இளையர் அறிவியல் களஞ்சியம்/இரத்த சேமிப்பு நிலையம்

விக்கிமூலம் இலிருந்து

இரத்த சேமிப்பு நிலையம் (Blood bank) : நமக்குத் திடீரென ஏதேனும் விபத்து ஏற்பட்டு பெருங் காயமோ அல்லது ஊனமோ ஏற்படும் போது உடலிலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. உடல் இழந்த இரத்தத்தை மீண்டும் உடலுள் செலுத்தாவிடில் உயிருக்கே ஆபத்து என்ற நிலை ஏற்படும்போது யாரேனும் உடனடியாக இரத்தம் வழங்கவேண்டியதாகிறது. இல்லையெனில் முன்பே சேகரிக்கப்பட்ட இரத்தத்தை 'இரத்த சேமிப்பு நிலைய'த்திடமிருந்து பெற்று இரத்தம் இழந்தவருக்குச் செலுத்தி உயிர் பிழைக்கச் செய்கிறோம். இத்தகைய இடரான சமயத்தில் இரத்தம் வழங்கி உயிர்காக்கத் துணைபுரியும் நிலையமே 'இரத்த சேமிப்பு வங்கி' என்று அழைக்கப்படும் ‘இரத்த சேமிப்பகம்' ஆகும்.

இந்த இரத்த சேமிப்பகத்தின் முக்கிய பணி இரத்தம் வழங்குபவர்களிடமிருந்து இரத்தத்தைப் பெற்று, அதன் இயற்கைக் குணப்பண்பு சிறிதும் மாறாமல் அல்லது அழியாமல் பாதுகாப்பதும் தேவையானபோது அவற்றைத் தந்துதவுவதுமே யாகும்.

அத்துடன் இரத்தம் கொடுப்பவர் அல்லது இரத்தம் பெறுபவர் ஆகியவர்களின் இரத்த வகைகளைக் கண்டறிந்து குறித்து வைத்தல், தருபவரின் இரத்த குளோபினின் அளவை கணக்கிட்டறிதல் ஆகியவைகளும் இரத்த சேமிப்பு நிலையத்தின் முக்கிய பணிகளாகும்.

இரத்த சேமிப்பு நிலையத்தில் இடம்பெறும் இரத்தம் உரையாமலிருக்கும்படியும் சேமித்த இரத்தம் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதோடு நோய் ஏதும் ஏற்பட்டுவிடாமல் பாதுகாப்பதும் சேமிப்பு நிலையத்தின் தலையாய பணியாகும். யாருக்கு இரத்தம் செலுத்த வேண்டுமோ அவருடைய இரத்த வகை பொருத்தம் ஆகியவைகளை ஆராய்ந்தறிதலும் இரத்த சேமிப்பு நிலையத்தின் பணியாகும்.

இரத்த சேமிப்பு நிலையத்திற்கு இரத்தம் வழங்க முன் வருபவர் எவ்வித நோயாலும் பிடிக்கப்படாதவராக, நல்ல உடல் நலமுடையவராக இருத்தல்வேண்டும். ஒருமுறை இரத்தம் வழங்கியவர் மறுமுறை இரத்தம் வழங்கவேண்டும் எனில் குறைந்தது மூன்று மாதங்கள் ஆக வேண்டும். இரத்தம் அளிப்பவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் வேண்டிய அளவில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மலேரியா, கல்லீரல் அழற்சி நோய், கிரந்தி, எய்ட்ஸ் போன்ற நோய்கள் அறவே இருக்கக் கூடாது. இரத்தம் கொடுப்பவரின் உடல் எடை குறைந்தது 45 கிலோ கிராம் அளவில் இருக்கவேண்டும்.

இரத்தம் வகைப்படுத்தல் என்பது இந்நிலையத்தின் இன்றியமையாப் பணியாகும். இதற்காக இரத்தம் வழங்குபவரின் விரலில் ஊசி முனையால் குத்தி இரத்தம் வரவழைப்பர். ஒரு சொட்டை சிறிய கண்ணாடி வில்லையின் பரப்பில் படுமாறு ஒற்றி எடுப்பர். பின் அதனை மற்றொரு கண்ணாடி வில்லைப் பரப்பில் அழுத்தி நிரவுவர். அத்துடன் சில சொட்டுகளை குழாய் மூலம் உறிஞ்சி எடுத்து சிறு கண்ணாடிப் புட்டியில் வைத்துப் பின் இரண்டையும் தொலைநோக்காடி மூலம் ஆய்ந்து நோயின் வகைகளைக் கண்டறிவர்.

இரத்தம் வழங்குபவரை கையை நீட்டியவாறு படுக்கவைப்பர். நடுக் கையில் சிரை இருக்குமிடத்திற்கருகில் உணர்விழப்பு மருந்தைச் செலுத்தி பின் சிரையினுள் இரத்தப் போக்கு ஏற்படுத்தும் ஊசியைச் செலுத்துவர். நோய்க்கிருமிகள் அகற்றப்பட்ட புட்டியில் இரத்த உறைவைத் தடுக்கும் டை சோடியம் சிட்ரேட் உப்புக் கரைசல் இட்டு இரத்தத்தைச் சேமிப்பர். சுமார் 420 மி.லி இரத்தம் புட்டியினுள் சேர்ந்தவுடன் சிரையினுள் செலுத்தப்பட்ட ஊசியை எடுத்துவிடுவர். நோய்க்கிருமி அகற்றப்பட்ட பஞ்சை ஊசி குத்திய இடத்தில் வைத்து மூன்று நிமிடங்கள் பஞ்சை அழுத்திப் பிடித்தால் இரத்தக்கசிவு நின்றுவிடும். பின்னர் புட்டியின் மேல் இரத்த வகை, இரத்தம் சேமிக்கப்பட்ட நாள் ஆகியவற்றைக் குறிப்பிடுவர். இரத்தத்தைக் கண்ணாடி புட்டியிலோ பிளாஸ்டிக் பையிலோ சேமிக்கலாம்,

இரத்த சேமிப்பிற்கான விதிமுறைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து குளிர்சாதன அறைகளில் வைத்துக் காப்பர். இவ்வாறு இரத்த சேமிப்பு நிலையத்தில் உள்ள இரத்தத்தை யாருக்கேனும் அவசரம் நிமித்தம் மாற்றீடாகச் செலுத்த வேண்டுமெனில் இரத்த செல்கள், தட்டயம்கள் (Platalets), பிளாஸ்மா ஆகியவற்றின் ஒப்புமையை அறிந்து உரியவர்க்குச் செலுத்தவேண்டும். ஒருமுறை சேமிக்கப்பட்ட இரத்தத்தை மூன்று வார காலத்திற்குள் பயன்படுத்திவிடவேண்டும் இரத்தத்தின் உரை பொருள்கள் சிறிதுகாலத்திற்குள் கெடக் கூடியவையாக இருப்பதால் சேமிக்கப்படும் இரத்தத்தை உடனடியாக மாற்றீடாகப் பயன் படுத்துவதே சாலச் சிறந்தது.