என் பார்வையில் கலைஞர்/அன்பாலயத்தில் ஒரு அதிகப் பிரசங்கிதனம்

விக்கிமூலம் இலிருந்து
அன்பாலயத்தில்
ஒரு
அதிகப் பிரசங்கித்தனம்


சென்னை தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி பலரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு நீதிமன்றம் சென்று பின்னர் மேல் மட்டத்திற்கும் எனக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் படி, 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதவாக்கில் பெங்களுரில் மத்திய அரசின் களவிளம்பரத்துறை மாநில தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றேன். கன்னட ஊழியர்கள், என்னை பிறவி எதிரியாகவே பார்த்தார்கள். இதற்கு நம்மவர்களின் உலகாண்ட தத்துவமும், அந்த மாநிலத்தின் அரசியலில் ஒன்றிருக்காமல் தி.மு.க. அ.தி.மு.க என்று கட்சி வைத்துக் கொண்டு இங்குள்ள சினிமா நடிகர்களின் கட்அவுட்டுகளை தூக்கிக் கொண்டு ஊர்வலமாக போனதும் ஒரு காரணம். இதனால், கன்னட ஊழியர்கள், நானும் உலகாண்ட தமிழன் பரம்பரை என்று என்னை ஒரு மாதிரி பார்த்தபோது, நான் பெங்களுர் தமிழ்ச் சங்கத்தை ஒரு மாறுதலுக்காகவும், ஆறுதலுக்காகவும் அணுக வேண்டியதாயிற்று.

இங்கேதான், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த பெங்களுர் சண்முகசுந்தரம் அவர்களைச் சந்தித்தேன். இந்தச் சந்திப்பு ஒரு மாத வாக்கில் தீவிர நட்பாகி விட்டது. இவர் சிறியன சிந்தியாத மனிதர். வள்ளலார் பக்தர். அதே சமயம் தமிழ்ச் சாதியிடம் கொண்ட தணியாத காதலால் விடுதலைப்புலிகளின் உள்நாட்டுப் போரை தீவிரமாக ஆதரித்தவர். இவர் உதவியில் பல விடுதலைப் புலிகள் தங்கி இருந்தனர். என் மீதும் அன்பு பொழிந்தனர்

அப்போது இலங்கை ராணுவம் விடுதலைபுலிகளை மட்டும் அல்லாது வேறு வழியில்லாமல் அவர்களை ஆதரிக்கும் இலங்கை தமிழர்களையும் வேட்டையாடிக் கொண்டிருந்தது. ஆனால், எதிர்க் கட்சித் தலைவரான கலைஞரோ பாராமுகமாய் இருப்பதுபோல் தோன்றியது. இவர் வழங்கப்போன நன்கொடையை விடுதலைப் புலிகள், முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பயந்து மறுத்துவிட்டது எங்களுக்கு கலைஞருக்கு ஏற்பட்ட அவமானமாகத் தோன்றவில்லை. இது விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரமாகவே தோன்றியது. நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசமாக பேசுவதைத் தவிர, தி.மு.க அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. கலைஞரின் மௌனம் எங்களுக்கு கோபத்தைக் கொடுத்தது. கலைஞரை சந்தித்து, கர்நாடகத் தமிழர்களின் ஆதங்கத்தை தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.

1986ஆம் ஆண்டுவாக்கில், கோபாலபுரத்தில், கலைஞரின் வீட்டை, தேடிக் கண்டுபிடித்து வாசலுக்குள் போய்விட்டேன். வீட்டில் ஒரு ஈ, காக்கா கூட இல்லாதது போன்ற தோற்றம். கலைஞர் எதிர்க்கட்சியாக இருந்தாலும், அவர் அந்தக் கட்சிக்கு அரசர் ஆயிற்றே - தொண்டர்கள் அவரை கைவிட்டு விட்டார்களா என்ற சிந்தனையோடு, கண்களைத் துழாவியபோது-

ஒடிசலான, மங்களகரமான ஒரு அய்ம்பது வயது பெண்மணி தென்பட்டார். முன்னர் பார்த்தப் புகைப்படத்தை வைத்து அவர்தான் கலைஞரின் துணைவியார் தயாளு அம்மா என்பதை தெரிந்து கொண்டேன். என்னை எழுத்தாளன் என்றும் பெங்களூரில் அரசு வேலை பார்ப்பவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு கலைஞரை பார்க்க வந்ததாக சொன்னேன். அப்போது அவர் பதிலளித்த வார்த்தைகளை என்னால் முழுமையாக ஒப்பிக்க முடியாது. ஆனால் இந்த பொருளில்தான் சொன்னார்

‘உங்களுக்குத் தெரியாதா? அவர போலீஸ் பிடிச்சுட்டு போய் ஜெயிலுல போட்டுட்டாங்க.’

ஒரு தலைவரின் மனைவி போராளியாகவும் இருக்கலாம், அதேசமயம் அந்தத் தலைவரை வழிபடுத்தும் குடும்பப் பெண்ணாகவும் இருக்கலாம். ஆய்ந்து பார்த்தால் இந்த இரண்டிற்கும் வேறுபாடே கிடையாது. தயாளு அம்மா, ஒற்றை நகையோடு, காலணா அங்குலப் பொட்டோடு என்னைப் பார்த்ததையும் கலைஞர் ஏன் கைது செய்யப்பட்டார் என்று மண்வாசனை தஞ்சை தமிழில் விளக்கியதையும் கேட்டுக் கொண்டிருந்த போதே எனக்கு அழுகை வந்துவிட்டது. சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி விட்டேன். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவரோடு பல, இடங்களுக்கு மாலை மரியாதைகளோடு சென்ற இந்த அம்மையார், பாதிக்கப்பட்ட கலைஞரின் துணைவியாராய் அவர் கண்களில் தோன்றிய கலக்கமும், வார்த்தைகளை உருவாக்கிய மெல்லிய குரலும் இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை. எனது சந்திப்பு, அந்த அம்மாவிற்கு ஆயிரத்தெட்டு நிகழ்ச்சிகளில் ஒன்று. நிச்சயம் அவர் மறந்திருப்பார். ஆனால், என்னால் இன்றுவரை அந்த நிகழ்ச்சியை, அவரது துயரமான முகபாவத்தை மறக்க முடியவில்லை .

தயாளு அம்மாவை பார்த்து விட்டு, பெங்களூர் திரும்பிய நான் சண்முகசுந்தரம் அவர்களிடம், முதல்வர் எம். ஜி. ஆர் கலைஞரை அடாவடியாக வீட்டிலேயே கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை குறிப்பிட்டேன். அவரும் இதர தமிழர்களும் கொதித்துப் போனார்கள். ‘நம்ம தமிழனுக்கு புத்தி இல்லையே’ என்று நொந்து கொண்டார்கள்.

தயாளு அம்மாவை சந்தித்த மூன்று மாத காலத்திற்குள் கலைஞரை சந்திக்கச் சென்றேன். அப்போது அறிவாலயம் இல்லை . தி.மு.க. தலைமை அலுவலகமான அன்பாலயம் இதற்கு அருகே மறுமுனையில் உள்ள இடத்தில் இருந்தது. அந்த அலுவலகத்தின் வரவேற்பு அறையில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் சட்டமன்ற உறுப்பினருமான சா. கணேசன் ‘பி.ஏ.வாக’ உட்கார்ந்திருந்தார். இதற்கு முன்பே, இவர் எனக்கு பழக்கம். அன்பு பொங்கும் முகம். உரத்துப் பேசாத மென்மை. பார்த்த உடனேயே நேசிக்க தோன்றும் முகபாவம். ஆக மொத்தத்தில் எளிமையின் உருவம். என்னை அன்புடன் வரவேற்றார். கலைஞரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். நான் சொன்ன தோரணையில் கலைஞருக்கும் எனக்கும் நீண்டகால பழக்கம் இருக்கிறதாக நினைத்தாரோ என்னவோ.. ஒரு வேளை, எழுத்தாளர் ஒருவர் எப்போது வேண்டும் என்றாலும் தன்னை பார்ப்பதை கலைஞர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் நினைத்திருக்கலாம். ‘உங்களுக்கென்ன தடையா போடுவார்? தராளமாகப் போங்க’ என்றார்.

நான் மாடிப்படியேறி கலைஞரின் அறைக்குச் சென்றேன். கலைஞருடன் பேராசிரியரும் கட்சியின் பொருளாளரான சாதிக் பாட்சா அவர்களும் உடனிருந்தார்கள். பேராசிரியரையும், கலைஞரையும் ஒருமித்து பார்க்கும் போது எனக்கு பாட்டாளித் தோழர்களின் முதுகெலும்பை நிமிர்த்திய மார்க்சுக்கும், ஏஞ்சலுக்கும் இருந்த நட்பும், அனுசரனையும் நினைவுக்கு வந்ததது.

1969 ஆம் ஆண்டிடு கலைஞர் முதல் தடவையாக முதல்வரானபோது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பேராசிரியர், இருவரும் கலந்துக் கொண்ட கூட்டத்தில் ‘கலைஞரை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை... தளபதியாக ஏற்றுக் கொள்கிறன்’ என்று வெளிப்படையாகச் சொன்னவர். உடனே கலைஞரும் ‘தளபதியாகவே இருக்கிறேன். தளர் பதியாக ஆக்காதீர்கள்’ என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார். நாவலர் போன்றவர்கள் மறுபக்கம் போன போதும், பேராசிரியர் தனது கட்சியின் பக்கமே நின்றார். இருவரும் ஒருவரோடு ஒருவர் ஆலோசிக்கும் தோரணை அதில் கட்டுண்டுள்ள சமூகநல அக்கறை, ஒரு எழுத்தாளனுக்கு நல்லதொரு காட்சியாகும்.

நான், அவர்கள் மூவருக்கும் பொதுப்படையாக கும்பிடு போட்டு விட்டு, கலைஞரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவரும் தெரியும் என்பது போலவே காட்டிக் கொண்டார். எதற்காக வந்தீர்கள் என்பது போல் இயல்பாக என்னைப் பார்த்தார். எங்களின் அரைநிமிட உரையாடல் இந்த பாணியில்தான் நடந்தது.

‘உங்களிடம் நான் தனியாகப் பேச வேண்டும்.“’

‘இங்கேயே பேசலாமே’

‘இல்ல தனியாத்தான் பேசணும்’

‘இப்போது முடியாதே’

‘அப்ப நான் வாரேன்’

‘சரி’

நான் ஏறிய வேகத்திலேயே இறங்கினேன். என்னைப் பார்த்ததும் சாகணேசன், அவர்கள் பதறியடித்து எழுந்தார். ‘என்னங்க என்ன நடந்தது’ என்றார். கலைஞர், நான் இறங்குவதற்குள் அவரைத் தாளித்து இருப்பார் என்பது புரிந்து விட்டது. நானும் நடந்ததை சொல்லி விட்டு மடமடவென்று வெளியேறினேன். சா.கணேசன் அவர்கள் இடத்தில் நான் மட்டும் இருந்திருந்தால், அடிதடியில் இறங்கி இருப்பேன். ஆனால், இவரது முகத்தில் ஒரு சின்னக்கோபம் கூட ஏற்படவில்லை. தப்பான ஆளை அனுப்பி விட்டோமே என்று நிச்சயம் மனதுக்குள் புழுங்கியிருப்பார். இப்போது கூட சாகணேசன் அவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்துவேன்.

கலைஞரோடு இப்படி நான் நடந்து கொண்ட போது எனக்கு நாற்பத்தைந்து வயது இருக்கும். சிந்திக்க தெரிந்த வயதுதான். ஒரு மகத்தான் தலைவரிடம், முன்னாள் முதல்வரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய வயதுதான். அதுவும் லட்சோப லட்ச தொண்டர்களை கொண்டவர் கலைஞர். காகிதத் தலைவர் அல்ல. அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் போய் தனியாக பேச வேண்டும் அதற்கு ஏதுவாக அவர், என்னோடு எதாவது ஒரு அறைக்கு வரவேண்டும் அல்லது கட்சியின் பொதுச் செயலாளரும், பொருளாளரும் எனக்காக அந்த அறையில் இருந்து வெளியேற வேண்டும் என்று எதிர்பார்த்து சென்றது பித்துக் குளித்தனமல்ல அசல் பைத்தியக்காரத்தனம்.

அந்தக் காலக்கட்டத்தில், இலங்கை தமிழர் போரட்டத்தின் மீது, குறிப்பாக விடுதலைப் புலிகளின் மீது நான் வைத்திருந்த கண்மூடித்தனமான ஈடுபாடே என்னை அப்படி நடக்க வைத்து விட்டது. இடம், பொருள், ஏவல் அற்றுப் போய், ஒரு கொள்கை வெறியனாக மாற்றிவிட்டது. கொள்கை வெறி உள்ளவர்களுக்கு இந்த மூன்றும் அற்றுப் போய் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் போய்விடும் என்பதற்கு இலங்கையில், நமது விடுதலைப் புலிகளே சாட்சிகளாக இருக்கிறார்கள்.

பொதுவாக, கலைஞரை கோபக்காரர் என்பார்கள். ஒருவர் சொந்த இருப்பிடத்திலேயே இருக்கும் போது இடைச் செறுகலாக சம்பந்தமில்லாத இன்னொருவர் வந்து அதிகப் பிரசங்கிதனமாய் நடந்து கொள்வது, என் வீட்டில் நடந்தாலும் நான் முதலில் சொல்லக் கூடிய வார்த்தை ‘வெளியே போடா’ என்பதுதான். ஆனால், கலைஞரின் முகத்தில் ஒருதுளி கோபம் கூட இல்லை. அவர் பதிலில் ஒரு சின்ன சூடு கூட இல்லை. வார்த்தைகளால் சூடு போடுவதில் வல்லவரான கலைஞர், என்னிடம் ஏன் அப்படி மென்மையாக நடந்து கொண்டார் என்பது இதுவரைக்கும் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை எழுத்தாளனின் கிறுக்குத் தனங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொண்டாரோ அல்லது ஒரு கணத்தில் பெருந்தலைவர் காமராசரை போல், ஆட்களை எடை போடுவதில் வல்லவரான கலைஞர் நான் வெள்ளந்தி என்று நினைத்தாரோ என்னமோ.

நான் என்னமோ உலகத் தமிழினத் தலைவர் போலவும், அவர் என்னவோ தொண்டர் போலவும் நான் அப்போது நடந்து கொண்ட விதம் இப்போது கூட என்னையே நான் ஒரு இங்கிதமற்ற பேர்வழியாக நினைக்கத் தோன்றுகிறது.