உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்/இயற்கை

விக்கிமூலம் இலிருந்து

இரகசியம் - 9

இயற்கை

ருவரைப் பார்த்து அவர் இயற்கையாக இருக்கிறார். இயற்கையாகவே இருக்கிறார் என்பார்கள். இன்னொருவனைப் பார்த்து அவர் இயற்கையாகவே மாறிவிட்டார். இவனுக்கும் இயற்கைக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லையென்று மக்கள் இயற்கையாகப் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். இந்த இயற்கை என்ற வார்த்தை எல்லா மனிதர்களின் வாயிலும் சரளமாக வந்து போகிறது.

அந்த வார்த்தை இதயத்தில் சுரந்து, எண்ணமாக மலர்ந்து, வார்த்தை வடிவெடுத்து வருகிறதா? இல்லை பேசுபவர்கள் தங்களை அறியாமல் பேச்சு வாக்கில் இந்த வார்த்தையை உச்சரிக்கிறார்களா என்றால் இந்தச் சந்தேகத்திற்குப் பதில் கிடையாது.

இயற்கை என்பது அணுக்களாகக் கலந்து கிடப்பவை. செல்களாக நீந்திக் களிப்பவை. தசைகளாக விசைபெற்று ஒளிர்பவை. எலும்புகளாக வலிமையோடு நிற்பவை. நரம்புகளில் மின்னலோட்டமாகத் தொடுப்பவை. உயிர் மூச்சாக உலா வந்து கொண்டு இருப்பவை. என்பதால்தான் இயற்கை உடம்பிலே இரகசியமாக இரண்டறக் கலந்திருக்கிறது. அதிசயமாக யாரும் அறியாமல் உள்ளே ஒருங்கிணைந்து சிரிக்கிறது.

இயற்கை என்றால் என்ன. மனிதன் என்பவன் யார்? எண்ணிலா ஜீவராசிகள் எத்தனையோ கோடியிருக்கின்ற இயற்கையில், இயற்கைக்கும் மனிதனுக்குமென்ன அவ்வளவு நெருக்கமான தொடர்பு. இயற்கை ஏன் மனிதனை தொட்டுக் கொண்டே இருக்கிறது. மனிதனும் ஏன் இயற்கையோடு ஒட்டிக் கொண்டே இருக்கிறான்.

இப்படிப்பட்ட இடக்கு முடக்கான கேள்விகளுக்கு ஒரே பதில், இயற்கையாக இருந்து மனிதர்களுக்கு எல்லா வகையிலும், எல்லா நிலையிலும், எல்லா முறையிலும், ஏற்ற உதவிகளை உற்ற நேரத்தில் அது உதவிக் கொண்டே வருகிறது என்பதுதான் உண்மை.

இயற்கை என்றால் என்னவென்று பொருள் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டால், இயற்கையை இன்னும் நாம் அருகி, உருகி, ரசிக்க முடியும்.

இயற்கை என்றால், குணம், சுபாவம், தகுதி, பாக்கியம், வழக்கம், இலக்கணம், கொள்கை என்று பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்களை இங்கே சற்று விரிவாகக் காண்போம்.

இயற்கைக்கு என்ன குணம்? இயற்கையானது தன் கூடாரத்திலே குடியிருந்து வாழ முயற்சிக்கிற மனிதர் களைக் காத்து ரட்சிக்கின்ற அருங்குணம் கொண்டது.

என் நிலையில், என்னருளில் ஜீவித்துக் கொண்டிருக்கும் எல்லா மனிதர்களும் என் மக்களே, யாருக்கென்றும் தனியாக ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. எல்லோரையும் சமமாக பாவிக்கின்ற தாய்க்குணம் கொண்டது அது.

அதன் காக்கும் கருணையானது கபடமில்லாதது. கலப்பற்றது. வஞ்சகம் கலவாதது. மதிமயக்கம் இல்லாதது. அதுதான் இயற்கையின் சுபாவம்.

இயற்கைக்கென்று ஒரு வழக்கம் உண்டு. குறிப்பிட்ட நேரத்தில் வருவது. குறிப்பிட்ட அளவு கொடுப்பது. குறிப்பிட்ட பொழுதில் மறைவது. இயற்கையின் திறமைக்குரிய பொருள்களான காற்றுக்குப் பருவக்காற்று என்று பெயர்.

பெய்யும் மழைக்குப் பருவமழை என்று பெயர். தாங்கும் பூமிக்குப் புண்ணிய பூமி என்று பெயர். பொழியும் வானத்திற்குத் தெய்வீக வானம் என்று பெயர். வெப்பம், குளிரை விளைவித்து நலம் சேர்க்கிற நெருப்புக்கும் ஒரு சிறப்புண்டு.

ஆக இயற்கையின் வழக்கமானது காலத்தே வருவது. கடமையைச் செய்வது. கைமாறு கருதாது உதவுவது. களைப்பாற்றி, இளைப்பாற்றிக் களிப்பூட்டுவது. தினம் ஒரு புதுமையை விளைவித்துக் கிளுகிளுப்பூட்டுவது.

இயற்கையின் இலக்கணமே தனிதான். இலக்கணம் என்பதற்கு அடையாளம். அழகு, ஒழுங்கு என்ற சிறப்புக்கள் உண்டு. இயற்கை என்பது இந்த அண்டத்தை உருவாக்கிய அரும் பெரும் சக்தியின் அடையாளமாக விளங்குவது.

இயற்கையின் அடையாளம் என்ன? அது அழகு. அழகு இயற்கையில் எங்கே இருக்கிறது. இயற்கையின் பசுமை இணையிலா வளமை. எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிற இளமை, எத்தனைதான் கறைப் படுத்தினாலும், குறை படுத்தினாலும், தன்னிலமையிலிருந்து தளராது காக்கின்ற தூய்மை, ஒழுங்காக அவரவர் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லாமல் செய்து காட்டுகின்ற சீர்மை.

நல்லதோ, கெட்டதோ, அவலமோ, சவலமோ, தாழ்மையோ, கீழ்மையோ எதைப் பற்றியும் கருதாது ஒழுக்கமாக நடத்துகிற நேர்மை. இதனால்தான் இயற்கையின் அடையாளம் மனித இதயங்களில் போய் ஒண்டி ஒளிந்து கொள்ளாமல், மண்டிமலர்ந்து கிடக்கிறது.

இனி இயற்கை அமைப்பிற்கும் மனித உடல் அமைப்பிற்கும் இருக்கின்ற ஒற்றுமைகளை இப்பொழுது நாம் அறிந்து கொள்ளப் போகிறோம். அப்பொழுதுதான் நமக்குத் தெரியும், இயற்கை ஏன் மனித எண்ணத்தின் சன்னலாக, மின்னலாக, அண்ணலாக மிளிர்கிறது என்று.

இயற்கையின் கூறுகளை பூதங்கள் என்பார்கள். பூதம் என்றால் இயற்கையின் ஐந்து கூறுகளையும் குறிக்கிறது. அது நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பதாகும். இவற்றையேன் பூதமென்றார்கள்? பயப்படுத்துகிற பேய்கட்கு அல்லவா பூதமென்று பெயர்.

இயற்கையின் உட்பொருள்களாகிய இந்த பஞ்ச பூதங்களும், நம்மை, பயப்படுத்துகின்றனவா, பலப் படுத்துகின்றனவா? இல்லை வயப்படுத்துகின்றனவா? பின் ஏன் அதைப் போய் பூதம் என்றனர். அதில் ஓர் பெரிய தத்துவமே அடங்கியிருக்கிறது.

பூதம் என்ற சொல்லுக்கு இறந்த காலம் என்று பெயர். நிகழ்கின்ற நிகழ்காலத்தில் நடந்து, முடிந்து, ஓய்ந்து, ஒழிந்து, ஒதுங்கிப்போன அந்தக் காலப் பொழுதைத்தான் இறந்த காலம் என்றனர்.

அப்படியென்றால், நிலம், நீர், காற்று, தீ, விசும்பு எல்லாம் ஓய்ந்து, ஒழிந்து போன பொருள்களா? இல்லையே.

அவை தோன்றிக் கோடிக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் இன்னும் இருக்கின்றனவே. இன்றும் இருக்கின்றன. நாளையும் இருக்கும். சிந்தாமல் சிதறாமல், குன்றாமல், குறையாமல், நிறையாமல், மறையாமல் நாளையும் இருக்கும்.

இதை, எண்ணும்போது, ரசிக்கும்போது அதிசயத் தையும், ஆராயும்போது ரகசியத்தையும், புதைத்து வைத்துக் கொண்டு நம்மிடையே இருப்பதால்தான் அவற்றைப் பூதம் என்றனர் நமது முன்னோர்கள். நாம் வாழ்கின்ற காலப் பொழுதை மூன்று வகையாகப் பிரித்துக் கூறினார்கள்.

இறந்த காலம், அதற்கு வைத்திருக்கும் பெயர் பூதம்.

நிகழ்காலம், அதற்கு வைத்திருக்கும் பெயர் வர்த்தமானம்.

எதிர்காலம், அதற்கு வைத்திருக்கும் பெயர் பவிடியம்.

இந்த மூன்று காலத்தையும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு அனைவருக்கும் அன்னையாக இருந்து அருள் பாலிக்கும் இயற்கையின் அமைப்பும், மானிட தேகத்தின் அமைப்பும் எப்படி ஒத்து இருக்கின்றன என்று காண்போம்.

இயற்கையின் அமைப்பு.

1. அடி பாகத்தில் நிலம்
2. நிலத்திற்கு மேற்பகுதி நீர்
3. நீர்ப்பகுதிக்கு மேலே தீ
4. தீப்பகுதிக்கு மேலே காற்று

5. காற்றுப் பரப்புக்கு மேலே வானம்.

இந்த ஐந்தும் அமைப்பு ரீதியாக அடுக்காக நம் பூதக் கண்களுக்கு தெரிவது போல அடுக்கப்பட்டிருந்தாலும், இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கும் பொழுது ஞானக் கண்களுக்கு வியப்பையும், மலைப்பையும் தருகிறது.

இயற்கையின் கூறுகள், அதாவது பஞ்ச பூதங்கள் என்னென்ன செய்கின்றன. அவற்றின் சுபாவம் என்ன என்பதைப் பாருங்கள். 1. வானத்தில் எப்போதும் ஒன்று நடக்கிறது. அந்த ஒன்று ஓசை.

2. காற்று உண்டாக்கும் இரண்டு ஓசையும், ஊறும் (உணர்வு)

3. தீயில் ஏற்படுவது மூன்று, ஓசை, ஊறு, ஒளி.

4. நீருக்குள் கிடைப்பது ஓசை, ஊறு, ஒளி, சுவை.

5. நிலத்தில் நிரவிக் கிடப்பது ஐந்து, ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்.

வானத்திலிருந்து பூமிக்கு வருகிறபோது இயற்கை எப்படியெல்லாம் மாறி மருவி வருகிறது பார்த்தீர்களா? இப்பொழுது மனித உடலும் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.

உலகத்தை தாங்குகின்ற நிலத்தின் தாங்கு சக்தியைப் போல கால் பாதத்திலிருந்து இடுப்புவரை உள்ள பகுதி. இது உடலைத் தாங்கும் சக்தியாக அமைந்து இருக்கிறது. இதற்குத் திருவடி மண் தத்துவம் என்று பெயர்.

2. நிலத்துக்கு மேலே நீர்ப்பரப்பு அமைந்திருப்பது போலே, தாங்குகிற கால்களுக்கு மேலே வயிற்றுப்பகுதி. அதிலேதான் நீர் அமைப்பு இருக்கிறது. நாம் விரும்பி அனுப்புகிற உணவை எல்லாம் சிக்கல் இல்லாமல் செரிமானம் செய்து விடுகின்ற நீர் ஊற்றுக்கள், அமிலத்தாரைகள், ஜீரண நீர்கள் மற்றும் எல்லாவிதமான நீரோட்டங்களும் இருக்கின்ற பகுதிதான் வயிற்றுப்பகுதி. அது நீர்ப்பரப்புப் போலத் தன் பணியைத் தொடர்கிறது.

3. இயற்கையில் நீர்ப்பரப்பிற்கு மேலே நிலவுகிற பகுதி வெப்பம், சூடாகிய தீப்பகுதி போலவே, வயிற்றுக்கு மேலே உள்ள நெஞ்சுப் பகுதியானது தீப்பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த நெஞ்சுப் பகுதிக்குள்ளேதான் கதகதப்பான உணர்வுகள், நெருப்பாகச் சலனங்கள். திக்கெட்டும் தாக்கித் தகர்க்கும் சபலங்கள். உறுப்புக்களைக் கருகி, உருகவைக்கும் கவலைகள்.

இப்படி, அனலைப் பரப்பும் அடுப்புத்தளமாக இயங்கும் பகுதியைத்தான் நெஞ்சுப் பகுதியென்று நாம் அழைக்கிறோம். அந்த தீப்பகுதியில் எப்போதாவதுதான் குளிர்ச்சியும், மகிழ்ச்சியும் இருக்கும். எப்போதும், வெப்பமும், வேதனையும், தீபமும்தான் இருக்கிறது.

4. நிலம், நிலத்திற்கு மேலே நீர், நீருக்கு மேலே நெருப்பு, இப்படி அமைக்கப்பட்ட அமைப்பின் நான்காவது பொருளாகக் காற்று என்ற பகுதி இருக்கிறது. கார் என்ற சொல்தான் காற்றாக மாற்றி வந்திருக்கிறது.

இந்தக் காற்றுதான் ககனம் முழுவதையும் காத்து வருவதால் இது ஆக்குகிற பொழுதுக்குக் காலம் என்று பெயர். இந்தக் காலம் என்ற சொல்லில் இருந்துதான் 'காலன்’ அதாவது எமன் என்ற சொல் வந்திருக்கிறது.

காலம் பார்த்து வந்து உயிர்களின் காற்றைப் பிடித்து மூச்சை நிறுத்துவதால் அவனுக்குக் காலன் என்று பெயர் வந்தது. எங்கும் இருக்கிற காற்று, எப்பொழுதும் திரிகிற காற்று, கண்ணுக்குத் தெரியாத காற்று, உலகில் வாழ உயிர் தருகிற காற்று, அதனால்தான் காற்றை கடவுள் என்றே கூறுகின்றார்கள்.

வாயு பகவான் என்று வர்ணிக்கப்பட்டாலும் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு வலிமை உள்ள பூதம்தான் காற்றாகும். இந்தக் காற்றுப் பகுதியானது, நெஞ்சுக்கு மேலே கண்களுக்குக் கீழே உள்ள இடைப்பட்ட பகுதியாகும். வாயும், மூக்கும், தொண்டையும், காற்றை வாங்குகிற வாயில்களாகவே விளங்குகின்றன.

5. காற்றுப் பகுதிக்கு மேலே இருக்கின்ற அகன்ற பிரதேசம்தான் வானம். இந்த வானத்திலே எப்பொழுதும் ஒசைகள் ஓங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் என்பார்கள். அங்கே வழி - காற்றுமண்டலத்தின் குமுறல்கள். அங்கே உலவுகிற மேகக் கூட்டங்களின் உரசல்கள். அதிலே உண்டாகின்ற மின்னல் பூச்சுகள்.

அங்கே வளைந்து வண்ணங்களைக் காட்டுகின்ற வில் போன்ற அமைப்புள்ள வானவில். அதற்கும் மேலே இடி முழக்கம். நட்சத்திர உரசல்கள் போன்ற ஒசைகள் இப்படித் தான் வானம் இருக்கிறதென்றால், நம் கழுத்துக்கு மேலே உள்ள தலைப்பகுதியும் மேலே சொன்ன வானப் பகுதியைப் போல்தான் அமைந்திருக்கிறது.

வானத்திலே ஏற்படுகின்ற இடி முழக்கம். மின்னல் கீற்று போலே மனிதத் தலைக்குள்ளே எத்தனை மரண ஒலங்கள். தயக்கங்கள், கூக்குரல்கள். பேய் பிடித்தாற்போன்ற பிதற்றல்கள், பேரிடியாக இருக்கின்ற விஷயங்கள்.

இப்படியாகத் தலைப்பாகம், தலை போகிற வேகத்தில் தத்தளித்துக் கொண்டு இருப்பதை நீங்கள் பார்க்கும்போது, இதுதான் இயற்கையின் அமைப்பும், மனிதனின் தேக அமைப்பும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வானத்திலே எத்தனை சப்தம் இருந்தாலும் அதை அமைதியான இடமென்று அறிஞர்கள் புகழ்கிறார்கள். ஆனால் மனிதரின் தலை வானத்திலே குலை, குலையாய் ஞானம் பூத்துக் குலுங்கினாலும், நடப்பதும் தொடுப்பதும் ஈனமாக அல்லவா இருக்கிறது.

இயற்கை ஏன் இப்படிப் பசுமையாகவும், இளமையாகவும், வளமையாகவும் காட்சி தருகின்றது என்றால் அதனுடைய இயக்கந்தான் அதன் மறைந்து கிடக்கும் ரகசியம். இயற்கை உலகத்திற்கு இன்னொரு பெயர் உண்டு. அதற்குப் பெயர் அண்டசராசரம்.

அண்டம் என்பது இயற்கையிலுள்ள அத்தனை பொருளும் அண்டிக் கிடப்பதால்தான். அந்த அண்டம், பிண்டமாகி பிரிந்தபோதுதான் அதற்குக் கண்டம் என்று பெயர் வைத்தார்கள். அந்தக் கண்டம் முழுவதும் இயற்கைதான் ஆட்சி புரிகிறது. இயற்கையின் ஆட்சியைத் தான் சராசரம் என்றார்கள்.

சரம் என்றால் இயக்கம் (Movement) அசைவு எப்பொழுதும் அசைந்து கொண்டு இருப்பதற்குப் பெயர்தான் சராசரம். சதா அசைவோடும், ஆட்டத் தோடும், ஒட்டத்தோடும் இருப்பது போலவே, மனிதனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனைச் சராசரி மனிதன் என்றார்கள்.

சராசரி மனிதன் என்றால் (Average) ஆவரேஜ் என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ப்படுத்தி சராசரி என்று சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு அபத்தமான மொழிபெயர்ப்பு அல்லவா.

மனிதன் இயற்கையின் அழகில் மயங்க வேண்டும் என்பது அல்ல. இயற்கையைப் போல் இயங்க வேண்டும் என்பதுதான் முக்கியமான சாராம்சம். இயற்கை என்பது இயல்+கை என்று பிரிகிறது.

'இயல்' என்றால் ஒழுங்கு, ஒடுக்கம், 'உலக ஒழுக்கம்' என்றெல்லாம் பொருள் உண்டு 'கை' என்றால், ஒழுக்கம் என்ற பொருளிலிருந்தாலும் வலிமையாற்றுகின்ற மற்ற பொருள்களும் உண்டு.

ஆற்றல் என்றால் வெற்றி என்று அர்த்தம். ஆக இயற்கை என்றால், ஒழுக்கத்தின் வலிமை, ஒழுக்கத்தின் வெற்றி, ஒழுக்கத்தின் ஒடுக்கம் என்றெல்லாம் நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

இயற்கை என்றால் ஒழுக்கத்தின் வெற்றி. அதாவது இயற்கை நடத்துகின்ற செய்கையின் வெற்றி, செய்கைக்குக் கிடைக்கின்ற வெற்றி, செயலுக்குக் கிடைக்கின்ற மேன்மை நிலை.

ஒருவன் இயற்கையைப் பின்பற்றுகிறான் என்றால் அவன் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறான் என்று அர்த்தம். அவனை ஒழுக்க சீலன் என்று சொல்லலாம். உத்தமபாலன் என்றும் அழைக்கலாம்.

இயற்கைக்கு எதிர்ப்பதம் என்று செயற்கை என்ற சொல்லைக் கூறுவார்கள். செயற்கை என்பது இயற்கையை எதிர்த்துச் செயல்படுகிற எதிர்ப்பதமல்ல. அது இயற்கையோடு இணைந்த, இயைந்த சொல். இயற்கையோடு பின்னப்பட்டிருக்கும் ஒரு கட்டளைச் சொல்.

செயற்கை என்பது செயலின் ஒழுக்கம். அதுவே செயலின் வெற்றியாக அமைகிறது. ஒழுக்கம் என்பது ஒழுகுதல் என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது.

ஒரு காரியத்தைத் தொடர்ந்து விடாமல் செய்து கொண்டே வருவதைத்தான் ஒழுகுதல் என்பார்கள். இந்த ஒழுகுதல் என்பதுதான் ஒழுக்கு என்பதாக மாறி, அம்: என்ற அழகான சொல்லைச் சேர்த்துக் கொண்டு ஒழுக்கம் ஆயிற்று.

அப்படி என்றால் ஒழுக்கம் என்பதற்கு உடனே வருகிற நினைவுதான் என்ன? உடலுக்கு நன்மையும், திண்மையும், சுகமும், செளக்கியமும் கொடுக்கின்ற செயல்களுக்குப் பெயர் ஒழுக்கம் என்பது ஆகும்.

உடலைக் கெடுக்கின்ற, சுகத்தை அழிக்கின்ற செயல்களுக்கெல்லாம் 'இழுக்கம்' என்று பெயர். அதனால்தான் வள்ளுவரும், ஒழுக்கம் விழுப்பமான வாழ்வைத் தருவதால் அது உயிரினும் ஒம்பப்படும் என்றார். ஆன்மாவுக்கு அதிகமான ஆற்றலையும், சக்தியும் கொடுப்பதுதான் இந்த ஒழுக்கம் என்பதால், இயற்கை மனிதர்களை இயற்கையிலேயே ஆட்டிப் படைப்பதால், வள்ளுவர் இயற்கையின் மேன்மையைப் பாடுகிற பொழுது, கற்கக்கசடற என்றார்.

கற்கை நன்றே, கற்கை நன்றே என்று அவ்வைப் பிராட்டி பாடினாள்.

கண்டதைக் கேட்கப் பண்டிதன் ஆவாய்' என்பது பழமொழி.

'கற்கக் கசடற' என்றால் எதைக் கற்பது, எப்படிக் கசடறக் கற்பது என்ற கேள்வி எழுகிறது. ‘பிச்சைபுகினும் கற்கை நன்றே' என்று பாடினார் அவ்வைப் பிராட்டி. எதைக் கற்றால் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அது என்ன கற்கை நன்றே.

கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான் என்றால் பண்டிதனாக எதைக் கண்டு கற்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில் இந்தப் பாடல்களில் உள்ள 'க' என்ற சொல் நமக்குக் கொடுக்கிறது.

'க' என்றால் நீர், நெருப்பு, காற்று, உடல், வியாதி, காமன், எமன் - என்றெல்லாம் பொருள்கள் உண்டு, கசடற என்றால் இயற்கையிலே புழுதியிலுள்ள தூசி, தூசி சேர்ந்துவிட்டால் அது அழுக்கு.

அழுக்கு அதிகமாகி விட்டால் அது பிசுக்கு, அந்தப் பிசுக்கின் பிழம்புதான் கசடு. அதாவது மண்டி. காற்றில் மாசு சேரும்போது கசடாகிறது (Pollution) நீரில் மாசு சேரும்போது மண்டியாகிறது. நெருப்பைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. உடலில் ஏறுபடுகின்ற மும்மலங்களை, அழுக்குகளைப் போக்காத வாழ்க்கை, வருகின்ற வியாதிகளைப் போக்கத் தெரியாமலும், நீக்கத் தெரியாமலும் வருந்தி வாழ்கின்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை. மனிதர்களைச் சுற்றி அவர்களது மலங்களை பற்றிப் பேசிக் கொண்டு சுற்றிச் சுற்றி வருகின்றார் காமன் - மன்மதன்.

எழுச்சியும், உணர்ச்சியும் ஏற்படுத்துகிற அன்றாடச் செயல்களால் மக்கள் தினம், தினம் அதிர்ந்து போகிறார்கள், உடலால், மனதால் முதிர்ந்து போகிறார்கள். அந்த வேதனை நரகத்திலிருந்து வெளிவர முடியாமல் உதிர்ந்து போகிறார்கள்.

மன எழுச்சியால் கிளர்ந்தும், மிளிர்ந்தும், ஒளிர்ந்தும் உலகை ஆளவேண்டிய மனிதர்கள், ஒப்பற்ற வாழ்வு வாழ வேண்டிய மனிதர்கள், இப்படி எல்லாச் சுகங்களையும் இழந்து தவிப்பது இயற்கையை சரிவரக் கற்றுக் கொள்ளாததால்தான்.

இயற்கையின் கூறுகளை அணு ஆற்றலின் வீறுகளைக் கண்டு, அதைக் கற்கும்போதுதான் ஒருவன் பண்டிதன் ஆகிறான்.

ஒருவன் இயற்கையின் ஒழுக்கத்தைத்தானே தனக்குள் ஐக்கியப்பட்டுப் பிறருக்காக வாழ்ந்து தனக்காக வாழாதபோது அவன் பெரும் செல்வந்தனாகிறான். பிச்சை எடுக்க வேண்டிய நிலை இல்லை.

இயற்கையாகவே உண்டாகிற கேடுகள், எதிர்மறைச் செயல்கள் எல்லாவற்றையும் உணர்ந்து இந்த அழுக்குகளை நீக்க முற்படுகிறவன், முயற்சிக்கிறவன் முழு மனிதனாக வாழ்கிறான்.

இயற்கையோடு வாழ முதல் தேவை உணர்வு (Sense) உணர்ந்து, உணர்ந்து தெளிந்து கொள்கிற மொத்த உணர்வுதான் தெளிவு. அந்தத் தெளிவின் திரட்சிதான் அறிவு. அறிவின் விரிவுதான் ஞானம்.

இயற்கையைப் பற்றிய ஞானம் இல்லாமல் இருப்பது அஞ்ஞானம். அவனை அஞ்ஞானி என்பார்கள். இயற்கையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்தவனுக்கு இருப்பது எஞ்ஞானம். அவனை எஞ்ஞானி என்பார்கள்.

இயற்கையைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டவனுக்கு இருப்பது விஞ்ஞானம். அவனை விஞ்ஞானி என்பார்கள்.

இவற்றிற்கும் மேலாக இருப்பது மெய்ஞானம். தன்னைப் பற்றிய அறிவும், தன்னைத்தான் தெளிவாக்கிக் கொண்டு வாழ்பவனைத்தான் மெய் ஞானி என்பார்கள்.

எனக்குள் அன்பானவர்களே, நீங்கள் நன்றாக மெய் ஞானத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக, எனக்குத் தெரிந்த ஒன்பது இரகசியங்களை உங்களுக்குக் கூறி விட்டேன்.

ஒருமுறை நீங்கள் படிக்கும்போது மிகச் சாதாரணமாகத் தோன்றும். மீண்டும், மீண்டும் படிக்கின்ற பொழுது உங்களுக்குள் ஏற்படுகிற உள்ளத்துடிப்பும், உணர்வின் பிடிப்பும் உங்களை மெய்ஞானத்துக்கு அழைத்துச் செல்லும்.

நீங்கள் உடலைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்கப் பல உண்மைகளைச் சந்திக்க நேரிடும். அந்த உண்மைகள் உங்களை மன நோயிலிருந்து வெளியேற்றும். உடல் நோயிலிருந்து காப்பாற்றும். உலக வாழ்க்கையை அனுபவிக்க உற்சாகம் காட்டும்.

மெல்லிசையாகத் தோன்றி, துல்லியமாக வெளிப் படுகிற வீணையின் நல்லிசை போல உங்களுக்கு எழுச்சியான வழியைக் காட்டும். வாழ்வை மீட்டுத்தரும். நான் சொல்லிய ஒன்பது இரகசியங்கள் விதியாக உங்களைக் காப்பாற்றுமென்று உறுதியாகக் கொண்டு இந்த நூலை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

தெளிந்து, தேர்ந்து, வாழ்ந்து, வளம் பெறுக என்று வாழ்த்துகிறேன்.


☐☐☐

இரகசியமும் - மகத்துவமும்

டம்பைக் காப்பாற்றுகிற இரகசியங்கள் என்னவென்று இதுவரை நாம் மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு இருக்கிறோம். நாம் அன்றாடம் உரையாடி அகமகிழ்கின்ற சொற்களாக அவை இருந்தாலும், அவற்றை ஆழமாகச் சிந்திக்கின்ற பொழுது, நமக்குள்ளே அளப்பறிய ஆற்றலை ஏற்படுத்துகின்றன என்பதுதான் உண்மையாகும்.

இரகசிய வார்த்தைகள் எல்லாம் வலிமையாக இல்லாமல், வன்மையாகத் தோன்றாமல், மெல்லிய இசை நாதமாக மெருகேறி வந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

வார்த்தைதான் வாழ்க்கை என்கிறோம். நாம் பேசுகிற வார்த்தைதான் வாழ்க்கையாக மாறுகிறது. ஒருவன் பேசுகிற வார்த்தையை வைத்துக் கொண்டுதான் அவன் நல்லவனா? அல்லவனா? வல்லவனா? வல்லுநனா என்று கணக்கிட முடிகிறது.

பிறந்ததற்காகத்தான் எல்லோரும் வாழ்கிறோம் என்கிறார்கள். ஆனால் நாம் அப்படியல்ல. “நான் ஏன் பிறந்தேன்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு நம்பிக்கை இல்லை.

வாழ்க்கையை வாழுகின்ற சக்தி, வாழ்க்கையை ஆளுகின்ற சக்தி, வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து மீளுகின்ற சக்தி, வாழ்க்கை வாழ்ந்து காட்டுகின்ற வளமான சக்தி, நம் ஒவ்வொருவரிடையேயும் நிறையவே இருக்கிறது.

அந்த நினைவு ஒளிய நெஞ்சம் முழுவதும் நிரப்பி, நெடிய இந்த வாழ்க்கையை, நிம்மதியாக வாழ வைக்க உதவுவதற்காகவே இந்தக் குறிப்பை இங்கே எழுதுகிறோம்.

எந்த நேரத்திலும் என்ன வாழ்க்கை என்று சலித்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையில் எப்பொழுதும், ஒருவிதப் பிடிப்பும், துடிப்பும் இருக்க வேண்டுமே தவிர வெறுப்பும், எரிச்சலும் ஏற்படக் கூடாது.

எப்படி வாழ்ந்தால் நம் வாழ்வு இதமாக இருக்கும், பதமாகத்துலங்கும் என்று நீங்கள் வாழ வேண்டுமே தவிர, மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காகப் பொய் வாழ்க்கையோ, போலி வாழ்க்கையோ வாழக் கூடாது. நம் வாழ்க்கைக்கென்று ஒரு எல்லை உண்டு.

அந்த எல்லையின் அளவை நீங்களே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அப்படி நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் இலட்சிய வாழ்க்கை என்பார்கள். இந்த இதயங்கவர்ந்த இலட்சிய வாழ்க்கையை ஏதாவது காரணம் காட்டிக் கழட்டிவிட்டு விடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொடுக்கிற சிற்பியாக நீங்கள்தான் இருக்க வேண்டுமே தவிர வாடகைக்கு ஆள் பிடிப்பது போல் யாரையும், எதையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

உங்கள் மனதுக்குள்ளே நான் ஒரு மனிதன்தான் என்ற நினைவை அகற்றாமல் உறுதிப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

மனிதன் என்பவன் மங்கலகரமானவன். மகிழ்ச்சி கரமாக வாழ்பவன். மனப்பூர்வமான அனுபவித்து, திருப்தியடையக்கூடியவன். மற்றவர்கள் மனம் விரும்புவது போலக் காரியங்களைச் செய்பவன். இந்த எண்ணமும், செயலும், ஒரு மனிதனிடம் இருக்கின்ற வரையில் அவன் நல்ல மனிதனாகவே இருப்பான்.

மனம் போல் வாழ்வு என்கிறார்களே! மனம் போல் வாழ்வு என்பது, மனம் போலச் சுவாசித்தல் என்ற அர்த்தம். வாங்குகிற மூச்சிலே, வக்கிரமோ நெருடல் களோ இல்லாமல் இருந்தால் அவர்கள் விடுகிற சுவாசமும் இயல்பாக ஒழுங்காக இருக்கும்.

சுவாசம் சீராக நடைபெற்றுக் கொண்டிருகிறவரை, இதயத்தின் இரத்த இறைப்பு பெரிதாகவே நடக்கும். நாம் எண்ணிப்பார்க்கின்ற கன நேரத்திற்குள்ளாக இரத்த ஓட்டம் சுற்றிச் சுற்றி வந்து செல்கள் சேகரித்து வைத்திருக்கும் அசுத்தங்களை அகற்றிவிட்டு வருகின்றன. மனதிலே நினைவுகள் மாறுபட்ட, பங்கப்பட்டுப் போகிறபோது, சுவாசமும் மாறுபடுவதால், இரத்த ஒட்டமும் மாறுபட்டு அதனாலே சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதயத்தின் தடுமாற்றம், செல்களுக்குக் கிடைக்காத சுத்த இரத்தம். அசுத்தங்களால் அழிந்து போகிற செல்கள். இவைகள் எல்லாம் உடம்பை வக்கிரமாக்கி விடுகின்றன. அதனால்தான் மனம் போல மகிழ்ச்சியான வாழ்வு என்றார்கள்.

சுவாசம் சீராக இருக்கின்ற பொழுது அவன் உடல் அம்சமாக விளங்குகிறது. அதனால் அவனது முகம் பொலிவோடும், தெளிவோடும் பிரகாசிக்கிறது. அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே மற்றவர்கள் அவனைப் பணிய வேண்டும், வணங்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அவன் உடல் அளவோடும், திட்டமோடுட அழகாக இருக்கும். அதன் காரணமாக அவன் அணிகின்ற ஆடைகளே அவனுக்கு மேலும் அழகு சேர்க்கும். இப்படி உடம்பை வைத்திருப்பதினால்தான் "ஆள் பாதி, ஆடை பாதி' என்றார்கள்.

ஒரு சில ஆண்களுக்கு, பெண்களுக்கு விலை உயர்ந்த அலங்காரமான ஆடைகளை அணிவித்தாலும், அவர்கள் உடம்போடு அந்த ஆடை ஒட்டுவதில்லை. ஆனால், திட்டமாகத் தேகத்தை வைத்திருக்கின்ற ஒரு ஆணோ, பெண்னோ சர்வ சாதாரணமான ஆடைகளை அணிந்திருந்தால் கூடக் காண்பதற்கு கவர்ச்சியாகத் தெரியும்.

இவையெல்லாம் மனம்போல வாழ்கின்ற வாழ்க்கையினால் கிடைக்கின்ற மணியான பயன்கள் ஆகும்.

உலகத்துச் சுகத்தை எல்லாம், உணவு, உடை, உறையுள் என்று மூன்றாகப் பிரித்துக்காட்டி விடுவார்கள். இந்த மூன்றையும் அனுபவிக்க உடல் அவசியம். அல்லவா?

உணவை இரசித்துச் சாப்பிட உடல் நலம் அவசியமாகும். வயித்தியச் செலவும், பத்தியச் சோறும் ஒருவனைப் பாடாய்ப் படுத்தி விடும். அவன் சேர்த்து வைக்கின்ற சொத்துக்கூட அவனுக்கு எதிரியாக இருக்குமே அல்லது உறவாய் இருந்து உதவாது.

உண்ணுகிற உணவு, உணவுப் பண்டத்தை ஆழ்ந்து, ரசித்து, அனுபவித்துச் சாப்பிட வேண்டும் என்பதற்காகத் தான் உணவு என்றார்கள். வாயை விரித்துக் கொண்டு சாப்பிடும் சாப்பாடு உடம்புக்குச் சங்கடத்தையும், சகலவிதமான துன்பங்களையுந்தான் ஏற்படுத்தி விடுமே தவிர, நன்றாக வாழ்வை உருவாக்காது. ஆகவே சாப்பாட்டுப் பிரியர்களாக வாழாமல், உணவு ரசிகர்களாக இருந்து உண்டு மகிழுங்கள்.

எப்பொழுதும் உடம்பின் மேலே ஒரு கண் வைத்து இருங்கள். இயற்கைக்கேற்ப எப்பொழுதும் மாறிக் கொண்டேயிருக்கும் உடம்பின் மாற்றத்தை அறிந்து மாற்றத்துக்கேற்றவாறு நடந்து கொள்ளுங்கள். உடம்பை வீணாக்கிவிட்டு, உலக வாழ்வை இரசிக்கலாம் என்று எண்ணாதீர்கள். அது தவறான அணுகுமுறையாகும்.

இயற்கையாக வாழுங்கள். இயற்கையோடு வாழுங்கள். இயற்கை என்பது இயல்பான செயல்களின் இலக்கணங்களாகும்.

தேக நலத்திற்கு துணைபோகும் காரியங்கள்தான் இயற்கையின் இலட்சணமாகும். இயற்கையைப்போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இறைவனின் எழுதாத கட்டளையாகும்.

இந்த அரிய கருத்துக்களை எல்லாம் மனதிலே தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேக நலத்திற்கும், பலத்திற்கும் உதவுகிற எல்லாக் காரியங்களுமே நல்லொழுக்கங்களாகும். தேகத்தின் இனிய சுபாவத்தைக் கெடுக்கின்ற எந்தக் காரியமாக இருந்தாலும் அவை கெட்ட பழக்கங்களாகும்.

உணவு அவசியந்தான். அதை அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நலம். அதிகமாகச் சாப்பிட்டால் உடம்புக்கு விஷம். அதுபோலத்தான் உறக்கமும், அயர்ந்து தூங்குவது ஒருவருக்குக் கை வந்த கலை. அந்தக் கலை கலைந்து போனால் அவர்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாக நேரிடும்.

கருமிக்குக் கிடைத்த காசை அவன் பத்திரமாகப் பாதுகாப்பதுபோல நீங்கள் உடம்பைப் பாதுகாக்க வேண்டும். நீண்டகாலம் குழந்தையே இல்லாமல் பின்பு குழந்தையைப் பெற்ற தம்பதிகள் தங்கள் குழந்தையைக் கொஞ்சுவதுபோல உங்கள் உடம்பை கொஞ்சுங்கள். தெய்வத்தை மதிப்பதுபோல தேகத்தை மதித்துப் போற்றுங்கள். இவைகளே உங்களை வளமாக வாழவைக்கும். நலமாக இருக்க வைக்கும். வற்றாத ஜீவநதிபோல, உங்களை வாழ்விக்கும். உங்கள் வாழ்வை மகிழ்விக்கும் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.

உலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன. இந்த மதங்கள் என்ன வழிகளைக் காட்டுகின்றன. எப்படி நம்மை வாழ வேண்டுமென்று போதிக்கின்றன என்று பார்ப்போம்.

எல்லா மதங்களும் மக்களை இப்படிப்பட்ட மனோகரமான சூழ்நிலையில் வைத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்குந்தான் முயற்சிக்கின்றன.

மதம் என்றால் கொள்கை என்பார்கள். மதம் என்றால் அடங்காத திமிர் என்பார்கள். இது பொதுவாக புத்திசாலிகள் தருகின்ற தகவல்.

ஆனால் மதம் என்ற சொல்லைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், அதில் எவ்வளவு ஆழமான அர்த்தங்கள் பொதிந்து இருக்கின்றன என்பது புரியும்.

'மதம்' என்ற சொல்லை 'மது' + 'ஆம்' என்று பிரிக்கலாம். மதம் என்ற சொல்லை 'ம' + 'தம்' என்றும் பிரிக்கலாம். மீண்டும் ம+தம் என்றும் பிரிக்கலாம். அப்படி என்றால் அர்த்தம் வேறு வேறாகத்தானே வரும்.

மது என்பது அழகான மயக்கம் தரக்கூடிய பொருள் என்றும் திரவமென்று அர்த்தம். 'ம' என்றால் காலம். 'தம்' என்றால் தம் பிடித்துக் காலமுழுவதும் காப்பாற்றுதல் என்று அர்த்தம்.