என் பார்வையில் கலைஞர்/தான் ஆடாவிட்டாலும் சதை ஆடி

விக்கிமூலம் இலிருந்து
தான்
ஆடாவிட்டாலும்
சதை ஆடி...


1974 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை வானொலி நிலையத்தில் உள்ள நிகழ்ச்சிப் பத்திரிகையான வானொலிக்கு பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னை சென்னைக்கு மாற்றும்படி டில்லி மேலிட அதிகாரிகளை கெஞ்சியிருக்கிறேன். அவர்கள் கண்டுக்கவே இல்லை. அகிய இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு சில தடாலடி நடவடிக்கைகளை எடுத்து அமைச்சகத்தை அதிரச் செய்தேன். ஆனாலும், குடும்ப நிலவரம் காரணமாக நான் சென்னைக்கு வந்தாக வேண்டிய கட்டாயம். காலையில் மனு போட்டேன் தொலைந்தால் சரி என்பது மாதிரி மாலையிலே மாற்றல் உத்தரவை போட்டு விட்டார்கள். எங்கள் சகாக்களின் மகத்தான் வருத்தம் கலந்த வழியனுப்போடு சென்னை வந்து பொறுப்பேற்றேன். அப்போது இளைய ராஜா வானொலி நிலைய படிக்கட்டுகளில் ஏறி இறங்கி, கொண்டிருப்பார். அவருடைய புகைப்படத்தை அடிக்கடி வானொலி பத்திரிகையில் வெளியிட்டேன்.

1975 ஆம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. பிரதமர் இந்திராவின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேலிக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்த இந்திராகாந்தியை பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரியது அற்பத்தனமானது. இதற்காக இந்திராகாந்தி நெருக்கடி நிலையை பிரகடனப் படுத்தியது அசிங்கமானது. என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தளவில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றை தவிர பெரும்பாலான கட்சிகள் நெருக்கடியை வரவேற்றன. வீர தீர பிரதாபங்களை வெளியிடும் பல்வேறு சங்கங்களும், ஊழியர் அமைப்புகளும் இந்த பிரகடனத்தை வரவேற்பதாக அறிக்கைகள் விட்டனர். எங்கள் நிலையத்திற்கு முன்னால் எனது கண் முன்னாலேயே அரசை விமர்சித்ததற்காக ஒருவரை வடநாட்டு போலீசார் கைது செய்து கொண்டு போனார்கள். இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற கதைதான்.

நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்ட போது முதல்வராக இருந்த கலைஞர் மறைமுகமாகப் போர்க்கொடி தூக்கியது அவர் மீது எனக்கு முதல் தடவையாக ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. இந்திராகாந்தியை எதிர்த்த ஜார்ஜ் பெர்னான்டஸ் உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்களுக்கு அவர் புகலிடம் வழங்கினார். பெருந்தலைவர் காமராசரை கைது செய்ய வேண்டும் என்று வந்த ஆணையையும் கிடப்பில் போட்டு விட்டார். நெருக்கடி நிலையினால் நாடு என்ன ஆகுமோ என்று பதறிப் போன பெருந்தலைவரும், கலைஞரும் ஒருவருக்கு ஒருவர் முட்டுக் கொடுத்துக் கொண்டார்கள். ஆனால், பெருந்தலைவர் 1975ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி அண்ணல் காந்தி பிறந்தநாளில் காலமானார். கலைஞர் அரசு 1976ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டது. குடியரசு தலைவரின் ஆட்சி அமுலுக்கு வந்தது. இ ஆய அதிகாரிகளான ஆர்.வி. சுப்பிரமணியமும், தாவேயும் தமிழக அரசின் ஆலோசகர்களாக வந்தார்கள். ஆர்.வி.எஸ் பதவியேற்ற உடனேயே தவத்திரு குன்றக்குடி அடிகளாரை கைது செய்ய ஆணையிட்டதாக அறிகிறேன். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் தலையீட்டால் அடிகளார் கைது செய்யப்பட வில்லை.

என்றாலும் தேசியவாதி என்ற முறையில் கலைஞர் ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டதில் மகிழ்ச்சிதான். இந்திரா அரசு கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவருக்கு வேண்டிய முக்கியமானவர்களை சிறையில் தள்ளியது.

ஒருநாள், எனது அறையில் நானும் வானொலியின் மூத்த செய்தியாளரும் இப்போது பத்திரிகை தகவல் அமைப்பின் இயக்குநராகவும் உள்ள டி.ஜி. நல்லமுத்து என்னோடு பேசிக் கொண்டிருந்தார். முன்பெல்லாம், கலைஞரை விமர்சிப்பதுதான் எங்களது பொழுது போக்காக இருந்தது. இப்படி, நாங்கள் கலைஞரை கடுமையாக விமர்சிக்கும் சமயங்களில் கலைஞரின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் எங்க அலுவலகத் தோழர் ஒருவர், ஆட்சி மாறிய பிறகும், எனது அறைக்கு வந்தார். ஒரு தகவலை சிரித்தபடியே சுவையாக எங்களை மகிழ்விக்கும் நோக்கத்தோடோ என்னவோ குறிப்பிட்டார்.

முகஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் வீட்டில் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டாராம். கலைஞர் வேனில் இருந்த தனது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு விடை கொடுக்கப் போனாராம். அப்போது, ஒரு வடநாட்டு காவலர், லத்திக் கம்பால் வேனை அடித்து, கலைஞரை மிரட்டும் தொனியில் பார்த்துவிட்டு ‘சலோ சலோ’ என்று சொல்லி விட்டு ஸ்டாலினோடு வேனில் ஏறி பறந்து விட்டாராம்.

இந்தத் தகவலை கேட்ட நான், மகிழ்ச்சி பொங்க தோன்றிய அவரிடம் ‘கொஞ்ச வேல இருக்கு... தயவு செய்து அப்புறம் வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அப்படியே அசையாது இருந்தேன். உடனே, நல்லமுத்து ‘எதற்குப்பா அவர விரட்டுற’ என்றார். நான் விளக்கினேன். விளக்கினேன் என்பதை விட நெகிழ்ந்து போன குரலில் உடைந்து போய்ச் சொன்னேன் என்று குறிப்பிடலாம். ‘ஆயிரந்தான் இருந்தாலும் கருணாநிதி (கலைஞரல்ல) நம்மவர்’ மூன்று நாட்களுக்கு முன்புவரை, அரசனாக வாழ்ந்தவர். அவரை கேவலப்படுத்துவது போல் ஒரு காவலர் நடந்து கொண்டது தமிழனின் கண்டனத்துக்கு உரியது. இதைவிடக் கேவலமானது கலைஞரின் ஆதரவாளராக கூறிக்கொண்ட இந்த நண்பர் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்று நினைத்து, இந்த தகவலை சிரிப்பும் கும்மாளமுமாய்ச் சொன்னது! என்று பதிலளித்தேன்.

இந்தச் சூழலை எழுதும் இப்போது கூட, கலைஞர் வேனை தொட்டுக்கொண்டு இருப்பது போலவும் ஸ்டாலின் வேனுக்குள் இருப்பது போலவும் காவலன் அப்படி நடந்து கொண்டது போலவும் காட்சி வருகிறது. இதற்கு பெயர்தான், தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பதோ? உண்மையிலோ அந்த தகவலை கேட்ட நான் ஆடிப் போய்விட்டேன்.

சென்னை வானொலி நிலையத்தில் இருந்து சென்னையிலே உள்ள களவிளம்பரத்துறைக்கு என்னை மாற்றினார்கள். கலைஞர் அரசு செய்ததாக கூறப்படும் ஊழல் பட்டியலை கையில் கொடுத்து மேடைதோறும் பேச வேண்டும் என்றார்கள். அப்போது பத்திரிகை தணிக்கை செயல்பாட்டில் இருந்ததால் எங்களது அரசியல் பேச்சு செய்திகளானது இல்லை. எனக்கு இது அதிகமாக பிடிக்கவில்லை என்றாலும் பொது வாழ்க்கையில் ஊழலற்ற நிலைமை வரவேண்டும் என்ற காரணத்திற்காக மேடையில் ஏறியதும் கலைஞர் அரசை கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். அதேசமயம் மேட்டுக்குடியான மத்திய மாநில உயர் அதிகாரிகள் கலைஞரை விமர்சிக்கும் போது, என் ரத்தம் கொதித்தது.

ஒரு தடவை, மத்திய, மாநில மக்கள் தொடர்பு அதிகாரிகளின் கூட்டம் ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக அரசின் சர்வ வல்லமை மிக்க ஆலோசகர் தவே அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர் பேசி முடித்ததும் நான் ‘நெருக்கடி காலத்தை சாக்காக்கி காவற்துறையினரும் இதர அதிகாரிகளும் தங்கள் மாமூலைக் கூட்டிக் கொண்டார்கள். மக்கள் மத்தியில் ஒரு முணுமுணுப்பு இருக்கிறது’ என்றேன். இது தவேக்கு பிடிக்கவில்லை. கோள் சொல்லலாகாது என்றார். உடனே, என் எதிர்ப்பை காட்டும் வகையில் அவர் முன்னால் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்வதுபோல் பத்து நிமிடம் வெளியே போனேன். இதனால் எனக்கு திமுக முத்திரை குத்தப்பட்டு என்னை அந்தமானுக்கு மாற்ற வேண்டும் என்று சென்னையில் உள்ள உயர் அதிகாரிகள் குழு அமைச்சரவைக்கு பரிந்துரைத்து அதுவும் ஆணையாகப் போன நேரம். எப்படியோ செய்தி தெரிந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அப்போதைய பொதுச் செயலாளர்களில் ஒருவரான என் இனிய தோழர் ஏ.கே. சண்முகசுந்தரத்தை அணுகினேன். அவர் அந்த ஆணை வராமலே பார்த்துக் கொண்டார்.

நெருக்கடிக்கால பத்திரிகை தணிக்கை அதிகாரிகள் குறிப்பாக இலக்கியவாதியான வெங்கட்ராமன் என்பவர் முரசொலியின் சாதுரியத்தை அதன் பின்னால் உள்ள கலைஞரின் திறமையை பாராட்டுவார். பத்திரிகைகள் முன்கூட்டியே தனது செய்திகளையும், லே அவுட்களையும் தணிக்கை குழுவிடம் காட்டியாக வேண்டும். தணிக்கை குழுவின் ஒப்புதலுக்கு பிறகே பத்திரிகைகள் வெளியாக வேண்டும் என்ற இரும்புக் கரம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. முரசொலி பத்திரிகையும் தணிக்கைக்கு வரும். ஆனால், கலைஞரோ ஒரு சில செய்திகளில் தணிக்கை அதிகாரிகளின் கண்களை மறைத்து விட்டார். சிறையில் எவரெல்லாம் கைதிகளாக இருக்கிறார்கள் என்று கூட பத்திரிகைகள் வெளிப்படையாக எழுத முடியாத நேரம். இந்தச் சமயத்தில் கலைஞரின் முரசொலியில் அண்ணா சமாதிக்கு வர இயலாதவர்கள் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியமானவர்களின் பெயர்களை விலாவாரியாக வெளியிட்டார்.

சென்னை தொலைக்காட்சியிலும், வானொலியிலும் கலைஞரை வில்லத்தனமாக பல தலைவர்கள் சித்தரித்தார்கள். திருப்பி பதிலளிக்க கலைஞருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலே அவரோடு கூடிக் குலாவியவர்கள் கூட இந்த ஊடகங்களில், கலைஞரை கடுமையாகவும், கேவலமாகவும் சித்தரித்து பேசினார்கள். இந்த மாதிரி சமயங்களில் கலைஞரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நான் நினைத்தபோது எனக்கு கலைஞர் மீது அனுதாபம் ஏற்பட்டது. அந்த அனுதாபமே அன்பானது.

வெந்த புண்ணில் வேலை பாய்ப்பது போல், வள்ளுவர் கோட்டத்தைக் கட்டிய கலைஞருக்கு அங்கே இடமில்லாமல் போய்விட்டது. வள்ளுவத்தின் மாண்புகளையும் அதில் உள்ள நவீனத்துவங்களையும் தக்காரும் மிக்காரும் இல்லாமல் இந்த கோட்டத்தைக் கட்டிய கலைஞர் அங்கே இகழப்பட்டார். வள்ளுவர் கோட்ட திறப்பு விழாவில் பேச்சாளர்கள் அனைவரும் கலைஞரை கேவலப்படுத்தி சித்தரித்தார்கள். இதை உவமை கவிஞர் சுரதா கடுமையாக எதிர்த்து ஒரு ரகளையே ஏற்படுத்தி விட்டார். இது கண்டு நானும் ஒரு முழுத் தமிழனானேன். கவிஞர் சுரதா இப்போது கோமாளித்தனமாக பேசிவிடுகிறார். ஒரு கட்டத்தில் காலடி கலாச்சாரத்திலும் சிக்கிக் கொண்டார். ஆனாலும் அன்று தன்னுடைய உயிரைப் பற்றி கவலைப் படாமல் அவர் எதிர்ப்பு காட்டியது இன்னும் என்னை வீறுகொள்ளச் செய்கிறது.

இதனால், நான் கலைஞரை மறுபரிசீலனை செய்யத் துவங்கினேன்.