இளையர் அறிவியல் களஞ்சியம்/மூளை

விக்கிமூலம் இலிருந்து

மூளை : 'எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி. அந்தச் சிரசில் உள்ள மூளையே உடலின் மூலாதாரமாக அமைந்துள்ள பகுதி. கண், காது, வாய். மூக்கு, தொடுவுணர்வு ஆகிய ஐம்புலன்களின் செயல்பாடும் மூளையைப் பொறுத்தே அமைகிறது. மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவது மூளையேயாகும். மூளை இடும் கட்டளைக் கேற்பவே நம் உடல் செயல்படுகின்றது. அத்துடன் நம் கடந்த கால அனுபவ நிகழ்வுகளையும் நிகழ்காலச் செயல்பாடுகளையும் பதிவு செய்து கொண்டு நினைவுகளாக வெளிப்படுத்துவது மூளையே யாகும். தாம் வெளிப்படுத்தும்

மூளையின் மேற்தோற்றம்

இன்ப, துன்ப உணர்ச்சிகள் அனைத்துக்கும் தோற்றுவாயாக அமைந்திருப்பது நம் மூளையேயாகும். சராசரி மனிதனுக்கு

மூளையின் பின் பகுதி

மூளையின் எடை சுமார் 1,500 கிராம். இம்மூளை கெட்டியான மண்டையோட்டினுள் சவ்வு உறைகளால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படா வண்ணம், அதிர்வைத் தவிர்க்கும் வகையில் சவ்வு உறைகளுக்கும் மூளைக்குமிடையே ஒருவகை திரவம் உள்ளது.

மூளைப் பகுதிகளின் பணிகள்

மூளையை மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை, பெரு மூளை, சிறு மூளை, முகுளம் என்பனவாகும்.

பெருமூளை இரு மூளைகளையும் விட அளவிலும் செயல்பாட்டிலும் பெரிதாகவும் முதன்மையுடையதாகவும் இருப்பதால் "பெருமூளை" எனப் பெயர் பெற்றது. மனிதனின் சிந்தனையாற்றலுக்கும் கற்பனைத் திறனுக்கும் நினைவாற்றலுக்கும் பெருமூளையே பெருங்காரனமாகும். இதன் நடுவில் பிளவு உள்ளதுடன் நெருக்கமான மடிப்புகளையுமுடையதாகும். மனிதனின் அறிவாற்றலுக்கு இம்மடிப்புகளே காரணம். பிற உயிரினங்களின் மூளைகளில் இத்தகைய மடிப்புகள் இல்லை.

பெருமூளையில் உள்ள மடிப்புகளின் மூலம் இது பல பகுதிகளாக அமைந்து உடலை இயக்கி வருகிறது. ஒவ்வொரு பகுதியும் உடலின் ஒவ்வொரு உறுப்பை இயக்கி வருகிறது. உடலின் வலப்பகுதியில் அமைந்துள்ள உறுப்புக்களை பெருமூளையின் இடப்பகுதியும் உடலின் இடப்பக்கத்தில் உள்ள உறுப்புகளை பெருமூளையின் வலப்பகுதியும் கட்டுப்படுத்தி இயக்குகின்றன.

பெருமூளையின் வெளிப்பகுதி புறணி என்று அழைக்கப்படும். இதன் நிறம் சாம்பல் நிறமாகும். இதில் 90 இலட்சம் உயிரணுக்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். பெரு மூளையின் வெளிப்புறம் சாம்பல் நிற அணுக்களால் ஆகியதால் சாம்பல் நிறத்தைப் பெற்றுள்ளது. இவ்வணுக்களே மனிதனின் செயல்களைக் கட்டுப்படுத்துவதுடன் அவன் சிந்தனை ஆற்றலையும் வளர்க்கிறது. ஒவ்வொரு அணுவிலும் நரம்பிழைகள் பல பிணைந்துள்ளன. இந்த நரம்பிழைகளே மூளைக்குச் செய்தி கொண்டு வருவதுடன் உத்திரவுகளையும் பெற்று உறுப்புகளுக்கு அறிவிக்கின்றன.

மின்னணு உருப்பெருக்காடி காட்டும் முளைத்தண்டு நரம்பணு

பெருமூளைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவமுடையது சிறு மூளையாகும். இது பின் மூளை என்றும் அழைக்கப்படுவதுண்டு. உடல் தசைகளைக் கட்டுப்படுத்தி இயங்கச் செய்யும் ஆற்றலையுடையது. சிறுமூளையிலுள்ள நரம்பு நார்கள் தண்டுவடத்தின் மூலம் உடலின் அனைத்துப் பாகங்களையும் இணைக்கின்றன. மனிதர்கள் நடக்கும் போதோ குனிந்து உட்காரும்போதோ சாய்ந்து விடாமல் சம நிலையில் இருக்கச் செய்வது சிறு மூளையேயாகும். சிறுமூளை ஏதாவது ஒருசில பாதிப்புக்கு ஆளானாலும் மனித உடல் சமநிலை இழந்து, நிமிர்ந்து இயங்காது. கண்ணின் பார்வை நரம்புகளும் காதின் கேட்பு நரம்புகளும் சிறுமூளையோடு இணைக்கப்பட்டுள்ளன.

வலது. இடதுபாதி மூளையின் பல்வேறு செயல்கள்

மூளையின் மற்றொரு முக்கியப் பகுதி முகுளம் ஆகும். இஃது மூளையின் அடிப்பகுதியில் குமிழி வடிவில் அமைந்துள்ளது. முதுகெலும்போடு இணைந்துள்ள தண்டுவடத்தை மூளையோடு இணைப்பது முகுளமேயாகும். முகுளத்தின் முக்கிய பணி மூச்சு, இரத்தவோட்ட, சீரண உறுப்புகளை சீராக இயங்கச் செய்வதாகும். இதற்காக இதயம், துரையீரல், இரைப்பை, குடல் போன்ற உறுப்புகளைக் கட்டுப்படுத்திச் செம்மையாக இயக்குகிறது. உடலின் வெப்ப நிலையைச் சீராக இருக்கச் செய்வதும் முகுளமே யாகும்.

மூளைக்குச் செய்தியனுப்பும் தண்டுவடம், தானாக தசைகளுக்கு உத்திரவு பிறப்பிப்பதும் உண்டு. நாம் சில சமயம் நம்மையும் அறியாமல் எறும்பு கடித்தால் உதறுகிறோமல்லவா, இத்தகைய அனிச்சைச் செயல் தண்டுவட ஆணையின்படி நடப்பதாகும்.