எனது நாடக வாழ்க்கை/பெரியார்-ஜீவா நட்பு

விக்கிமூலம் இலிருந்து
பெரியார் - ஜீவா நட்பு

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்றோம். ஈரோட்டில் ஒரு நாள் ஈ. வெ. ரா. பெரியார் அவர்களைக் காண அவரது குடியரசு அச்சகத்திற்குச் சென்றேன். முன்புற அறையில் உட்கார்ந்திருந்த ஒருவர் என்ன அன்புடன் வரவேற்றார்.

கறுத்து அடர்ந்த மீசை, கம்பீரமான தோற்றம், பேச்சிலே இனிமை தவழ்ந்தது. அவர் எங்கள் தேசபக்தி நாடகத்தைச் சிறப்பாகப் புகழ்ந்தார். அதில் பாரதி பாடல்களைப் பாடுவதற்காக மிகவும் பாராட்டினார். தங்கள் பெயரென்ன? என்றேன். ஜீவானந்தம் என்று பதில் கிடைத்தது. தேசிய உணர்ச்சி ஏற்பட்ட பின்பு, தொடர்ந்து தமிழில் வெளி வந்த எல்லாப்பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன். அவற்றில் பூவாளுர் அ. பான்னம் பலஞரின் “சண்ட மாருதம்” ஒன்று. அதில் படித்த, தோழர் ஜீவாவின் பாடல் என் நினைவுக்கு வந்தது.

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை-அதன்
பட்டினி யழுகை கேட்பதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்
இட்டு வணங்குறார் முத்திக்கென்றே

பாடல் பல அடிகளைக் கொண்டது. இந்தப் பாடலை எழுதிய ஜீவானந்தம் என் இதயத்தில் இடம் பெற்றிருந்தார். அவரே இப்போது எதிரில் இருப்பவர் என்பதை அறிந்ததும் என் உள்ளம் மகிழ்ந்தது. தோழர் ஜீவா என்னைப் பெரியாரிடம் அழைத்துச் சென்றார். அறிமுகப்படுத்தி வைத்தார். எங்கள் நாடகங்களைப் பற்றிப் புகழ்ந்தார். பெரியார் அவர்கள் என்னை மகிழ்வுடன் வர வேற்றார். குடியரசுப் பதிப்பகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தாம் வெளியிட்ட நூல்களையெல்லாம் கொண்டுவரச் சொன்னார். சிறிதும் அயர்வுருது, அத்தனை நூல் களிலும் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அன்றுமுதல் பெரியார் ஜீவா, பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத் தோழர்களுடன் எங்களுக்கு நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது.

கடவுட் கொள்கையில்எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. என்றாலும் சுயமரியாதை இயக்கத்தின் சாதி ஒழிப்பு, குழந்தை மணத்தடை, கலப்புமணம், கைம்மை மணம் முதலிய சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைள் என்னைமட்டுமல்ல, எங்கள் குழுவினார் அனைவரையும் கவர்ந்தன. தோழர் ஜீவாவின் சமதர்ம உணர்வும், அது பற்றிய அவரது பாடல்களும் சொற்பொழிவு களும் எனக்கு ஒரு உறுதியான லட்சியத்தை வகுத்துத் தந்தன வென்றே சொல்ல வேண்டும். எனக்கு அரசியலறிவு ஊட்டிய அறிஞர்களில் முதலாவதாகக் குறிப்பிடத் தக்கவர் தோழர் ஜீவானந்தம் அவர்களே ஆவார்.

நாங்கள் நடத்தி வந்த சமுதாயச் சீர்திருத்த நாடகங்களைப் பெரியார் அடிக்கடி வந்து பார்த்தார்.அந்த நாடகங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. எங்கள் மீது பற்றுக் கொள்ளச் செய்தன. எங்கள் குழுவினார் அனைவருக்கும் ஒரு நாள் பெரியார் இல்லத்தில் விருந்து நடந்தது. அப்போது பெரியார் அவர்களின் துணைவியார் காகம்மையார் உயிருடன் இருந்தார்கள். அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். பெரியார் அவர்கள் எங்கள் நாடகக் கம்பெனிக்கு விருந்து வைத்ததைக் கண்டு ஊரே வியந் தது. எப்போதும் சிக்கனத்தைக் கையாளும் பெரியார் அவர்கள் ஒரு நாடகக் கம்பெனியாரிடம் இவ்வளவு தாராளமாகப் பழகியதும் விருந்து வைத்ததும் வியப்புக்குரிய செய்தியல்லவா!

பம்பாய் மெயில்

ஈரோட்டில் சதாவதானம் தே. பொ. கிருஷ்ணசாமி பாவலர் அவர்கள் எழுதிய பம்பாய் மெயில் நாடகம் தயாராயிற்று. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஈரோட்டில் இருந்து கொண்டே பவானி, கொமாரபாளையம், கோபிச் செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் ஸ்பெஷலாகப் பம்பாய் மெயில்,பதிபக்தி நாடகங்கள் போட்டு வந்தோம். பாவலரின் இவ்விரு நாடகங்களும் கம்பெனி யின் முதன்மையான நாடகங்களாக விளங்கின.

பாலகிருஷ்ண சாஸ்திரி கம்பெனியில், வேலூரில் எங்களுக்கு அறிமுகமான ஏ. டி. தர்மராஜூ ஈரோட்டில் வந்து சேர்ந்தார். நீண்டகாலமாகப் பெரியண்ணா பார்த்து வந்த கணக்கு வேலை இவரிடம் ஒப்படைக்கப் பெற்றது. இவர் நல்ல நிருவாகத் திறமையும் நாணயமும் உடையவர். 1970 வரை இவரே கம்பெனியின் நிருவாகப் பொறுப்பையும் குடும்ப சம்பந்தமான இதர வேலைகளையும் கவனித்து வந்தார். சாஸ்திரியாரின் கம்பெனி கலைந்துபோனதால் மற்றுஞ் சில நடிகர்கள் வந்து சேர்ந்தார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் டி. எம் தியாகராஜன், டி. எ. காசிகாதன், டி. எஸ். தட்சணுமூர்த்தி, இன்று தேவி நாடக சபையின் அதிபராக இருக்கும் கே. என்.ரத்தினம் முதலியோர்.

ஜீவாவின் பாட்டு

1981 ஆம் ஆண்டு முதலே பத்திரிக்கைகளைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். தோழர் ஜீவானந்தம் அவர்களோடு நட்புறவு ஏற்பட்டபின் இந்த ஆர்வம் பன்மடங்காக வளர்ந்தது. ஒய்வு நேரங்களில் எப்போதும் தனியேயிருந்து படித்துக் கொண்டேயிருப்பேன்.

நாங்கள் போகும் ஊர்களுக்கெல்லாம் ஜீவா கூட்டங்களுக்காக அடிக்கடி வருவார். பெரும்பாலும் எங்கள் கூடவே தங்கு வார். நாடகங்களைப் பற்றி உரையாடுவார். அவரோடு பேசிக் கொண்டிருப்பதே எங்களுக்குப் பெரும் உற்சாகமாக இருக்கும். பம்பாய் மெயில் நாடகத்தில் நான் பாடுவதற்கென்றே ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தார். அப்பர் பெருமானின் தேவாரப் பாடலைச் சிறிது மாற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னதாக நினைவு. அதை நான் கேதார கெளளராகத்தில் வீராவேசத்தோடு பாடுவேன். பாடுகிற எனக்கே உடல் புல்லரிக்கும். பாடல் முடியும்போது பெருத்த கைதட்டல் விழும். அந்தப் பாட்டு இது.


“புற்றில்வாழ் அரவுக் கஞ்சோம்
பொய்யர்தம் மெய்யுக் கஞ்சோம்
விற்றொழில் வேந்தர்க் கஞ்சோம்
வெஞ்சிறை வாழ்வுக் கஞ்சோம்
கொற்றொழில் பீரங் கிக்கும்
கொடும்பணத் திமிர்க்கு மஞ்சோம்
பற்றிலா ஏழை கண்ணீர்
பார்க்கநாம் அஞ்சு வோமே!

இந்தப் பாட்டு அந்த நாளில் பம்பாய் மெயில் நாடகத்தின் தரத்தையே உயர்த்தியது.

கையெழுத்துப் பத்திரிகை

ஈரோடு முடிந்ததும் சேலம், ஆத்தூர் முதலிய இடங்களுக்குச் சென்றோம். ஆத்தூரில் பம்பாய் மெயில் நாடகத்திற்கு அமோகமான ஆதரவு கிடைத்தது. பகல் நேரங்களில் எங்களுக்கு நிறைய ஒய்வுண்டு. அதைப் பயனுள்ள வழியில் செலவழிக்க விரும்பினேன். கையெழுத்துப் பத்திரிகையொன்று தொடங்கத் திட்டமிட்டேன். சில நடிக நண்பர்கள் என் யோசனையை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.

9.12-34 இல் அறிவுச்சுடர் என்னும்பெயருடன் கையெழுத்துப் பத்திரிக்கையின் முதல் இதழ் வெளி வந்தது. நடிகர்களும் ஏனைய தொழிலாளர்களும் புனைபெயரில் கட்டுரை எழுதி என்னிடம் ரகசியமாகக் கொடுத்து விடுவார்கள். நான் அவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி, பத்திரிகை முழுவதையும் என்கையாலேயே எழுதுவேன். கதை, கட்டுரை, அரசியல் சமுதாயச் சீர்திருத்தம் விகடத் துணுக்குகள், அந்தரத் தபால்கள், திருக்குறள் விளக்கம் இவற்றுடன் நாடக சம்மந்தமான அறிவுரைகளும் அறிவுச்சுடரில் இடம் பெற்றன. நடிகர்கள் உற்சாகத்தோடு எழுதினார்கள். புனைபெயர்களில் எழுதுபவர்களின் உண்மைப் பெயர்களை நான் ஒருவரிடமும் சொல்வதில்லை. எனவே எழுதுபவர்கள் யாரென்று தெரியாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். வாரந்தோறும் ஞாயிறன்று தவறாமல் பத்திரிகையை வெளி பிட்டு வந்தேன். நடிகர்கள் அறிவு வளர்ச்சி பெறவும், பொது விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் கட்டுரை, கதையெழுதி பழகவும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில நடிகர்களும் தொழிலாளர்களும் இதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தொல்லை கொடுத்தார்கள்.

ஆத்தூர், விருத்தாசலம், பண்ணாருட்டி ஆகிய மூன்று ஊர்களிலுமாக மொத்தம் பத்து இதழ்கள் வெளிவந்தன. தம்முடைய குற்றம் குறைகளைப் பத்திரிக்கையில் எழுதுவதைச் சிலர் விரும்பவில்லை. இதனால் அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டன. கடைசியாகப் பெரியண்ணா ஒருநாள் என்னிடம்,

“‘உன்னுடைய பத்திரிகையால் வீணாகச் சண்டை ஏற்பாடுகிறது. நீ செய்வது பயனில்லாத வேலை!” என்றார். வேறு வழியின்றிப் பத்தாவது இதழோடு அறிவுச்சுடர் நிறுத்தப்பட்டது.

சிறுவந்தாடு மாநாடு

பண்ணாருட்டியில் வசூல் இல்லை. இராமாயணம், பம்பாய். மெயில் இரு நாடகங்களுக்கு மட்டும் சுமாராக வசூலாயிற்று. பண்ணாருட்டிக்கு அருகில் பத்தாவது மைலில் சிருவந்தாடு என்னும் சிற்றுார் இருக்கிறது; மகாத்மா காந்தியடிகள் காங்கிரஸ் மாநாடுகள் நகரங்களை விட்டுச் சிற்றுார்களில் நடைபெற வேண்டுமென ஆணையிட்டிருந்தார். அதற்கிணங்கத் தமிழ் மாகாண மாநாடு முதன்முதலாகச் சிறுவந்தாடு கிராமத்தில் நடந்தது. எங்களில் சிலர் காங்கிரசில் தீவிரப் பற்றுக் கொண்டிருந்தால் சிறுவந்தாடு மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்தோம். மாநாட்டுக்கு முதல் நாள் இராமாயணம் வைக்கப் பட்டிருந்தது. நாடகம் விடிய ஆறுமணிவரை நடந்தது. நாடகம் முடிந்ததும் நானும், தம்பி பகவதியும் மற்றும் சிலரும் குறுக்கு வழியில் கால்நடையாகவே புறப்பட்டுச் சிறுவந்தாடு சேர்ந்தோம். மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. எங்களுக்கு அறிமுகமான நண்பர்கள் பலர் மாநாட்டுக்கு வந்திருந்தால் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நான் பாரதி பாடல்களைப் பாடினேன். அன்று மாலையே பண்ணாருட்டிக்குத் திரும்பினோம்.

ராஜ சேகரன்

பண்ணாருட்டியில் புதிதாக ராஜசேகரன் நாடகம் தயாராயிற்று. இந் நாடகம் தஞ்சை என். விஸ்வநாதய்யரால் எழுதப் பெற்றது. எம். ஆர். ராதா இருந்தபோதே நடந்த எண்ணிய நாடகம் இது. நல்ல முற்போக்கான கருத்தமைந்த நாடகம். இந்நாடகத்திற்கு நான் சில பாடல்களும் எழுதினேன். காட்சிகள், உடைகள் ஒன்றும் புதிதாகத் தயாரிக்க வசதி இல்லை. என்றாலும் நாடகம் சிறப்பாக நடந்தது.நான் ராஜசேகரனாக நடித்தேன். எங்கள் குழுவில் அப்போது பிரதம பெண் வேடதாரியாக விளங்கிய பி. எஸ். திவாக்ரன் ராஜகுமாரி பத்மலோசனியாக நடித்தார். திவாகரன் நல்ல அழகும் இனிய குரலும் வாய்ந்த இளைஞர். அவருடைய தோற்றம் பெண்போலவே இருக்கும். பல நாடகங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார், மிகச் சிறந்தநடிகர், திவாகரன் இப்போது சென்னையில் ‘செக்ஸ்போன்’ என்னும் இசைக் கருவியை மிக அருமையாக வாசித்து வருகிறார், மலையாளப் படங்களுக்குச் சங்கீத டைரக்டராகவும் இருந்து வருகிறார்.

ராஜசேகரன் நாடகத்திற்கும் வசூல் இல்லை. பண்ணாருட்டியை விட்டு வேறெங்கும் போக முடியாமல் கஷ்டப்பட்டோம். இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்த எங்கள் மூத்த தங்கைக்கு வரன் பார்ப்பதற்காகப் பெரியண்ணா அடிக்கடி ஊருக்குப் போக வேண்டிருந்தது. பாலகிருஷ்ண சாஸ்திரி, கம்பெனிக்கு மானேஜராக வந்து சேர்ந்தார்.

சாஸ்திரியின் நிருவாகம்

சாஸ்திரியார் கள்ளம் கபடு இல்லாதவர்; நேர்மையானவர்; ஆனால் எப்போதும் வாய்த்துடுக்காகப் பேசுவார். இந்தப் போக்கு கம்பெனியில் யாருக்கும் பிடிக்கவில்லை. எல்லோரும் அவருடன் வெறுப்போடு பழகினார்கள். இதைக் குறித்துப் பெரியண்ணாவிடம் புகார்செய்யவும் ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. எனவே எல்லோரும் பொருமிக் கொண்டு சும்மா இருந்தார்கள்.

பண்ணாருட்டியில் நாடகமும் நிறுத்தப்பட்டது கண்ணனூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களிலிருந்து கண்ட்ராக்டர்கள், வந்து போனார்கள். பயனில்லை. சிறந்த நடிகர்கள், உயர்ந்த நாடகங்கள், ஓரளவுக்குக் காட்சியமைப்பு, உடைகள் எல்லாம் இருந்தும் வசூல் இல்லையென்றால் எவர் உள்ளந்தான் வேதனை யடையாது? பெரியண்ணா எப்போதும் சோர்ந்தபடி சிந்தனையில் இருக்கத் தொடங்கினார். இந்நிலையில் ஒரு வாரம் சென்றது. தெய்வச் செயலாக மீண்டும் மேட்டுப் பாளையம் கண்ட்ராக்டர் வந்தார். மேட்டுப்பாளையத்துக்கு ரயில் செலவு நீக்கி ஒரு மாதத்திற்கு ஆயிரத்து அறுநூற்றி இருபத்தைந்து ரூபாய்கள் தருவதாகச் சொன்னார். கம்பெனியின் ஒருமாதச் சாப்பாட்டுக்கும், சம்பளத்திற்கும் குறைந்த பட்சம் அப்போது இரண்டாயிரம் ரூபாய்கள் தேவைப்பட்டன. என்றாலும் எப்படியாவது பண்ணாருட்டியை விட்டு வெகுதூரம் போய்விட வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியதால் பெரியண்ணா ஒப்புக் கொண்டார். ஊருக்குப் போய் பணம் அனுப்புவதாகச் சொல்லிப்போன கண்ட்ராக்டர் சொன்னபடி பணம் அனுப்பவில்லை. ரயில் செலவுக்குப் பணம் வந்து சேர ஒருவாரம் பிடித்தது. பணம் வந்த பிறகு உள்ளுர்க் கடன்களையெல்லாம் தீர்த்துவிட்டு மேட்டுப்பாளையத்திற்குப் புறப்பட்டோம். வழியில் எத்தனையோ கஷ்டங்கள் ஏற்பட்டன.எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம்.

குழப்பமான சூழ்நிலை

மேட்டுப்பாளையத்தில் சுடுகாட்டின் அருகில்தான் எங்களுக்குக் குடியிருக்க இடம் கிடைத்தது. பெரியாரின் தொடர்பு ஏற்பட்டபின், பேய் பிசாசுப் பயம் போய்விட்டதால் துணிவாக இருந்தோம். பயங்கரமான மழை மேட்டுப்பாளையத்தில். கொட்டகையின் தகரம் ஒருநாள் காற்றில் பிய்த்துக்கொண்டு போய்விட்டது. நாடகங்களுக்கு வசூல் இல்லை. காண்ட்ராக்டரிடமிருந்து பணம் பெற வழியில்லை. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நடிகர்களும் தொழிலாளிகளும் அடிக்கடி கோவைக்குப் போய் வந்தார்கள். கம்பெனியின் சட்டதிட்டங்களுக்கு யாரும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. கோவையில் அப்போது ஏ. என் மருதாசலம் செட்டியார், மனோரமா பிலிம்ஸ் என்னும் படக் கம்பெனியைத் தொடங்கியிருந்தார். அவர் சதிலீலாவதியை படமாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதற்காகச் செட்டியார் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார். எங்கள் கம்பெனியில் அப்போது நகைச்சுவை நடிகராக இருந்த சுந்தரமையர் எங்கள் அனுமதி இல்லாமலை செட்டியாரது படத்தில், நடிக்க முன்பணம் வாங்கியதாக அறிந்தோம். மற்றும் சில நடிகர்களும் இவ்வாறே நடந்து கொண்டார்கள். செட்டியார் எங்களையும் படத்தில் நடிக்க அழைத்தார். பெரியண்ணா இதற்கு ஒப்பவில்லை. இந்த நிலையில் காண்ட்ராக்டு முடிந்தது. உதக மண்டலத்திற்குப் போய் சொந்தமாக நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உதகமண்டலத்தின் குளிரை நான் ஒருமுறை ஏற்கனவே அனுபவித்திருந்தேன். எனவே, குளிருக்கு வேண்டிய ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில் இந்த முடிவு செய்தது எனக்குத் திருப்தியளிக்கவில்லை.