட் அளவு மற்றக் கடல்களைக் காட்டிலும 5 மடங்கு அதிகம் உள்ளது.

கண்டச் சரிவு

இந்தியக் கடலின் தரை பற்றிப் பல புதிய சிறப்பியல்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மிகச் செங்குத்தான கண்டச் சரிவு (continental slope) ஆகும். இஃது உலகிலேயே மிக ஆழமானது. சிலோன் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ளது.

அட்லஸ்

இந்தியக் கடல் ஆராய்ச்சியினால், இந்தியக் கடல் 2,80,00,000 சதுர மைல்கள் அறிவியல் திட்பத்துடன் ஆராயப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அக்கடலின் வேதி உயிரியல் பற்றி ஓர் அட்லஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடலிலிருந்து அதிக உணவுபெறப் பெரிதும் உதவும்.

இவ்வாறு, இந்தியக் கடலின் கொழிக்கும் பல் வளங்களையும் பயன்படுத்தி, இந்தியாவின் பொருள் வளத்தைப் பெருக்குவதே அறிவுடைமை ஆகும்.

.