இறைவர் திருமகன்/அறிஞர் மெச்சிய அறிஞன்

விக்கிமூலம் இலிருந்து

3. அறிஞர் மெச்சிய அறிஞன்

மன்னன் ஹெராடு இறந்த பின் சோசப் தன் மனைவியையும் மகனையும் எகிப்திலிருந்து கூட்டிக் கொண்டு வந்து நாசரத் என்ற சிற்றூரில் தங்கினான்.

நாசரத் ஓர் அழகிய ஊர். அங்கே இயேசு நன்றாக வளர்ந்து வந்தான். நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்று வந்தான். இயேசுவுக்கு வயது பனிரெண்டாகியது. அப்போது நாசரத்தில் உள்ளவர்கள் ஆண்டு தோறும் ஆவலோடு எதிர் பார்க்கும் ஒரு நாள் வர விருந்தது. அது யூதர்களின் விருந்து விழா ஆகும். அவ்விருந்து விழாவிற்கு எல்லா ஊர்களிலிருந்தும் செருசலம் நகருக்கு வருவார்கள். ஆண்டுக்கொரு முறை எல்லோரும் கூடி நடத்தும் அந்த விருந்து விழா மிகச் சிறப்பாயிருக்கும்.

விருந்து விழா அணுகியதும், நாசரத்திலுள்ள மக்கள் பலரோடு சோசப்பும், மேரியும் அவர்களின் மகன் இயேசுவும் அவன் தோழர்களும் செருசலம் நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் வழி நடந்து போகப் போக வெவ்வேறு பாதையிலிருந்து மக்கள் பலர் வந்து சேர்ந்து கொண்டார்கள். இவ்வாறாகப் போகப் போகக் கூட்டம் பெருகிக் கொண்டே வந்து கடைசியில் அதுவே ஒரு பெரிய ஊர்வலமாகி விட்டது.

“இறைவன் இருக்கும் ஆலயத்தை
எய்து வோமென் றுரைத்தார்கள்
குறைவில் லாத மகிழ்ச்சியுடன்
குதித்துப் பறந்து வந்தேனே!"

என்று இன்பப் பாட்டுப் பாடிக் கொண்டே அந்தக் கூட்டத்தினர் நடந்தார்கள்.

மாண்பு மிக்க செருசலத்தை
மலைகள் சுற்றி இருப்பதுபோல்
ஆண்ட வன்தன் மக்களையே
அணைத்துக் காப்பான் கண்டீரே.

செருசலம் நகரின் அருகில் வந்தவுடன் அவர்கள் இப்படிப் பாடிக் கொண்டு நடந்தார்கள்.

செருசலம் ஆலயத்திலே மக்கள் கூட்டம் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இசையோடு கூடிய இறை விளக்கப் பாடல்கள் எங்கும் ஒலித்தன. புகைகளின் நறுமணம் எங்கும் சூழ்ந்தது. குருமார்கள் புத்தாடையணிந்து வந்திருந்து எல்லா மக்களுக்கும் தொழுகை நடத்தி வைத்தார்கள்.

விருந்து விழா நாட்கள் இன்பமாகவும் கேளிக்கையாகவும் கழிந்தன. வெளியூர்க்காரர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு ஒவ்வொருவராகவும், கூட்டங் கூட்டமாகவும் புறப்பட்டுப் போயினர். மேரியும் சோசப்பும் புறப்பட்டார்கள். இயேசு தன் நாசரத் தோழர்களுடன் வருகிறான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். பகலெல்லாம் வழிநடந்து இரவு நெருங்கிய போது தான் அவர்கள் தங்கள் கூட்டத்தில் இயேசு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

அந்தக் கூட்டத்தில் வந்து கொண்டிருந்த இயேசுவின் நண்பர்களைக் கண்டு கேட்ட போது, அவனைப் பார்க்கவேயில்லையே என்று கூறிவிட்டார்கள்.

அவ்வளவு தான் பெற்ற மனம் பகீர் என்றது. பிள்ளையைக் காணோமே என்று கலங்கி அவர்கள் மீண்டும் செருசலத்தை நோக்கித் திரும்பினார்கள். வழியெல்லாம் விசாரித்துக் கொண்டே நகருக்குள் நுழைந்தார்கள். நகரில் புகுந்து வீதிவீதியாகத் தேடினார்கள், எங்கும் இயேசு காணப் படவில்லை. கடைசியில் அவர்கள் ஆலயத்தை அடைந்தார்கள். ஆலய மண்டபத்தின் நடுவே பண்டிதர்களின் சிறுகூட்டம் ஒன்று இருந்தது. அந்தப் பண்டிதர் கூட்டத்தின் இடையே இயேசு அமர்ந்திருந்தான். அவர்கள் கூறும் வாசகங்களைக் கேட்டுக் கொண்டும், அவர்கள் கேள்விகட்கு விடையளித்துக் கொண்டும் இருந்தான் அவன்.

அந்த யூத அறிஞர்கள் சிறுவனின் அறிவுத் திறத்தைக் கண்டு வியந்தார்கள். அவனோ தன்னை மறந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

இந்தக் காட்சியைக் கண்ட மேரிக்குப் பொருமையாகத் தான் இருந்தது. இருந்தாலும் 'மகனே! இப்படிச் செய்யலாமா? நாங்கள், உன்னைக் காணாமல் எவ்வளவு துடித்துப் போனோம்? எங்கேங்கே தேடினோம் தெரியுமா?” என்று வருந்திய குரலில் கேட்டாள்.

"அம்மா என்னைத் தேடினீர்களா? நான் என் தந்தையின் வீட்டில் தான் இருப்பேன் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டான் இயேசு. இறைவன் ஆலயத்தைத் தான் தந்தையின் வீடு என்று குறிப்பிட்டான் அவன்.

பின்னர் அந்த அறிஞர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தன் தாய்தந்தையருடன் வீட்டுக்குத் திரும்பினான் இயேசு.