ஏழாவது வாசல்/பறையன் இடித்த சங்கராச்சாரியார்

விக்கிமூலம் இலிருந்து

மனந்திருந்திய திருடன் அரசன் மகளை மணக்க மறுத்து விட்டான். அரசன் திரும்பச் சென்று விட்டான். அந்தத் திருடனோ, உண்மை பக்தனாகி பிற்காலத்தில் ஒரு பெரிய மகாத்மா ஆகிவிட்டான்.

உயர்ந்தவர்களைப் போல் வேடம் போடுபவர்களுக்கு சில சமயங்களில் உயர்ந்த எண்ணங்களும் உண்டாகும்.

உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும்.

பறையன் இடித்த சங்கராச்சாரியார்

ஓர் ஊரில் ஒரு சங்கராச்சாரியார் இருந்தார். அவர்நாள்தோறும் காலையில் ஆற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் குளித்துவிட்டு வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட ஒரு பறையன் அவர் மீது மெல்ல இடித்துவிட்டான். அவன் சாதாரண பறையன் மட்டுமல்லன்; மாடு உரிப்பவன். அன்று மாடு உரித்துவிட்டு இரண்டு கூடைகளில் மாட்டுக் கறியைப் போட்டுக் காவடியாகக் கட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். இந்த நிலையில் வந்த அந்தப் பறையன் தன் மீது இடித்தது-தொலைவில் விலகிச் செல்லாமல்-தான் ஒரு மதகுரு-சங்கராச்சாரியார் என்பதையும் அறியாமல் தன்மேல் இடித்தது அவருக்குக் கோபத்தை உண்டாக்கி விட்டது. சீறிவரும் சினத்துடன் அவர் அந்தப் பறையனைப் பார்த்து, “அடே! சண்டாளா, நீ என் மேல் பட்டு விட்டாயே!” என்று உறுமினார்.

அந்தப் பறையன் சிறிதும் அஞ்சவில்லை. அவன் அவரைத் தெரிந்தே வைத்திருந்தான். சங்கராச்சாரியார்-வேத ஞானம் படைத்த மத குரு என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். அவன் சிறிதுகூடக் கவலைப்படாமல் அவரைப் பார்த்துப் பின் வருமாறு கூறினான்.

சுவாமி, நான் தங்கள் மீது படவுமில்லை; தாங்கள் என்மீது படவுமில்லை. நான் தங்களை இடிக்கவில்லை; நீங்கள் தான் என்னை இடித்தீர்கள் என்று சண்டையைத் திருப்பவும் நான் விரும்பவில்லை. ஆனால் நான் ஒன்று தங்களைக் கேட்க விரும்புகிறேன். நான் தங்கள் மீது பட்டதாக எப்படிச் சொல்ல முடியும்? தாங்கள் என்பது யார்? தங்கள் உடலா? தங்கள் மனமா? அல்லது தங்கள் அறிவா? இவற்றில் தாங்கள் யார்? தங்கள் உயிருக்கும் இவற்றிற்கும் என்ன தொடர்பு உண்டு? ஒன்றும் தொடர்பில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்களே! தங்கள் உயிரின் மீது நான் இடித்து விட்டேனா? எதற்காக சினம் கொள்கிறீர்கள்?” என்று கேட்டான்.

வேத ஞானம் படைத்த அந்தப் பறையனுக்குப் பதில் சொல்ல முடியாது சங்கராச் சாரியார் விழி விழி யென்று விழித்தார்.

சங்கராச்சாரியார் போன்ற அறிவாளிகள் மனிதனுக்கு மனிதன் வேறுபாடு இல்லை என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கு மாறாக அவர்களே பறையர்களை இழிவாகக் கருதிக் கொண்டிருந்தால், அவர்கள் கொண்ட அறிவெல்லாம் குப்பை மேட்டுக்குக் கூடப் பயன்படாது என்பதை இக்கதையிலிருந்து அறிகிறோம்.