எனது நண்பர்கள்/டாக்டர் சர். ஏ. இராமசாமி முதலியார்

விக்கிமூலம் இலிருந்து

டாக்டர்
சர். ஏ. இராமசாமி முதலியார்

ல்வியிலும் அறிவிலும் செல்வத்திலும் தொழிலிலும் தொண்டிலும் உயர்ந்த ஒரு பெரும் குடும்பத்தில் பிறந்து, உள்ளத்தில் உயர்ந்து வாழ்ந்த ஒரு பேரறிஞர் சர். ஆற்காட்டு இராமசாமி முதலியார்.

வழக்கறிஞர், சட்டசபை உறுப்பினர், பார்லிமெண்ட் செக்ரட்டரி, பத்திரிகையாசிரியர், வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர், வார் கவுன்சில் மெம்பர், வட்ட மேஜை மகாநாட்டுப் பிரதிநிதி, பல்கலைக்கழகத் துணைவேந்தர், சமஸ்தான திவான், விஞ்ஞானத்தொழில் ஆராய்ச்சிக் கழகத் தலைவர், இந்திய ஸ்டீம் கப்பல் கம்பெனித் தலைவர், சென்னை நகராட்சித் தலைவர், இந்தியப் பேரரசின் வர்த்தக அமைச்சம் ஆகிய எத்தனையோ பதவிகள் அவரை அடைந்து பெருமை பெற்றன.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலும், நமது ஆசிய கண்டத்திலும் உள்ள பல நாடுகளுக்குப் பலமுறை சென்று வந்தவர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அவர் செல்லாத நாடுகள் உலகில் எதுவுமே இல்லை எனக்கூறி விடலாம்.

அரசு அவருக்கு வழங்கிய பட்டங்கள்: வழக்கறிஞர், டாக்டர், சர், திவான், ராஜமந்திர சிந்தாமணி, பத்மவிபூஷண், அமைச்சர் முதலியன. பொது மக்கள் அவருக்கு வழங்கிய பட்டம் உண்மையைப் பேசி,நேர்மையாய் நடந்து ஒழுக்கத்தைக் காத்த பெருமகன் என்பது. இத்தனையும் அமைந்த ஒருவர் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.

டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியாரும், இவரும் இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்தவர்கள். நெருங்கிப் பழகிய பலருக்குக்கூட இவர் ஏ. எல் முதலியாரா? ஏ.ஆர் முதலியாரா? என அடையாளம் காண முடிவதில்லை. எனக்குக்கட்ட இத்தகைய குழப்பம் பல தடவை வந்ததுண்டு.

ஏ.ஆர். முதலியார் என ஏ. எல் முதலியாரையும், எ. எல். முதலியார் என ஏ. ஆர். முதலியாரையும் நினைத்து ஒருவரிடம் கூறவேண்டிய செய்தியை மற்றவரிடம் கூறி ஏமாந்துபோன பலரை எனக்குத் தெரியும். ஆனால் அவர்களும்கூட இதை வெளியே காட்டிக்கொள்ளாமல், இச்செய்திகளைக் குறித்துக் கொண்டுபோய் ஒருவர் மற்றொருவரிடம் கூறி, பரிந்துரையும் செய்கின்ற ஒரு பழக்கத்தை இருவருமே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த இருவருக்கும் மூத்தவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் துரைசாமி முதலியார். இந்த மூவருமே எனது நண்பர்கள்.

எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில: (அ) கடந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள், (ஆ) 1917ல் இருவரும் நீதிக்கட்சியில் சேர்ந்தது. (இ) இருவருமே 1941-ல் விலகியது. (ஈ) இருவருமே அரசியலில் இருந்து விலகியதும் தொழில் துறையில் இறங்கியது.

அக்காலத்து அரசியலில் இருந்து தொண்டு செய்தவர்களில், பலர் மறைந்து நாங்கள் இருவருமே மீதியாக இருந்தோம். இன்று நான் மட்டுமே மீதியாக இருக்கிறேன். அவர் ஒரு எழுத்தாளர். நீதிக்கட்சியின் ‘‘ஜஸ்டிஸ்’’ பத்திரிகையின் ஆசிரியர், அப்பத்திரிகையின் தலையங்கத்தை அவரது ஆங்கில நடையழகைச் சுவைப்பதற்காகவே பலர் வாங்கிப் படிப்பதுண்டு.

அவர் ஒரு பேச்சாளர். அவர் ஆங்கிலத்தில் பேசுகின்ற முறையை, நடையை, அழகை ஐரோப்பியர் பலர் பாராட்டி மகிழ்வர். அவருடைய சகோதரர்களின், மகன்களின் ஆங்கிலப் பேச்சும் அவரது நடையைப் பின் பற்றியதாகவே இருக்கும்.

அக்காலத்துக் காங்கிரஸ் இயக்கத்தில் காமராஜ் அவர்களின் தலைவர் சத்தியமூர்த்தி ஒருவரே தலைசிறந்த பேச்சாளர், ஜஸ்டிஸ் கட்சியையும், ஜஸ்டிஸ் கட்சியினரையும் கடுமையாகத் தாக்கிப் பேசிப் பெயர் பெற்றவர் அவர் ஒருவரே. அவருடைய பேச்சுக்குப் பதில் கூறும் போதெல்லாம் திரு. ஏ. ஆர் முதலியார் “மை எக்ஸ்டீம்டு பிரண்டு” (எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்) என்று குறிப்பிட்டே பேசுவார். இந்த அவரது பெருந்தன்மையை அக்காலத்து அரசியல்வாதிகள் அனைவரும் பாராட்டிப் பேசுவதுண்டு.

கட்சியின் கொறடாவாகவும் சில ஆண்டுகள் பணி புரிந்தவர். கட்சியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்த போது அவர் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் காட்டிய திறமையும் இன்றும் என் கண்முன்னே நிற்கின்றன.

திருச்சியில் நான் நடத்திய ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் இவருடைய ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்க்க ஒருவரை, ஏற்பாடு செய்யும்படி என்னிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தார். நான் பலரை அணுகினேன். மறுத்து விட்டார்கள். கட்சியின் வழக்கறிஞர் பலரும் மொழி பெயர்க்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் ஒரு கல்லூரி மாணவர் நான் மொழிபெயர்க்கிறேன் என முன்வந்தார். ஊரும் பெயரும் கேட்டேன். “காஞ்சிபுரம், அண்ணாத்துரை” என்று சொன்னார். ஒரு பெரிய அரசியல்வாதியின் பேச்சை பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை விட்டு மொழி பெயர்ப்பது நல்லதல்ல என்று எனக்குத் தோன்றியது. நான் ஒப்பவில்லை. வழியில்லாததால் அப்பையனையே விட்டு மொழிபெயர்க்கச் செய்தேன். அப்பேச்சு கொட்டகையை அதிர வைத்தது. மொழி பெயர்ப்பும் அதற்கு இணையாக இருந்தது. நான் ஒரு பெரிய நல்ல காரியத்தைச் செய்து விட்டதாக எண்ணி இறுமாப்புடன், திரு. ஏ. ஆர். முதலியாரை அணுகி பையனின் மொழி பெயர்ப்பு எப்படி?’ என்று கேட்டேன். அதற்கு அவர் பையன் நன்றாக மொழி பெயர்த்தான். மொழி பெயர்ப்பில் ஆங்காங்கே சிறிது ‘சன்னப் பொடியும்’ கலந்திருந்தது’ என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

1968–ல் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மகாநாட்டில் நான் துணைத் தலைவனாக இருந்து பணி புரிந்தேன். அப்போது மவுண்ட் ரோடில் திரு. சி. என். அண்ணாதுரையின் சிலையை வைப்பது என்ற முடிவுக்கு வந்தோம். அதைத் திறந்து வைக்க ஏ. ஆர். முதலியார் மவுண்ட்ரோடிற்கு வந்தபோது, எட்டஇருந்த என்னைக் கைதட்டிக் கூப்பிட்டார். திருச்சி ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் அண்ணாதுரை மொழி பெயர்த்த போது “அப்பையன், பின்னால் நமது நாட்டிற்குத் தலைமை அமைச்சராக வருவார் என்றோ, அவருடைய சிலையை நாம் இருவரும் திறந்து வைக்கப் போகிறோம் என்றோ, நாம் நினைத்தோமா?” எனக் கூறி மகிழ்ந்தார். அவரது நினைவாற்றலைக் கண்டு நான் மகிழ்ந்தேன்.

1981–ல் நாட்டின் எதிர்கால அரசியல் சட்ட அமைப்பை முடிவு செய்யக் கூட்டப்பட்ட வட்டமேஜை மாநாட்டில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் 1945–ல் சான்பிரான்விஸ்கோவில் நடந்த ஐ.நா. மகாநாட்டில் இந்திய தூது கோஷ்டித் தலைவராகச் சென்று உரை நிகழ்த்தினார். பின்னர் 46–47ல் ஐ.நா. பொருளாதார, சமூக கவுன்ஸிலில் முதல் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர். ஏ. ஆர். முதலியார் 1931–முதல் 34 வரை டில்லியில் வணிக மந்திரியாகப் பணிபுரிந்தார். அப்போது தமிழகத்தில் தோல் வாணிகம் பாழ்படும் நிலைமையை அடைந்தது. தோல் விலை குறைந்தது. மேல்நாட்டுக்கு அனுப்பப்படும் தோல்களுக்குப் பணம் ஓராண்டுக்குப் பிறகுதான் தமிழகத்துக்குக் கிடைத்து வந்தது. இது குறித்துக் கவலையடைந்த சென்னைத் தோல் வணிக சங்கத்தினர், என்னிடம் வத்து, ஏ. ஆர். முதலியாரை தில்லியில் சந்தித்து ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். உடன்பட்டேன். ஏழு பேர் ஒரு குழுவினராக தில்லிக்குச் சென்றோம். ஏ.ஆர். முதலியாரைச் சந்தித்தோம். அவர் வெகு பொறுமையாக ஒரு மணி நேரம் எங்களிடம் தோல் வணிகத்தின் குறைகளைக் கேட்டறிந்து ஆவன செய்வதாக வாக்களித்தார். நான் கட்டாயம் செய்யவேண்டுமென வற்புறுத்தினேன். அப்போது அவர் என்னிடம் சொன்னதாவது “இதை விட வேறு எனக்கென்ன வேலை? நான் இங்கு வந்த பிறகு பல மாநிலங்களிலிருந்து பலபேர்கள் பல குறைகளைக் கூறி பல மந்திரிகளைப் பேட்டி காண வருவதைக் கண்டு, நமது மாநிலத்திலிருந்து இப்படி ஒருவரும் வந்து குறைகளைச் சொல்லிக் கொள்ள வரவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தேன். நீங்கள்தான் இப்போது முதல் தடவையாக வருந்திருக்கிறீர்கள். உட்காருங்கள்’’ என்று கூறி, தொலைபேசியை எடுத்து வர்த்தகத் துறைக் காரியதரிசியை அழைத்து இதற்கானவற்றை உடனே செய்யும்படி கட்டளையிட்டார். நன்றி கூறித் திரும்பினோம். எங்கோ போகிறீர்கள்?” என்று கேட்டார். “ஊருக்கு” என்றோம். “அதுதான் முடியாது; வீட்டிற்கு வந்து விருந்து அருந்தித்தான் போக வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள், அவர் அன்பை நினைந்து மனமுருகி ஒப்பினோம். அன்று இரவு அவரில்லத்தில் பெரிய அளவில் விருந்து நடந்தது. அதில் தில்லி நகரில் தமிழகத்திலிருந்து பணிபுரியச் சென்ற பெரிய அதிகாரிகள் பலரும் பங்கு பெற்றனர். பிரியா விடை பெற்றுப் பெரு மகிழ்வோடு திரும்பினோம். திரும்பும்போதே எங்களிடம் சொன்னார்கள், “மகிழ்ச்சியோடு செல்லுங்கள்” இனி தோல்களை கப்பலில் ஏற்றிய உடனேயே 100க்கு 80 வீதம் ரூபாய் உங்களுக்கு இங்கேயே கிடைக்கும்’ என்று.

“என் வாழ்நாளில் இப்படி ஒரு நன்மையை கேட்ட உடனேயே செய்த பேரன்பரை நான் கண்டதில்லை” என்று என்னுடன் வந்திருந்த தோல் வியாபாரிகளாகிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களும், மலங்கு அகமது பாஷா அவர்களும், திருச்சி பாலக்கரை வி. எஸ். அவர்களும் பெரிதும் பாராட்டினார்கள். இது சர்.ஏ.ஆர். முதலியார் அவர்களின் தொண்டுக்கு எடுத்துக்காட்டான ஒனறு.

1887–ல் அக்டோபர் 14–ம் நாள் கர்னூலில் பிறந்த டாக்டர் சர். ஏ. இராமசாமி முதலியார் அவர்கள், 89 ஆண்டுகள் இந்நிலவுலகில் வாழ்ந்து, செயல் வீரராகத் திகழ்ந்து நம்மைவிட்டு மறைந்தார். அவர் உருவம் கறுப்பு; அவரது உள்ளம் வெளுப்பு. அவரது இழப்பு குறிப்பாகத் தமிழகத்திற்கும் பொதுவாக இந்தியாவிற்கும் ஒரு பேரிழப்பாகும்.