எனது நாடக வாழ்க்கை/நல்லகாலம் பிறந்தது

விக்கிமூலம் இலிருந்து
நல்ல காலம் பிறந்தது

சிவ லீலாவுக்காக கைலாயம்; பாண்டியன் அவை, ஹேம நாதன் வீடு; தாமரைத் தடாகம்; சொக்கேசர் சந்நிதி; மீனாட்சி யம்மன் சந்நிதி; பொற்றாமரைக்குளம்; சங்கமண்டபம்; அபிஷேக பாண்டியன் அந்தப்புரம், கல்யானை மண்டபம், துர்க்கை சந்நிதி கடற்கரை முதலிய காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டன. ஆலயத்தின் உள்ளேயுள்ள கல்யானைகளை அப்படியே மோல்ட் எடுக்க ஆலய அதிகாரிகள் ஒத்துழைத்தார்கள். இவற்றைத் தவிர இடையே தாமதம் ஏற்படாதிருக்கச் சில மாறுங் காட்சிகளும் வரையப் பெற்றன. ஒவியர் தேவராஜய்யர் ஒவ்வொரு காட்சியையும் வியக்கத்தக்க வகையில் எழுதினார். ஒப்பனையாளர் இராஜ மாணிக்கம் உடைகளுக்காக வரைபடங்கள் எழுதிக்கொண்டு பல வித வண்ண உடைகள் வெல்வெட்டிலே தயாரித்தார். சரிகை வேலைப்பாட்டில் கைதேர்ந்த மஸ்தான்கான், சுபான் சாயபு ஆகிய முஸ்லீம் கலைஞர்கள் தறியில் இடைவிடாது வெள்ளிச் சரிகை வேலை செய்தனார். மரச் சிற்ப வேலையில் பிரசித்தி பெற்ற இரு மலையாள இளைனார்கள், சிங்க ஆசனம், யானை ஆசனம், மயில் ஆசனம், மயில் கட்டில், பல்லக்குகள் முதலியனவற்றை விரைவாகச் செய்து முடிக்க, அவற்றிற்குத் தங்க ரேக் ஒட்டும் நுணுக்கமான வேலையை நடிகர்கள் அனைவரும் செய்தார்கள். பின்னணி இசையமைப்புக்காக டி. எம். இப்ராஹீம் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். நகைச்சுவை நடிகர் சிவதாணு நடனப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு பாவையர் நடனம், மயில் நடனம், வலைனார் நடனம் ஆகியவற்றை அழகுபெற அமைத்தார். ஆலவட்டம், சந்திரவட்டம், சூரியப் பிரபை, தங்கத்தடி, வெள்ளித்தடி, மீனக்கொடி, வெண்சாமரம் அனைத்தும் தயாராயின, சாதாரணக் காவலர் உட்பட எல்லாப் பாத்திரங்களுக்கும் புதிய உடைகள் தைக்கப் பட்டன. திருக் குறிப்புத் தொண்ட நாயனார் பகுதிக்குத் தேவையான மின்னல். இடி-மழைக்காட்சி பரணில் நீண்ட குழாய்கள் பொறுத்தி எல்லோரும் வியப்புறும் வண்ணம் மேலிருந்து மழைகொட்டும்படி தந்திரக் காட்சியாக அமைக்கப் பெற்றது. ஏற்கனவே பல முறைகள் நடைபெற்ற பழைய சிவலீலாவை மீண்டும் சில நாட்கள் ஒத்திகைப்பார்த்து ஒர் உன்னதமான கவலைப்படையாக உருவாக்கினோம். 27-7-1941 ஞாயிறன்று மதுரை கோபாலகிருஷ்ணா தியேட்டரில் சிவலீலா பிரமாதமான விளம்பரத்துடன் தொடங்கியது. எங்களுக்கும் நல்ல காலம் பிறந்தது. சூலமங்கலம் பாகவதரும் அவரது குடும்பத்தினரும் புதிய தயாரிப்பை வந்து பார்த்துப் பூரித்துப் போனார்கள்.

தம்பி பகவதியின் சாதனை

திருச்சிக்குப் பிறகு சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் மதுரையில்தான் மீண்டும் வந்து, சிவலீலாவைப் பார்த்தார். நான் கோவைப் படப்படிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அதில், நான் இல்லாமல் சிவலீலா நடைபெறுவது குறித்து மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார். பகவதியின் நடிப்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை. திருப்பூரில் சிவலீலா தொடர்ந்து நடைபெற்றபோது, நான் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் திருப்பூருக்கு நாடகம் பார்க்க வந்து விடுவேன்; சபையில் அமர்ந்து சிவ லீலா நாடகத்தை நானே பல முறை பார்த்திருக்கிறேன். விறகுவெட்டி, புலவர், சிவனடியார், சித்தர், வலைஞன் ஆகிய வேடங்கள் என்னைவிடப் பகவதிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன. தோற்றப் பொலிவு எந்த நாடகத்திற்கும் இன்றியமையாத ஒன்று. தம்பி பகவதி பார்வைக்கு என்னைவிடப் பெரியவராகத் தோன்றுவார். அது மட்டுமல்ல; என் குரல் மென்மையானது. பகவதியின் குரல் கம்பீரமானது. சிவலீலாவில் நான் புனைந்த வேடங்கள் யாவற்றிலும் பகவதி என்னைக்காட்டிலும் பன்மடங்கு சிறந்து விளங்கினார். எனவே, நான் மீண்டும் அந்த வேடங்களைப் புனைய விரும்பவில்லை. நாடகத்தின் நடுவே வரும் சண்பக பாண்டியன் என்னும் சிறிய வேடத்தை ஏற்று நடித்தேன். இந்த விவரங்களையெல்லாம் நான் பாகவதருக்கு எழுதினேன். ஆனாலும், அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. மதுரைக்கு வந்து நாடகத்தைப் பார்த்த பிறகுதான் அவருக்குப் பூரண திருப்தி ஏற்பட்டது. பகவதியின் நடிப்பையும் பாட்டையும் அவர் அபாரமாகப் புகழ்ந்து பாராட்டினார். வாய்ப்பு நேரும்போதுதானே வளர்ச்சி தெரியும்! ஒருவருடைய ஆற்றலை அறிய வேண்டுமானல் அதற்குரிய பொறுப்பினை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமல்லவா? தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினைத் தம்பி பகவதி, அரிய சாதனையாக வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றார்.

காற்றும் மழையும்

சிவலீலா அரங்கேறிய ஐந்தாம் நாள் நவாப் இராஜ மாணிக்கம் நாடகம் பார்க்க வந்திருந்தார். அன்று மாலை ஆறு மணிக்கே காற்றும் மழையும் அமக்களப்படுத்தின. ஒப்பனைக்காகத் தனியே தகரக் கொட்டகை போட்டிருந்தது. அதன் நடுவே சில தென்னை மரங்களும் இருந்தன. எல்லோரும் வேடம் புனைந்து கொண்டிருந்தனார். மணி 7-30 ஆயிற்று. மழை நிற்கவில்லை. காற்றின் வேகமும் தணியவில்லை. இந்த நிலையில் பளீரென்று ஒரு மின்னல்; மின்சார விளக்குகள் அணைந்தன. மின்னொளி நிபுணர் ஆறுமுகம் உள்ளே வந்தார். நானும், தம்பி பகவதியும் ஒப்பனைக்காகப் போடப்பட்டிருந்த ஷெட்டின் உள்ளே, தென்னை மரத்தின் ஒரமாக நின்று, “என்ன மின்சாரக் கோளாறு?” என்று ஆறுமுகத்தை விசாரித்தோம்; அவ்வளவுதான். தீடீரென்று ஒரு சூறைக் காற்று; தென்னை மரம் முறிந்து பயங்கரமான சத்தத்துடன் தகர ஷெட்டின் மீது விழுந்தது. நாங்கள் நின்ற இடத்தில் எங்கள் தலைக்கு மேலே போட்டிருந்த தகரம் பிய்த்துக் கொண்டு தடாரென்று எங்கள் காலடியில் விழுந்தது. நாங்கள் பிழைத்தது ‘இறைவன் திருவருள்’ என்றே சொல்ல வேண்டும். புத்தம் புதிய காட்சிகள் யாவும் நனைந்தன.....

என்ன ஆச்சரியம்! திடீரென்று மழை ஒய்ந்து, சில நிமிடங்களில் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றின. சிவலீலாவுக்கு ஏற்பட்ட திருஷ்டி என்று சில பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். மின்சார வீசிறிகளைச் சுழல விட்டு, நனைந்த ஆடைகளை உலர்த்தினோம், நாடகம் 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. விடா மழையிலும் பெருங் கூட்டம் வந்திருந்தது. இசைச்செல்வர் இலட்சுமணபிள்ளை, திருமுருக கிருபானந்த வாரியார், சர். பி. டி. இராஜன் மூவரும் இடையே நடைபெற்ற நாடகங்களில் தலைமை தாங்கி வாழ்த்தினார்.

நக்கீரர் நாராயணபிள்ளை

சிவலீலாவில் நக்கீரராக நடித்த என். எஸ். நாராயண பிள்ளையைப் பற்றிச் சில வார்த்தைகள் இங்கே குறிப்பிட்ட விரும்புகிறேன். இவர் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர். கோல்டன் சாரதாம்பாள் கம்பெனியில் நடிகராக இருந்து புகழ் பெற்றவர். 1937இல் எங்கள் குழுவில் சேர்ந்தார். பெரும்பாலும் நகைச் சுவைப் பாத்திரங்களையே ஏற்பார். நன்றாக நடிப்பார். தமிழில் புலமை பெற்றவர். இயல்பாகவே திறமையாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். எங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்தில் ஜோஸ்யர் பாத்திரத்தைத்தாங்கி அற்புதமாக நடித்து வந்தார். திரைப்படத்திலும் இவரே ஜோஸ்யராக நடித்தார். குமாஸ்தாவின் பெண் கடைசிக் காட்சியில் மாப்பிள்ளையின் தகப்பனார் வேடத்திலும் இவரே நடித்தார். பெண் வீட்டாரிடம் பணம் பிடுங்குவதற்காக இவர் கோபித்துக் கொண்டு வெளியேறும் கட்டத்தில் அபாரமாக நடித்து அவையோரின் பாராட்டுதலைப் பெறுவார். தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் இவர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நக்கீரராக நடித்தார். தருமியிடமும், தருமிக்காக வாதாட வரும் புலவரிடமும் இவர் உரையாடும் பாங்கு மிகச் சிறப்பாக இருக்கும். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி என்னும் செய்யுளை இவர் தெளிவாக எடுத்துச் சொல்லி, அதில் குற்றம் கூறும் தோரணையும், இவருடைய கம்பீரமான தோற்றப் பொலிவும், இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்து, “நக்கீரா குற்றந்தானா?” என்று கேட்கும் போது, “புலவரே, நீரே முக்கண் முதல்வனுயினுமாகுக; உமதுநெற்றியில் காட்டிய கண்ணைப்போல் உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டாலும் உமது கவியிற் குற்றம் குற்றமே; நெற்றிக்கண் திறக்கினும் குற்றம் குற்றமே” என்று வீர முழக்கம் செய்யும் கட்டம் எழுச்சி மிக்க புலவர் நக்கீரனுரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். நாடகத்தின் நடுவே வரும் இக்காட்சி முழுதும் ‘செந் தமிழ் முழங்கும்’ என்று சொன்னால் சிறிதும் மிகையாகது. இறுதியில் நக்கீரர் “தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!! உலகெல்லாம் தமிழ்முழங்கட்டும்!!!” என்ற முழக்கத்தோடு உள்ளே செல்வதும் அவரைத் தொடர்ந்து புலவர் பெருமக்கள் எல்லோரும், “உலகெல்லாம் தமிழ் முழங்கட்டும்!” என்று உரத்த குரலில் எதிரொளிப்பதும் சபையோரைப் புல்லரிக்கச் செய்யும் அற்புதக் காட்சியாகும். சில நாட்களில் இந்த முழக்கத்தில் சபையோரும் உணர்ச்சி வசப்பட்டு “தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க!” என்று முழங்கியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சிவலீலா புராண நாடகந்தான் என்றாலும் தருமிக்குப் பொற்கிழி அளித்த இந்தப் படலத்தின் மூலம் தமிழ் உணர்வை மக்கள் உள்ளத்தில் நன்கு பதிய வைப்பதில் நாங்கள் வெற்றி கண்டோம்.