இராணி மங்கம்மாள்/வஞ்சப் புகழ்ச்சி வலை

விக்கிமூலம் இலிருந்து

7. வஞ்சப் புகழ்ச்சி வலை

குநாத சேதுபதி தாம் மிகவும் சிக்கலான எதிரிதான் என்பதை நிரூபித்திருந்தார். மானாமதுரையிலேயே படைகளைத் தங்க வைத்துக்கொண்டு ரங்க கிருஷ்ணன் இராமநாதபுரத்துக்குத் தூது அனுப்பியும் பயனில்லை. போய் வந்த தூதுவன் இராமநாதபுரத்தில் பொறுப்புள்ள யாரையும் சந்திக்கவும் முடியாமல் மேல் விவரம் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாமல் திரும்பியிருக்கிறான். அவன் போனதாலும் பயனில்லை. திரும்பி வந்தும் பயனில்லை.

ஒரு படையெடுப்பைப் பொருட்படுத்தி எதிர்ப்பதற்கு முன் வராத எதிரியின் நாட்டையோ, ஊர்களையோ, பொது மக்களையோ வலிந்து தாக்கினால் வீணாகத் தன் பெயரும் தாயின் பெயரும்தான் கெடும் என்பது ரங்ககிருஷ்ணனுக்குப் புரிந்தது. மறவர் சீமையையே தாய் நிலமாகக் கொண்ட தன் படை வீரர்களிலே எவ்வளவு பேர் அந்தத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பார்கள் என்பதையும் அவனால் சரியாகக் கணிக்க முடியாமல் இருந்தது. மதில்மேல் பூனை நிலையிலிருந்தான் அவன்.

தங்கியிருந்த மானாமதுரையிலிருந்து அப்படியே படைகளைத் திருப்பிக் கொண்டு திரிசிரபுரம் போகவும் அவனால் முடியாது. பொழுது விடிகிற வரை ஒரே மனக்குழப்பமாயிருந்தது அவனுக்கு. விடிந்ததும் ஒரு முடிவு கிடைத்தது. எப்படியும் இராமநாதபுரம் சென்று சேதுபதியை நேருக்கு நேர் சந்திக்காமல் எதையும் முடிவு செய்வதற்கில்லை என்ற எண்ணத்துடன் படைகளோடு இராமநாதபுரம் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான் அவன். தாய்க்கும் ஒரு தூதுவன் மூலம் நிலைமையைச் சொல்லி அனுப்பினான்.

கோடையின் பகல் நேரம். பயணத்தில் வெப்பம் அதிகமாயிருந்தது. இந்தப் படைகள் மறவர் சீமைக்குள் நுழைந்து தலைநகரை நோக்கி விரைந்தது, அந்தச் சீமையின் சிற்றூர்களையும், பேரூர்களையும், மக்களையும் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்று தெரிந்தது. அந்த அலட்சியமும் தற்செருக்கும் ரங்க கிருஷ்ணனின் மனத்தில் அந்தரங்கமாக உறுத்தின. கண்மூடித்தனமாகத் தன்னை ஏற்று வழிபடும் மக்களை நம்பித்தான் சேதுபதி இத்தனை இறுமாப்போடு இருக்கிறார் என்பது புரிந்தது. பொதுமக்களோ படை வீரர்களின் கட்டுப்பாட்டோடும், உறுதியோடும், ஒழுக்கத்தோடும் இருக்கிற தேசத்தில், அந்நியர்கள் புகுந்து தொல்லைப்படுத்தவே முடியாதுதான். மறவர் சீமையின் தலைநகரான இராமநாதபுரத்தை நெருங்க நெருங்க இந்தக் கட்டுப்பாடு வெளிப்படையாகவே புரிந்தது. சேதுபதியின் வலிமையே இந்தக் கட்டுப்பாடுதான் என்று விளங்கியது.

அப்போது தானும் தன் படைவீரர்களும் மறவர் சீமைமேல் படையெடுத்து வந்திருப்பதும், தனக்கும் தன் தாய்க்கும் குமாரப் பிள்ளையைக் கொன்ற விஷயமாகவும், மறவர் நாட்டைச் சுயாதீனப் பிரகடனம் செய்ததன் மூலமாகவும் ஏற்பட்டிருக்கும் மனத் தாங்கல்கள், இவை எல்லாம் சேதுபதிக்குப் புரியாமல் இருக்கும் என்று ரங்ககிருஷ்ணன் நினைக்கவில்லை. திரிசிரபுரத்துக்குச் சுயாதீனப் பிரகடனம் செய்து மறவர் சீமையிலிருந்து தூதன் அனுப்பப்பட்ட விதம், இப்போது இந்தப் படையெடுப்பை எதிர்கொள்ளும் பாணி எல்லாவற்றிலுமே சேதுபதியின் அலட்சியப்போக்கு தெரிவதை ரங்ககிருஷ்ணனால் உய்த்துணர முடிந்தது.

'தன் தாய் கையாலாகாதவள். தான் சிறுபிள்ளை' என்ற எண்ணத்தில்தான் சேதுபதி இவ்வளவும் செய்கிறார் என்று அவனுக்குப் பட்டது.

தனது படைத் தலைவர்களில் ஒருவனாகிய முத்து ராமலிங்க பூபதியைக் கூப்பிட்டு ரங்ககிருஷ்ணன் மறுபடியும் பேசிப் பார்த்தான்.

"சேதுபதியின் படைகள் நம்மை எதிர்க்க வரவில்லை. மறவர் சீமைக்குள் வெகுதூரம் ஊடுருவி நாம் முன்னேறி விட்டோம். நாம் கடந்து வந்துவிட்ட பகுதிகளை நாமே வென்று கைப்பற்றி விட்டதாகக் கருதலாமா?"

"தர்ம சங்கடமான நிலை அரசே! இப்போது நாம் வென்றதாகவும் சொல்ல முடியாது. தோற்றதாகவும் சொல்லிவிட முடியாது சிங்கம் அயர்ந்து உறங்கும்போது அதன் குகைக்குள் தெரிந்தோ, தெரியாமலோ நுழைந்துவிட்ட புள்ளிமான் அதைத் தன் வெற்றியாகச் சொல்லிக் கொண்டுவிட முடியுமா? நம் நிலையும் அதுதான்..."

சேதுபதி சிங்கம். நாம் மான். இல்லையா?"

"நம்மைக் குறைத்துச் சொல்லவில்லை அரசே! போரில் நாம் எதிரியை மதிப்பது தவறாகாது."

"வெற்றியும் தோல்வியும் தெரியாமலே எவ்வளவு தூரம்தான் படைகளோடு முன்னேறுவது?"

"இராமநாதபுரம் போய்ச் சேதுபதியைச் சந்தித்து விட்டால் இரண்டில் ஒன்று தெரிந்து விடும் அரசே!"

"போர்க்களத்தில் சந்திக்க வேண்டிய எதிரியை அரண்மனையிலா போய்ச்சந்திப்பது?"

"அரசியலில் நிரந்தரமான எதிரியுமில்லை. நிரந்தரமான நண்பனுமில்லை. சந்தர்ப்பங்கள்தான் நட்பையும், பகையையும் உருவாக்குகின்றன என்று அமரராகி விட்ட தங்கள் தந்தையார் அடிக்கடி சொல்வது உண்டு அரசே!"

தனக்கு மறுமொழி கூறுகிறவனுடைய வார்த்தைகளை அணு அணுவாகக் கவனித்து அதில் எந்தச் சிறு தொனியிலும் கூட சேதுபதியைக் குறைத்துப் பேசவோ விட்டுக் கொடுக்கவோ செய்யாத உறுதி இருப்பதைப் புரிந்துகொண்டான் ரங்ககிருஷ்ணன். இப்படிப்பட்ட படை வீரர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்ற மலைப்பு அவனுக்கு ஏற்பட்டது. அமைதியாகவும் இயல்பாகவும் இருக்கிற மக்களை எதிர்த்துத் தாக்குவதும் பொருத்தமாகப்படவில்லை. மறவர் சீமையைச் சேராத விஜயநகர வாரிசுகளாகிய இரண்டொரு சுயஜாதிப் படைத்தலைவர்களையும் நடுநடுவே அழைத்துத் தன் சந்தேகத்தைத் தெரிவித்து யோசனை கேட்டபோது அவர்கள் அனைவரும் ரங்ககிருஷ்ணனின் சந்தேகத்தை உறுதிப்படுத்தினார்கள்.

சேதுபதி வேண்டுமென்றே நாடகமாடுகிறார். அவருடைய நாடகத்தையும், பாசாங்கையும் கலைத்து அவரை உண்மையான கோபத்தோடு வெளிவரச் செய்ய எந்தத் தீவிரமான செயலில் இறங்குவது என்றுதான் புரியாமலிருந்தது. முன்னுக்குப் போனாலும் இடித்தது. பின்னால் நகர்ந்தாலும் உரசியது.

உண்மைப் போரைத் தொடங்குவதற்கு முன்பே தன் எதிரியைச் சொந்த மனப் போராட்டங்களிலேயே சிக்கித்தவித்துத் திணறும்படிச் செய்துவிட்ட கிழவன் சேதுபதியின் அரசியல் முதிர்ச்சியும், பக்குவமும், பிரமிக்கும்படி இருந்தன.

ரங்ககிருஷ்ணனுடைய படைவீரர்களும் அவனும் இராமநாதபுரத்தை அடைவதற்குள் திரிசிரபுரத்திலிருந்து ஒரு தூதுவனைத் தாய், மங்கம்மாள் அனுப்பியிருந்தாள். வந்து சந்தித்த அந்தத் தூதுவன் ஓர் ஓலையை அளித்திருந்தான்.

'ரகுநாத சேதுபதி கிழச்சிங்கம் மிகவும் சிக்கலான எதிரி. ஆத்திரமோ, பரபரப்போ அடையாமல நிதானமாக நடந்து வெற்றி கொள்ள முயல்க!' என்பது போல் தாயும், இராயசம் அச்சையாவும் அந்த ஒலையில் ரங்ககிருஷ்ணனை எச்சரித்திருந்தார்கள். 'தங்கள் அறிவுரையை மதித்து அதன்படியே நடப்பேன். கவலை வேண்டாம்' என்று தாய்க்கு மறுமொழி அனுப்பிவிட்டு, மேலே பயணத்தைத் தொடர்ந்தான் ரங்ககிருஷ்ணன்.

ரங்ககிருஷ்ணனும் படைவீரர்களும் மறுநாள் முற்பகல் வேளையில் இராமநாதபுர எல்லையை அடைந்தபோது, புறக் கோட்டையாகிய வெளிப்பட்டணத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மிகவும் சாதுரியமான முறையில் அந்தத் தடை செய்யப்பட்டிருந்தது. இராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த வீரர்கள், வெயில் நேரத்துக்கு இதமான குளிர்ந்த பானகமும், வெள்ளரிப் பிஞ்சுமாக எதிர் கொண்டு ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களை உபசரித்தார்கள்.

கோடை வெயிலில் அலைந்து வந்த களைப்பாலும், தாகத்தாலும் ரங்ககிருஷ்ணனின் படைவீரர்களாலும் அதை ஏற்காமலிருக்க முடியவில்லை. ரங்ககிருஷ்ணனோ படைத் தலைவர்களோ அந்த உபசரணையை ஏற்கக் கூடாது என்று தங்கள் படைவீரர்களைத் தடுக்கவும் இயலாமற் போயிற்று. ரங்ககிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, இராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த மந்திரி பிரதானிகள் அவனை எதிர்கொண்டு வந்து, "சேதுபதி சபையில் கொலுவீற்றிருக்கிறார் சபை நடந்து கொண்டிருக்கிறது. புலவர்களும், கலைஞர்களும் தங்கள் கவித்திறனையும், கலைத்திறனையும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாதியில் எழுந்து வந்தால் புலவர்களையும், கவிஞர்களையும் அவமதித்ததுபோல் ஆகிவிடுமே என்று தயங்கி எங்களைக் கூப்பிட்டு உரிய ராஜ மரியாதையோடு தங்களை எதிர்கொண்டு அழைத்துவருமாறு அனுப்பினார்" என்றார்கள். அவர்கள் குரலில் பயபக்தி கனிந்திருந்தது.

அவர்கள் அழைப்பை ஏற்று உள்ளே போவதா, வேண்டாமா என்று ஓரிரு கணங்கள் தயங்கினான் ரங்ககிருஷ்ணன்.

ஒரு பெரிய விருந்தினரைச் சகல அந்தஸ்துகளுடன் வரவேற்பது போல்தான் அவனை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஆனால் ஒரு வித்தியாசத்தை ரங்ககிருஷ்ணன் அத்தனை பரபரப்பிலும் கூர்ந்து கவனிக்கத் தவறவில்லை.

ஒரு பேரரசனை அவனுக்குக் கீழ்ப்படியும் ஒரு சிற்றரசன் வரவேற்பதுபோல் சேதுபதி தானே எதிர்கொண்டு வந்து வரவேற்காமல் ஒரு சுயாதீனமான நாட்டின் அரசன் மற்றொருவனை வரவேற்பதுபோல் மந்திரி பிரதானிகள் வந்து வரவேற்றுக் கொண்டிருந்தனர். புலவர்களையும், கலைஞர்களையும் சாக்குச் சொல்லிவிட்டுச் சேதுபதி சாமர்த்தியமாகக் கொலு மண்டபத்துக்குள்ளேயே இருந்து கொண்ட சாதுரியம் அவனுக்குப் புரிந்தது. புரிந்து என்ன செய்ய? அதற்குள்ளேயே அவனது சொந்தப் படைவீரர்களில் பெரும்பாலோர் சேதுபதியின் வீரர்கள் அளித்த சுக்கு மணம் கமழும் இனிய குளிர்ந்த பானகத்தையும், இளம் வெள்ளரிப் பிஞ்சுகளையும் இரசித்துச் சுவைக்கத் தொடங்கியிருந்தனர். எங்கும் உறவும் இணக்கமும் தெரிந்தனவே தவிரப் பகைமையோ, குரோதமோ தெரியவில்லை.

வேறுவழியின்றித் தன் நம்பிக்கைக்குரிய இரண்டொரு சுயஜாதிப் படைத் தலைவர்களோடு சேதுபதியின் ஆட்கள் வழிகாட்டி அழைத்துச்செல்ல அவர்களோடு கொலுமண்டபத்திற்குச் சென்றான் ரங்ககிருஷ்ணன்.

கொலு மண்டபத்தைச் சுற்றிலும், உட்கோட்டையிலும் மல்யுத்தம் புரிபவர்கள் போல் கட்டுமஸ்தான மறவர் சீமை வீரர்கள் நிறைந்திருந்தனர். உட்கோட்டையும், அரண்மனையும் ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறைந்து தென்பட்டன. எல்லாம் இயல்பாகவும் சகஜமாகவும் தெரிந்தாலும் கோட்டைக்குள் வந்திருக்கும் மரியாதைக்குரிய எதிரி முரண்டினால் அடுத்த விநாடியே, அடக்கிவிட ஏற்பாடுகள் ஆயத்தமாயிருப்பது நன்கு புரிந்தது. விசாலமான அந்த அரண்மனையின் கொலுமண்டபத்தில் ரங்க கிருஷ்ணன் உள்ளே நுழைந்தபோது மயில் நடனம் எனப்படும் மயில் ஆட்டம் ஆடி முடித்திருந்த அதே மயில் ஆட்டத்திற்குரிய கோலத்திலிருந்த ஓர் அழகிய இளம் பெண்ணுக்கும் கரக ஆட்டம் ஆடி முடித்திருந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பரிசுகள் அளித்துக் கொண்டிருந்தார் கிழவன் சேதுபதி.

சேதுபதி, ரங்ககிருஷ்ணனும் அவனுடைய படைத் தலைவர்களும் உள்ளே நுழைந்ததை முதற் சில கணங்கள் தாம் கவனித்தாகவே காட்டிக் கொள்ளவில்லை. கலைஞர்களுக்கும், புலவர்களுக்கும் சன்மானம் அளிக்கிற சாக்கில் ரங்ககிருஷ்ணனைக் கொஞ்சம் அலட்சியப்படுத்த முடிந்தது அவரால். மிகவும் தற்செயலாக நேர்வதுபோல அதைச் செய்தார் அவர்.

ஆனால், அடுத்த சில கணங்களிலேயே சேதுபதி சமாளித்துக் கொண்டுவிட்டார்.

"வரவேண்டும் வரவேண்டும் சின்னநாயக்கரை வரவேற்க இந்தச் சேதுபதியின் ஏழை ராஜசபை கொடுத்து வைத்திருக்கிறது. பட்டமகிஷியுடன் வருவீர்கள் என்று விருந்தளிக்கக் காத்திருக்கிறேன் நான். தனியாக வந்திருக்கிறீர்களே?" என்று எதிர்கொண்டு நடந்து ஓடிவந்து ரங்ககிருஷ்ணனை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார் அவர் கிழச்சிங்கம் ஒன்று ஓடிப்பாய்ந்து வந்து ஓர் இளைஞனைக் கட்டித் தழுவுவது போலிருந்தது அந்தக் காட்சி. ரங்ககிருஷ்ணன் அந்தத் தழுவுதலைத் தவிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் திணறினான். அடுத்து அவர் செய்த காரியம் அவனை இன்னும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

தன் சபைக்குள் திடீரென்று நுழைந்துவிட்ட ரங்ககிருஷ்ணன் முதலியவர்களை முறையாக வரவேற்பதுபோல் சபையினரை நோக்கிச் சேதுபதி கூறலானார்.

"சபையோர்களே நம் சின்ன நாயக்கர் பதவியேற்று முடி சூடிக்கொண்டு படைகளுடன் இறைவன் அருளையும் ஆசியையும் பெற இராமேஸ்வர யாத்திரை மேற்கொண்டு இப்போது வந்திருக்கிறார். நமது மறவர் சீமை மேலும், என்மேலுமுள்ள அன்பைத் தெரிவிக்கவே நடுவழியில் இங்கு நமது விருந்தினராகத் தங்கப்போகிறார். ஐதீகப்படி இராமேஸ்வர யாத்திரை முடிந்து திரும்பும்போதும் மறுபடி இங்கு வருவார். இவருடைய இராமேஸ்வர யாத்திரை ஒரு குறையுமின்றிப் பூரணமாக நிறைவேற நாமும், நமது மறவர் சீமை மக்களும் சகல உதவிகளையும் செய்யவேண்டும்" என்று உருக்கமான குரலில் சபையோர் கேட்கும்படி பகிரங்கமாகக் கணீரென்று முழக்கமிட்டு அறிவித்தார், சேதுபதி. ரங்ககிருஷ்ணனுக்கு இதைக் கேட்டு ஒரே திகைப்பு.

அப்போது அந்தச் சூழலில் அதை மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திணறினான் ரங்ககிருஷ்ணன். மறுத்தால் இராமேஸ்வரத்தை மதிக்காதவன் என்ற கெட்ட பெயர் தனக்கு ஏற்படும். ஆதரித்தால் தான் படையெடுத்து வந்திருப்பதே யாருக்கும் தெரியாது போய்விடும். சேதுபதியின் சாதுரியத்தைக் கண்டு வியப்பு மட்டுமின்றி அதிர்ச்சியும் அடைந்தான் ரங்ககிருஷ்ணன். தன்னை அரசன் என்றோ பேரரசன் என்றோ ஏற்பதை அறிவிக்கும் எந்தச் சொல்லாலும் அழைக்காமல் தந்திரமாக, சின்ன நாயக்கரே என்று மட்டும் அழைத்துச் சமாளிக்கும் சேதுபதியின் தந்திரமும் அவனுக்குப் புரியத்தான் செய்தது. 'பரராச கேசரி' என்று சேதுபதிக்குப் பட்டமளித்துப் பாராட்டிய தன் தந்தை சொக்கநாத நாயக்கரையே “பெரிய நாயக்கர்" என்றுதான் அவர் அழைப்பது வழக்கமென்று ரங்ககிருஷ்ணன் கேள்விப்பட்டிருந்தான்.

உயரமும் பருமனுமாக உயர்ந்து நின்று பிடரி மயிரோடு சிலிர்த்துக் கொண்டு நிற்கும் சிங்கம் போன்ற சேதுபதியின் பார்வையைக் கண்டு என்ன சொல்லிச் சமாளிப்பதென்று புரியாமல் தயங்கினான் ரங்ககிருஷ்ணன். அதற்குள் அவனை அமரச் செய்தார் சேதுபதி.

"எங்கே? நம்முடைய புகழ்பெற்ற சேதுநாட்டு அவைப் புலவர்கள்? சின்ன நாயக்கரின் இராமேஸ்வர யாத்திரையைப் புகழ்ந்து பாடுங்கள் பார்க்கலாம்."

என்று கிழவன் சேதுபதி அதற்குள் முந்திக்கொண்டு சேதுநாட்டுத் தமிழ்ப்புலவர்களை அழைத்து ரங்ககிருஷ்ணனை மேலும் திணற அடித்தார்.

புலவர்களில் முதன்மையான ஒருவர் அவையில் முன்வந்து சேதுபதியையும், ரங்ககிருஷ்ணனையும் வணங்கி விட்டுப் பாடத் தொடங்கினார்.

"கத்துகடல்சூழும்
ராமேசர்க் காண்பதற்காய்
எத்தனையோகாதம் வழிநடந்த-பத்திமிகு
சத்புருடன் நாயக்க சாம்ராஜ்ய மாமன்னன்
முத்துவீ ரப்பன் முகம்"

பாட்டிலும் ரங்ககிருஷ்ணன் ராமேஸ்வர தரிசனத்துக்காகவே பல காததூரம் வழிநடந்துவந்திருப்பதாகவே பாடியிருந்தார் புலவர்.

ரங்ககிருஷ்ணனுக்கு அருகே அமர்ந்திருந்த அவனுடைய சொந்தத் தளபதிகளில் ஒருவர் சற்றே அதிகமான தமிழ் ஞானமுடையவர். அவர் இந்த வெண்பாவைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்துவிட்டு மெல்லத் திரும்பி ரங்ககிருஷ்ணனின் காதருகே குனிந்து, "பாட்டில் மோசம் இருக்கிறது அரசே மேலோட்டமாக உங்களைப் புகழ்வதுபோல் பாடப்பட்டிருந்தாலும் உள்ளே பயங்கரமாகப் பொடி வைக்கப்பட்டிருக்கிறது" என்றார். ரங்க கிருஷ்ணன் அதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தான். அந்தப் பாடலில் அப்படி என்ன பொடி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்கேயே அரசவையில் விரிவாகக் கேட்டறிய முடியாமல் இருந்தது. சூழ்நிலை அதற்கு இசைவாக இல்லை. சேதுபதியின் சாதுரியங்களும், சாமர்த்தியங்களும் வேறு ரங்ககிருஷ்ணனை அயர்ந்துபோகச் செய்திருந்தன. சபையில் மேலும் பல புலவர்கள் ரங்ககிருஷ்ணனை வாழ்த்தினர். வரவேற்பும், வாழ்த்தும் பிரமாதமாகத்தான் இருந்தன. ஓரிரு கணங்கள் அந்தச் சீமையின் மேல் படையெடுத்து வந்திருக்கிறோம் என்பதைக்கூட ரங்க கிருஷ்ணனை மறந்துபோகச் செய்திருந்தன.

'இப்படியும் சாதுரியமாக நடிக்க முடியுமா?' என்று சேதுபதியைப் பற்றி வியந்து மலைத்துக் கொண்டிருந்த அதேசமயம் தன் படையெடுப்பு பயன்படாமல் தளர்ந்து போனதை எண்ணி ரங்ககிருஷ்ணனுக்கு வருத்தமாகவும் இருந்தது. அவனோடு வந்திருந்த படைவீரர்கள் வெளிக்கோட்டையில் சேதுநாட்டு விருந்துபசாரத்தை ஏற்று மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் இருந்தார்கள். அவனைத் தனியே பிரித்து அழைத்து வந்து உற்சாகமான புகழ் வார்த்தைகளால் சிறைப்படுத்த முயல்வது போலிருந்தது சேதுபதியின் செய்கை.

ஓர் எதிரியை மெய்யான சிறைச்சாலையில் அடைப்பதைக்கூடப் புரிந்துகொண்டு விடலாம். புகழ் வார்த்தைகள் என்ற சிறைச் சாலையைப் பின்னி அதிலடைப்பது மிகவும் அபாயகரமானது. 'கெட்டிக்காரர்கள் தங்களுக்கு வேண்டாத எதிரிகளைச் சிறையிலடைக்க மாட்டார்கள்; முகஸ்துதி செய்தே வீழ்த்திவிடுவார்கள்' என்று தாய் அடிக்கடி தன்னிடம் கூறியிருப்பதை இப்போது நினைத்தான் ரங்ககிருஷ்ணன்.

கொழுந்துவிட்டு எரியும் தீயில் தண்ணீரைக் கொட்டுவதுபோல் அவன் மனத்திலிருந்த பகைமை வெப்பத்தை அணையச் செய்து உபசரித்துக்கொண்டிருந்தார் சேதுபதி, படீரென்று பேச்சைநடுவிலே முறித்து எல்லா ராஜதந்திரத் திரைகளையும் களைந்தெறிந்துவிட்டு, "நீங்கள் எங்கள் மனிதராகிய குமாரப்பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்று விட்டீர்கள்! சேது நாட்டைச் சுயாதீனப் பிரகடனம் செய்து கொண்டீர்கள்! இக்காரணங்களுக்காக உங்கள்மேல் நான் படையெடுத்து வந்திருக்கிறேன்" என்று முகத்துக்கு முகம் நேருக்கு நேர் சுடச்சுடச் சொல்லிவிட வேண்டும் என்று துடிதுடித்தான் ரங்ககிருஷ்ணன். ஆனால் அதுவும் அவனால் முடியவில்லை.

சேதுபதி சாமர்த்தியமாக அவனைப் பேசவிடாமல் சமாளித்தார். அவரே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

"நம்முடைய நட்பு உங்கள் தந்தையார் காலத்தில் இருந்து வளர்ந்து வருவது. பெரியநாயக்கர் அரசியல் விஷயங்களில் என்னைத் தமது வலக் கையாக நம்பி வந்திருக்கிறார் என்பதை உங்கள் அன்னையார் உங்களுக்குச் சொல்லியிருக்கலாம்."

"அதெல்லாம் சரி!.... இப்போது நான் வந்த காரியம்...."

"அதற்கென்ன அவசரம் சின்ன நாயக்கரே வந்த காரியத்தைப் பேசாமல் நீங்களும் திரும்பிப்போய் விடப்போவதில்லை. கேட்டுக் கொள்ளாமல் நானும் விட்டுவிடப் போவதில்லை."

"ஒத்திப் போடாமல் அதைப்பேசி விடுவது நம் இருவருக்குமே நல்லது நீங்களும் என்னைப் புரிந்துகொள்ளலாம். நானும் உங்களைப் புரிந்து கொள்ளலாம்."

"நாமிருவரும் இனிமேல்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமா சின்னநாயக்கரே?"

என்று கேட்டு விட்டு அர்த்தபுஷ்டியோடு ரங்ககிருஷ்ணனின் முகத்தை ஏறிட்டு நோக்கிப் புன்னகை புரிந்தார் சேதுபதி. அந்தப் புன்னகை வெறும் புன்னகையா நமட்டுச் சிரிப்பா என்று வகைப் படுத்த முடியாதபடி இருந்தது. ரங்ககிருஷ்ணன் தொடர்ந்தான்.

"புரிந்து கொள்ளாமலே புரிந்து கொண்டுவிட்டதாக நினைப்பதும் புரிந்துகொண்டு விட்டும் புரியமுடியாத சூழ்நிலைகளில் தவிப்பதும் இரு தரப்புக்குமே நல்லதில்லை..."

"அத்தகைய இரண்டுங்கெட்டான் நிலைமை என்றும் எதிலும் எனக்கு இன்று வரை ஏற்பட்டதில்லை சின்ன நாயக்கரே"

"இங்கே சபையில் பேச முடியாது தனியே போய் நாம் பேசியாக வேண்டும்."

"இப்படிப் பதற்றமும், பரபரப்பும், வாலிப வயதுக்குரியவை சின்ன நாயக்கரே! பதற்றமும், பரபரப்பும் நீங்கி உணர்ச்சிகள் பக்குவப்பட அநுபவ முதிர்ச்சிதான் உதவமுடியம்."

"அறிவுரை கேட்டுக் கொள்ள நான் இங்கு வரவில்லை."

"ஆத்திரப்பட்டுப் பயனில்லை, சின்ன நாயக்கரே இன்னும் சிறிது நேரத்தில் என்னோடு விருந்துண்ணப் போகிறீர்கள். அப்போது தனியாக அந்தரங்கமாக நாம் இருவர் மட்டுமே இருப்போம். எல்லாம் பேசிக்கொள்ளலாம். பொதுவாகச் செயலில் காட்டமுடியாத ஆத்திரத்தை வார்த்தைகளில் காட்டி வீணாக்குபவர்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் உங்களைப் பற்றி மட்டும் கொஞ்சம் கவலைப்படுகிறேன். சின்ன நாயக்கரே!"

"இதற்கு என்ன அர்த்தம்?"

"புரிந்து கொள்ள வேண்டிய அர்த்தங்களைச் சொல்லிக் கொடுத்தா விளக்குவது சின்னநாயக்கரே!"

"வார்த்தைகளையே ஆயுதங்களாகப் பயன்படுத்தி எதிரிகளை மர்மமாகத் தாக்கும் கலை எனக்குப் புதியது புரியாதது."

சேதுபதி இதைக் கேட்டுச் சிரித்தார். பின்பு நிதானமாகச் சொல்லலானார்.

"அஜாத சத்ரு என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு தொடர் கேள்விப் பட்டிருப்பீர்கள் சின்ன நாயக்கரே!"

"அதற்கென்ன இப்போது? "தனக்கு இன்னும் எதிரியே பிறக்கவில்லை என்று துணிந்திருக்கிற தீரனைப் பற்றிய தொடர் அது."

"அந்தத் தொடர் வாழ்வில் எனக்கு மிகவும் விருப்பமானது, சின்ன நாயக்கரே!"

இதைக் கேட்டு ரங்ககிருஷ்ணன் சேதுபதியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவருடைய முகமே அவருக்கு ஒரு முகமூடியாயிருந்தது. அவனால் அவரது உள்ளே ஓடும் எண்ணங்களை அப்போது நிறுத்துப் பார்க்க முடியவில்லை.

அரசவை கலைந்தது. ரங்ககிருஷ்ணனோடு உடன் வந்திருந்தவர்களை விருந்தினர்கள் பொதுவாக உணவருந்தும் அரண்மனைப் போஜனசாலைக்கு உரியவர்களோடு அனுப்பி விட்டு அவனை மட்டும் தன்னோடு தனியே அழைத்துக்கொண்டு சென்றார் சேதுபதி.

அவர்களுக்குச் சேதுபதியின் குடும்பப் பெண்டிரே பரிமாறினார்கள். அந்த அலங்கார அறையில் சிறப்பான சூழ்நிலையில் நெய் மணம் கமழும் அதிரசங்களையும், தேனில் பிசைந்த தினை மாவையும் உண்ணும்போதும் ரங்ககிருஷ்ணனின் மனம் என்னவோ கசப்பாகத்தானிருந்தது. சேதுபதி அவனை விழுந்து விழுந்து உபசரித்தார். உளுந்து அரிசியோடு வெந்தயமும் சேர்த்து அரைத்து மிருதுவாகவும் பத்தியமாகவும் வார்க்கப்பட்ட மெத்தென்ற தோசைகளும், நாசிக்கு இதமான கொத்தமல்லி வாசனையோடு கூடிய துவையலும் உண்ண ருசியாயிருந்தன. விருந்தோம்பலிலும் பிற உபசரணைகளிலும் அவனை மிகமிகக் கவனமாகவும், மரியாதையோடும் நடத்தினார் சேதுபதி.

"சின்ன நாயக்கரே! அரசர்கள் என்பதற்காகவோ, பேரரசர்கள் என்பதற்காகவோ நான் மயங்கிப் பயந்து மதிப்பதில்லை. இந்த அரண்மனையில் மிகவும் வேண்டியவர்களை மட்டும்தான் இப்படி என் குடும்பப் பெண்களே முன்வந்து உபசரிப்பார்கள்."

"மிகவும் வேண்டியவர்களுக்கு வேண்டியவர்களைக் கொன்று விடுவதும் கூட ஒருவகை உபசரணைதானோ?"

சேதுபதி சாப்பிடுவதை நிறுத்திவிட்டுக் கலத்திலிருந்த பார்வையை நிமிர்த்தி அவனைப் பார்த்தார்.

"சுவையான இனிய உணவை அருந்தியபடி கசப்பான விஷயங்களைப் பேசுகிறீர்கள் சின்ன நாயக்கரே"

"கசப்பும் அறுசுவைகளில் ஒன்றுதானே?"

"இருக்கலாம். ஆனால் எல்லா நேரத்திலும் அது உவப்பதில்லை. விருந்தினரைக் கசப்புக்கு உள்ளாக்குவது இந்த அரண்மனையில் வழக்கமில்லை."

குமாரப்ப பிள்ளை என்று தான் தொடங்கிய வாக்கியத்தை ரங்ககிருஷ்ணன் முடிப்பதற்குள்ளேயே சேதுபதி குறுக்கிட்டு,

"நல்ல மனிதராயிருந்தார். படிப்பாளியாயிருந்தார். ஆனால் அவருடைய விசுவாசமெல்லாம் புறப்பட்ட இடமாகிய சொக்கநாத நாயக்கரின் வம்சத்தில் தான் குவிந்திருந்ததே தவிர, வந்து சேர்ந்த இடமாகிய சேது நாட்டின் மேல் எள்ளளவும் இல்லை" என்றார்.

"உண்மையாக ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாகயிருப்பது பாவம் என்று விசுவாசத்துக்கு புது விளக்கம் இப்போதுதான் புரிகிறது. எல்லாருக்கும் விசுவாசமாயிருப்பது இங்கிதமேயன்றி விசுவாசமாகாது."

"சின்னநாயக்கர் சன்மார்க்க பாஷையில் விசுவாசத்தைப்பற்றி விளக்குகிறார் போலிருக்கிறது எனக்கு அரசியல் நிகண்டின்படிதான் அதற்கு அர்த்தம் தெரியும் சின்ன நாயக்கரே!"

"சேது நாட்டில் சன்மார்க்கத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லாதபடிதான் ஆட்சியும் அரசும் நடக்குமென்று இதுவரை புரிந்துகொள்ளாதது என் தவறென்று இப்போது தான் தெரிகிறது."

"சன்மார்க்கத்தைப் பற்றிச் சின்ன நாயக்கரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய அளவு தமிழ்ப் புலமைக்குப் பெயர்பெற்ற சேது நாட்டில் இன்னும் அத்தனை அறிவுப் பஞ்சம் ஏற்பட்டுவிடவில்லை."

"துரதிர்ஷ்டவசமாகச் சோற்றுப் பஞ்சத்தைப் போல் அறிவுப் பஞ்சம் கண்களுக்குத் தெரிவதில்லை."

"இந்த விருந்திலே இல்லாத கசப்புச்சுவையை உண்டாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று சின்ன நாயக்கர் கங்கணம் கட்டிக்கொண்டு வந்து இங்கே உட்கார்ந்திருப்பது போல் தோன்றுகிறது."

சேதுபதி அதிராமல், அயராமல், பதற்றமின்றிச் சிரித்த படிதான் உரையாடினார். விஷயங்களால் பாதிக்கப்பட்ட பரபரப்பும், பதற்றமும், ஆத்திரமும் ரங்ககிருஷ்ணனின் குரலிலும் வார்த்தைகளிலும் உண்டாக்கியிருந்த சூட்டைப் போன்றதொரு சூட்டை, சேதுபதியின் குரலிலோ, வார்த்தைகளிலோ காணமுடியவில்லை.

உடனே கோபமும், ஆத்திரமும் பட்டுவிடாத இந்த ராஜதந்திர அடக்கத்தைத்தான் 'பொள்ளெனப்புறம் வேர்க்காதிருத்தல்' எனத் தன் தாய் அடிக்கடி கூறுகிறாள் என்பது இப்போது ரங்க கிருஷ்ணனுக்குத் தோன்றியது.

சேதுபதியின் உரையாடல் இப்படி ரங்ககிருஷ்ணனுக்குத் தன் தாய் அடிக்கடி கூறும் வாசகம் ஒன்றை நினைவுபடுத்தியது. தொடர்ந்து சேதுபதியிடம் சொல்லிக் கொண்டேபோனான் அவன்.

"சொல்லாமல் கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கப்பம் கட்டும் ஒரு நாடு திடீரென்று தனக்குத்தானே சுயாதீனமாவது கூட அறிவுப் பஞ்சமில்லாததால்தான் நடக்கிறது போலும்."

"இதற்கு ஆமென்றும் பதில் சொல்லலாம். இல்லையென்றும் பதில் சொல்லலாம். ஆனால் இல்லையென்று பதில் சொல்லத் தன்மானம் தடையாயிருக்கிறது. ஆம் என்று பதில் சொல்லத் தன்னடக்கம் தடையாயிருக்கிறது சின்னநாயக்கரே."

ரங்ககிருஷ்ணனிடம் அப்போது வார்த்தைகளையே கூராகத் தீட்டிப்பிரயோகித்து ஒரு ராஜதந்திரப் போரை நடத்தினார் சேதுபதி. அந்தப் போரிலும் கூட அவர் கைதான் ஓங்கியிருந்தது. தான் ஆத்திரப்படாமல் எதிரியை முதலில் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரம் கொள்ளச் செய்கிறவன் அந்தக் கணமே எதிரியும் அறியாமலே அவனை இரகசியமாக வெற்றி கொண்டுவிடுகிறான். ரங்க கிருஷ்ணனைப் பொறுத்தவரை அப்படி ஒரு மனோதத்துவ வெற்றியை ரகுநாத சேதுபதி அடைந்திருந்தார்.

உணவருந்தி முடித்துவிட்டுப் பெண்கள் அலங்காரத் தாம்பாளங்களில் கொணர்ந்து வைத்த கனிவகைகளையும் தாம்பூலத்தையும் தரித்துக்கொள்ள இருந்தபோது, ரங்ககிருஷ்ணன் மறுபடி அவரிடம் வகையாக மாட்டிக் கொண்டான். வாழைப்பழச் சீப்பிலிருந்து ஒரு பழத்தைத் தனியே எடுத்துக் கொண்டு "நன்றாகக் கனியவில்லை" என்றான் ரங்ககிருஷ்ணன்.

"நன்றாகக் கனியாத எதுவுமே இங்கே வராது. உரியுங்கள். கனிந்திருப்பது தெரியும். சில கனிகளைக் கனிந்திருக்கிறதா, இல்லையா என்று கண்டுபிடிக்கக்கூட நமக்கே ஒரு கனிவு தேவைப்படுவதுண்டு சின்ன நாயக்கரே!"

சிரித்தபடியே நகைச்சுவைக்குப் பேசுவதுபோல் பேசினாலும் தனக்கு அரசியல் விஷயங்களைப் பேசும் கனிவு போதாது என்பதைப் பொடிவைத்துச் சொல்லுகிற அவரது அங்கதப் பேச்சு ரங்ககிருஷ்ணனுக்குப்புரிந்து உறைத்தது.

"வாழைத் தாராக அரண்மைனைக்கு வரும்போது இவை கனியாமல்தான் வரும். எப்படியும் நாங்கள் இவற்றைக் கனிய வைத்துவிடுவோம்."

"எப்படியம் கனியவைப்பது என்பது தர்மமாகாது. ஒவ்வொன்றைக் கனிய வைப்பதற்கும் ஒரு முறை இருக்குமே?"

"சில வேளையில் கனிகளைக் கனிய வைப்பதற்கான முறைகளும், தர்மங்களும், மனிதர்களைக் கனிய வைக்கப் போதுமானவையாகவோ பொருத்தமானவையாகவோ இருப்பதில்லை, சின்னநாயக்கரே!"

அப்போது வாதத்தில் தன் பக்கம் தான் மெல்ல வலுவிழந்து போய்க் கொண்டிருக்கிறோம் என்பது ரங்ககிருஷ்ணனுக்கே நன்றாகப் புரிந்தது.