என் சரித்திரம்/45 புலமையும் அன்பும்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—45

புலமையும் அன்பும்

குருபூஜைத் தினத்தன்று இரவு ஆகாரமான பிறகு அங்கே நடைபெறும் விசேஷங்களைப் பார்க்கச் சென்றேன். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஓர் அழகிய சிவிகையில் அமர்ந்து பட்டணப் பிரவேசம் வந்தார். உடன் வந்த அடியார்களின் கூட்டமும் வாண வேடிக்கைகளும் வாத்திய முழக்கமும் அந்த ஊர்வலத்தைச் சிறப்பித்தன. பல சிறந்த நாதஸ்வரகாரர்கள் தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். சிவிகையின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. பட்டணப் பிரவேச காலத்தில் சிஷ்யர்கள் வீடுகளில் தீபாராதனை நடந்தது.

கொலுக் காட்சி

பட்டணப் பிரவேசம் ஆன பிறகு கொலு நடைபெற்றது. அப்போது கொலுமண்டபத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருக்க அவருக்குப் பூஜை முதலியன நடைபெறும். புஷ்பங்களால் அலங்கரிக்கப் பெற்ற மண்டபத்தின் இடையே சுப்பிரமணிய தேசிகர் அசையாமல் அமர்ந்திருந்தார். அவருடைய மேனியின் அமைப்பும் ஒளியும் ஏதோ ஓர் அழகிய விக்கிரகத்தை அங்கே அங்கே வைத்துத் தூப தீபங்களுடன் பூஜை செய்வதாகவே தோற்றச் செய்தன. கொலு நடைபெறும் இடத்தில் பெருங்கூட்டமாக இருந்தது. தேவாரப் பண்ணிசையும் வாத்திய கோஷமும் இடைவிடாமல் ஒலித்தன.

எல்லாவற்றையும் கண்டுகளித்துப் பின்பு பிள்ளையவர்கள் தங்கியிருக்கும் ஜாகைக்கு வந்தேன். ஆசிரியர் உறங்காமல் தம் நண்பராகிய மகாலிங்கம் பிள்ளையென்பவருடன் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் பேச்சினால் அந்த மடத்துச் சம்பிரதாயங்களும் சுப்பிரமணிய தேசிகரது சிறப்பும் எனக்குத் தெரியவந்தன.

கொலு நடந்த பிறகு தேசிகர் சிரமபரிகாரம் செய்துகொள்ளாமல் வந்தவர்களுக்கு விடைகொடுத்து அனுப்புவது வழக்கம். மறுநாள் காலையிலே புறப்பட்டுப்போக வேண்டியவர்கள் குருபூஜையன்று இரவே தேசிகரைத் தரிசித்து உத்தரவுபெற்றுச் செல்வார்கள், குருபூஜையன்று காலையில் வேளாளப் பிரபுக்களும் பிறரும் தங்கள் தங்களால் இயன்ற பொருளைப் பாதகாணிக்கையாக வைத்துத் தேசிகரை வணங்குவார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவரவர்கள் தகுதிக்கு ஏற்றபடி சம்மானம் செய்து அனுப்பும் காரியத்தை ஆதீனகர்த்தர் குருபூஜையன்று இரவு கவனிப்பார். சுப்பிரமணிய தேசிகர் இவ்விஷயத்தில் சிறிதேனும் தாமதம் செய்யாமல் வந்தவர்களுடைய சௌகரியத்தை அனுசரித்து உடனுக்குடன் அனுப்பிவிடுவார். பிரபுக்களை அனுப்புவதோடு வித்துவான்களையும் தக்க சம்மானம் செய்து அனுப்புவார். பலர் மறுநாளும் இருந்து சல்லாபம் செய்து விடைபெற்றுச் செல்வதுண்டு.

செய்யுள் தானம்

இச்செய்திகளெல்லாம் பிள்ளையவர்களும் மகாலிங்கம் பிள்ளையும் பேசிக்கொண்டிருந்த சம்பாஷணையால் தெரியவந்தன. கொடையாளிகள் கொடைபெறுவாருடைய சௌகரியத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்வதை நான் அதற்கு முன் எங்கும் கேட்டதில்லை; கண்டதுமில்லை. சுப்பிரமணிய தேசிகர் அத்தகையவரென்பதை அறிந்தபோது அவருக்கு ஏற்பட்டிருக்கும் புகழ் முற்றும் தகுதியானதே என்று நினைத்தேன். நான் அக்காட்சியை நேரே சிறிதுநேரம் பார்த்துவிட்டும் வந்தேன்.

மகாலிங்கம் பிள்ளை பேசி விடைபெற்றுச் சென்ற பிறகு ஆசிரியர் அவ்வீட்டின் இடைகழித் திண்ணையில் சயனித்துக்கொண்டார். ஒரு நிமிஷங்கூட இராது; அதற்குள் யாரோ ஒரு முதியவர் வந்தார். அவர் பெயர் பசுபதி பண்டாரமென்பது. அவர் பழைய கதையையெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். பிள்ளையவர்களை இளமையில் அவர் பரீக்ஷை செய்தாராம். அவசரமாக ஊருக்குப் போக வேண்டுமாம். இன்னும் என்ன என்னவோ சுற்றி வளைத்துப் பேசினார். கடைசியில் தமக்கு ஒரு செய்யுள் இயற்றித்தந்தால் சுப்பிரமணிய தேசிகரிடம் தாமே செய்ததாகச் சொல்லிச் சம்மானம் பெற அனுகூலமாகும் என்று சொன்னார். அக்கவிஞர்பிரான் உடனே சர்வசாதாரணமாக ஒரு பாடலை எழுதச்செய்து அவரிடம் அளித்தார். அவர் அதை வாங்கிக்கொண்டு போனார். ஆசிரியர் மறுபடியும் கீழே படுத்தார். அடுத்த நிமிஷமே மற்றொருவர் வந்தனர். அவரும் ஒரு செய்யுள் செய்து தரும்படி யாசித்தார்.

இப்படியே ஒருவர் பின் ஒருவராக அன்று இரவு முழுவதும் பலர் பிள்ளையவர்களிடம் பாடல் வாங்கிக்கொண்டு போய்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் ஸம்மானம் பெற்றுச் சென்றார்கள். இந்த ஆச்சரியமான நிகழ்ச்சிகளை நான் சில நாழிகை பார்த்தேன். பிறகு கண்ணயர்ந்தேன். விடியற்காலையில் எழுந்தபோதுதான் ஆசிரியர் இரவு முழுவதும் தூங்கவேயில்லை என்று தெரிந்தது.

புலவரும் புரவலரும்

பொழுதுவிடிந்தவுடன் அவர் அனுஷ்டானம் செய்துகொண்டு சுப்பிரமணிய தேசிகரிடம் சென்றார். நானும் உடன் போனேன். அவர் இரவு முழுவதும் கையோயாமல் கொடுத்தும் சலிப்பில்லாமல் காலையில் ஸ்நானம் முதவியவற்றை முடித்துக்கொண்டு மறுபடியும் தம் திருக்கை வழக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். பிள்ளையவர்களைக் கண்டவுடனே அவருக்கு முகமலர்ச்சியும் அதன் மேல் ஒரு சிரிப்பும் உண்டாயின. பிள்ளையவர்கள் அவரை வந்தனம் செய்துவிட்டுத் திருநீறிடப்பெற்று ஓரிடத்தில் அமர்ந்தார்.

“இராத்திரி பலபேர் தங்களுக்குச் சிரமம் கொடுத்துவிட்டார்கள்போல இருக்கிறதே!” என்று தேசிகர் கேட்டார். ஆசிரியர் புன்னகை பூத்தார்.

“ஒவ்வொருவரும் பாடல் சொல்லும்போது நமக்குப் பரமானந்தமாகிவிட்டது. என்ன பாட்டு! என்ன வாக்கு! எங்கிருந்துதான் விளைகிறதோ!” என்றார் தேசிகர்.

“எல்லாம் மகாஸந்நிதானத்தின் திருவருட் பலந்தான்” என்று பணிவோடு கூறினார் ஆசிரியர்.

“நாச்சலிக்காமல் பாடும் உங்கள் பெருமையை நேற்று இரவு நன்றாகத் தெரிந்துகொண்டோம்”

“கை சலிக்காமல் கொடுக்கும் ஸந்நிதானத்தின் கொடையினால்தான் எல்லாம் பிரகாசப்படுகின்றன.”

புலவரும் புரவலரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு அளவுண்டோ? அங்கே இருந்தவர்கள் யாவரும் விஷயத்தைச் சுப்பிரமணிய தேசிகரிடம் கேட்டு ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போனார்கள்.

தாயினும் அன்பு

பிறகு ஆசிரியர் விடைபெற்று வெளியே வந்து கொலுமண்டபத்தில் நின்றிருந்த காரியஸ்தராகிய ராமையரென்பவரை அழைத்தார்; “சாமிநாதையர் காலையில் ஆகாரம் செய்துகொள்வது வழக்கம்; அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்” என்று அவரிடம் சொன்னார். அவர் என்னை அழைத்துக்கொண்டு அக்கிரகாரத்துக்குச் சென்றார். தம்முடைய ஆகார விஷயத்திலுள்ள கவனத்தைக் காட்டிலும் என் ஆசிரியருக்கு என் உணவு விஷயத்தில் இருந்த ஜாக்கிரதை அதிகம். இதைப் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன். தன் குழந்தை வயிறுவாடப் பாராத தாயின் அன்புக்கும் என் ஆசிரியர் காட்டிய அன்புக்கும் வேற்றுமையே இல்லை. இதை நான் மனமார அறிந்தவன். கோட்டூரில் இருந்த காலத்தில் ஒருமுறை பிள்ளையவர்களைப் பற்றிப் பேசும்போது, “பெற்ற தாயாரைவிட மிகவும் அன்பாக நடத்துகிறார்” என்று சொன்னேன். அந்த வார்த்தைகள் என் தாயார் காதில் விழுந்தன. “என்ன அப்பா அப்படிச் சொல்கிறாய்! தாயாரைக் காட்டிலும் ஒருவர் அதிக அன்புகாட்ட முடியுமா?” என்று கேட்டார். என் வார்த்தைகளால் அவர் சிறிது வருத்தத்தையே அடைந்தார். பெற்ற தாய்க்கு அன்பு இருக்கலாம்; ஆனால் அதைச் செயலிற்காட்ட இயலாதபடி அவள் நிலை இருக்கும். என் ஆசிரியருடைய அன்போ அவ்வப்போது செயல்களாகப் பரிணமித்தது. அச்செயல்கள் மற்றவர்களுக்குச் சிறியனவாகத் தோற்றலாம். நான் அவற்றைப் பெரியனவாகவே கருதுகிறேன்.

அன்னபூரணி

ஆசிரியரது அன்பைப் பற்றி நினைத்துக்கொண்டே ராமையருடன் அவர் அழைத்துச் சென்ற வீட்டுக்குள் நுழைந்தேன். “அன்னபூரணி” என்று ராமையர் தம் தமக்கையை அழைத்தார். பல சமயங்களில் சாதாரணமாகத் தோற்றும் சில நிகழ்ச்சிகள் முக்கியமான சில சமயங்களில் மனத்தில் நன்றாகப் பதிந்துவிடுகின்றன. என் நிலையையும் என் பசியறிந்து உணவுக்கு ஏற்பாடு செய்யும் என் ஆசிரியர் அன்பையும் நினைத்தபடியே மற்ற விஷயங்களை மறந்திருந்த எனக்கு “அன்னபூரணி” என்ற அப்பெயர் ஏதோ நல்ல சகுனமாகத் தோற்றியது. ஒருவிதமான ஆனந்தமும் ஏற்பட்டது. எனக்கு ஆகாரம் உதவ அன்னபூரணியையே அவர் அழைத்தால் என்ன சந்தோஷம் விளையுமோ அத்தகைய சந்தோஷம் உண்டாயிற்று. காசியில் அன்னபூரணி அம்பிகையின் திருக்கோயில் விசேஷச் சிறப்புடையதென்று கேள்வியுற்றிருந்தேன். முதல்நாள் இரவு காசிக் கலம்பகத்தைப் படித்தபோது காசி நகரத்தை மனத்தால் அனுபவித்தேன்; மறுநாள் காலையிலே அன்னபூரணிதேவியே எனக்கு அன்னம் படைத்ததாகப் பாவித்துக்கொண்டேன். “நமக்குக் குறைவில்லை என்பதை இறைவன் இத்தகைய நிமித்தங்களால் உணர்த்துகிறான்” என்று நினைத்து மகிழ்ந்தபடியே அன்னபூரணியம்மாள் இட்ட ஆகாரத்தை உண்டு மீண்டும் பிள்ளையவர்களை அணுகினேன்.

பாடம்

“காசிக் கலம்பகத்தில் எஞ்சிய பாடங்களையும் படித்து விடலாமே” என்று ஆசிரியர் சொன்னார். குமாரசாமித் தம்பிரான் முதலியவர்கள் பாடம் கேட்பதற்காக வந்தார்கள். முதல் நாளைக் காட்டிலும் அதிக ஊக்கத்தோடு நான் அன்று படித்தேன். முற்பகலில் அந்தப் பிரபந்தம் முடிந்தது. அப்பால் குமாரசாமித் தம்பிரானும் வேறு சிலரும் பிள்ளையவர்களைப் பார்த்து, “இந்த இரண்டு தினங்களில் ஒரு நல்ல நூலைக் கேட்டு முடித்தோம். ஐயா அவர்கள் இங்கேயே இருந்து பாடம் சொன்னால் இன்னும் பல நூல்களை நாங்கள் கேட்போம். எங்கள் பொழுதும் பயனுள்ளதாகப் போகும்” என்று கேட்டுக்கொண்டனர்.

ஆசிரியர் மாயூரம் சென்று சில தினங்களில் வந்து அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். திருவாவடுதுறைக் காட்சிகளையும் அங்கு உள்ளோரின் அன்பையும் கண்ட எனக்கும் பிள்ளையவர்கள் திருவாவடுதுறைக்கே வந்திருந்தால் நன்றாக இருக்குமென்ற எண்ணம் உண்டாயிற்று.

சோழ மண்டல சதகம்

அன்று பிற்பகலில் திருமலைராயன் பட்டணத்திலிருந்து ஆசிரியரைப் பார்க்க வந்த கனவான் ஒருவர், தாம் கொண்டுவந்த சோழ மண்டல சதக ஏட்டுப் பிரதியைப் பிள்ளையவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய ஆசிரியர் என்னிடம் அளித்துப் பிரித்துப் படிக்கும்படி சொன்னார். புதிய நூல்களைப் படிப்பதில் எனக்கு அளவில்லாத சந்தோஷம் உண்டு. ஆதலால் அதை ஊக்கத்தோடு படிக்க ஆரம்பித்தேன். அங்கங்கே அவர் விஷயங்களை விளக்கிக்கொண்டே சென்றார்.

சோழ மண்டல சதகமென்ற பெயரைக் கேட்டவுடனே எனக்கு நான் படித்த சதகங்களின் ஞாபகந்தான் வந்தது. நீதிகளை நூறு நூறு பாடல்களால் எடுத்துக்கூறும் அந்தச் சதகங்களில் உள்ள செய்யுட்களைப் போன்ற பாடல்களை இச்சதகத்திற் காணவில்லை. “சதகமென்றால் பெரிய பாட்டுக்களாக இருக்குமே” என்று ஐயுற்று நான் வினாவியபோது, நீதி சதகங்களுக்கும் மண்டல சதகங்களுக்குமுள்ள வேற்றுமையை ஆசிரியர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

ஒவ்வொரு நாட்டின் பெருமையையும் அந்நாட்டில் வாழ்ந்திருந்த அரசர், புலவர், உபகாரிகள் முதலியோருடைய பெருமையையும் தனியே தொகுத்துப் பாடுவது ஒரு சம்பிரதாயமென்றும் அப்படிப் பாடிய நூலே சோழ மண்டல சதகமென்றும் அதனை இயற்றியவர் வேளூர் ஆத்மநாத தேசிகரென்றும் படிக்காசுப் புலவர் தொண்டை மண்டலச் சிறப்பைப் பாராட்டிப் பாடிய தொண்டை மண்டல சதகம் மிகவும் சிறந்ததென்றும் கூறினார்.

விடை பெற்றது

சில மணிநேரத்தில் சோழ மண்டல சதகம் முழுவதையும் நான் படித்து முடித்தேன். அதிலே குறிப்பிட்டுள்ள சில பழைய வரலாறுகள் விளங்கவில்லை.

அப்பால் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “இப்படியே என்னுடன் மாயூரம் வரலாமல்லவா?” என்று கேட்டார்.

“இல்லை. புத்தகங்கள், வஸ்திரங்கள் முதலியன ஊரில் இருக்கின்றன. ஐயாவைப் பார்த்து எப்போது வரலாமென்று கேட்டுப் போகவே வந்தேன். போய் உடனே திரும்பிவிடுகிறேன்.”

“அவசரம் வேண்டாம். ஊருக்குப் போய் இன்னும் சில தினங்கள் இருந்துவிட்டே வரலாம். அதற்குள் நான் மாயூரம் போய்விடுவேன். அங்கே வந்துவிடலாம்.”

அன்றிரவு திருவாவடுதுறையில் தங்கியிருந்து மறுநாட்காலையில் நான் ஆசிரியரிடம் விடைபெற்றுச் சூரியமூலை போய்ச் சேர்ந்தேன். என் தந்தையார் முதலியவர்களிடம் குருபூஜைச் சிறப்பையும் ஆசிரியருடைய அன்புச் செயல்களையும் பற்றித் தெரிவித்தேன். கேட்டு அவர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.

சூரியமூலையில் பத்து நாட்கள் வரையில் இருந்து பழைய பாடங்களைப் படித்து வந்தேன். அப்பால் ஒருநாள் தந்தையாரை அழைத்துக்கொண்டு மாயூரம் வந்தேன். பிள்ளையவர்கள் அங்கே இருந்தார்கள். என் தந்தையார் மாயூரத்தில் ஒருநாள் தங்கி மறுநாள் விடைபெற்றுச் சூரியமூலைக்குச் சென்றுவிட்டார்.

மாயூர நிகழ்ச்சிகள்

நான் மாயூரம் வந்தபோது பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளைக்கும் வேறு சிலருக்கும் ஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகள் பிரபந்தங்களைப் பாடஞ் சொல்ல ஆரம்பித்திருந்தார். நால்வர் நான்மணி மாலை முதலிய சில பிரபந்தங்கள் நிறைவேறியிருந்தன. நான் போன சமயத்தில் பிக்ஷாடன நவமணிமாலை நடந்து வந்தது. அத்தமிழ்ப் பாடத்தில் நானும் கலந்துகொண்டேன். இடைவேளைகளில் முன்பு நடந்த பிரபந்தங்களையும் கேட்டு முடித்தேன். மத்தியில் ஆசிரியர் காரைக்காலில் இருந்த ஓர் அன்பர் விரும்பியபடி அவ்வூர் சென்று அப்படியே திருவாரூர், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களுக்குப் போனார். மாயூரத்தில் என்னுடன் சவேரிநாத பிள்ளை இருந்து வந்தார்.

மாயூரத்தில் நான் சாப்பிட்டு வந்த விடுதிக்குக் கொடுக்க வேண்டிய பணம் கொடுக்க இயலாமையால் அங்கே ஆகாரம் செய்யப் போகவில்லை. ஆதலால் அரிசி முதலியவற்றைப் பெற்று நானே சமையல் செய்து சாப்பிடத் தொடங்கினேன். பிள்ளையவர்கள் வெளியூர்ப் பிரயாணத்தில் இருந்தாலும் என்னை மறக்கவில்லையென்பதை அவரிடமிருந்து சவேரிநாத பிள்ளைக்கு வந்த ஒரு கடிதம் வெளிப்படுத்தியது. திருச்சிராப்பள்ளியிலிருந்து அதை எழுதியிருந்தார். அதில் ஆசிரியர் என்னை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று சவேரிநாத பிள்ளைக்குத் தெரிவித்திருந்தார்.

சில தினங்களில் ஆசிரியர் மாயூரத்துக்குத் திரும்பி வந்தனர். வந்தவுடன், நானே சமையல் செய்து சாப்பிடுவதை அறிந்து அவர் மிகவும் வருத்தமுற்று என்னிடம் மூன்று ரூபாயைக் கொடுத்து, “இதைக் கொண்டுபோய் விடுதியிற் கொடுத்துச் சாப்பிட்டு வாரும்” என்று அனுப்பினார். அது முதல் பழையபடி முன் சொன்ன விடுதியிலேயே ஆகாரம் செய்துவந்தேன்.

அம்பர்ப்புராணம்

ஒரு நாள் ஆசிரியர் தம் புஸ்தகக்கட்டில் உள்ள ஓர் ஏட்டுச் சுவடியை எடுத்து வரச் சொன்னார். அவர் முன்னமே பாடத் தொடங்கி ஓரளவு எழுதப்பெற்று முற்றுப் பெறாதிருந்த அம்பர்ப் புராண ஏட்டுச் சுவடி அது; ‘திருவம்பர்’ என்னும் தேவாரம் பெற்ற சிவஸ்தல வரலாற்றைச் சொல்லுவது. அதை முதலிலிருந்து என்னைப் படித்து வரும்படி சொன்னார். நான் மெல்லப் படித்தேன். அவ்வப்போது சில திருத்தங்களை அவர் சொல்ல அவற்றை நான் சுவடியிற் பதிந்தேன். இரண்டு மூன்று தினங்களில் அதில் உள்ள பாடல்கள் முழுவதையும் படித்துத் திருத்தங்களும் செய்தேன். “இந்த நூலை ஆரம்பித்து ஒரு வருஷமாகிறது. அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. இதை முன்பு நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினார். அவர் திருத்தமாக எழுதக் கூடியவரல்லர். நான் ஏதாவது சொன்னால் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சில இடங்களில் வேறாக எழுதியிருக்கிறார். இப்படி இவர் செய்திருப்பாரென்று சந்தேகப்பட்டுத்தான் மறுபடியும் படிக்கச் சொன்னேன். சொல்வதைச் சரியாக எழுதுவோர் கிடைப்பது அருமையாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, “இனி இந்தப் புராணத்தை விரைவில் முடித்துவிடவேண்டும். நீர் ஏட்டில் எழுதலாமல்லவா?” என்று என்னை ஆசிரியர் கேட்டார்.

“காத்திருக்கிறேன்” என்றேன் நான்.

“திருவாவடுதுறைக்கு வந்து இருப்பதாகச் சொல்லியிருக்கிறேன். தம்பிரான்களுக்குப் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாக இருக்கிறது. இதை அங்கே போய் முடித்துவிடலாம்” என்று அவர் சொன்னார். அப்போது நான் திருவாவடுதுறைப் பிரயாணம் சமீபத்தில் இருப்பதை அறிந்து சந்தோஷமடைந்தேன்.