உண்மை விளக்கம்-வெண்பா 21-30

விக்கிமூலம் இலிருந்து


உண்மை விளக்கம்[தொகு]

ஆசிரியர்: திருவதிகை மனவாசகங் கடந்தார்[தொகு]

வெண்பா 21 (சுத்தவித்தை )[தொகு]

சுத்தவித்தை ஞானமிகுந் தொன்மையவா மீசுரந்தா () சுத்த வித்தை ஞானம் மிகும் தொன்மையவாம் ஈசுரந்தான்

னத்தன் றொழிலதிக மாக்கியிடு- மொத்தலிவை () அத்தன் தொழில் அதிகம் ஆக்கி இடும்- ஒத்தல் இவை

சாதாக்கிய மென்றுஞ் சத்தி சிவங்கிரியை () சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை

யாதார ஞானவுரு வாம். () ஆதார ஞான உருவாம்.


வெண்பா 22 (ஆறாறு...சொன்னோம் )[தொகு]

ஆறாறு தத்துவமுஞ் சொன்னோ மடைவாக () ஆறு ஆறு தத்துவமும் சொன்னோம் அடைவாக

மாறா மலமிரண்டும் வாசொல்லக் - கூறி () மாறா மலம் இரண்டும் வாசொல்லக்- கூறில்

லறியாமை யாணவநீ யானசுக துக்கங் () அறியாமை ஆணவம் நீயான சுக துக்கம்

குறியா வினையென்று கொள். () குறியா வினை என்று கொள்.



வெண்பா 23 ( ஆறாறு...ஆணவமும்)[தொகு]

ஆறாறு தத்துவமு மாணவமும் வல்வினையு () ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல் வினயும்

மாறா வருளால் வகுத்துரைத்தீர் -வேறாகா () மாறா அருளால் வகுத்து உரைத்தீர்- வேறு ஆகா

வென்னை வெனக்கறியக் காட்டீ ரிவைகண்டே () என்னை எனக்கு அறியக் காட்டீர் இவை கண்டேன்

னுன்னரிய தேசிகரே யுற்று. () உன்னரிய தேசிகரே உற்று.


வெண்பா 24 (நன்றா )[தொகு]

நன்றா வுரைக்கக் கேள் நல்லசி்த்தின் முன்னசித்திங் () நன்றா உரைக்கக் கேள் நல்ல சித்தின் முன் அசித்து இங்கு

கொன்றாது சித்தசித்தை யோராது- நின்றிவற்றை () ஒன்றாது சித்து அசித்தை யோராது- நின்று இவற்றை

யன்றே பகுத்தறிவ தான்மாவே யென்றுமறை () அன்றே பகுத்தறிவது ஆன்மாவே என்று மறை

குன்றாம லோதுங் குறித்து. () குன்றாமல் ஓதும் குறித்து.


வெண்பா 25 (தத்துவங்கள் )[தொகு]

தத்துவங்க ளாறாறுந் தம்மைத்தா மென்றறியா () தத்துவங்கள் ஆறாறும் தம்மைத் தாம் என்று அறியா

வெத்தன்மை யென்னி லியம்பக்கேள்- சுத்தமா () எத்தன்மை என்னில் இயம்பக் கேள்- சுத்தமாம்

மாறு சுவையு மறியாது தன்னைத்தான் () ஆறு சுவையும் அறியாது தன்னைத் தான்

கூறி லவையிவைபோற் கொள். () கூறில் அவை இவை போல் கொள்.


வெண்பா 26 (ஆறுசுவையும் )[தொகு]

ஆறு சுவையு மருந்தி யவைதம்மை () ஆறு சுவையும் அருந்தி அவை தம்மை

வேறொருவன் கூறியிடு மேன்மைபோ- லாறாறு () வேறு ஒருவன் கூறி இடும் மேன்மை போல் - ஆறு ஆறும்

மொன்றென்றா நாடியுணர்ந் தோதிலதி லுற்றறிவாய் () ஒன்று என்றா நாடி உணர்ந்து ஓதில் அதில் உற்று அறிவாய்

நின்றபொருள் தானேகா ணீ. () நின்ற பொருள் தானே காண் நீ.



வெண்பா 27 (குன்றா )[தொகு]

குன்றா வருளாலே கூறினீ ரென்வடிவு () குன்றா அருளாலே கூறினீர் என் வடிவு

பொன்றாத நும்முருவம் போதியீர் - நின்றருக்கன் () பொன்றாத நும் உருவம் போதியீர்- நின்று அருக்கன்

கண்ணுக்குக் காட்டுமாப்போலே யுனதறிவின் () கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனது அறிவின்

நண்ணியறி வித்திடுவோம் நாம். () நண்ணி அறிவித்திடுவோம் நாம்.


வெண்பா 28 (அன்றியுங்கேள் )[தொகு]

அன்றியுங்கே ளான்மாவா லாய்ந்தறியு மைம்பொறிக () அன்றியும் கேள் ஆன்மாவால் ஆய்ந்து அறியும் ஐம்பொறிகள்

ளின்றி யறியா விவையென்ன- நின்றதுபோ () இன்றி அறியா இவை என்ன- நின்றது போல்

லோவாம லுன்னை யுணர்த்துவோ முன்னறிவில் () ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன் அறிவில்

மேவாமல் மேவிநா மே. () மேவாமல் மேவி நாமே.


வெண்பா 29 (அக்கரங்கட் )[தொகு]

அக்கரங்கட் கெல்லா மகரவுயிர் நின்றாற்போல் () அக்கரங்கட்கு எல்லாம் அகர உயிர் நின்றாற் போல்

மிக்க வுயிர்க்குயிராய் மேவினோ- மெக்கண்ணு () மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம்- எக்கண்ணும்

நில்லா விடத்துயிர்க்கு நில்லா தறிவென்று () நில்லா இடத்து உயிர்க்கு நில்லாது அறிவு என்று

நல்லா கமமோது நாடு. () நல் ஆகமம் ஓதும் நாடு.


வெண்பா 30 (நற்றவத்தோர்)[தொகு]

நற்றவத்தோர் தாங்காண நாதாந்தத் தஞ்செழுத்தா () நல் தவத்தோர் தாம் காண நாதாந்தத்து அஞ்சு எழுத்தால்

லுற்றுருவாய் நின்றாட லுள்ளபடி- பெற்றிடநான் () உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி- பெற்றிட நான்

விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே () விண்ணார் பொழில் வெண்ணெய் மெய் கண்ட நாதனே

தண்ணா ரருளாலே சாற்று. () தண் ஆர் அருளாலே சாற்று.

பார்க்க:[தொகு]

உண்மை விளக்கம்-வெண்பா 01-10காப்பு

உண்மை விளக்கம்-வெண்பா 11-20

உண்மை விளக்கம்-வெண்பா 31-40

உண்மை விளக்கம்-வெண்பா 41-

உண்மைவிளக்கம்

[[]][[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=உண்மை_விளக்கம்-வெண்பா_21-30&oldid=21589" இலிருந்து மீள்விக்கப்பட்டது