இராணி மங்கம்மாள்/பக்கத்து வீட்டுப் பகைமை

விக்கிமூலம் இலிருந்து

5. பக்கத்து வீட்டுப் பகைமை

ட்டுமஸ்தான உடலமைப்பும் அந்த வலிமையை மிகைப்படுத்தி எடுத்துக் காட்டும் கரியநிறமும் கொண்ட மறவர் சீமை வீரன் ஒருவன் கையில் ஓலையோடு நுழைவாயிலருகே தென்பட்டான்.

மின்னலைப்போல் சரேலென்று உள்ளே நுழைந்த அவன், "மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதியின் தூதன் நான். இது அவர் அனுப்பிய ஓலை" என்று இராயசம் அச்சையாவிடம் நீட்டிவிட்டு மூன்று பேருமே எதிர்பாராத வகையில் பதிலை எதிர்பாராமலே விருட்டென்று திரும்பிச் செல்லத் தொடங்கினான். சம்பிராதாயத்துக்குப் புறம்பாகவும், பண்பாடின்றியும் இருந்தது அவனது அச்செயல்.

உடனே அதைக் கண்டு ஆத்திரமடைந்த ரங்ககிருஷ்ணன் பின்தொடர்ந்து அவனைப் பாய்ந்து கைப்பற்ற முயன்றபோது சைகையால் இராயசம் அவனைத் தடுத்து விட்டார். ஆத்திரத்தோடு ரங்ககிருஷ்ணன் கேட்டான்:

"வழக்கமில்லாத புதுமையாக நமக்கு அடங்கிய சிற்றரசன் 'மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதி' என்றான். அனுப்பிய ஓலையைப் படிப்பதற்கு முன்பே திரும்பிப்போகிறான். இதெல்லாம் என்ன? இதைவிட அதிகமாக நம்மை வேறெப்படி அவமானப்படுத்த முடியும்? இந்த முறைகேட்டையும், அவமானத்தையும் நாம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?"

"பொறுத்துக் கொள்ள வேண்டாம்தான் எய்தவனிருக்க அம்பை நொந்து பயனென்ன ரங்ககிருஷ்ணா? சேதுபதியிடம் தொடுக்க வேண்டிய போரை அவனுடைய தூதனிடமே தொடுக்கவேண்டாம் என்று தான் உன்னைத் தடுத்தேன்" என்று ரங்ககிருஷ்ணனுக்கு மறுமொழி கூறிவிட்டு இரகுநாத சேதுபதியின் ஓலையைப் படிக்கத் தொடங்கினார் அச்சையா. முதலில் மெல்லத் தமக்குள் படிக்கத் தொடங்கியவர், பின்பு, இரைந்தே வாய் விட்டுப் படிக்கத் தொடங்கினார்:

"இன்று இவ்வோலை எழுதும்போது தொடங்கி மறவர் நாடு இனி யார் தலைமைக்கும் கீழ்ப்பணிந்து சிற்றரசாக இராது என்பதை இதன்மூலம் மறவர் நாட்டு மாமன்னர் ரகுநாத சேதுபதி சம்பந்தப் பட்ட சகலருக்கும் பிரகடனம் செய்து கொள்கிறார்."

"குமாரப்ப பிள்ளையையும் அவர் குடும்பத்தையும் கொன்றது போதாதென்று சுயாதீனப் பிரகடனம் வேறா?"

ராணி மங்கம்மாள் இவ்வாறு வினவியவுடன் "எவ்வளவு திமிர் இருந்தால் அதை நமக்கே ஓலையனுப்பித் தெரிவித்து விட்டு நம்முடைய மறுமொழியை எதிர்பாராமலே தூதுவனைத் திரும்பியும் வரச்சொல்லிப் பணித்திருக்க வேண்டும்? குமாரப்ப பிள்ளையை அவர்கள் கொன்றது நியாயமென்றால் இப்போது இங்குவந்து சென்ற இந்தத் தூதுவனை நாம் மட்டும் ஏன் தப்பிப் போகவிடவேண்டும்?" என்று கொதிப்போடு கேட்டான் ரங்ககிருஷ்ணன், கிழவன் சேதுபதி என்னும் பட்டப் பெயரை உடைய ரகுநாத சேதுபதியிடமிருந்து வந்திருந்த ஓலையைப் படித்துச் சொல்லிவிட்டு மேலே எதுவும் கூறாமல் இருந்த அச்சையா இப்போது வாய் திறந்தார்:

"ஒரு தவற்றை இன்னொரு தவற்றால் நியாயப்படுத்தி விடமுடியாது ரங்ககிருஷ்ணா!"

"பல தவறுகள் நடந்து விட்ட பின்பும் இப்படிப் பொறுமையாக இருந்தால் எப்படி?"

"எதிரிகளை அழிப்பதில் பல ராஜதந்திர முறைகள் உண்டு அப்பா அதில் ஒன்று அவர்களை அதிகத் தவறுகள் செய்ய அநுமதிப்பது. கோழை பின்வாங்கித் தயங்குவதற்கும், வீரன் பின்வாங்கி நிதானிப்பதற்கும், நிறைய வித்தியாசங்கள் உண்டு. கோழை பயத்தினால் பின்வாங்குவான். வீரன் எதிரியை முன்னைவிட அதிக வேகமாகப் பாய்ந்து தாக்குவதற்குப் பின்வாங்குவான். நமது நிதானம் இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருக்கட்டும்."

"டில்லி பாதுஷாவின் ஆட்கள் பழைய செருப்புடன் ஊர்வலம் வந்தபோது அம்மாசொல்லிய அதே அறிவுரையைத்தான் இப்போது நீங்களும் கூறுகிறீர்கள் ஐயா!"

"சொல்லுகிற மனிதர்கள் வேறுபட்டாலும் அறிவும், அறிவுரையும் வேறுபடுவதில்லை மறவர் நாட்டின்மேல் படையெடுத்தாக வேண்டுமென்ற நமது முந்திய முடிவுக்கும் இந்த அறிவுரைக்கும் தொடர்பு இல்லை. உனது முன்கோபத்தையும், ஆத்திரத்தையும் தணித்துச் செயலில் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்குத்தான் இந்த அறிவுரை."

"ஆமாம் ரங்ககிருஷ்ணா இராயசம் சொல்வதெல்லாம் உன் நன்மைக்குத்தான் அப்பா! எதிரியை விட்டு விட்டு அவனுடைய தூதனை அழிப்பதால் என்ன பயன் விளையப் போகிறது? கிழவன் சேதுபதியை இப்படியே விட்டுவிட்டால் அவர் மற்றவர்களைக் கூட்டுச்சேர்த்துக் கொண்டு படையெடுத்து நமது மதுரைச்சீமையைக் கைப்பற்ற முயலுவார்" என்றாள் மங்கம்மாள்.

"இன்றே நமது படைகளோடு மறவர் சீமைக்குப் புறப்படுகிறேன் அம்மா"

"உனது வீரத்தில் நிதானமும் நிதானத்தில் வீரமும் கலந்திருக்கட்டும் அப்பா கிழவன் சேதுபதி மிகவும் சிக்கலான எதிரி. தெளிவான எதிரியில்லை. சிக்கலான எதிரிகளிடம் எப்போதுமே அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.'

"உங்கள் அறிவுரை எனக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும் அம்மா!"

திரிசிரபுரம் கோட்டையின் முகப்பில் படைகள் திரண்டன. போர்முரசு முழங்கியது. குதிரைகளும், யானைகளும் தரையைத் துவைத்துக் கிளரச் செய்த புழுதிப்படலம் விண்ணை மறைத்தது. தாயும், இராயசம் அச்சையாவும் வாழ்த்த, சின்ன முத்தம்மாள் நெற்றியில் வீரத் திலகமிட்டு வழியனுப்ப ரங்ககிருஷ்ண முத்து வீரப்பன் படையோடு புறப்பட்டான். ரங்ககிருஷ்ணனுக்கும் படைவீரர்களுக்கும் திரிசிரபுரத்து மக்கள் மலர் மாரி பொழிந்து விடை கொடுத்தனர். பழைய செருப்போடு வந்த டில்லி பாதுஷாவின் ஆட்களை எதிர்க்கும் அவசியத்துக்காக அங்கங்கே சேர்த்து வைத்திருந்த படை வீரர்களையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு ரங்ககிருஷ்ணன் மறவர் சீமை மேல் படையெடுத்திருந்தான்.

தனக்கு மாலை சூட்டி வீரத்திலகமிட்டு வழியனுப்பும் போது சின்ன முத்தம்மாளின் கண்களில் நீர் திரண்டு பிரிவுத்துயரம் பொங்கியதை அத்தனை அவசரத்திலும் அத்தனை பரபரப்பிலும் அவன் கவனிக்கத் தவறியிருக்கவில்லை. உலகின் மிகப் பல பாமர மக்களில் கணவனும் மனைவியுமாக மாலை மாற்றிக் கொள்கிறவர்களுக்கு இருக்கும் உரிமையும் இன்பமும் சுகமும் நிம்மதியும் கூட அரச குடும்பத்தினரான மற்றவர்களுக்கு இல்லையே! என்று எண்ணிச் சின்ன முத்தம்மாள் ஏங்கியிருக்கக் கூடும். திருமணமான உடனேயே போருக்காகப் படையோடு புறப்பட்டுவிட்ட கணவனை வீரமங்கையாகத் திலகமிட்டு வழியனுப்பினாலும், பிரிவு பிரிவுதானே ? படைகளை நடத்திச் செல்லும்போது இதை எல்லாம் எண்ணிப் பார்த்தான் ரங்ககிருஷ்ணன்.

முதல்நாள் பகல் பொழுது முடிந்து அந்தி சாய்ந்ததும் காடாரம்பமான ஓரிடத்தில் இரண்டு மூன்று பெரிய ஆலமரங்கள் இருந்த பகுதியில் படைகள் பாசறை அமைத்துத் தங்க நேர்ந்தது. இன்னும் மறவர் சீமை எல்லைக்குப் போய்ச்சேரவில்லை என்றாலும், வீரர்களிடம் போர் உணர்ச்சி இப்போதே வந்திருந்தது. மறவர் சீமையை அடைந்த உடனேயே போர் நிகழலாம் என்ற பிரக்ஞையும் எல்லாருக்கும் வந்திருந்தது. ரங்ககிருஷ்ணனைப் பொறுத்தவரை இதுதான் அவனது முதற் படையெடுப்பு என்று சொல்லவேண்டும். அவசர அவசரமாக நிகழ்ந்த திருமணம். அவசர அவசரமாக நிகழ்ந்த முடிசூட்டு விழாஇப்போது அவசர அவசரமாக வாய்த்துவிட்ட இந்தப் படையெடுப்பு எல்லாமே நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் நேர்ந்திருந்தன.

நள்ளிரவாகியும் பாசறைக் கூடாரத்தில் உறக்கமின்றித் தவித்தான் ரங்க கிருஷ்ணன். பல்வேறு வகைப் படைவீரர்கள் தங்கியிருந்த பகுதிகளில் கூத்துகளும், களியாட்டங்களும் நடை நடைபெற்றுக் கொண்டிருந்தன. சில வீரர்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொழுதுபோக்கான விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் ஒரு வீரனுக்கு ரதிவேடம் போட்டுக் காமன் பண்டிகைக் கூத்தாக இருபிரிவாய்ப்பிரிந்து எரிந்த கட்சிக்கும், எரியாத கட்சிக்கும் பாடிக் கொண்டிருந்தார்கள்.

தனது படைவீரர்கள் இந்தப் போரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என்று காணவும் விரும்பினான் ரங்ககிருஷ்ணன். மாறுவேடத்தில் நகர பரிசோதனை செய்யச் செல்லும் மன்னர்கள் போல முற்றிலும் தன் தோற்றத்தை மாற்றிக் கொள்ளாவிட்டாலும், தன்னை யாரும் அடையாளம் காண முடியாத விதத்தில் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு புறப்பட்டான் அவன். உடன் துணை வர முயன்ற மெய்க் காப்பாளனைக் கூடத் தடுத்துவிட்டான். இது முதற் படையெடுப்பு என்பதால் மட்டும் அவன் மனத்தில் ஆவலும் பரபரப்பும் நிரம்பியிருக்கவில்லை. படையெடுப்பவராகிய கிழவன் சேதுபதியைப் பொறுத்தே பல மடங்கு அதிகரித்திருந்தன.

'கிழவன்' என்ற தமிழ்ச்சொல்லுக்கு 'உரியவன்' என்று பொருள். இரகுநாத சேதுபதி மறவர் நாட்டுக்கு உரியவர் மட்டுமில்லை. மறவர்கள் அனைவரின் நம்பிக்கைக்கும் உரியவர். பயபக்திக்கு உரியவர். அத்தகையவரோடு தான் போர் புரிவதற்கும் முரண்படுவதற்கும் அரசியல் காரணங்களிருந்தன என்றாலும் தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும், மதிப்புக்கும் உரிய ஒருவரை வெறும் அரசியல் காரணங்களுக்காக வெல்வது சிரமமான காரியமாயிருக்கும். மறவர் சீமையின் முரட்டுச் சிங்கத்தோடு விரோதத்தைத் தவிர்த்திருப்பது தான் ராஜ தந்திரமாயிருந்திருக்கும். சில விரோதங்களைத் தவிர்ப்பது தான் விவேகம். வேறு சில விரோதங்களை எதிர்கொண்டு ஏற்றாக வேண்டும். இதில் கிழவன் சேதுபதியோடு ஏற்பட்டு விட்ட விரோதம் முந்தினவகையினது.அது தவிர்த்திருக்கப்படவேண்டியது. ஆனால் தவிர்க்க முடியாதபடி சேதுபதியே அதை வலிந்து ஏற்படுத்திக் கொண்டுவிட்டபின் தன் தரப்பிலிருந்து பணிந்து போவது என்பது பிறர் எள்ளி நகையாடக் காரணமாகிவிடலாம். குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்றது போதாதென்று மறவர் சீமையைச் சுயாதீனமுள்ள நாடாகப் பிரகடனம் செய்ததும் சேர்ந்து தவிர்த்திருக்க வேண்டிய இந்தப் படையெடுப்பை அவசியமும் அவசரமும் உள்ளதாக்கிவிட்டன. அநாவசியமான விரோதத்தை தேடுவது எப்படி ராஜ தந்திரமில்லையோ, அப்படியே அவசியமாக வந்து வாயிற் கதவைத் தட்டி அழைக்கும் விரோதத்தைத் தவிர்ப்பதும் ராஜதந்திரமில்லை. சேதுபதியைக் கண்டு ராணி மங்கம்மாளும் அவள் மகனும் பயப்படுகிறார்கள் என்று பிறர் பேசவும் இடம் கொடுத்து விடக்கூடாது.

கிழவன் சேதுபதியைப் பொறுத்தவரை இந்த விரோதத்தை உடனடியாகத் தேடுவதில் பயன் இருந்தது. இந்த விரோதத்தால் அவருக்கு ராஜ தந்திரப் பயன்களும் ஊதியமும் இருந்தன. ஆகவே அவர் இதைத் தேடியதில் அவரளவுக்குக் காரணம் சரியாயிருந்தது. அவரளவுக்கு அரசியல் நோக்கமும் சரியாக இருந்தது.

தன் கூடாரத்தை விட்டு வெளியேறி வீரர்களின் மனநிலையைக் கண்டறிய இருளில் புறப்பட்டபோது ரங்க கிருஷ்ணனின் மனத்தில் இவ்வளவு சிந்தனைகளும் இழையோடின. அடுத்திருந்து கெடுதல் செய்பவனின் விரோதத்தை விலை கொடுத்தாவது பெற்றாக வேண்டும் என்றாலும் கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருக்கும் என்பது இந்த வினாடிவரை புரியாமல் இருந்தது. சிந்தனை வயப்பட்டவனாக ஆல மரத்தடியில் சில வீரர்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்த பகுதிக்கு வந்திருந்தான் அவன். அவர்களுடைய பேச்சும் கிழவன் சேதுபதியைப் பற்றியதாயிருக்கவே ஆலம் விழுது ஒன்றின் மறைவில் ஒதுங்கி நின்று அதை ஒட்டுக்கேட்கலானான்.

"நமக்குச் சோறு போட்டு வளர்ப்பது நாயக்கவம்சம். நாம் எதிர்த்துக் கொள்ள முடியாத சுயஜாதி மனிதர்களில் மிகவும் பெரியவர் இரகுநாதசேதுபதி. இந்த யுத்தம் தர்ம சங்கடமானது.சோறு போடுகிறவர்களுக்கு விசுவாசமாக இருப்பதா? இனத்துக்கு விசுவாசமாக இருப்பதா? நமது மதிப்பிற்குரிய சேதுபதிக்கு எதிராக நாமே ஆயுதம் ஏந்தும் நிலையை இந்தப் போர் உண்டாக்கிவிட்டது அண்ணே"

"சேதுபதிகள் இராமபிரானுக்கே தோழனாக இருந்த குகனின் வம்சம். தெய்வாம்சம் பொருந்தியவர்கள். நம்மைப்போல் மற்ற மறவர்கள் கைகூப்பித் தொழ வேண்டிய நிலையிலிருப்பவர் இரகுநாத சேதுபதி. அவருக்கு எதிராக நின்று போர் புரிவதில் மனப்பூர்வமான ஈடுபாடு நம்மைப் போன்ற ஜாதிமறவர்களுக்கு இருக்க முடியாது. கூடாது. வேண்டுமானால் உண்ட உணவுக்குச் செஞ்சோற்றுக் கடன் கழிக்கலாம்."

"ஆமாம்! நீ சொல்வதுதான் சரி அண்ணே! அரசர்கள் இன்றைக்குச் சண்டை போட்டுக் கொள்வார்கள். நாளைக்கு ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதற்காக நாம் ஏன் நடுவில் ஜாதி அபிமானத்தைக் கெடுத்துக் கொண்டு குலத்தை வேரறுக்கும் கோடரிக் காம்புகளாகத் தலை எடுக்க வேண்டும்?"

"சேதுபதியை எதிரே பார்த்தாலே எனக்குக் கை நடுக்கம் வந்துவிடும் அண்ணே! வாளைக் கீழே போட்டுவிட்டு நெடுஞ்சாண் கிடையாக வணங்கத் தோன்றுகிற மனிதருக்கு எதிராக எப்படி அண்ணே நான் துணிந்து வாளை ஓங்க முடியும்?"

"அது தான் முதலிலேயே சொன்னேனே? நமக்கு இது ஒரு தர்மசங்கடமான போர் அண்ணே!"

"இன்றைக்குச் சேதுபதிக்கு எதிராக வாளை உயர்த்தி விட்டு நாளைக்குப் போர் முடிந்ததும் மானாமதுரைக்கோ மங்கலத்துக்கோ போய் நின்றால் சுயஜாதிக்காரன் நம்மை முகத்திலே காறித் துப்புவான்."

"துப்புறதாவது?...நம்மைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை."

"இன்றைக்குச் சண்டை வரும். போகும். ஜாதிக் கட்டுப்பாடு நமக்கு என்றைக்கும் வேணும் பாட்டையா எங்கள் ஊர் எல்லையிலே சேதுபதி வாராருன்னா ஊருக்குள்ளாற ஒருத்தன் மார் மேலே துணியோ, கால்லே செருப்போ போட்டுகிட்டு நடமாடமாட்டான் அண்ணே அத்தனை மருவாதி(மரியாதை) அவருக்கு உண்டு."

இருளில் அங்கு உரையாடிக் கொண்டிருந்த படைவீரர்களனைவரும் மறவர் இனத்தினர் என்பதை ரங்ககிருஷ்ணனால் மிக எளிதாகவே அநுமானம் செய்துகொள்ள முடிந்தது. தன்னை அவர்கள் பார்த்து விடாதபடி மெல்ல அங்கிருந்து விலகிச் சென்றான் ரங்க கிருஷ்ணன். டில்லி பாதுஷாவை எதிர்க்க ஆவேசத்தோடு ஒன்று திரண்ட படை, சேதுபதி விஷயத்தில் அப்படி ஒன்றாக இல்லை என்று புரிந்தது.

துணிவும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்த ரங்க கிருஷ்ணனின் உறுதியான உள்ளத்திலும் மெல்ல எழுந்தது ஒரு சிறு தயக்கம். இந்தப் போரிலுள்ள பகை பக்கத்து வீட்டுப்பகை என்பதால் ஏற்படும் படை வீரர்களின் விசுவாசத் தயக்கங்களையும், இடம் மாறிய முறை மாறிய விசுவாசங்களையும் எல்லை மாறக்கூடிய சந்தேகத்துக்கிடமான நம்பிக்கைகளையும் பற்றிய கலக்கம் அவன் மனத்தில் இப்போது இந்நள்ளிரவில் புதிதாக ஏற்பட்டது. வெளியே சூழ்ந்திருந்த இருள் தன் மனத்துக்குள்ளும் கொஞ்சம் புக முயல்வதைப்போல உணர்ந்தான் ரங்க கிருஷ்ணன். கடவுள் மனிதர்களைப் படைத்தபோது உலகைப் பற்றி வைத்திருந்த சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் மனிதர்கள் ஜாதிகளையும் சமயங்களையும் உண்டாக்கிக் கெடுத்துக் கொண்டுவிட்டார்களே என்று அந்தக் கணத்தில் அவனுக்குத் தோன்றியது.

அபிமானம், அன்பு, விசுவாசம், நன்றிக் கடமை ஆகிய ஜாதி சமயம் கடந்த உயரிய மனிதகுணங்களைக் கூட ஜாதி சமயங்கள் பாதிக்க முடியும் என்பது இப்போது அவனுக்குப் புரிந்தது. அவன் சிந்தனை வயப்பட்டான். அன்றிரவு பாசறையில் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.