என் பார்வையில் கலைஞர்/சாணக்கிய காங்கிரசுக்கு சறுக்கிய அடி

விக்கிமூலம் இலிருந்து
சாணக்கிய
காங்கிரசுக்கு
சறுக்கிய அடி


கர்நாடக மாநிலத்தில் இருந்து 1987ஆம் ஆண்டில், மார்ச் மாதம் பெங்களுரில் இருந்து சென்னை வானொலி நிலையத்தின் செய்தி ஆசிரியராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றேன்.

அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தார். முதல்வருக்கும், எதிர்கட்சித் தலைவரான கலைஞருக்கும் சம அளவிலான செய்திகளை வெளியிட்டேன். அப்போது வாரெனலி செய்தி என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. சென்னை தொலைக்காட்சி தவிர, வேறு எந்த தொலைக்காட்சியும் இல்லாத நேரம். சாதாரண மக்களை சென்றடையும் வானொலியின் மீது அனைத்து அரசியல் வாதிகளுக்குமே ஒரு கண். அதிலும் எங்கள் செய்திகள், பெரும்பாலானவர்கள் கண்விழிக்கும் காலை ஆறு நாற்பது மணிக்கும், மத்தியானம் இரண்டு பத்துக்கும், மாலை ஆறு முப்பதுக்கும் ஒளிப்பரப்பாகும். சட்ட பேரவை நிகழ்ச்சிகளையும் நேரில் சென்று நடந்தவற்றை பார்த்து, அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கிய பகுதிகளை விட்டு விட்டு, அந்த சபை ஏதோ நாகரிகமான சபை என்பது போல் மக்களுக்கு ஒரு பொதுக் கருத்தை கொடுத்து செய்திகள் வெளியாகும்.

சட்டப் பேரவையில், அதன் பேரவைத் தலைவர் பி.எச். பாண்டியன் அவர்கள், பலதடவை கலைஞரை மிகவும் கேவலமாக விமர்சித்திருக்கிறார். அடிதடிக்கும் தயார் என்பது போல் திமுக உறுப்பினர்களுக்கு சவால் விடுவார். ஒருதடவை அவர் கலைஞரை சுட்டிக் காட்டிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சிலேயே குத்திக் கொண்டிருக்கின்றன. நேரில் பழகுவதற்கு இனிமையானவர்தான். ஆனால், சட்டப் பேரவையில் தனது புரட்சி தலைவரைப் பார்த்து விட்டால் போதும். எதிராளிகள் அவருக்கு வெறும் தூசு. 1987ஆம் ஆண்டு வாக்கில், இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமே கொதித்து வேலை நிறுத்தங்களும், ஊர்வலங்களும் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. தமிழகம் ஓரே மனிதன் போல் நிமிர்ந்து இலங்கை தமிழ் தோழனுக்காக போர்க்குரல் கொடுத்தது. நானும் விடுதலைப்புலிகளுக்கு ஏகப்பட்டச் செய்திகளைக் கொடுத்தேன். வீரத்தளபதி கிட்டு சுடப்பட்டார் என்று ஒரு தனிப்பட்ட விவகாரத்தை தலைப்புச் செய்தியாக்கி இலங்கை அரசின் கோபத்துக்கு உள்ளாகி மத்திய அரசின் கண்வலைக்குள்ளும் சிக்கி விட்டேன். இந்தச் சமயத்தில் இந்திய விமானங்கள் இலங்கையின் ஆகாய எல்லையை மீறி, வட இலங்கை தமிழர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கின இந்தச் செய்தியை ‘விமானங்களைப் பார்த்து, அவை ராணுவ விமானங்கள் என்று பயந்து போய் பதுங்கிய தமிழ் மக்கள், பின்னர் இது குண்டு விமானங்கள் அல்ல... தொண்டு விமானங்கள் என்று வீதிக்கு வெளியே வந்து ஆரவாரம் செய்தார்கள்’ என்று செய்தி போட்டேன். இந்த செய்தியை கேட்ட மறுவினாடியே திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தொலைபேசி மூலமாக என்னைப் பாராட்டினார்.

முதல்வர் எம்.ஜி.ஆரை தமிழ்ச் சமூகத்தைக் கருதி நான் விரும்பவில்லை என்றாலும், அவர் நோய் வாய்ப்பட்ட போதும் பேசமுடியாமல் திணறிய போதும் என் கண்கள் நீருக்குள் மூழ்கின. அவர் இறந்து செய்தியை மிகச் சிறப்பாக வெளியிட்டோம். அதே சமயம் அவரது இழவெடுத்த தொண்டர்கள் என கருதப்படுபவர்கள் அண்ணாசாலை கடைகளை சூறையாடியதை அடக்கி வாசித்தோம். இதே போல் அங்கிருந்த கலைஞர் சிலையை உடைத்ததையும் சட்ட ஒழுங்கைக் கருதி இலைவு மறைவு காய் மறைவாகதான் வெளியிட்டோம்.

ஜானகி அம்மையார் பதினைந்து நாள் முதல்வராக பதவி வகித்து பிறகு காணாமற் போனதும் வரலாறு. சட்டப் பேரவையில் அடிதடியே நடைபெற்றது. இதைப் பற்றி எனது செய்தியில் சட்டசபை ரத்த சபையாகி விட்டது சொற்போருக்கு பதிலாக மற்போர் நடந்தது என்று குறிப்பிட்டதை இப்போது கூட செய்தியாளர்கள் பாராட்டுவார்கள்.

ஜானகி அம்மாள் ராஜீவ் காந்தி அவர்களோடு இந்தியில் பேசி காங்கிரஸ் ஆதரவை பெற்று விட்டார் என்று ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் என்னிடம் குறிப்பிட்டார். ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்த போது என் மானசீகமான ஆதரவு ஜானகி அம்மாவுக்கு இருந்தது என்பதை விட ஆர்எம் வீக்கே இருந்தது. ஆனாலும், தொண்டர் பலம் ஜெயலலிதாவின் பக்கம்.

சட்டப் பேரவையில் இந்த இரண்டு அணிகளுக்கும் பலப்பரீட்சை நடந்த போது ஜானகி அணியின் சார்பாக நின்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், ராஜீவ் காந்தி மனதை மாற்றி ஜானகி அணிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து சட்டசபை ரத்தச் சபையானது வரலாறு. ஜானகி அணியின் சார்பிலான பேரவைத் தலைவர் பி.எச். பாண்டியன், ஜெயலலிதா அணி உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் பதவி நீக்கம் செய்து கொண்டே இருந்தார்.

இந்த அணியின் சார்பில் ஒரு குழுவினர் கலைஞரை அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கேட்க, அவரோ மறுத்து விட்டார். இதனால் ஜானகி அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டது. கலைஞர் ஜானகி அணிக்கு ஆதரவு கொடுக்க மறுத்ததன் மூலம் ஒரு மாபெரும் அரசியல் தவறை செய்து விட்டார் என்றே நினைக்கிறேன். ஜெயலலிதாவை அரசியல் ரீதியில் வளர்த்து விட்டால் பின்னர் அவரை அந்த களத்திலிருந்து நீக்குவது என்பது கடினம். இதை காங்கிரஸ் உறுப்பினர்களும் புரிந்து கொள்ளவில்லை. இதன் அரசியல் சமூக விளைவுகளை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போராளியாக நான் பெரிதும் மதித்த ஆர்எம்வி அவர்கள் கூட ஜெயலலிதாவுடன் அடிமை பூண்டதில் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

1967ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் சுயத்தை இழந்த காங்கிரஸ் நண்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. சினிமாத்தனங்கள் மலிந்த தமிழக அரசியலில் முன்னாள் கதாநாயகியான செல்வி. ஜெயலலிதா, அங்கிருக்கும் சினிமா செட்டப்பையும், அரசியலுக்குக் கொண்டுவந்து நிரந்தரமாக நின்று தங்களை வேலைக்காரர்களை விட கேவலமாக நடத்துவார், என்பதை அனுமானிக்க முடியாமல் போனார்கள். ஜானகியை முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது போயிருந்தால் குறைந்தபட்சம் ஆர்எம்வி. முதல்வராக வேண்டும் என்று இவர்கள் வற்புறுத்தி இருக்கலாம். என்றாலும், இந்த சாணக்கிய காங்கிரஸ் அடி சறுக்கி இன்னும் அப்படியே விழுந்து கிடக்கிறது.