என் பார்வையில் கலைஞர்/கலைஞர் வீட்டில் ஒரு சமுத்திர கூச்சல்

விக்கிமூலம் இலிருந்து
கலைஞர் வீட்டில்
ஒரு
சமுத்திரக் கூச்சல்



1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திட்டம் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பொறுப்பேற்று சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் உதவி செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்.

இந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் செய்திப் பிரிவில் ஏற்பட்ட குழப்பத்தை சமாளிக்க நான்தான் சரியான அலுவலர் என்று நினைத்து டில்லி மேலிடம் என்னை அந்த நிலையத்தில் நியமித்தது. இந்தச் செய்திப் பிரிவு இப்போது போல் ஒழுங்கு செய்யப்படாமல் கிட்டத்தட்ட பைத்தியக்கார மருத்துவமனை போல் தோற்றம் காட்டியது.

இந்த நிலையத்தில் முக்கால்வாசிப்பேர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரின் தீவிரமான, அதே சமயம் தெளிவான ஆதரவாளர்கள். அப்போது முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் அவர்கள் செல்வி ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு வெள்ளோட்டமாக ஏதோ ஒரு விழாவில் அவரை குத்து விளக்கேற்றச் செய்தார். கலைஞரின் தீவிர பக்தரான ஒரு எடிட்டர் இந்த விளக்கு நிகழ்ச்சியை துண்டித்து விட்டார். இது என் கவனத்திற்கு வந்த போது, தேசிய செய்தி ஒளிபரப்பில் குத்துவிளக்கு இத்தியாதிகள் செய்திகளாகாது என்பதால், அந்த வெட்டை ஏற்றுக் கொண்டேன். இதைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு கடுங்கோபம்.

மறுநாள் கோபத்துக்கான இந்தக் காரணத்தை வெளிப்படையாக சொல்லாமல் வேறு காரணங்களைக் கூறி தொலைக்காட்சியை பகிஷ்கரிப்பதாக அறிவித்தார். தமிழக அரசு விழாக்களை படமெடுப்பதற்கு அனுமதி கொடுக்க மறுத்தார். கடைசியில் எங்கள் இயக்குநரும் இன்னும் சில அதிகாரிகளும் மேலிடத்தின் கட்டளைப்படி முதல்வர் எம்.ஜி.ஆரிடம் அரசின் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

இந்த நிலைமையில்தான், செய்தி ஆசிரியருக்கு உறுதுணையாக ஒத்துழைத்தேன். இதனாலேயே, பல சுயநலமிகள் செய்திகளுக்குள் நுழைத்த மூக்குகளை எடுத்துக் கொண்டார்கள். நானும் பகுதி நேர செய்தியாளர்களை நியமிக்க காரணமானேன். பிரபல நடிகர் சரத்குமாரின் தந்தையும் எனது மூத்த சாகாவுமான ராமநாதன், எழுத்தாளரும் வானொலி மூத்த செய்தியாளருமான சுந்தா, இசக்கி, அருணாசலம், கூடவே தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்கள் ஆகியோர் எங்கள் பிரிவில் பணியாற்றினார்கள்.

இப்படி அந்தச் செய்திப் பிரிவை ஒழுங்கு படுத்திய பிறகு, செய்தி ஆசிரியர் தனது சுயரூபத்தைக் காட்டத் துவங்கினார். என்னை டெலிபிரிண்டரில் கட்டுக்களை மட்டுமே எடுக்கச் சொன்னார். அற்பத்தனமான செய்திகளை குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் துண்டு துக்கடா ஆசாமிகளின் செய்திகளை தேசிய செய்தியாக ஒளிபரப்பினார். இதில் அவருக்கும் எனக்கும் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்தக் கட்டத்தில், அம்பேத்கார் பிறந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த செளடேக்கர் என்பவர் சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குநராக பொறுப்பேற்றார். அம்பேத்காரியத்தில் இவருக்கு அத்தனையும் அத்துபடி. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அலுவலர்களுக்காக மேலதிகாரிகளையும் பகைத்துக் கொண்டவர். என்னை அவருக்குப் பிடித்து விட்டது. என் பக்கம் உள்ள செய்தி நியாயமும் புரிந்து விட்டது. ஆகையால், எனக்கு ஆதரவாக செயல் பட்டார். இதனால், சர்வ வல்லமை மிக்க எனது செய்தி ஆசிரியரின் கோபத்திற்கு ஆளானார். அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் நிலைய இயக்குநர்களை விட செய்தி ஆசிரியர்களே செல்வாக்கு உள்ளவர்கள். அத்தனை அரசியல் வாதிகளும் இவர்கள் சொல்வதைதான் கேட்பார்கள்.

உதவி ஆசிரியரான எனக்கும் அந்த செய்தி ஆசிரியருக்கும் ஒரு கெடுபிடி போர் நடந்து கொண்டு இருந்த போது, ஒரு நாள் மத்தியானம் நிலையத்திற்குள் நுழைந்தேன். அப்போது இயக்குநரின் அறைக்கு வெளியே ஒரே கூட்டம். கணித மேதை என்று கருதப்படுகிற சகுந்தலா தேவி, தலைவிரி கோலமாக ‘மகாராஷ்டிர கயுதே’ என்று திட்டிக் கொண்டு இருக்கிறார். அத்தனை ஊழியர்களும் வேடிக்கை பார்க்கிறார்கள். சிலர் ‘மேடம், மேடம்’ என்று தாஜா செய்கிறார்கள். விசாரித்துப் பார்த்ததில், தன்னை கணித மேதையாகக் காட்டிக் கொண்ட சகுந்தலா தேவி, எங்கள் இயக்குநர் அறைக்குள் நுழைந்து தொலைக்காட்சியில் தனக்கொரு நிகழ்ச்சி தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். இயக்குநர் தனது இயலாமையை அவருக்கு விளக்கியிருக்கிறார்.

அப்போது கர்நாடக மாநிலத்திலும் தொலைக்காட்சி நிலையம் இல்லை. இதனால், இந்த அம்மையாருக்கு ஒரு நிகழ்ச்சி கொடுக்க வேண்டும் என்று இந்த இயக்குநரே மேலிடத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த அம்மையார் இந்திரா காந்திக்கு எதிராக தேர்தலில் போட்டி இட்டதை மனதில் வைத்து, இவரது முகமே தொலைக் காட்சியில் தெரியக் கூடாது என்று மேலிடம் ஆணை போட்டது. இதைச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், எங்கள் இயக்குநர் இவரிடம் மென்மையாகப் பேசி சமாளிக்கப் பார்த்திருக்கிறார். ஆனால், இவரது கொடூரமான ஆபாசமான வார்த்தைகளால் அதிர்ந்து போன இயக்குநர், எப்படியோ அறை வாசலைத் தாண்டி இரண்டாவது மாடிக்கு சென்று ஒரு அதிகாரியின் அறைக்குள் ஒளிந்து கொண்டார்.

சகுந்தலா தேவியோ அப்போதே அங்கேயே நிகழ்ச்சி கொடுக்கவில்லை என்றால் நடப்பது வேறு என்று மிரட்டுகிறார். இடையில் சென்ற நான், எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். என்னுடைய நயவுரை அவருக்குப் புரியவில்லை . பிறகு மரியாதயா போடி இல்ல போலீஸ்ல ஒப்படைப்பேன் என்று கத்தினேன். இந்த இயக்குநரிடம் ஆதாயம் தேடிய அதிகாரிகள் சும்மா இருந்த போது, சில தலித் ஊழியர்கள் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். சகுந்தலா தேவி சொல்லாமல் கொள்ளாமல் ஒடிவிட்டார்.

இரண்டாவது மாடியில் இருக்கும் செய்தி பிரிவுக்கு வந்த நான், இந்தச் சம்பவத்தை, எனது சகாக்களோடு பகிர்ந்து கொண்டேன். செய்தி ஆசிரியரின் கழுகுக் கண்களை நான் பார்க்கவில்லை. உடனடியாக அவர் பத்திரிகை தகவல் அலுவகத்தில் உதவி தகவல் அதிகாரியாக இருந்தவரும் கலைஞரால் பின்னர் இருநாவுக்கரசு என்று வர்ணிக்கப் பட்டவருடன் தொடர்பு கொண்டு சகுந்தலா தேவிக்கு செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து விட்டார். இந்த நரித்தனத்தை மறுநாள் செய்திதாள்களில் பார்த்தோம். சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குநர் அலுவலகத்தில் குடிபோதையில் இருந்ததாகவும், சகுந்தலா தேவியுடன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் அத்தனை பத்திரிகைகளிலும் கிட்டத் தட்ட தலைப்புச் செய்திகள் வெளியாயின. இந்த பத்திரிகைகளுக்கு செளடேக்கர் தரப்பில் என்ன நடந்தது என்பதை கேட்க வேண்டும் என்ற ஒரு நாகரீகம் கூட இல்லை . அவர் ஒரு தலித் என்பதுதான் காரணம். சகுந்தலா தேவியின் செல்வாக்கை கணக்கில் எடுத்து செளடேக்கரை களங்கப்படுத்தி செய்திகளையே வியாபாரமாக்கி விட்டார்கள்.

இதன் எதிர்வினையாக, தாசில்தாராக இருந்து பின்னர் படிப்படியாக முன்னேறிய செளடேக்கரை பற்றிய சுயவரலாற்றுக் குறிப்பை முதலில் தாமரையில் வெளியிட்டேன். இவர் ஒழுக்கம் என்று வருகின்ற போது அப்பழுக்கற்றவர். குடி என்றால் என்ன என்றே தெரியாதவர். சிறந்த கவிஞர். போராளி. என்றாலும் தமிழகத்தின் பத்திரிகைத்தனம் புரியாமல் ஆடிப் போனார். ஆனாலும், நான் அவரை ஆற்றுப்படுத்தினேன்.

எந்த குங்குமத்தை வைத்து கலைஞரை குங்குமத் தமிழன் என்று முன்பு வர்ணித்தேனோ, அதே குங்குமத்தில் செளடேக்கரின் சுருக்கமான சுயவரலாறு வெளியாகும் படி செய்தேன். சகுந்தலா தேவி அவரை இழிவு படுத்திய விவரமும் குங்குமத்தில் இடம் பெற்றது. தமிழகமெங்கும் உள்ள தலித் மக்கள் கொதித்துப் போனார்கள். அணி அணியாக லாரியில் வந்து செளடேக்கருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அன்று முதல் செளடேக்கர் ஒரு வி.வி.ஐ.பி. ஆகிவிட்டார். குங்குமம் இவருக்கு உடலானது. கலைஞர் உயிரானார். நன்றிப் பெருக்கில் கலைஞர் என்ற பட்டத்தை சொல்ல முடியாமல் அவர் மழலையாக மாறும் போது எங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செளடேக்கரின் மூத்த மகளின் திருமணம் சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டது. அழைப்பிதழும் தயாராகி விட்டது. செளடேக்கர் கலைஞரை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுக்க வேண்டும் என்றார். நானும் அழைப்பிதழ் கொடுக்க ஒரு நிமிடம் தானே என்று அவரை அழைத்துக் கொண்டு கலைஞரின் வீட்டிற்குச் சென்றேன். கலைஞர் மாடியில் எழுதிக் கொண்டிருப்பதாக உதவியாளர்கள் சொன்னார்கள். ஒரே ஒரு நிமிடம் என்று மன்றாடினோம். உடனே மாடிக்குப் போன ஒருவர், மீண்டும் திரும்பி வந்து ‘கலைஞர் எழுதும்போது யாரும் போகக் கூடாதுங்க’ என்றார். கலைஞர் எங்களை அனுமதிக்கவில்லை என்று அனுமானித்துக் கொண்டோம். ஒருவேளை, அந்த உதவியாளரே கலைஞரின் எழுத்து ‘மூடைப்’ பார்த்து விட்டு அவரிடம் விவரம் சொல்லாமல் வந்திருக்கலாம் என்ற சிந்தனை எங்களுக்கு ஏற்படவில்லை. முன்னனுமதி பெறாமல் சென்றதும் எங்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை.

எனக்கோ , கட்டுக்கடங்காத கோபம். கலைஞருக்கு ஆதரவாக செளடேக்கர் மூலமும் அப்போது பொறுப்பு ஆசிரியராக இருந்த என் மூலமும் ஏராளமான நிகழ்ச்சிகளை, செய்திகளை ஒளிபரப்பி வந்தோம். கலைஞரும் எங்களிடம் ஈடுபாடு கொண்டிருப்பார் என்பதைவிட கொண்டிருக்க வேண்டும் என்றே நினைத்தோம். எனக்கோ, ஒரு சக்தி வாய்ந்த நிலையத்தை, கலைஞருக்கு சரியாக பயன்படுத்தத் தெரியவில்லையே என்ற கோபம். ஒரு நிமிட சந்திப்பில் என்ன ஆகிவிடும் என்கிற வேகம். அவரது வீட்டிலேயே அவருக்கு எதிராக கத்தினேன். ஒரு சாதாரண வீட்டில் இப்படி கத்தினாலே விளைவுகள் விபரீதமாக இருக்கும். ஆனால், கலைஞரின் உதவியாளர்களோ, முகத்தில் கோபக்குறியை காட்டாமல் நயம்பட பேசி எங்களை அனுப்பி வைத்தார்கள். இந்த நயத்தகு நாகரீகம், கலைஞர் கொடுத்த பயிற்சியால் ஏற்பட்டிருக்கலாம்.

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு திரும்பியதும் என் கூச்சலை நானே கேட்டு எனக்கு உள்ளூர உதறல். ஆயிரம் இருந்தாலும், நானும், செளடேக்கரும் அரசு ஊழியர்கள். அதிகார வர்க்க ஏணியில் நடுப்படிக்கட்டுகள். கலைஞரோ, இந்த ஏணியே எட்ட முடியாத உயரத்தில் இருப்பவர். எனது நடத்தையைப் பற்றி ஒரு வரி முரசொலியில் எழுதினால் போதும். நான் சஸ்பெண்ட் ஆவேன். எலியோடு தவளை கூட்டு சேர்ந்த கதைபோல் செளடேக்கரும் ஒரு வழியாகி இருப்பார். இப்படி ஏதாவது செய்ய மாட்டோமா என்று மேலதிகாரிகளும் இருநாவுக்கரசிடம் வாங்கித் தின்ற ஒருசில செய்தியாளர்களும் காத்துக் கிடந்தார்கள். ஒரு வாரம் வரை முரசொலியை ஆழமாக படித்தேன். சின்னச் செய்திகளைக் கூட தேடித்தேடி படித்தேன். கலைஞர் கூட அப்படி படித்திருக்க மாட்டார். செளடேக்கர் மகளின் திருமணநாள் வந்தது. மாலையில் வரவேற்பு. ஏராளமான சினிமா தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள், நடிகநடிகையர்கள், அரசு அதிகாரிகள் என்று கண்கொள்ளாக் கூட்டம். திடீரென்று கூட்டத்தில் ஒரு பரபரப்பு. கலைஞர் வந்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் நான் அவரை முதல் தடவையாக நேருக்குநேர் பார்க்கிறேன். அவர் முகத்தில் ஒரு சின்னச் சிரிப்பு.

நான், அப்போதைக்கு கலைஞர் மயமாகி விட்டேன்.

இந்தக் கட்டத்தில் கலைஞருக்கு ஏற்பட்ட ஒரு வன்முறை எனக்கு ஏற்பட்டதாக துடித்துப் போனேன்.

பிரதமர் இந்திராகாந்தியுடன் கலைஞர் கூட்டணி வைத்திருந்த காலம். அவர் சென்னைக்கு வந்திருந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரும், கூட்டணி சகா கலைஞரும் விமான நிலையத்திற்குச் சென்றார்கள். விமானம் தரையிறங்கியதும் எம். ஜி. ஆர் விமானத்திற்கு அருகே போயிருந்தார். இந்த இடத்திற்கு முக்கியமான தலைவர்களைத்தான் அனுப்புவார்கள். கலைஞரும் விமானத்திற்கு அருகே போக முற்பட்டபோது அப்போதைய துணை போலீஸ் கமிசனர் ஒருவர் கலைஞரின் கையைப் பிடித்து போகக்கூடாது என்பது போல் இழுத்தார். இதைப் பார்த்து பத்திரிகையாளர்களான எங்களில் ஒரு சிலர் கூச்சலிட்டோம். முதல்வர், இந்திரா காந்தியோடும் திரும்பி வந்தார். கலைஞர் அவரிடம் தனக்கு ஏற்பட்ட வன்முறையை விளக்குவது போல் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் கண்டு கொள்ளவில்லை. இருவரும் இடம் மாறி இருந்தால், கலைஞர் எம் ஜி ஆரை அவமதித்த அந்த அதிகாரியை அங்கேயே அவரிடம் மன்னிப்புக் கேட்கச் செய்திருப்பார்.

காரணம், இது தமிழன் பண்பாடு.