என் சரித்திரம்/46 இரட்டிப்பு லாபம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—46

இரட்டிப்பு லாபம்


ரட்டிப்பு லாபம் திருவாவடுதுறைப் பிரயாணம் நான் எதிர்பார்த்தபடியே விரைவில் ஏற்பட்டது. நான் மாயூரம் வந்து சேர்ந்த அடுத்த வாரமே பிள்ளையவர்கள் திருவாவடுதுறையை நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் சவேரிநாத பிள்ளையும் உடன் சென்றோம். சில ஏட்டுச் சுவடிகளும் எங்களுக்கு வேண்டிய வஸ்திரங்களும் நாங்கள் எடுத்துக்கொண்டு போனவை.

மாயூரம் எல்லையைத் தாண்டி வண்டி போய்க்கொண்டிருந்தது. “அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனை எடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக்கொள்ளும்” என்று அவர் சொன்னார். நான், “முன்னமே முழுவதையும் வாசித்துக்காட்டித் திருத்தங்களைப் பதிந்தோமே” என்று எண்ணினேன்.

கவிதை வெள்ளம்

ஏட்டைப் பிரித்து அம்பர்ப் புராணத்தில் எழுதப்பெற்றிருந்த இறுதிச் செய்யுளை வாசிக்கச் சொன்னார். பிறகு சிறிதுநேரம் ஏதோ யோசித்தார். அப்பால் புதிய பாடல்களைச் சொல்ல ஆரம்பித்தார். “பெரிய ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது இது? வண்டியிலே பிரயாணம் செய்கிறோம். இப்போது மனம் ஓடுமா? கற்பனை எழுமா? கவிகள் தோன்றுமா? அப்படித் தோன்றினாலும் நாலைந்து பாடல்களுக்கு மேற் சொல்ல முடியுமா?” என்று பலவாறு நான் எண்ணமிடலானேன்.

அவர் மனப்பாடம் பண்ணிய பாடல்களை ஒப்பிப்பதுபோலத் தடையின்றி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லி வந்தார். வண்டி மெல்லச் சென்றது. அவருடைய கவிதை வெள்ளமும் ஆறுபோல வந்துகொண்டிருந்தது. என் கையும் எழுத்தாணியை ஓட்டிச் சென்றது. வண்டியின் ஆட்டத்தில் எழுத்துக்கள் மாறியும் வரிகள் கோணியும் அமைந்தன. அவர் சொன்ன செய்யுட்களோ திருத்தமாகவும் பொருட் சிறப்புடையனவாகவும் இருந்தன.

வடதேசத்திலிருந்த நந்தனென்னும் அரசன் திருவம்பரில் வழிபட்டுப் பேறுபெற்றானென்பது புராண வரலாறு. அவன் அந்த ஸ்தலத்துக்கு வந்தானென்று சுருக்கமாகச் சொல்லி முடிக்காமல் இடைவழியில் உள்ள ஸ்தலங்களை எல்லாம் தரிசித்து வந்தானென்று அமைத்து அந்த அந்த ஸ்தலங்களின் பெருமைகளைச் சுருக்கமாகச் சொல்லுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்துக்கொண்டார். அக்கவிஞர். சிவஸ்தல விஷயமாகப் பல செய்திகளை அவர் அறிந்திருந்தார். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவற்றை வற்புறுத்த வேண்டுமென்பது அவரது அவா. ஆகையால் நந்தன் பல சிவ ஸ்தலங்களைத் தரிசித்து இன்புற்றானென்ற வரலாற்றை விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.

அப்பகுதிக்கு “நந்தன் வழிபடு படலம்” என்று பெயர். முன்பு 53 பாடல்கள் பாடப்பெற்றிருந்தன. அதற்கு மேல் நந்தன் பிரயாணத்தைப் பற்றிய செய்திகளை உரைக்கும் செய்யுட்கள் எங்கள் பிரயாணத்தில் இயற்றப்பட்டன.

அவ்வப்போது ஒவ்வொரு செய்யுளை ஆசிரியர் புதியதாகச் சொல்ல நான் எழுதியிருக்கிறேன். அக்காலங்களிலேயும் அவரது கவித்துவத்தைக் குறித்து நான் வியந்ததுண்டு. ஆனால் இப்பிரயாணத்தில் எனக்கு உண்டான ஆச்சரியமோ எல்லாவற்றையும் மீறி நின்றது. ஒரு வரலாற்றை அமைத்துத் தொடர்ச்சியாகப் பேசுவதுபோலவே செய்யுட்கள் செய்வதென்பதைக் கதையில்தான் கேட்டிருந்தேன். கம்பர் ஒரு நாளில் எழுநூறு செய்யுட்கள் பாடினாரென்று சொல்லுவார்கள். “அவ்வளவு விரைவில் செய்யுள் இயற்ற முடியுமா? அது கட்டுக்கதையாக இருக்க வேண்டும். அல்லது கம்பர் தெய்விக சக்தியுடையவராக இருக்கவேண்டும்” என்று நான் நினைத்திருந்தேன். அன்றைத் தினம் ஆசிரியர் செய்யுட்களை இயற்றிய வேகத்தையும் அதற்குப் பின் பல சமயங்களில் அவருடைய கவிதைவெள்ளம் பெருக்கெடுத்து வருவதையும் நேரே அறிந்த எனக்கு அப்பழைய வரலாறு உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கை உண்டாயிற்று.

வண்டியிலே போவதை நாங்கள் மறந்தோம். தம் கற்பனா உலகத்தில் அவர் சஞ்சாரம் செய்தார். அங்கிருந்து ஒவ்வொரு செய்யுளாக உதிர்த்தார். அவற்றை நான் எழுதினேன். எனக்கு அவருடைய உருவமும் அவர் கூறிய செய்யுட்களுமே தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை. ஒரு பாட்டை அவர் சொல்லி நிறுத்தியவுடன் சில சில சமயங்களில் அந்த அற்புத நிகழ்ச்சிக்குப் புறம்பாக நின்று நான் சிலநேரம் பிரமிப்பை அடைவேன். ஆனால் அடுத்த கணமே மற்றொரு செய்யுள் அவர் வாயிலிருந்து புறப்பட்டுவிடும். மீண்டும் நான் அந்த நிகழ்ச்சியிலே கலந்து ஒன்றிவிடுவேன்.

திருவாவடுதுறையை அடைந்தது

“திருவாவடுதுறை வந்துவிட்டோம்” என்று வண்டிக்காரன் சொன்னபோதுதான் நாங்கள் நந்தனையும் அவன் போன வழியையும் மறந்துவிட்டு நிமிர்ந்து பார்த்தோம். “சரி, சுவடியைக் கட்டிவையும்; பின்பு பார்த்துக்கொள்ளலாம்” என்று ஆசிரியர் உத்தரவிட்டார். அவரை வாயாரப் பாராட்டிப் புகழும்நிலையும் அதற்கு வேண்டிய ஆற்றலும் இருக்குமாயின் அப்போது நான் ஓர் அத்தியாயம் சொல்லி என் ஆசிரியர் புகழைவிரித்து என் உள்ளத்தே இருந்த உணர்ச்சி அவ்வளவையும் வெளிப்படுத்தியிருப்பேன். அந்த ஆற்றல் இல்லையே!

திருவாவடுதுறையில் தெற்குவீதியில் உள்ள சின்னோதுவார் வீட்டிலே போய் இறங்கினோம். அங்கே ஆசிரியர் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிப்பதற்காகப் புறப்பட்டார். நான் நிழல்போலவே தொடர்ந்தேன். நாங்கள் திருவாவடுதுறையை அடைந்த செய்தி அதற்குள் தம்பிரான்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் மடத்து வாயிலிலே பிள்ளையவர்களை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். அவரைக் கண்டவுடன் அவரை அழைத்துக்கொண்டு உள்ளே ஆதீனகர்த்தரிடம் சென்றார்கள்.

வரவேற்பு

சுப்பிரமணிய தேசிகருடைய சந்தோஷம் அவர் முகத்திலே வெளிப்பட்டது. ஆசிரியர் தேசிகரை வணங்கிவிட்டு அருகில் அமர்ந்தார். நான் அவருக்குப் பின்னே இருந்தேன். தம்பிரான்களும் இருந்தனர். “இனிமேல் தம்பிரான்களுக்கு உத்ஸாகம் உண்டாகும். நமக்கும் சந்தோஷம்” என்று சொல்லிய தேசிகர், “பாடம் எப்போது ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டார்.

“சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன். இன்றைக்கே ஆரம்பிக்கலாம்” என்று பிள்ளையவர்கள் கூறினார்.

“இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். அதற்குள் சிரமம் தரக்கூடாது. நாளைக் காலையிலிருந்தே தொடங்கலாம்” என்று சொல்லி வேறு பல விஷயங்களைப் பேசிவந்தார். அப்பால் விடைபெற்று நாங்கள் எங்கள் விடுதிக்குச் சென்றோம்.

பாடத்தைப் பற்றிய யோசனை

மறுநாட் காலையில் மடத்துக்குச் சென்று சுப்பிரமணிய தேசிகர் முன்பு அமர்ந்தோம். தம்பிரான்கள் பாடம் கேட்பதற்குச் சித்தமாக இருந்தார்கள். அவர்கள் கூட்டத்தில் குமாரசாமித் தம்பிரான் தலைவராக முன்னே அமர்ந்திருந்தார். பிள்ளையவர்கள் பாடம் சொல்வதை அவர்கள் மிக்க ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். “இவர்களுக்கும் தமிழ் படிக்க வேண்டுமென்று இவ்வளவு ஆவல் இருக்கிறதே. இவர்களுக்கு வேறு குறையொன்றும் இல்லை. தமிழ்க் கல்வியில் தமக்குள்ள ஆவலைப் பெரிதாகச் சொல்லுகிறார்களே!” என்று நான் அவர்கள் முன்னிலையில் என் சிறுமையை நினைத்துப் பார்த்தேன்.

“என்ன பாடம் ஆரம்பிக்கலாம்?” என்ற யோசனை எழுந்தபோது சுப்பிரமணிய தேசிகர், “எல்லோருக்கும் ஒரே பாடத்தைச் சொல்லுவதைக்காட்டிலும் குமாரசாமித் தம்பிரான் முன்னமே சில நூல்களைப் பாடங் கேட்டிருத்தலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும் நடத்தலாம். குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணத்தை ஆரம்பிக்கலாம்; மற்றவர்கள் சீகாளத்திப் புராணம் கேட்கட்டும்” என்று சொல்லி மேலும் பாட சம்பந்தமான சில விஷயங்களைப் பேசினார்.

எனது வாட்டம்

தம்பிரான்களைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்லவேண்டிய பாடங்களைப் பற்றியும் பேச்சு நடந்தபொழுது எனக்கு ஒருவகையான மனவருத்தம் உண்டாயிற்று. “என்னை இவர்கள் மறந்துவிட்டார்களே. நான் தம்பிரான்களோடு சேர்ந்து பாடங் கேட்கக்கூடாதோ! ஆதீன சம்பிரதாயத்துக்கு அது விரோதமாக இருக்குமோ! பிள்ளையவர்கள் ஜாகையிலே இருக்கும்போது சொல்லும் பாடத்தோடு நிற்க வேண்டுமா? இப்படியாகுமென்றால் இவ்வூருக்கு வந்ததில் எனக்கு லாபம் ஒன்றுமில்லையே!” என்று எண்ணி எண்ணி என் மனம் மறுகியது. நான் முகவாட்டத்தோடு யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.

என் ஆவல்

அப்போது ஆசிரியர் என்னைப் பார்த்தார். என் மனத்துள் நிகழ்ந்த எண்ணங்களை அவர் உணர்ந்துகொண்டாரென்றே தோற்றியது. அப்படி அவர் பார்த்தபோது சிறந்த மதியூகியாகிய சுப்பிரமணிய தேசிகர் எங்கள் இருவர் கருத்தையும் உணர்ந்தவர்போல, “இவரை எந்த வகையில் சேர்க்கலாம்?” என்று கேட்டார். அக்கேள்வி எனக்கு ஒருவகை எழுச்சியை உண்டாக்கிற்று. யோசனையினின்றும் திடீரென்று விழித்துக்கொண்டேன். என்கிருந்த ஆவல் தூண்டவே பிள்ளையவர்கள் விடை பகர்வதற்கு முன் நான் “இரண்டு வகையிலும் சேர்ந்து பாடங் கேட்கிறேன்” என்று சொன்னேன்.

யாவரும் தடை சொல்லவில்லை. என் ஆசிரியரும் தேசிகரும் தம் புன்முறுவால் என் ஆவலாகிய பயிருக்கு நீர் வார்த்தனர்.

“எல்லோருக்கும் லாபம் ஒரு பங்கு. உமக்கு இரட்டிப்பு லாபம்” என்று தேசிகர் கூறியபோது நான் சிறிது நேரத்துக்கு முன்பு ஆழ்ந்திருந்த துயரக்கடல் மறைந்த இடம் தெரியவில்லை. சந்தோஷ உச்சியில் நின்றேன்.

“உம்மிடம் புஸ்தகங்கள் இருக்கின்றனவா!” என்று அந்த வள்ளல் கேட்டார்.

அவருக்கு முன் இல்லையென்று சொல்வதற்கு நாணம் உண்டாக, இல்லையென்றால் உண்டென்று தரும் பேருபகாரியாகிய தேசிகர் நான் அந்த வார்த்தையைச் சொன்னவுடன் மடத்துப் புத்தகசாலையிலிருந்து திருவானைக்காப் புராணத்தையும் சீகாளத்திப் புராணத்தையும் கொண்டுவரச்செய்து எனக்கு வழங்கினார்.

“பாடம் நடக்கும்போது சாமிநாதையரே படிக்கட்டும்” என்று தேசிகர் உத்தரவிட்டார். நான் இசையுடன் படிப்பேனென்பது முன்பே தெரியுமல்லவா?

பாட ஆரம்பம்

குமாரசாமித் தம்பிரானுக்கு உரிய திருவானைக்காப் புராணம் முதலில் ஆரம்பமாயிற்று. அப்புராணத்திலுள்ள விநாயகர் காப்புச் செய்யுளைப் படித்தேன். ஆசிரியர் பொருள் சொன்னார். பின்பு மற்ற வகையாருக்கு உரிய சீகாளத்திப் புராணத்தின் காப்புச் செய்யுளையும் படித்தேன். ஆசிரியர் உரை கூறினார்.

இவ்வாறு அந்த நல்லநாளிலே தம்பிரான்களுக்கு என் ஆசிரியர் பாடம் சொல்லத் தொடங்கினார். சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தின்படி காலையில் அவருக்கு முன்பு திருவானைக்காப் புராணம் நடைபெறும். பிற்பகலில் மற்றவர்களுக்குரிய சீகாளத்திப் புராணம் மடத்தைச் சார்ந்த வேறு இடங்களில் நிகழும். இரண்டு வகையிலும் நானே படித்து வந்தேன்.

பாடம் நடந்த முறை

சுப்பிரமணிய தேசிகர்முன் பாடம் நடக்கும்போது இடையிடையே நான் இசையுடன் படிக்கும் முறையைத் தேசிகர் பாராட்டுவார். திருவானைக்காப் புராணம் கடினமான நூலாதலால் ஒரு நாளைக்கு ஐம்பது பாடல்களுக்கு மேல் நடைபெற வில்லை. சுப்பிரமணிய தேசிகரும் தமக்குத் தோன்றிய கருத்துக்களை உரிய இடங்களிற் சொல்லுவார். தேசிகரைத் தரிசிப்பதற்குக் காலையில் அடிக்கடி பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள். அப்போதும் பாடம் நடைபெறும். வந்தவர்களும் கேட்டு இன்புறுவார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் பாடத்தின் சுவை அதிகமாகும். வந்திருப்பவர்களும் கேட்டுப் பயனடையும்படி பிள்ளையவர்கள் பல மேற்கோள்களை எடுத்துக்காட்டுவார். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் வருமிடங்களில் தேசிகர் மெய்கண்ட சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்காட்டி விஷயங்களை அருமையாக எடுத்து விளக்குவார். அத்தகைய காலங்களில் பொழுதுபோவதே தெரியாது. தமிழ் விருந்தென்று உபசாரத்துக்குச் சொல்லுவது வழக்கம். அங்கே நான் அனுபவித்தது உண்மையில் விருந்தினால் உண்டாகும் இன்பமாகவே இருந்தது. உணவின் ஞாபகம் அங்கே வருவதற்கே இடமில்லை.

பாடங் கேட்கையில் ஒவ்வொரு பாடலையும் நான் மூன்றுமுறை வாசிப்பேன். பொருள் சொல்லுவதற்கு முன் ஒரு முறை பாடல் முழுவதையும் படிப்பேன். பொருள் சொல்லும்போது சிறு சிறு பகுதியாகப் பிரித்துப் படிப்பேன். பொருள் சொல்லி முடிந்த பிறகு மீட்டும் ஒருமுறை பாடல் முழுவதையும் படிப்பேன். இப் பழக்கத்தால் அப்பாடல் என்மனத்தில் நன்றாகப் பதிந்தது. பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறை இது.

திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த அன்னசத்திரத்தில் நான் காலையிலும் பகலிலும் இரவிலும் ஆகாரம் உண்டு வந்தேன்.

ஒவ்வொரு நாளும் தமிழ்ப் பாடத்தினாலும் சுப்பிரமணிய தேசிகருடைய சல்லாபத்தினாலும் அயலூர்களிலிருந்து வருபவர்களுடைய பழக்கத்தினாலும் புதிய புதிய இன்பம் எனக்கு உண்டாயிற்று. தம்பிரான்கள் என்னிடம் அதிக அன்போடு பழகுவாராயினர். எனக்கும் அவர்களுக்கும் பலவகையில் வேற்றுமை இருப்பினும் எங்கள் ஆசிரியராகிய கற்பகத்தின் கீழ்க் கன்றாக இருந்த நாங்கள் அனைவரும் மனமொத்துப் பழகினோம். அவர்களுக்குள்ளும் குமாரசாமித் தம்பிரான் என்பால் வைத்த அன்பு தனிப்பட்ட சிறப்புடையதாக இருந்தது. எல்லோரும் தமிழின்பத்தாற் பிணைக்கப்பட்டு உறவாடி வந்தோம்.

எங்களோடு மாயூரத்திலிருந்து வந்த சவேரிநாத பிள்ளை திருவாவடுதுறையில் ஒரு வாரம் வரையில் இருந்து ஆசிரியரிடம் உத்தரவுபெற்று மாயூரத்துக்குச் சென்றார். மாயூரத்தில் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவருக்குப் பழக்கமுடையவராதலால் அங்கே அவருடன் இருந்தனர்.