எனது நாடக வாழ்க்கை/நீலகிரி மலை

விக்கிமூலம் இலிருந்து
நீலகிரி மலை


1935 ஏப்ரல் 19ஆம் நாள் பிற்பகல் எல்லோரும் புறப்பட்டு இரவு ஏழு மணிக்கு உதகமண்டலம் என்று அழைக்கப்படும் நீலகிரிமலைக்கு வந்து சேர்ந்தோம். அதுவரை அனுபவித்திராத கடுங்குளிர் எங்களை மிகவும் வருத்தியது. இரவு நேரமானதால் எல்லோரும் கஷ்டப்பட்டார்கள். நாடகம் நடைபெறும் இடமாகிய புளு மவுண்டன் தியேட்டருக்கு அருகிலேயே கம்பெனி வீடு இருந்தது. கொட்டகையின் பின்புற வழியாகவே கம்பெனி வீட்டுக்குப் போய்விடலாம். இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

முதல் நாள் இரவை எப்படியோ கழித்தோம். மறுநாள் வாடகைக்குக் கம்பளிகள் கொடுக்கும் ஒரு கடைக்குச் சென்று சில கம்பளிகளையும், உல்லன் மப்ளர்களையும், பனியன்களையும் வாங்கி வந்தார்கள். நான்கு பேருக்கு ஒரு கம்பளி வீதம் போர்த்திக் கொண்டுதான் உறங்குவது வழக்கம். அவ்வளவு கடுமையான குளிர்.

நாடகம் தொடங்கியது. முதல் நாடகம் சந்திரகாந்தா நடந்தது. நாங்கள் அதிகமான வசூலை எதிர்பார்க்கவில்லை. ஆனால், எதிர்பார்த்ததைவிட பரம மோசமாக இருந்தது வசூல். குளிரில் நடிப்பது சிலருக்கு மரண வேதனையாக இருந்தது. என்ன செய்வது? வேறு வழியின்றி நடித்தோம். நீலகிரி மிக அழகான பிரதேசம். அங்கு வசிப்பவர்கள் அங்குள்ள குளிருக்கேற்ற உடைகளை அணிந்து கொண்டு வாழ்கிறார்கள். வாடகைக்கு வாங்கிய உடைகள் மிகவும் கிழிந்து போனவையாதலால் வெளியே போக வர அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. தியேட்டரையும் கம்பெனி வீட்டையும் தவிர நடிகர்கள் எங்குமே போகவில்லை.

ஜீவா சொற்பொழிவு

தோழர் ஜீவானந்தம் அப்போது நீலகிரியில் வந்து தங்கி யிருந்தார். அவரும் நானும் தனியே அமர்ந்து பல்வேறு விஷயங் களைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். கம்பெனியின் கஷ்டமான நிலையைப்பற்றி நான் அடிக்கடி வேதனைப்படுவேன். அப்போ தெல்லாம் ஜீவானந்தம் எனக்கு ஆறுதல் கூறித் தேற்றுவார். ஒரு நாள் சமூகச் சீர்திருத்த சங்கத்தின் சார்பில் ஒரு கூட்டம் நடை பெறுவதாகக் கூறி, என்னையும் தம்பி பகவதியையும் அழைத்துச் சென்றார். கூட்டம் ஒரு வீட்டில் நடந்தது. அந்த வீட்டின் முன் புறக் கூடத்தில் சுமார் ஐம்பதுபேர் உட்கார இடமிருந்தது. ஆனால் வந்திருந்தவர்கள் ஐந்தே பேர்கள்தாம். ஜீவானந்தம், தோழர் ஆர். கிஸன், அவரது மனைவி, நான், பகவதி-எங்களைத் தவிர யாருமே வரவில்லை. நான் ஜீவாவைப் பார்த்துச் சிரித்தேன். அவர் அதுபற்றிக் கவலைப்பட்டதாகவே தோன்றவில்லை. என்னைப் பாடச் சொன்னார். பாடினேன். பாட்டு முடிந்ததும் ஜீவா பேசத் தொடங்கினார். அவருடைய கர்ஜனையைக் கேட்டு, மற்றும் நான்கு பேர் வந்து உட்கார்ந்தார்கள். ஆகச்சொற்பொழிவாளர் உட்பட ஒன்பது பேர். இந்த மாபெரும் கூட்டத்தில் தோழர் ஜீவா, சமுக சீர்திருத்தத்தைப் பற்றி ஒன்றரை மணி நேரம் ஒரு அருமையான சொற்பொழிவாற்றினார். அவருடைய நெஞ்சுத் துணிவை நான் பாராட்டினேன்.

ஒடிவிடத் தீர்மானித்தேன்

நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. ஒரு நாள் பம்பாய் மெயில் நாடகம். சுந்தரம் கிணற்றுக்குள்ளிருந்து தன் தம்பி கோபலனத் தூக்கி வரும் காட்சியில் இருவரும் மேலே தண்ணீரை ஊற்றிக்கொள்ள வேண்டும். நான் வெந்நீர் வேண்டு மென்று கேட்டிருந்தேன். ஆனால், காட்சியில் நான் கிணற்றி லிருந்து குதித்தபோது கீழே புதைக்கப்பட்டிருந்த டிரம்மிள் ஜில்லென்ற தண்ணிர் தான் இருந்தது. கால்களெல்லாம் வெட வெடவென்று நடுங்குவதுபோல் நடிக்க வேண்டும். ஆனால் இப்போது உண்மையாகவே கைகால்கள் நடுங்கின. சுந்தரம் கிணற்றில் குதித்ததும் கிணற்றின் மேற்புறத்தைப் பெரிய பலகையால் மூடி விடுகிறார்கள் எதிரிகள். சுந்தரம் தம்பியை முதுகில் கட்டிக்கொண்டு மேலே வருகிறான். வழி பலகையால் மூடப் பட்டிருப்பதைப் பார்க்கிறான். பின் உள்ளிருந்தே கிணற்றின் சுவரை இடித்து வழியுண்டாக்கி, அதன் வழியாக வெளியே வருகிறான். மிகவும் அற்புதமான காட்சி இது. இத்தக் காட்சி பதினைந்து நிமிடங்கள் நடைபெறும். என்ன செய்வது? நேரம் இரவு பன்னிரெண்டு மணி. தாங்க முடியாத குளிர். ஐஸ் போன்றிருந்த தண்ணிரையே மேலே ஊற்றிக் கொண்டு நடித்தேன். நானும், கோபாலனாக நடித்த டி. ஏ. காசிநாதனும் குளிர் தாங்க முடியாமல் அவஸ்தைப்படுவதைச் சபையோர் பார்த்து அனுதாபப்பட்டது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.

பம்பாய் மெயில் முடிந்த மறுநாள் தனியே பூங்காவிற்குச் சென்றேன். கம்பெனியின் நிலைமையை எண்ணிப் பார்த்தேன். மூலதனம் எதுவும் இல்லாமல் மேலும் கம்பெனியை நடத்திக் கொண்டு போவது சரியெனத் தோன்றவில்லை. உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து உலவினேன். பைத்தியம் பிடித்தவனைப் போலப் பூங்காவெங்கும் சுற்றினேன். ஒய்வில்லாது உழைத்தும், உடுத்திக் கொள்ளச் சரியான உடைகளும் இல்லாத நிலை என்னை மிகவும் துன்புறுத்தியது. சகோதரர்களை விட்டு எங்கேயாவது ஒடிப்போய்விட வேண்டும் என்ற உணர்ச்சி என்னை உந்தித் தள்ளியது. நீண்ட நேரம் யோசனை செய்தேன். இறுதியாக, ஓடிவிடுவது என்ற முடிவுக்கே வந்தேன்.

அன்பரின் அறிவுரை

திடீரென்று ஜீவானந்தம் வந்தார். அவரிடம் நான் என் மன வேதனையைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே பேசினேன். ஜீவா அரசியல் விஷயங்களைப் பற்றிப் பேசினார். தேசத்திற்காகப் பல இன்னல்களை அனுபவித்த வீரர்களின் கதைகள் சிலவற்றைச் சொன்னார். அந்தக் கதைகளையெல்லாம் கேட்ட பிறகு, என் முடிவு குலைந்தது. உள்ளம் உறுதிப்பட்டது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் தீரத்தோடு போராடிச் சமாளிக்க வேண்டும் என்ற நெஞ்சுரம் ஏற்பட்டது.  தோழர் ஜீவாவுக்கு ஆண்டவன் இருப்பதாக நம்பிக்கை இல்லை. ஆனால் ஓடிப் போகத் தீர்மானித்த எனக்கு, அறிவுரை கூறித் திருத்த ஆண்டவனே ஜீவாவை அனுப்பியதாக எண்ணினேன் நான்.

நீலகிரியில் வசூல் இல்லாமலே ஒருமாத காலம் நாடகம் நடந்தது. மீண்டும் மேட்டுப்பாளையம் வந்தோம். குழப்ப நிலை திரவில்லை. மயில்ராவணன் நாடகத்தைப் புதிய முறையில் எழுதிச் சிறப்பாகத் தயாரித்தார் சின்னண்ணா. நாடகம் அருமையாக அமைந்தது. வசூல்தான் இல்லை. அருகிலுள்ள கோபிச்செட்டிப் பாளையம் போவதென்று முடிவு செய்தார்கள். பஸ்ஸிலேயே கோபிச்செட்டிப்பாளையம் வந்து சேர்ந்தோம்.

மயில்ராவணன் தகராறு

கோபிச்செட்டிப் பாளையத்தில் மயில்ராவணனுக்கும், பம்பாய் மெயிலுக்கும் நல்ல வசூலாயிற்று. மயில்ராவணன் நாடகத்தில் எம். ஆர். சாமிநாதன் காளிகோயில் அர்ச்சகராக நடிப்பார். கடைசியாக ஆஞ்சநேயர், காளி சிலைக்குப் பின்னல் மறைந்து கொண்டு பேசும் கட்டத்தில், எம். ஆர். சாமிநாதன் உள்ளே போகப் பயந்து, நான் பிராமணனே இல்லையென்று பூணூலைக் கழற்றிக் கொடுத்துவிட்டு ஓடிப் போவார். இந்தக் காட்சியில் அவர் பேசும் பேச்சைக் கோபிச்செட்டிப்பாளையத்திலுள்ள சில பிராமணர்கள் வெறுத்தார்கள். நாடக அமைப்பில் இந்தக் காட்சியில் தவறு ஒன்றும் இல்லாததால் நாங்கள் மற்றவர்களுடைய வெறுப்பை லட்சியம் செய்யவில்லை.

மயில்ராவணன் நாடகம் முடிந்த மறுநாள் வழக்கம்போல் எல்லோரும் வாய்க்காலுக்குக் குளிக்கப் போனோம். அங்கே பிராமணர்களுக்கென்று தனியாக ஒரு படித்துறை இருந்தது. அந்தப் படித்துறையிலும் சில நடிகர்கள் குளித்தார்கள். அதற்கு முன்பெல்லாம் ஒன்றும் பேசாத சில பிராமணர்கள், அன்று பிராமணர்கள் படித்துறையில் நாங்கள் குளிக்கக் கூடாதென்று ஆட்சேபித்தார்கள். எம். ஆர். சாமிநாதன் குறும்புப் பேர்வழி. அவர் படித்துறையை விட்டுத் தண்ணிரில் இறங்கி நின்று கொண்டு குளித்தார். படித்துறைதானே பிராமணர்களுக்குச் சொந்தம்? வாய்க்கால் எல்லாருக்கும் பொதுதானே? பிராமணர்கள் குளிப்பதற்கு முன்புறம்போய் வாய்க்காலில் அவர் நின்று கொண்டார். பிராமணர்கள் முணுமுணுத்தார்கள். அன்று மாலை நாங்கள் வழக்கம்போல் வெளியே போய்விட்டு வரும்போது அக்ரஹாரத்தில் ஏதோ கூட்டம் நடப்பதைப் பார்த்தோம். பெஞ்சின்மீது நின்று ஒரு வைதீகப் பிராமணர் பேசிக் கொண்டிருந்தார். மயில்ராவணன் நாடகத்தில் நாங்கள் பிராமணர்களை இழிவுபடுத்துவதாகவும், வாய்க்கால் படித்துறையில் அக்ரமம் செய்ததாகவும், அதனால் ஸ்ரீ பால சண்முகானந்த சபையார் நடத்தும் நாடகங்களுக்குப் பிராமணர்கள் போகக்கூடாதென்றும் பிரசங்கம் செய்தார். நாங்கள் அவருடைய அறியாமையை எண்ணிச் சிரித்தோம். இந்தப் பிரசங்கத்திற்குப் பிறகு மயில் ராவணனுக்கு அதிக வசூலாயிற்று. பக்கத்திலுள்ள சத்தியமங்கலத்திலும் மயில் ராவணன் போடவேண்டுமென்று அழைப்பு வந்தது. அங்கும் ஸ்பெஷலாகப் போய்ச் சில நாடகங்கள் நடத்திவிட்டு வந்தோம்.