இளையர் அறிவியல் களஞ்சியம்/புற்றுநோய்

விக்கிமூலம் இலிருந்து

புற்றுநோய் : நம் உடலில் உள்ள திசுக்கள் அனைத்தும் உயிரணுக்களால் ஆனவைகளேயாகும். ஒவ்வொரு உயிரணுவும் இரண்டாகப் பிரிந்து பல்கிப் பெருகும் இயல்புடையதாகும். இவ்வாறு உயிரணுக்கள் பல்கிப் பெருகுவது உடலெங்கும் இடையறாது நடைபெறுகிறது. இதன் மூலம் அவ்வப்போது இறப்பெய்தும் உயிரணுக்களின் எண்ணிக்கை ஈடு செய்யப்படுக்றது.

சிலருடைய உடலில், சிலசமயம் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றிப் பல்கிப் பெருகுவதுண்டு. அவற்றில் தசை அல்லது எலும்பு உண்டாவதில்லை. அவை மற்ற உயிரணுக்களை நெருங்கியும் அவற்றிற்குண்டான உணவுப் பொருட்களை அபகரித்தும் மேலும் பெருக்கமடைந்து ஒரு கட்டிபோல் உருவாகும். இது கழலை எனப்படும். இக்கழலைகள் எல்லாமே உடலுக்குத் தீங்கிழைப்பதில்லை. சிலவகைக் கழலைகள் உடலுக்குத் தீங்கு செய்கின்றன அவை பிற உறுப்புகளுக்கும் பரவி புதுப்புதுக் கழலைகளைத் தோற்றுவித்துத் தீங்கிழைக்கின்றன. இவ்வாறு புற்றுபோல் இக்கழலைகள் அடுக்கடுக்காக உருவாவதால் ஏற்படும் நோய் 'புற்று நோய்’ என அழைக்கப்படுகிறது.

புற்றுநோய்க்கிருமி ஒன்று இரண்டாதல்

இந்நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கொடிய நோயாகும்.

புற்று நோய் சாதாரணமாக மென்மையான உடலுறுப்புகளிலேயே ஏற்படுகின்றன. இறைப்பை, நுரையீரல், கருப்பை, கல்லீரல், குடல், தொண்டை, நாக்கு ஆகியவைகளிலிலேயே புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுகின்றன.

சாதாரணமாக இந்நோய் சிறுவர்களுக்கு உண்டாவதில்லை. நாற்பது வயதைக் கடந்த பெரியவர்களுக்கே ஏற்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றவர்க்குத் தொற்றும் தன்மை கொண்ட தொற்று நோய் அன்று.

புற்று நோய் உருவான பகுதிகளில் உள்ள நரம்புகள் மேலும் மேலும் அழுத்தப்படுவதால் கடுமையான வலியும் வேதனையும் உண்டாகும். சில சமயம் எலும்புப் பகுதிகளில் புற்று நோய் ஏற்படுவதுண்டு. அப்போது இரத்த சோகை நோய் உண்டாகும். இதனால் புதிய இரத்த உயிரணுக்கள் உருவாவது தடைப்படும். இதனால் விரைவாக நோயாளி மரணமடைய நேரிடும்.

இந்நோயின் தன்மைகள் எத்தகையது என அறியப்பட்டபோதிலும் புற்று நோய்க்கான மூலகாரணம் என்ன என்பது இன்னும் முழுமையாக அறியப்படாமலே உள்ளது.

இந்நோய் வளர்வதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. புகையிலைப் பொருட்கள், தார்ப் பொருட்கள், கதிரியக்கப் பொருட்கள் போன்றவற்றால் இந்நோய் செழித்து வளர்கிறது. எனவே, இவற்றை விலக்குவதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம் அல்லது தடுக்கலாம்.

இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிந்தால் உரிய சிகிச்சை மூலம் ஒழித்து விடலாம். உடலில் எங்கேனும் கழலைக் கட்டிகள் ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தால் உடனே

புற்றுநோய் உயிரணுக்கள்

மருத்துவப் பரிசோதனைமூலம் கண்டறிய வேண்டும். புற்று நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிந்தால் உடனே எக்ஸ் கதிர், ரேடியக்கதிர்களைப் பாய்ச்சிக்கட்டியைக் கரைக்கலாம் அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றலாம்.