இயல் தமிழ் இன்பம்/ஒரே உலகம்

விக்கிமூலம் இலிருந்து

[1]6. ஒரே உலகம்

ஒரே உலகம் என்றால் என்ன? இந்த ஒரே யுலகத்திற்கும் ஐக்கியநாட்டு அவைக்கும் தொடர்புகள் இருக்கின்றனவா? ஒரே யுலகம் என்பது நமக்குத் தேவைதானா? தேவையாயின் இவ்வொரேயுலகம் உருப்படுமா? ஆகிய இன்ன பிறவற்றை நாம் சிந்தித்து ஆராய்ந்து முடிவிற்கு வரவேண்டும்.

முதற்கண், ‘ஒரேயுலகம்’ என்பதனை எடுத்துக் காட்டுக்களின் வாயிலாக விளக்க வேண்டும்.

அன்றைய உலகம் மொழிவாரியாகப் பல நாடுகளாகப் பிரிந்து ஆளப்பட்டு வந்தது. வங்கநாடு வங்காள மொழி பேசுநர்க்கும், ஆந்திரநாடு தெலுங்குமொழி பேசுநர்க்கும், தமிழ்நாடு தமிழருக்கும் ஆக, இவை போன்று பல நாடுகள் தத்தம் மொழிவாரியாகப் பிரிந்து தனித்தனியாக ஆளப் பட்டு வந்தன. ஆனால் இன்று, ஏறக்குறைய எல்லா நாட்டினரும் ஒன்று சேர்ந்து உலகத்தை ஆள்கின்றனர். இங்ஙனம் எல்லாரும் ஒன்று சேர்ந்து அரசாள்வதை ‘ஒரே யுலகம்’ என்று கூறலாம்.

ஒவ்வொரு நாட்டினரும் தத்தம் நாடுகளை மட்டும் அரசாள்வது என்பது தன் நலம்! அண்டைய நாடுகளுக்கும் உதவியாய் இருந்தால்தான் உலகம் முன்னேற முடியும். ஒரு நாட்டில் குழப்பம் ஏற்பட்டால் அதனை மற்றெல்லா நாடுகளும் தீர்த்து வைக்கவேண்டும். எனவே இதன்படிப் பார்க்கையில் ஒவ்வொரு நாட்டினருக்கும் பற்று தங்கள் நாட்டின் மீது மட்டுமன்று! எல்லா நாடுகள் மீதும் உண்டு. ஒவ்வொரு நாட்டினரும் உலகப் பாதுகாப்பாளர்கள்! உலகம் உருப்பட எல்லா நாட்டினரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். எல்லோரும் பிரிவின்றிச் சேர்ந்து ஒரே உலகமாக இருக்கவேண்டும்.

ஏறக்குறைய 200-300 ஆண்டுகளுக்கு முன்னர்கூட பல நாட்டவரும் ஒன்று சேர்ந்து ஒரே யுலகமாக இருந்திருப்பர் என்று எண்ணுவதற்கிடமில்லை. இது பற்றி இன்றும் ஐயப்பாடுகள் இருந்து வருகின்றன. இம்மாதிரியான ஐயப்பாடுகளுக்கெல்லாம் தடையாகவிருப்பதுதான் ஒரே யுலகின் தலையாய கொள்கை. இன்றுள்ள பல குடியரசுகள் போல உலகத்துப் பல நாடுகளும் ஒரே ஆட்சிக் குட்பட்டிருப்பின் ‘ஒரே யுலகம்’ என்று கூறலாம்.

இந்த ஐக்கிய நாட்டவை தினவிழாவில் இன்று நாம் எண்ண வேண்டியது என்னவென்றால், இப்பொழுது 110 நாடுகள் ஐக்கியமாகியிருக்கின்றன. இதுவே ஒரே யுலகத்திற்கு முன்னோடி.

இந்த விழாவில் நண்பர்களால் நாடகம் நடக்க விருக்கின்றது. இதற்காக அவர்கள் எத்துணையோ ஒத்திகைகள் போட்டுப் பார்த்திருப்பர். இவ்வொத்திகைகள் போன்றே இவ்வொரு உலகத்திற்கும் ஐக்கிய நாட்டவை உள்ளது. மற்றும், ஆசிரியர்க்காகப் பயிற்சிகள் நம் பள்ளியில் தரப்படுகின்றன. இத்தகைய ஒத்திகைகள் - பயிற்சிகள் போன்றே ஒரே யுலகத்திற்கும் ஒத்திகையாக - இருப்பது ஐக்கிய நாட்டவை!

எனவே நடிகர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எங்ஙனம் ஒத்திகை, பயிற்சி தொடர்பு கொண்டுள்ளனவோ அதைப் போல ஒரே யுலகத்திற்கும் ஐக்கிய நாட்டவைக்கும் தொடர்புண்டு!

ஆகவேதான், இப்பொருள்பற்றிப் பேசுவது இவ்வகைக்குப் பொருந்துமெனத் தெரிந்து எடுத்துக் கொண்டேன்.

ஒரே உலகு தேவைதானா? இக் கருத்து எவ்வாறு பொருந்தும்?

காட்டாக, ஒருவன் நோயால் வாடுகிறான். ஒருவன் பட்டினியால் வருந்துகிறான். இன்னவர்களுக் கெல்லாம் மற்றவர் உதவிகள் மிகமிகத் தேவை. ஒற்றுமையிருந்தால் தான் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளமுடியும். அதைப் போல ஒரு நாடு மற்றொரு நாட்டின் உதவியின்றி வாழ்வதென்பது இயலாத காரியம். எந்தவொரு நாட்டின் சிறு உதவியாவது தேவை. ஒரு சுமையான கல்லை ஒருவரால் தூக்கவியலாது. பலர் முயன்றால் தான் முடியும். அதைப் போன்று எல்லா நாடுகளும் ஒன்றுபட்டு ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டால் தான் இவ்வுலகம் உருப்படும்.

இன்று பர்மா, இலங்கை போன்ற ஊர்களுக்கும் அனுமதிச் சீட்டின்றிப் போகமுடியாது. “ஏன் அனுமதிச் சீட்டின்றிப் போகக்கூடாது? நான் இந்த உலகத்தில் தானே பிறந்தவன்? இவ்வுலகம் எனக்குச் சொந்த மில்லையா? இவ்வுலகத்தின் ஊர்களுக்குச் செல்ல எனக்கேன் உத்தரவுச்சீட்டு? என்று அப்போது ஒருவன் கேட்டிருக்க இடமிருக்கிறது. இவை போன்ற வினாக்கள் எழும்பா வண்ணம் ஐக்கிய நாட்டவை பார்த்துக் கொள்கின்றது.

எத்தகைய தனிமனிதன் ஒருவனும் மற்றவர் உதவியின்றித் தனித்து வாழமுடியாது. மற்றவர் உதவிகள் தனிமனிதன் ஒவ்வொருவனுக்கும் வேண்டும்! தனிமனிதன் சமூகத்தோடு சேர்ந்து வாழாவிடின் அவனுக்கு உதவிகள் கிட்டமுடியாது. ஆகவே உலகமும் பலகூட்டு நாடுகளின் உதவியின்றி முன்னேற முடியாது.

ஒரே உலகக் கொள்கை நிலைக்குமா?

“ஒரே குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுக்குள்ளேயே பிணக்கு நடக்கின்றதே! அப்படியிருக்க, எல்லாரையும் ஒன்றுகூட்டி மேய்க்க முடியுமா?” என்னுங் கேள்விக்கு விடை கூறத்தான் வேண்டும்.

எல்லாரையும் ஒன்றுபடுத்திச் செயலாற்றுவதென்பது முதலில் கடினமாகத்தான் இருக்கும். பழக்கத்தில்தான் பயன் காணமுடியும். இதற்கு மக்கள் பண்பில் வளர்ச்சியிருக்க வேண்டும். எந்தவொரு கடினச் செயலையும் நாள்பட்ட நீடித்த உழைப்பால் செய்யமுடியும். மக்கட் பண்பு நல்ல முறையில் அதைச் செய்யவேண்டும்.

மனிதன் ஒரு தன்நலவாதி! ஏன் எல்லா வுயிரினங்களுமே சுரண்டும் பண்புடையவைகள்தாம்! கரப்பான்பூச்சி மற்றெரு பூச்சியை விழுங்குகின்றது. இதனை இன்னொன்று விழுங்குகின்றது. எல்லாம் தன்நலம்! தான் வாழ்ந்தால் போதும்! மற்றவர் வாழ்ந்தாலென்ன? வீழ்ந்தாலென்ன? என்ற நிலையே உள்ளது.

மனிதன் நான்கு காரணங்களால் ஓரளவு நல்ல மனிதனாய் நடமாட முடிகின்றது. 

1) அரசாங்க அச்சம்: ‘நாம் நியாயம் தவறி நடந்தால் அரசாங்கம் நம்மைத் தண்டிக்குமே’ என்றவொரு காரணத்தால் மனிதன் தீச்செயல் புரிவதற்கு அஞ்சுகின்றான், இவ்வச்சத்தின் பயனாகவும் நல்லவனாக நாட்டில் மதிக்கப்படுகிறான்.

2) சமூக அச்சம்: நாம் தவறு செய்தால் நாடு நம்மைத் தூற்றுமே! சமூகத்தினின்றும் நம்மை ஒதுக்கி விடுமே! அதன் உதவிகள் நமக்குக் கிட்டாவே’ - என்ற காரணத்தாலும் மனிதன் தவறு புரியாமல் இருக்கின்றான். இக்காரணத்தால் அஞ்சுகிறவர்கள் அரசாங்கத்திற்கு அஞ்சுபவரைக் காட்டினும் சிறிது எண்ணிக்கையில் குறைந்தவர்களே!

3) கடவுள் அச்சம்: ‘தீமைகள் புரிந்தால் நம்மை இறைவன் தண்டிப்பாரே’ என்ற காரணத்தால் தவறுகள் செய்வதற்கஞ்சுபவரும் நாட்டில் இருக்கிறார்கள்.

மேற்கூறிய இருவித அச்சங்களைக் காட்டினும் இவ்வச்ச முள்ளவர்கள் மிகக்குறைவு.

4) மனச்சான்று அச்சம்: இதுவரை கூறியதைவிட இக்காரணத்தால் அஞ்சுபவர் மிகமிகக் குறைவு. ‘தவறுகள் செய்தால் நம் மனச்சான்று நம்மை உறுத்திக் கொண்டிருக்குமே’ என்ற காரணத்தாலும் நல்லவர்களாக இருக்க முயலுகிறார்கள் சிலர்.

தவறு செய்யும்போதும் செய்த போதும் செய்யப் புகும் போதும் மனமானது “நீ தவறுகிறாய்! நான் உன்னை மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுப்பேன்!” என்று அச்சுறுத்துகிறது. இங்ஙனம் செய்வதால் மனத்திற்கு அஞ்சிச் சிலர் நல்லவர்களாக நடக்க முற்படுகிறார்கள். இவ்வாறு அடிக்கடி (தவறுகள் செய்யும் போதெல்லாம்) எண்ணிப் பார்ப்பதால், பழக்கத்தின் காரணமாக மனச் சான்றுக்கு மதிப்பு தந்து நல்லவன் என்னும் பெயர் பெறுகிறான் மனிதன். மனச்சான்றுக்கு அஞ்சுபவர் தவறுகள் செய்யார். காட்டாக ஒன்று கூற விழைகிறேன்! என் மகன் ஒருநாள் பள்ளிவிட்டு வீடு திரும்புகையில் வழியில் எட்டனா நாணயம் கண்டான். அதை எடுத்துக் கொள்ளாமல் என்னிடம் வந்து நாணயம் கண்டதைக் கூறினான். நான் ‘அதை ஏன் எடுக்கவில்லை’ என்றதற்கு, அப்பா! பிறருடையதை எடுக்கக் கூடாது! எடுத்தால் மிகவும் மனச் சான்றுக்கு மாறாக ஆகிவிடும் - என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே?” என்று என்னையே கேட்க ஆரம்பித்து விட்டான்.

இதிலிருந்து ‘மனச்சான்றுக்கு மாறாய் நடக்கக் கூடாது’ என்னும் கருத்து அவன் மனத்தில் பழக்கத்தின் காரணமாக ஆழமாகப்பதிகிறது; அதன்படிச் செயலாற்றவும் செய்கின்றது என்பது தெரிய வருகிறது. நீங்கள் உளநூல் கற்று வருகின்றீர்கள். உங்களுக்குத் தெரியும் எப்படிப்பட்ட மரபு நிலையையும் பழக்கம் மாற்றி விடுமென்று.

எப்போது உலகத்தில் போர் தொடங்கிற்றோ அப்போர் உலகில் இருவர் இருக்கும்வரை ஒழியாது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் மனிதனுக்கு இயற்கையாகவே போரூக்கம் இருக்கின்றது என்பதால். இடைவிடாத பழக்கம் இன்றியமையாதது. நாம் இளமையிலேயே பிள்ளைகளுக்கு ஐக்கிய நாட்டுத் தத்துவங்களை ஊட்டி ஊட்டி அவர்கள் மனத்தில் ஊறச் செய்ய வேண்டும். அவை அவர்கள் மனத்தில் பசு மரத்தாணிபோல் பதிந்துவிடும். எக்கொள்கையையும் நீண்ட காலம் பிள்ளைகள் மனத்தில் ஊறச் செய்தால் அவை மனத்தில் நன்றாக நாளடைவில் பதிந்துவிடும். ஒரே உலகத்திற்குத் தடைகளாக இருப்பவை

அன்று உலகம் விரிந்து இருந்தது. இன்று நெருங்கிச் சுருங்கியிருக்கின்றது. ஆனால் இச்சமயத்தில்தான் நாம் விலகியிருக்கிறோம். அதாவது, “இது எங்கள் நாடு - எங்களுக்கு உரிமை, நாங்கள் மற்றவர்களோடு சேர மாட்டோம்” என்றெல்லாம் கூறி விலகுகிறார்கள்.

கல்வி வளர வளர அறிவு வளர்ந்ததே யொழிய மனிதனுக்கு நல்ல பண்பாடு மட்டும் குறைந்து வருகின்றது. நகரத்தின் ஒரு வீட்டில் இரவில் சாவு என்றால் அது விடிந்து தான் தெரிந்து மற்ற வீட்டினர் பார்க்க வருவார்கள். ஆனால் கிராமத்தில் இந்நிலையில் ஒருபடி முன்னேற்றம் தான். இந்த அளவில் நெருங்கி உறவாடி ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் பண்பு வளர்ந்தால்தான் உலகம் ஒரே உலகமாக இருக்கும்.

முயன்றால் ஒரே உலகத்தை உருவாக்க முடியும்!

சீட்டோ-நாட்டோ-ஆசியா ஆகிய நாடுகளெல்லாம் கூட்டு முறையில் இயங்கி வருகின்றன. காமன்வெல்த் - என்பதும் உள்ளது. இவற்றை யெல்லாம் நாம் மைல் கற்களாக நினைவு செய்து ஒரே உலகத்தை உண்டாக்குவோம். நாடுகட்கிடையே ஏற்படும் பொறாமை, பிணக்குகள் போன்றவற்றைத் தீர்த்து வைப்பதற்கு ஐக்கிய நாட்டவை உதவுகிறது.

இதற்கு முன்னே ‘உலக ஒற்றுமைக் கழகம்’ என்ற ஒன்று ஏற்பட்டுத் தோல்வி கண்டுவிட்டது. பொருளாதாரத் துறையிலே சமூகத்துறையிலே ஐக்கிய நாட்டவை உதவுகிறது. இரண்டாம் உலகப் போர் இட்லரால் தொடங்கு முன்னரே இவ்வொற்றுமைக் கழகம் தோன்றி மறைந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால்தான் இவ்வைக்கிய நாட்டவை தோன்றியிருக்கிறது. இதனால் சிலருக்கு இது உருப்படுமோ என்னும் ஐயம் ஏற்பட்டிருக்கிறது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறநானூறு)

2000 ஆண்டுகட்கு முன்னேயே இக்கருத்து மக்கள் நெஞ்சத்தில் எழுந்திருக்கின்றது. மனிதன் முதன் முதலில் காட்டிலே வேட்டையாடித் திரிந்த அன்றே இக்கருத்து எழுந்தது என்று துணிந்து கூறலாம்.

சாதி மதம், கட்சிகள் இவை ஒழியவேண்டும். ஒழிந்தால் தான் உலகம் ஒரேயுலகமாக இருக்க முடியும். இதற்குத் துணிவுவேண்டும். ஒரே பொது மொழியினால் உலகம் முழுதும் ஆளப்பட வேண்டும்.

பொதுமொழி ஆங்கிலமாக இருக்க வேண்டும். (உலகப் பொதுமொழி) இன்று ஊருக்குப் போவதற்கு ஊர்திகளில் செல்கிறோம். ‘ஏன் நடந்துபோனால் என்ன? நடந்து போனால் பல இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கலாமே! கிராமங்களைப் பார்த்துச் செல்லலாமே? இதனால் ஊருக்குப் போவதாயும் இருக்கும் - அத்துடன் பல கிராமங்களைப் பார்த்ததாகவும் இருக்குமே’ என்று யாரேனும் கேட்பாரேயாகில் முடிந்தால் நடந்து செல்லட்டும் அவர்கள்!

‘ஒரே உலகம்’ என்னும் கொள்கை உருப்படுமா?

உலக நாடுகள் எல்லாம் மொழிவாரியாகப் பிரிந்து ஒற்றுமையாக இருக்கலாம். இவ்வாறு செய்யின் ஒரேயுலகம் உருப்படும். வள்ளுவரும்,

‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’
‘உலகந் தழீஇயது ஒட்பம்’ என்று கூறியிருக்கிறார். பாரதியும், ‘தனியொருவனுக்கு உணவிலையெனில் சகத்தினையே அழித்து விடுவோம்’ என்று கூறுகிறார். இவ்வாக்கியங்களெல்லாம் ஒரேயுலகக் கொள்கையை வலியுறுத்துகின்றன.

அரசியல் தலைவன் ஒருவன் பிச்சைக்காரனைக் கண்டு நையாண்டி செய்யக்கூடாது! அவனைக் கண்டு ஒவ்வோர் அரசியல் தலைவனும் வெட்கப்படல் வேண்டும். மக்கள் பண்பாட்டைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சமூகப் பயிற்சி - குடிமைப் பயிற்சி என்றெல்லாம் கூறிப் பயனில்லை.

எனவே, ஐக்கிய நாட்டுக் கோட்பாடுகளையும் நல்ல பண்புகளையும் நாம் இள உள்ளங்கட்குக் கற்பித்து அவர்களை அதன்படிச் செயல்படச் செய்தால் ‘ஒரே உலகம்’ என்னும் கொள்கை உண்மையாகும்; உருப்படும்.

“தொல்லுலக மக்க ளெல்லாம்
ஒன்றே என்னும்
தாயுள்ளம் தன்னி லன்றோ இன்பம்”

- பாரதிதாசன்



  1. (புதுவை ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஐ.நா. நாளன்று ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் இது)