கந்த புராணம்

விக்கிமூலம் இலிருந்து
(கந்தபுராணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக



கந்த புராணம்

1.பாயிரம்


செந்திலாண்டவன் துணை / திருச்சிற்றம்பலம்
1. விநாயகர் காப்பு (1-5)

1 திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். 1
2 உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நூதலி னோடை
வச்சிர மருப்பி னொற்றை மணிகொள் கிம்புரி வயங்க
மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற
கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம். 2
சுப்பிரமணியர் காப்பு

3 மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி. 3
நூற் பயன்

4 இந்திர ராகிப் பார்மே லின்பமுற் றினிது மேவிச்
சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வர்
அந்தமி லவுணர் தங்க ளடல்கெட முனிந்த செவ்வேற்
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே. 4
வாழ்த்து

5 வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். 5
ஆகத் திருவிருத்தம் - 5
2. கடவுள் வாழ்த்து (6- 30)

சிவபெருமான்

6 திருவந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப்
பெருவந் தனைசெய் தறிதற்கரும் பெற்றி யெய்தி
அருவந் தனையு முருவத்தையு மன்றி நின்றான்
ஒருவன் றனது பதந்தன்னை யுளத்துள் வைப்பாம். 1
7 ஊனாகி யூனு ளுயிராயுயிர் தோறு மாகி
வானகி யான பொருளாய்மதி யாகி வெய்யோன்
தானாகி யாண்பெண் ணுருவாகிச் சராச ரங்கள்
ஆனான் சிவன்மற் றவனீள்கழற் கன்பு செய்வாம். 2
வேறு

8 பிறப்பது மிறப்பதும் பெயருஞ் செய்கையும்
மறப்பது நினைப்பதும் வடிவம் யாவையுந்
துறப்பது மிமையும் பிறவுஞ் சூழ்கலாச்
சிறப்புடை யரனடி சென்னி சேர்த்துவம். 3
9 பூமலர் மிசைவரு புனித னாதியோர்
தாமுணர் வரியதோர் தலைமை யெய்தியே
மாமறை முதற்கொரு வடிவ மாகியோன்
காமரு செய்யபூங் கழல்கள் போற்றுவாம். 4
10 பங்கயன் முகுந்தனாம் பரமென் றுன்னியே
தங்களி லிருவருஞ் சமர்செய் துற்றுழி
அங்கவர் வெருவர வங்கி யாயெழு
புங்கவன் மலரடி போற்றி செய்குவாம். 5
11 காண்பவன் முதலிய திறமுங் காட்டுவான்
மாண்புடை யோனுமாய் வலிகொள் வான்றொடர்
பூண்பதின் றாய்நயம் புணர்க்கும் புங்கவன்
சேண்பொலி திருநடச் செயலை யேத்துவாம். 6
சிவசத்தி

12 செறிதரு முயிர்தொறுந் திகழ்ந்து மன்னிய
மறுவறு மரனிட மரபின் மேவியே
அறுவகை நெறிகளும் பிறவு மாக்கிய
இறைவிதன் மலரடி யிறைஞ்சி யேத்துவாம். 7
விநாயகக் கடவுள்

13 மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலா மௌ¤தின் முற்றுறக்
கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம். 8
வைரவக் கடவுள்

14 பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம். 9
15 வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும்
அஞ்சனப் புகையென வால மாமெனச்
செஞ்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக்
கஞ்சுகக் கடவுள்பொற் கழல்க ளேத்துவாம். 10
வீரபத்திரக்கடவுள்

16 அடைந்தவி யுண்டிடு மமரர் யாவரும்
முடிந்திட வெருவியே முனிவர் வேதியர்
உடைந்திட மாமக மொடியத் தக்கனைத்
தடிந்திடு சேவகன் சரணம் போற்றுவாம். 11
சுப்பிரமணியக் கடவுள்

17 இருப்பரங் குறைத்திடு மெ·க வேலுடைப்
பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை
விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய
திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம். 12
18 சூரலை வாயிடைத் தொலைத்து மார்புகீன்
டீரலை வாயிடு மெ·க மேந்தியே
வேரலை வாய்தரு வௌ¢ளி வெற்பொரீஇச்
சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம். 13
19 காவினன் குடிலுறு காமர் பொன்னகர்
மேவினன் கடிவர விளியச் சூர்முதல்
பூவினன் குடிலையம் பொருட்கு மாலுற
ஆவினன் குடிவரு மமலற் போற்றுவாம். 14
20 நீரகத் தேதனை நினையு மன்பினோர்
பேரகத் தலமரும் பிறவி நீத்திடுந்
தாரகத் துருவமாந் தலைமை யெய்திய
ஏரகத் தறுமுக னடிக ளேத்துவாம். 15
21 ஒன்றுதொ றாடலை யொருவி யாவிமெய்
துன்றுதொ றாடலைத் தொடங்கி ஐவகை
மன்றுதொ றாடிய வள்ளல் காமுறக்
குன்றுதொ றாடிய குமரற் போற்றுவாம். 16
22 எழமுதி ரைப்புனத் திறைவி முன்புதன்
கிழமுதி ரிளநலங் கிடைப் முன்னவன்
மழமுதிர் களிறென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம். 17
23 ஈறுசேர் பொழுதினு மிறுதி யின்றியே
மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சியிற்
கூறுசீர் புனைதரு குமர கோட்டம்வாழ்
ஆறுமா முகப்பிரா னடிகள் போற்றுவாம். 18
திருநந்திதேவர்

24 ஐயிரு புராணநூ லமலற் கோதியுஞ்
செய்யபன் மறைகளுந் தெரிந்து மாயையான்
மெய்யறு சூள்புகல் வியாத னீட்டிய
கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம். 19
திருஞானசம்பந்தமூர்த்திசுவாமிகள்
25 பண்டைவல் வினையினாற் பாயு டுத்துழல்
குண்டரை வென்றுமுன் கூடல் வைகியே
வெண்டிரு நீற்றொளி விளங்கச் செய்திடு
தண்டமிழ் விரகன்மெய்த் தாள்கள் போற்றுவாம். 20
திருநாவுக்கரசு சுவாமிகள்
26 பொய்யுரை நூல்சில புகலுந் தீயமண்
கையர்கள் பிணித்துமுன் கடல கத்திடு
வெய்யகற் றோணியாய் மிதப்ப மேற்படு
துய்யசொல் லரசர்தா டொழது போற்றுவாம். 21
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
27 வறந்திடு ª£ய்கைமுன் னிரம்ப மற்றவண்
உறைந்திடு முதலைவந் துதிப்ப வன்னதால்
இறந்திடு மகன்வளர்ந் தெய்தப் பாடலொன்
றறைந்திடு சுந்தர னடிகள் போற்றுவாம். 22
மாணிக்கவாசக சுவாமிகள்
28 கந்தமொ டுயிர்படுங் கணபங் கம்மெனச்
சிந்தைகொள் சாக்கியர் தியங்க மூகராய்
முந்தொரு மூகையை மொழிவித் தெந்தைபால்
வந்திடு மடிகளை வணக்கஞ் செய்குவாம். 23
திருத்தொண்டர்கள்
29 அண்டரு நான்முகத் தயனும் யாவருங்
கண்டிட வரியதோர் காட்சிக் கண்ணவாய்
எண்டகு சிவனடி யெய்தி வாழ்திருத்
தொண்டர்தம் பதமலர் தொழது போற்றுவாம். 24
சரசுவதி
30 தாவறு முலகெலாந் தந்த நான்முகத்
தேவுதன் றுணைவியாய்ச் செறிந்த பல்லுயிர்
நாவுதொ றிருந்திடு நலங்கொள் வாணிதன்
பூவடி முடிமிசைப் புனைந்து போற்றுவாம். 25
ஆகத் திருவிருத்தம் - 30
3. அவையடக்கம் (31-59)

31 இறைநில மெழுதுமு னிளைய பாலகன்
முறைவரை வேனென முயல்வ தொக்குமால்
அறுமுக முடையவோ ரமலன் மாக்கதை
சிறியதோ ரறிவினேன் செப்ப நின்றதே. 1
வேறு
32 ஆன சொற்றமிழ் வல்ல வறிஞர்முன்
யானு மிக்கதை கூறுதற் கெண்ணுதல்
வான கத்தெழும் வான்கதி ரோன்புடை
மீனி மைப்ப விரும்பிய போலுமால். 2
33 முன்சொல் கின்ற முனிவட நூறெரீஇத்
தென்சொ லாற்சிறி யேனுரை செய்தலான்
மென்சொ லேனும் வௌ¤ற்றுரை யேனும்வீண்
புன்சொ லேனு மிகழார் புலமையோர். 3
34 சிந்து மென்பு சிரம்பிறை தாங்கினோன்
மைந்த னாதலின் மற்றவன் றானுமென்
சந்த மிலுரை யுந்தரிப் பானெனாக்
கந்த னுக்குரைத் தெனிக் கதையினை. 4
35 வெற்றெ னத்தொடுத் தீர்த்து வௌ¤ற்றுரை
முற்று மாக மொழிந்தவென் பாடலிற்
குற்ற நாடினர் கூறுப தொல்லைநூல்
கற்று ணர்ந்த கலைஞரல் லோர்களே. 5
36 குற்ற மேதெரி வார்குறு மாமுனி
சொற்ற பாவினு மோர்குறை சொல்வரால்
கற்றி லாவென் கவிவழு வாயினும்
முன்று நாடிவல் லோருய்த் துரைக்கவே. 6
வேறு
37 குறைபல மாமதி கொளினு மன்னதால்
உறுபய னோக்கியே யுலகம் போற்றல்போற்
சிறியவென் வௌ¤ற்றுரை சிறப்பின் றாயினும்
அறுமுகன் கதையிதென் றறிஞர் கொள்வரே. 7
38 நாதனா ரருள்பெறு நந்தி தந்திடக்
கேரதிலா துணர்சனற் குமரன் கூறிட
வாதரா யணமுனி வகுப்ப வோர்ந்துணர்
சூதனோ தியதுமூ வாறு தொல்கதை. 8
39 சொல்லிய புராணமாந் தொகையு ளீசனை
அல்லவர் காதைக ளனையர் செய்கையுள்
நல்லன விரித்திடு நவைகண் மாற்றிடும்
இல்லது முகமனா லெடுத்துக் கூறுமே. 9
40 பிறையணி சடைமுடிப் பிரான்றன் காதைகள்
இறையுமோர் மறுவில யாவு மேன்மையே
மறைபல சான்றுள வாய்மை யேயவை
அறிஞர்க ணாடியே யவறறைக் காண்கவே. 10
41 புவியின ரேனையர் புராணந் தேரினுஞ்
சிவகதை யுணர்கில ரென்னிற் றீருமோ
அவர்மய லரசனை யடைந்தி டாரெனில்
எவரெவ ராக்கமு மினிது போலுமால். 11
42 மங்கையோர் பங்குடை வான நாயகற்
கிங்குள பலபுரா ணத்துள் எ·கவேற்
புங்கவன் சீர்புகழ் புராண மொன்றுள
தங்கதி லொருசில வடைவிற் கூறுகேன். 12
43 புதுமயி லூர்பரன் புராணத் துற்றிடாக்
கதையிலை யன்னது கணித மின்றரோ
அதுமுழு தறையவெற் கமைதற் பாலதோ
துதியுறு புலமைசேர் சூதற் கல்லதே. 13
44 காந்தமா கியபெருங் கடலும் கந்தவேள்
போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை
ஏந்தல்வந் தவுணர்கள் யாரு மல்வழி
மாய்ந்திட வடர்த்தது மற்றுங் கூறுகேன். 14
வேறு
45 ஏதி லாக்கற்ப மெண்ணில சென்றன
ஆத லாலிக் கதையு மனந்தமாம்
பேத மாகுமப் பேதத்தி னுள்விரித்
தோது காந்தத்தி னுண்மையைக் கூறுகேன். 15
46 முன்பு சூதன் மொழிவட நூற்கதை
பின்பி யான்றமிழ்ப் பெற்றியிற் செப்புகேன்
என்ப யன்னெனி லின்றமிழ்த் தேசிகர்
நன்பு லத்தவை காட்டு நயப்பினால்*.(பாடபேதம்*-நயப்பரோ) 16
47 தோற்ற மீறின்றித் தோற்யி சூர்ப்பகைக்
கேற்ற காதைக் கெவன்பெய ரென்றிடின்
ஆற்று மைம்புலத் தாறுசென் மேலையோர்
போற்று கந்த புராணம் தென்பதே. 17
48 பகுதி கொண்டிடு பாக்களி னத்திலுண்
மிகுதி கொண்ட விருத்தத் தொகைகளால்
தொகுதி கொண்டிடு சூர்கிளை சாய்த்தவன்
தகுதி கொண்ட தனிக்கதை சாற்றுகேன். 19
49 செந்த மிழ்க்கு வரம்பெனச் செப்பிய
முந்து காஞ்சியின் முற்றுணர் மேலவர்
கந்த னெந்தை கதையினை நூன்முறை
தந்தி டென்னத் தமிய னியம்புகேன். 19
50 வெம்பு சூர்முதல் வீட்டிய வேற்படை
நம்பி காதையை நற்றமிழ்ப் பாடலால்
உம்பர் போற்ற வுமையுடன் மேவிய
கம்பர் காஞ்சியிற் கட்டுரைத் தேனியான். 20

ஆகத் திருவிருத்தம் - 50
- - -
4. ஆற்றுப்படலம் (51-89 )

51 செக்கரஞ் சடைமுடிச் சிவனுக் கன்பராய்த்
தக்கவ ரறிஞர்க டவத்தர் செல்வராய்த்
தொக்கவர் யாரும்வாழ் தொண்டை நாட்டினின்
மிக்கதோ ரணியிய லதுவி ளம்புகேன். 1
52 சந்தர மாயவன் றுயிலு மாழிபோல்
இந்திர னூர்முகி லியாவு மேகியே
அந்தமில் கடற்புன லருந்தி யார்த்தெழீஇ
வந்தன வுவரியின் வண்ண மென்னவே. 2
53 பார்த்தென துலகடும் பரிதி யென்னொடும்
போர்த்தொழில் புரிகெனப் பொங்கு சீற்றத்தால்
வேர்த்தெனப் பனித்துவௌ¢ ளெயிறு விள்ளநக்
கார்த்தென வெதடித் தசனி கான்றவே. 3
54 சுந்தர வயிரவத் தோன்றன் மீமிசைக்
கந்தடு களிற்றுரி கவைஇய காட்சிபோல்
முந்துறு சூன்முகில் முழுது முற்றுற
நந்தியம் பெருவரை மீது நண்ணிய. 4
வேறு
55 வாரை கான்றநித் திலமென வாலிகண் மயங்கச்
சீரை கான்றிடு தந்திரி நரம்பெனச் செறிந்த
தாரை கான்றவோ ரிருதுவி னெல்லையுந் தண்பால்
வீரை கான்றிடு தன்மைய தாமென மேகம். 5
56 பூட்டு கார்முகந் தன்னொடுந் தோன்றிய புயல்வாய்
ஊட்டு தண்புன னந்தியங் கிரிமிசை யுகுத்தல்
வேட்டு வக்குலத் திண்ணனார் மஞ்சனம் விமலற்
காட்டு கின்றதோர் தனிச்செயல் போன்றுள தன்றே. 6
57 கல்லென் பேரிசைப் புனன்மழை பொழிதலாற் கானத்
தொல்லும் பேரழல் யாவையு மிமைப்பினி லொளித்த
வெல்லுந் தீஞ்சல மருவுமிக் காருக்கு வியன்பார்
செல்லுங் காலையி லங்கண்வீற் றிருப்பரோ தீயோர். 7
58 தேக்கு தெண்டிரைப் புணரிநீர் வெம்மையைச் சிந்தி
ஆக்கி வாலொளி யுலகில்விட் டெகலால் அடைந்தோர்
நீ¦க்க ரும்வினை மாற்றிநன் னெறியிடைச் செலுத்திப்
போக்கின் மேயின் தேசிகர்ப் பொருவின புயல்கள். 8
59 கழிந்த பற்றுடை வசிட்டன திருக்கையாக் கவிஞர்
மொழிந்த நந்தியம் பெருவரை மொய்த்தசூல் முகில்கள்
பொழிந்த சீதநீர் பொற்புறு சாடியிற் பொங்கி
வழிந்த பாலெனத் திசைதொறு மிழிந்தன மன்னோ. 9
60 சீல மேதகு பகரதன் வேண்டலுஞ் சிவன்றன்
கோல வார்சடைக் கங்கையம் புனலினைக் குன்றின்
மேலை நாள்விட வந்தென நந்திவீழ் விரிநீர்
பாலி யாறெனும் பெயர்கொடு நடந்தது படிமேல். 10
61 வாலி தாகிய குணத்தினன் வசிட்டனென் றுரைக்குஞ்
சீல மாமுனி படைத்ததோர் தேனுவின் றீம்பால்
சால நீடியே தோல்லைநாட் படர்ந்திடு தன்மைப்
பாலி மாநதிப் பெருமையான் பகர்வதற் கௌ¤தோ. 11
62 எய்யும் வெஞ்சிலைப் புளிஞரை எயிற்றியர் தொகையைக்
கைய ரிக்கொடு வாரியே சிறுகுடி கலக்கித்
துய்ய சந்தகில் பறித்துடன் போந்தது தொன்னாள்
வெய்ய சூப்படை வான்சிறை கவர்ந்துமீண் டதுபோல். 12
63 காக பந்தரிற் கருமுகிற் காளிமங் கஞலும்
மாக நீள்கரி யாவையுங் குழுவொடும் வாரிப்
போகன் மேயின மேற்றிசைப் புணரியுண் டமையா
மேக ராசிகள் குணகடல் மீதுசெல் வனபோல். 13
64 குவட்டு மால்கரிக் குருகுதே ரரிபுலிக் குவையுண்
டுவட்டி யுந்திடு திரைப்புனல் மதூகநல் லுழிஞ்சில்
கவட்டி னோமைசாய்த் தாறலை கள்வரூர் கலக்கித்
தெவிட்டி வந்தது பாலையுட் கொண்டிடு செருக்கால். 14
65 காலை வெம்பகல் கதிரவன் குடதிசைக் கரக்கும்
மாலை யாமம்வை கறையெலாஞ் செந்தழல் வடிவாய்
வேலை யும்பரு கியவெழும் வெம்மைபோய் விளிந்து
பாலை காண்கிலா வாரியின் பெருமையார் பகர்வார். 15
66 குல்லை மாலதி கொன்றைகா யாமலர்க் குருந்து
முல்லை சாடியே யானிரை முழுவது மலைத்து
மெல்ல மற்றவை நீந்தலுங் கரைக்கண்விட் டுளதால்
தொல்லை மாநதி யான்வழித் தோன்றிய தொடர்பால். 16
67 சுளையு டைப்பல வாசினி பூகமாந் துடவை
உளைம லர்ச்சினை மருதமோ டொழிந்தன பிறவுங்
களைத லுற்றுமாட் டெறிந்தது கண்ணகன் குடிஞை
அளவின் மிக்குறு பாணிபெற் றதற்கவை யரிதோ. 17
68 இலைவி ரித்துவெண் சோறுகால் கைதையு மெழுதுங்
கலைவி ரித்திடு பெண்ணையுங் களைந்திடுங் களைபோய்
அலைவி ரித்திடு கடல்புக வொழுகுமா றனந்தன்
தலைவி ரித்துழி யுடனௌ¤த் தன்னதோர் தகைத்தால். 18
69 கொங்கு லாமலர்க் கொன்றைகூ விளைகுர வுழிஞை
பொங்கு மாசுணந் தாதகி பாடலம் புன்னை
துங்க மார்திருத் தலைமசைக் கொண்டுறுந் தொடர்பால்
எங்க ணாயகன் றன்னையு மொத்ததவ் விருநீர். 19
70 கொலைகொள் வேன்மற வீரர்த மிருக்கையிற் குறுகாச்
சிலையும் வாளடு தண்டமுந் திகிரிவான் படையும்
நிலவு சங்கமுங் கொண்டுசென் றடல்புரி நீரால்
உலக மேழையு முற்பக லயின்றமா லொக்கும். 20
71 தேன்கு லாவிய மலர்மிசைப் பொலிதரு செயலால்
நான்க வாமுகந் தொறுமறை யிசையோடு நணுகிக்
கான்கு லாவிய கலைமரை மான்றிகழ் கவினால்
வான்கு லாமுல களிப்பவ னிகர்க்குமால் வாரி. 21
72 மீது போந்திரி சங்கைவிண் ணிடையின்மீ னோடும்
போத லாயுற வீசலாற் சலமிகும் புலனால்
தீதின் மாக்களைச் செறுத்தலா லளித்திடுஞ் செயலாற்
காதி காதல னிகர்க்குமாற் கன்னிமா நீத்தம். 22
73 தெழித்த மால்கரி யினங்கட மெயிற்றினாற் சிதையக்
கிழித்த பேரிறால் சொரிந்ததேன் கிரியுள வெல்லாங்
கொழித்து வந்துற வணைதரும் பாலியின் கொள்கை
கழித்த நீர்க்கங்கை யமுனையைக் கலந்தெனத் தோன்றும். 23
74 சங்க மார்த்திடத் திரையெழ நதியுறுத் தகைமை
அங்கம் வெம்பினை பனிக்கதி ரல்லைநீ யழலோய்
இங்கு வாதிளைத் தேகுதி யெனக்கர மெடுத்தே
பொங்கும் வாய்விடா விரவியை விளிப்பது போலும். 24
75 வேத மேமுதல் யாவையு முணர்கினு மேலாம்
ஆதி வானவன் கறைமிடற் றிறையென வறியாப்
பேதை மாக்கட முணர்வென வலைந்து பேர்கின்ற
சீத நீரெலாந் தௌ¤தலின் றாயது சிறிதும். 25
76 செம்பொன் மால்வரை யல்லன கிரிகளுந் திசையும்
உம்பர் வானமுந் தரணியுந் துளங்கவந் துறலால்
எம்பி ரான்முனம் வருகென நதிகளோ டெழுந்த
கம்பை மாநதி யொத்தது கரைபொரு பாலி. 26
77 உதிரு கின்றசிற் றுண்டிகொண் டொலிபுனற் சடைமேல்
மதுரை நாயகன் மண்சுமந் திட்டமா நதியின்
முதிரு முத்தமிழ் விரகன தேடென மொய்ம்மீன்
எதிர்பு குந்திடப் போவது பாலியா மியாறு. 27
வேறு
78 மாசறத் துளங்கு துப்பு மரகதத திடைவந் தென்னப்
பாசடை நடுவட் பூத்த பங்கயத் தடாகம் யாவுந்
தேசுடைத் தரங்க நீத்தச் செலவினாற் சிதைந்த மன்னோ
பேசிடிற் சிறுமை யெல்லாம் பெருமையா லடங்கு மன்றோ. 28
79 வளவயன் மருத வைப்பின் வாவியங் கமலம் யாவுங்
கிளையொடும் பறித்து வா£க் கேழுறப் பொலிந்த தோற்றம்
விளைதரு பகையிற் றோலா வெவ்வழற் சிறுமை நோக்கிக்
களைதலைப் புரிந்து பற்றிப் பெயர்ந்தெனக் காட்டிற் தன்றே. 29
80 திரைகட னீத்தரங் கொண்மூ வினத்தொடு சேண்போய் நோக்கித்
தரையிடை யிழிந்து சென்று தன்பொருள் கொடுபோந் தென்னப்
பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை
இருபுடை யலைத்து வௌவி யேகிய தெறிநீர்ப் பாலி. 30
81 பாரிடை யினைய பண்பிற் படர்ந்திடு பாலி யந்தத்
தாருயி ரனைத்துந் தத்த மருவினைக் கமைத்த நீராற்
சேருறு கதிக ளென்ன* மரபினிற் றிறமே யென்னத்
தாருவின் கிளைக ளென்னத் தனித்தனி பிரிந்த தன்றே. 31
( * சர்வ சங்கார காலத்தில் எல்லா வுயிர்களும் ஒடுங்குங்கால்,
தத்தம் வினைக்கு அமைந்த கதிகளை அடையும் என்பது நூற்றுணிபு )
82 கால்கிளர் கின்ற நீத்தங் கவிரிதழ்க் கலசக் கொங்கைச்
சேல்கிளர் கரிய வுண்கட் டிருநுதல் மிழற்றுந் தீஞ்சொல்
மேல்கிளர் பரவை யல்குன் மெல்லிய லறன்மென் கூந்தல்
மால்கிளர் கணிகை மாதர் மனமெனப் போயிற் றாமால். 32
83 பாம்பளை புகுவ தேபோற் பாய்தரு பரவைத் தெண்ணீர்
தூம்பிடை யணுகு மாற்றாற் சொன்முறை தடைசெய் வோரில்
தாம்புடை பெயரா வண்ணந் தலைத்தலை தள்ளு மள்ளர்
ஏம்பலோ டார்க்கு மோதை யுலகெலா மிறுக்கு மாதோ. 33
84 பணையொலி யிரலை யோதை பம்பையின் முழக்க மங்கட்
கிணையொலி மள்ள ரார்ப்புக் கேழ்கிளர் தரங்க நன்னீர்
அணையொலி யவற்றை வானத் தார்ப்பொலிக் கவனி தானும்
இணையொலி காட்டிற் றோவென் றெண்ணுவார் விண்ணுளோரும். 34
85 இயல்புகுங் களிநல் யானை யினந்தெரிந் தெய்து மாபோல்
கயல்புகுந் துலவுஞ் சின்னீர்த் தடமபுகுங் காமர் காவின்
அயல்புகுங் கோட்ட கத்தி னகம்புகு மார்வத் தொடி
வயல்புகுங் களிப்பு நீங்கா மாக்களின் மயங்கு மாதோ. 35
86 எங்கணு நிறைந்து வேறோ ரிடம்பிறி தின்மை யாகச்
சங்கமா யீண்டு மள்ளர் தாங்குபல் லியமு மார்ப்பப்
பொங்கிய நகரந் தோறும் புறமெலாம் வளைந்த நீத்தம்
அங்கண்மா ஞாலஞ் சூழு மளககரை நிகர்த்த தாமே. 36
87 மாறடு மள்ள ருய்ப்ப மருதத்தி னிறைந்து விஞ்சி
ஏறிய நார மீட்டு மிருங்கட னோக்கிச் சென்ற
வேறுகொள் புலனை வென்றோர்* மேலைநன் னெறியுய்த் தாலுந்
தேறிய வுணர்வி லாதோர் செல்வுழிச் செல்வ ரன்றே. 37
( * புலனை வெல்லுதல் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்
ஐம்புலன்களின் வழியே மனத்தைச் செலுத்தாமல்அடக்கித் தன்
வசப்படுத்தல்.)
81 வாளெனச் சிலைய தென்ன வால்வளை யென்னத் தெய்வக்
கோளெனப் பணிக ளென்னக் குலமணி குயிற்றிச் செய்த
மீளிவெஞ் சரங்க ளென்ன வேலென மிடைந்து சுற்று
நாளெனப் பிறழு மீன்க ணடவின நார மெங்கும். 38
89 மாண்டகு பொய்கை தோறும் வயறொறு மற்று மெல்லாம்
வேண்டிய வளவைத் தன்றி மிகுபுனல் விலக்கு கின்ற
ஆண்டகை மள்ளர் தம்பா லமைந்திடுங் காலை யெஞ்சி
ஈண்டிய வெறுக்கை வீசும் இடைப்படு வள்ள லொத்தார். 39
ஆகத் திருவிருத்தம் - 89
- - -
5. திருநாட்டுப்படலம் (90 - 146)

90 அவ்வியல் பெற்றிடு மாற்றன் மள்ளர்கண்
மைவரு கடலுடை மங்கை தன்னிடை
மெய்வளங் கொள்வதை வேண்டி யந்நிலச்
செய்விக ணாடியே யினைய செய்குவார். 1
91 சேட்டிளந் திமிலுடைச் செங்க ணேற்றொடுங்
கோட்டுடைப் பகட்டினம் விரவிக் கோன்முறை
காட்டினர் நிரைபட வுழுப காசினி
பூட்டுறு பொலன்மணி யாரம் போலவே. 2
92 காற்றினு மனத்தினுங் கடுமை சான்றன
கோற்றொழில் வினைஞர்தங் குறிப்பிற் செல்லுவ
ஏற்றினஞ் சேறலு மிரிந்த சேலினம்
பாற்றின மருளவிண் படர்ந்து பாயுமால். 3
93 சால்வளை தரவுழும் வயலிற் றங்கிய
வால்வளை யினம்வெரீஇ யலவன் மாப்பெடைச்
சூல்வளை புகுவதங் கறிஞர் சூழ்விலைக்
கோல்வளை மகளிர்பாற் கூட்ட மொத்ததே. 4
94 உலத்தொடு முறழ்புயத் துழவர் பொன்விளை
புலத்தினும் வியத்தகு வயலிற் போக்கிய
வலத்திடைப் பிறழ்மணி வேள்வி யாற்றிடும்
நிலத்திடைப் பிறந்தமின் னிகர்க்கும் நீர்மைய. 5
95 நாறுசெய் குநர்சிலர் நார நீர்வயல்
ஊறுசெய் குநர்சில ரொத்த பான்மையிற்
சேறுசெய் குநர்சிலர் வித்திச் செல்லுநீர்க்
காறுசெய் குநர்சில ரளப்பின் மள்ளரே. 6
96 குச்செனப் பரிமிசைக் குலாய கொய்யுளை
வைச்செனத் தளிர்த்தெழு நாற்றின் மாமுடி
அச்செனப் பதித்தனர் கடைஞ ராவியா
நச்சின மகளிரை நினைந்து நைந்துளார். 7
97 வாக்குறு தேறலை வள்ள மீமிசைத்
தேக்கின ருழவர்தந் தெரிவை மாதரார்
நோக்குறு மாடியி னுனித்து நோக்கினர்
மேக்குறு காதலின் மிசைதன் மேயினார். 8
98 வாடுகின் றார்சிலர் மயங்கி நெஞ்சொடு
மூடுகின் றார்சில ருயிர்க்கின் றார்சிலர்
பாடுகின் றார்சிலர் பணிகின் றார்சிலர்
ஆடுகின் றார்சிலர் நறவ மார்ந்துளார். 9
99 அந்தரப் புள்ளடு மளிக டம்மொடும்
வந்தடுத் தவரொடு மயக்கு தேறலை
இந்திரத் தெய்வத மிறைஞ்சி வாமமாந்
தந்திரக் கிளைஞர்போற் றாமு மேயினார். 10
100 விள்ளுறு நாணினர் விரகத் தீயினர்
உள்ளுறு முயிர்ப்பின ருலையு நெஞ்சினர்
தள்ளுறு தம்முணர் வின்றிச் சாம்பினார்
கள்ளினு முளதுகொல் கருத்த ழிப்பதே. 11
101 பளிக்கறை யன்னதோர் படுகர்ப் பாங்கினுந்
தளிர்ப்புறு செறுவினுந் தவறுற் றேகுவார்
தௌ¤ப்பவ ரின்மையி னெறியிற் சென்றிலர்
களிப்பவர் தமக்குமோர் கதியுண் டாகுமோ. 12
102 இன்னன பற்பல வியற்றி யீண்டினர்
உன்னருந் தொல்லையி லுணர்வு வந்துழிக்
கன்னெடுந் திரள்புயக் கணவ ரேவலில்
துன்னின ரவரோடுந் துவன்றிச் சூழ்ந்துளார். 13
103 மள்ளர்தம் வினைபுரி மழலைத் தீஞ்சொலார்
கள்ளுறு புதுமணங் கமழும் வாலிதழ்
உள்ளுறு நறுவிரை யுயிர்த்து வீசிய
வௌ¢ளிய குமுதமென் மலரின் மேவுமே. 14
104 நட்டதோர் குழுவினை நடாத தோர்குழு
ஒட்டலர் போலநின் றொறுத்த லுன்னியே
அட்டன ராமென வடாத வான்களை
கட்டனர் வேற்றுமை யுணருங் காட்சியார். 15
105 ஏயின செயலெலா மியற்றி வேறுவே
றாயிடை வேண்டுவ தமைய வாற்றியே
மாயிரும் புவிமிசை மகவைப் போற்றிடுந்
தாயென வளர்த்தனர் சாலி யீட்டமே. 16
106 மன்சுடர் கெழுமிய வயிர வான்கணை
மின்சுடர் தூணியின் மேல கீழுறத்
தன்சுடர் பொலிதரச் செறித்த தன்மைபோற்
பொன்சுட ரிளங்கதிர் புறத்துக் கான்றவே. 17
107 பச்சிளங் காம்புடைப் பணையின் மீமிசை
வச்சிரத் தியற்றுமோ ரிலைகொள் வான்படை
உச்சிமே லுறநிறீஇ யொருங்கு செய்தெனக்
குச்சுறு சாலிமென் கதிர்கு லாவுமால். 18
108 சுற்றுறு ப·றலைச் சுடிகை மாசுணம்
பெற்றுறு குழவிகள் பெயர்த லின்றியே
முற்றுறு நிவப்பொடு முறையி னிற்றல்போ
நெற்றுறு பசுங்கதிர் நிமிர்தல் மிக்கவே. 19
109 மையுறு கணிகையர் மகிழ்நர் வந்துழிப்
பொய்யுறு மளியெனப் பயனில் புன்கதிர்
கையுறு முவகையாற் பணியுங் கற்பினோர்
மெய்யுறு பரிவென விளைந்து சாய்ந்தவே. 20
110 மாலுறு பொன்னகர் மருவு மன்னற்குப்
பாலுறு தீம்பதம் பலவு மார்த்தியே
மேலுறு சாலியின் விளைவு நோக்கியே
கோலிநின் றரிந்தனர் குழாங்கொண் மள்ளரே. 21
111 அரிந்திடு சுமைகளா லவனிப் பேருடல்
நெரிந்திடச் சேடனு நௌ¤ந்து நீங்கிடத்
தெரிந்திடும் போர்கள்சே ணளவுஞ் சேறலால்
விரிந்திடு கதிர்சுலா மேரு வாயவே. 22
112 ஏற்றொடு பகட்டின மிசைத்துப் போருரு
மாற்றினர் வலமுறை திரித்து வாழ்த்தொலி
சான்றினர் பரனொடு தமது தெய்வதம்
போற்றினர் மீமிசை பொலிகென் றோதுவார். 23
113 தொங்கலம் பூமுடித் தொழுவர் போரினை
அங்குறப் படுத்துவை யகற்றி யாக்கிய
பொங்கழிப் பதடிகள் புறத்து வீசியே
எங்கணு நெற்குவை யியற்று வாரரோ. 24
114 களப்படு கைவலோர் கால்க ளான்முகந்
தளப்புறு நெற்குழா மவற்றுண் மன்னவற்.
குளப்படு கடன்முறை யுதவி மள்ளருக்
களித்தனர் வேண்டிய தனைய நாட்டுளோர். 25
115 சொற்குவை வழிபடப் புகழிற் றோன்றுதம்
மிற்குவை வேண்டுவ தேவி யெஞ்சிய
நெற்குவை குரம்பையி னிரப்பு வித்தனர்
பொற்குவை யரிந்தனர் பொதிவித் தென்னவே. 26
116 தலத்திடை வேறிடத் தொதுங்குந் தண்ணிய
குலத்திடைப் பிறந்தவர் கூட்ட மாமென
நலத்திடை வந்திடு முதிரை நல்வளம்
நிலத்திடை யொருசிறை விளையு நீரவே. 27
117 பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்
திறப்பதும் வைகலு முலகி லேய்ந்தெனச்
சிறப்புட னடுவதும் பருவஞ் செய்வதும்
மறுப்பதுந் தொகுப்பது முலப்பின் றாயவே. 28
118 முழவொல விண்ணவர் முதல்வற் காக்குறும்
விழவொலி கிணையொலி விரும்பு மென்சிறார்
மழவொலி கடைசியர் வள்ளைப் பாட்டொலி
உழவொலி யல்கலு முலப்பு றாதவே. 29
119 காலுற நிமிர்ந்திடு காமர் சோலையும்
நீலமுங் கமலமு நிறைந்த பொய்கையும்
ஆலையங் கழனியும் கநங்கற் காயுத
சாலைக ளிவையெனச் சாற்ற நின்றவே. 30
120 நெறியிடை யொழுகலா விழுதை நீரரை
மறலிதன் னகரிடை வருத்தல் போலுமால்
குறைபடத் துணித்தவண் குவைசெய் கன்னலை
அறைபடு மாலைக ளிடையிட் டாட்டலே. 31
121 ஏறுகாட் டியதிற லிளைஞ ரெந்திரங்
கூறுகாட் டியகழை யழுங்கக் கோறலுஞ்
சாறுகாட் டியதரோ யாதுந் தம்மிடை
ஊறுகாட் டினர்க்கலால் உலோப ரீவரோ. 32
122 மட்டுறு கழையினும் வலிதிற் கொண்டபின்
இட்டகொள் கலங்களி னிருந்த தீம்புனல்
தொட்டிடு கடலெனத் தொன்று மன்னவை
அட்டதோர் புகைமுகி லளாவிற் றொக்குமே. 33
123 கூடின தேனிசை யிளமென் கோகிலம்
பாடின மயில்சிறை பறைய டித்தன
வாடின வஞ்சிதந் தலைய சைத்திடா
நாடின பாதவம் புகழ்வ நாரையே. 34
124 காசொடு நித்திலப் பொதியுங் காட்டியே
பாசடை மாதுளை சினையிற் பைங்குயில்
பேசிட நிற்பன பெறீஇயர் வம்மென
வீசுதல் கருதியே விளித்தல் போன்றவே. 35
125 சித்திரக் கதலிமா வருக்கைத் தீங்கனி
துய்த்திட வரும்பய னுதவுந் தோற்றத்தால்
உத்தம முதலிய குணத்தி னோங்கிய
முத்திறத் தவர்கொடை மொழிய நின்றவே. 36
126 வீசுகால் பொரவசை விசும்பிற் றாழைகள்
தேசுலாம் பரிதிமெய் தீண்டுஞ் செய்கைய
காசினி தன்கையாற் கலைவெண் டிங்கள்போல்
மாசுறா வகைதுடைத் திடுதல் மானுமே. 37
127 வாசநீள் பொதும்பரின் மைந்தர் மாதர்கள்
காசுநூன் மேகலை பரியக் கைவளை
பூசலிட் டலமரப் புணருஞ் செய்கைகண்
டாசைமிக் கழுங்குவ பிரிந்த அன்றிலே. 38
128 கானுலா நந்தன வனமுங் காரென
வானுலாந் தண்டலை மருங்கும் வைகலும்
வேனிலா னன்னவர் மகளிர் மேயினார்
ஊனுலாங் குரம்பையு ளுயிருற் றென்னவே. 39
129 அசும்புறு மகன்புன லறாத சூழலின்
விசும்புற வோச்சிய விரைமென் றாதினாற்
பசும்பொனிற் குயிற்றிய பதியிற் றூபிகைத்
தசும்பெலாம் வௌ¢ளிய தாக்குந் தாழையே. 40
130 உற்றிட வரிதவ ணுழவர் நீத்ததார்
சுற்றிடுந் தாண்மிசை யிடறுஞ் சூல்வளை
தெற்றிடும் பூங்கொடி புடைக்குஞ் சேலினம்
எற்றிடுந் தேம்பழ மிழுக்குந் தேன்களே. 41
131 கானிமிர் கந்திகள் கான்ற பாளைமேன்
மீனினம் பாய்தலுஞ் சிதறி வீழ்வுறா
வானதோர் மருதவைப் படையுந் தன்மைய
வானுறு தாரகை வழுக்கிற் றொக்குமால். 42
132 மாகுல வல்லியின் மஞ்ஞை யாடல்போல்
கோகில மார்தருக் குழத்தி னூசன்மேற்
பாகுல வின்சொலார் பணிக்கு மெல்லிடைக்
காகுலம் பிறர்கொள மகிழ்வி னாடுவார். 43
வேறு
133 ஊசலுற்றவர் குழைக்குடைந் திடுதலா லுவரை
வீச லொப்பன வாடுதல் கிளிமொழி வெருவிப்
பேச லொப்பன வீழ்ந்திலர் பிழைத்ததீ தென்னா
ஏச லொப்பன கோகிலப் பறவைக ளிசைத்தல். 44
134 கூர்ப்புக் கொண்டகட் கொடிச்சியர் குளிர்புனங் காப்போர்
ஆர்ப்புக் கொண்டுகை விசைத்தெறி மணிக்கல்வந் தணையச்
சார்ப்புக் கொண்டதஞ் சிறகரால் விலக்கியத் தடத்துப்
பார்ப்புக் கொண்டுகொண் டெழுவன தோலடிப் பறவை. 45
வேறு
135 கடற்பரு கியமுகில் பெய்யுங் காட்சிபோல்
அடற்பெரு மேதிக ளனைத்தும் புக்குராய்த்
தடப்பனல் வறிதெனப் பருகித் தம்முலைக்
குடத்திழி பாலினாற் குறையைத் தீர்க்குமே. 46
136 பாட்டிய லளிமுரல் பதுமக் கோயிலில்
நாட்டிய நிமலன்மு னந்தி நீரிடை
மாட்டிய பல்பெருஞ் சுடரை மானுமாற்
கோட்டுயர் தடந்தொறுங் குவளை பூத்தவே. 47
137 கலனிடைத் தருவதுங் கானத் துள்ளதும்
பொலனுடைப் பொருப்பிடைப் பொருளு மல்லது
நலனுடை நாட்டவர் நயதத லின்றிய்ந்
நிலனிடைப் பொருள்பகர் வழக்க நீத்ததே. 48
138 யாழ்க்கையர் பொருநருக் கிறைவ ரேழிசை
வாழ்க்கைய ரளவையின் வகுத்த பாடலைக்
கேட்குநர் நன்றென மருப்புக் கிம்புரிப்
பூட்கைக ளுதவுவார் பொதுவி றோறுமே. 49
139 கஞ்சிதேய்ப் புண்டகில் கமழும் பூந்துகில்
வஞ்சிதேய்ப் புண்டன மருங்கு லாரடி
பஞ்சிதேய்ப் புண்டன பணியத் தாக்கலாற்
குஞ்சிதேய்ப் புண்டன குமரர் கூட்டமே. 50
140 அன்றிலம் பெடைகளை யணுகி யன்னைகேள்
நன்றென வினையின்மே னடந்த நாயகர்
இன்றுவந் திடுவரிங் கெமபொ ருட்டினால்
ஒன்றுநீ யிரங்க்லென் றுரைக்கின் றார்சிலர். 51
141 ஆடியல் கருங்கணுஞ் சிவப்புற் றங்கமும்
வாடுவ தாகியே மதன வேர்வுறாக்
கூடிய மகளிருங் குமரர் தங்களை
ஊடிய மகளிரு முலப்பின் றாயினார். 52
142 அகனமர் கணிகைய ரடிகள் சூடியே
முகனுறு முவகையான் முயங்கி யன்னவர்
நகனுறு குறிகொளீஇ நாளுங் காமநூல்
தகைமைசெய் காளையர் தொகுதி சான்றதே. 53
143 வாளைக ளிகல்புரி வயலும் வாலியும்
பாளையொ டுற்பலம் பதும நாறுமால்
வேளயர் தடங்கணார் விரைமென் றாளினை
காளையர் குஞ்சியுங் காரமு நாறுமால். 54
144 சேவக மணைவன கரிகள் சேனைகள்
காவக மணைவன கலைகள் புள்ளினம்
பூவக மணைவன பொறிவண் டாயிடைப்
பாவக மணைவன பாட லாடலே. 55
145 ஆடக மாமதி லம்பொற் கோபுரம்
நீடிய மண்டப நெறிகொ ளரீவணம்
பாடலொ டாடிடம் பிறவும் பாலிநன்
னாடுள பதிதொறு நண்ணி யோங்குமே. 56
146 தெண்டிரை யுலகினிற் சீர்பெற் றோங்கிய
மண்டல மெங்கணு மதிக்க நின்றதோர்
தொண்டைநன் னாட்டணி சொல்லி னாமினித்
தண்டமிழ் வளநகர்த் தன்மை கூறுவாம். 57

ஆகத் திருவிருத்தம் - 146
- - -
6. திருநகரப் படலம் (147- 270 )

147 மாவுல கெங்கு மலர்த்தட மாகத்
தாவறு சீர்புனை தண்டக நாடே
மேவிய கஞ்சம தாவதின் மேவும்
தேவினை யொத்தது சீர்பெறு காஞ்சி. 1
148 பூக்கம லத்துறை புங்கவன் மாயோன்
பாங்குறை தேவர்பல் லாணடிசை பரவ
ஓங்கிய புள்ளின மூர்ந்தவ ணுறலால்
ஆங்கவர் மவு மரும்பத மாமே. 2
149 இன்னிய றேர்தரு மிந்திரன் முதீலா
மன்னிய வானவர் மற்றுளர் யாருந்
துன்னின ராயிடை சூழந்துறை செயலாற்
பொன்னக ரென்று புகன்றிட லாமால். 3
150 கின்னரர் சித்தர் தெரீஇயத னாலத்
தந்நிக ரில்லவர் தம்பதி போலும்
பன்னக வேந்தர் பராயின ருறலால்
அன்னவர் தம்பதி யாகிய தன்றே. 4
151 எண்டிசை காவலர் யாவரு மீண்டப்
பண்டவர் பெற்ற பதங்களை மானும்
மண்டல மார்சுடர் மற்றைய வுறலால்
அண்டமு மாகிய தப்பதி யென்பார். 5
152 இப்படியாவரு மெதிய திறனால்
ஒப்பன போல வுரைத்திட லொப்போ
அப்பதி யேயத னுக்கிணை யன்றிச்
செப்பரி தாற்பிற சீர்கெழு காஞ்சி. 6
153 மறைமுத லோர்தனி மாவி னிழற்கீர்
உறைதரு காஞ்சி தனக்குல கெல்லாம்
பெறுமய னாதியர் பெற்றிட வன்னான்
நிறுவிய தொன்னக ரோநிக ராமே. 7
154 மேயதொல் லூழியில் வேலைக ளேழுந்
தூயத னெல்லை சுலாவுற நிற்றல்
ஆய பரஞ்சுட ராங்குள தாயும்
மாயைகள் சுற்றிய மன்னுயி ரொக்கும். 8
வேறு
155 பாழி மால்வரை யெறிதிரை வையகம் பலவும்
வாழு மண்டங்கள் சிற்றுரு வமைந்துவந் தென்னச்
சூழு நேமியம் புள்ளின முதலிய சுரங்கும்
ஆழி நீத்தம் தொத்தது மதிற்புறத் தகழி. 9
156 மண்ட லப்பொறை யாற்றுவான் பற்பல வகுத்து
முண்ட காசன மீமிசை யிருந்திடு முதல்வன்
அண்ட கோளகை தாங்கவோர் சுவர்த்தல மதுவும்
பண்டு செய்தெனவோங்கிய நெடுமதிற் பரப்பு. 10
157 சென்று மூவெயி லழலெழ நகைத்தவன் செழும்பொற்
குன்று தோளுற வாங்கலு முலகெலாங் குலைந்த
அன்று நான்முக னனைத்தையுந் தாங்குகென் றருள
நின்ற தென்னவும் பாதலம் புகுந்துமேல் நீண்ட. 11
158 மேக நாட்டிற்கும் விஞ்சையர் நாட்டிற்கும் விண்ணோர்
மாக நாட்டிற்கும் மலரய னாட்டிற்கும் மற்றை
நாக நாட்டிற்கும் பாதல நாட்டிற்கும் நணுகிப்
போக நாட்டிய பொன்மதில் ஆனதப் புரிசை. 12
159 முதிரை வண்ணமா நவமணிக் குவையும்வான் முளைக்குங்
கதிரி னெல்லெனும் பொருளுட னேனவுங் காட்டிப்
பொதிவ தாகியே முழுவதும் நிரம்புதல் பொருந்தா
நிதிய மேயகூ டொத்தது நெடியமா மதிலே. 13
160 நிறையும் வார்கடல் சுற்றிய நேமியும் நேமிக்
குறையு ளாகிய கணிப்பிலா வண்டமு மொப்ப
சிறையில் வான்கிரி நிரையெனச் செவ்விதிற் கிளர்ந்து
மறுகெ லாந்திகழ் மாளிகைப் பத்திசூழ் மதிலே. 14
161 தடுக்கு மாற்றலர் நால்வகைப் படையொடுஞ் சாய
முடுக்கும் வாள்கொடு விதிர்த்திடு மெழுவினான் முருக்கும்
எடுக்கு மெற்றிடு மெறிந்திடும் விழுங்கிடு மீர்க்கும்
படுக்குங் கன்மழை சொரிந்திடும் விற்படை பயிலும். 15
162 உருக்குஞ் செம்பினை வங்கத்தை யிழுதொடு மோச்சும்
வெருக்கொ ணேமிக ளெறிந்திடும் வச்சிரம் வீசி
இருக்கும் நின்றிடுங் குப்புறுஞ் செறுநரை யிகலி
நெருக்குந் தாழ்ந்திடும் உலகளந் தோனென நிமிரும். 16
163 பீடு தங்கிய பணைமுர சியம்பிடும் பிடிக்குங்
கோடு மார்த்திடுந் துடிகளு மொலித்திடுங் கொட்புற்
றாடும் மீயுயர் புள்ளையு மெறிந்திடு மரண்மேல்
ஓடும் மீளுமக் கதிரையுந் தடுப்பபோல் உந்தும். 17
164 சூலம் வீசிடுந் தொமரம் வீசிடுஞ் சுடர்வேல்
ஆலம் வீசிடுஞ் சுடுமணல் வீசிடு மளப்பில்
சாலம் வீசிநின் றீர்த்திடு மகழியிற் றிள்ளுஞ்
சீலம் வீசிய பாரிட மாமெனத் திரியும். 18
165 திகழும் வெங்கன லுமிழ்ந்திடு மொன்னலர் செலுத்தும்
பகழி மாரியை விழுங்கிடும் பறவையிற் படரும்
இகழு நாவையும் மனத்தையு மெறிந்திடு மென்னாற்
புகழும் நீரவன் றம்மதின் மேலுறும் பொறிகள். 19
166 பூணி னேர்தரும் பொன்னவாம் புரிசைமேற் புனைந்த
வாணி லாநெடுந் துகலிகை பெயர்வன மலரோன்
சேணு லாயதீஞ் சுடரேனுங் கோபுர சிகரங்
காண வேபல வெகினமாய்த் தேடல்போற் கவினும். 20
167 ஈர்த்த மாமதி சசியென்ப துலகுளோ ரிட்ட
வார்த்தை யல்லது சரதமோ கடிமதின் மருங்கில்
தூர்த்த கேதன மவன்மணி மேனியிற் றுடக்கப்
போர்த்த வெண்ணிலாக் கஞ்சுகம் பீறியபோலாம். 21
168 காட்சி மேயவக் கடிமதிற் கதலிகை காணூஉச்
சூட்சி நாடிய பரிதியுங் கீழுறத் தொடர்ந்தான்
மாட்சி தேய்ந்திலன் வரன்முறை மனப்படு மதியோர்
தாட்சி செய்யினு மனையாபா லணுகுமோ தவறு. 22
169 புடைப ரப்பிய புரிசையி னாற்றிசைப் புறத்துந்
தடநி லைப்பெருங கோபுர முளதழ னிறத்துக்
கடவு ளுச்சியின் வதனமொன் றின்றியே காண்பான்
அடைத லுற்றிடு திசைமுகம் பொருவின அவையே. 23
170 என்று மாமதிக் கடவுளும் பிறருமீ ரியல்பாங்
குன்ற மேயெனக் கீழ்த்திசை யதனொடுங் குடபால்
நின்ற கோபுரங் கடக்கலர் வாய்தலி னெறியே
சென்று சென்றுபோ யப்புறத் தேகினர் திரிவார். 24
171 தீபு ரத்திடை மடுத்தவ னாணையாற் சிறந்த
மாபு ரத்திடை வான்றொடுங் கடிமதில் வரைப்பில்
ஆபு ரத்தவாய்க் கிளர்ந்தவே யமைத்தவன் றென்னக்
கோபு ரத்திடைக் கொழுந்துபோ லோங்கிய கொடிகள். 25
172 மாட மாளிகை மண்டபங் கோபுர மறுகிற்
கோடி கோடியின் மேலுமுண் டன்னதார் குணிப்பார்
ஆடு கேதனத் தளவையு மன்னதே அகல்வா
னுடு போகலா தலமரும் பறவைக ளப்ப. 26
173 சிகர மால்வரை யன்னமா ளிகைதொறுஞ் சிவணும்
மகர தோரண மாடிகள் பலவுற வயங்கல்
இகலும் வெய்யகோ ளிரண்டுமா யொருவடி வெய்தி
அகல்வி சும்பிடைக் கதிர்களின் புறமறைத் தனைய. 27
174 செம்பொ னிற்புரி நிலையுடைத் திகிரியந் தேர்கள்
அம்ப ரத்திடை வசியுற வீற்றுவீற் றாகுந்
தம்ப முற்றல மருவன செய்யகோற் றலையிற்
பம்ப ரத்துருத் திரிப்புறக் கறங்கிய படிய. 28
175 பளிங்கி னாற்செய்த தெற்றியின் றலைமிசைப் பனிதோய்
வளங்கொ ணித்திலஞ் செம்மணி குயிற்றிய வைப்பில்
துளங்க நாற்றிய பொன்மணிப் பாலிகை தொகுவ
குளங்கொ டாமரை மலர்ப்பொகுட் டாயின குறிக்கின். 29
176 ஓவி யத்தியன் மரகதத தலத்தின தும்பர்த்
தாவி லாடகத் தலமிசை நித்திலத் தலமேற்
கோவை பட்டசெம் மணித்தலம் பொலிதலாற் கொண்மூ
மூவ கைக்கதிர் வியலிடந் தெரிப்பதம் மூதூர். 30
177 கன்னல் வேளெனும் மைந்தரும் மாதருங் கலந்து
மன்னு நித்தில மாளிகைப் பத்தியின் மாடே
பொன்ன வாஞ்சிறை மணிமயிற் குழாத்தொடும் போகும்
அன்னம் மாமதி முகிலிடை நுழைந்துபோ யனைய. 31
178 தண்ட மாகியே புவியுறு பணியெலாந் தழுவி
அண்ட மீமிசை யிரவியும் மதியமு மடைதல்
கண்டு மாளிகைச் சூளிகை மருங்குபோய்க் கவர்வான்
கொண்ட சீற்றத்தின் நாவெறிந் தன்னபூங் கொடிகள். 32
179 தேனை வென்றசொல் லாரொடு மைந்தருந் திளைக்கும்
மீன வாவிபோல் வியன்படி கத்தினால் விளங்குந்
தான மீமிசைத் தயங்கிய முழுமணித் தலந்தான்
வான நின்றிடு தெய்வத மானனே மானும். 33
180 தேவர் தானவர் முனிவரர் சித்தரோ டியக்கர்
வாவு கின்னர ருவணர்கந் தருவர்மற் றுள்ளோர்
ஏவ ருந்தம தகன்பதி யிகந்தவ ணெய்தா
மேவு சின்றன தனித்தனி யிரக்கைகண் மிகுமால். 34
181 தூங்கு குண்டிகை யருகுறக் காலெதிர் தூண்டி
ஓங்கு நாசிமேல் விதிமுறை நயனங்க ளுறுத்தி
ஆங்கொ ராசனத் திருந்தர னடியகத தடக்கிப்
பாங்கர் மாதவம் புரிகுநர் சாலைகள் பலவால். 35
182 பாடு நான்மறை யந்தணர் வேள்விகள் பயில
மூடு தண்புகை யண்டமுங் கடந்தன முன்னந்
தேடு கின்றதோர் பரஞ்சுடர் மீட்டுமத் திறத்தால்
நீடு கின்றதோ வென்றுநான் முகத்தனும் நினைய. 36
183 நான்ம றைக்குலத் தந்தணர் நவையறு காட்சி
ஊன்ம றைத்திடு முயிரென வோம்பிய வொழுக்கார்
மேன்மு றைக்கணோ ரைம்புலப் படிற்றினை வென்றோர்
வான்ம றைத்திடு மாளிகை வீதியும் மலிந்த. 37
184 ஏவு பல்படை வலியினர் வெஞ்சம மிகந்தோர்
நாவி னான்மறை பயில்பவர் நணுகுறு நலத்தாற்
கோவு நீணகர் மறுகெலாங் குருமணிச் சிகரத்
தேவு நீணகர் நிலைமையே போல்வது தெரியின். 38
185 அணியி னோங்கலும் பன்மணிக் குவால்களு மார்வந்
தணிவி லாடகக் குவைகளும் பிறவுமுன் றழைப்பக்
கணிக ணாணுறு கற்பக மனையன காட்சி
வணிக ராவணத் தெற்றிகள் வயின்றொறும் வயங்கும். 39
186 கங்கை மாமகள் தொல்பெருங் குலத்தர்கா சினியின்
மங்கை யாளருள் புரிதரு மகாரெனும் வழக்கோர்
செங்கண் மானிகர் வெறுக்கையர் அயன்பதஞ் செர்ந்தோர்
துங்க வீதியு மேனையர் மறுகொடுந் தொகுமே. 40
187 கண்டு கேட்டவை யுண்டுயிர்த் துற்றறி கருவி
கொண்ட வைம்புல னொருங்குற நடாத்திய கொள்கைத்
தொண்டர் கூட்டமும் விழிவழிப் புனலுகத் தொழுங்கை
அண்டர் கூட்டமும் ஆலயந் தொறுந்தொறு மறாவால். 41
188 ஆதி நான்முகன் எகினத்தி னடிகளு மமலன்
பாதி யாளன்றன் உவணத்தி னடிகளும் பனிக்கார்
நாத னூர்தரு தந்தியி னடிகளும் நாளும்
வீதி வீதிக டொறுந்தொறுங் காண்வர விளங்கும். 42
189 மாவி னோதையுங் களிற்றின தோதையும் மருங்கின்
மேவு தேர்களி னோதையுங் கவிகையாய் விரிந்த
காவு சூழ்தரு மன்னர்சீ ரோதையுங் கறங்குந்
தேவ துந்துபி யோதையு மிறுத்தில தெருவு. 43
190 நாட்டி யச்செயல் யாவையுஞ் சிவனது நடனம்
பாட்டி சைத்திறம் யாவையு மன்னதே பதியோர்
கேட்டி ருப்பன யாவையு மவனிசைக் கேள்வி
கூட்டம் யாவையு மன்னவன் றொண்டுசெய் கூட்டம். 44
191 பாலு றுந்ததி யிழுதுதே னிருக்கைகள் பலவுங்
கோல மாகுமந் நகரிடை யாவையுறை கூவல்
போலு மாயிடை மாதவத் தவளறம் புரியுஞ்
சாலை யாயின வரம்பிலா அடிசிலஞ் சாலை. 45
192 அளவில் பற்பகல் தம்மினும் நீங்கியோ ரடுத்த
கிளைஞர் வந்துழி யெதிர்தழீஇ நன்னயங் கிளத்த
உளம கிழ்ந்தவர்க் கூட்டுமின் னடிசில்போ லுறுவோர்
எளிதி னுங்கிட வழங்குமால் ஓதன விருக்கை. 46
வேறு
193 மாட மாளகை வாயி றொறுந்தொறும்
நீடு கண்ணுள ராமென நின்றுநின்
றாடு சித்திரப் பத்தி யமரரும்
நாடி நோக்கி நயந்திடப் பட்டதே. 47
194 எல்லை தீர்ந்த விரவிக டூண்டிய
சில்லி யாழித் திகிரிகண் மானுமால்
மல்லன் மாநகர் மைந்தர்க ளுர்தரும்
பல்வ யகைச்சுடர்ப் பண்ணுறு தேர்களே. 48
195 வௌ¢ளை யாதி வியன்கவி யாவையும்
தௌ¢ளி தின்மொழி தென்கலை யேமுதல்
உள்ள பல்கலை யோதுகின் றார்களும்
வள்ளி யோர்களும் மன்றுதொ றீண்டுவார். 49
196 இகலும் வேழத் தெயிற்றினை யேய்ந்திடும்
நகிலி னார்க ணறுங்குழன் மேலிடும்
அகலி னாவியு மாய்மணி மாடமேல்
முகிலும் வேற்றுமை யின்றி முயங்குமே. 50
197 பண்ணி னோசையும் பானலை வென்றிடுங்
கண்ணி னார்கள் களிநட வோசையுந்
தண்ண ரம்பிய றந்திரி யோசையும்
விண்ணு ளோர்க்கும் விருந்தென லாயவே. 51
198 அணிகு லாவு மரம்பையர் காளையர்
நணிய தோளை நயப்புற நாகருங்
கணிகை மாதரைக் காமுற மேவலான்
மணிகொள் காஞ்சி மதனர சாயதே. 52
199 கூற்றிற் செல்லுங் கொலைக்கரித் தானமும்
ஏற்றிற் செல்லு மிடையர்தஞ் சேரியின்
ஊற்றிற் செல்லு மொண்பாலு முடனுறா
ஆற்றிற் செலலுமவ் வாவணந் தோறுமே. 53
200 வேறு பண்ணுளர் நரம்பியல் பாணிக் கேற்றிட
எண்ணுள கணிகைய ரினத்தொ டாடலுங்
கண்ணுள ராடலுங் காம னாடலும்
விண்ணுள ராடலும் வெறுப்ப மேவுமே. 54
201 அரிவையர் மைந்தர்க ளணிந்து நீத்ததே
திருமகள் காமுறுஞ் செல்வ மாகுமேற்
கருதரு நான்முகக் கடவுட் காயினும்
பொருவரு நகர்வளம் புகலற் பாலதோ. 55
202 வேறு மாறாய்ச் சிறார்க ளெறிந்தாடிய மான்ம தத்தாற்
சேறாய்ப் பொற்சுண்ணத் துலர்வாய்ப்பனி நீர்கள் சிந்த
ஆறாய்ப் பளிதத் தினில்வாலுகத் தாறு மாகி
வேறாய்ப் புவியோ ருணர்வாமென மேய வீதி. 56
203 தண்டாமரை யேந்திய வானவன் றன்னை யொத்தான்
எண்டாவிய மாமத னேந்திழை யாரி லஞ்சி
வண்டாமரை பூத்தன வொத்தனர் வந்து செந்தேன்
உண்டாடிய தேன்களை யொத்தனர் ஓங்கல் மைந்தர். 57
204 ஏமங் குலவ முரசங்க ளிரட்ட வாசத்
தாமங் கமழ்பந் தரினூடு தமககி யன்ற
ஓமங் களின்மா மணஞ்செய் தனரூர் குலாவும்
மாமங் கலமே யுலப்பின்றி மலிந்த தன்றே. 58
205 மாகந் திகழு மகிலாவிகொள் மாட மீதிற்
பாகின் மொழியா ரிளமைந்தர்தம் பாலி னோச்சப்
போகுஞ் சிவிறிப் பனிநீர்புறஞ் சிந்த வென்று
மேகஞ் சிதறும் பெயலென்ன விளங்கும் வீதி. 59
206 வன்மா முலையேந் தியமங்கையர் மைந்த ரானோர்
தொன்மாட மீதி லெறிந்தாடுபொற் சுண்ண மொடு
நன்மா மலர்த்தாது விசும்புற நண்ண மேகம்
பொன்மா முகிலாய்ப் பனிநீரிற் பொழியு மன்றே. 60
207 தாராற் பொலிபொற் புயவீரர் தவாது செல்லுந்
தேரார்ப்பு நால்வாய்க் கரியார்ப்பும்வெஞ் சேனை யார்ப்பும்
ஏரார்ப்பு மிக்க பதிமானவ ரீண்டு மார்ப்புங்
காரார்ப்பும் வேலைக் கடலார்ப்புங் கடுத்த வன்றே. 61
208 வானோக்கி நிற்கு முலகென்னவு மன்ன வன்செங்
கோனோக்கி நிற்குங் குடியென்னவுங் கோதி லும்பர்
ஆனோர்க்கு நாக ருலகோர்க்கு மவனி யோர்க்கும்
ஏனோர்க்கும் நாடும் நகராகி யிருந்த தவ்வூர். 62
209 கோடு நெறியு மிகலும்மனக் கோட்ட மாய
கேடும் பிணியு முதலாகிய கேதம் யாவும்
நீடும் பரிவோ டுறைவா ரிடைநீங்க லாலே
வீடந் நகரே யெனிலேன்னின் விளம்ப வற்றோ. 63
210 வேறு ஏமமே தருவாச் சினைகளு மனைத்தா விலைதளிர் செய்யபூந் துகிராக்,
காமர்பூ மணியா வுதித்தொரு காஞ்சி கண்ணரோ ரைவர்மு கண்டு,
தாமினி தருளும் பொய்கையின் மருங்கே தன்னிழல் பிரிகிலா துறலாற்,
பூமியெண் காஞ்சி மாபுர மெனும்பேர் புனைந்ததப் பொருவிலா நகரம். 64
211 சுருதியானுறங்கு மிராத்தொறு முடிவிற் றுஞ்சிய வூழிக டோறும்,
விரையவந் துலக மழித்திடுங் கடலவ் வியன்பதி யெல்லையுட் சிறிதும்,
வருவதை யஞ்சிப் புறந்தனிற் சூழ வந்தொரு சத்திகாத் திடலாற்,
பிரளய சித்தென் றொருதிரு நாமம் பெற்றதக் காஞ்சியம் பேரூர். 65
212 கயிலையி லரனை யம்மைபூங் காவிற் கண்களை மூடலு முலகிற்,
பயிலுறு கொடிய வினையிரு ளகலும் பான்மையால் வந்துமா நிழற்கீழ்,
இயலொடும் பரமன் பூசனை யியற்றி யிரைத்தெழு கம்பைகண் டஞ்சிச்,
செயன்முறை தழுவக் குழைந்தருள் செய்யச் சிவபுர மானதச் சீரூர். 66
213 விண்ணுறை மகவான் கரிபுரி தவத்தால் வெற்பதாய்த் தன்னை முன்றாங்கு,
புண்ணிய கோடி யிபகிரி மிசையே பொருவிலா வேதியுத் தரத்தில்,
அண்ணலங் கமலத் திசைமுகன் வேள்வி யாற்றலு மவற் கருள் செய்வான்,
கண்ணன்வந் திடலால் விண்டுமா புரமாங் கட்டுரை பெற்றதக் காஞ்சி. 67
214 கார்த்திரு மேனித் தண்டுழாய் மௌலிக் கண்ணனுங் கமலமே லயனும்,
ஆர்த்திடுந் தரங்கப் பகீரதி மிலைந்த வவிர்சடை யமலனு மாகும்,
மூர்த்திக டத்த முலகமே போல முன்னியப் பதியமர் செயலாற்,
சீர்த்திரி மூர்த்தி வாசமா கியபேர் சிறந்ததக் கச்சிமா நகரம். 68
215 தரணிகண் முழுதும் புரிதரும் விரிஞ்சன் றன்மனம் புனிதமாம் பொருட்டால்,
திருமகள் கணவன் கமடமாய்ப் பூசை செய்திடு கச்சபா லயத்தில்,
அரனடி பரவி யருச்சனை யியற்றி யங்கண்வீற் றிருந்திடு நெறியால்,
வரமிகு பிரம புரமென வொருபேர் மன்னிய தன்னதோர் நகரம். 69
216 வீடுறு முத்தி போகமென் றவற்றில் வெ·கிய வெ·கியாங் கென்றுங்,
கூடுறு தவத்தால் வழிபடு வோர்க்குக் கொடுத்திடுந் தன்மையாற் காம,
பீடமென் றொருபேர் பெற்றது மலர்மேற் பிரமமே முதலினோர் தவத்தை,
நாடினர் செயலால் தபோமய மெனும்பேர் நணியது கச்சிமா நகரம். 70
217 சகங்களோர் மூன்றி லறம்பெரி துளதித் தரணியித் தரணிமா நகர்க்குள்,
மிகுந்தரு மத்தின் பலத்தினைத் தரலால் வியன்சகற் சாரமென் றொருபேர்,
புகும்பரி சுடைய தட்டசித் திகளும் பொருவின்மா தவர்க்கரு டிறத்தாற்,
பகர்ந்திடுஞ் சகல சித்தியென் றொருபேர் படைத்தது கச்சியம் பதியே. 71
218 உன்னருங் கயிலை நாயக னுமையை யொருபக னீலியென் றுரைப்ப,
அன்னவ டனது காளிமங் கழிப்ப வங்கதி லையைவந் தெழலும்,
முன்னவ னவளை யிந்நக ரிருந்து முறைபுரிந் தருளென விடுப்பக்,
கன்னிகாத் திடலாற் கன்னிகாப் பென்னுங் கவின்பெய ருடையது கச்சி. 72
219 அரியதோர் கயிலைக் கணங்களி லொருவ னானதுண் டீரன்மா லதிபால்,
பெருமயல் கொள்ளச் சிவனிவ ளடுநீ பிறந்திருந் தின்பமுற் றெம்பால்,
வருகென நிலமேன் மன்னர்பாற் றோன்றி மற்றவ ளோடுசேர்ந் தரசு,
புரிதரு செயலாற் காஞ்சிதுண் டீர புரமெனப் புகலநின் றதுவே. 73
220 தன்னையே யருச்சித் திடமலர்க் கேகித் தடந்தனிற் கராவின்வாய்ப் பட்டுத்,
தன்னையே நினைந்து தன்னையே யழைத்த தந்தியைக் காத்தவொண் புயமால்,
தன்னையே வேண்டித் தழன்மகஞ் செய்யத் தண்டகற் கெண்டிசை யரசு,
தன்னையீக் திடலால் தண்டக புரமாந் தனிப்பெயர் பெற்றதத் தனியூர். 74
221 அழகிய வயோத்தி மதுரையே மாயை யவந்திகை காசிநற் காஞ்சி,
விழுமிய துவரை யெனப்புவி தன்னின் மேலவாய் வீடருள் கின்ற,
எழுநக ரத்துட் சிறந்தது காஞ்சி யென்றுமுன் னெம்பிரா னுமைக்கு,
மொழிதரு நகரந் நகரெனி லதற்கு மூவுல கத்துநே ருளதோ. 75
222 பங்கமில் வசிட்டன் பசுப்பொழி பாலி படர்ந்திடு முத்தரஞ் செயைச்,
செங்கம லத்தோன் முதலினோ ராட்டுந் திருநதி தென்றிசைச் செல்லும்,
அங்கவற் றிடையே கம்பமே முதலா மாலயத் தந்தரு வேதி,
கங்கைகா ளிந்தி யிடைப்படுந் தலத்தின் முற்படுங் காஞ்சிமா நகரம். 76
223 தொல்லையோர் பிரமன் றுஞ்சிய காலைத் தோன்றிய நீத்தமே லரிபோல்,
செல்லுமார்க் கண்டன் கரத்தினிற் கம்பை சேர்ந்ததோர் தனிப்பெருஞ் சூதம்,
எல்லைநீ ரிகந்து வளர்தலு மருப்பொன் றெய்தவக் கொம்பர்தொட் டிழிந்து,
நல்லுமை குறிக்கொண் முதல்வனை வங்கி நயந்தவ னிருந்ததந் நகரம். 77
224 சமையமா றினையுந் தாயென வளர்த்துச் சராசர வணுக்களுய்ந் திடுவான்,
அமைதரு மெண்ணான் கறத்தினைப் போற்றி யாதிபீ டத்தில்வீற் றிருக்கும்,
உமையமர் காமக் கோட்டியைக் கதிரோ னுடுபதி கணங்கள்சூழ் தரலால்,
இமையவர் தமக்குந் திசைமயக் கறாத வியல்புடைத் தந்நக ரென்றும். 78
225 பாவமோர் கோடி புரியினு மொன்றாம் பரிவினிற் றருமமொன் றியற்றின்,
ஏவரும் வியப்பக் கோடியாய் மல்கு மின்னதோர் பெற்றியை நாடித்,
தேவர்கண் முனிவர் தம்பதம் வெறுத்துச் சிவனருச் சனைபுரிந் தங்கண்,
மேவினர் தவஞ்செய் திருத்தலாற் காஞ்சி வியனகர்ப் பெருமையார் விரிப்பார். 79
226 கங்கைதன் சிறுவ னருள்பெறு வேதாக் கண்படை கொண்டகா லையினும்,
அங்கவன் றுஞ்சும் பொழுதினுங் காஞ்சி யழிவுறா திருந்தபான் மையினால்,
துங்கவெண் பிறையு மிதழியு மரவுஞ் சுராதிபர் முடிகளு மணிந்த,
மங்கையோர் பங்கன் படைத்ததே யன்றி மலரயன் படைத்ததன் றதுவே. 80
227 அரியபல் லிசையும் மறைபுனல் கங்கை யருஞ்சிலை யிலிங்கமங் குறைவோர்,
சுரர்தரு வனைத்துங் கற்பக மின்பந் துய்ப்பது வேள்வியூன் பூசை,
உரைசெப நடத்தல் வலம்வருந் தன்மை யுன்னலே தியானம்வீழ்ந் திடுதல்,
பரனடி வணக்க மாவது காஞ்சிப் பதிக்கலால் எந்நகர்க் குளதே. 81
228 கணமுகில் செக்கர் போர்த்தெனுங் கரிய கஞ்சுகச் செந்நிறக் கடவுள்,
மணிசுடர் வயிரக் கிம்புரி மருப்பு மால்கரி முகத்தவன் வருசூர்
துணிபட வெறிந்த வேலவ னயன்போற் றோன்றிய சாத்தன்மால் விசயை,
இணையில்சீர்க் காளி முதலினோ ரென்று மினிதுகாத் திடுவதந் நகரம். 82
229 அறுசம யத்திற் கடந்தசை வத்தின் அன்றிவீ டிலதெனத் தெளிந்து
பிறரறி யாது தொன்மைபோ லிருந்து பிஞ்சகன் மீதுகன் மலரால்,
எறிதரு தேரர் அன்பர்தங் கலிங்க மெழிலிகள் நனைத்தலுஞ் சிரத்தை,
முறைபுரி சிலைமேல் மோதினோர் முதலோர் முத்திபெற் றுடையதம் மூதூர். 83
230 ஈசன தருளாற் கயிலையை நீங்கி யிமையமா மயிலறம் புரிவான்,
காசியி லிருந்து முடிவுறா தேகிக் கனகமா நீழலிற் பரனைப்,
பூசனை புரிந்து கம்பைகண் டஞ்சிப் பூண்முலை வளைக்குறிப் படுத்தி,
ஆசிலா வருள்பெற் றின்னுநோற் றிடலா லனையகாஞ் சிக்குநே ரதுவே. 84
231 ஆருயிர் முழுதும் வீடுபெற் றுய்வான் அறம்புரி சாலைய தணித்தாப்,
பேரர விறைவன் றவத்தின்மு னிருந்த பிலத்திடைக் கோயில் கொண் டென்றும்,
பூரனி நோற்றுவழிபட வனையாள் பூசனை கொண்டியா வர்க்குங்,
காரண மான பரசிவ னனந்த கலையொடு நிலையதக் காஞ்சி. 85
232 இன்னமு முமையாள் நோற்றிடு மாங்கே யிறப்பினும் பிறப்பினும் நிலையாய்,
மன்னியே யுறினு மொருகண மேனும் வைகினும் மறைகளாந் தனிமா,
நன்னிழ லிருந்த பரஞ்சுடர் புரியும் நடந்தரி சிக்கினு மதனை,
உன்னினும் முத்தி வழங்குகாஞ் சியைப்போ லுலகில்வே றொருநக ருளதோ. 86
233 கண்ணுதற் பரனுந் தண்டுழாய் மவுலிக் கடவுளுங் கமலமே லயனும்,
விண்ணவர்க் கிறையுங் கொற்றமா லினியும் மேலைநாட் பிறந்ததொன் மனுவுந்,
தண்ணளி புரிதுண் டீரனும் நள்ளார் சமர்த் தொழில் கடந்ததண் டகனும்,
அண்ணலங் கரிகால் வளவனும் பிறரு மரசுசெய் தளித்ததந் நகரம். 87
234 வேலைசூ ழுலகி னெங்கணு மிருபால் வீட்டினை வெ·கினோர்க் குதவும்,
ஆலய நூற்றெட் டுள்ளமற் றவற்றுள் ஐம்முகப் பரஞ்சுட ரமருங்,
கோலமார் நிலய மிருபது மாயோன் கோநக ரெட்டுமாக் குழுமி,
நாலெழு தான முள்ளவந் நகர்போல் நாம்புகழ் நகரமற் றெவனோ. 88
235 கச்சபா லயமே கம்பமே மயானங் கவின்கொள்கா ரோணமா காளம்,
பச்சிமா லயநல் லநேகபங் கடம்பை பணாதர மச்சரம் வராகம்,
மெய்ச்சுர கரமுன் னிராமம்வீ ரட்டம் வேதநூ புரமுருத் திரர்கா,
வச்சிர னகரம் பிரமமாற் பேறு மறைசையாஞ் சிவாலய மிருபான். 89
236 கரிகிரி யட்ட புயந்திரு வெ·காக் கருதுமூ ரகஞ்சகா ளாங்கஞ்,
சுரர்புகழ் நிராகா ரந்நிலாத் திங்கட் டுண்டநற் பாடக மினைய,
அரிதிரு முற்ற மெட்டவை யன்றி அறுபதி னாயிர நிலயம்
பரசிவன் சத்தி குமரர்மால் புறத்தோர் பலரும்வீற் றிருப்பதப் பதியோ. 90
237 ஒன்றுதீ விளக்க மீரிட மொருமூன் றுற்றிடு தெற்றிநான் கரணம்,
நின்றிடு தருவைந் தாறுபுள் ளேழு நெடுநதி யெண்பொது வொன்பான்,
மன்றலம் பொய்கை வியன்சிலை யொருபான் மன்றவை பத்தின்மே லோன்று,
நின்றமர்ந் தொழுகு நெறியில்அற் புதமாய் நிகரிலா துறையுமந் நகரம். 91
238 சிறந்திடு மதியு மிரவியு மாழ்கச் செகமேலாந் தனதொளி பரப்பி,
அறம்புரி காமக் கோட்டிமந் திரத்து ளம்மைவாழ் பிலத்தினு ளழியா
துறைந்திடு தூண்டா விளக்கமொன் றுதித்த வுயிர்த்தொகை யிறந்திடா விடமொன்,
றிறந்திடு முயிர்கள் பிறந்திடா விடமொன் றெம்பிரா னிருந்தவீ ரிடமே. 92
239 தோற்றுயிர்க் குணவு நல்குமோர் தெற்றி சொற்றவை யுதவுமோர் தெற்றி,
தேற்றுசொன் மூகர்க் களிக்குமோர் தெற்றி தெற்றிமூன் றிவைநக ரெல்லை,
ஈற்றினிற் கீழபா லளக்கருந் தென்பா லியற்பெரும் பெண்ணைநன் னதியும்,
மேற்றிசைப் பவள சயிலமும் வடபால் வேங்கட வெற்புநான் கரணே. 93
240 மறைகளி னுருவாய்ப் பொன்மலர் தனிமா மலரொடு காயிலா தென்றுஞ்,
செறிதரு பலங்க ளுதவிநுங் கினர்க்குச் சித்திகள் வழங்குறு மெகினம்,
வெறிமலர் பலவும் மலர்ந்திடு மதூகம் விண்ணினை நோக்குமோ ரத்தி,
நறுநிழல் பிரிய திருந்ததோர் காஞ்சி நன்னகர் தன்னில்ஐந் தருவே. 94
241 உம்பரூண் பகிருஞ் சாதக மணிக ளுதவிடு மன்ன நூலுரைத்துக்,
மொம்புறு கிளைளை யலகுசொல் லாந்தை குறைபெறிற் கூவுறாக் கோழி,
இம்பரிற் பாவந் துடைத்திடு நேமி இவையறு புள்ளெழு நதிதான்,
கம்பைநற் பம்பை மஞ்சனீர் பிச்சி கலிச்சிபொன் மண்ணிவெ·காவே. 95
242 குரைபுனல் வேட்டோர்க் குதவியே திரியுங் கூவலம் பொதுக்குறு முயல்போய்க்,
கரிதொடர் பொதுவே ழிசையுறு பொதுமால் கண்டுயின் றிடுபொது வேறோர்,
உருவுசெய் பொதுவோர் புற்றின்மா முழவ மொலித்திடும் பொதுத்திசை மயக்கம்,
புரிதரு பொதுவென் னம்மைநோற் றருளும் பொற்பொது விவைகள் எண்பொதுவே. 96
243 முன்னுறு பிணிகள் மாற்றிடும் பொய்கை முதல்வர்கள் முடிவுறுங் காலைச்,
செந்நிற மாகும் பொய்கைமுக் காலந் தெரித்திடும் பொய்கைகண் ணுதலோன்,
தன்னடி காட்டும் பொய்கைவேண்டியது தந்திடும் பொய்கைமெய்ஞ் ஞானம்,
பொன்னிறஞ் செல்வம் வசீகரந் தருநாற் பொய்கையோ டொன்பதாம் பொய்கை. 97
244 விடந்தனை யகற்று மொருகலா ருயிர்கள் மெய்ப்பிணி மாற்றிடு பொருகல்,
அடைந்தவ ரெல்லா மிமையவ ராக வளித்திடு மொருகல்வெம் படையால்,
தடிந்திட வேறாய்த் துணிபடு முடலஞ் சந்துசெய் வித்திடு மொருகல்,
நெடும்படை வரினு மவையிரிந் தோட நிலைபெறீஇ நிற்குமாங் கொருகல். 98
245 துஞ்சினர் தம்மை யெழுப்புமாங் கொருகல் தொல்வழக் கறுத்திடு மொருகல்,
எஞ்சலி னிதியங் கெடுத்துளோர் வினவி லீனெக் காட்டிடு மொருகல்,
விஞ்சிய வினைக டீர்த்திடு மொருகல் வேந்தருக் கரசிய லுதவித்,
தஞ்சம தாக நின்றிடு மொருகல் தக்ககல் லையிரண் டவையே. 99
246 அயன்மனைச் சென்றோர் கணவரைப் பிழைத்தோர் அடிகளை யிகழ்ந்துளோர் அணுகில்,
துயருறு மூகை யாக்குமோர் மன்றஞ் சோரர்முன் சுழலுமோர் மன்றம்,
வியனிறம் பலவாத் தோன்றுமோர் மன்றம் விஞ்சைகள் வழங்குமோர் மன்றம்,
மயல்பரி கின்ற பொழுதொடு திசையின் மயக்கறத் தெளிக்குமோர் மன்றம். 100
247 நாகரூ ருய்க்கும் பிலத்ததோர் மன்றம் நவமணி யுதவுமோர் மன்றம்,
மாகர்பே ரமிர்த மிருக்குமோர் மன்றம் வடிவினை மறைப்பதோர் மன்றம்,
மேகநின் றறாது பொழியுமோர் மன்றம் வியன்பகல் கங்குலாக் கங்குல்,
ஆகிய பகலா விருப்பதோர் மன்றம் ஐயிரண் டொன்றுமன் றவையே. 101
248 ஈங்கிவை யன்றிச் சிலைகளுந் தருவு மிடங்களுங் கூவலும் நதியும்,
பாங்குறு குளனுந் தீர்த்தமும் பிலமும் பழனமுஞ் சோலையும் பிறவும்,
ஆங்கவை யனந்த கோடியுண் டோரொன் றளவில்அற் புதத்தன அவற்றைப்,
பூங்கம லத்தோன் சுருக்கற விரித்துப் புகலினு முலப்புற வற்றோ. 102
249 தோட்டலர் வனசத் திசைமுகன் முன்னஞ் சொற்றன னவனடி வங்கிக்,
கேட்டருள் சனகன் வியாதனுக் குரைப்பக் கேடில்சீர் வியாதனங் குணர்ந்து,
மாட்டுறு சூதன் றனக்கியம் புதலும் மற்றவன் முனிவரர்க் கிசைத்த,
பாட்டினில் அங்காக் காஞ்சியின் பெருமை பகர்ந்திடத் தமயனுக் கெளிதோ. 103
250 வேறு சொற்படு மினைய காஞ்சித் தொன்னக ரதற்கு நாப்பண்
கற்புறு மிமைய வல்லி கருணையால் வைகி நோற்கும்
பொற்புறு காமக் கோட்டம் போலவே அதற்கோர் சாரில்
எற்படு குமரகோட்டம் என்றொரா லயமுண் டன்றே. 104
251 ஆவதோர் குமர கோட்ட மதனிடை யரன்கண் வந்து
தூவுடை யெ·க மொன்றாற் சூர்முத றொலையச் செற்றுத்
தேவர்வெஞ் சிறையை மாற்றிச் சேண்மக பதிக்கு நல்கி
மேவிய குமர மூர்த்தி வியத்தக வுறையும் மாதோ. 105
252 மேவருங் கூடல் மேலை வெற்பினில் அலைவாய் தன்னில்
ஆவினன் குடியி னல்லே ரகந்தனிற் றணிகை யாதிப்
பூவுல குள்ள வெற்பிற் பொற்புறும் ஏனை வைப்பிற்
கோவில்கொண் டருளி வைகுங் குமரகோட் டத்து மேயோன். 106
253 வச்சிர மெடுத்த செம்மல் வைகிய துரக்கந் தன்னில்
அச்சுதன் பதத்துக் கப்பா லானதன் பதத்தில் விண்ணோர்
மெச்சுறு கந்த வெற்பில் வீற்றிருந் தருளு மாபோல்
கச்சியிற் குமர கோட்டங் காதலித் தமருங் கந்தன். 107
254 ஈண்டுள தரணி முற்று மெல்லைதீர் வான வைப்பும்
ஆண்டகை மகவான் சீரு மம்புயன் முதலோர் வாழ்வும்
மாண்டிடல் பிறந்த லின்றி மன்னிய வீடும் போற்றி
வேண்டினர் வேண்டி யாங்கு வேலவன் புரிந்து மேவும். 108
255 கொண்டலை யளக்கு நொச்சிக் குமரகோட் டத்துச் செவ்வேள்
கண்டிகை வடமுந் தூநீர்க் கரகமுங் கரத்தி லேந்திப்
பண்டையி லயனை மாற்றிப் படைத்தருள் வேடந் தாங்கி
அண்டர்க ளெவரும் போற்ற வருள்புரிந் தமர்ந்தா னன்றே. 109
256 ஆயதோர் காஞ்சி மூதூ ரதனிடை யம்பு யத்தின்
மேயவன் றனது புந்தி விமலமாம் பொருட்டான் மேனாள்
மாயவன் கமட மாகி வழிபடு தலத்தின்* முக்கண்
நாயகன் றனையர்ச் சித்து நாமக ளுடனாங் குற்றான்.
( * மாயவன் கமடமாகி வழிபடுதலம் - கச்சபாலயம். ) 110
257 உற்றிடு கின்ற நாளி லுலகிலில் லறத்தை யாற்றி
நற்றவம் பலவும் போற்றி நண்ணிய முனிவ ரேல்லாம்
மற்றவ ணேகிக் கஞ்ச மலர்மிசை யிருந்த வையன்
பொற்றிரு வடியைத் தாழ்ந்து போற்றினர் புல லுற்றார். 111
258 அத்தகே ளிந்நாள் காறும் அடியமில் லறத்தை யாற்றி**
அத்தல நகர மெங்கு மிருந்தன மினிமேல் நாங்கள்
சித்தம தொருங்க நோற்றுச் செய்கட னியற்றி வைக
மெய்த்தவ வனம தொன்றை விளம்பியே விடுத்தி யென்றார்.
( ** இல்லறத்தை ஆற்றல் - தென்புலத்தார் தெய்வம், விருந்து, சுற்றம்
முதலியோரை உபசரித்தல். ) 112
259 என்றலுந் தருப்பை யொன்றை யேழுல களித்தோன் வாங்கி
ஒன்றொரு திகிரி யாக்கி யொய்யென வுருட்டிப் பாரில்
இன்றிதன் பின்ன ராகி யெல்லிரு மேகி யீது
நின்றிடும் வனத்தி னூடே நிலைப்பட விருத்தி ரென்றான். 113
260 திருப்பது மத்து வள்ளல் சேவடிக் கமலந் தாழா
விருப்பொடு விடைகொண் டேக விரைவினி லன்னான் விட்ட
தருப்பையின் நேமி சென்றோர் தனிவனத் திறுத்த லோடும்
இருப்பிட மெமக்கீ தென்னா இருந்தவ ரிருந்தா ரங்ஙன். 114
261 தாமரை யண்ண லுய்த்த தருப்பையின் நேமி தன்னால்
நாமம தொன்று பெற்ற நைமிசா ரணியம் வைகுந்
தூமுனி வரர்க ளெல்லாஞ் சொல்லருந் தவத்தை யாற்றி
மாமறை நெறியி னின்று மகமொன்று புரித லுற்றார். 115
262 அகனமர் புலனோர் நான்கு மான்றமை பொருட்டா லாங்கோர்
மகவினை செய்து முற்றி வாலிதா முணர்ச்சி யெய்தி
இகலறு முளத்த ராகி யிருந்தன ரிதனை நாடிச்
சுகனென வுணர்வு சான்ற சூதமா முனிவன் போந்தான். 116
263 முழுதுணர் சூதன் றன்னை முனிவரர் கண்டு நேர்போய்த்
தொழுதனர் பெரியோய் எம்பாற் றுன்னலா லின்ன வைகல்
விழுமிது சிறந்த தென்னா வியத்தகு முகமன் கூறித்
தழையொடு தருப்பை வேய்ந்த தம்பெருஞ் சாலை யுய்த்தார். 117
264 திருக்கிளர் பீட மொன்று திகழ்தர நடுவ ணிட்டுச்
சுருக்கமில் கேள்வி சான்ற சூதனை யிருத்தி யாங்கே
அருக்கிய முதல நல்கி யவனது பாங்க ராகப்
பொருக்கென யாரும் வைகி யி·தொன்று புகல லுற்றார். 118
265 முந்தொரு ஞான்று தன்னில் முளரியந் தேவன் சொல்லால்
வந்திவ ணிருந்தே மாக மற்றியாம் புரிந்த நோன்பு
தந்தது நின்னை யற்றாற் றவப்பயன் யாங்கள் பெற்றேஞ்
சிந்தையி னுவகை பூத்தேஞ் சிறந்ததிப் பிறவி யென்றார். 119
266 அன்னது சூதன் கேளா ஆதியம் பரனை யேத்தி
மன்னிய வேள்வி யாற்றி வாலறி வதனை யெய்தித்
துன்னிய முனிவிர் காணுந் தொல்குழு வடைத லன்றோ
என்னிக ராயி னோருக் கிம்மையிற் பெறும்மே றென்றான். 120
267 அவ்வழி முனிவர் சொல்வார் அருமறை கண்ட வண்ணல்
செவ்விய மாணாக் கர்க்குட் சிறந்துளோய் திரற்சூ ராவி
வவ்விய நெடுவே லண்ணல் மாண்கதை தேர்வான் பன்னாள்
இவ்வொரு நசைகொண் டுள்ளே மியம்புதி யெமக்க தென்றார். 121
268 அம்மொழி சூதன் கேளா அழல்படு மெழுகே யென்னக்
கொம்மென வுருக வுள்ளங் குதூகலித் தவச மாகி
மெய்ம்மயிர் பொடிப்பத் தூநீர் விழித்துணை யரும்ப வாசான்
பொய்ம்மையில்படிவ முன்னித் தொழுதிவை புகலலுற்றான். 122
269 மன்னவன் மதலை யாசான் மாமகன் றனது மைந்தன்
பன்னுசொற் கொள்வோன் ஈவோன் வழிபடு பண்பின் மிக்கோன்
என்னுமிங் கிவருக் கீவ தேனைநூல் உங்கள் போலச்
செந்நெறி யொழுகு வார்க்கே செப்புவன் புராணம் முற்றும். 123
270 தனைநிகர் பிறரின் றாய சண்முகற் கன்பு சான்ற
முனிவிர்காள் உரைப்போர் கேட்போர் முத்திசேர் காந்தத் துண்மை
வினவினீ ரதனை யின்னே விளம்புவன் புலன்வே றின்றி
இனிதுகேண் மிக ளென்னா எடுத்திவை இயம்ப லுற்றான். 124
ஆகத் திருவிருத்தம் - 270
- - -
7. பாயிரப்படலம் (271 -352)

271 முந்தொரு காலத்தின் மூவுல கந்தன்னில்
வந்திடு முயிர்செய்த வல்வினை யதனாலே
அந்தமின் மறையெல்லா மடிதலை தடுமாறிச்
சிந்திட முனிவோருந் தேவரு மருளுற்றார். 1
272 நெற்றியில் விழிகொண்ட நமலன தருளாலே
அற்றமில் மறையெல்லா மாதியின் வரலாலே
மற்றத னியல்பெல்லாம் மயலற வேநாடித்
தெறறென வெவராலுஞ் செப்புவ தரிதாமால். 2
273 ஆனதொர் பொழுதின்க ணமரரும் முனிவோரும்
மாநில மிசைவைகும் மாக்களு மிறையுள்ள
ஞானம திலராகி நவின்மறை நெறிமாற்றித்
தீநெறி பலவாற்றிப் பனுவல்கள் சிலசெய்தார். 3
274 அவனியி லறமெல்லா மருவினை யெனநீக்பிப்
பவநெறி யறமென்றே பற்பல ருஞ்செய்யப்
புவனம துண்டோனும் போதனு மதுகாணாச்
சிவனரு ளாலன்றித் தீர்கில திதுவென்றார். 4
275 வேறு
இன்ன பான்மையை யெண்ணி யிருவரும்
பொன்னி னாடு புரந்திடும் மன்னனுந்
துன்னு தேவருஞ் சுற்றினர் வந்திடக்
கன்னி பாகன் லேகினார். 5
276 அந்தில் செம்பொ னணிமணிக் கொயிலின்
முந்து கோபுர முற்கடை யிற்புகா
நந்தி தேவரை நண்பொடு கண்டுநீர்
எந்தை யார்க்கெம் வரவிசைப் பீரென்றார். 6
277 தேவ தேவன் திருமுனன ரேகியே
காவல் நந்திக் கடவுள்பணிந் தெழீஇப்
பூவை வண்ணனும் போதனும் புங்கவர்
ஏவ ருஞ்செறிந் தெய்தின ரீண்டென்றான் 7
278 என்ற காலையின் யாரையு மிவ்விடைக்
கொன்றை சூடி கொணர்கெனச் செப்பலும்
நன்ற தேயென நந்தி வணங்கியே
சென்று மான்முதற் றேவரை யெய்தினான். 8
279 செம்மை போகிய சிந்தைய ரைக்கெழீஇ
எம்மை யாளுடை யானரு ளெய்தினான்
உம்மை யங்கு வரநுவன் றானினி
வம்மி னீரென வல்லையிற் கூவினான். 9
280 விளித்த காலை விழிவழி போதநீர்
துளிக்க நின்று தொழுது கவலொரீஇக்
களிக்கு நெஞ்சினர் கண்ணுத லெந்தைமுன்
அளித்தி யாலென் றவனுட னேகினார். 10
281 புடைக டந்திடு பூதர்கள் போற்றுமத்
தடைக டந்து தடுப்பரும் வேனிலான்
படைக டந்தவர் பாற்படு மெணணிலாக
கடைக டந்துபின் அண்ணலைக் கண்டனர். 11
282 முன்ன ரெய்தித் தொழுது முறைமுறை
சென்னி தாழ விறைஞ்சினர் சேணிடைத்
துன்னு மாதரந் தூண்டவந் தண்மினார்
உன்னு மன்பின் உததியி னாழந்துளார். 12
283 ஈர்க்கும் பாசத் திருவினை யின்றொடே
தீர்க்கின் றாமிவ ணென்னுஞ் செருக்கினால்
தூர்க்கின் றார்மலர் சோதிபொற் றாண்மிசை
போர்க்கின் றார்மெய்ப் பொடிப்பெனும் போர்வையே. 13
284 நேய முந்த நெடும்பகல் நீங்கிய
தாயெ திர்ந்திடு கன்றின் தகைமையாய்த்
தூய வந்தனையோடு தொழுமவர்
வாயின் வந்தன வந்தன போற்றினார். 14
285 அண்ண லீசன் வடிவை யகந்தனில்
எண்ணி னெல்லையி லின்பம் பயக்குமால்
கண்ணி னேர்வரு காட்சிய ராயிடின்
ஒண்ணு மோவவர் தஞ்செய லோதவே. 15
286 மேலை வானவர் வேந்தொடு மெம்பிரான்
சீல மேய திருமுன்பு மேவினார்
மாலு நான்முகத் தண்ணலும் வந்திரு
பாலு மாகிப் பரவின ரென்பவே. 16
287 வேறு
அம்புயா சனமுடை யண்ண லாழியான்
உம்பரோ டித்திற முற்றுப் போற்றுழிச்
செம்பொனேர் முடிமிசைத் திங்கள் சேர்த்திய
எம்பிரா னருள்புரிந் தினைய கூறுவான். 17
288 ஒன்றொரு குறைகளு முறாத பான்மையால்
நன்றுநும் மரசியல் நடந்த வோவெனாக்
குன்றவில்லுடையவோர் குழகன் செப்பலும்
நின்றமால் தொழுதிவை நெறியிற் கூறுவான். 18
289 ஆதியி லயன்படைப் பல்ல தென்னருண்
மேதியன் அடுதொழி லேனை விண்ணவர்
ஏதமில் செயன்முறை யாவுங் கண்ணுதல்
நாதநின் னருளினால்நடந்த நன்றரோ. 19
290 கருமணி மிடறுடைக் கடவு ளின்னுநீ
அருளுவ தொன்றுள ததனைக் கூறுவன்
இருநில மேலவர் யாரும் நின்றனைப்
பரமென வுணர்சிலர் மாயைப் பான்மையால். 20
291 நின்றன துரிமையை நிகழ்த்தி மேன்மையா
என்றனை யயன்றனை யெண்ணு வார்சிலர்
அன்றியும் நின்னுடன் அநேகர் தம்மையும்
ஒன்றென வேநினைந் துரைக்கின் றார்சிலர். 21
292 காலமுங் கருமமுங் கடந்த தோர்பொருள்
மூலமுண் டோவென மொழிகின் றார்சிலர்
மேலுமுண் டோசில விளம்ப விஞ்சையின்
பாலுறு முணர்ச்சியே பரமெண் பார்சிலர். 22
293 ஆற்றுறு புனல்படிந் தழுக்கு நீக்கலார்
சேற்றிடை வீழந்தென மறைகள் செப்பிய
நீற்றொடு கண்டிகை நீக்கி வன்மையால்
வீற்றொரு குறிகொடு மேவு வார்சிலர். 23
294 காமமோ டுவகையுங் களிப்பு நல்கலால்
வாமமே பொருளென மதிக்கின் றார்சிலர்
தோமிலா மூவகைத் தொழிலும் வேள்வியும்
ஏமமார் பொருளென இயம்பு வார்சிலர். 24
295 உரையிசை யாதியா மொலிகள் யாவையும்
பிரமம தெயெனப் பேசு வார்சிலர்
அரிதுசெய் நோன்பினா லடைந்த சித்திகள்
பொருள்பிறி திலையெனப் புகல்கின் றார்சிலர். 25
296 பெருமைகொள் குலந்தொறும் பிறந்து செய்திடும்
விரதமுஞ் சீலமும் வினைகண் மாற்றிட
வருகலும் பிறவுமா யங்கம் விட்டுயிர்
பரவுதல் வீடெனப் பகரு வார்சிலர். 26
297 அறிந்தறிந் துயிர்தொறு மதுவ தாகியே
பிறந்திறந் துணர்வெலாம் பெற்று நோன்பொடு
துறந்துகொன் றிட்டன துய்த்துக் கந்தமற்
றிறந்திடல் முத்தியா மென்கின் றார்சிலர். 27
298 நன்னல மாதரை நண்ணு மின்பமே
உன்னரு முத்தியென் றுட்கொள் வார்சிலர்
இன்னன துறைதொறு மெய்தி யாவருந்
துன்னரும் பிறவியுட் டுன்ப நீங்கலார். 28
299 இறந்தன வரம்புல கெவரும் வேதநூல்
பறந்தனர் பவநெறி மல்கி நாடொ றுஞ்
சிறந்தன வவையுயிர் செய்த தொல்வினை
அறிந்தரு ளையநீ யமைத்த வாயினும். 29
300 அங்கவர் போதமுற் றாசொ ரீஇமனச்
சங்கையு மகன்றுநின் சரண மேயுறப்
புங்கவ சிறிதருள் புரிய வேண்டுமால்
எங்கடம் பொருட்டென இறைவன் கூறுவான். 30
301 இனிதொரு திறமதற் கிசைத்து மாருயிர்
அனையவும் புரப்பவ னாத லாலவர்
வினையறு நெறிமையால் வேண்டு கிற்றிநின்
மனனுறு மெண்ணினை மறுத்தி மாசிலாய். 31
302 காதலி னருளுமுன் கலையின் பன்மையிற்
கோதறு மோர்கலை கொண்டு நேமிசூழ்
மேதினி யதனிடை வியாதன் என்றிடு
போதக முனியெனப் போந்து வைகுதி. 32
303 போந்தவ ணிருந்தபின் புகரி லாமறை
ஆய்ந்திடின் வந்திடு மவற்றை நால்வகை
வாய்ந்திட நல்கியே மரபி னோர்க்கெலாம்
ஈந்தனை யவரகத் திருளை நீத்தியால். 33
304 அன்னதோர் மறையினை யறிந்து மையமா
உன்னிய நிலையினர் உள்ளந் தேறவும்
மன்னவ ரல்லவர் மரபிற் றேரவும்
இன்னமோர் மறையுள திதுவுங் கேண்மதி. 34
305 ஏற்றம தாகிய மறைக்கும் யாமுனஞ்
சாற்றிய வாகமந் தனக்கு மாங்கது
வீற்றுற வருவது மன்று மேன்மையால்
ஆற்றவும் நமதிய லறையும் நீரதே. 35
306 என்பெய ரதற்கெனி லினிது தேர்ந்துளோர்
துன்பம தகற்றிடுந் தொல்பு ராணமாம்
ஒன்பதிற் றிருவகை உண்ட வற்றினை
அன்புடை நந்திமுன் னறியக் கூறினேம். 36
307 ஆதியில் நந்திபா லளித்த தொன்மைசேர்
காதைகள் யாவையுங் கருணை யாலவன்
கோதற வுணர்சனற் குமாரற் கீந்தனன்
நீதியொ டவனிடை நிலத்திற் கேட்டியால். 37
308 என்னலும் நன்றென இசைந்து தாழ்ந்தெழீஇ
முன்னவன் விடைகொடு முளரி யான்முதல்
துன்னிய வானவர் தொகையொ டெகியே
தன்னுல கத்தின்மால் சார்தல் மேயினான். 38
309 சார்தலு மயன்றனைச் சதம கத்தனை
ஆர்தரு மமரரை யருளி னவ்வவா
சேர்தரு புரந்தொறுஞ் செல்லற் கேவியே
கார்தரு மெய்யுடைக் கடவுள் வைகினான். 39
310 திருவொடு மருவியோன் செறிவுற் றெங்கணும்
பரவுறு மியல்பெறு பகவ னாதலால்
தரணயி லருளினாற் றனது சத்தியில்
ஒருகலை தன்னுட னுதிக்க வுன்னியே. 40
311 பங்கயத் தயன்வழிப் பராச ரப்பெயர்த்
துங்கநன் முனிபனித் தூவ லெல்லையிற்
கங்கையி லியோசன கந்தி யோடுற
அங்கவர் தம்மிட அவத ரித்தனன். 41
312 மற்றவன் வதரிகா வனத்தில் வைகியே
அற்றமில் வாதரா யணன்எ னும்பெயர்
பெற்றன னாகியெம் பிரான்ற னாணையாற்
கற்றிடா துணர்ந்தனன் கரையில் வேதமே. 42
313 மோனக முற்றிய முனிவர் மேலவன்
தானுணர் மறையெனுந் தரங்க வேலையில்
ஆனதோர் பொருளினை யறிஞர் பெற்றிடத்
தூநெறி கொண்டநாற் றுறைசெய் தானரோ. 43
314 கரையறு வேதமாங் கடலை நான்கவாய்ப்
பிரிநிலை யாக்கியே நிறுவு பெற்றியாற்
புரைதவிர் முனிவரன் புகழ்வி யாதன் என்
றொருபெயர் பெற்றனன் உலகம் போற்றவே. 44
315 விரவிய மறைதெரி வியாத னாமவன்
குரவனே யாஞ்சனற் குமாரன் றன்னிடை
இருவகை யொன்பதா யியல்பு ராணமும்
மரபொடு கேட்டவை மனத்துட் கொண்டவின். 45
316 ஏத்திடு சுருதிக ளிசைக்கு மாண்பொருள்
மாத்திரைப் படாவெனா மாசில் காட்சியர்
பார்த்துணர் பான்மையாற் பலவ கைப்படச்
சூத்திர மானவுஞ் சொற்று வைகினான். 46
317 மயலறு பயிலரே வைசம் பாயனர்
சயிமினி சுமந்துவாந் தவத்தர் நால்வர்க்கும்
வியலிருக் காதியாம் வேத நான்கையும்
உயர்வுறு தவத்தினான் முறையி னோதினான். 47
318 தோல்வரு மறைகளின் சூத்தி ரத்தையும்
மேல்வரு சயிமினி முதல மேதையர்
நால்வரு முணரிய நவின்று நல்கினான்
ஆல்வரு கடவுளை பனைய தன்மையான். 48
319 மெய்ம்முனி யனையரை விளித்து நீரினி
இம்மறை யியல்பினோ ரெவர்க்கு மீமென
அம்முறை நால்வரு மனைய வேதநூல்
செம்மையொ டளித்தனர் சிறந்து ளோர்க்கெலாம். 49
320 அன்னதோர் முனிவர னதற்குப் பின்னரே
பன்னருந் தொகையினாற் பதினெண் பான்மையாய்
முன்னுறு புராண நூல் முழுது முற்றிய
இன்னருள் நிலைமையா லெனக்கு நல்கினான். 50
321 வேதம துணர்தரு வியாத மாமுனி
காதல னாமெனைக் கருணை செய்திவை
ஓதுதி யாவரு முணர வென்றனன்
ஆதலி னுலகினி லவற்றைக் கூறினேன். 51
322 காமரு தண்டுழாய்க் கண்ண னாகிய
மாமுனி யருளினால் மறைகள் யாவையுந்
தோமறு புராண நூற் றொகுதி யாவையும்
நேமிகொ ளுலகெலா நிலவி யுற்றவே. 52
323 நம்பனார்க் கொருபது நார ணற்குநான்
கம்புயத் தவற்கிரண் டலரி யங்கியாம்
உம்பர்வான் சுடர்களுக் கோரொன் றென்பரால்
இம்பரி லிசைக்கும்அப் புராணத் தெல்லையே. 53
324 வேறு
எதிரில் சைவமே பவிடியம் மார்க்கண்ட மிலிங்கம்
மதிகொள் காந்தநல் வராகமே வாமனம் மற்சம்
புதிய கூர்மமே பிரமாண்டம் இவைசிவ புராணம்
பதும மேலவன் புராணமாம் பிரமமே பதுமம். 54
325 கருது காருடம் நாரதம் விண்டுபா கவதம்
அரிக தைப்பெயர் ஆக்கினே யம்மழற் கதையாம்
இரவி தன்கதை பிரமகை வர்த்தமாம் இவைதாம்
தெரியும் ஒன்பதிற் றிருவகைப் புராணமாந் திறனே. 55
326 இத்தி றத்தவாம் புராணங்கள் ஒன்பதிற் றிரண்டின்
அத்த னுக்குள புராணமீ ரைந்தினில் அடல்வேற்
கைத்த லத்தவன் காந்தத்துள் அன்னவன் கதையை
மெய்த்தொ கைப்பட வுரைப்பனென் றேமுனி விளம்பும். 56
327 வேறு
பூமிசை யிருந்த புத்தேள் புரிந்திடு புதல்வர் தம்முள்
கூமுறு தக்க னீன்ற இருந்தனிக் குமரி யான
தீமையை யகற்ற அம்மை சிந்தைசெய் திமைய மன்னன்
மாமக ளாகி நோற்று வைகினாள் வைகு நாளில். 57
328 அவுணர்க ளோடு சூர னவனிமேற் றோன்றி நோற்றுச்
சிவன்வர மளிக்கப் பெற்றுத் தேவர்யா வரையும் வென்று
புவிதனி லுவரி தன்னிற் புங்கவர் புனைவன் செய்த
தவலரு மகேந்தி ரத்தில் வைகினான் தானை சூழ. 58
329 அனையதோர் காலை வௌ¢ளை யடுக்கலிற் சனக னாதி
முனிவரர் தமக்குத் தொல்லை மூவகைப் பதமுங் கூறி
இனியதோர் ஞான போதம் இத்திற மென்று மோனத்
தனிநிலை யதனைக் காட்டித் தற்பர னிருந்தா னன்றே. 59
330 வீற்றிருந் தருளு மெல்லை வெய்யசூர் முதலா வுள்ளோர்
ஆற்றவுந் தீங்கு செய்தே யமரர்கள் சிலரைப் பற்றிப்
போற்றிடுஞ் சிறையி லுய்ப்பப் புரந்தரன் முதலா வுள்ளோர்
மாற்றருந் துயரின் மூழ்கி மறைந்தன ராகி வைகி. 60
331 சங்கரன் மோனத் தன்மை சதுர்முகற் குரைப்ப வன்னான்
வெங்கணை வேளை யுய்ப்ப விழித்தவன் புரநீ றாக்கிப்
பங்கயன் முதலா வுள்ளோர் பலரும்வந் திரங்கிப் போற்ற
அங்குறை மோனம் நீங்கி யவர்க்கருள் செய்தா னையன். 61
332 ஓரேழு முனிவர் தம்மை யோங்கலுக் கிறைவன் றன்பாற்
பேரருண் முறையாற் றூண்டிப் பெருமணம் பேசுவித்துப்
பாரறு நோன்பின் மிக்க பராபரை யன்பு தேர்ந்து
காரணி கண்டத் தெந்தை கணங்களோ டிமையம் புக்கான். 62
333 புடையக லிமையந் தன்னிற் புலனங்கள் முழுது மீண்ட
வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் மலயந் தன்னிற்
கடமுனி தன்னை யேவிக் கவுரியை மணந்து பின்னர்
அடன்மத வேளை நல்கி அநங்கனே யாகச் செய்தான். 63
334 மன்புனை கயிலை தன்னில மலைமக ளோடு மீண்டு
முன்பென வமர்ந்து நாதன் முழுதுல குயிர்கட் கெல்லாம்
இன்பமும் புணர்ப்பும் நல்கி யிமையவர் யாரும் வேண்டத்
தன்பெரு நுதற்கட் டீயாற் சரவன பவனைத் தந்தான். 64
335 அந்தமில் விளையாட் டுள்ள அறுமுகக் கடவு டன்னைத்
தந்திடு மெல்லை னனோன் தானையந் தலைவ ராக
முந்திய விறல்சேர் மொய்ம்பன் முதலிய விலக்கத் தொன்பான்
நந்திதன் கணத்தி னோரை நங்கைபா லுதிப்பச் செய்தான். 65
336 அண்ணலங் குமரப் புத்தேள் அலகிலா வாடல் செய்து
மண்ணுறு கடலும் வெற்பும் வானமுந் திரிபு செய்து
துண்ணெனக் குழவி யேபோற் றோன்றிட வதனை நோக்கி
வின்னவர் யாருஞ் சூழ்ந்து வெஞ்சமர் புரிந்து நின்றார். 66
337 ஆரமர் செய்து ளாரை யட்டுட னுயிரும் நல்கிப்
பேருரு நிலைமை காட்டிப் பெறலருங் காட்சி நல்கி
நாரதன் மகத்திற் றோன்றி நடந்ததோர் செச்சை தன்னை
ஊர்திய தாகக் கொண்டே ஊர்ந்தன னொப்பி லாதான். 67
338 மறைமுதற் குடிலை* தன்னின் மாண்பொருள் முறைக டாவி
வெறிகமழ் கமலப் புத்தேள் விடைகொடான் மயங்கக் கண்டு
சிறையிடை யவனை வைத்துச் செகமெலா மளித்துத் தாதை
குறையிரந் திடவே விட்டுக் குறுமுனிக் கதனை யீந்தான்.
( * மறைமுதற் குடிலை - வேதத்தின் முதற் பொருளாயுள்ள பிரணவம் ) 68
339 ஆவதோர் காலை யீச னறுமுகப் பரனை நோக்கி
ஏவரு முடிக்க வொண்ணா திருந்தசூர் முதலோர் தம்பால்
மேவினை பொருது வென்று விரிஞ்சனே முதலா வுள்ள
தேவர்த மின்னல் நீக்கிச் செல்லுதி குமர வென்றான். 69
340 விராவிய விலக்கத் தொன்பான் வீரரை வெய்ய பூதர்
இராயிர வெள்ளத் தோரை யிகற்படை மான்றே ரோடு
பராபர னுதவித் தூண்டப் பன்னிரு புயத்த னேகித்
தராதலம் புக்கு வெற்பைத் தாரக னோடு சென்றான். 70
341 பூவினன் முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்தத்
தேவர்தங் கிரியின் வைகித் தென்றிசை நடந்து தாதை
மேவரு மிடங்கள் போற்றி மேதகு சேய்ஞல்** நண்ணி
மூவிரு முகத்தன் முக்கண் முன்னவன் படையைப் பெற்றான்.
( ** சேய்ஞல் - சேய்ஞலூர் ) 71
342 பரனருள் படையைப் பெற்றுப் பராசரன் சிறார்***வந் தேத்தத்
திருவருள் புரிந்து சென்று செந்திலின் மேவிச் சூரன்
வரமொடு திருவுஞ் சீரும் வாசவன் குறையும் வானோர்
குரவனை வினவி யன்னான் கூறவே குமரன் தேர்ந்தான்.
( *** பராசரன் சிறார் - தத்தன், அனந்தன், நந்தி, சதுர்முகன், பருதிப்பாணி,
தவமாலி என்ற ஆறு புதல்வர்கள். ) 72
343 அறத்தினை யுன்னி யைய னாடல்சேர் மொய்ம்பன்**** றன்னை
உறத்தகு மரபிற் றூண்டி யொன்னலன் கருத்தை யோர்ந்து
மறத்தொடு கடலுள் வீர மகேந்திரம் அணுகி யேதன்
புறத்துள தானை யோராற் சூர்கிளை பொன்றச் செற்று. 73
( **** ஆடல் சேர் மொய்ம்பன் - வீரவாகு தேவர். ஆடல் - வீரம் ) 73
344 சீயமா முகத்த னென்னுஞ் செருவலான் றனையு மட்டு
மாயையுந் திருவுஞ் சீரும் வரங்களும் பிவு மாற்றி
ஆயிர விருநா லண்டத் தரசனாஞ் சூரன் றன்னை
ஏயெனு மளவில் வேலா லிருதுணி படுத்து நின்றான். 74
345 துணிபடு சூர னோர்பால் சூட்டுவா ரணமா யோர்பால்
பிணிமுக மாகி நிற்பப் பெருந்தகை அவற்றை யூர்தி
அணிபடு துவச மாக்கி அப்பகல் செந்தில் வந்து
மணிசொரி யருவி தூங்கும் வான்பரங் குன்றஞ் சேர்ந்தான். 75
346 தெய்வத யானை யென்னுஞ் சீர்கெழு மடந்தை தன்னை
அவ்விடை வதுவை யாற்றி அஙஙனஞ் சிலநாள் வைகி
மெய்விய னுலகிற் சென்று விண்ணவர்க் கரச னாக்கி
எவ்வமில் மகுடஞ் சூட்டி இந்திரன் றன்னை வைத்தான். 76
347 சில்பக லங்கண் மேவிச் சேனையோ டணங்குந் தானும்
மல்லலங் கயிலை யேகி மங்கைபங் குடைய வண்ணல்
மேல்லடி வணங்கிக் கந்த வெற்புறை நகரி* னேகி
எல்லையி லருளால் வைகித் தணிகையில் எந்தை வந்தான்.
( * கந்த வெற்புறை நகர் - கந்தகிரியிலிருக்கும் குமார லோகமுமாம். ) 77
348 சாரலி னோங்கு தெய்வத் தணிகைமால் வரையின்மீது
வீரம துடைய வேலோன் வீற்றிருந் திடலு மங்கண்
நாரதன் வந்த தாழ்ந்து நவைதவி ரெயின மாதின்
சீரெழில் நலத்தைக் கூற அவள்வயிற் சிந்தை வைத்தான். 78
349 வள்ளிமால் வரையிற் போந்து மானி**டைப் பிறந்த தெய்வக்
கிள்ளையை யடைந்து போற்றிக் கேடில்பல் லுருவங் காட்டிக்
கள்ளமோ டொழுகிப் பன்னாட் கவர்ந்தனன் கொணர்ந்து பின்னர்த்
தெள்ளுசீர் வேடர் நல்கத் திருமணஞ் செய்து சேர்ந்தான்.
( ** மான் - சிவமுனிவராகிய மான். ) 79
350 செருத்தணி வரை***யில் வந்து சிலபகல் வள்ளி தன்னோ
டருத்தியின் மேவிப் பின்னர் அவளடுங் கந்த வெற்பின்
வரைத்தனிக் கோயில் புக்கு வானமின் பிரிவு நீக்கிக்
கருத்துற இருவ ரோடுங் கலந்துவீற் றிருந்தான் கந்தன்.
( *** செருத்தணி வரை - திருத்தணிமலை. ) 80
351 என்றிவை யனைத்துஞ் சூதன் இயம்பலும் முனிவர் கேளாத்
துன்றிய மகிழ்வாற் சென்னி துளக்கியிங் கிதனைப் போல
ஒன்றொரு கதையுங் கேளேம் உரைத்தனை சுருக்கி யாங்கள்
நன்றிதன் அகலங் கேட்க நனிபெருங் காதல் கொண்டேம். 81
352 என்னவே முனிவ ரானோர் யாவரு மெடுத்துக் கூற
மன்னிய வருள்சேர் சூதன் மற்றவ ரார்வம் நோக்கி
அன்னவை சுருக்க மின்றி அறைந்தனன் அவ்வா றோர்ந்து
தொன்னெறி வழாதி யானும் வல்லவா தொகுத்துச் சொல்வேன். 82
ஆகத் திருவிருத்தம் - 352
பாயிரம் முற்றிற்று.

முதலாவது காண்டம் (உற்பத்திக் காண்டம்)


செந்திலாண்டவன் துணை / திருச்சிற்றம்பலம்
1. திருக்கைலாசப் படலம் (353-374)

353 பாசம் நீக்கித்தன் பாற்படு நல்லருள்
ஈசன் நல்கு மியல்பென வெய்தினோ£
தேசு மாற்றிச் சிறந்ததன் மெய்யொளி
வீசு கின்றது வௌ¢ளியங் குன்றமே. 1
354 ஆறு சூடிய வாதியம் பண்ணவன்
ஏறு மூரிவௌ¢ ளேறுமக் கண்ணுதல்
நீறு சேர்தரு கோலமும் நித்தனைத்
தேறும் அன்ர்தஞ் சிந்தையும் போன்றதே. 2
355 மோன நன்னிலை முற்றிய பெற்றியர்
ஞான மார்பிழம் பன்ன நலத்ததாய்
ஊனு லாய வுயிர்த்தொகை மாசொரீஇத்
தானெ லாஞ்செறிந் தென்னவுஞ் சான்றதே. 3
356 கான மார்ந்த கடுக்கைநற் கூவிளைத்
தேன வாம்பொழிற் றிண்சிக ரத்திடை
வான யாறு வருதலின் மாசிலா
ஞான நாயகன் போல நணியதே. 4
357 தண்ண றுந்துள வாற்புனை தார்முடிப்
பண்ண வன்கண் படுத்திடு பாற்கடல்
கண்ணு தற்குமொர் காமரு பீடமாய்
நண்ணு கின்றது போலும் நலத்ததே. 5
358 பொதியு மின்னமு தோடு பொருந்துவ
கதிரின் மிக்க கறையறு காட்சிய
மதிய மாயிர கோடி மணந்துதாம்
உதய மானது போன்றதன் வொண்கிரி. 6
359 நெற்றி மேனிமிர் கண்ணும் நிலாவொளிர்
பொற்ற டம்புய நான்கும் பொருந்துறப்
பெற்றெம் மானரு ளாற்பிரம் பொன்றுகைப்
பற்று நந்தி பரிவொடு காப்பது. 7
360 புரந்த ரன்முத லாகிய புங்கவர்
வரம்பின் மாதவர் மாசறு காட்சியர்
நிரந்த பூத கணவர் நிரந்தரம்
பரிந்து போற்றிப் பயில்வதம் மால்வரை. 8
361 மின்ன ரம்பைய ராடலும் விஞ்சையர்
கின்ன ரம்பயில் பாடலுங் கீழ்த்திசை
மன்ன னாதியர் வாழ்த்துமவ் வானவர்
இன்னி யங்களும் எங்கணு மார்ப்பது. 9
362 வேறு
கீணி லாவுறு முகெலாம் நீங்கியே கீழ்போய்ச்
சேணி லாவுறு பதமெலா முருவிமீச் சென்று
மாணி லாவுறும் அண்டத்தின் அடிமுடி மருவத்
தாணு வாயுல கிறுதியின் நிற்பதச் சயிலம். 10
363 மாடு சூழ்தரு மேருவே யாதியாம் வரைகள்
பாடு சேரினு மலகெலா மழியினும் பரந்து
கூடு மண்டங்கள் குலையினுங் கொன்றைவே ணியன்போல்
கேடி லாமலே அமர்வது கயிலையங் கிரியே. 11
364 நலம்வ ருங்கலை மதியமு மிரவியும் நாகர்
குலம்வ ருந்தனுக் குறையலா மற்றைய கோளும்
அலம ருஞ்சுடர் உடுக்களு மமரரும் பிறரும்
வலம்வ ரும்படி யிருப்பது கயிலைமால் வரையே. 12
365 ஏற்றம் மேருவே யாதியாம வரைகள்ஏழ் வகையால்
சாற்றும் நேமிகள் ஆழியங் கிரிபெருஞ் சலதி*
நாற்றி சைக்கணும் நொச்சிபோற் சூழ்தர நடுவண்
வீற்றி ருப்பது கயிலையா கியதனி வெற்பு.
( * ஏழ்வையால் சாற்றும் நேமிகள் - உவர் நீர்க்டல் முதலிய
ஏழுகடல்கள்.
ஆழியங்கிரி - சக்கரவாளகிரி. பெருஞ்சலதி - பெரும்புறக்கடல். ) 13
366 படியெ லாமுண்டும் ஏனமாய்த் தாங்கியும் பண்டோர்
அடியி னாலகப் படுத்தியு மிடந்துமுற் றருளும்
நெடிய மாயனு முலகிறு மெல்லையில் நிமலன்
வடிவ மேயெனக் காணுதற் கரியதவ் வரையே. 14
367 வேறு

அன்னதோர் கயிலை நாப்பண் அம்பொனின் சுடர்மேல் கொண்ட
நன்னெடுஞ் சிமயத் தொங்கல் நவையொரீஇ நண்ணிற் றென்னக்
கன்னியங் காப்பு மேவிக் கதிர்மணிக் கற்றை சுற்றப்
பொன்னெடுங் கோயி லொன்று பொலிவொடும் பொருந்திற் றன்றே. 15
368 திணிகதிர் ஆரந் தன்னிற் சிறந்தவச் சிரத்திற் செக்கர்
மணிதனில் முழுநீ லத்தின் மற்றைய வெறுக்கை தன்னில்
பணிபட வருளாற் றானே பலித்திடு சிகர மாதி
அணியினுக் கணியாய் மல்கும் ஆலயச் சூழ லெங்கும். 16
369 என்றுமீ றென்ப தின்றி யிருந்திடுங் கயிலை வெற்பிற்
பொன்றிகழ் நகரந் தன்னுட் பொருவிலாக் கோளும் நாளுந்
துன்றிய தன்மைத் தென்னத் தூமணிக் கதிர்கள் சூழ
மன்றம ருறையு ளொன்று வனப்பொடு வைகிற் றன்றே. 17
370 வேறு
சோதி சேருமத் தூமணி மண்டபத்
தாதி யான அரியணை யும்பரிற்
காத லாகுங் கவுரி*யொர் பாங்குற
வேத நாயகன் வீற்றிருந் தானரோ.
( *அருளே சிவசத்தி என்பது தோன்ற, ‘காதலாகுங் கவுரி’ என்றார்.) 18
371 பீடு கொண்ட பெருந்தவப் பெற்றியோர்
தேடு கின்ற சிறப்புடைத தாம்புகழ்
நாடு தும்புரு நாரதர் விஞ்சையர்
பாடு கின்றனர் பாணியின் பாற்பட. 19
372 அதிகன்** வேணியி லார்தரு கங்கையை
விதிவு ரந்தரன் விண்டுல கத்துள
நதிக டாழ்ந்தென நன்னயத் தேவல்செய்
கதியி னோர்கள் கவரிகள் வீசினார்.
( **அதிகன் - தன்னிகர் உயர்ச்சி இல்லாத் தலைவன் சிவபெருமான். ) 20
373 சீல வட்ட முடிப்பிறை தேடுவான்
ஞால வட்டத் தெழுதரு நாகர்போல்
ஏல வட்ட முகத்தரு கெங்கணும்
ஆல வட்ட மசைத்தனர் அன்பினோர். 21
374 ஆதி தன்னரு ளெய்தி அவன் றிருப்
பாத தாமரை சூடியப் பண்ணவன்
கோதி லாத திருவுருக் கொண்டுளோர்
பூத ராதியர் போற்றிமுன் ஈண்டினார். 22
ஆகத் திருவிருத்தம் - 374.
2. பார்ப்பதிப் படலம் (375 - 410)

375 அன்னுழி உமையவ ளகத்து ளோர்செயல்
உன்னினள் துணுக்கமுற் றொல்லைதா னெழீஇத்
தன்னிக ரில்லவன் தாளி றைஞ்சியே
முன்னுற நின்றிவை மொழிதல் மேயினாள். 1
376 கற்பனை முதலிய கடந்த கண்ணுதல்
தற்பர நினையிகழ் தக்கன் தன்னிடைப்
பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாதெனச்
சொற்படு நாமமுஞ் சுமந்து ளேனியான். 2
377 ஆங்கதோர் பெயரையு மவன்க ணெய்தியே
ஓங்கிநான் வளர்ந்தவிவ் வுடலந் தன்னையுந்
தாங்கினன் மேலவை தரித்தற் கஞ்சினேன்
நீங்குவ னவ்வகை பதித்தி நீயென்றாள். 3
378 மன்னுயி ராகிய மரபு முற்றவும்
முன்னுற அருளிய முதல்வி யன்பினால்
இன்னண மியம்பலு மிதனைத் தேர்ந்திடாத்
தன்னிக ரில்லதோர் தலைவன் கூறுவான். 4
379 பத்திமை யெம்வயிற் பழுத்த பண்பினாற்
சத்தியே நின்னிகர் சகத்தி னில்லைநீ
இத்திறம் முயலுத லெல்லை தீர்ந்தநின்
புத்திரர் வீடுறு பொருட்டுப் போலுமால். 5
380 நற்றிற மேலுது நங்கை சிந்தனை
முற்றிய வேண்டுமேல் மொழிதும் மேருவின்
சுற்றம தாகிய இமையத் தொல்வரைக்
கொற்றவன் புரிவனாற் கொடிய மாதவம். 6
381 ஏதவன் பெறத்தவ மியற்று மென்றியேன்
மாதுனை மகண்மையா மரபிற் போற்றியே
காதலொ டெமக்கருள் கருத்த தாகுமால்
ஆதலிற் குழவியாய் அவன்க ணெய்துநீ. 7
382 தளர்ந்துடல் மெலிவுறத் தவஞ்செய் வெற்பினான்
இளஞ்சிறு குழவியா யெய்தி மற்றவன்
உளங்களி கூரவாண் டோரைந் தின்றுணை
வளர்ந்தனை புரிதிமேல் மாசில் மாதவம். 8
383 அணங்குநீ நோற்றுழி யகிலத் துள்ளதோர்
கணங்களுந் தலைவருங் கணிப்பில் தேவரும்
இணங்கினர் சூழ்தர வெய்தி நின்னையாம்
மணம்புரிந் தேகொடு வருது மீண்டெனா. 9
384 கடல்விட முண்டிடு கடவு ளித்திறம்
நடைமுறை யருளலும் நன்றே னாமகிழ்ந்
தடியிணை வணங்கிநின் றன்பிற் போற்றியே
விடையது பெற்றனள் விமலை யேகினாள். 10
385 அல்லலு முவகையு மன்பு மெம்பிரான்
எல்லையி லருளுமா யீண்டி முன்செல
மெல்லியல் உமையவள் வௌ¢ளி வெற்பொரீஇ
வல்லையின் இமையமால் வரையிற் போயினாள். 11
386 வள்ளியன் கடகரி வடிவின் வீழ்தரு
துள்ளியம் பனிமழைச் சோனை சூழ்தலால்
எள்ளருந் தன்மைசேர் இமைய மால்வரை
வௌ¢ளியங் கிரியென விளங்கு கின்றதே. 12
387 எண்டகு மிமையமு மிமைய மேலுறு
கொண்டலு மொன்றியே குலவு காட்சிய
தெண்டிரை மிசையெழு நஞ்சுந் தீயநஞ்
சுண்டிடு மணிமிடற் றிறையு மொக்குமால். 13
388 நீலுறு மழைமுகில் நிலவு மின்னொடு
மேலுற விளங்கிய இமைய வெற்பது
மாலவன் றிருவொடு மருவிக் கண்டுயில்
பாலுறு பன்னகப் பாயல் போன்றதே. 14
389 கரும்புய லார்த்துறு காட்சித் தாகியே
இரும்பனி யிடையறா விமையப் பொன்வரை
சுரும்பின மிசையொடு துவன்றிச் சுற்றிட
அரும்பவி ழாதவெண் கமல மன்னதே. 15
390 நீடிய மண்மகள் நிதியின் குப்பையைப்
பாடுறு தண்ணிலாப் படாம தொன்றினான்
மூடினள் வைத்திடு முறைய தேயெனக்
கோடுயர் பனிகொள்பொற் குன்றம் நின்றதே. 16
391 பொன்னெடுங் கிரியென வீண்டும் புங்கவர்
துன்னினர் சூழ்வரென் றுன்னித் தொன்மனு
அன்னதை மறைத்தனன் இரதத் தாவியால்
என்னவும் நின்றதால் இமையப் பொன்வரை. 17
392 குடகடல் குணகடல் கூடு றாவகை
இடையொரு வாலிதாம் ஏன மெய்தியே
தடபுரி சிறப்பென இமையத் தாழ்வரை
நெடுநில வளவையும் நிமிர்ந்து போயதே. 18
393 விண்ணவர் ததிக்கடல் கடைந்த வெண்ணெயுள்
அண்ணலம் பாற்கட லமுதம் வைத்தெனக்
கண்ணகன் பரும்பனி கவைஇய வெற்பின்மேல்
உண்ணிறை புனற்றட மொன்று வைகிற்றே. 19
394 அன்னதோர் தடத்திடை அசல மன்னவன்
மன்னிய கௌரிதன் மகண்மை யாகவுந்
தன்னிக ரிலாவரன் றனக்கு நல்கவும்
முன்னுற வருந்தவம் முயன்று வைகினான். 20
395 மெய்த்தவ மியற்றிய வெற்பன் காணிய
அத்தட மலருமோ ரரவிந் தத்தின்மேற்
பைத்ததோர் குழவியின் படிவத் துற்றனள்
எத்திறத் துயிரையு மீன்ற தொன்மையாள். 21
396 வேறு
ஆங்கவட் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டா லம்மை
நீங்கினள் போலும் முக்க ணிருமலன் றன்னை யென்னா
ஏங்கினன் றனது நோன்புக் கிரங்கின னிவைக ளீசன்
ஓங்குபே ரருளே யென்னா வுகையங் கடலுட் பட்டான். 22
397 கண்ணுறு கோத வாரி கான்றிட வுரோம ராசி
உண்ணிக ழன்பு மிக்குப் புறந்தனி லொழுகிற் றென்ன
வண்ணன்மெய் பொடிப்பத் துள்ளி அடியனே னுய்ந்தே னென்னாத்
துண்ணெனப் பாடி யாடி யமலையைத் தொழுது நின்றான். 23
398 பங்கயத் தவிசின் வைகும் பராபரை தனைத்த னாது
செங்கயை னெடுத்து வல்லே சென்னிமேற் றாங்கி யேகித்
துங்கநல் லிமையத் தண்ணல் தொன்முறை யிருக்கை புக்கு
மங்கல மேனை யென்னு மனைவிகைக் கொடுத்தான் மாதோ. 24
399 கொடுத்தலுந் தொழுது வாங்கிக் கொற்றவ இவணின் பாங்கர்
அடுத்ததங் கெவனோ வென்ன அரசனும் நிகழ்ந்த வெல்லாம்.
எடுத்துரை செய்யக் கேளா வீசன தருளோ வென்னா
வடுத்தவிர் கற்பின் மேனை மனமுற மகிழ்ச்சி கொண்டாள். 25
400 சுரந்தன கொங்கை பாலுந் துண்ணென வொழுகிற் றெங்கும்
பரந்தன பொடிப்பின் போர்வை பரைதன தருளே யுள்ளம்
நிரந்தன கவலை யாவும் நீங்கின பவமுன் னுள்ள
கரந்தன விமையத் தண்ணல் காதலி தனக்கு மாதோ. 26
401 பரிபுரந் தண்டை யம்பொற் பாடகம் பாத சாலம்
விரவிய தொடியே சங்கு வியன்மணிச் சுட்டி யாரம்
அரிகெழு மதாணி பொற்றோ டங்கதம் பிறவுஞ் சாத்தி
வரையுறழ் தனப்பா லார்த்தி வரம்பெறு காப்பு நேர்ந்தாள். 27
402 வனைதரு பவளங் காலா வயிரமே மருங்கிற் கோலாப்
புனையிரும் பலகை நீலாப் பிரிந்தபொற் றொட்டின் மேலா
அனையவ டன்னை யுய்த்து மங்கையிற் கொண்டுந் தன்கோன்
மனமகிழ் திறனாற் போற்றி மதியென வளர்க்க லுற்றான். 28
403 மன்னுயிர் புவன மேனை மற்றுள பொருளுக் கெல்லாம்
அன்னையா யுதவி நாளு மவற்றினை வளர்த்து நிற்பாள்
தன்னையும் வளர்ப்பா ருண்டோ வளர்ந்தது சழக்கே யந்தக்
கன்னிதன் னருளின் நீர்மை காட்டினள் போலு மன்றே. 29
404 இந்தவா றினையர் பாலா யெம்பெரு மாட்டி வைகி
ஐந்தியாண் டகன்ற பின்றை யயன்முதற் றேவர் யார்க்குந்
தந்தையா ரருளை யுன்னித் தவமினிப் புரிவ னென்னாச்
சிந்தியா விமையத் தோங்கற் செம்மலுக் குரைக்க லுற்றாள். 30
405 நாற்பெருந் தடந்தோ ளண்ணல் நலத்தக வரைந்து கொள்வான்
நோற்பனா லினைய வெற்பி னுவலரு மொருசார் வைப்பின்
ஏற்பதோர் கன்னி மாரோ டெனைவிடுத் தருண்மோ வென்னாப்
பார்ப்பதி இயம்ப லோடும் பனிவரை யரசன் சொல்வான். 31
406 அன்னைகே ளெம்மின் நீங்கி யருந்தவ மாற்றற் கொத்த
தின்னதோர் பருவ மன்றா லியாண்டுமோ ரைந்தே சென்ற
நின்னுடல் பொறாதா லீண்டிந் நிலைமையைத் தவிர்தி யென்னக்
கன்னிகை நகைத்துக் கேண்மோ இ·தெனக் கழற லுற்றாள். 32
407 ஈசனே காப்ப னல்லால் யாரையும் பிறராற் றம்மால்
ஆசறப் போற்ற லாகா ததுதுண வாகு மீண்டுப்
பேசிய திறனு மன்னோன் பேரருள் மறாதி யென்ன
நேசமோ டியைந்திட் டன்னை நினைந்தநோன் பியற்று கென்றான். 33
408 மன்னனு மியைந்து பின்னர் மால்வரை யொருசார் தன்னில்
அன்னமென் னடையி னாளுக் கருந்தவச் சாலை யாற்றித்
தன்னுறு கிளைஞர் தம்பாற் றவத்தினால் வந்த பான்மைக்
கன்னியர் பலரைக் கூவிக் கௌரிபா லாகச் செய்தான். 34
409 நீலுறு மணிதோய் மேனி நிமலையங் கிமையத் துச்சி
மேலுறு மரசன் றேவி விடையினால் மடவார் பல்லோர்
பாலுறு பணியிற் சூழப் பரமனை யுன்னி யந்தச்
சாலையை யடைந்து மிக்க தவத்தினை யிழைக்க லுற்றாள். 35
410 தங்கிய வைக றோறுந் தாதையுந் தாவில் கற்பின்
மங்கையும் போற்றி யேக மாதுநோற் றிருந்தா ளிப்பால்
அங்கவட் பிரிந்த பின்றை அரும்பெருங் கயிலை மேய
வெங்கடம் பெருமான் செய்த பரிசினை இயம்ப லுற்றேன். 36
ஆகத் திருவிருத்தம் - 410.
3. மேருப்படலம் (411 - 491)

411 பன்னருஞ் சிறப்பின் மிக்க பனிவரை யரசன் றன்பாற்
கன்னியம் புதல்வி யாகிக் கௌரிநோற் றிருந்த காலைத்
துன்னிய வவுணர் சூழச் சூரபன் மாவாம் வெய்யோன்
இந்நில வரைப்பின் அண்டத் திறைவனே யாகி யுற்றான். 1
412 மற்றது போழ்திற் றொல்லை மறைப்பொருள் வடத்தின் பாங்கர்ப்
பெற்றிடு சனக னாதி முனிவரர் பின்னும் பன்னாள்
அற்றமில் தவஞ்செய் தெந்தை யருளினாற் கயிலை நண்ணி
முற்றுணர் நந்தி போற்று முதலிலை வாயில் புக்கார். 2
413 நோன்மையின் முனிவ ரானோர் நுவலருங் காட்சி நந்தி
கான்முறை வணங்கி நிற்ப அனையவன் கருணை தன்னால்
வான்மலி கடவுட் கோயின் மந்திரங் கொண்டு செல்ல
நான்முகன் முதலோர்க் கெய்தா ஞானநா யகனைக் கண்டார். 3
414 மொழியது தவறல் செல்ல முற்றுடல் பொடிப்புக் கொள்ள
விழிபுனல் பெருகத் தீசேர் பெழுகென வுள்ளம் விள்ள
அழகிய மறைக்கு மெட்டா ஆதிநா யகனை நோக்கித்
தொழுதன ருவகை பூத்துத் துள்ளினர் துளக்க முற்றார் 4
415 மண்ணவ ரமரர் யாரை வணங்கினு மவைக ளெல்லாம்
நண்ணிய பரமன் றாளி னாற்பெருந் தவத்தி னோருந்
தண்ணளி நெறியிற் பல்காற் றாழ்ந்தன ரெழுந்து நின்று
பண்ணிசை மறைக டம்மால் துதித்திவை பகர்த லுற்றார். 5
416 இருட்பெருங் கடலுள்யாமத் தெறிமருத திடைப்பட் டாங்குப்
பொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொறு மலைப்ப விந்நாள்
அருட்பெருங் கடலே எய்த்தே மமைந்தில துணர்வி யாங்கண்
மருட்பெருங் கடலின் நீங்கும் வண்ணமொன் றருடி யென்றார். 6
417 நவையறு தவங்க ளாற்றி நல்லருள் படைத்த தொல்லோர்
இவைபுகன் றிடலு மன்பர்க் கௌ¤வருங் கருணை வள்ளல்
அவர்முகந் தெரிந்து நுங்கள் அறிவமைந் தடங்கு மாறு
தவலருஞ் சிறப்பின் நன்னூல் சற்றுது மிருத்தி ரென்றான். 7
418 என்றிவை யருள எந்தை யிணையடி தனாது முன்னர்
நன்றுணர் காட்சி கொள்ளும் நால்வரு மிருந்தார் அங்கட்
சென்றிடு நந்திப் புத்தேள் சிறப்புடை வதன நோக்கிக்
கொன்றையந் தொடையல் வேய்ந்த குழகனொன் றியம்பு கின்றான். 8
419 பூங்கனைக் கிழவ னன்றிப் புங்கவர் யார்போந் தாலும்
ஈங்குறத் தருதி யல்லை யீதுனக் கடைத்த தென்ன
ஆங்கது புரிவ னென்னா வமலனை யிறைஞ்சி யங்கண்
நீங்கியக் கணத்தின் நந்தி நெறிமுதல்போற்றல் செய்தான். 9
420 நந்திமுற் கடையைப் போற்ற ஞானநா யகனா மண்ணல்
முந்துறை சனக னாதி முனிவரர் தொழுது கேட்ப
அந்தமில் ஆக மத்தின் அரும்பதம் மூன்றுங் கூறப்
புந்திய தொடுங்கும் ஞான போதகம் போதி யென்றார். 10
421 என்னலும் நகைத்தி யாது மெதிர்மொழி புரிந்தா னல்லன்
பன்னுவ தன்றால் மற்றிப் பரிசினா லிருத்தல் கண்டீர்
அந்நெறி யாகு மென்றே அனையவர்க் குணர்த்து மாற்றால்
உன்னரும் பரத்தின் மேலோ னொருசெயல் புரித லுற்றான். 11
422 இருவரு முணரா அண்ணல் ஏனவௌ¢ ளெயிறி யாமை
சிரநிரை யநந்த கோடி திளைத்திடும் உரத்திற் சீர்கொள்
கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி
ஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான். 12
423 இனையதோர் தன்மை காட்டி யெம்பிரா னுணர்த்தக் கண்டு
சனகனே முதலா வுள்ளோர் தவலரும் ஞான போதம்
பனுவலின் அளவன் றென்னும் பான்மையைத் தெரிந்து முக்கட்
புனிதன தருளாற் றத்தம் புந்தியி னொடுக்கம் பெற்றார். 13
424 தத்தமுள் ளொடுங்கல் பெற்ற தாபத கணத்தர் யாரும்
முத்தொழில் புரியும் மூவா முதல்வனாம் முக்கண் மூர்த்தி
மெய்த்தவ வடிவ முன்னி மேவினர் சூழ்ச்சி மேலோன்
சித்திரம் புணர்த்த பாவை செயலற இருக்கு மாபோல். 14
425 தற்பரன் இனைய வாற்றாற் றாபத ருணருந் தன்மை
அற்புத ஞான போத மளித்திடுங் கணம தொன்றின்
முற்படு கமலப் புத்தேள் முதலிய அமரர்க் கெல்லாம்
பற்பல யுகங்கள் சென்ற பிறர்க்கினிப் பகர்வ தென்னோ. 15
426 இத்திற ஞானபோத மென்றுதொன் முனிவர்க் கெந்தை
கைத்தலங் கொண்டு காட்டுங் கணத்தினில் அமரர்க் கெல்லாம்
மெத்துபல் லுகங்கள் சென்ற விழுமிய காஞ்சி தன்னில்
அத்தன்மெய் குழைத்த நங்கை அவன்விழி புதைத்த நாடபோல். 16
427 காரண முதல்வன் மோனக் காட்சியால் அமர ரெல்லாஞ்
சூரர மகளிர் தங்க டுணைமுலைப் போக மின்றி
ஆரிடர் நிலைமை தன்னை யடைந்தனர் அளக்கர் சூழ்ந்த
பாரிடை உயிருங் காமப் பற்றுவிட் டிருந்த வன்றே. 17
428 ஆரணன் றனது மைந்தர்க் கரும்பெறல் ஞான போதம்
ஓரிறை காட்டு முன்னர் உலகெலா மொருப்பா டொன்ற
ஈருடன் முயங்கு மார்வ மின்றியே யிருந்த யார்க்குங்
காரணன் சிவனே யென்கை கழறவும் வேண்டற் பாற்றோ. 18
429 பிணைவிழைச் சூழ்தந் துய்ப்பப் பெருமறை விதிவ ழாமல்
அணைவிழச் சடங்கிற் கொண்ட அரிவைய ரோடு தேவர்
இணைவிழைச் சியற்கை கூடா திரங்கினர் கவற்சி யெய்திப்
புணைவிழச் சலதி யாழ்ந்து புலம்புகொள் மாக்க ளேபோல். 19
430 வன்முலை யணங்கி னோரும் வானவர் யாருங் காமத்
தன்மையும் புணர்ப்பு மின்றித் தளர்ந்தனர் வறிஞர் தம்பால்
இன்மைகொண் டோர்கள் செல்ல ஈவது கூடா வெல்லைப்
புன்மையொ டிருவர் தாமும் புலம்புறு தன்மை யேபோல். 20
431 பொற்புருக் குறைவின் றுற்றும் புனமேல் மகளிர் மைந்தர்
அற்பொடு கலந்து காமத் தரும்பயன் கோட றேற்றார்
தற்பர வடுக னாணைத் தன்மையால் அலகை யீட்டம்
நற்புன னீழல் பெற்று நணுகருந் தன்மை யேபோல். 21
432 மாடக வெழாலை யன்ன பணிமொழி மகளிர் மைந்தர்
கூடின ரிருந்து மின்பங் கொண்டிலர் சிறார்கு ழாமும்
ஆடவர் குழாமும் வாட்கண் அரிவையர் குழாமு மேனைப்
பேடியர் குழாமும் வெவ்வே றுற்றிடு பெற்றி யேபோல். 22
433 இருந்திட விரிஞ்சன் மாயோன் இருவரு மீசன் றன்பாற்
பொருந்திடு முணர்ச்சி கொண்டு முத்தியிற் புக்க சேயுந்
திருந்துசீர் வசிட்டன் சொல்லாற் சிலையெனப் பன்னாள் நின்ற
அருந்ததி மாதும் போன்றார் ஆடவர் மகளி ரெல்லாம். 23
434 ஏமரு புவன மூன்று மினிதருள் கமலக் கண்ணர்
பூமட மாதர் தம்பாற் புணர்கிலர் பொருவில் வேளுங்
காமரு மகளிர் கூட்டங் கருதலன் இவர்போற் சிந்தை
ஆமையி னொடுங்கல் பெற்றார் ஆசையுள் ளோர்களெல்லாம். 24
435 மண்ணகத் துயிர்கண் முற்று மாதிரத் துயிர்கண் முற்றும்
விண்ணகத் துயிர்கண் முற்றும் வேற்றகத் துயிர்கண் முற்றும்
பெண்ணகத் தாண்மை கூடுஞ் சிறுநலம் பிழைத்த ஞானக்
கண்ணகத் திறைவற் கண்டு கடைநின்ற காட்சி யார்போல். 25
436 நாகமார் சடிலத் தண்ணல் நாற்பெருந் தவரு முய்ய
யோகுசேர் நிலைமை காட்டு மொருகணத் துயிரின் பொம்மல்
வாகைவே டானு நிற்க மையலும் புணர்ப்பு மற்ற
ஆகையால் அகில மெல்லா மவனென்கை தெரிந்த தன்றே. 26
437 சிலையொடு பகழி வாடத் திருமதிக் குடைசீர் குன்ற
வலிதளர் வெய்தத் தென்றல் மறிகடற் சுறவு தூங்க
அலைபுரி யாணை நீங்கி ஆடன்மா மதனு மாதின்
கலவிய தொழிந்தா னென்னிற் பிறர்செயல் கழறற் பாற்றோ. 27
438 சாலிகள் வளரு மெல்லை தடம்புனல் வறுமைத் தாக
வாலிது குரல்வாங் காது வருத்தொடு மாய்வ தேபோல்
மேல னருளாற் போகம் வெறுத்தலற் கருமல் கின்றி
ஞாலமன் னுயிர்கள் முற்றும் நாடொறுங் குறைந்த வன்றே. 28
439 முள்ளரை முளரிப் புத்தேள் முதற்புரி துணையே யன்றித்
தள்ளரு முயிர்கள் பின்னுந் தலைத்தலை மல்கா துற்ற
தௌ¢ளிதி னுலக மீன்ற தேவியின் றாகி ஈசன்
வௌ¢ளியங் கயிலை தன்னில் மேவிய மேலை நாட்போல் 29
440 இம்முறை நிகழ நாதன் ஈரிரு தவத்தி னோர்க்கும்
மெய்ம்மைகொ ளுணர்ச்சி காட்டி வீற்றிருந் தருளு மெல்லை
தெம்முயல் சூரன் தீங்கு செய்தலால் மகவான் வானோர்
தம்மொடுந் துறக்கம் விட்டுச் சசியொடுந் தரனி புக்கான். 30
441 மேகமூர் கடவுள் வௌ¢ளி வெற்பினி லேகி முக்கண்
ஏகநா யகனைக் காணு மெல்லையின் றாக மீண்டு
சோகமோ டம்பொன் மேருத் துன்னியே சூரன் மைந்தன்
மாகநா டழித்துச் சேயைச் சிறைசெய்த வண்ணந் தேர்ந்தான். 31
442 தமனிய மேரு வெற்பிற் றன்னுள பொருப்பா டெய்த
நிமலனை யுன்னிப் பன்னாள் நெடுந்தவ முழத்த லோடும்
இமில்விடை மிசைக் கொண் டங்கண் எம்பிரா னேகக் காணூஉ
அமரர்கோன் வணங்கிப் போற்ற அனையவ னருளிச் செய்வான். 33
443 நொந்தனை யளப்பில் கால நோற்றனை யாற்றல் தீர்ந்தாய்
இந்திர நினக்கு வேண்டிற் றென்னைய தியம்பு கென்னா
அந்தமி லறிவின் மேலோன் அறிகிலன் போலக் கேட்ப
வந்தனை புரிந்து போற்றி மகபதி புகல லுற்றான். 34
444 பன்னரும் பழிசேர் சூரன் பருவரற் படுத்திப் பின்னர்
என்னொரு புதல்வன் றன்னை இமையவர் பலரை வாட்டித்
தன்னகர்ச் சிறையிட் டெம்மூர் தழல்கொளீஇத் தவறு செய்தான்
அன்னவன் றன்னை யட்டே அளித்தியா லெம்மை யென்ன. 35
445 மெய்ம்மைய தகன்ற தக்கன் வேள்வியி னிருந்த பாவம்
நும்மிடை யிருந்த தற்றால் நோதக வுழந்தீர் மேனாள்
நம்மிடை யொருசேய் வந்து நணுகிவெஞ் சூரைக் காதி
இம்மென வும்மைக் காப்ப னெனப்புகன் றிறைவன் போனான். 36
446 மறைந்தனன் இறைவ னேக மகபதி யிரக்க மெய்திக்
குறைந்தனன் உணர்வு துன்பங் கூர்ந்தனன் குமர னங்கட்
பிறந்துமைக் காப்ப னென்றே பிரானருள் புரிந்த பெற்றி
சிறந்ததன் மனத்தி லுன்னித் தேறினன் உவகை செய்தான். 37
447 மாசறு காட்சி கொண்ட மாதவர்க் கருளி யெங்கோன்
தேசுறு கயிலை யுற்றான் உமையவ ளிமையஞ் சேர்ந்தாள்
ஆசறு குமரன் அன்னார்க் கடைவதெத் தன்மை யென்னா
வாசவ னிருந்து நாடி மனமிசைக் கவலை கூர்ந்தான். 38
448 மயர்வொடு துறக்க மன்னன் மனோவதி யென்னு மாண்டை
வியனக ரெய்தி யாங்கண் வீற்றிருந் தருளும் பொன்னின்
இயன்முறை மனைவி தன்பால் இல்லினை யிருத்தல் செய்தாங்
கயனுறு கடிமாண் கோயி லடைந்தனன் அமர ரோடும். 39
449 இனையதோர் காலை முக்க ணெம்பிரான் ஞானபோதம்
முனிவரர்க் குணர்த்தி வைகும் முறையினாற் படைப்பின் றாகித்
துனியொடு வேதா வைகுந் தொன்முறை யவையை நண்ணி
அனையவன் கழன்முன் றாழூஉ அளப்பில வழுத்தி நின்றான். 40
450 நிற்றலும் மகவான் றன்னை நீடருள் புரிந்து நோக்கிப்
பொற்றனிக் கமல மேய புங்கவர் முதல்வன் வானோர்
கொற்றவ வந்த தென்னை கூறுதி யென்ன லோடுஞ்
சொற்றனன் சூர பன்மன் செய்திடுந் துன்ப மெல்லாம். 41
451 வெய்யதோர் சூரன் செய்கை விளம்பியே முனிவர்க் கீசன்
ஐயமி லுணர்வு காட்டி யமர்வது முரைத்துத் தான்பின்
செய்யுறு தவங்கண் டன்னான் அருளிய திறனுஞ் செப்பி
உய்வதோர் பரிச தென்னோ உம்பரும் யானு மென்றான். 42
452 என்றலும் மலரோன் கேளா எவர்க்குமே லாகு மீசன்
ஒன்றிய வருளி னோனும் உற்றவர்க் குதவு வோனும்
அன்றியும் முறைசெய் வோனு மாதலின் முனிபோல் வௌ¢ளிக்
குன்றிடை யெம்மை யாளுங் குறிப்பின்வீற் றிருந்தா னன்றே. 43
453 செங்கணமா றானும் நானுந் தேடுதற் கரிதாய் நின்ற
எங்கடம் பிராற்கு மேலா எண்ணவோர் தேவு முண்டோ
அங்கவன் ஞான போதம் அறிவருக் குணர்த்தி வைகல்
நங்குறை முழுது மாற்றும் நல்லரு ளாகு மன்றே. 44
454 படமர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பகவனா ருயிர்க் ளெல்லாம்
அடுவதும் வருத்தந் தீர்க்கு மாரரு ளான வாபோல்
கொடியவெஞ் சூரன் றன்னைக் கொண்டேமக் கலக்கண் செய்கை
விடலரும் பவப்பே றார்த்தி வீடருள் கருணை யன்றே. 45
455 பெற்றிடுங் குரவ ரானோர் பிள்ளைகள் தம்பால் நோயொன்
றுற்றிடிற் பிறரைக் கொண்டும் உறுதுயர் செய்து தீர்ப்பார்
மற்றவர் தம்பா லன்போ வன்கணோ அதுபோல் நம்பாற்
பற்றிய பவங்கள் தீர்ப்பான் பரமனு மிவைகள் செய்தான். 46
456 தெருமரு கின்ற நம்பாற் றீங்கெலாம் நீங்கு மெல்லை
ஒருசிறி தணுகிற் றாகு மாதலால் உணர்வின் மேலோன்
பரிவொடு நின்பால் வந்து பரிசிவை யருளிப் போனான்
இருவினைப் பௌவ வேலை ஏறினம் போலு மன்றே. 47
457 ஆதலின் இறைவ னேமே லருள்செயும் அதற்கி யாமுந்
தீதற முயலு மாறு சிறிதுள திவற்றை மாயோற்
கோதினம் வேண்டுஞ் செய்கை யொல்லையிற் செய்து மென்னா
ஏதமில் கமலப் புத்தேள் இருக்கைவிட் டெழுந்தா னன்றே. 48
458 வேறு
அன்ன காலை யதுநன்று நன்றெனாத்
துன்னு வானவர் சூழலொ டிந்திரன்
பின்ன ராகப் பெயர்ந்துடன் வந்திடச்
சென்னி நான்கினன் செல்லுதல்மேயினான். 49
459 ஞாலம் யாவையும் நல்கிய புங்கவன்
வாலி தாந்தன் மனோவதி நீங்குறா
மேலை வைகுந்த மேன்னும் வியனகர்
ஆல யத்தின் அகன்கடை யேகினான். 50
460 அங்க வெல்லை யதுகண்டு நேமியுஞ்
சங்கு மேந்திய தானையங் காவலன்
செங்கண் மாயன்முன் சென்றுவிண் ணோருடன்
பங்க யத்தன் படர்ந்தது செப்பினான். 51
461 பணில மேந்திய பண்ணவன் அன்னரைக்
கொணர்தி யாலெனக் கூறி விடுத்துழி
இணையில் காவல னுய்த்திட இந்திரன்
கணமொ டெகினன் காசினி நல்கியோன். 52
462 பொருவில் மாமுனி புங்கவர் போற்றுதன்
னுருவு கொண்ட வுலப்பறு கண்ணர்கள்
மரபி னேத்த மணிப்பணிப் பீடமேல்
அரியி ருந்த அவைக்களம் நண்ணினான். 53
463 அன்ன மூர்தி அமருல காளுறும்
மன்ன னோடுமவ் வானவர் தம்மொடும்
பன்ன காசனப் பங்கயக் கண்ணவன்
பொன்னின் மாணடி போற்றி வணங்கினான். 54
464 தரைய ளந்திடு தாளினன் அவ்வழிக்
கருணை செய்துதன் காதல னாகிய
பிரம னுக்கொரு பீடிகை பெற்றியால்
அருளி யங்கண் அவனை இருத்தினான். 55
465 குல்லை மாமுடிக் கொண்டவன் அத்துனை
அல்லி மாம லரண்ணலை நோக்குறீஇ
ஒல்லும் நின்விதி யூறில தாகியே
செல்லு கின்றகொல் என்றலுஞ் செப்புவான். 56
466 கனகன் அச்சுறக் கந்திடை வந்தெழும்
அனக இத்திறங் கேட்க அறிவுடைச்
சனகன் முற்படு தாபதர் நால்வரும்
எனக ருத்திடை முற்பக லெய்தினார். 57
467 அறிவின் மிக்க அனையரை நோக்கியான்
பெறுவ தாமிப் பெருந்தொழி லாற்றியீண்
டுறுதி ரென்ன உளத்தது கொண்டிலர்
முறுவல் செய்து மொழிந்தனர் இவ்வுரை. 58
468 பாச வன்சிறைப் பட்டுப் படைப்பெனப்
பேச லுற்ற பெருந்தளை பூணலம்
ஈசன் மாணடி யெய்துதும் யாமெனா
மாசில் காட்சியர் வல்விரைந் தேகினார். 59
469 மாத வத்தினை மைந்தர்க ளாற்றலும்
ஆதி நாயகன் அவ்வுழி வந்துமக்
கேது வேண்டிய தென்றலு மெண்ணிலா
வேத வுண்மை விளம்புதி யாலென்றார். 60
470 என்ற லோடும் இறையவன் வௌ¢ளியங்
குன்ற மீதுதென் கோட்டிடை நிற்புறும்
ஒன்றொ ரானிழல் உற்று மறையெலாம்
நன்று ணர்த்திட நால்வருந் தேர்ந்தனர். 61
471 முந்தை வேத முழுது முணர்த்தியே
எந்தை யேக இருநிலம் போந்துதஞ்
சிந்தை யொன்றும் திறனரி தாதலின்
நொந்து பின்னரும் நோற்றலை மேயினார். 62
472 பின்னும் மைந்தர் பெருந்தவ மாற்றியே
தொன்ன லம்பெறு தூய வுளத்தராய்
என்னை யாளுடை யீச னருளினால்
மன்னும் வௌ¢ளி வரையிடை யேகினார். 63
473 ஏகல் பெற்றிடு மக்கட் கினிதுளம்
பாக முற்ற பரிசுணர்ந் தெம்பிரான்
ஆக மத்தின் அரும்பதம் மூன்றையும்
ஓகை பற்றி யுணர்வகை கூறியே. 64
474 கூனன் மாமதிக் கோடு மிலைச்சிய
வான நாயகன் மற்றவர் காண்டக
ஞான போதம் நவிலருந் தன்மையால்
மோன மேய முதற்குறி காட்டினான். 65
475 அந்த வெல்லை யரனருள் கண்டுதம்
புந்தி யொன்றியப் புங்கவன் தாள்மலர்
சிந்தை செய்து செயலற்று வைகினார்
முந்தி யாப்புறு முத்தளை மூட்டற. 66
476 வேத நாயகன் மெய்த்தவர்க் கோர்கணம்
போத யோகின் பொருண்மையைக் காட்டுழி
ஓத லாகும் உகம்பல சென்றன
சீத வானதி சேர்ந்ததொன் னாளினே. 67
477 அன்னை தன்னை அகன்றரன் யோகிபோல்
என்ன துஞ்செய லின்றி யிருத்தலான்
முன்னை ஆண்பெண் முயக்கம தின்மையாய்
மன்னு யிர்த்தொகை மல்கலின் றாயதே. 68
478 நவிறல் என்னினி ஞாலம் விசும்புளார்
இவறு காமப் புணர்ச்சிய தின்றியே
கவறல் கொண்டு கலங்கஞ ரெய்தினார்
தவறல் கொண்டது நல்குந் தனிச்செயல். 69
479 நல்கல் பெற்ற தமியனும் நாமகட்
புல்கல் பெற்ற புணர்ச்சியின் றாகியே
அல்கல் ¦பிறற அருந்தவ யோகரின்
ஒல்கல் பெற்றனன் உண்மையி தாகுமால். 70
480 நிற்க இங்கிது நித்தன்வ ரத்தினால்
ஒற்க மில்வள னுண்டிடு வெய்யசூர்
எற்கும் நித்தலு மேவலொன் றிட்டனன்
சொற்க நாட்டில் துயரினை நாட்டினான். 71
481 தேசு நீங்குறு தேவரை ஈண்டுள
வாச வன்றனை மாதிரத் தோர்களைப்
பாச னத்தொடு பற்றினன் நித்தலுங்
கூச லின்றிக்குற் றேவல்கொண் டானரோ. 72
482 நிறைபு ரிந்த நிலவினை வாளரா
மறைபு ரிந்தென வானகத் தோருடன்
இறைபு ரிந்தவிவ் விந்திரன் மைந்தனைச்
சிறைபு ரிந்தனன் தீத்தொழி லாற்றியே. 73
483 நிரந்த பல்லுயிர் தங்கட்கு நித்தலும்
அரந்தை மல்க அறிகிலன் போலவே
இருந்த னன்சிவன் என்னினிச் செய்வது
விரைந்து கூறுதி யென்று விளம்பினான். 74
484 அரிய தத்துவம் ஐயைந்தின் பேதமும்
மரபின் நாடினர் வாலுணர் வெய்திய
திருவி னாயகன் செங்கம லந்திகழ்
பிரமன் மாமுகம் நோக்கினன் பேசுவான். 75
485 வேறு
ஆவிக ளனைத்து மாகி அருவமா யுருவ மாகி
மூவகை யியற்கைத் தான மூலகா ரணம் தாகுந்
தேவர்க டேவன் யோகின் செயல்முறை கா மென்னில்
ஏவர்கள் காமங் கன்றித் தொன்மைபோ லிருக்கும் நீரார். 76
486 ஊழ்வினை நெறியால் முன்ன மொருபெரு வேள்வி யாற்றித்
தாழ்வினை யடைந்த தக்கன் றன்புடை யிருந்தோர் தம்பாற்
சூழ்வினை யெச்ச முற்றும் அருத்தியே தொலைத்துத் தொல்லை
வாழ்வினை யருள நாதன் மனத்திடை நினைந்தா னன்றே. 77
487 சூரெனு மவுணற் காற்றல் புரிந்ததுஞ் சுரர்கள் யாருஞ்
சார்வருந் திருத்தால் ஈசன் தவத்தருக் குணர்வு காட்டி
ஆருயிர் எவைக்கு மின்ன லாக்கிய வாறுந் தூக்கிற்
பேரருள் முறையே யன்றிப் பிறிதொரு செயலு மன்றால். 78
488 முனிவருக் குணர்வு காட்டும் மோனத்தை முதல்வன் நீங்கிப்
பனிவரை அணங்கை மேவில் படைப்பயன முற்றும் அன்னார்க்
கினியொரு குமரன் தோன்றில் சூர்கிளை யெனைத்தும் பொன்றுந்
துனியுறும் உலக மெல்லாந் தொன்மைபோ லுய்யு மாதோ. 79
489 அத்திற முற்று மாறொன் றறைகுவன் அகிலந் தன்னில்
எத்திறத் தருமால் கொள் வெய்திடுங் காமன் றன்னை
உய்த்திடின் முனிவர் தங்கட் குணர்வுசெய் மோனம் நீங்கிச்
சத்தியை மணந்து சேயைத் தந்திடு மெந்தை யென்றான். 80
490 பதுமபீ டிகையோ னன் பரிசுதேர்ந் துவகை யெய்தி
இதுசெயல் முறையே எந்தாய் ஏற்றன புகன்றா யென்ன
அதுபொழு தவனை நோக்கி அச்சுதன் அமலன் றன்பால்
மதனனை விளித்து வேண்டி விடுத்திநீ வல்லை யென்றான். 81
491 என்னலும் மலரோ னுள்ளத் திசைவுகொண் டெழுந்து மாயன்
பொன்னடி வணக்கஞ் செய்து விடைகொடு புலவ ரோடும்
மன்னொடு மங்கண் நீங்கி மனோவதி அதன்பாற் சென்று
தன்னக ரடைந்து கஞ்சத் தவிசின்வீற் றிருந்தா னன்றே. 82
ஆகத் திருவிருத்தம் - 491.
4. காமதகனப் படலம் (492 - 601)

492 இந்திரன் வானவர் ஈட்டமொ டேகி
முந்துறு கஞ்ச முகட்டிடை யுற்றோன்
ஐந்திற னாகிய ஆசுக வில்வேள்
வந்திடு மாறு மனத்தில் நினைந்தான். 1
493 நினைந்திடு கின்றுழி நீனிற மாயோன்
முனந்தரு கின்ற முரண்டகு வில்வேள்
மனந்தனில் உன்னும் மலர்ப்பக வன்முன்
இனந்தரு சூழலொ டிம்மென வந்தான் 2
494 மாமறை யண்ணல்முன் வந்து பராவித்
தாமரை நேர்தரு தாடொழு தென்னை
நீமன மீது நினைந்ததெ னென்னாக்
காமன் வினாவ அயன்கழ றுற்றான். 3
495 கங்கை மிலைச்சிய கணணுதல் வெற்பின்
மங்கயை மேவநின் வாளிக மூவி
அங்குறை மோனம் அகற்றினை யின்னே
னுங்கள் பொருட்டினில் ஏகுதி யென்றான். 4
496 வேதனில் வாறு விளம்பிய கூற்றாங்
தீதுறு பொங்கழல் செய்யவள் சேயோன்
காதிடை யேநெறி யார்ககடி திற்போய்
ஏதமி லுள்ள மெரித்ததை யன்றே. 5
497 கிட்டி யரன்செயல் கேடுசெ யென்னுங்
கட்டுரை யேவரு காமனு ளெங்குஞ்
சுட்ட தெனிற்பிறை சூடிய வன்மெய்
அட்டிடு கின்றதும் அற்புத மாமோ. 6
498 இத்திற மாமல ரேந்தல் இயம்பக்
கைத்துணை கொண்டிரு கன்னமும் வல்லே
பொத்தியி னைந்து புராந்தகன் நாமஞ்
சித்தச வேளுரை செய்தன னம்மா. 7
499 ஈட்டுறு பல்பவ மெய்துவ தோர்சொற்
கேட்டன னென்று கிலேசம தாகி
வாட்டிய மென்மலர் போல்அணி மாழ்கிப்
பூட்டுவில் அண்ணல் புகன்றிடு கின்றான். 8
500 வேறு
வன்கண் ணருமா சறுகாட் சியர்பால்
நன்கண் ணுறினுய் யுநலம் புகல்வார்
உன்கண் ணுறின் இத் தவறோ தினையால்
என்கண் ணடிகட் கிலையோ அருளே. 9
501 வன்னப் புலிமங் கையைமா மலர்மேற்
பொன்னைப் பிறரைப் புணர்வுற் றிடுவான்
கன்னற் சிலைபூங் கணைகொண் டமர்செய்
தென்னத் தனைவென் றிசைகொண் டிலனோ. 10
502 வௌ¢ளைக் கமலத் தியைமெய் யுறவுந்
தௌ¢ளுற் றணிசெய் ததிலோத் தமைபால்
உள்ளப் புணர்வுற் றிடவும் முனையான்
பிள்ளைச் சமர்செய் திசைபெற் றிலனோ. 11
503 சீர்பெற் றிடுசெந் திருவைத் திருமால்
மார்பிற் குடியா யுறவைத் திலனோ
கார்பெற் றவிழிக் கலைமங் கையையுன்
ஏற்பெற் றிடுநா விலிருத் திலனோ. 12
504 தண்ணின் றகுழற் சசியென் றுரைசெய்
பெண்ணின் றலையுற் றிடுபெற் றியலால்
விண்ணின் தலைவற் குளமெய்ம் முழுதும
கண்ணென் றிடுபல் குறிகண் டிலனோ. 13
505 விசையுற் றிடுசெங் கதிர்மே லவர்கீழ்த்
திசையுற் றவராங் கொருசே யிழைபோல்
இசையற் றிடுபா கனிடைப் புணரா
வசையுற் றிடுபான் மைமயக் கிலனோ. 14
506 கதனத் தொடுவந் துகலந் தவர்பால்
இதநட் புறுமா மதியென் கணையால்
மதனத் தொடுதே சிகன்மா தையுறாப்
புதனைத் தருபான் மைபுணர்த் திலனோ. 15
507 முற்றே தின்மறைத் தொகைமூ தறிவால்
கற்றே துமுணர்ந் திடுகாட் சிபெறு
நற்றே வர்கள்யா ரையுநா ரியர்தங்
குற்றே வல்செயும் படிகூட் டிலனோ. 16
508 மறைதே ரும்வசிட் டன்மரீ சிமிகக்
குறிதா முனியத் திரிகோ தமன்நல்
அறிவால் உயர்கா சிபனா தியராந்
துறவோர் தமதாற் றல்தொலைத் திலனோ. 17
509 மன்னான் மரபுற் றிடுமா னவரைப்
பின்னா கியமும் மைகொள்பே தகரை
மின்னார் கண்மயக் கினில்வீட் டிலனோ
என்னா ணைகடந் தவர்யா ருளரே. 18
510 அறைபெற் றிடுமித் திறமா னவெலாம்
முறைபெற் றிடுமென் னின்முடிந் திடுமோ
பிறைபெற் றிடுகின் றபெருஞ் சடையெம்
மிறைபெற் றிடுசத் தியியற் றிடுமே. 19
511 மாமே முதலா கியவா னவர்தம்
பாலே அடல்வா கைபடைப் பதலால்
மேலே நதிசூ டியமே லவன்மேற்
கோலே வினன்வென் றிடல்கூ டுமதோ. 20
512 ஐதா கியசீர் கொடவன் முறைசெய்
நொய்தா னவர்போ லநுவன் றனையால்
வெய்தா மழலா கியமே லவன்மேல்
எய்தா லுமென்வா ளிகளெய் திடுமோ. 21
513 கையுந் நகையுங் கதிரார் விழியும்
மெய்யுந் தழலாம் விமலன் றனையான்
எய்யு படிசென் றிடினிவ் வுயிர்கொண்
டுய்யுந் திறமும் உளதோ உரையாய். 22
514 பற்றோ டிகலற் றபரம் பொருளை
எற்றோ மயல்செய் குவதீ சனையும்
மற்றோ ரெனநின் னின்மதித் தனையால்
சற்றோ அவனாற் றல்தவிர்த் திடவே. 23
515 சூறா வளிவை கியசூ ழலின்வாய்
ஏறா வொருபூ ளையெதிர்ந் துளதேல்
நீறா டியமெய் யுடைநின் மலன்மேல்
வீறாய் வினையேன் பொரமே வுவனே. 24
516 ஆறுற் றிடுசெஞ் சடையண் ணலுடன்
மாறுற் றவருண் டெனின்மற் றவர்தாம்
ஊறுற் றனரல் லதுளத் துயர்கொண்
டீறுற் றனரல் லதிருந் துளர்யார். 25
517 இந்நா ரணணா தியர்யா வர்களும்
அந்நா ளமலன் பணியாற் றிடலும்
அன்னா வவர்சிந் தனைமொய்ந் நகையால்
ஒன்னார் புரமட் டதுணர்ந் திலையோ. 26
518 எந்தாய் அருளென் றொரிளங் குமரன்
வந்தா தியையேத் தலும்வை துசினக்
கொந்தா ரழல்போல் வருகூற் றுவனை
அந்தாள் கொடுதைத் ததறிந் திலையோ. 27
519 முன்னைப் பகல்நீ யுமுகுந் தனுமாய்ப்
பன்னகற் கரிதா யபரம் பொருள்யாம்
என்னச் சினெய் தியிகழந் தவுனைச்
சென்னித் தலைகொண் டதுதேர் கிலையோ. 28
520 அடன்மே வுசலந் தரனா தியராய்ப
படிமே லுளதோர் ப·றா னவர்தாம்
முடிவார் அரனோ டுமுரண் டிடலுங்
கெடுமா றுபணர்த் ததுகேட் டிலையோ. 29
521 வீடெய் துறுநின் மகன்வேள் விநிலத்
தூடெய்தினர்யா வருமொப் பில்அரன்
மாடெய் தியவீ ரனின்மா னமொரீஇப்
பாடெய் தியபுன் செயல்பார்த் திலையோ. 30
522 அண்டா தவகந் தையொடா ழியின்வாய்
விண்டா னவரச் சுறமே வுவிடம்
உண்டான் நிகழ்கங் கையையோ ரணுவிற்
கொண்டான் அவன்வன் மைகுறிக் கிலையோ. 31
523 தரியா வுளமாற் கொடுதன் னிகழும்
அரியோ டுகைம்மா வையடற் புலியை
உரியா மிசைபோல் வையுடுக் கையெனப்
பரியா அரனுற் றதுபார்த் திலையோ. 32
524 ஓரார் தனதுண் மையையுள் ளமிசை
யாரா யினுமாற் றவகந் தைபெறின்
வாரா அவர்தம் வலிமாற் றிடுமால்
தேராய் கொல்பரஞ் சுடர்செய் கையதே. 33
525 இறுகின் றகடைப் பகலீ றிலதோர்
கறைதுன் றுமிடற் றிறைகண் ணினும்வீழ
பொறியொன் றதனாற் பொடிபட் டிடுநீ
அறிகின் றிலையோ அகிலங் களுமே. 34
526 இப்பெற் றியனா கியவீ சனையென்
கைப்பற் றியவிற் கொடுகந் தமலர்
அப்பிற் பொருகின் றிலன்ஆ ருயிர்மேல்
மெய்ப்பற் றிலரிச் செயல்வேண் டுவரே. 35
527 மேனா ளகிலந் தரமெல் லியலா
ஆனா வருடன் னையளித் தொருபால்
தானா கவிருத் தியதற் பரனை
நானா மயல்செய் வதுநன் றிதுவே. 36
528 வேறு
என்னா மதவேள் இசையா மறுத்திடலும்
பொன்னார் கமலப் பொகுட்டுத் தலைவந்த
மன்னான வேதா மனக்கவலை கொண்டுசில்போ
துன்னா நெடிதே உயிரா வுரைக்கின்றான். 37
529 வெண்மை யறிவால் தமைவியக்கும் விண்ணவர்பால்
அண்மை யிலனாகும் அண்ணலியல் கூறினையால்
உண்மை யிதுவாம் உவனைப் பொருவதுவும்
எண்மை யதுவோ எவர்க்கு மரிதன்றோ. 38
530 அன்ன பரிசே யெனினும் அடைந்தோர்தம்
இன்ன லகற்று மிறையருளால் இக்கருமம்
முன்னின் முடியும் ஒழிந்தோரால் முற்றுவதோ
முன்னின் இதற்கு முதற்கா ரணம்நீகாண். 39
531 எல்லார் செயலும் இறைவன் இயற்றுவதே
அல்லா திலையோ ரணுவுமசை யாதெவையும்
நில்லா தருளின்றேல் நீயின் றவன்பாலிற்
செல்லாய் உனது செயலுமவன் செய்கையதே. 40
532 செம்மாந்து தற்புகழுந் தேவர்குழு வும்மருள
எம்மான் பிறன்போ லிருந்தோர் துரும்புநிறீஇ
அம்மாதன் செய்கை யனைத்துமெனக் காட்டினனே
நம்மாலும் முற்றுஞ் சிலவென்கை நாணன்றோ. 41
533 பாடு திகழ்பாவை பல்லுயிரு மல்லனவும்
ஆடல்புரி விப்பான் அருவுருவாய் நின்றபரன்
நாடில் அவனையின்றி நம்மாலொன் றாகவற்றோ
ஏட இதனிலைமை இந்நாளு மோர்ந்திலையோ. 42
534 கையம்பு பூட்டிக் கருப்புச் சிலைகோட்டி
எய்யும் படிவழிக் கொண்டேகாய் இறுதியிலா
ஐயன் றனைநீ யதுவும் அவனருள் காண்
மெய்யங் கதற்கேது மேனாளே கண்டனம்யாம். 43
535 ஈங்கிதுவு மன்றி யெவரேனுந் தம்மடங்காத்
தீங்கு பெறினுதவி செய்யென் றிரந்திடலும்
ஆங்கொருவன் செய்யா ததுமருத்துத் தன்னுயிரைத்
தாங்கல் உலக நடைதனக்குத் தக்கதுவோ. 44
536 என்னானு மோருதவி யாதொருவன் யார்க்கெனினுந்
தன்னால் முடிவதெனில் தானே முடித்தல்தலை
சொன்னால் முடித்த லிடையாகுஞ் சொல்லுகினும்
பன்னாள் மறுத்துப் புரிதல்கடைப் பான்மையதே. 45
537 ஏவ ரெனினும் இடருற் றனராகி
ஓவில் குறையொன் றுளரே லதுமுடித்தற்
காவி விடினும் அறனே மறுத்துளரேற்
பாவம் அலது பழியும் ஒழியாதே. 46
538 உய்கை பொருளா வொருவர்க்கு மோருதவி
செய்கை யிலனேற் சிறியோன் கழித்தபகல்
வைகல் அதுவோ வறிதே அவன்வாழ்க்கை
பொய்கை மலர்ந்தகொட்டி போலும் பொலிந்துளதே. 47
539 அந்நா ரணனோ டமர்முற் றியமுனியைப்
பொன்£ டருளும் புலவோ ரிறையிரப்ப
வென்னாரு மென்பு விருத்திரனுக் காவுதவித்
தன்னா ருயிர்விட்ட தன்மைதனைக் கேட்டிலையோ. 48
540 மேலொன் றுளதோ விளம்ப எவரேவர்க்கும்
மூலந் தலைதெரிய முன்னோன் கடலெழுந்த
ஆலந் தனையுண் டமராக் கமுதளித்த
சீலந் தனைநீ சிறிதுந் தௌ¤ந்லையோ. 49
541 தேக்குஞ் சலதியிடைத் தீப்போ லெழுந்தவிடந்
தாக்கும் பொழுது தளரே லெனவுரையா
ஊக்கங் கொடுமா லொருகணநின் றேநம்மைக்
காக்கும் படிக்குக் கறுத்தசெயல் கண்டிலையோ. 50
542 ஆரா யினுமொருவர் அன்பிற் றலைப்பட்டுப்
பேரா தரத்தாற் பிறர்க்குதவி செய்வாரேல்
தீராத வெந்துயரிற் சேர்தலை மாய்தலிவை
பாரார் புகழே பயனென்று கொள்வாரே. 51
543 சூரந் தனில்வலிசேர் சூரபன்மன் ஏவலின்யாம்
ஆருந் துயர்கொண் டழுங்கினோம் அன்ன தினித்
தீரும் படிக்குச் சிவனொருசே யைத்தருவான்
ஓரைம் படைசெலுத்த உன்மையாம் வேண்டினமே. 52
544 ஆதலினால் எங்கள் அலக்கணகற் றும்பொருட்டுச்
சாதல் வரினுந் தவறோ புகழ்செய்வார்
ஏது வரினு மெதிர்செல்வார் எம்பணியிற்
போதி யினிமாறு புகலே லெனவுரைத்தான். 53
545 வேறு
பங்க யப்பொ குட்டி ருந்த பகவன் ஈது புகறலும்
ஐங்க ணைக்க ரத்தி னோன ரந்தை யெய்தி யாதியாம்
புங்க வற்கு மாறு கொண்டு பொருகி லேன்இ தன்றியே
இங்கெ னக்க டுத்த தொன்றி யம்பு செய்வல் என்றனன். 54
546 என்னும் வேலை அமர ரோடி ருந்த வேதன் முனிவுறா
நன்ன யந்த ழீஇயு ரைத்த நமது சொன்ம றுத்தியால்
அன்ன பான்மை புரியின் உய்தி அல்ல தேலு னக்கியாம்
துன்னு சாப மிடுதும் யாது துணிவு செலல்லு கென்றனன். 55
547 வெய்ய சாப மிடுது மென்று வெகுளி யால்மொ ழிந்தகேட்
டைய மேனி மதன வேள் அழுங்கி வெய்து யிர்த்தினிச்
செய்ய லாவ தென்னெ னத்தே ரிந்து சிந்தை தேற்றியே
வைய கம்ப டைத்த அண்ணல் வதன நோக்கி யுரைசெய்வான். 56
548 கேளி தொன்று ரைப்பல் வேத கேடு சூழும் நினதுவாய்ச்
சூளின் மேலை யியல்ப கன்று துன்பு ழந்து படுதலிற்
காள கண்டன் முன்பு சென்று கடிய வெய்ய கணைகடூஉய்
மாளி னுஞ்சி றந்த தம்ம மற்றும் உய்ய லாகுமே. 57
549 செற்ற நீர்மை கொள்ளல் ஐய செஞ்ச டைப்பி ரானிடத்
திற்றை வைகல் அமரி யற்ற ஏகு வேனி யானெனக்
கொற்ற வேளு ரைத்த லுங்கு ளிர்ந்த பூவி ருக்கைமேல்
உற்ற போதன் மகிழ்சி றந்து ளங்க ளித்து மொழிகுவான். 58
550 பணிந்த சொல்ல னாகி நாம்ப ணித்த வாபு ரிந்திடத்
துணிந்த வாறு நன்று நன்று சூலி பாலி னுனைவிடாத்
தணந்தி டேந்தொ டர்ந்து பின்பு சார்து மஞ்சல் போகெனா
உணர்ந்து கூறி மார வேளை ஓவி லன்பொ டேவினான். 59
551 ஏவு காலை மதனை வேள்வி யிறைதெ ரிந்து மைந்தயான்
தேவ ரோடு துயரு ழந்து சிறுமை பெற்ற தறிதியே
ஓவில் வாழ்வு தகுதி யென்னின் உமைம டந்தை தனையரன்
மேவு மாறு புரிகெ னாவி ரைந்து செல்ல நல்கினான். 60
552 நல்க லுங்க ரங்கள் கூப்பி நான்மு கத்தன் உலகொரீஇ
அல்கு தன்பு ரத்து நண்ணி அவ்வி யற்கை கூறியே
ஒல்கு தேவி யைத்தெ ளித்தொ ருப்ப படுத்தி நறியதேன்
பில்கு வாளி யிட்ட தூணி பின்னி யாத்தி றுக்கினான். 61
553 கயக்க ணின்ற பூவின் மிக்க காம காண்டங் கன்னல்வில்
இயக்க மான பார வில்லெ டுத்து மொய்மபி லேந்தியே
தயக்க முற்று லாய செய்ய தண்ணென் மாவி ளந்தளிர்
வயக்க டுங்கண் வாள மொன்று மாம ருங்கு வைத்தரோ. 62
554 கோகி லங்க ளான வுங்கு ழாங்கொள் வேலை யானவுங்
காக ளங்கண் முரச மாய்க்க றங்க ஓதம் யாவதுஞ்
சீக ரங்க ளாய சைந்து செல்ல மீன கேதன
மாக வும்ப ருலவ வெண்ம திக்கு டைநி ழற்றவே. 63
555 பொருவில் கிள்ளை யென்னு மாக்கள் பூண்ட தென்றல் வையமேல்
இரதி யோடு மேறி வேளி ருந்த தொல்லை யுலகினை
அரித கன்று குறிகள் வெய்ய அளவை யின்றி நிகழவே
பரமன் வைகு கயிலை யம்ப ருப்ப தத்தை யணுகினான். 64
556 கயிலை கண்டு தொழுது தேரி ழிந்து காம வேள்தனக்
கயலில் வந்த பரிச னத்தை அவண்நி றுத்தி மாதுடன்
பயிலும் வில்லும் வாளி யும்ப £த்து வல்லி யத்தினைத்
துயிலு ணர்த்தும் மான்எ னத்து ணிந்து போதல் மேயினான். 65
557 கூறு லாவு மதிமி லைந்த குழகன் வைகு கயிலைமேல்
கூறி யேத னாது கையி ருந்த கார்மு கம்வளைஇ
மாறில் ஏவு பூட்டி யங்கண் வைகு புள்ளும் மாக்களும்
ஊறி லாதி ருந்த காம முன்னு வித்தல் முன்னினான். 66
558 பொருலில் காம னின்ன தன்மை புந்தி கொண்டு மற்றவண்
விரவு புள்ளின் மீதி னும்வி லங்கின் மீதி னும்மலர்ச்
சரமெ லாம்வி டுப்ப வாதி தனது மந்தி ரத்துமுன்
அருளி னோடி ருந்த நந்தி யடிகள் அன்ன கண்டரோ. 67
559 கொம்மெ னச்சி னம்பு ரிந்து கொடிய பூசல் மதனனால்
தம்மி யற்கை யாமி தம்ம சரத மென்று நினைவுறா
உம்மெ னத்தெ ழித்து ரப்ப வொலிகொள் புள்ளி லங்கின்மேல்
வெம்மை யிற்செ லாது மாரன் விசிகம் விண்ணின் நின்றவே. 68
560 நிற்ற லோடு மவ்வி யற்கை நின்று நோக்கி நெடியவேள்
கொற்ற நீடு சூர லொன்று கொண்டு கோபு ரத்தலைத்
தெற்றி மேலி ருந்த நந்தி தேவர் காப்பும் ஆணையும்
முற்று நோக்கி நெடிது யிர்த்து ளந்து ளங்கி விம்மினான். 69
561 விம்மி நந்தி தேவர் முன்வி ரைந்து சென்று தாழ்ந்தெழூஉச்
செம்மை செய்க ருத்த னாய்த்தி கழ்ந்து போற்றெ டுத்தலும்
இம்ம லைக்கண் வந்த தென்னை யெனஅ யன்பு ணர்ப்பெலாம்
மெய்ம்மை யாவு ணர்த்த லும்வி னாவி ஈது ளங்கொள்வான். 70
562 வேத னாதி யான தேவர் விழும நோய கன்றிடும்
ஏது வால்வி டுத்து ளார்க ளிவனை யீசன் யோகுறும்
போதில் யாவர் வருகி னும்பு காது செய்தி மதனவேள்
சாத லெய்து வான்வ ரின்த டேலெ னாவி யம்பினான். 71
563 புன்மை யாம்ப கூத்த டிந்து புரையில் வேள்வி யாற்றியே
தொன்மை போவெ ழுப்பு மாறு கருதி சோற்ற வாறுபோல்
மன்ம தன்ற னைப்ப டுத்து மாதை வேட்டு மற்றதன்
பின்மு றைக்கண் நல்க எம்பி ரானி னைந்த னன்கொலாம். 72
564 ஆகை யாலி தருள தேயி வன்வ ரத்தும் ஆணையென்
றோகை யாலு ணர்ந்து வேளை நோக்கி உம்ப ராகுலம்
போகு மாறி யற்றல் செய்த பொருவி லாத கருணைசேர்
ஏக நாய கன்றன் முன்ன ரேகல் வேண்டு மோவென்றான். 73
565 நந்தி தேவன் இனைய வாறு நவில வேயு ணர்ந்துவேள்
எந்தை கேட்டி யாலி தொன்றெ னக்கொ ரீறு குறுகினும்
அந்தி வேணி யண்ணல் முன்னம் அணுகு மாற மைந்திவண்
வந்த னன்ன தற்கி யைந்த வகைமை நல்கு வாயென. 74
566 இகலு மன்பு மிறையு யின்றி யெவ்வு யிர்க்கு முள்ளதோர்
புகுதி நாடி முறையி னைப்பு ரிந்து சேர்ப வர்க்குமேல்
தகுதி செய்து கருணை கூர்ச யம்பு முன்பு சார்தியேல்
மிகுதி கொண்ட மேலை வாய்தல் மேவி யேகு கென்றனன். 75
567 என்ற லுங்க ரங்கு வித்தி றைஞ்சி மார னேர்புறீஇ
நன்றி லங்கு வேத்தி ரக்கை நந்தி தேவர் விடைதரச்
சென்று மேலை வாயில் சார்ந்து தேவ தேவன் நீற்றழற்
குன்ற மென்ன மோன மோடி ருந்த வெல்லை குறுகினான். 76
568 வேறு
ஓருதனிச் சிம்புள் வேந்தன் உறைந்தது கண்ட சீயக்
குருளையின் அமலன் றன்னைக் கோலமால் புதல்வன் காணா
வெருவரு முளத்த னாகி வியர்த்துமெய் பனியா வுட்கிப்
பருவர லுழந்து கொண்ட படையொடுங் கடிதில் வீழ்ந்தான். 77
569 எழுதரு மதனா மேகம் இறைவனைக் கண்டே யஞ்சி
விழியிருண் மூடக் கோல வில்லிட்டு வியர்ப்பின் வாரி
மழைபட இடியார்ப் பெய்த மார்புமற் றதுவீழ் கின்ற
தொழின்முறை புதரங்க காட்டத் துளங்கிவீழ்ந் திட்ட தன்றே. 78
570 அஞ்சிவீழ் குற்ற மாரன் அறிவிலா தவச மாகத்
துஞ்சினன் கொல்லோ வென்னாத் துயருழந் தெடுத்துத் தேவி
கஞ்சநேர் கரத்திற் றாங்கிக் கடிவகை யுய்த்துத் தேற்ற
நெஞ்சமே லுணர்ச்சி கூட இனையவை நினைந்து நைவான். 79
571 முறுவலின் எயின்மூன் றட்ட முதல்வனைப் பொருதி யென்றே
நறைமலர் அயனு மேனைத் தேவரும் நாகர் கோனும்
உறுதுய ரகல இங்ஙன் உய்த்தனர் வினையேற் கின்னே
இறுதிவந் தணுகிற் றாகும் இதற்றுமோ ரைய முண்டோ. 80
572 எண்டகு குணத்தின் மேலாம் இறையவன் இருந்த வண்ணங்
கண்டலும் வெருவி யாவி காண்கிலன் அவனை யென்கைக்
கொண்டதோர் கணைகள் வாகை கொள்ளுமோ இனைய பான்மை
அண்டரும் அயனும் யாரு மறிகிலர் போலு மன்றே. 81
573 தாக்கினாற் வலிபெற் றுள்ள மருத்தின்னமுன் தனித்த தீபம்
போக்கினால் நிற்ப துண்டோ அனையது போலத் தேவர்
வாக்கினால் மனத்தா லெட்டா வள்ளன்மு னுய்த்தா ரன்னான்
நோக்கினால் இனிச்சில் போதின் நுண்பொடி யாவன் போலாம். 82
574 ஏமுற வுலக மெல்லா மீறுசெய் முதல்வன் றன்னைப்
பூமலர் கொண்டி யானே பொருகின்றேன் நகையீ தன்றே
ஆமிது விதியின் செய்கை யதனையார் கடக்க வல்லார்
தாமரை முதல்வற் கோனுந் தள்ளருந் தகைய தன்றே. 83
575 ஈங்கிவை யமலன் சூழ்ச்சி யாவதோ முடிவ தோரென்
தூங்கியான் கிடந்த லொல்லா துண்ணென வெழுந்து வில்லும்
வாங்கினன் சரமும் பூட்டி வல்லவா றிழைப்பன் ஐயன்
பாங்குற நின்று மேலே பட்டவா படுக வென்றான். 84
576 இனையன பலவு முன்னி யெழுந்துமா மதவே ளிட்ட
தனுவினை யெடுத்து வாங்கித் தண்மலர் விசிகம் பூட்டி
மனைவிதன் னகலாள் செல்ல மதிக்குறை தவழ்ந்த சென்னிப்
புனிதன தொருசார் போகிப் பொருவகை முயன்று நின்றான். 85
577 மாரவே ளீண்டு நிற்ப மனோவதி நகரின் மேய
ஆரண முதல்வன் றன்னை அமரர்கோன் தொழுது நோக்கிக்
காருறழ் கண்டன் றன்பாற் காமனை விடுத்தி யன்னான்
போரிய லுணர்வான் அங்கட் போதரல் வேண்டு மென்றான். 86
578 சதமகன் இனைய கூறத் தண்மலர்க் கடவு ணேராக்
கதுமென வெழுந்து வானோர் கணத்துட னனையன் போற்றப்
பொதிதரு கயிலை யந்தண் பொருப்பின்மே லொருசார் போகி
மதனியல் தெரிந்து முக்கண் வள்ளலை வழுத்தி நின்றார். 87
579 எறிதரு கணிச்சிச் செங்கை யீசன்மே லிலக்க நாடுங்
குறியினர் போல நின்ற கொடுந்தொழில் மாரன் றுஞ்சு
நெறியினர்க் கச்ச முண்டோ நினைத்தது முடிப்ப னென்னா
நறுமலர் வாளி ஐந்து நாதன்மேற் செல்ல விட்டான். 88
580 விட்டவெம் பகழி யைந்தும் வியத்தகு விமலன் மீது
பட்டலுஞ சிறிதே வேளைப் பார்த்தனன் பார்த்த லோடுங்
கட்டழல் பொதிந்த நெற்றிக் கண்ணது கடிதே காமற்
கட்டது கயிலை முற்றுஞ் சூழ்புகை பரவிற் றன்றே. 89
581 ஆலையஞ் சிலைவேள் ஆகம் அழல்படக் கயிலை யின்கண்
ஏலவெம் புகையுந் தீயு மெழுதரு மியற்கை நாடின்
மாலயன் முதலோர் யாரு மதித்துழி விரைந்து பாலின்
வேலையின் நடுவு தீய விடமெழுந் தனைய தம்மா. 90
582 செறிந்ததீப் புகையின் மாலை செல்லலுங் குணபால் வாய்தல்
உறைந்ததோர் நந்தி தேவன் ஒல்லையி லதனைப் பாரா
இறந்துபா டாயி னான்கொல் ஏகிய மதன னென்னா
அறிந்தரோ உடைந்தார்க்* கோதி யொருசெய லறைய லுற்றான்.
( பா-ம் - * அ¨நிதார்க் ) 91
583 நுண்ணிய வுணர்வின் மிக்கீர் நுமக்கிது புகல்வன் எங்கோன்
கண்ணுத லுமிழ்ந்த செந்தீக் காமனைப் பொடித்த தன்றால்
அண்ணலை யெய்வ னென்னா அனையவன் றுணிவிற் கூறித்
துண்ணென ஈண்டு வந்த செயற்கையே சுட்ட போலும். 92
584 இன்னினி மகிழ்நன் றுஞ்சு மியற்கையை யிரதி நாடி
வன்னிபெய் யலங்கல் போலாய் வயிறலைத் திரங்கி யெங்கோன்
தன்னைவந் திரப்ப வேளைத் தருகுவன் காண்டிர் அந்த
முன்னவன் அணுக்கட் காய முறைபுரி யருளா லென்றான். 93
585 ஐந்தொகை யாற்றின் மாடே யமலனை நினைந்து நோற்ற
நந்தியந் தேவன் இன்ன நவிறலு மவற்சூழ் கின்ற
அந்தமில் கணத்தோர் கேளா அகிலமுய் பொருட்டா லெங்கோன்
புந்திகொ ளருளின் செய்கை போற்றெடுத் தனரா யுற்றார். 94
586 வாவலங் கிள்ளை மான்றேர் மதன்புரி வினையா லன்னான்
வேவரப் புணர்த்து நோக்கி மிகைபடா தவன்சா ரான
தேவியை முடிக்கு மாற்றல் செய்திலன் இகல்பற் றின்றி
மூவரை விடுத்துத் தொன்னான முப்புரம் பொடித்த முன்னோன். 95
587 கண்ணழல் சுடுத லோடுங் காமவேள் யாக்கை முற்றுஞ்
சுண்ணம தாகி வீழத் துஞ்சினன் போய பின்னை
அண்ணலம் பகவன் தொல்லை யமைதியின் இருந்தா னெல்லாம்
எண்ணிநின் றியற்றும் எங்கோற் கினையதோ அரிது மாதோ. 96
588 பாடுறு கணவன் செய்கை பார்த்தலு மிரதி யுள்ளங்
கூடின துயரம் வீந்த கொண்டதொல் லுணர்ச்சி கண்ணீர்
ஓடின வியர்த்த மெய்மூக் குயிர்த்தன வொடுங்கிற் றாவி
வீடினள் இவளு மென்ன விரைந்துகீழ்த் தலத்தின் வீழ்ந்தாள். 97
589 சுரிதரு குடிஞை யாற்றிற் சுழித்தலைப் பட்ட மான்போல்
வருவரல் வாரி நாப்பட் படிந்துபற் றின்றிச் சோரும்
இரதிசில் பொழுகிற் பின்ன ரிறந்ததொல் லுணர்வு தன்பால்
வருதலும் மறித்துச் செங்கை வயிறலைத் திரங்க லுற்றாள். 98
590 செம்பதுமை திருக்குமரா தமியேனுக் காருயிரே திருமால் மைந்தா,
சம்பரனுக் கொருபகைவா கன்னல்வரிச் சிலைபிடித்த தடக்கை வீரா,
அம்பவளக் குன்றனைய சிவன்விழயால் வெந்துடல மழிவுற் றாயே,
உம்பர்கடம் விழி யெல்லா முறங்கிற்றோ அயனாரு முவப்புற் றாரோ. 99
591 முன்னானிற் புரமூன்று மட்டவன்மேற் பொரப்போதன் முறையோ வென்று,
சொன்னாலுங் கேட்டிலையே அமரர்பணி புரிவதுவே துணிந்திட் டாயே,
உன்னாகம் பொடியாகிப் போயினதே இதுகண்டும் உய்வா குண்டோ,
என்னவி யாகியநீ யிறந்தபின்னும் யான்றனியே யிருப்ப தேயோ. 100
592 மாறாகப் பரமன்விழி நின்னாற்ற லிலதாக மற்றுன் மெய்யும்,
நீறாக விண்டேல்லாம் நெருப்பாகக் கவலைவிண்ணோர் நெஞ்சத் தாக,
ஆறாத பெருந்துயர மெனக்காக எங்கொளித்தாய் அருவா யேனுங்,
கூறாயோ வறிந்திருந்தாய் என்கணவா யான்செய்த குறையுண் டோதான். 101
593 உம்பர்கடம் பாலேயோ இந்திரனார் பாலேயோ வுன்னை யுய்த்த,
செம்பதுமத் திசைமுகத்தோன் பாலேயோ அரன்செயலைச் சிதைப்ப னென்னா,
இம்பரிடை வல்விரைந்து வந்திடுநின் பாலேயோ ஈசன் கண்ணால்,
வெம்பாடியாய் நீயிறந்த இப்பழிதான் எவர்பாலின் மேவிற் றையோ. 102
594 வில்லான்முப் புரமெரித்த பரம்பொருள்யோ கந்தவிர்க்க வேண்டில் விண்ணோர்,
எல்லாரு மறந்தனரோ எண்கணவா நீயோதான் இலக்காய் நின்றாய்,
கொல்லாது போலவுனைக் கொன்றனரே என்னுயிர்க்குங் கொலைசூழ்ந் தாரே,
பொல்லாத பேர்க்குநன்றி செய்வது தம் முயிர்போகும் பொருட்டே யன்றோ. 103
595 என்னபவஞ் செய்தேனோ என்போல்வார் தமககென்ன இடர்செய் தேனோ,
முன்னையுள விதிப்பயனை யறிவேனோ இப்படியே முடிந்த தையோ,
கன்னல்வரிச் சிலைபிடித்த காவலவோ தமியேனைக் காத்தி டாயோ,
வன்னிவிழி யாவுடைய பெருமானை நோவதற்கு வழக்கொன் றுண்டோ. 104
596 பொன்செய்தார் முடிகாணேன் அழகொழுகுந் திருமுகத்துப் பொலிவு காணேன்,
மின்செய்பூ ணணிகுலவும் புயங்காணேன் அகன் மார்பின் மேன்மை காணேன்,
கொன்செய்பூங் கணைகாணேன் சிலைகாணேன் ஆடல்புரி கோலங் காணேன்,
என்செய்வேன் என் கணவா என்னையொழித் தெவ்விடத்தே யிருக்கின் றாயே. 105
597 அந்நாளி லழற்கடவுள் கரியாக வானவரோ டயன்மால் காணப்
பொன்னாரு மங்கலநாண் பூட்டியெனை மணஞ்செய்து புணர்ந்த காலை,
எந்நாளு மினியுன்னைப் பிரியலமென் றேவாய்மை யிசைத்தாய் வேனில்,
மன்னாவோ எனைத்தனியே விடடேகல் வழக்கோ சொல்லாய். 106
598 போவென்று வரவிட்ட தேரெலாம் பொடியாகிப் போனவுன்னை,
வாவென்று கடிதெழுப்ப மாட்டாரோ நின்றாதை வலியனென்பார்,
ஓவென்று நானிங்கே யாற்றிடவும் வந்திலனால் உறங்கினானோ,
வேவென்று நின்சிரத்தில் விதித்திருந்தால் அவரையெலாம் வெறுக்க லாமோ. 107
599 நேயமொடு மறைபயிலுந் திசைமுகனைப் புரந்தரனை நின்னைத் தந்த,
மாயவனை முனிவர்களை யாவரையும் நின்கணையான் மருட்டி வென்றாய்,
ஆயதுபோல் மதிமுடித்த பரமனையும் நினைந்திவ்வா றழிவுற் றாயே,
தீயழலின் விளக்கத்திற் படுகின்ற பதங்கத்தின் செயலி தன்றோ. 108
600 தண்பனிநீர்ச் சிவிறிகொண்டு விளையாடி மலர்கொய்து தண்கா நண்ணி,
எண்படும்பூம் பள்ளிமிசைச் சிறுதென்றல் கவரிகளா யினிது செல்ல,
வெண்பளித நறுஞ்சாந்தச் சேறாடி இருவருமாய் விழைந்து கூடிக்,
கண்படைகொண் டமர்வாழ்வும் பொய்யாகிக் கனவுகண்ட கதையா யிற்றே. 109
601 மருகென்றே அவமதித்த தக்கனார் வேள்விசெற்ற வள்ள றன்னைப்,
பொருகென்றே தேவரெலாம் விடுத்தாரே அவராலே பொடிபட் டாயே,
எரிகின்றேன் உனைப்போல ஆறாத பெருந்துயரால் யானு மங்கே,
வருகின்றேன் வருகின்றேன் என்னுயிரே யெனப்புலம்பி வருந்து கின்றாள். 110
ஆகத் திருவிருத்தம் - 601
5. மோன நீங்கு படலம் (602 - 636)

602 இரதி இன்னணம் வருந்திடத் தொன்மைபோல் எங்கோமான்
விரத மோனமோ டிருத்தலும் முன்னரே விறற்காமன்
கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார்
சுருதி நன்றுணர் திசை முகன் முதலிய சுரரெல்லாம். 1
603 சிதலை மெய்த்தொகை வன்மிகத் தெழுந்தெனச் செலக்கண்ணீர்
பதலை யொத்தன அல்லல்கூர்ந் தரற்றிடப் பகுவாய்கள்
விதலை பெற்றுமெய் வியர்ப்புற வுளநனி விதிர்ப்பெய்த
மதலை யிற்றுழி நாய்கர்போல் துயர்க்கடல் மறிகின்றார். 2
604 மையு லாவரு கறைமிடற் றிறையவன் மருங்காக
எய்யும் மாரனை விடுத்தனம் அவனையு மிறச்செய்தான்
பொய்யி றன்னிலை தவிர்ந்திலன் தொன்மையே போலுற்றான்
ஐய கோவினிச் செய்வதேன் னோவெனா அயர்கின்றார். 3
605 பூத்த ருங்கணை மாரனை விழியினாற் பொடிசெய்த
ஆத்த னாற்றலைப் புணர்ப்பினால் நீக்குவ தரிதன்னான்
காத்து நந்துயர் அகற்றிட வேண்டுமேற் கடிதேயாம்
ஏத்தல் செய்வதே கடனென யாவரு மிசைவுற்றார். 4
606 எகின மூர்பவன் முதலிய கடவுள ரெல்லோரும்
அகன மர்ந்திவை யிசைந்துதொல் கயிலையி னகநாப்பட்
புகல தாயபொன் னகரிடைக் கோபுரப் புறனேகித்
தொகுதி யோடெம திறைவனை ஒல்லெனத் துதிக்கின்றார். 5
607 நஞ்ச ருந்தியும் நதியினைச் சூடியும் நடுநெற்றித்
துஞ்சும் வெங்கணல் பரித்தும்வெவ் வலியரைத் தொலைத்திட்டும்
அஞ்ச லென்றுமுற் காத்தனை இன்றெமக் கருளாயேல்
தஞ்ச மாருளர் தாதையே யல்லது* தனயர்க்கே.
( பா-ம் * - தாதைய ரல்லது. ) 6
608 கோளில் அன்பர்கள் இழுக்கிய புரியினுங் குணனாக்கொண்
டாளு மெம்பிரான் நின்னடி அரணமென் றடைந்தேங்கண்
நாளும் வெந்திறற் சூரபன் மாவினால் நலிவெய்தி
மாளு கின்றதோ சிறிதுமெம் முறுதுயர் மதியாயோ. 7
609 தைய லைப்பிரீஇ யோகியல் காட்டிடு தனிச்செய்கை
ஐய நிற்கிதோ ரிறைவரை யாகுமால் அதுகாலை
நையு மெங்களுக் குகம்பல சென்ற நாமெல்லாம்
உய்வ தெப்படி இன்னுநீ புறக்கணித் துறுவாயேல். 8
610 நோற்று மாயவன் முதலினோர் யாவரும் நுனதாளைப்
போற்றி யர்ச்சனை புரியவித் திருவெலாம் புரிந்துற்றாய்
தோற்ற மின்றியே ஐந்தொழி லியற்றிய தொல்லோய்நீ
ஆற்று கின்றதோர் தவநிலை எம்பொருட் டளவன்றோ. 9
611 எய்த்தி டுஞ்சிறி யேங்களைத் தவறுகூ ரிடர்வாளால்
நித்த லுந்துணித் தீருதி செய்வினை நெறிநேடி
அத்த இங்கினிக் காத்தரு ளல்லதேல் அடுவல்லே
சித்த மென்னுனக் கன்னவா றொன்றினைச் செய்வாயே. 10
612 கங்கை வேணியாய் அம்மையை மணந்தெமைக் கடிகொள்ளத்
திங்கள் வெண்குடை மதனனை விடுத்தனந் தௌ¤வில்லேம்
அங்க வன்புரம் பொடித்தனை முன்புபோ லமர்ந்துற்றாய்
இங்கி யாந்தளர் கின்றதே இனிச்சிறி திரங்காயோ. 11
613 ஆரழற்சின வயப்புலி முதலிய அடன்மாவின்
பேரு ரித்திறந் தாத்தனை சிறுவிதி பெருவேள்வி
வீர னைக்கொடு தடிந்தனை அ·தென மிகவெய்ய
சூர பன்மனைத் தொலைவுசெய் தெந்துயர் தொலைக்கென்றார். 12
614 முரற்கொள் வண்டுசூழ் சததளப் பண்ணவன் முதலோர்கள்
உருக்க ரக்கென மெய்தளர்ந் திவ்வகை யுளநொந்தே
அரற்றி யேத்தலும் அவர்பவ முடிவதற் கணித்தாக
இரக்க மாய்அரு ணந்தியை நினைந்தனன் இறையோனே. 13
615 எந்தை நந்தியை உன்னலு மவனறிந் திறைவன்முன்
வந்து வந்தனை செய்துகை தொழுதலும் மறைமேலோன்
கந்த மாமலர்க கடவுளா தியர்தமைக் கடிதெம்முன்
தந்தி டென்றனன் நன்றென முதற்கடை தனில்வந்தான். 14
616 கணங்கள் காப்புறு முதற்கடை குறுகலுங் கண்டேத்தித்
தணங்கொள் பங்கயன் வாசவன் விண்ணவர் தாமெல்லாம்
வணங்க எம்பிரான் உமைத்தரு தென்றனன் வறிதேனும்
அணங்கு கொள்ளலீர் வம்மினோ நீவிரென் றருள்செய்தான். 15
617 சீர்த்த நந்திவந் திவ்வகை யுரைத்தசொற் செவிதோறும்
வார்த்த பேரமு தாதலும் உவகையின் மதர்ப்பாகிப்
பேர்த்தொர் மாற்றமு முரைத்திலர் பிரமனே முதற்றேவர்
ஆர்த்து நாதனைப் பாடினர் ஆடினர் அலமந்தார். 16
618 பெரிது நோயுழந் தருள்பவர் இன்றியே பெருங்காலம்
நிரய முற்றுளோர் தங்களை எடுத்திடும் நிலைத்தன்றோ
அருளின் நீர்மையா லுமையரன் விளித்தனன் அனைவீரும்
வருதி ரென்றசொற் பங்கயன் முதலிய வானோர்க்கே. 17
619 செய்ய லாவதொன் றின்றியே மகிழச்சியிற் றிளைத்தொராய்
மைய லாகிய பண்ணவர் தங்களை வல்லேகொண்
டையன் முன்னுற வுய்த்தனன் இருவகை யறத்தொரும்
உய்ய வெஞ்சம னுடைதரப் புவியினி லுதிக்கின்றோன். 18
620 வேறு
வண்டுளர் கமலமேல் மதலை வாசவன்
அண்டர்க ளனைவரும் அன்பொ டேகியே
பண்டுயிர் முழுதருள் பரனைக் கண்களாற்
கண்டனர் வழுத்தினர் கரங்கள் கூப்பினார். 19
621 விண்மதி படர்சடை வேத கீதனை
அண்மினர் வணங்கினர் அரிமுன் ஆற்றிய
உண்மகிழ் பூசனை யொப்பப் போதநீர்
கண்மல ரதனொடு கழல்கள் சேரவே. 20
622 வணங்கிய பண்ணவர் வல்ல வல்லவா
பணங்கிளர் அரவரைப் பரமற் போற்றலும்
உணங்கிய சிந்தையீர் உமது வேண்டலும்
அணங்குறு நிலைமையும் அறைமி னென்னவே. 21
623 பேருக மளப்பில பெயர்த லின்றியே
சூரன தாணையில் துயர்ப்பட் டாழ்ந்தனங்
காருறழ் கந்தரக் கடவுள் நீயலா
தாருளர் அடியரேம் அலக்கண் நீக்குவார். 22
624 ஆயவெஞ் சூரன தாவி நீக்கவோர்
சேயினை யருளுவான் சிமைய மாகிய
மீயுயர் வரையிடை மேவி நோற்றிடும்
மாயையின் முதல்வியை மணத்தல் வேண்டுநீ. 23
625 என்றிவை கூறியே யாரு மெம்பிரான்
மன்றலந் தாள்மலர் வணங்கிப் போற்றலும்
மின்றிகழ பசுங்கதிர் மிலைச்சும் வேணியான்
நன்றென இசைந்தியை நவிறல் மேயினான். 24
626 புங்கவர் யாவரும் பொருமல் கொள்ளலீர்
உங்கடம் பொருட்டிலவ் வோங்கல் வைகிய
மங்கையை மணந்துநும் வருத்தம் நீக்குதும்
இங்கினி யாவரு மேகு கென்றனன். 25
627 முழுதுணர் பரனிது மொழியப் போதனுஞ்
செழுமையில் பொன்னகர்த் தேவும் யாவருந்
தொழுதனர் விடைகொடு துயரஞ் சிந்தியே
விழுமிய மேருவின் மிசைக்கண் ஏகினார். 26
628 வேறு
அன்னார் விடைகொண் டேகியபின் அதுகண் டிரதி யெம்பெருமான்
முன்னா விறைஞ்சிப்* போற்றிசெய்து முறையோ முறையோ இறையோனே
பொன்னார் கமலத் தயன்முதலோர் புணர்ப்பா லெங்கோன் போந்திங்கே
உன்னால் முடிந்தான் அவன்பிழையை உளங்கொ ளாமல் அருளென்றாள். 27
( பா-ம் * - முன்னாலிறைஞ்சிப் ) 27
629 வேறு
இனைய கூறினள் இரதிவேண் டிடுதலும் இணைதீர்£ந்த
புனிதன் நல்லரு ளெய்தியே மங்கைநீ புலம்பாய்கேள்
வனைக ருங்குழற் கவுரியை மேவியாம் வரைபோ தில்
உனது கேள்வனை அளிக்குதும் போதியென் றுரைசெய்தான். 28
630 தன்னை யேதனக் கொப்பவன் இர தியைத் தளரேலென்
றின்ன வாறருள் செய்தலும் மகிழந்தடி இறைஞ்சிப்போய்ப்
பொன்னின் மாலிமை யக்கிரி புகுந்தொரு புடையுற்றான்
வன்ன மாமுகில் வரவுபார்த் துறைதரு மயிலேபோல். 29
631 வேறு
தமியளாய் இரதிபோய்த் தானங் குற்றிட
அமரர்க ளாயுளா ரரந்தை தீர்க்கவும்
இமையமால் வரைமிசை யிருந்து நோற்றிடும்
உமைதலை மணப்பவும் முதல்வன்உன்னினான். 30
632 மனந்தனி லித்திறம் மதித்து வானதி
புனைந்தவன் சனகனென் றுரைக்கும் புங்கவன்
சனந்தனன் சனாதனன் சனற்கு மாரனாம்
இனந்தரு முனிவரை இனிது நோக்கினான். 31
633 நன்னல மைந்தர்காள் ஞான போதகஞ்
சொன்னடை யன்றது துயர நீங்கியே
இந்நிலை மோனமோ டிருந்து நந்தமை
உன்னுத லேயென உணர வோதினான். 32
634 கட்படும் இமைத்துணை காட்சி யோகினை
நுட்பம தாகவே நுதலிக் காட்டினோன்
ஒட்பமோ டிவ்வகை உரைப்ப வாற்றவும்
தெட்பம தடைந்தனர் விதியின் சேயினோர். 33
635 அந்தநல் வேலையில் ஆற்றும் நோன்பினோர்
சிந்தைகொ ளன்பொடு சிவன்பொற் றாள்முறை
வந்தனை செய்துநம் மருட்கை நீங்கியே
உய்ந்தனம் யாமென உரைத்துப் போற்றினர். 34
636 போற்றது மத்துணைப் புனிதன் இன்னினி
ஏற்றிடு நிட்டையி லிருந்து வீடுறீஇ
மேற்றிகழ் எம்பத மேவு வீரெனாச்
சாற்றினன் விடுத்தனன் தவத்தி னோர்தமை. 35
ஆகத் திருவிருத்தம் - 636
6. தவங்காண் படலம் (637 - 669)

637 தீதறு முனிமைந்தர் செல்லலும் அதுபோழ்தின்
மாதவ நெறிநிற்கும் மலைமக டனியன்புங்
காதலு மெனைவோர்க்குங் காட்டுத லருளாகிச்
சோதனை புரிவாரின் துண்ணென எழலுற்றான். 1
638 செறிதுவ ருடையாளன் சிகையினன் அணிநீற்றின்
குறியினன் ஔ¤ர்நூலன் குண்டிகை யசைகையன்
உறைபனி கதிர்போற்று மோலையன் உயர்கோலன்
மறைபயில் முதியோர்போல் வடிவிது கொடுபோனான். 2
639 போயினன் இமையத்திற் புவனமொ டுயிர்நல்குந்
தாய்தளர் வொடுநோற்குஞ் சாலையி னிடைசாரத்
தூயவ ரிவரென்றே தோகையர் கடைகாப்போ
ராயவர் பலர்வந்தே அடிதொழு துரைசெய்வார். 3
640 தளர்நடை முதியீர்இத் தடவரை யிடைசேறல்
எளிதல அடிகேள்வந் தெய்திய தெவனென்ன
வளமலை யரசன்றன் மகள்புரி தவநாடற்
குளமுட னிவண்வந்தேன் உவகையி னுடனென்றான். 4
641 என்றலு மினிதென்றே இமையவ ளிடைசில்லோர்
சென்றனர் கிழவோன்றன் செயலினை அறைகாலை
ஒன்றிய முதியோரேல் உய்க்குதிர் இவணென்ன
நின்றதொர் பெரியோனை நேரிழை முனமுய்த்தார். 5
642 உய்த்தலும் இவரெந்தைக் குறுபரி வினரென்றே
பத்திமை படுபாலாற் பார்ப்பதி தொழலோடும்
மெய்த்துணை யெனநின்ற விசயையொர் தவிசிட்டு
நித்தனை உறைவித்தாள் நிமலையும் அயனின்றாள். 6
643 அப்பொழு துமைதன்னை யாதர வொடுபாராச்
செப்புத லரிதாமுன் றிருநலன் அழிவெய்த
மெய்ப்படு தசையொல்க மிகுதவ முயல்கின்றாய்
எப்பொருள் விழைவுற்றாய் எண்ணிய துரையென்றான். 7
644 வேறு
முடிவி லானிவை யுரைத்தலும் விசயையை முகநோக்கிக்
கொடியி னொல்கிய நுசுப்புடை உமையவள் குறிப்பாலே
கடிதி னீங்கிவர்க் கெதிர்மொழி யீகெனக் கண்காட்ட
அடிய னேற்கிது பணித்தன ளெனஅறிந் தவள்சொல்வாள். 8
645 மன்னு யிர்க்குயி ராகிய கண்ணுதல் மணஞ்செய்து
தன்னி டத்தினி லிருத்தினன் கொள்வதே தானுன்னிக்
கன்னி மெய்த்தவ மியற்றின ளென்றுகா தலிகூற
முன்ன வர்க்குமுன் னானவன் நகைத்திவை மொழிகின்றான். 9
646 புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான்
இவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை
அவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே
தவமி யற்றினள் எளியனோ சங்கரன் றனக்கம்மா. 10
647 அல்லல் பெற்றிட நோற்றிடு பகுதியால் ஆம்பாலொன்
றில்லை யித்துணைப் பெறலரும் பொருளிவட கௌ¤தாமோ
பல்ப கல்தன தெழில்நலம் வறிதுபட் டனவன்றோ
ஒல்லை இத்தவம் விடுவதே கடனினி உமைக்கென்றான். 11
648 இந்த வாசகங் கேட்டலு மெம்பிராற் கிவரன்பர்
அந்தண் மாமுது குரவரென் றுன்னினன் அறியேனால்
வந்து வெம்மொழ கூறுத லெனச்சின மனங்கொண்டு
நொந்து யிர்த்துநாண் நீக்கியே பொறாதுமை நுவல்கின்றாள். 12
649 முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது
விடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவின்னங்
கடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள். 13
650 ஈட்டு மாருயிர்த்தொகையெலா மளித்தவள் இவைகூற
மீட்டு மோர்புணர்ப் புன்னியே மாதுநீ வெ·குற்ற
நாட்ட மூன்றுடைப் பிஞ்ஞகன் வளத்தியல் நன்றாய்ந்து
கேட்டி லாய்கொலா முணர்த்துவன் அ·தெனக் கிளக்கின்றான். 14
651 ஆடை தோல்விடை யேறுவ தணிகல மரவென்பு
கேடில் வெண்டலை மாலிகை கேழலின் மருப்பின்ன
ஓடு கொள்கல மூண்பலி வெய்யநஞ் சுலப்புற்றோர்
காட தேநடம் புரியிடங் கண்ணுதற் கடவுட்கே. 15
652 வேய்ந்து கொள்வது வௌ¢ளெருக் கறுகுநீர் வியன்கொன்றை
பாந்தள் நொச்சியே மத்தமென் றினையன பலவுண்டால்
சாந்தம் வெண்பொடி சூலமான் மழுத்துடி தழலங்கை
ஏந்து கின்றது பாரிடஞ் சூழ்படை இறையோற்கே. 16
653 அன்னை தாதைகேள் வடிவொடு குணங்களி லனையானுக்
கின்ன வாகிய பலவள னுண்டவை எவையுந்தாம்
நின்ன வாகவோ தவம்புரிந் தெய்த்தனை நெடுந்தொல்சீர்
மன்னன் மாமகட் கியைவதே இத்துணை வழக்கென்றான். 17
654 வேறு
புரங்கண்மூன் றினையு மட்ட புங்கவன் இனைய கூற
வரங்கண்மே தகைய வெற்பின் மடமயில் கேட்ட லோடுங்
கரங்களாற் செவிகள் பொத்திக் கண்ணுதல் நாமம் போற்றி
இரங்கிவெஞ் சினத்த ளாகி இடருழந் தினைய சொல்வாள். 18
655 கேட்டியால் அந்தணாள கேடிலா வெம்பி ரான்றன்
மாட்டொரு சிறிது மன்பு மனத்திடை நிகழந்த தில்லை
காட்டுறு புள்ளின் சூழல் கவருவான் புதன்மேற் கொண்ட
வேட்டுவன் இயல்போல் மேலோன் வேடநீ கொண்ட தன்மை. 19
656 நேசமி லாது தக்கன் நிமலனை யிழித்து நின்போற்
பேசிய திறனும் அன்னான் பெற்றதுங் கேட்டி லாயோ
ஈசனை யிங்ஙன் என்முன் இகழ்ந்தனை இந்நாள் காறும்
ஆசறு மறைக ளேது மாய்ந்திலை போலு மன்றே. 20
657 முறைபடு சுருதி யெல்லா மொழியினும் அதுவே சார்வா
உறுகில ராகிப் பொல்லா வொழுக்கமே கொண்டு முக்கண்
இறைவனை யிகழ்ந்து முத்தி யெய்திடா துழல முன்னாள்
மறையவர் பெற்ற சாபம் நின்னையும் மயக்கு றாதோ. 21
658 தாதையாய்த் தம்மை நல்கித் தந்தொழிற் குரிய னாகி
ஆதியாய்த் தங்கட் கின்றி யமைவுறாச் சிவனை நீங்கி
ஏதிலார் பக்க மாகி இல்லொழுக் கிறந்தார் போலும்
வேதியர் முறையே செய்தாய் வெறுப்பதென் நின்னை யானே. 22
659 ஆயினும் மறையோர் தம்மி னருமறை முறையே வேடம்
தூயன தாங்கி யெங்கோன் தொண்டுசெய் வோரு முண்டால்
நீயவர் தன்மைத் தாயும் நித்தனை யிகழந்தா யென்னில்
தீயவ ருனைப்போ லில்லை அவுணர்தந் திறத்து மாதோ. 23
660 வேண்டுதல் வேண்டி டாமை யில்லதோர் விமலன் றன்னை
ஈண்டுநீ யிகழ்ந்த வெல்லாம் யாரையு மளிக்கு மன்பு
பூண்டிடு குறிகாண் அற்றாற் புகழ்ச்சியா மன்றி முக்கண்
ஆண்டகை யியற்கை யெல்லா மார்கொலோ அறிய கிற்பார். 24
661 போதனே முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்த
வேதமி லிறைமை யாற்ற லியாவையும் புரிந்த நாதன்
காதலும் வெறுப்பு மின்றிக் கருணைசெய் நிலைமை யேகாண்
பேதைநீ யிகழ்ச்சி யேபோற் பேசிய தன்மை யெல்லாம். 25
662 இம்முறை மறைக ளாதி இசைத்தன இனைய வெல்லாஞ்
செம்மைகொ ளுணர்வின் ஆன்றோர் தௌ¤குவ ரிறையை யௌ¢ளும்
வெம்மைகொள் குணத்தாய் நிற்கு விளம்பொணா விளம்பிற் பாவம்
பொய்ம்மறை வேடத் தோடும் போதிநீ புறத்தி லென்றாள். 26
663 அறத்தினைப் புரிவாள் இவ்வா றறைதலும் அணங்கே ஈங்குன்
திறத்தினி லார்வஞ் செய்து சென்றவென் செயல்கே ளாது
புறத்திடைப் போதி யென்றி புரைவதோ புகுந்த பான்மை
மறைச்சடங் கியற்றி நின்னை வரைந்திடற் காகு மென்றான். 27
664 வஞ்சக முதல்வன் சொற்ற வாசகம் இறைவி கேளா
அஞ்செவி பொத்தி யாற்றா தழுங்கிமெய் பதைப்ப விம்மி
எஞ்சலின் முதியோன் போகான் ஏகுவன் யானே யென்னாப்
பஞ்சடி சேப்ப ஆண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள். 28
665 படர்ந்தனள் போத லோடும் பனிபடு மிமையம் வைகும்
மடந்தைதன் னியற்கை நோக்கி வரம்பிலா அருண்மீ தூர
அடைந்ததொல் பனவக்கோல மகன்றுமால் விடைமேல்கொண்டு
தொடர்ந்துபல் கணங்கள் போற்றத் தோன்றினன் றொலைவி லாதோன். 29
666 தொலைவறு பகவன் வான்மீத் தோன்றலுந் துளங்கி நாணி
மலைமகள் கண்டு பல்கால் வணங்கியஞ் சலியாற் போற்றி
அலகிலா வுணர்வால் எட்டா வாதிநின் மாயை தேறேன்
புலனிலாச் சிறியேன் நின்னை யிகழ்ந்தவா பொறுத்தி யென்றாள். 30
667 நற்றவ மடந்தை கேண்மோ நம்மிடத் தன்பால் நீமுன்
சொற்றன யாவு மீண்டே துதித்தன போலக் கொண்டாம்
குற்றமுண் டாயி னன்றே பொறுப்பது கொடிய நோன்பால்
மற்றினி வருந்தல் நாளை மணஞ்செய வருது மெனறான். 31
668 சிறந்தநின் வதுவை முற்றச் செல்லுது மென்று தொல்லோன்
மறைந்தனன் போத லோடும் மலைமக ளுள்ளந் தன்னில்
நிறைந்திடு மகிழ்ச்சி கொண்டு நித்தனை நினைந்து போற்றி
உறைந்தனள் இதனை வேந்தற் குரைத்திடச் சிலவர் போனார். 32
669 அண்ணல்வந் தருளிச் செய்கை அரசனுக் குரைத்த லோடும்
உண்ணிக ழயர்ச்சி நீங்கி யொல்லைதன் னில்லி னோடு
நண்ணினன் உமையைக் கொண்டுநலங்கொள்தன் நகரத் துய்த்தான்
கண்ணுத லிறைவன் அங்கட் செய்தன கழற லுற்றேன். 33
ஆகத் திருவிருத்தம் - 669
7. மணம் பேசு படலம்
(670 - 689)

670 பொருடரு மலைக்கொடி புரியும் நோன்புகண்
டருடனை நல்கிய வாதி நாயகன்
தெருடரு கயிலையிற் சேர்வுற் றேழ்வகை
இருடிகள் தங்களை இதயத் துன்னினான், 1
671 நினைதலுங் கண்ணுதல் நிமல னேழ்பெரு
முனிவரு மன்னதை முன்னி யுள்வெரீஇப்
பனிவரு மெய்யொடு படர்ந்து வல்லையில்
அனையனை இறைஞ்சிநின் றறைதல் மேயினார். 2
673 பங்கயன் மான்முதற் பகரும் பண்ணவர்
உங்குன தேவலுக் குரிய ராயுற
எங்களை யுன்னினை யாங்கள் செய்தவம்
அங்கவர் தவத்தினு மதகம் போலுமால். 3
673 எந்தையெம் பெருமநீ யெம்மை வம்மென
முந்துறு கருணையின் முன்னிற் றாதலின்
உய்ந்தனம் அடியரே முடிய தீப்பவஞ்
சிந்தினம் இனியொரு தீதுண் டாகுமோ. 4
674 ஒருதலை யைந்தொழி லுலப்பு றாவகை
புரிதரு பகவநம் புன்மை நீக்குவான்
கருணையொ டுன்னினை கடிதிற் செய்பணி
அருளுதி யென்றனர் ஆற்றும் நோன்பினோர். 5
675 வேறு
அமலனம் முனிவர் மாற்றங் கேட்டலு மவரை நோக்கி
அமையமே லிறைவன் றன்பா லேகியே எமக்கிவ் வைகல்
உமைதனை வதுவை நீரா லுதவுவான் வினவி வல்லே
நமதுமுன் வம்மி னென்னா நன்றருள் புரிந்தா னன்றே. 6
676 நாயக னருளக் கேளா நன்றென இறைஞ்சி யேகி
ஏயதொன் முனிவர் யாரும் இமையமே லிறைமுன் நண்ண
ஆயவன் மனைவி யோடு மடைந்தெதிர் கொண்டு தாழ்ந்து
நேயமொ டருச்சித் தேத்தி நின்றிது புகலு கின்றறான். 7
677 படியறு நுத்£ள் ஈண்டுப் படுதலால் இமைய மேருத்
தடவரை யதனில் தூய்தாய்த் தலைமையும் பெற்ற தன்றே
நெடியவென் பவமு மினனே நீங்கின நீவி ரெல்லாம்
அடியனேன் றன்பால் வந்த நிமித்தமென் னறையு மென்றான். 8
678 அங்கது வினவு மெல்லை அருந்தவ ரகில மீன்ற
மங்கையை வதுவை செய்வான் மன்னுயிர்க் குயிராய் நின்ற
சங்கரன் நினைந்துன் னோடு சாற்றுதற் கெமமை யுய்த்தான்
இங்கிதெம் வரலா றென்ன இசைவுகொண் டிறைவன் சொல்வான். 9
679 துன்னிய வுயிர்கள் யாவுந் தொல்லுல கனைத்து மீன்ற
கன்னிகை யுமையா டன்னைக் கடிமண முறையின் நல்கி
என்னையு மடிமை யாக ஈகுவன் இறைவற் கென்ன
மன்னவன் அயலே நின்ற மனைவியீ துரைக்க லுற்றாள். 10
680 மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க
அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர்
நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள்
குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள். 11
681 என்றலு மவளை நோக்கி எழுமுனி வோருஞ் சொல்வார்
ஒன்றுநீ யிரங்கல் வாழி யொப்பிலா முதல்வன் செய்கை
நன்றுதேர்ந் திலையால் தக்கன் நலத்தகும் அவியை மாற்றி
அன்றுதன் இகழ்த லாலே அவன்றலை முடிவு செய்தான். 12
682 அடைந்துளோர்க் கருளுமாறும் அல்லவர் தமக்குத் தண்டம்
படுந்துணை தெரிந்து கூட்டும் பான்மையும் பரமன் செய்கை
மடந்தையித் தன்மை யாரும் மனப்படுத் துணர்வ ரீதே
திடம்பட வுணர்தி வேறு சிந்தனை செய்யே லென்றார். 13
683 வேறு
இயலுறு முனிவோர்கள் இவைமொழி தலுமோரா
மயலறு வரையண்ணல் வாய்மையி தெனலோடும்
அயலுறு மனைமேனை யஞ்சினள் அமலன்றன்
செயலிது வுணராதே செப்பினன் இவையென்றே. 14
684 உண்ணலி வொடுமேனை உவர்மல ரடிதாழூஉப்
பெண்ணறி வெவையேனும் பேதைமை வழியன்றோ
அண்ணறன் அருணீர்மை யணுவது மறிகில்லேன்
புண்ணிய முனிவீரென் புன்மொழி பொறுமென்றாள். 15
685 பணிவுட னிவைமேனை பகர்தலும் அவடன்பாற்
கணிதமி லருள்செய்யக் காவல னதுகாணா
இணைதவிர் முனிவீர்காள் இவளுரை கருதன்மின்
இணமியல் இறையோனை வரமொழி குதிரென்றான். 16
686 பனிபடு வரையண்ணல் பகர்மொழி யதுகேளா
மனமிக மகிழ்வாகி மற்றவர் தமையங்கண்
இனிமையொ டுறநல்கி யெழுவரும் அவணீங்கித்
தனைநிகர் பிறிதில்லாத் தண்கயி லையில்வந்தார். 17
687 வந்தெழு முனிவோரும் மாநக ரிடைசாரா
நந்திகண் முறையுய்ப்ப நாதனை நணுகுற்றே
அந்தமில் அளியோடு மவனடி தொழுதேத்தி
எந்தையை இதுகேளென் றியாவது முரைசெய்தார். 18
688 வரைமிசை யரசாள்வோன் மணவினை யிசைவெல்லாம்
உரைசெய வருள்செய்தே யும்பரின் முனிகாள்நீர்
புரிதரு செயலாற்றப் போகுதி ரெனலோடும்
அரனடி தொழுதேத்தி அவர்பதம் அணுகுற்றார். 19
689 வேறு
எங்குறை தீர்ந்ததென் றெழுத வத்தருந்
தங்கடம் பதத்திடைத் தணப்பின் றெய்தினார்
இங்கிது நின்றிட இமைய மேலிறை
அங்கினிச் செய்தவா றறியக் கூறுவாம். 20
ஆகத் திருவிருத்தம் - 689
8. வரைபுனை படலம் (690 - 725)

690 8. வரைபுனை படலம்
கண்ணுதல் உமைதவங் கண்டு நின்னையாம்
மண்ணவர் புகழ்வகை மணத்து மென்றதும்
விண்ணெழு முனிவரின் வினவி விட்டதும்
எண்ணினன் மகிழ்ந்தனன் இமையத் தண்ணலே. 1
691 கணிதமி லுயிரெலாங் கலந்து மற்றவை
உணர்வுதொ றிருந்தவற் கொருதன் கன்னியை
மணமுறை புரிதிறம் மதித்துத் தேவர்தம்
பணிபுரி தச்சனைப் பரிவொ டுன்னினான். 2
692 உன்னிய போதினி லும்பர் கம்மியன்
மன்னவன் எதிருற வந்து கைதொழு
தென்னைகொல் கருதினை யாது செய்பணி
அன்னதை மொழிகென அறைதல் மேயினான். 3
693 என்னையாள் கண்ணுத லறைவற் கியான்பெறும்
அன்னையாம் உமைதனை யளிப்பன் இவ்வரைக்
கன்னிமா நகரெலாங் கவின்சி றந்திடப்
பொன்னினா டாமெனப் புனைதி யாலென்றான். 4
694 அப்பொழு தத்தினில் அடுக்கன் மேலையோன்
செப்பிய வாசகஞ் செவிக்கொண் டுள்ளமேன்
மெய்ப்பெரு மகிழ்ச்சியை மேவி யந்நகர்
ஒப்பனை செய்திட வுன்னி னானரோ. 5
695 நீடுறு தருநிரை நிமிருங் கால்களாய்ப்
பாடுறு கழிகளாய்ப் பரம்பும் பல்பணை
மூடுற அதன்மிசை முகில்க ளெங்கணும்
பீடுறு பந்தர்போற் பிறங்கும் வெற்பின்மேல். 6
696 மலையுறழ் கோபுர மன்றஞ் சூளிகை
நிலைகெழு செய்யதேர் நிழற்று மண்டபம்
பலவுடன் நறுமலர்ப் பந்தர் அன்னவை
தொலைவறும் ஆவணந் தோறும் நல்கினான். 7
697 நீக்கமில் கதலிகை நெடிய கேதனம்
மேக்குயர் காவண மிசைத்தந் துள்ளிடை
ஆக்குறு கம்பல மணிசெய் தாயிடைத்
தூக்கினன் கவரியுஞ் சுடர்கொள் மாலையும். 8
698 குரகத முகம்புரை குலைகள் தூங்கிய
மரகத வொளிபடு வாழை பூகநல்
நிரைகெழு தன்மையின் நிறுவிப் பூந்துணர்
விரைகெழு தோரணம் விசும்பின் நாற்றினான். 9
699 ஒண்ணிதி இயக்கர்கோ னுறையு ளானதும்
விண்ணவர் தொழுதிட வீற்றி ருந்திடும்
அண்ணறன் கோயிலு மாக வீதிகள்
எண்ணருந் திருவுற எழில்ப டுத்தினான். 10
700 ஒருபுறத் தினைஇனி யுமைக்கு நல்குவோன்
இருபுறத் தினும்வெரு மெண்ணில் தேவருந்
தருபுறப் பொருளெலாஞ் சாரச் சாலைகள்
திரிபுறத் திரிபுறச் செய்த மைத்தனன். 11
701 ஆயிரப் பத்தென அறையும் யோசனை
போயதோ ரளவையிற் புரிசை யொன்றினைக்
கோயிலி னொருபுடை குயிற்றிக் கோபுரம்
வாயில்கள் நான்கினு மரபின் நல்கினான். 12
702 அங்கதன் நடுபுற அகன்ப ரப்பினின்
மங்கல மணஞ்செய வதுவைச் சாலையைச்
செங்கன கத்தினால் திகழச் செய்தனன்
கங்கையஞ் சடையினான் கயிலைக் கோயில்போல். 13
703 சாலையின் நிலத்திடைச் சந்த மான்மதம்
மேலுறு நாவிநீர் விரவிப் பூசியே
கோலமென் மலர்கடூஉய்க் குறுகும் வானவர்க்
கேலுறு பலதவி சிருப்பச் செய்தனன். 14
704 வானவில் மணிமுகில் வனச மாமலர்
நீனிறம் விரிதரு நெய்தல் சண்பகம்
ஏனைய நிறங்களால் எண்ணில் வேதிகை
ஆனவை புரிந்தனன் அயனும் நாணவே. 15
705 கண்ணடி பூந்தொடை கவரி ப·றுகின்
மண்ணிய செழுமணி மாலை தூங்குறப்
பண்ணுறு வித்தனன் பரமன் பால்வரும்
விண்ணவர் விழியெலாம் விருந்து கொள்ளவே. 16
706 தேவரு முனிவருந் திருவ னார்களும்
பாவையின் உயிருறு பண்பி னாக்கியே
மேவரு கவரிதார் வீணை யேந்தியே
ஏவலர் தொழின்முறை இயற்ற நல்கினான். 17
707 பெண்ணிய லாரெனப் பிறங்கும் பாவைகள்
தண்ணுமை முதலிய தாக்கித் தண்டியல்
பண்ணொடு களிநடம் பயிலு வித்தனன்
விண்ணவர் அரம்பையர் யாரும் வெ·கவே. 18
708 நெருங்கிய கிளிமயில் நேமி தண்புறாப்
பொருங்கரி அரிபரி பொருநர் வானுளோர்
ஒருங்குடன் மணிகளா லோவி யப்பட
அருங்கடி யிருக்கையுள் அமர நல்கினான். 19
709 குறைதவிர் நிலைமையாற் குயிற்றுஞ் சாலையுள்
நிறைதரு மிந்திர நீலத் தாலொரு
திறலரி யணையினைச் சிறப்பிற் செய்தனன்
இறைவனு மிறைவியும் இனிது மேவவே. 20
710 குண்டமும் வேதிகை வகையுங் கோதில்சீர்
மண்டல மானதும் வகுத்து வேள்விசெய்
பண்டம தானதும் படுத்திப் பண்ணவர்
எண்டொகை மங்கலம் இருத்தி னானரோ. 21
711 கண்டெறு கதிர்மதிக் காந்தங் காஞ்சனம்
ஒண்டுகிர் நித்தில மொளிறு வச்சிரம்
முண்டக வெயின்மணி முதல்வெ றுக்கையால்
மண்டப மெண்ணில மருங்கின் நல்கினான். 22
712 காவிகண் மலர்தரு கயங்க ளோர்பல
ஓவறு முற்பல வோடை யோர்பல
பூவியல் வாரிசப் பொய்கை யோர்பல
வாவிக ளோர்பல மருங்கில் ஆக்கினான். 23
713 பாசடை மரகதம் பளிங்கு வச்சிரங்
பாசறு நன்மணி கனக மன்னதால்
தேசுறு நளிமலர் செறிந்த பூந்தடம்
வாசவன் கண்டுள மருளத் தந்தனன். 24
714 கற்பகஞ் சந்தகில் கதலி பூகமே
பொற்புறு வருக்கைமாப் புன்னை யாதிய
பற்பல மணிகளாற் படுத்தி அன்னவை
நற்பயன் வழங்கவும் நல்கி னானரோ. 25
715 இன்னவா றளப்பில இமைய வர்க்கெலாம்
முன்னுறு கம்மியன் முன்னிச் செய்தலும்
பொன்னியல் இமகிரிப் புரத்து மேவிய
மன்னவன் கண்டவை மகிழ்ச்சி எய்தினான். 26
716 சீதரன் அயன்முதற் றேவர் மாத்தொகை
மாதவ முனிவரர் மடந்தை மாரொடு
காதலின் உமைமணங் காண வந்திடத்
தூதரை யெங்கணுந் தூண்டி னானரோ. 27
717 ஒற்றர்தம் முரைதெரிந் தும்பர் யாவருங்
குற்றமில் முனிவருங் குன்ற வில்லினால்
பற்றலர் புரமடு பரமற் போற்றியே
மற்றவன் றன்னொடு வருது மென்றனர். 28
718 வெற்றிகொள் வயப்புலி மிசையு யர்த்திடுங்
கொற்றவை யாமளை குழீஇய காளிகள்
சுற்றுறும் எழுநதி இமையத் தொல்கிரி
உற்றனர் தொழுதனர் உமைமுன் நண்ணினார். 29
719 செந்திரு நாமகள் சீர்பெ றுஞ்சசி
பந்தமில் தாபத பன்னி யாயுளார்
அந்தமில் அணங்கினர் யாரு மவ்வரை
வந்தனர் அவரவர் மகிழ்நர் ஏவலால். 30
720 பங்கய மிசைவரு பாவை யேமுதல்
நங்கையர் யாவரும் நற்ற வத்தினால்
அங்கநொந் துறைதரும் அம்மை தாடொழா
அங்கல வதுவையின் வனப்புச் செய்தனர். 31
721 நெறிதரு தவத்துரு நீக்கிக் காமருக்
குறையுள தாகிய உமைதன் மெய்யினைக்
குறைதவிர் நிலைமையிற் கோலஞ் செய்தனர்
இறைவனை வழிபடும் இயல்பி னாரென. 32
722 மேதகு பொலஞ்சுடர் மேரு மந்தரம்
ஆதிய வாகிய அலகில் சுற்றமும்
ஓதருங் கடல்களும் அரக வேந்தரும்
மாதிர யானையும் பிறவும் வந்தவே. 33
723 வேறு
ஈங்கிது காலை தன்னில் இமகிரி புரக்கு மன்னன்
பாங்குறு தமர்க ளோடும் பரிவொடுஞ் சென்று வௌ¢ளி
ஓங்கலில் நந்தி யுய்ப்ப உயிர்க்குயி ரான அண்ணல்
பூங்கழல் வணங்கி நின்றாங் கினையன புகல லுற்றான். 34
724 ஆதியி னுலக மெல்லா மளித்திடு மன்னை தன்னைக்
காதலின் வதுவை செய்யக் கருதினை கணித நூலோர்
ஓதுபங் குனியின் திங்கள் உத்தரம் இன்றே யாரும்
ஈதுநன் முகூர்த்தம் எந்தாய் இமையமேல் வருதி யென்றான். 35
725 அல்லுறுழ் கண்டத் தெந்தை யரசனை நோக்கி யின்னே
எல்லையில் கணங்கள் சூழ இமையமேல் வருதும் முன்னஞ்
செல்லுதி யென்ற லோடுந் திருவடி வணங்கிப் போற்றி
வல்லையின் மீண்டு போய்த்தன் வளநகர் இருக்கை புக்கான். 36


9. கணங்கள் செல் படலம் (726 - 754)

726 அந்த வேலையிற் கயிலையில் எம்பிரா னருளால்
நந்தி தேவரை விளித்துநம் மணச்செயல் நாட
முந்து சீருடை யுருத்திர கணங்கள்மான் முதலோர்
இந்தி ராதியர் யரையுந் தருதியென் றிசைத்தான். 1
727 இன்ன லின்பமின் றாகிய பரமன்ஈ துரைப்ப
கன்ன யப்புட னிரைந்துபின் நந்தியெம் பெருமான்
அன்னர் யாவரும் மணப்பொருட் டுற்றிட அகத்துள்
உன்னல் செய்தனன் அவரெலா மவ்வகை யுணர்ந்தார். 2
728 உலக முய்ந்திட வெம்பிரான் மணம்புரி யுண்மை
புலன தாதலும் அவனருண் முறையினைப் போற்றி
மலியும் விம்மிதம் பத்திமை பெருமிதம் மகிழ்ச்சி
பலவும் உந்திடக் கயிலையை முன்னியே படர்வார். 3
729 பாலத் தீப்பொழி விழியுடைப் பஞ்சவத்தி திரனே
மூலத் தீப்புரை விடைப்பெருங் கேதுவே முதலாஞ்
சூலத் தீக்காத் தாயிர கோடியோர் சூழக்
காலத் தீப்பெயர் உருத்திரன் வந்தனன் கடிதில். 4
730 சுழல லுற்றிடு சூறையும் வடவையுந் தொலைய
முழுது யிர்த்தொகை அலமர வுயிர்க்குமொய்ம் புடையோர்
எழுப திற்றிரு கோடிபா ரிடத் தொகை யீண்ட
மழுவ லத்தின னாயகூர் மாண்டனும் வந்தான். 5
731 நீடு பாதலத் துறைபவர் நெற்றியங் கண்ணர்
பீடு தங்கிய வல்வகை நிறத்தவர் பெரியர்
கோடி கோடியா முருத்திர கணத்தவர் குழுவோடு
ஆட கேசனா முருத்திரன் கயிலையில் அடைந்தான். 6
732 கோர மிக்குயர் நூறுபத் தாயிர கோடி
சார தத்தொகை சூழ்தரச் சதுர்முகன் முதலோர்
ஆரு மச்சுறச் சரபமாய் வந்தருள் புரிந்த
வீர பத்திர வுருத்திரன் வந்தனன் விரைவில். 7
733 விண்டு தாங்குறு முலகுயிர் முழுதுமோர் விரலிற்
கொண்டு தங்குறு குறட்படை கோடிநூ றீண்டப்
பண்டு தாங்கலந் தரியரன் இருவரும் பயந்த
செண்டு தாங்குகைம் மேலையோன் மால்வரை சென்றான். 8
734 முந்தை நான்முகன் விதிபெறான் மயங்கலும் முக்கட்
டந்தை யேவலால் ஆங்கவன் நெற்றியந் தலத்தின்
வந்து தோன்றிநல் லருள்செய்து வாலுணர் வளித்த
ஐந்து மாறுமா முருத்திரர் தாமும்வந் தடைந்தார். 9
735 இத்தி றத்தரா முருத்திரர் அல்லதை யேனை
மெத்து பல்புவ னங்களு மளித்தவண் மேவி
நித்தன் அன்புறும் உருத்திர கணங்களும் நெறிசேர்
புத்தி யட்டக முதல்வரும் வந்தனர் பொருப்பில். 10
736 தொட்ட தெண்கடல் யாவையுந் துகளினால் தூர்க்கும்
எட்டு நூறெனுங் கோடிபா ரிடத்தொகை யீண்டக்
கட்டு செஞ்சடைப் பவர்முத லாகவே கழறும்
அட்ட மூர்த்திகள் தாங்களும் ஒருங்குடன் அடைந்தார். 11
737 கூறு கொண்டிடு தெழிப்பினர் எம்பிரான் விழிநீர்
நாறு கொண்டுள கலத்தொடு பொடிபுனை நலத்தோர்
நூறு கொண்டிடு கோடிபூ தத்தொடு நொடிப்பின்
வீறு கொண்டகுண் டோதரன் போந்தனன் வெற்பில். 12
738 அண்டம் யாவையும் உயிர்த்தொகை யனைத்தையும் அழித்துப்
பண்டு போலவே தந்திட வல்லதோர் பரிசு
கொண்ட சாரதர் நூற்றிரு கோடியோர் குழுமக்
கண்ட கன்னனும் பினாகியும் வந்தனர் கயிலை. 13
739 ஆன னங்களோ ராயிரம் இராயிரம் அங்கை
மேனி வந்தபொன் மால்வரை புரைநிற மேவித்
தானை வீரர்நூற் றைம்பது கோடியோர் சாரப்
பானு கம்பனாந் தலைவன்ஒண் கயிலையிற் படர்ந்தான். 14
740 தங்கள் சீர்த்தியே மதித்திடு கடவுளர் தலையும்
பங்கி யாகிய கேசமும் படைகளும் பறித்துத்
துங்க மெதிய கணங்கள்பல் கோடியோர் சூழச்
சங்கு கன்னன்வந் திறுத்தனன் தடவரை தன்னில். 15
741 காள கண்டனுந் தண்டியும் நீலனுங் கரனும்
வாள்வ யம்பெறு விச்சுவ மாலியும் மற்றும்
ஆளி மொய்ம்பின ராயபல் பூதரும் அனந்தம்
நீளி ருங்கடற் றானையோ டணைந்தனர் நெறியால். 16
742 கூற்றின் மொய்ம்பினைக் கடந்திடு சாரதக் குழுவோர்
நூற்று முப்பது கோடியோர் சூழ்ந்திட நொய்தின்
மாற்ற லார்புரம் அட்டவன் தாளிஆணை வழிபட்
டேற்ற மிக்கஈ சானன்அக் கயிலையில் இறுத்தான். 17
743 எகின மாகிய மால்அயன் வாசன் இமையோர்
புகலு மாதிரங் காவலர் கதிர்மதி புறக்கோள்
மிகைய தாரகை அன்னைகள் வசுக்கள்வே றுள்ளார்
மகிழும் விஞ்சையர் முனிவரர் யாவரும் வந்தார். 18
744 வாலி தாகிய மறைகள்ஆ கமங்கள்மந் திரங்கள்
ஞால மாதிய பூதங்கள் உலகங்கள் நகர்கள்
கால மானவை ஏனைய பொருளெலாங் கடவுட்
கோல மெய்திவந் திறுத்தன கயிலையிற் குறுகி. 19
745 இந்த வாசற்றினாற் கயிலையில் யாவரும் யாவும்
வந்த தன்மையை நோக்கியே ஆற்றவு மகிழ்ந்து
நந்தி யுள்புகுந் தமலனுக் கித்திறம் நவில
முந்தை அன்னவர் யாரையுந் தருகென மொழிந்தான். 20
746 புராரி யித்திரம் மொழிதலுஞ் சிலாதனார் புதல்வன்
ஒராய்மு தற்கடை குறுகியே உருத்திர கணங்கள்
முராரி யாதியாம் விண்ணவர் முனிவரெல் லோரும்
விராவு நீர்மையிற் சென்றிடக் கோயிலுள் விடுத்தான். 21
747 விடுத்த காலையில் அரியணை மீமிசை விளங்கிக்
கடுத்த யங்கிய கண்டன்வீற் றிருப்பது காணூஉ
அடுத்த வன்புடன் யாவரும் இறைஞ்சியே அவன்சீர்
எடுத்து நீடநின் றேத்தியே அணுகினர் இமைப்பில். 22
748 நீண்ட சீருருத் திரர்தமை நிறைந்தபல் கணத்தை
ஈண்டு தேவரை முனிவரை வீற்றுவீற் றிசையா
ஆண்டு தன்விரற் சுட்டியே ஆதிநா யகற்குக்
காண்டல் செய்துநின் றேத்தினன் வேத்திரக் கரத்தொன். 23
749 ஆர ழற்பெயர் அண்ணல்கூர் மாண்டன்ஆ டகத்தோன்
வீர பத்திரன் முதலுருத் திரகண மேத்தப்
பாரி டத்தவர் யாவரு மெம்பிரான் பாங்கிற்
சேர லுற்றுநின் றேத்தினர் பணிந்தசிந் தையராய். 24
750 அன்ன காலையில் நான்முகன் எம்பிரான் அணிவான்
உன்னி யேமுடி முதலிய பல்கல னுதவிப்
பொன்னி னாயதோர் பீடிகை யிற்கொடு போந்து
முன்ன ராகவைத் திறைஞ்சியே இத்திரம் மொழிவான். 25
751 ஐய கேளுனக் கில்லையாற் பற்றிகல் அடியேம்
உய்யு மாறிவண் மணஞ்செய வுன்னினை உன்பால்
மையல் மாசுணப் பணியெலா மாற்றிமற் றிந்தச்
செய்ய பேரணி அணிந்தரு ளென்று செப்பினனே. 26
752 பங்க யாசனன் குறையிரந் தினையன பகர
அங்கண் மூரல்செய் தன்புடன் நீயளித் திடலால்
இங்கு நாமிவை அணிந்தென மகிழ்ந்தன மென்னார்
செங்கை யாலணி கலத்தினைத் தொட்டருள் செய்தான். 27
753 பிரமன் அன்புகண் டிவ்வகை யருள்செய்த பின்னர்
ஒருதன் மெய்யணி பணிகளே யணிகளா யுறுவான்
திருவுளங்கொள அவ்வகை யாகிய செகத்தை
அருள்பு ரிந்திடு பராபரற் கிச்செயல் அரிதோ. 28
754 கண்டி யாவரு மற்புத மடைந்துகை தொழலும்
வண்டு லாங்குழற் கவுரி*பா லேகுவான் மனத்திற்
கொண்டு பாங்குறை தலைவருக் குணர்த்தியே குறிப்பாற்
பண்டு மாலயற் கரியவன் எழுந்தனன் படர. 29

( * கவுரி - கௌரி - கௌரவண்ணம் உடையவள்; கிரிராஜ புத்திரி
எனினுமாம். கௌரம் - பொன்போன்ற வண்ணம். )

ஆகத் திருவிருத்தம் - 754
10. திருக்கல்யாணப் படலம் (755- 850 )

755 நாற்ற டம்புயக் கண்ணுதல் நந்தியம் பெருமான்
போற்றி முன்செல அமரரும் முனிவரும் புகழ
வேற்ற தும்புரு நாரதர் விஞ்சையர் யாரும்
பாற்றி யக்கமும் நீழலு மாமெனப் பாட. 1
756 சொன்ம றைத்தொகை ஆகம முதலிய துதிப்பப்
பொன்மை பெற்றதன் கோநகர் நீங்கியே பொற்றாள்
வன்மை பெற்றகுண் டோதரன் மொய்ம்பிடை வைத்துச்
சின்ம யத்தனி மால்விடை ஏறினன் சிவனே. 2
757 விடையின் மீமிசைத் தோன்றியே யெம்பிரான் விளங்கப்
புடையின் வந்தவ ரல்லது திருநகர்ப் புறத்துக்
கடையின் நின்றவர் யாவருங் கண்டுகண் களியா
அடைய வேபணிந் தேத்தினர் அளக்கரின் ஆர்த்தார். 3
758 நந்தி மேல்கொண்டு நந்திமே வுறுதலும் நந்தித்
தந்தி மாமுகத் தவுணர்கோன் இலமரத் தடிந்தோன்
ஐந்து நூற்றெழு கோடிபூ தப்படை யணுக
வந்து வந்தனை செய்துமுன் போயினன் மாதோ. 4
759 கதிருஞ் சோமனுங் கவிகையுஞ் சீகரங் காலும்
உததி யண்ணல்சாந் தாற்றியும் உம்பர்தங் கோமான்
புதிய கால்செயும் வட்டமு மெடுத்தனர் புடைபோய்
முதிரும் ஆர்வமோ டப்பணி புரிந்தனர் முறையால். 5
760 பேரி கொக்கரை சல்லிகை கரடிகை பீலி
சாரி கைத்துடி தண்ணுமை குடமுழாத் தடாரி
போரி யற்படு காகளம் வயிர்முதற் புகலுஞ்
சீரி யத்தொகை இயம்பினர் பாரிடத் திறலோர். 6
761 அத்தன் ஏவலால் உருத்திரர் குழுவுமா லலயனும்
மெய்த்த வம்புரி முனிவரும் ஏனைவிண் ணவரும்
மொய்த்த தேரொடு மானமாப புள்ளிவை முதலாந்
தத்த மூர்திமேல் கொண்டனர் செய்பணி தவாதோர். 7
762 தாழ்ந்து தன்பணி புரியுமத் தலைவருந் தவத்தாற்
காழ்ந்த நெஞ்சுடைப் பூதரு மேனைய கணமுஞ்
சூழ்ந்து சென்றிடக் கயிலையை அகன்றுதொல் லுலகம்
வாழ்ந்தி டும்படி யேகினன் இமையமால் வரைமேல். 8
763 வார்ப்பெ ரும்பணை யாதிய வரம்பில்பல் லியத்தின்
ஆர்ப்பு மெங்கணும் வௌ¢ளிடை யின்றியே யகல்வான்
தூர்ப்பின் ஈண்டிய தானையின் ஓதையுஞ் சுரர்கள்
ஆர்ப்பும் வாழ்த்தொலி அரவமும் புணரியுண் டெழுமால். 9
764 வேறு
அனைய தன்மையி லாதியம் பண்ணவன்
பனிகொள் வெற்பிற் படரஅம் மன்னவன்
இனிய கேளொ டெதிர்கொடு தாழ்ந்துதன்
புனித மாநக ரிற்கொடு போயினான். 10
765 போத லோடும் புனிதன் வரத்தினைக்
காத லாற்கண்டு கண்களப் பாகியே
ஆதம் எய்திநின் றஞ்சலித் தேத்தியே
வீதி யாவும் விழாவயர்ந் திட்டவே. 11
766 மிண்டி நின்றிடும் வீதியின் மாதரார்
அண்டர் நாயகன் அற்புதப் பேருருக்
கண்டு தாழ்ந்து கரைதவிர் காதலாந்
தெண்டி ரைப்படிந் தார்செயல் வேறிலார். 12
767 நிறைத்த பூண்களும் நேர்ந்தபொன் னாடையும்
நறைத்த சாந்தமும் நாண்மலர்க் கண்ணியும்
பிறைத்தி ருச்சடைப் பிஞ்ஞகன் பேரெழில்
மறைத்த தென்று மனந்தளர் வார்சிலர். 13
768 உய்யு மாறென் உவர்தமைக் காண்டலு
வெய்ய காமக் கனல்சுட வேவுறுந்
தைய லார்கள் தனுவுறு நீறுகொல்
ஐய ராகத் தணிந்ததென் பார்சிலர். 14
769 எழாலை யன்னசொல் ஏந்திழை மாதரார்
குழாம கன்று குழகனைச் சேர்தலுங்
கழாலு கின்றபல் காழுடை மேகலை
விழாதி றைஞ்சினர் மெல்லிய லார்சிலர். 15
770 அல்லி சேர்தரும் அம்புய மீமிசை
வல்லி யன்னவர் வான்துகில் சோர்வுறா
மெல்ல வீழ்தலும் மின்னிடை யார்க்கெலாம்
இல்லை யோபுனை யென்றுரைப் பார்சிலர். 16
771 வாசம் வீழ்தலும் வந்துவந் தில்லிடைத்
தூசு டுத்தில மென்றொர் துகில்புனைந்
தாசை யோடுசென் றன்னதும் வீட்டியே
ஊசல் போன்றனர் ஒண்டொடி மார்சிலர். 17
772 மாண்ட சாயன் மடந்தைய ரேதனை
வேண்டி மால்கொடு வீடுறும் வேலையில்
ஈண்டு போற்று கெனவுமெண் ணாததோ
ஆண்ட கைக்கிய லாகுமென் பார்சிலர். 18
773 கரும்பு நேர்மொழிக் காரிகை மாதரார்
விரும்பி வேண்டவு மேவலர் போலுமால
அரும்பொன் மேனியெம் மண்ணலுக் குள்ளமும்
இரும்பு கொல்லென் றியம்பிடு வார்சிலர். 19
774 நெருக்கு பூண்முலை நேரிழை யார்க்குமால்
பெருக்கி னாரவர் பேதுற லோர்கிலார்
உரைப்ப தென்கொல் உயிர்க்குயி ராகியே
இருக்கு மிங்கிவர் என்றுரைப் பார்சிலர். 20
775 திருகு வார்சடைச் செய்யனை நோக்கிநின்
றுருகு வார்சிலர் உள்ளுற வெம்பியே
கருகு வார்சிலர் காதலி மாரொடும்
பெருகு காதலைப் பேசுகின் றார்சிலர். 21
776 வேறு ளார்மெய் விளர்ப்பினை நோக்கியே
ஈறி லாரை இவரணைந் தார்கொலோ
நீறு மெய்யின் நிலவிய தென்றவர்ச்
சீறி யேயிகல் செய்திடு வார்சிலர். 22
777 கட்டு செஞ்சடைக் கான்மிசை யூர்தர
விட்ட வெண்மதி மெல்லிய லார்தமைச்
சுட்ட தம்ம சுமப்பதென் நீரெனாக்
கிட்டி நின்று கிளத்திடு வார்சிலர். 23
778 கஞ்ச மேலய னாதிக் கடவுளர்
தஞ்ச மென்று சரண்புக வுண்டதோர்
நஞ்சின் வெய்யகொல் நங்கையர் கொங்கைமேல்
துஞ்சு கின்ற துயிலதென் பார்சிலர். 24
779 பின்ன ருள்ள பொருந்தொழி லாற்றுவான்
துன்னு வீரெனில் தொல்குழு ஆடவர்
நன்ன லத்தொடு நண்ணமின் னாரையே
இன்னல் செய்வதென் என்றுரைப் பார்சிலர். 25
780 சாற்றி யிங்கினி யாவதென் தையல்மீர்
ஏற்றின் மேவினர் எம்மை மணந்திட
மாற்றி லாத மலைமகள் போலயாம்
நோற்றி லேமென நொந்துயிர்ப் பார்சிலர். 26
781 தேவர் உய்யத் திருமணஞ் செய்திட
மேவு கின்றவர் மெல்லியல் மங்கையர்
ஆவி கொள்ள அமைந்தனர் இத்திறம்
ஏவர் செய்வ ரெனஉரைப் பார்சிலர். 27
782 மையல் வேழம் வயப்புலி போல்வரும்
வெய்யர் தம்மை மெலிவிப்ப தன்றியே
நொய்ய மான்புரை நோக்கியர்க் குந்துயர்
செய்யு மோவெனச் செப்புகின் றார்சிலர். 28
783 நங்கள் கொற்றவன் நற்றவத் தாற்பெறு
மங்கை பாலின் மணப்பொருட் டேகினர்
இங்கெ மக்கினி மைத்திறஞ் செய்கலார்
சங்க ரர்க்குத் தகாதிதென் பார்சிலர். 29
784 பேதை நீரவர் பேரிளம் பெண்மையோர்
ஆதி யந்தத் தணங்கினர் இன்னணம்
வீதி தோறும் விரவியத் தாருக
மாத ராரினும் மாதர்பெற் றாரரோ. 30
785 பண்டை வேதன் பதத்தினும் பேரெழில்
கொண்டு நின்றவக் கோநகர் வீதியின்
அண்டம் வெ·க அணிபடுத் திட்டவை
கண்டு போந்தனன் கண்ணுத லண்ணலே. 31
786 செய்ய தான செழுங்கம லாசனத்
தையல் காமுறத் தக்கன வீதிகள்
பைய நீங்கிப் பராபரை யாகிய
ஐயை கோயில் அணித்தென நண்ணினான். 32
787 வேந்தன் ஏவலின் வேதங்கள் இன்றுகா
றாய்ந்து நாடற் கரியவெம் மண்ணல்முன்
பூந்த டம்புனல் பூரித்த பல்குடம்
ஏந்தி வந்தனர் மாதவர் எண்ணிலார். 33
788 இருவ கைப்படு மெண்வகை மங்கலப்
பொருண்மை முற்றவும் பூவையர் பற்பல
வரிசை யிற்கொடு வந்தெதிர் எய்தினர்
அரிய யற்கரி தாகிய அண்ணல்முன். 34
789 அறுகு நிம்பம் அடிசில் அரிசனஞ்
சிறுகும் ஐயவி செம்பஞ்சின் வித்திவை
குறுகு தண்புனற் கொள்கல மேந்தியே
மறுகில் வந்தனர் மங்கையர் எண்ணிலார். 35
790 நெருக்கு பூண்முலை நேரிழை யாரவர்
பொருக்கெ னாவெதிர் போந்துயிர் யாவினும்
இருக்கும் ஆதி யிறைவனை யேத்தியே
தருக்கொ டேநின்று தந்தொழி லாற்றினார். 36
791 எங்கள் நாதன் எதிருற எண்ணிலா
மங்கை மார்சுடர் மன்னிய தட்டைகள்
செங்கை யிற்கொடு சென்று வலன்வளைஇ
அங்கண் மும்முறை அன்பொடு சுற்றினார். 37
792 ஆன காலை அருமணச் சாலைமுன்
ஞான நாயகன் நட்பொடு நண்ணியே
வானு லாய மழவிடை நீங்கினான்
யான மீதினின் றியாரும் இழிந்திட. 38
793 விடையி ழிந்துழி மேனைவிண் ணாட்டவர்
மடமின் னாரொடு வந்து பராபரன்
அடிகண் மீதினில் ஆன்பொழி பால்கொடு
கடிதின் ஆட்டினள் கைதொழு தேகினாள். 39
794 நாதன் அவ்வழி நந்திக ளுய்த்திடும்
பாது கைக்கட் பதமலர் சேர்த்தியே
போதன் மாதவன் பொற்கரந் தந்திடக்
கோதில் மாமணக் கோயிலுள் எய்தினான். 40
795 வேறு
பல்லிய மியம்ப வானோர் பரவவிஞ் சையர்கள் பாட
ஒல்லெனக் கணங்க ளார்ப்ப உருத்திரர் யாருஞ் சூழ
மெல்லெனச் செல்லும் அண்ணல் விரிஞ்சனும் மாலும் வேண்ட
மல்லலங் கோயி லுள்ள வனப்பெலாம் நோக்க லுற்றான். 41
796 உலாவுறு சுரும்பு மூசா ஒண்மலர்ச் சோலை வாலி
நிலாவுறழ் புனல்சே ரோடை நெடுந்தடம் நிறம்வே றாகிக்
குலாவுமண் டபங்க ளின்ன கொண்டியல் வனப்புக் காட்டிச்
சிலாதனன் மதலை கூறச் சென்றுசென் றிறைவன் கண்டான். 42
797 கண்டலுந் தம்போல் தங்கள் காமர்விண் ணகரந் தானும்
மண்டல வரைப்பின் வந்து வைகிய தாங்கொ லென்னா
அண்டர்கள் வாவி கேணி அகன்புனல் குடைந்துங் காமர்
தண்¢டலை யாடல் செய்துந் தலைத்தலை திரிதந் துற்றார். 43
798 நந்தியந் தேவு காட்ட நல்வனப் பனைத்தும் நோக்கிக்
கந்தமென் போது வேய்ந்த கடிமணச் சாலை தன்னில்
இந்திர நீலத் திட்ட எழில்நலத் தவிசி னும்பர்
வந்துவீற் றிருந்தான் எல்லா மறைகட்கும் மறையாய் நின்றான். 44
799 வீற்றிருந் தருளு மெல்லை வீரபத் திரன்தீப் பேரோன்
ஆற்றல்கொள் கூர்மாண் டேசன் ஆடகன் ஐயன் ஏனோர்
போற்றிசெய் அயனே மாலே புரந்தரன் முனிவர் தேவர்
ஏற்றிடு தவிசு தோறும் இருந்தனர் இறைவற் சூழ. 45
800 வேறு
அமையப்படும் அப்பொழு தத்தினில் ஆதி யண்ணல்
விமலத்திரு மாமணங் காணுற மேலை யண்டச்
சுமையுற்றிடும் எப்புவ னத்தருந் தொக்க நீரால்
இமையச்சயி லந்துளங் குற்ற திடுக்கண் எய்தி. 46
801 பொன்பா லிமையந் துளங்குறறுழிப் போற்று சேடன்
தன்பால் அவனி யெனலாந் துலைத்தட்டி ரண்டின்
வன்பால தான படபா லதுதாழ மற்றைத்
தென்பால தாற்ற உயர்ந்திட்டது தேவர் உட்க. 47
802 ஓங்குற் றதுதென் புவியாதலும் உம்ப ரெல்லாம்
ஏங்குற் றனர்மண் ணுகோர்கள் இடுக்க ணுற்றுத்
தீங்குற் றனவோ எமக்கென்று தியக்க முற்றார்
பாங்குற் றிடுதொன் முனிவோரும் பரிய லுற்றார். 48
803 இன்னோ ரெவருஞ் சிவனேயென் றிரங்க லோடும்
முன்னோனு மன்ன செயல்கண்டு முறுவ லெய்தி
அன்னோர் குறைநீத் திடநந்தியை நோக்கி ஆழி
தன்னோர் கரத்திற் செறித்தானைத் தருதி யென்றான். 49
804 என்றா னதுகாலையில் நந்தி யிறைஞ்சி யேகிக்
குன்றாத கும்ப முனிவன்றனைக் கூவ அங்கட்
சென்றான் அவனைக் கொடுபோய்ச்சிவன் முன்ன ருய்ப்ப
மன்றார் கழல்கள் பணிந்தான் மலயத்து வள்ளல். 50
805 தாழுந் தவத்தொன் றனைக்கண்ணுதற் சாமி நோக்கித்
தாழுங் குறியோய் இவண்யாவருஞ் சார்த லாலே
தாழும் புவிதக் கினமுத்தரஞ் சால ஓங்கத்
தாழுஞ் சுவர்க்க நிலனுந் நனிதாழு மன்றே. 51
806 தெருமந் துழலுந் தரைமன்னுயிர் செய்த தொல்லைக்
கருமந் தனைவிட் டயர்வெய்திக் கலங்குகின்ற
பெருமந் தரமே முதலாய பிறங்கல யாவும்
அருமந்த மேரு வரையுந்தவ றாகு மம்மா. 52
807 ஆனான் முனிகேள் ஒருநீயிவ் வசலம் நீங்கித்
தேனார் மருத வளமேயதென் னாடு நண்ணி
வானார் பொதிய மலைமேவுதி வைய மெல்லாம்
மேனா ளெனவே நிகராதி விளங்கு மென்றான். 53
808 பிறையொன்று வேணிப் பரனிங்கிது பேச லோடும்
அறையொன்று தீஞ்சொற் றமிழ்மாமுனி அச்ச மெய்திக்
குறையொன் றியான்செய் துளனோகொடி யேனை ஈண்டே
உறையென் றிலைசே ணிடைச்செல்ல வுரைத்தி எந்தாய். 54
809 என்னக் குறிய முனிவன்றனை எந்தை நோக்கி
உன்னைப் பொருவும் முனிவோர் உலகத்தி லுண்டோ
அன்னத் தவனும் உனைநேர்கிலன் ஆத லால்நீ
முன்னிற் றெவையுந் தவறின்றி முடித்தி மன்னோ. 55
810 வேறுற்றிடு தொன்முனி வோர்களின் விண்ணு ளோரின்
ஈறுற்றிடு மோவிது செய்கை எவர்க்கும் மேலாம்
பேறுற்ற நின்னால் முடிவாகும் பெயரு கென்று
கூறுற் றிடலும் முனியீது குறித்து ரைப்பான். 56
811 வான்செய்த மேனி நெடுமான் மகவேள்வி மன்னன்
தேன்செய்த கஞ்சத் தயனிற்கவிச் செய்கை தீயேன்
தான்செய் திடவே பணித்திட்டனை தன்மை யீதேல்
நான்செய் ததுவே தவம்போலும் நலத்த தெந்தாய். 57
812 ஈங்கிப் பணியை யளித்தாயெனில் எந்தை யுன்றன்
பாங்குற்ற புத்தேள் மணக்காட்சி பணிந்தி டாமல்
நீங்கற் கரிதாங் கவல்கின்றதென் னெஞ்ச மென்ன
ஓங்கற் கயிலைத் தனிநாயகன் ஓத லுற்றான். 58
813 வேறு
சிந்தைய தழுங்க லின்றித் தென்மலைச் சேறி அங்கண்
வந்துநம் வதுவைக் காட்சி வழங்குதும் மகிழ்ந்து காண்டி
நந்தமை யுன்னி யாங்கே நாள்சில இருத்தி பின்னர்
முந்தையி லெமது பாங்கர் வருதியால் முனிவ என்றான். 59
814 என்றிவை அமலன் செப்ப இசைதரு புலத்தினாகி
மன்றமர் கழல்க டம்மைப் பன்முறை வணக்கஞ் செய்து
நின்றுகை தொழுது போற்றி நெடிதுயிர்த் தரிதின் நீங்தித்
தென்றிசை யெல்லை நோக்கிச் சிறுமுனி கடிது போனான். 60
815 கிற்புறு மாயை வல்ல கிரவுஞ்ச வரையும் விந்த
வெற்பதும் வன்மை சிந்த வில்வல னொடுவா தாவி
கற்பனை யகன்று மாயக் காவிரி நீத்தத் தோடு
முற்பகல் படர்ந்த தென்ன முனிவரன் தென்பாற் போனான். 61
816 மறைபுகல் வேள்வி யாற்று மாவலி வலிகொள் காட்சிக்
குறியவன் துணையாய் மற்றோர் குறளுமுண் டாங்கொ லென்னா
நெறியெதிர் அவுணர் தம்முள் ஒருசிலர் நில்லா தோடச்
சிறுமுனி வானம் நீந்திச் சிமையமா மலயம் புக்கான். 62
817 முண்டகன் வலிகொண் டுற்ற மூவெயில் அழிப்பான் முன்னி
அண்டரும் புவன முற்று மாகிய கொடிஞ்சி மான்றேர்
பண்டொரு பதத்தா லூன்றிப் பாதலத் திட்ட அண்ணல்
கொண்டதொல் லுருவ முன்னிக் குறுமுனி அங்கண் உற்றான். 63
818 பொதியம தென்னும் வெற்பிற் புனிதமா முனிவன் வைகத்
துதியுறு வடபாற் றென்பாற் புவனியோர் துலைபோ லொப்ப
அதுபொழு துயிர்க ளானோர் அணங்கொரீஇ அரனை யேத்தி
மதிமகிழ்ந் தமர்ந்தார் தொல்லை வதுவையின் செய்கை சொல்வாம். 64
819 கதுமென மலயந் தன்னிற் கடமுனி சேற லோடு
முதுமைகொ ளிமையம் புக்க முனிவருஞ் சுரருந் தேர்ந்து
மதிமலி சடையெம் மண்ணல் வரம்பில்பே ரருளும் அன்னோன்
பதமுறை வழிபட் டோர்தம் பான்மையும் பரவ லுற்றர். 65
820 அங்கது பொழுது தன்னில் அரசன திசைவால் எங்கள்
சங்கரி ஐயை காப்பச் சசியென்பான் அடைப்பை ஏநதக்
கங்கைகள் கவரி வீசக் காளிகள் கவிகை பற்றப்
பங்கய மான்கை பற்றிப் பாரதி பரவ வந்தாள். 66
821 வந்திடு முலகை ஈன்றாள் வதுவையஞ் சாலை நண்ணி
அந்தமொ டாதி யில்லான் அடிகளை வணங்க முன்னோன்
முந்துறு தவிசின் றன்பான் முற்றிழை யிருத்தி யென்ன
இந்திரை முதலோர் யாரு மெத்திட இருத்நதா ளன்றே. 67
822 இருந்திடு மெல்ல தன்னில் ஏலவார் குழலி யென்னுங்
கருந்தடங் கண்ணி னாளைக் கண்ணுதற் பராப ரற்கு
விரைந்தருள் செய்ய வுன்னி வேந்தன திசைவான் மேனை
பெருந்தடம் புனலுஞ் சந்து மலர்களும் பிறவுந் தந்தாள். 68
823 தருதலு மிமையத் தண்ணல் தாழ்ந்தன னிருந்து தேவி
சிரகநீர் விடுப்ப ஆதி திருவடி விளக்கிச் சாந்தம்
விரைமலர் புனைந்து நின்ற வியன்கடன் பலவுஞ் செய்து
பொருவரு மகிழ்ச்சி யோடு பூசனை புரிந்தான் மாதோ. 69
824 பூசனை புரிந்த பின்னர்ப் புவனமீன் றாடன் கையைப்
பாசம தகன்ற தொல்சீர்ப் பரஞ்சுடர் கரத்துள் வைத்து
நேசமொ டளித்தே னென்னா நெடுமறை மனுக்கள் கூறி
வாசநல் லுதக முய்த்தான் மருகனென் றவனை யுன்னி. 70
825 எங்குள பொருளுங் கோளு மீதலுந் தானே யாகுஞ்
சங்கரன் உலக மெல்லாந் தந்திடுங் கன்னி தன்னை
மங்கல முறையாற் கொண்டான் மலைமகன் கொடுப்ப வென்றால்
அங்கவன் அருளின் நீர்மை யாரறிந் துரைக்கற் பாலார். 71
826 ஆனதோ ரமைந் தன்னில் ஆடினர் அமரர் மாதர்
கானம திசைத்தார் சித்தர் கந்தரு வத்த ரானோர்
ஏனைய விருவர் தாமு மேழிசைக் கீதஞ் செய்தார்
வானவர் முனிவர் யாரும் மறைகளை யறைய லுற்றார். 72
827 அல்லியங் கமலந் தன்னில் அரிவையும் புண்டரீக
வல்லியும் மற்று ளோரும் மங்கலம் பாட லுற்றார்
சல்லரி திமிலை காளந் தண்ணுமை சங்க மாதிப்
பல்லிய மியம்பிச் சூழ்ந்து பாரிடத் தொகையோர் ஆர்த்தார். 73
828 அதுபொழு திமையத் தண்ணல் ஆபொழிந் திட்ட தீம்பால்
கதலிமாப் பலவின் தீய கனிவகை நெய்தே னாதி
மதுரமாஞ் சுவையின் வர்க்கம் பரம்பில வீற்று வீற்று
நிதிகொள்பா சனத்தி லிட்டு நிருமலன் முன்ன ருத்தான். 74
829 மறைநெறி யினைய வெல்லாம் மலைமக னுய்த்து மற்றெம்
மிறையிவை நுகர்தல் வேண்டு மெனத்தொழ இனிதே யென்னாக்
கறைமிடற் றணிந்த மேலோன் கரத்தினால் அவற்றைத் தொட்டாங்
குறுபெருங் கருணை செய்தே உவந்தனங் கோடி யென்றான். 75
830 தொன்மைகொ ளருளின் நீரால் துய்த்தன வாகத் தொட்ட
நின்மல வுணவை மன்னன் நேயமோ டங்கண் மாற்றி
இன்மலர் கந்தந் தீர்த்த மிவற்றொடு மொருசா ருய்ப்ப
நன்மகிழ் வோடு வேதா நாயகற் குரைக்க லுற்றான். 76
831 படங்கிளர் சேடன் தாங்கும் பார்விசும் புறையும் நீரார்
அடங்கலும் மணஞ்செய் போதத் தவ்வவர்¢கடுத்த தாற்றி
நடந்திடு மொழுக்கம் எந்தை நடத்திடல் வேண்டும் மன்றற்
சடஙகினி யுளது முற்றத் தண்ணளி புரிதி யென்றான். 77
832 என்னலு முறுவல் செய்தே இறையருள் புரிய வேதன்
வன்னியு மதற்கு வேண்டும் பொருள்களும் மரபிற் றந்து
பொன்னொடு புகரும் ஏனை முனிவரும் புடையிற் சூழத்
தன்னிக ரில்லா மன்றற் சடங்கெலாம் இயற்றல் செய்தான். 78
833 அந்தணர் கரண மெல்லா மாற்றியே முடிந்த பின்னர்த்
தந்தையுந் தாயுமாகி உலகெலாந் தந்தோர் தம்மை
முந்துற அயனும் பின்னர் முகுந்தனு மதற்குப் பின்னர்
இந்திரன் முனிவர் வானோர் யாவரும் இறைஞ்ச லுற்றார். 79
834 அரனுடன் உமையா டன்னை யாங்கவர் பணித லோடும்
உருகெழு நிலையுட் கொண்ட உருத்திரத் தலைவ ரேனோர்
பரிசனர் கணங்கள் யாரும் பணிந்தனர் அதன்பின் னாகக்
கிரியுறை யிறைவன் மைந்தன் கேளொடு வணக்கஞ் செய்தான். 80
835 தமதுமுன் பணிகின் றோர்கள் தமக்கெலா மீசன் றானும்
உமையும்நல் லருளைச் செய்ய வோர்ந்திது பதமென் றுன்னி
இமகிரி புரந்த வண்ணல் ஈண்டுறை நீரர்க் கெல்லாம்
அமலன துணவு மற்றும் அளிப்பனென் றகத்துட் கொண்டான். 81
836 ஆய்ந்திடு மறைகள் போற்று மாதிதன் தீர்த்தம் போது
சாந்தமொ டவிகள் தம்மைச் சதுர்முகன் முதல்வா னோர்க்கும்
வாய்ந்திடு முனிவர் யார்க்கும் மற்றுளார் தமக்கும் மன்னன்
ஈந்திட வவற்றை அன்னோ ரியாவரும் அணிந்துட் கொண்டார். 82
837 ஆலமா மிடற்றோற் கான அமலமாம் பொருளை யேற்றுச்
சீலமோ டணிந்துட் கொண்டு சிந்தையுள் மகிழ்ந்து நந்தம்
மூலமாம் வினைகட் கின்றே முடிபொருங் குற்ற தென்றார்
மேலவர் அன்று பெற்ற வியப்பினை விளம்ப லாமோ. 83
838 அனையதோர் காலை தன்னில் அமலமாம் பொருள்க டம்மைப்
பனிவரை யிறைவன் றானும் பன்னியுந் தமரு ளாரும்
எனைவரு மருந்தி மேற்கொண் டெல்லையில் இன்ப முற்றார்
வினைவலி யொருவி மேலாம் வீடுபே றடைந்து வார்போல். 84
839 தன்னுறு கணவன் துஞ்சத் தாபத நிலைய ளாகி
இன்னலை யடைந்தங் குற்ற இரதியவ் வெல்லை வந்து
மன்னுயிர் முழுது மீன்ற மங்கையை மணந்த வள்ளல்
பொன்னடி வணங்கித் தீயேன் புன்கணைத் தவிர்த்தி யென்றாள். 85
840 சீருறு கணவன் இல்லாள் செப்பிய மாற்றங் கேளா
ஆருயிர் முழுதும் நின்றே யனைத்தையு முணர்ந்து கூட்டும்
பேரரு ளுடைய நாதன் பேதுறல் மடந்தை யென்னா
மாரன்வந் துதிக்கும் வண்ணம் மனத்திடை நினைந்தா னன்றே. 86
841 நினைதரு மெல்லை தன்னில் நெடியமான் முதலா வுள்ள
அனைவரு மருட்கை யெய்த அழுங்கிய இரதி நோக்கி
மனமகிழ் சிறந்து கார்காண் மஞ்ஞையிற் களிப்ப அங்கட்
குனிசிலை கொண்ட மாரன் கொம்மெனத் தோன்றி னானே. 87
842 முன்பொடு தோன்று மாரன் முதல்வியோ டிருந்த நாதன்
பொன்புனை கமலத் தாள்முன் போந்தனன் தாழ்ந்து போற்றி
என்பிழை பொறுத்தி யென்ன யாம்உனை முனியின் அன்றோ
பின்பது தணிவ துள்ளம் பேதுறல் மைந்த என்றான். 88
843 எரிபுனை நமது நோக்கால் இறந்தநன் னுடலம் நீறாய்
விரைவொடு போயிற் றன்றே வேண்டினள் இரதி யன்னாட்
குருவமா யிருத்தி ஏனை உம்பரோ டிம்மபர்க் கெல்லாம்
அருவினை யாகி யுன்றன் அரசியல் புரிதி என்றான். 89
844 செய்வினை முறையால் ஈசன் சித்தசற் கினைய கூறி
அவ்வவன் அரசுஞ் சீரு மாணையும் வலியும் நல்கி
மைவிழி யிரதி யோடு மன்னுதொல் புரத்துச் செல்ல
மெய்விடை யுதவ அன்னோர் விரைந்துடன் தொழுது போனார். 90
845 இரதியும் மதனு மேக இந்திர நீலத் திட்ட
அரியணை யிருந்த நாதன் அம்மையொ டிழிந்து அன்னேர்
திருவுரு வுடைய மேலோர் தேவர்மா முனிவ ரெனோர்
பரவினர் செல்லப் பூதர் பல்லியந் தெழிப்பச் சென்றான். 91
846 மன்னுயிர்ச் குயிராய் நின்றோன் மால்விடை யேறி மாதைக்
தன்னொரு பாங்கிற் கொண்டு தழீஇக்கொடு நடத்தி வானோர்
தொன்னிலை யமைந்து செல்லத் துவன்றியே கணங்கள் சுற்றப்
பொன்னிய லிமையந் தீர்ந்து வௌ¢ளியம் பொருப்பில் வந்தான். 92
847 அன்னதோர் காலை மாலை அயனைவெற் பரசை வேள்வி
மன்னனை அமரர் தம்மை முனிவரை மாத ரார்கள்
என்னவர் தமையுந் தத்த மிடந்தொறு மேகும் வண்ணம்
முன்னுற விடுத்தா னென்ப மூலமும் முடிவு மிலோன். 93
848 அடுகன லவன்கூர் மாண்டன் ஆடகன் ஐயன் சிம்புள்
வடிவின னாதி யான வரம்பிலா உருத்தி ரர்க்குங்
கடகரி முகத்தி னாற்குங் கணங்களில் தலைமை யோர்க்கும்
விடையினை யுதவி ஐயன் வியன்பெருங் கோயில் புக்கான். 94
849 ஏறெனுங் கடவுள் மீதில் இம்மென இழிந்து அன்னோர்
கூறுடை முதல்வி யோடுங் கோநகர் நடுவ ணெய்தி
ஆறணி சடையெம் மண்ணல் அரியணைப் பீட மீதில்
வீறொடு தொன்மை யேபோல் வீற்றிருந் தருளி னானே. 95
850 அன்பினர்க் கௌ¤வந் துள்ள ஆதியம் பரமன் மாது
அன்புடை யாகச் சீயத் தவிசின்வீற் றிருத்த லோடுந்
துன்பகன் றிருபா லாகித் துவன்றிய உயிர்க ளெல்லாம்
இன்பொடு போக மாற்றி இனிதமர் வுற்ற வன்றே. 96
ஆகத் திருவிருத்தம் - 850
11. திருவவதாரப் படலம் (851- 977)

851 பற்பக லினைய வாற்றாற் படர்தலும் பின்னோர் வைகல்
முற்படும் அயன்மால் வேள்வி முதலவன் திசைகாப் பாளர்
சொற்படு முனிவர் வானோர் யாவருந் தொல்லை மேரு
வெற்பினிற் குழுமிச் சூரால் மிகமெலிந் திரங்கிச் சொல்வார். 1
852 உலகினை அவுணர்க் கீந்தே யோகிபோல் வைகி நம்பால்
மெலிவினைப் படுத்தி யாம்போய் வேண்டலும் இரக்க மெய்தி
மலைமக டன்னை வேட்டான் மைந்தனைத் தந்து நம்மைத்
தலையளி புரியான் வாளா இருப்பதென் தாணு வானோன். 2
853 இவறலு மிகலு மின்றி யார்க்குமோர் பெற்றித் ததாகி
அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை நல்குஞ்
சிவனையாம் வெறுத்தல் குற்றஞ் சிறந்தநோன் பியற்றி டாதே
தவறுசெய் தனமென் றெம்மை நோவதே தக்க தென்றார். 3
854 ஆயினு மவன்றாள் போற்றி அடையின்நன் கனைத்து மாகுந்
தீயன வகலு மீது திண்ணமாம் அதனால் இன்னுங்
காய்கதிர் மதிசூழ் கின்ற கயிலைய கிரியின் முக்கண்
நாயகற் கிதனைக் கூற நாமெலாம் போது மென்றார். 4
855 போதர விசைந்த காலைப் பொன்னலர் கமலப் புத்தேள்
மேதகு பரமன் செய்கை வினவியே ஏகல் வேண்டுந்
தூதுவ னொருவன் றன்னைத் தூண்டிமுன் னறிது மென்றே
ஊதையங் கடவு டன்னை நோக்கியீ துரைக்க லுற்றான். 5
856 வடவரை யதனில் மூன்று மாண்குவ டெறிந்து வௌவி
உடல்சின வரவ முட்க உதவியி லுய்த்த மைந்த
படர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பண்ணவன் செயலை வௌ¢ளிக்
கடிவரை நகரத் தெய்திக் கண்டனை மீடி யென்றான். 6
857 பல்லிதழ் வனச மேலோன் இனையன பகர நோன்றாள்
வில்லுடை மதன வேளை விழித்தடு கடவுள் முன்னஞ்
செல்லுவ தரிது செல்லில் தீமையே பயக்கு மென்பால்
ஒல்லுவ தன்றிச் செய்கை உள்ளமும் வெருவு மென்றான். 7
858 கூற்றிது நிகழ்ந்த வேலைக் கோகன தத்து மேலோன்
காற்றினுக் கரசை நோக்கிக் கம்பலை கொள்ளேல் யாண்டும்
ஊற்றமொ டுலவல் செய்யு பொருவனை நீயே யன்றி
வீற்றொரு தேவ ருண்டோ மேலிது புரிதற் பாலோர். 8
859 உற்றுழி உதவி செய்வோர் உலப்புறா தெவையும் ஈவோர்
அற்றமில் தவத்தா றுற்றோர் அமர்புரி வீர ராவோர்
மற்றொரு பொருளும் வெ·கார் வருத்தமு மோரார் ஆவி
இற்றிட வரினும் எண்ணார் இனிதென மகிழ்வ ரன்றே. 9
860 ஆதலின் எங்கட் கெல்லாம் ஆற்றிடு முதவிக் காகப்
போதியால் ஐய என்று புகழ்ச்சியால் இனைய பல்வே
றேதிடு பொருண்மை கூற இசைந்தனன் எழுந்து தீயின்
காதலன் விடைகொண் டேகிக் கயிலைமால் வரையிற் சென்றான். 10
861 குன்றதன் புடையில் வீழுங் குரைபுன லாற்றின் ஆடி
மன்றலங் காமர் காவின் மலர்மணம் அளாவி வாரித்
தென்றியா யசைந்து மெல்லச் சினகரம் புகுது மெல்லை
நின்றதோர் நந்தி காணூஉ வுரப்பினன் நெடிது சீறி. 11
862 பொற்பிரம் பொன்று பற்றிப் பொலன்முதற் கடையைப் போற்றி
நிற்புறும் ஆணை வள்ளல் நெடுஞ்சினத் துரப்ப லோடுங்
கற்பொழி யெழிலி கான்ற கனையொலி கேட்ட பாம்பின்
முன்படர் கின்ற காலோன் மொய்ம்பிலன் வெருவி வீழ்ந்தான். 12
863 வேறு
ஒல்லென வீழ்வுறும் உயிர்ப்பின் காவலன்
எல்லையில அச்சமொ டிரங்கி யேயெழீஇத்
தொல்லையின் உருக்கொடு தோன்றி நந்திதன்
மல்லலங் கழல்களை வணங்கிக் கூறுவான். 13
864 மாலயன் மகபதி வானு ளோரெலாம்
ஆலமர் கடவுளை யடைதல் முன்னிநீ
காலைய தறிந்தனை கடிது செல்கென
மேலுரை செய்தனர் வினையி னேனுடன் 14
865 கறுத்திடு மிடறுடைக் கடவு ளாடலைக்
குறிக்கரி தஞ்சுவல் குறுக என்றியான்
மறுத்தனன் அனையர்தம் வருத்தங் கூறியே
ஒறுத்தெனை விடுத்தன ருடைய வன்மையால். 15
866 ஆதலின் அடியனேன் அஞ்சி யஞ்சியே
மேகு தென்றியாய் மெல்ல வந்தனன்
ஓதிட நினைந்திலன் உனக்கு மற்றிது
பேதைமை உயர்வினேன் பிழைபொ றுத்திநீ. 16
867 தானவர் தொழவரு தகையில் சூரனால்
மானம தொருவியே வருத்துற் றோய்ந்தனன்
ஆனதொன் றுணர்கிலேன் அறிவு மாழ்கினேன்
கூனைய தேவரு மினைய நீரரே. 17
868 அறைதரு கணத்தரு ளாதி யாகிய
இறைவநின் முனிவினுக் கிலக்குற் றாரிலை
சிறியவென் பொருட்டினாற் சீற்றங் கோடியோ
பொறைபுரிந் தருளெனப் போற்றி வேண்டினான். 18
869 ஆண்டகை நந்தியெம் மடிகள் அவ்வழி
மூண்டெழு தன்பெரு முனிவு தீர்ந்தியாம்
ஈண்டுநின் னுயிர்தனை யீதும் நிற்கலை
மீண்டனை போகென விடைதந் தேவினான். 19
870 சீரிய நந்தியந் தேவன் ஏவலும்
மாருதன் அவனடி வணங்கி வல்லையின்
நேரறு கயிலையின் நீங்கி நீடுபொன்
மேருவில் விண்ணவர் குழுவை மேவினான். 20
871 மேவரு காலினான் விரிஞ்சன் மாயவன்
பூவடி வந்தனை புரிந்து நந்திதன்
காவலின் வன்மையும் நிகழ்ந்த காரியம்
யாவதும் முறைபட இயம்பி னானரோ. 21
872 காற்றுரை வினவியே கமலக் கண்ணணும்
நாற்றிசை முகத்தனும் நாகர் செம்மலுஞ்
சாற்றருந் துன்பினர் தம்மி லோர்ந்திடாத்
தேற்றமொ டினையன செப்பல் மேயினார். 22
873 எந்தைதன் செய்கைதோர்ந் தேகு நீயென
வெந்திறல் மருத்தினை விடுத்தும் ஆங்கவன்
நந்திதன் னாணையால் நடுக்க முற்றிவண்
வந்தனன் அச்சுறு மனத்த னாகியே. 23
874 மன்னிய கயிலைமால் வரையின் யாமெலாம்
இன்னினி யேகியே ஈசன் றன்முனம்
உன்னருங் காலமொ டுற்ற நங்குறை
பன்னுதல் துணிபெனப் பலருங் கூறினார். 24
875 இவ்வகை யவரெலாம் இசைந்து செம்பொனின்
மெய்வரை நீங்கியே வௌ¢ளி வெற்பினில்
தெய்வதக் கோயின்முன் சென்று நந்தியை
அவ்விடை தொழுதிவை அறைதல் மேயினார். 25
876 வேறு
நந்திந் தேவுகேள் நங்கள்பால் துன்பெலாஞ்
சிந்தைசெய் திடுதியத் தேவதே வற்கியாம்
வந்தவா றோதியே வல்லைநீ எமையவன்
முந்துறக் காட்டெனா முகமனோ டுரைசெய்தார். 26
877 மற்றிவா றுரைசெய்யும் வானவத் தொகையினை
நிற்றிரால் என்றவண் நிறுவியே உறையுள்போய்ச்
கற்றைவார் சடைமுடிக் கண்ணுதற் கடவுடன்
பொற்றடந் தாள்களைத் தொழுதனன் புகலுவான். 27
878 அண்ணலே உனதுபொன் னடிகளைக் காணிய
விண்ணுளோர் யாவரும் வேந்தன்மா லயனொடு
நண்ணினா ரென்றலும் நந்தியைத் தெரிகுறீஇத்
கண்ணிலா வேணியான் தருதியென் றருள்செய்தான். 28
879 அருள்புரிந் திடுதலும் ஆதியம் பண்ணவன்
திருமலர்த் தாள்களைச் சென்னியிற் சூடியே
விரைவுடன் மீண்டுறா வேதன்மா லாதியாஞ்
சுரரெலாம் வம்மெனத் தூயவன் கூவினான். 29
880 கூவியே அருடலுங் கொண்டல்பே ரொலியினால்
தாவிலா மகிழ்வுறுஞ் சாதகத் தன்மையாய்ப்
பூவினா யகன்முதற் புகலும்வா னவரெலாந்
தேவதே வன்முனஞ் செல்லுதல் மேயினார். 30
881 அம்மையோர் பங்குற அரியணைக் கண்ணுறும்
எம்மையாள் இறைவன்முன் னெய்தியே ஆங்கவன்
செம்மைசேர் தாள்களைச் சென்னியால் தாழ்ந்தெழீஇப்
பொய்ம்மைதீர் அன்பினால் இனையவா போற்றுவார். 31
882 வேறு
நோக்கினும் நுழைகிலை நுவலு கின்றதோர்
வாக்கினும் அமைகிலை மதிப்ப வொண்கிலை
நீக்கரும் நிலைமையின் நிற்றி எந்தைநீ
ஆகிய மாயமீ தறிகி லேமரோ. 32
883 இருமையு மொருமையும் இரண்டு மொன்றிய
ஒருமையு மன்றென உலகம் யாவையும்
பெருமையின் இயற்யி பெரு நின்செயல்
அருமறை யானவும் அறிதற் பாலவோ. 33
884 உருவொடு தொழில்பெய ரொன்று மின்றியே
பரவிய நீயவை பரித்து நிற்பது
விரவிய வுயிர்க்கெலாம் வீடு தந்திடுங்
கருணைய தேயலாற் கருமம் யாவதே. 34
885 அவ்வுயிர் யாவுநின் னருளி லாவழிச்
செய்வினை புரிகில சிறிதும் ஆதலால்
வெவ்விய நயப்பொடு வெறுப்பி லாதநீ
எவ்வகை யோவுல கியற்றுந் தன்மையே. 35
886 முன்னதின் முன்னென மொழிது மேயெனிற்
பின்னதின் பின்னுமாப் பேச நிற்றியால்
அன்னவை யேயெனில் ஒழிந்த தல்லையோ
என்னென நின்னையாம் ஏத்து கின்றதே. 36
887 புல்லிய புரம்பொடித் ததுவுங் காமனை
ஒல்லென எரித்ததும் உனக்குச் சீர்த்தியோ
எல்லையில் விதிமுத லெனைத்தும் ஈண்டுநின்
நல்லருள் ஆணையே நடாத்து மென்கையால். 37
888 எங்களை முன்னரே இயல்பின் ஈந்தனை
எங்களை இவ்வர சியற்று வித்தனை
எங்களொ டொருவனென் றிருத்தி நின்செயல்
எங்களின் அறிவரி தென்று போற்றினார். 38
889 வேறு
அவ்வகை இமர ரெல்லாம் அன்சய் தேத்து மெல்லை
மைவரு மிடற்றுப் புத்தேள் மற்றவர் வதன நோக்கி
நொவ்வுற லெய்திச் சிந்தை நுணங்கினீர் நுங்கட் கின்னே
எவ்வர மெனினும் ஈதும் வேண்டிய திசைத்தி ரென்றான். 39
890 என்றலும் அமரர் சொல்வார் யாமெலா மிந்நாள் காறும்
வன்றிறல் அவுணர் தம்மால் வருந்தினம் அதனை நீங்கி
நன்றிகொள் தொல் ஆக்கம் நண்ணுவா னாக நின்பால்
ஒன்றொரு வரம்வேண் டுற்றாம் அதனியல் புரைத்து மன்றே. 40
891 மும்மையின் உயிர்கள் பெற்ற முகிழ்முலைக் கன்னியாகும்
அம்மையை மணந்த தன்மை ஆங்கவள் இடமா ஈங்கோர்
செம்மலை யளித்தற் கன்றே தீவினைக் கடற்பட் டுள்ள
எம்மையாளு வதற் கேதுக் காட்டிய இயற்கை யல்லால். 41
892 ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும்
ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி
வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார். 42
893 வந்திக்கு மலரோ னாதி வானவர் உரைத்தல் கேளாப்
புந்திக்குள் இடர்செய் யற்க புதல்வனைத் தருது மென்னா
அந்திக்கு நிகர்மெய் யண்ணல் அருள்புரிந் தறிஞ ராயோர்
சிந்திக்கு தனது தொல்லைத் திருமுகம் ஆறுங் கொண்டான். 43
894 நிற்புறும் அமரர் யாரும் நெஞ்சுதுண் ணென்ன நீடும்
அற்புத நீர ராகி அருள்முறை யுன்னிப் போற்றச்
சிற்பரன் றான்கொண் டுள்ள திருமுகம் ஆறு தன்னில்
பொற்புறு நுதற்கண் டோறும் புலிங்கமொன் றொன்று தந்தான். 44
895 ஆவதோர் காலை ஈசன் அறுமுக நுதற்கண் மாட்டே
மூவிரு பொறிகள் தோன்றி முளரியான் முதலா வுள்ளோர்
ஏவரும் அணுகல் செல்லா எல்லைதீர் வெம்மைத் தாகிப்
பூவுல கண்ட முற்றும் பொள்ளெனப் பராய வன்றே. 45
896 மாதண்டங் குலவு நேமி வால்வளை வயிர வொள்வாள்
கோதண்டம் பரித்தோன் வேதாக் குறித்துணர் வரிய சோதி
வேதண்டம் பரவிற் றென்ன மேதினி சூந்ந்து விண்போய்
மூதண்டங் காறுஞ் சென்ற முதல்வன்கண் ணுதலிற் செந்தீ. 46
897 வேறு
மங்கையோர் பங்குடை வள்ளல் ஏந்திய
செங்கனல் ஊழியிற் செறிவ தாமென
அங்கவன் விழிபொழி அனலம் யாவையும்
எங்குள வுலகமும் ஈண்ட லுற்றவே. 47
898 ஆங்கனந் தழலெழ அகில முற்றுமாய்
ஓங்கிய கால்களும் உலைவுற் றோய்ந்தன
வாங்கிய திரைக்கடல் வறந்த தாயிடைத்
தீங்கனல் வடவையுஞ் செருக்கு நீங்கிற்றால். 48
899 பக்கன பாரகம் பதலை முற்றுற
நெக்கன பணிகள்மெய் நௌ¤த்து நீங்கிய
திக்கயம் அரற்றியே தியக்க முற்றன
தொக்கன உயிர்தொகை துளக்க முற்றவே. 49
900 காரண மில்லவன் கண்ணிற் கான்றதீப்
பேரருள் புரிந்திடப் பிறந்த பான்மையால்
ஓருயிர் தன்மையும் ஒழிவு செய்தில
ஆரையும் எவற்றையும் அச்சஞ் செய்தவே. 50
901 அன்னதன் வெம்மைகண் டமலன் பாங்குறை
கன்னியும் வியர்த்தனள் கலங்கி யேயெழீஇப்
பொன்னடி நூபுரம் புலம்பித் தாக்குறத்
தன்தோ ருறையுளைச் சார ஓடினாள். 51
902 முண்டக னாதியா முன்னர் நின்றுள
அண்டர்கள் யாருமவ் வழல்கண் டஞ்சியே
விண்டனர் தலைத்தலை வெருவி யோடினார்
பண்டெழு விடத்தினாற் பட்ட பான்மைபோல். 52
903 தீங்கனல் அடர்தலுஞ செம்பொற் கோயிலின்
யாங்கணு மாகியே இரிந்த பண்ணவர்
வீங்கிய வுயிர்ப்பொடு மீண்டும் எந்தைதன்
பாங்கரில் வந்தனர் பரியும் நெஞ்சினார். 53
904 வலைத்தலை மானென வன்னி சூழ்ந்துழித்
தலைத்தலை இரிந்துளோர் தம்மின் மீள்குறா
நலத்தகு கண்ணுதல் நாதற் சேர்ந்தனர்
கலைத்தனை அகன்றிடாக் காகம் போலவே. 54
905 தோற்றிய நுதல்விச் சுடரின் சூழ்வினுக்
காற்றல ராகியே அடைந்த வானவர்
நாற்றடம புயமுடை ஞான நாயகற்
போற்றிசெய் தினையன புகல்வ தாயினார். 55
906 வெந்திற லவுணரை வீட்டு தற்கொரு
மைந்தனை அருள்கென வந்து வேண்டினேம்
அந்தமிர் அழலைநீ யருடல் செய்தனை
எந்தையே எங்ஙனம் யாங்க ளுய்வதே. 56
907 பங்குறை உமையவள் வாயி யின்வரு
கங்கையெவ் புலகமுங் கலந்த தாமென
இங்குநின் னுதல்விழி யிருந்து நீங்கிய
பொங்கழ லெங்கணும் பொள்ளென் றீண்டியே. 57
908 கற்றையஞ் சுடர்பொழி கனல்க ளின்றொகை
சுற்றியெவ் வுலகமுந் துவன்ற லுற்றவால்
மற்றொரு கணத்தவை மாற்றி டாயெனின்
முற்றுயிர்த் தொகையையும் முடிவு செய்யுமால். 58
909 விஞ்சிய பேரழல் வெம்மை யாற்றலா
தஞ்சினம் இரிந்தயாம் ஐய நின்னிரு
செஞ்சரண் அடைந்தனம் தெரியின் நீயலால்
தஞ்சம துளதுகொல் எம்மைத் தாங்கவே. 59
910 மலக்குறு மனத்தினேம் வருத்த முற்றவும்
உலக்குற நீக்குநீ யொல்லை எம்மிடை
அலக்கண தியற்றுதி யாயின் அன்னதை
விலக்குறு நீரினார் வேற யாவரே. 60
911 நிறைமுடிப் பணிமிசை நிலனும் வானமும்
இறைமுடிக் கின்றவிவ் வெரியை நீக்கியே
பிறைமுடிக் கொண்டிடு பெரும எம்முடைக்
குறைமுடித் தருளெனக் கூறி வேண்டினார். 61
912 அஞ்சலி னவர்புகழ் அண்ண லாதியோர்
அஞ்சலி செய்திவை யறைந்து வேண்டலும்
அஞ்சலி லஞ்சடை யணிந்த நாயகன்
அஞ்சலிர் என்றுகை அமைத்துக் கூறினான். 62
913 பொன்மலை வில்லினான் புதிதின் வந்திடு
தன்முகம் ஐந்தையுங் கரந்து தாவில்சீர்
நன்முக மொன்றொடு நண்ணி யத்துணைத்
தொன்மையின் இயற்கையாய்த் தோன்றி வைகினான். 63
914 தன்னருள் நிலைமையாற் சண்மு கத்திடை
நன்னுதல் விழிகளின் நல்கு தீப்பொறி
இந்நில வரைப்புவான் ஈண்டல் உற்றவை
முன்னுற வரும்வகை முதல்வன் முன்னினான். 64
915 அந்தியம் பெருநிறத் தமலன் அவ்வகை
சிந்தைகொண் டிடுவழிச் செறிந்த பேரழன்
முந்தையின் வெம்பொறி மூவி ரண்டவாய்
வந்து முன் குறுகலும் மகிழ்ந்து நோக்கினான். 65
916 ஆதகு காலையில் அமரர் தங்களுள்
ஓதகு செயலிலா உலவைத் தேவையும்
மூதகு தீயையும் முகத்தை நோக்குறா
மேதகு கருணையால் விமலன் கூறுவான். 66
917 நீங்களிச் சுடர்களை நெறியிற் றாங்கியே
வீங்குநீர்க் கங்கையில் விடுத்திர் அன்னவை
ஆங்கவள் சரணம் அமர வுய்க்குமால்
ஈங்கிது நும்பணி யென்றி யம்பினான். 67
918 கூற்றுயி ருண்டதாட் குழகன் இவ்வகை
சாற்றிய துணர்தலுந் தாழ்ந்து மும்முறை
போற்றினர் நடுங்கினர் புலம்பு நெஞ்சினர்
காற்றொடு கனலிவை கழறல் மேயினார். 68
919 ஒருநொடி யளவையின் உலகம் யாவுமாய்ப்
பெருகிய இத்தழல் பெரும நின்னுடைத்
திருவருள் நிலைமையாற் சிறுகிற் றாதலால்
அரிதரி தடியரேம் ஆற்ற லாகுமோ. 69
920 ஈற்றினை யுலகினுக் கிழைக்கு நின்கணே
தோற்றிய கனலினைச் சுமத்தற் கோர்கணம்
ஆற்றலை யுடையரோ அவனி கேள்வனும்
நாற்றிசை முகமுடை நளினத் தேவுமே. 70
921 பண்டெழு விடத்தினிற் பரந்த தீச்சுடர்
கண்டலும் நின்றிலங் கவலுற் றோடினம்
அண்டவும் வெருவுதும் அவற்றை யாந்தலைக்
கொண்டனம் ஏகுதல் கூடற் பாலதோ. 71
922 அப்பெருங் கனலினை அடைதற் குன்னினும்
வெப்புறும் எமதுளம் வியர்க்கும் யாக்கையும்
எப்பரி சேந்துவம் யாங்கள் என்றலுந்
துப்புறழ் படர்சடைப் பகவன் சொல்லுவான். 72
923 ஒன்றொரு நொடியினின் உலக முற்றுமாய்த்
துன்றிய இச்சடர் சுமர்ந்து கங்கையிற்
சென்றிட நுங்கள்பால் திண்மை யெய்துக
என்றலும் நன்றென இசைந்து போற்றினார். 73
924 மற்றது தெரிதலும் மால யன்முதற்
சொற்றிடும் அமரர்கள் துளக்கம் நீங்குறா
இற்றது கொல்லெம தின்னல் இன்றெனா
உற்றனர் உவகையை யுடலம் விம்மினார். 74
925 ஆங்கனம் அவர்தமை ஆதி நோக்கியித்
தீங்கனல் சரவணஞ் செறிந்தொர் செம்மலாய்
ஓங்குபு சூர்கிளைக் கொழிவு செய்யுமால்
ஈங்கினி யாவரும் ஏகு வீரென்றான். 75
926 இறையவன் இனையன இயம்ப உய்ந்தனங்
குறையிலம் இனியெனக் கூறிக் கஞ்சமேல்
உறைபவ னாதியாம் உம்பர் அன்னவன்
அறைகழ லடிதொழு தங்கண் நீங்கினார். 76
927 முன்னுற மாருதன் முதல்வன் றாள்களை
வன்னியந் தேவொடு வணங்கி யேயெழீஇ
அன்னவன் அருளினாற் சுடர்கள் ஆறையுஞ்
சென்னியின் மேறகொடு சேறல் மேயினான். 77
928 அரனுறு கடிநகர் அதனைத் துர்ந்தொராய்
எரிகெழு சுடர்முடி யேந்தி மாருதன்
வருதலும் அயன்முதல் வானு ளோரெலாங்
கருதரு மகிவொடு கண்டு கூறுவார். 78
929 செந்தழல் மேனியன் தீயின் வண்ணமாத்
தந்தனன் குமரனைத் தனாது கண்ணினால்
உய்ந்திட யாமெலாம் உலகின் முன்னரே
வந்திடும் வீரனாம் மதலை மானவே. 79
930 தொன்னிலை யாம்பெறச் சூரன் பாடுற
இன்னமுஞ் சில்பகல் இருத்த லால்அரன்
தன்னிகர் திருமகன் சரவ ணத்திடை
மன்னுபு குழவியாய் வளர நல்கினான். 80
931 போற்றலர் புரமடு புனித நாயகன்
ஆற்றிடு செய்கைகள் அருளின் நீர்மையால்
ஏற்றதோர் சான்றிவண் எரியைத் தந்ததுஞ்
சாற்றருங் கருணையிற் றலைமை யானதே. 81
932 என்றிவை பற்பல இயம்பி இன்னினிப்
பொன்றினர் அவுணர்கள் புலம்பு நங்குறை
நன்றிவண் முடிந்தது நாமும் அத்தடஞ்
சென்றிடு வாமெனச் செப்பி னாரரோ. 82
933 உருப்பம தாகிய ஔ¤று தீஞ்சுடர்
தரிப்பதோர் மருத்துவன் றம்முன் சென்றிடத்
திருப்பயில் மான்முதற் றேவர் வௌ¢ளியம்
பருப்பதம் ஒருவியே படர்தல் மேயினார். 83
934 இறத்தலுங் கன்னலொன் றெரியின் தீஞ்சுடர்
பொறுத்திடல் அரிதெனப் புலம்பிக் காலினோன்
மறுத்தவிர் பிறைமுடி வரதன் ஆணையால்
திறற்படு வன்னிதன் சென்னி செர்த்தினான். 84
935 சேர்த்தலும் ஒருபதந் தீயின் பண்ணவன்
வேர்த்துடல் புழுங்குற மெலிவில் தாங்கியே
பேர்த்தொரு பதமிடப் பெறாது வல்லைபோய்
ஆர்த்திடு கங்கையின் அகத்துய்த் தானரோ. 85
936 கூர்சுடர்ப் பண்ணவன் கொடுவந் துய்த்திடும்
ஆர்சுடர்த் தொகுதிவந் தடைய முவெயில்
ஊர்சுடச் சிவந்தகண் ணொருவன் துப்புறழ்
வார்சடைக் கரந்தென வறந்த கங்கைநீர். 86
937 அரனருள் முறையினை யறிந்து கங்கைதன்
சிரமிசை யேந்தியே சென்றொர் கன்னலிற்
சரவண மெனுந்தடந் தன்னிற் சேர்த்தனன்
மரையீத ழாயிடை மல்குற் றாலென. 87
938 ஆவயின் காறும்வந் தரிய யன்முதல்
தேவர்கள் உவகையால் தெரிந்து சூழ்ந்தனர்
மேவர அணியதாம் விளைவு நாடியே
காவல்கொள் நிரப்புடைக் காத லோரென. 88
939 ஆரணன் விண்ணகம் அச்சு தன்புவி
வாரணன் முதலிய மாதி ரத்துளோர்
ஏரண வமரர்கள் எண்டிக் காதியே
சீரணி சரவணஞ் சேர்ந்து போற்றினார். 89
940 வேறு
கங்கையு மொல்கப் புக்க கடுங்கனற் கடவுட் சோதி
அங்கிரு மூன்று முன்னர் அம்மைவாழ இமையச் சாரற்
அங்கிய கமலம் பூத்த சரவணம் புகலும் முக்கட்
புங்கவன் அருளாள் தொன்மை போன்றது வறத்த லின்றி. 90
941 விண்ணிடை யிழிந்த காலின் மேவரு கனலில் தோன்றும்
வண்ணவொண் கமலஞ் செய்ய முளரியை மாற தாகத்
தண்ணரி யோடு நல்கித் தரித்தெனச் சரவ னப்பேர்க்
கண்ணகன் பொய்கை ஈசன் கட்டழல் மிசைச்கொண் டன்றே. 91
942 அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய. 92
943 தோன்றல்வந் திடலும் வின்பால் துந்துபி கறங்க லுற்ற
ஆனறதொல் மறைக ளெல்லாம் ஆர்த்தன அயனும் மாலும்
வான்றிகழ் மகத்தின் தேவும் முனிவரும் மலர்கள் தூவி
ஏன்றெமை யருளு கென்றே ஏத்திசை யெடுத்துச் சூழ்ந்தார். 93
944 ஏவர்தம் பாலு மின்றி யெல்லைதீர் அமலற் குற்ற
மூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய் வந்த தென்னப்
பூவியல் சரவ ணத்தண் பொய்கையில் வைகும் ஐயன்
ஆவிகள் அருளு மாற்றால் அறுமுகங் கொண்டா னன்றே. 94
945 மல்லலம் புவனத் துள்ள மன்னுயிர்க் கணங்கட் கெல்லாம்
ஒல்லையின் மகிழ்ச்சி யெய்தி உவகையின் குறிப்புண் டான
தொல்லையில் அவுண னாகுஞ் சூரனே முதலா வுள்ள
எல்லவர் தமக்கும் மாயும் இருங்குறிப் புற்ற அந்நாள். 95
946 மறைகளின் முடிவால் வாக்கான் மனத்தினால் அளக்கொ ணாமல்
நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி
அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவ ணத்தின்
வெறிகமழ் கமலப் போதின் வீற்றிருந் தருளி னானே. 96
947 பாங்குறு தருச்சூழ் காலாப் ப·றழைச் சினைமென் கொம்பர்
நீங்கறப் புடையோய் வானின் நிரந்தரன பந்த ராகத்
தூங்கிய பழனுங் காயுந் துணர்களும் அகத்துட் டுன்ன
ஆங்கதன் நடுவட் பொய்கை அணிநிழல் அமர்ந்தான் ஐயன். 97
948 முடிபொறா தசையும் நாகர் முதியகால் பலகை வையந்
தொடர்கரை மரனே வானந் தூங்குபன் னாணந் தெண்ணீர்த்
தடமலர் பாய லாகச் சரவண மஞ்ச மீதில்
அடைதரு மைந்தன் மென்கால் அசைப்பவீற் றிருந்தா னன்றே. 98
949 எண்பெரு நாகர் சேடன் ஏந்தெழில் அரிமா னாகத்
தண்பொலி புனற்பூம் பொய்கை தவிசுரு வாக நாள்கோள்
விண்படர் விதான மாக வேலையந் தலைவன் காலை
ஒண்பகல் ஆடி காட்ட உமைமகன் அங்கண் உற்றான். 99
950 தரணியின் நடுவண் வைகுஞ் சரவணப் பொய்கை தன்னில்
விரைசெறி கமலப் போதில் வீற்றிருந் தருளுஞ் செவ்வேள்
பெருவடி வமைந்த மாயன் பிறங்கிய மனத்தில் தண்ணென்
றெரிசுடர் விளக்கத் துச்சி இருந்திடும் ஈசன் போன்றான். 100
951 பெருந்தரை நடுவ ணாகிப் பிறங்கிய சரவ ணத்தில்
இருந்தனிக் கமல மொன்றில் குமரவேள் இருந்த பான்மை
திருந்துநல் லண்டப் புத்தேள் சிந்தையாம் புண்ட ரீக
புரந்தனில் விரும்பித் தாதை வைகிய இயற்கை போலும். 101
952 பாசிலை பரவித் துள்ளி படுவன உடுவைப் பாக
வீசுசை வலங்கா ராக வேறுசூழ் கமல மெல்லாம்
மாசறு பகலோ ராக அவற்றிடை மார்ந்த கஞ்சந்
தேசுடை இரவி யாகச் சிவனெனச் சேய்அங் குற்றான். 102
953 மாலயன் எழிலி மேலோன் வானவ ரேனோர் யாரும்
பாலுற மரனு மாவும் பறவையும் பிறவுஞ் சூழ
ஏலுறு குமரன் கஞ்சத் திருந்தது பரமன் ஆதிக்
காலையின் உயிர்கள் நல்கிக் கமலமேல் இருத்தல் போலும். 103
954 சலங்கிளர் தரங்கத் தெய்வச் சரவணக் கமலப் போதில்
நலங்கிளர் குமரன் சேர்தல் நான்முகற் சிறைமேல் வீட்டிப்
புலங்கிளர் உயிர்கள் நல்கப் பொருந்துநற் பகலின் முன்னர்
இலங்கெழிற் பதும பீடத் தேறிய இயற்கை போலும். 104
955 முண்டக மொன்றில் வைகும் முருகனைச் சுற்றிச் செங்கேழ்
வண்டுளர் கமலக் காடு வான்புனற் றடத்தின் நிற்றல்
அண்டர்கள் முதல்வ ஓர்பால் அன்றியெம் மெல்லாம் பீடங்
கொண்டருள் முறையி னென்று நோற்றிடுங் கொள்கைத் தன்றே. 105
956 அணங்குசெய் தோற்றத் துப்பின் அவிர்சுடர்க் குமரற் சூழ
மணங்கிளர் கமலக் காடு மலர்ந்தன அவனைச் சேர்வான்
தணங்கெழு புனலிற் புக்குத் தபனன்மேல் நாட்டஞ் சேர்த்தி
நுணங்கிடை மடவார் பல்லோர் நோற்றவண் நிற்றல் போலும். 106
957 ஒண்ணகை யுயிர்க்குஞ் சங்க பொருசில கமலம் வைகத்
தண்ணுறு நறவைப் ப·றாட டாமரை பரித்துச் சூழ்தல்
அண்ணலம் பொய்கை தற்சேர் அறுமுகப் பிள்ளை துய்ப்ப
எண்ணெயுஞ் சங்கஞ் சூழ இட்டது போலு மன்றே. 107
958 ஆரமும் வனசத் தோடும் அணிமக ரந்தச் சேறும்
வேரியம் பூந்தண் தேனும் முறைமுறை வீசிக் கையாற்
சேரவே கொண்டு மேலோன் திருவடி திளைப்ப உய்த்தல்
வாரியந் தடாகம் அன்பால் வழிபடும் வண்ணம் போலும். 108
959 பங்கயச் செம்மற் போது பதனழிந் தவிழ்ந்து பாங்கர்
அங்குள இலைமேல் வீழ அவைபுறத் தசையும் நீர்மை
சங்கரன் குமரற் சூழச் சரவணம் பசும்பூந் தட்டில்
துங்கநல் விளக்க மாட்டித் திரைக்கையாற் சுலவல் போலும். 109
960 காசுறழ் பதுமப் போது களாசிய தாக மீச்செல்
பாசடை கவிகை யாகப் பலநனை விளக்க மாக
வீசிகள் கவரி யாக மிழற்றுபுள் ளியம தாக
மாசறு பொய்கை சேய்க்கு வளம்பட ஒழுகிற் றன்றே. 110
961 அழல்நிவந் தன்ன கஞ்சத் தகல்தடத் திரைகள் நாப்பண்
உழிபட ராது சூழ்போந் துலவுவ தானை நீரால்
விழுமிய குமரன் பொய்கை வௌ¤யுறா தமர ரிட்ட
எழினிகள் புடையே மென்கால் எறிதலின் இரட்டல் போலும். 111
962 கொன்படை சேவ லாகும் எகினமோர் கோடி ஈசன்
தன்பெருங் குமரற் சூழத் தடத்தினில் மிழற்றல் எந்தை
பொன்பிறழ் பதுமன் செய்கை புரியுநாள் ஊர்தி யாவல்
என்புடை யிருத்தி யென்றே தமித்தமி இரத்தல் போலும். 112
963 வளஞ்செறி இனைய பாலால் வான்சர வணமாம் பொய்கைத்
தளஞ்செறி பதும மொன்றில் சராசரம் யாவுங் காப்பான்
உளஞ்செறி கருணை யெய்தி ஒப்பிலாக் குமர மூர்த்தி
இளஞ்சிறு மதலை போல இனிதுவீற் றிருந்தான் மன்னோ. 113
964 தீர்த்திகை*க் கங்ககை தன்னில் திகழ்சர வணத்தில் வந்த
மூர்த்திகைக் குழவி யேபோல் முதற்புரி யாடல்**நோக்கி
ஆர்த்தி யுறாத உள்ளத் தரிமுதல் அமரர் யாருங்
கார்த்திகைத் தெரிவை மாரை விளித்திவை கழற லுற்றார்.
( * தீர்த்திகை - தீர்த்தத்தையுடையது.

    • குமாரக் கடவுள் பின்னரும் பற்பல திருவிளையாடல்களைச் செய்யப் போகின்றார்.

ஆதலின், இவ்விளையாட்டை 'முதற்புரியாடல்' என்றார். ) 114
965 சாற்றருஞ் சரவ ணத்தில் சண்முகத் தொருவ னாகி
வீற்றிருந் தருளு கின்ற விமலனோர் குழவி போலத்
தோற்றினன் அவனுக் குங்கள் துணைமுலை அமுத மூட்டிப்
போற்றுதிர் நாளு மென்ன நன்றெனப் புகன்று வந்தார். 115
966 மறுவறும் ஆர லாகும் மாதர்மூ விருவர்*தாமும்
நிறைதரு சவர ணத்தின் நிமலனை அடைந்து போற்ற
உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுகோன் ஆத லாலே
அறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்.
( * ஆரலாகும் மாதர் மூவிருவர் - ஆறு உருவமுடைய கார்த்திகை
மாதர்கள். ) 116
967 ஆறுரு வாத லோடும் அறுவரும் மகிழ்ந்து வேறு
வேறுதா மெடுத்துத் தத்தம் வியத்தகு துணைமென் கொங்கை
ஊறுபா லமுதம் அன்னோற் குதவலும் முறுவல் செய்து
மாறிலா அருளால் ஆற்ற வருந்தினன் போல வுண்டான். 117
968 உண்டபின் அறுவ ராகும் ஒருபெரு முதல்வன் றன்னைத்
தண்டழை பொதுளும் நீபத் தண்ணிழற் பொய்கை தன்னில்
வண்டயி லுறாத கஞ்ச மாமலர்ப் பள்ளி சேர்த்திக்
கண்டுயில் செய்வித் தேத்தக் கருணையால் இனைய செய்வான். 118
969 துயிலவோ ருருவம் துஞ்சித் துண்ணென எழுந்து மென்சொற்
பயிலவோ ருருவம் யாய்தன் பயோதரம் பவள வாய்வைத்
தயிலவோ ருருவம் நக்காங் கமரவோ ருருவம் ஆடல்
இயலவோ ருருவம் வாளா இரங்கவோ ருருவஞ் செய்தான். 119
970 ஓருருத் தவழ மெல்ல ஓருருத் தளர்ந்து செல்ல
ஓருரு நிற்றல் செல்லா தொய்யென எழுந்து வீழ
ஓருரு இருக்கப் பொய்கை ஓருரு வுழக்கிச் சூழ
ஓருருத் தாய்கண் வைக ஒருவனே புரித லுற்றான். 120
971 ஆடவோ ருருவம் செங்கை அறையவோ ருருவம் நின்று
பாடவோ ருருவம் நாடிப் பார்க்கவோ ருருவம் ஆங்கண்
ஓடவோ ருருவம் ஓர்பால் ஔ¤க்கவோ ருருவம் யாண்டுந்
தேடவோ ருருவ மாகச் சிவன்மகன் புரித லுற்றான். 121
972 இத்திறம் இருமூன் றான யாக்கையுங் கணம தொன்றில்
பத்துநூ றாய பேதப் படும்வகை பரமாய் நின்ற
உத்தம குமரன் றான்எவ் வுயிர்தொறும் ஆட லேபோல்
வித்தக விளையாட் டின்ன மாயையால் விரைந்து செய்தான். 122
973 சிற்பர னாகி வந்த செய்யவேள் ஆடற் றன்மை
பற்பல திறமும் நாடிப் பங்கயத் தயனு மாலுஞ்
சொற்படு மகத்தின் தேவும் முனிவருஞ் சுரரும் யாரும்
அற்புத மகிழ்ச்சி கொண்டாங் கின்னவா றறைத லுற்றார். 123
974 சேயிவன் ஒருவ னேபல் சிறாருருக் கொண்டு நம்முன்
ஏயெனு மளவை தன்னில் எண்ணில்பே த்த னாகும்
ஆயினிக் குமரன் ஆடல் அறிவரி தெமக்கும் எல்லா
மாயமு மியற்ற வல்லன் வரம்பிலா அறிவன் மாதோ. 124
975 கைப்பயில் குழவி போலக் காட்டிய கடவுள் செய்யும்
இப்பெரு மாயை போல யாவரும் புரிதல் தேற்றார்
செப்பியென் வேறி யாமுஞ் செய்ததொன் றில்லை அன்னான்
ஒப்பறு பரனே ஆம்என் றுரைசெய்து தொழுது நின்றார். 125
976 அழலெனும் மீன வர்க்கத் தறுவருங்*குமரன் ஆடல்
முழுவது நோக்கி நோக்கி முதிருமற் புதநீ ரெய்திக்
குழவிக ளென்றே உள்ளங் கோடல்விட் டகலா தஞ்சி
வழிபடு கடவு ளோரில் போற்றினர் மனங்கொள் அன்பால்.
( * அழல் எனும் மீனவர்க்கத்தறுவரும் - கார்த்திகை மாதர்கள்
அறுவர்களும். அழல் - கார்த்திகை. ) 126
977 அம்புயம் உறழுஞ் செங்கேழ் அறுமுகம் படைத்த கோல
நம்பிதன் வரவு தன்னை நவின்றனம் இனிமேல் அங்கண்
எம்பெரு முதல்வி தன்பால் இலக்கத்தொன் பதின்மர் செவ்வேள்
தம்பிய ராகி வந்த தன்மையை விளம்ப லுற்றாம். 127

ஆகத் திருவிருத்தம் - 977
12. துணைவர் வரு படலம் (978 - 1014)

978 நஞ்ச யின்றவன் நெற்றிநாட் டத்தினால் நல்கும்
வெஞ்சு டர்ப்பொறி வெம்மையை ஆற்றலள் விமலை
செஞ்சி லம்படி தக்கலின் நவமணி சிதற
அஞ்சி யோடினள் இத்திற முணர்ந்தனள் அகத்துள். 1
979 மாய வன்முதல் அமரர்கள் ஈசனை வணங்கி
நீயொர் மைந்தனைத் தருகென நெற்றிநாட் டத்தால்
ஆய வன்சுடர் உதவியோர் மதலையாய் அமர்வான்
ஏயி னான்சர வணத்தெனத் தெரிந்தனள் இறைவி. 2
980 அன்ன தற்பினர் உமையவள் எனதுபால் அமலன்
தன்ன ருட்பெறு மதலைதோன் றாவகை தடுத்த
பொன்ன கர்க்கிறை விரிஞ்சன்மால் முதலபுத் தேளிர்
பன்னி யர்க்கெலாம் புதல்வரின் றாகெனப் பகர்ந்தாள். 3
981 இமைய மாமகள் இத்திறம் புகன்று மீண்டேகிச்
சமயம் யாவையும் நிறுவிய கண்ணுதற் றலைவன்
அமல மாந்திரு முன்னர்வந் தரிக்குமுன் னரிதாங்
கமல மார்அடி கண்டனள் பணிந்துகண் களித்தாள். 4
982 உம்பர் யாவருங் குறையிரந் திடலுநீ யுதவுஞ்
செம்பொ றித்தொகை யாற்றலும் வெம்மையுந் தெரிந்து
வெம்பி முற்றுடல் பதைப்புற அகன்றிவண் மீண்டேன்
எம்பெ ருந்தகை அவ்வழல் நீக்கலா லென்றாள். 5
983 கன்னி இங்ஙனம் பகர்தலுங் கருணைசெய் தருளித்
தன்னி டத்தினில் இருத்தினன் இருந்திடு தையல்
முன்னம் ஓடலிற் சிதறுநூ புரமணி முழுதும்
என்னை யாளுடை நாயகன் முன்னிலங் கினவால். 6
984 தளிரின் மெல்லடிப் பரிபுர மாயின தணந்து
மிளிரு மந்நவ மணிகளின் ஆணையால் விமலை
ஔ¤ரு நல்லுருத் தோன்றின ஐம்முகத் தொருவன்
தௌ¤ரு முச்சுடர் அகத்திடை யமர்ந்திடுஞ் செயல்போல். 7
985 எண்ணி லாநவ மணிகளின் உமையுரு வெனைத்துங்
கண்ணி னாற்றெரிந் தருளினால் வம்மெனக் கழற
அண்ண லோர்வகை மணிக்கொரு சத்திக ளாக
நண்ணி னார்நவ சத்திகள் அமரர்நற் றவத்தால். 8
986 பருப்ப தக்கொடி புரைநவ சத்திகள் பரமன்
திருப்ப தத்திடை வணங்கிநின் றவனிடைச் சிந்தை
விருப்பம் வைத்தலும் முனிவர்தம் மகளிற்போல் விரைவில்
கருப்ப முற்றனர் யாவதும் உமையவள் கண்டாள். 9
987 முனம்பு ரிந்துல களித்தவள் அனையர்பால் முதிருஞ்
சினம்பு ரிந்திவண் எமக்குமா றாகிய திறத்தால்
கனம்பு ரிந்தஇக் கருப்பமோ டிருத்திர் பல்காலம்
இனம்பு ரிந்தநீர் யாவரு மென்றுசூள் இசைத்தாள். 10
988 ஆவ தெல்லையில் நடுக்கமுற் றஞ்சியே அங்கண்
மேவு மாதர்மெய் வியர்த்தனர் அவியிர்ப் பதனில்
தேவ தேவன தருளினால் தினகரத் திரள்போல்
ஒவி லாவிறல் வீரர்கள் இலக்கர்வந் துதித்தார். 11
989 வடுத்த னைப்பொருங் கண்ணினர் வியர்ப்பினில் வந்தாங்
கடுத்த மானவர் ஓரிலக் கத்தரும் அசனி
கடுத்த சொல்லினர் பொற்றுகி லுடையினர் கரத்தில்
எடுத்த வாளினர் பலகைய ராகிஈண் டினரால். 12
990 அனையர் யாவரும் ஈசனை யடைந்தனர் அன்புற்
றினிய வாகிய அமலன்நா மங்களை யேத்தி
வனைக ருங்கழல் வணங்கிமுன் நிற்றலும் மற்றப்
புனித நாயகன் அவர்தமை நோக்கியே புகல்வான். 13
991 மைந்தர் கேண்மினோ நீவிர்கள் யாவரும் வயத்தால்
இந்தி ராதியர் பகைவரை அடுவதற் கெமது
கந்த வேள்படை யாகுதிர் என்னவே கழறி
முந்து பேரருள் புரிந்தனன் யாவர்க்கும் முதல்வன். 14
992 இன்ப நீருடன் இவையருள் புரிதலும் இலக்கம்
நன்பெ ருந்திறல் மைந்தர்க ளாயினோர் நாளும்
அன்பு மேதகு பரிசன ராகியே அமலன்
முன்பு நீங்கலா தொழுகினர் செய்பணி முறையால். 15
993 மாற்ற ருஞ்சினத் தம்மைமுன் கொடுமொழி வழங்கத்
தோற்று நன்மணி யுருவமாந் தோகையர் துளங்கிப்
போற்றி வந்தனை செய்துபின் அவள்பணி புரிந்தே
ஆற்று தொல்கருப் பத்துடன் பற்பகல் அமர்ந்தார். 16
994 இகலு மாமணி மகளிர்தங் கருவினுள் இறைவற்
புகழும் நந்தியங் கணத்தவர் குழவியாய்ப் போந்து
நிகரில் காளைய ராகிவீற் றிருந்தனர் நெறிசேர்
சுகன்எ னும்படி பரமனை முன்னியே தொழுது. 17
995 அரத னங்களில் தோன்றிய மங்கையர் அகட்டிற்
கருவின் வந்திடு ஆடவர் ஈசனைக் கருதிப்
புரியும் யோகுட னிருத்தலின் ஆற்றரும் பொறையாய்ப்
பரம தாதலும் உமையுடன் பரமனைப் பணிந்தார். 18
996 இருவர் தம்மையும் பணிந்தவர் இன்றுகா றினைய
கருவின் நொந்தனம் இன்னினி யாம்பரிக் கல்லேம்
அருள்பு ரிந்திடு மென்றலும் ஆதியங் கடவுள்
பரிவி னால்உமை திருமுகம் நோக்கியே பகர்வான். 19
997 ஏல வார்குழற் கவுரிநின் செய்யதா ளிடையிற்
சாலு நூபுரத் துதித்தவர் உனதுசா பத்தாற்
சூலி னான்மிக மெலிந்தனர் பற்பகல் சுமந்தார்
பால ரைப்பெற இனியருள் புரிகெனப் பணிந்தான். 20
998 இறைவன் இங்கிது பணித்தலும் நன்றென இசையா
முறுவல் செய்துமை மாதரை நோக்கிமொய்ம் பினரைப்
பெறுதி ரால்இனி யென்றலும் அவர்வயிற் பெயரா
துறையும் யோகுடை வீரர்கள் இத்திறம் உணர்ந்தார். 21
999 மறத்த லில்லதோ ருணர்வுடை வீரர்கள் மற்றித்
திறத்தை நாடியே யோகுவிட் டுளமகிழ் சிறப்ப
இறத்தல் நீங்கிய பரம்பொருள் அருள்முறை இறைஞ்சிப்
பிறத்த லுன்னியே முயன்றனர் ஆயிடைப் பெயர்வார். 22
1000 பரிபு ரந்தனின் முன்வரு மங்கையர் பரைதன்
கருணை கொண்டசொற் கேட்டலுங் கவற்சியை அகன்று
விரைவின் மேலவர் பதம்பணிந் தேத்தியே விடைகொண்
டொருவி மைந்தரை அளித்தனர் யாவரு மொருசார். 23
1001 நந்தி தண்கண முதல்வர் களாகியே நணியோர்
பந்த நீங்கியே சனித்தனர் ஒன்றிலாப் பதின்மர்
எந்தை யாரருள் பெயர்கொடே இருநில வரைப்பில்
சுந்த ரன்விடை முகத்தவன் றோன்றிய வாபோல். 24
1002 பேர ஆகுவை யுடையவன் இளவல்பே ரருளால்
சூர வாகுலம் வானவர் பெறாவகை தொலைப்பான்
கூர வாகுறுஞ் செம்மணிப் பாவைதன் னிடத்தில்
வீர வாகுவந் துதித்தனன் உலகெலாம் வியப்ப. 25
1003 விரள வல்லியார் தந்திசூ ரரிவியன் படையாங்
கரள வல்லிருள் அகற்றுவான் எழுந்தவெண் கதிர்போல்
திரள வல்லினை அனையபூண் முலையுடைத் தெய்வத்
தரள வல்லிபால் தோன்றினன் வீரகே சரியே. 26
1004 மக்கள் வானவர்க் கருந்துயர் புரியும்வல் லவுணர்
தொக்க வீரமா மகேந்திரப் பெருவளந் தொலையச்
செக்கர் நூபுரப் புட்பரா கத்திபாற் சிறப்பால்
தக்க வீரமா மகேந்திரன் வந்தவ தரித்தான். 27
1005 ஆத வத்தனிக் கடவுளும் வடவையா ரழலுஞ்
சீத ளப்புது மதியமும் வௌ¢குறத் திகழ்கோ
மேத கத்தமர் பாவைபால் விண்ணவர் புரியும்
மாத வத்தினால் வீரமா மகேச்சுரன் வந்தான். 28
1006 தான மாநிலத் தேவர்கள் மகிழ்வுறத் தகுவ
ரான பேரெலா முடிவுற அறந்தலை யெடுப்பக்
கானல் பேர்வயி டூரிய மின்னிடைக் கழற்கால்
மான வீரமா புரந்தரன் என்பவன் வந்தான். 29
1007 சூர ராக்கமுந் துணைவர்தம் மாக்கமுஞ் சூழுந்
தீர ராக்கமும் வானவ ரேக்கமுஞ் சிதைய
வார ராக்கமழ் கொன்றைவே ணியன்அரு ளதனால்
வீர ராக்கதன் வந்தனன் வயிரமெல் லியல்பால். 30
1008 கரக தத்தனி மால்வரை எடுத்தொரு கணத்தில்
புரக தத்தினை இழைத்தவன் அருளினாற் புணரிக்
குரக தத்திடைப் பைங்கனல் கொம்மென எழல்போல்
மரக தத்திபால் வீரமார்த் தாண்டன் வந்தனனே. 31
1009 மையல் மாக்கரி வாம்பரி விரவிய மணித்தேர்
வெய்ய தானவர் ப·றொகை இமைப்பினில் விளிய
மொய்யி னார்த்தடு மானவன் பவளமா மொழிப்பேர்த்
தையல் தன்வயின் வலியவீ ராந்தகன் சனித்தான். 32
1010 கந்து தித்திடும் வியன்நர மடங்கலுங் கடலின்
முந்து தித்திடும் ஆலமும் வடவையும் முரண
நந்து தித்தநற் களமணிப் பாவைநற் றவத்தால்
வந்து தித்தனன் வீரதீ ரப்பெயர் வலியோன். 33
1011 இந்த வீரரொன் பதின்மரும் ஈசன தருளால்
தந்தம் அன்னையர் நிறங்கொடே பொலந்துகில் தாங்கி
வந்து பற்பகல் வளர்தரும் உறுப்பொடு மடவார்
உந்தி யின்வழி நான்முகத் தண்ணல்போல் உதித்தார். 34
1012 வேறு
உதிதருமத் திறல்வீரர் அரியணைமேல் அம்மையுட னுறைந்த நாதன்,
பதமலர்கள் பணிந்தெழலும் அவர்க்கண்டு பார்ப்பதியைப் பரிவால் நோக்கி,
மதியுடையர் திறலுடையர் மானவருங் கலத்தினர்நம் மைந்தர் இன்னோர்,
புதியரலர் நந்திதனிக் கணத்தவரென் றான்சுருதிப் பொருளாய் நின்றான். 35
1013 தேவியது கேட்டுமைந்தர்க் கருள்புரிய அவர்க்கெல்லாஞ் சிவன் வெவ்வேறு,
தாவில்சுடர் வாளுதவி வியர்ப்பில்வரும் ஓரிலக்கந் தனயரோடு,
நீவிர்களு மொன்றிநுங்கட் கிறையவனா கியசேயை நீங்க லின்றி,
ஏவலன் பணித்தனசெய் தொழுகுதிரென் றான்அவரும் இசைந்து தாழ்ந்தார். 36
1014 ஓன்பானாம் இலக்கத்தோர் ஓரிலக்கத் தோர்தம்மோ டொன்றிப் புல்லி,
அன்பாகி எம்பெருமான் சினகரத்தை அகலாமல் அங்கண் வைக,
மென்பானல் புரையும்விழிச் சத்திகளொன் பதின்மர்களும் விமலக் கன்னி,
தன்பாலை யிகவாமல் அவள்பணித்த தொழில்பரிந்து சார்த லுற்றார். 37

ஆகத் திருவிருத்தம் - 1014.
13. சரவணப் படலம் (1015 - 1051)

1015 ஏற்ற மானவர் ஒன்றொழி பதின்மரோ டிலக்கர்
தோற்ற மெய்திய தன்மையை இத்துணை சொற்றாம்
ஆற்றல் சேர்புனற் சரவணத் தடந்தனில் அறுவர்
போற்ற வைகினோன் கயிலையிற் புகுந்தமை புகல்வாம். 1
1016 தருப்ப மிக்குளார் காணுறாத் தாவில்சீர் வௌ¢ளிப்
பொருப்பி லுற்றிடு பரம்பொருள் கருணையாற் பொறைகூர்
கருப்ப மற்றுயிர் முழுவதுந் தந்திடுங் கன்னிப்
பருப்ப தக்கொடிக் கவ்வழி இனையன பகர்வான். 2
1017 பொம்ம லுற்றிடு நான்முக னாதியோர் புந்தி
விம்ம லற்றிட முந்துநம் விழியிடைத் தோன்றிச்
செம்ம லர்ப்பெருஞ் சரவணத் திருந்தநின் சேயை
இம்ம லைக்கணே உய்க்குதும் வருகென இசைத்தான். 3
1018 வேறு
செமபுலி யதளினான் செப்பிற் றோர்தலும்
அம்பிகை யுவகையோ டன்பு கொண்டேழீஇ
நம்பெரு மதலையை நாங்கொண் டேகுதும்
எம்பெரு முதல்வநீ யெழுதி யாலென்றாள். 4
1019 கொம்மைவெம் முலையினால் குறிப டுத்திய
அம்மையீ துரைத்துழி அருளி னாலெழா
மைம்மலி மிடறுவடை வான நாயகன்
இம்மென அவளொடும் ஏற தேறினான். 5
1020 நந்தியின் எருத்தமேல் நங்கை யாளொடு
நந்திவந் திடுதலும் நாக மேலுளார்
நந்திய வினைத்தொகை நந்திற் றென்றிடா
நந்திதன் கணத்தொடு நண்ணிப் போற்றினார். 6
1021 அந்தமில் விடத்தினை யடக்கு கையுடைச்
கந்தர னாதியாந் தொல்க ணத்தினோர்
எந்தைதன் உருவுகொண் டிருந்த மேலவர்
வந்திரு மருங்குமாய் வழுத்தி ஈண்டினார். 7
1022 ஆன்முக நந்தியெம் மடிகள் உய்த்திடத்
தேன்முக நறுமலர் சிதறிச் செங்கையால்
கான்முறை வணங்கியே கமலக் கண்ணவன்
நான்முகன் மகபதி பிறரும் நண்ணினார். 8
1023 சல்லரி வயிர்துடி தடாரி சச்சரி
கல்லென இரங்குறு கரடி காகளஞ்
செல்லுறழ் பேரிகை திமிலை யாதியாம்
பல்லியம் இயம்பின பாரி டங்களே. 9
1024 வேறு
வேத நான்குங் குடிலையும் வேறுள
பேத மாய கலைகளும் பேரிசை
நாத மோடு நணுகின விஞ்சையர்
கீதம் யாவும் இசைத்துக் கெழுமினார். 10
1025 வள்ளல் வேணியின் மாமதி ஈண்டியே
பிள்ளை வெண்பிறை யைப்படர் பேரராக்
கொள்ளு மென்று குறித்தது போற்றல்போல்
வௌ¢ளி வெண்குடை வெய்யவர் ஏந்தினார். 11
1026 சகர ரென்னுந் தலைவர்கள் தம்வழிப்
பகிர தப்பெயர்ப் பார்த்திவன் வேண்டலும்
நிகரி லோன்அருள் நீத்தத் தொழுக்கெனப்
புகரில் சாமரம் பூதர்கள் வீசினர். 12
1027 சீறு மால்கரி சீயம் வயல்புலி
ஏறு பூட்கை இரலையெண் கேமுதல்
வேறு கொண்ட வியன்முகச் சாரதர்
நூறு கோடியர் நொய்தெனச் சுற்றினர். 13
1028 இமிலு டைப்பல ஏற்றிருங் கேதனந்
திமில விண்புனல் நக்கிச் சிதறுவ
அமல னைத்தொழு தாற்றுமெய் யன்பினால்
கமலம் உய்த்திடுங் காட்சியர் போன்றவே. 14
1029 அன்ன காலை அகிலமும் ஈன்றருள்
கன்னி தன்னொடு காமர்வௌ¢ ளேற்றின்மேல்
மன்னி வைகு மதிமுடி வானவன்
தன்ன தாலயத் தைத்தணந் தேகினான். 15
1030 வேறு
தன்ன தாலயம் நீங்கியே கயிலையைத் தணந்து
பொன்னின் நீடிய இமையமால் வரைப்புறத் தேகி
அன்ன மாடுறுஞ் சரவணப் பொய்கையை யடைந்தான்
என்னை யாளுடை நாயகன் இறைவியுந் தானும். 16
1031 பிறையு லாஞ்சடைத் தேவனும் அவன்றனைப் பிரிய
துறையும் மாதுமோ ரறுவகை உருவுகொண் டுற்ற
சிறுவன் நீர்மையை நோக்கியே திருவருள் செய்து
நிறையும் வான்புனற் பொய்கையங் கரையிடை நின்றார். 17
1032 முண்ட கச்சர வணந்தனில் மூவிரு வடிவங்
கொண்டு லாவிவீற் றிருந்திடும் ஒருபெருங் குமரன்
அண்டர் நாயகன் தன்னுடன் அகிலமீன் றாளைக்
கண்டு மாமுக மலர்ந்தனன் தனதுளங் களித்தான். 18
1033 அந்த வேலையிற் கவுரியை நோக்கியெம் மையன்
இந்த நின்மகன் றனைக்கொடு வருகென இயம்பச்
சுந்த ரங்கெழு விடையினுந் துண்ணென இழிந்து
சிந்தை கொண்டபே ராதரந் தன்னொடுஞ் சென்றாள். 19
1034 சரவ ணந்தனில் தனதுசேய் ஆறுருத் தனையும்
இருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமு கங்களோ ராறுபன் னிருபுயஞ் சேர்ந்த
உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள். 20
1035 எந்தை சத்திகள் உயிரெலாம் ஒடுங்குறு மெல்லை
முந்து போலஒன் றாகியே கூடிய முறைபோல்
அந்த மில்லதோர் மூவிரு வடிவுமொன்றாகிக்
கந்தன் என்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன். 21
1036 முன்பு புல்லிய குமரவேள் முடிதொறும் உயிர்த்து
மின்பி றங்கிய புறந்தனை நீவலும் விமலை
தன்பெ ருந்தனஞ் சுரந்துபால் சொரிந்தன தலையாம்
அன்பெ னப்படு கின்றதித் தன்மையே அன்றோ. 22
1037 ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம
போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற் பொழிபால்
ஏதி லாததோர் குருமணி வள்ளமீ தேற்றுக்
காதல் மாமகற் கன்பினால் அருத்தினாள் கவுரி. 23
1038 கொங்கை யூறுபால் அருத்தியே குமரனைக் கொடுசென்
றெங்கள் நாயகன் முன்னரே இறைஞ்சுவித் திடலும்
அங்கை யாலவன் றனைஎடுத் தகலமேல் அணைத்துப்
பொங்கு பேரருள் நீர்மையா லிருத்தினன் புடையில். 24
1039 அருத்தி தந்திடு குமரவேள் ஒருபுடை அமரப்
பெருத்த மன்னுயிர் யாவையும் முன்னரே பெற்ற
ஒருத்தி தன்னையுங் கையினா லொய்யென வாங்கி
இருத்தி னான்தன தடந்தனில் எம்மையாள் இறைவன். 25
1040 கூல வார்குழல் இறைவிக்கும் எம்பிரான் றனக்கும்
பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞால மேலுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
மாலை யானதொன் றழிவின்றி வைகுமா றொக்கும். 26
1041 வேறு
விடையுற்றிடு பரமற்குமவ் விமலைக்கும் விறற்சேய்
இடையுற்றது கண்டார்அயன் மகவான்முத லிமையோர்
கடையுற்றிடு கடலாமெனக் கல்லென்றிரைத் தணுகாப்
புடையுற்றனர் எதிருற்றனர் புறனுற்றனர் புகழ்வார். 27
1042 காமாரிதன் விழிதந்திடு கழிகாதல ஒழியாத்
தோமாரில் புளனாகிய சூரன்கொடுந் தொழிலால்
யாமாரினும் இழுக்குற்றனனம் எமையாள்இனி யென்னாப்
பூமாரிகள பொழிந்தார்பணிந் தெழுந்தாசிகள் புகன்றார். 28
1043 வாரற்பத முறவீங்கிய வன்னத்தன முருந்தின்
மூரற்பவ ளச்சேயிதழ் முழுமாமதி வதனத்
தாரற்பெயர் பெறுமங்கையர் அதுகாலையில் அரன்முன்
பேரற்பொடு பணிந்தேயெழப் பெருந்தண்ணளி புரிந்தான். 29
1044 கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள்
மைந்தன்எனும் பெயராகுக மகிழ்வால்எவ ரேனும்
நுந்தம்பக லிடைஇன்னவன் நோன்றாள்வழி படுவோர்
தந்தங்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான். 30
1045 என்னாவருள் புரிகின்றுழி இமையத்தவள் சேயைத்
தன்னாரரு ளொடுசென்றெதிர் தழுவித்தனத் திழிபால்
பொன்னார்மணி வள்ளத்துமுன் பூரித்தருத் திடவே
அன்னாள்முலை அமுதுக்கவை யாறொத்தொழு கினவே. 31
1046 வானார்சுர நதிபோற்சர வணத்தூடவை புகலுந்
தூநான்மறை கரைகண்டவன் முதல்வந்திடு துணைவ
ரானாஅறு சிறுவோர்தமை அளித்தோன்சபித் திடலால்
மீனாயவண் வதிகின்றவர் புகும்பாலினை மிசைந்தார். 32
1047 கயிலைக்கிறை யவள்மெய்த்தன கலசத்தினும் உகுபால்
அயிலுற்றிடு பொழுதத்தினில் அறலிற்புடை பெயரும்
அயிலைத்தனு வொருவித்தவ வடிவுற்றெழு தருவார்
துயிலுற்றுணர் பவரொத்தனர் மயலற்றிடு தொடர்பால். 33
1048 அன்னாரறு வருமாயெழுந் தகன்பொய்கைவிட் டமலன்
முன்னாய்வணங் கினர்போற்றலும் முனிமைந்தர்கள் பரங்கோ
டென்னாவுரை பெறுகுன்றிடை இருந்தேதவம் புரிமின்
சின்னாள்மிசை இவன்வந்தருள் செயுமென்றருள் செய்தான். 34
1049 நன்றாலெனத் தொழுதன்னவர் நாதன் விடை பெற்றே
சென்றார்உடு மடவாரொடு திருமாலயன் முதலா
நின்றார்தமக் கருள்செய்தவர் நிலயம்புக அருளிப்
பொன்றாழ்சடை யினன்வௌ¢ளியம் பொருப்பின்றலை புக்கான். 35
1050 அடையார்புர மெரிசெய்திடும் அமலன்கயி லையிற்போய்
விடையூர்தியின் இழிந்தெதனி விறற்சேயொடும் வெற்பின்
மடவாளொடு நடவாப்பொலன் மாமந்திரத் தலையின்
இடையாரரி யணைமீமிசை இருந்தான் அருள் புரிந்தே. 36
1051 சேயோனெனும் முன்னோன் றனைச் சிலம்பின்வரும் ஒன்பான்
மாயோர்உத வியமைந்தரும் மற்றுள்ளஇ லக்கத்
தூயோர்களுந் தொழுதேமலர் தூவிப்பணிந் தேத்தி
ஆயோர்தம துயிரேயென அவனைக்குறித் தணைந்தார். 37

ஆகத் திருவிருத்தம் - 1051
14. திருவிளையாட்டுப் படலம் (1052 - 1179)

1052 அனந்தரம தாகஉமை யம்மையொடு பெம்மான்
நனந்தலையில் வைகிய நலங்கொள்கும ரேசன்
இனங்கொடு தொடர்ந்தஇளை யாரொடு மெழுந்தே
மனங்கொளருள் நீர்மைதனின் ஆடலை மதித்தான். 1
1053 தட்டைஞெகி ழங்கழல் சதங்கைகள் சிலம்பக்
கட்டழகு மேயஅரை ஞாண்மணி கறங்க
வட்டமணி குண்டல மதாணிநுதல் வீர
பட்டிகைமி னக்குமரன் ஆடல்பயில் கின்றான். 2
1054 மன்றுதொறு லாவுமலர் வாவிதொ றுலாவுந்
துன்றுசிறு தென்றல்தவழ் சோலைதொ றுலாவும்
என்றுமுல வாதுலவும் யாறுதொ றுலாவுங்
குன்றுதொறு லாவுமுறை யுங்குமர வேளே. 3
1055 குளத்தினுல வும்நதி குறைந்திடு துருத்திக்
களத்தினுல வும்நிரைகொள் கந்துடை நிலைத்தாந்
தளத்தினுல வும்பனவர் சாலையுல வும்மென்
னுளத்தினுல வும்சிவன் உமைக்கினைய மைந்தன். 4
1056 இந்துமுடி முன்னவன் இடந்தொறு முலாவும்
தந்தையுடன் யாயமர் தலங்களி னுலாவும்
கந்தமலர் நீபமுறை கண்டொறு முலாவும்
செந்தமிழ் வடாதுகலை சேர்ந்துழி யுலாவும். 5
1057 மண்ணிடை யுலாவும்நெடு மாதிர முலாவும்
எண்ணிடை யுறாதகடல் எங்கணு முலாவும்
விண்ணிடை யுலாவும்மதி வெய்யவன் உடுக்கோள்
கண்ணிடை யுலாவும்இறை கண்ணில்வரு மண்ணல். 6
1058 கந்தருவர் சித்தர்கரு டத்தொகைய ரேனோர்
தந்தமுல காதிய தலந்தொறு முலாவும்
இந்திரன் இருந்ததொல் லிடந்தனில் உலாவும்
உந்துதவர் வைகுமுல கந்தொறு முலாவும். 7
1059 அங்கமல நான்முகன் அரும்பத முலாவும்
மங்கலம் நிறைந்ததிரு மால்பத முலாவும்
எங்கள் பெருமாட்டிதன் இரும்பத முலாவும்
திங்கள்முடி மேற்புனை சிவன்பத முலாவும். 8
1060 இப்புவியில் அண்டநிரை யெங்கணு முலாவும்
அப்புவழ லூதைவௌ¤ அண்டமு முலாவும்
ஒப்பில்புவ னங்கள்பிற வுள்ளவு முலாவுஞ்
செப்பரிய ஒர்பரசி வன்றனது மைந்தன். 9
1061 வேறு
இருமூவகை வதனத்தொடும் இளையோனெனத் திரியும்
ஒருமாமுக னொடுசென்றிடும் உயர்காளையி னுலவும்
பெருமாமறை யவரேயென முனிவோரெனப் பெயருந்
தெரிவார்கணை மறவீரரில் திரிதந்திடுஞ் செவ்வேள். 10
1062 காலிற்செலும் பரியிற்செலும் கரியிற்செலும் கடுந்தேர்
மேலிற்செலும் தனியாளியின் மிசையிற்செலும் தகரின்
பாலிற்செலும் மானத்திடை பரிவிற்செலும் விண்ணின்
மாலிற்செலும் பொருசூரொடு மலையச்செலும் வலியோன். 11
1063 பாடின்படு பணியார்த்திடும் பணைமென்குழல் இசைக்கும்
கோடங்கொலி புரிவித்திடும் குரல்வீணைகள் பயிலும்
ஈடொன்றிய சிறுபல்லிய மெறியும்மெவ ரெவரும்
நாடும்படி பாடுங்களி நடனஞ்செயும் முருகன். 12
1064 இன்னேபல வுருவங்கொடி யாண்டுங்கும ரேசன்
நன்னேயமொ டாடுற்றுழி நனிநாடினள் வியவா
முன்னேயுல கினையீன்ளவள் முடிவின்றுறை முதல்வன்
பொன்னேர்கழ விணைதாழ்ந்தனள் போற்றிப்புகல் கின்றாள். 13
1065 கூடுற்றநங குமரன்சிறு குழவிப்பரு வத்தே
ஆடற்றொழி லெனக்கற்புத மாகும்மவன் போல்வார்
நேடிற்பிற ரிலைமாயையின் நினைநேர்தரு மனையான்
பீடுற்றிடு நெறிதன்னையெம் பெருமான்மொழி கென்றாள். 14
1066 அல்லார்குழ லவள் இன்னணம் அறியர்களின் வினவ
ஒல்லார்புர மடுகண்ணுதல் உன்றன்மகன் இயல்பை
எல்லாவுயிர் களுமுய்ந்திட எமைநீகட வினையால்
நல்லாய்இது கேண்மோவென அருளாலிவை நவில்வான். 15
1067 வேறு
ஈங்கனம் நமது கண்ணின் எய்திய குமரன் கங்கை
தாங்கினள் கொண்டு சென்று சரவணத் திடுத லாலே
காங்கெயன் எனப்பேர் பெற்றான் காமர்பூஞ் சரவ ணத்தின்
பாங்கரில் வருத லாலே சரவண பவன்என் றானான். 16
1068 தாயென ஆரல் போந்து தனங்கொள்பால் அருத்த லாலே
ஏயதோர் கார்த்தி கேயன் என்றொரு தொல்பேர் பெற்றான்
சேயவன் வடிவ மாறுந் திரட்டிநீ யொன்றாச் செய்தாய்
ஆயத னாலே கந்த னாமெனு நாமம் பெற்றான். 17
1069 நன்முகம் இருமூன் றுண்டால் நமக்கவை தாமே கந்தன்
தன்முக மாகியுற்ற; தாரகப் பிரம மாகி
முன்மொழி கின்ற நந்தம் மூவிரண் டெழுத்து மொன்றாய்
உன்மகன் நாமத் தோரா றெழுத்தென உற்ற வன்றே. 18
1070 ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும்
பேதக மன்றால் நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்றான்
ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான். 19
1071 மேலினி யனைய செவ்வேள் விரிஞ்சனைச் சுருதிக் கெல்லாம்
மூலம தாகி நின்ற மொழிப்பொருள் வினவி அன்னான்
மாலுறச் சென்னி தாக்கி வன்சிறைப் படுத்தித் தானே
ஞாலமன் னுயிரை யெலலா நல்கியே நண்ணும் பன்னாள். 20
1072 தாரகன் றன்னைச் சீயத் தடம்பெரு முகத்தி னானைச்
சூரபன் மாவை ஏனை யவுணரைத் தொலைவு செய்தே
ஆரணன் மகவான் ஏனை யமரர்கள் இடுக்கண் நீக்கிப்
பேரருள் புரிவன் நின்சேய் பின்னர்நீ காண்டி யென்றான். 21
1073 என்றலும் இளையோன் செய்கை எம்பெரு மாட்டி கோள
நன்றென மகிழ்ச்சி கொண்டு நணுகலும் உலக மெல்லாஞ்
சென்றரு ளாடல் செய்யுந் திருத்தகு குமரன் பின்னர்
ஒன்றொரு விளையாட் டுள்ளத் துன்னியே புரித லுற்றான். 22
1074 குலகிரி யனைத்து மோர்பாற் கூட்டிடும் அவற்றைப் பின்னர்த்
தலைதடு மாற்ற மாகத் தரையிடை நிறுவும் எல்லா
அலைகடல் தனையும் ஒன்றா ஆக்குறும் ஆழி வெற்பைப்
பிலனுற அழுத்துங் கங்கைப் பெருநதி யடைக்கு மன்னோ. 23
1075 இருள்கெழு பிலத்துள் வைகும் எண்டொகைப் பணியும் பற்றிப்
பொருள்கெழு மேரு வாதி அடுக்கலிற் பூட்டி வீக்கி
அருள்கெழு குமர வள்ளல் ஆவிகட் கூறின் றாக
உருள்கெழு சிறுதே ராக்கொண் டொல்லென உருட்டிச் செல்லும். 24
1076 ஆசையங் கரிகள் தம்மை அங்கைகொண் டொன்றோ டொன்று
பூசல்செய் விக்கும் வானிற் போந்திடுங் கங்கை நீரால்
காய்சின வடவை மாற்றுங் கவின்சிறைக் கலுழ னோடு
வாசுகி தன்னைப் பற்றி மாறிகல் விளைக்கு மன்றே. 25
1077 பாதல நிலயத்துள்ள புயங்கரைப் படியிற் சேர்த்திப்
பூதல நேமி யெல்லாம் புகுந்திடப் பிலத்தி னுய்க்கும்
ஆதவ முதல்வன் றன்னை அவிர்மதிப் பதத்தி லோச்சுஞ்
சீதள மதியை வெய்யோன் செல்நெறிப் படுத்துச் செல்லும். 26
1078 எண்டிசை புரந்த தேவர் இருந்ததொல் பதங்க ளெல்லாம்
பண்டுள திறத்தின் நீங்கப் பறித்தனன் பிறழ வைக்குங்
கொண்டலி னிருந்த மின்னின் குழுவுடன் உருமுப பற்றி
வண்டின முறாத செந்தண் மாலைசெய் தணியு மன்றே. 27
1079 வெய்யவர் மதிகோள் ஏனோர் விண்படர் விமானந் தேர்கள்
மொய்யுறப் பிணித்த பாசம் முழுவதுந் துருவ னென்போன்
கையுறு மவற்றில் வேண்டுங் கயிற்றினை இடைக்கண் ஈர்ந்து
வையகந் திசைமீச் செல்ல வானியில் விடுக்கு மைந்தன். 28
1080 வடுத்தவிர் விசும்பிற் செல்லும் வார்சிலை யிரண்டும் பற்றி
உடுத்திரள் பலகோ ளின்ன உண்டையாக் கொண்டு வானோர்
முடித்தலை யுரந்தோள் கண்ட முகம்படக் குறியா வெய்தே
அடற்றனு விஞ்சை காட்டும் ஆறிரு தடந்தோள் அண்ணல். 29
1081 இத்திறம் உலகந் தன்னில் இம்பரோ டும்பர் அஞ்சிச்
சித்தமெய் தளர்த லன்றிச் சிதைவுறா வகைமை தேர்ந்து
வித்தக வெண்ணி லாடல் வியப்பொடு புரிந்தான் ஆவி
முத்தர்தம் விழியின் அன்றி முன்னுறா நிமல மூர்த்தி. 30
1082 அயது காலை ஞாலத் தவுணர்கள் அதனை நோக்கி
ஏயிது செய்தார் யாரே யென்றுவிம் மிதராய் எங்கள்
நாயகன் வடிவந் தன்னை நனிபெரும் பவத்துட் டங்குந்
தீயவ ராத லாலே கண்டிலர் தியக்க முற்றார். 31
1083 சிலபகல் பின்னும் வைகுந் திறத்தியல் ஆயுள் கொண்டே
உலகினில் அவுணர் யாரும் உறைதலின் அவர்க்குத் தன்மெய்
நிலைமைகாட் டாது செவ்வேள் நிலாவலும் நேடி யன்னோர்
மலரயன் தெரியா அண்ணல் மாயமே இனைய தென்றார். 32
1084 ஆயதோர் குமரன் செய்கை அவனியின் மாக்கள் காணாத்
தீயன முறையால் வெங்கோல் செலுத்திய அவுண ரெல்லாம்
மாய்வது திண்ணம் போலும் மற்றதற் கேது வாக
மேயின விம்மி தங்கொல் இதுவென வெருவ லுற்றார். 33
1085 புவனியின் மாக்க ளின்ன புகறலுந் திசைகாப் பாளர்
தவனனே மதிய மேனோர் சண்முகன் செய்கை நாடி
அவனுரு வதனைக் காணார் அவுணர்தம் வினையு மன்றால்
எவரிது செய்தார் கொல்லென் றிரங்கினர் யாருங் கூடி. 34
1086 தேருறு மனைய தேவர் தேவர்கோன் சிலவ ரோடு
மேருவி லிருந்தான் போலும் வேதனும் அங்கண் வைகும்
ஆருமங் கவர்பா லேகி அறைகுது மென்று தேறிச்
சூரர்கோன் றனக்கும் அஞ்சித் துயரொடு பெயர்த லுற்றார். 35
1087 வடவரை யும்பர் தன்னில் வானவ ரானோ ரேகி
அடைதரு கின்ற காலை ஆறுமா முகங்கொண் டுள்ள
கடவுள்செய் யாடல் நோக்கி அவனுருக் காணா னாகி
இடருறு மனத்தி னோடும் இருந்தஇந் திரனைக் கண்டார். 36
1088 அரிதிரு முன்ன ரெய்தி அடிதொழு தங்கண் வைகி
விரிகட லுலகின் வானின் மேஹவதொன் னிலைமை யாவுந்
திரிபுற வெவரோ செய்தார் தெரிந்திலம் அவரை ஈது
புரிகலர் அவுணர் போலும் புகுந்தஇப் புணர்ப்பென் னென்றார். 37
1089 வானவர் இறைவன் அன்னோர் மாற்றமங் கதனைக் கேளா
யானுமிப் பரிசு நாடி யிருந்தனன் இறையுந் தேரேன்
ஆனதை யுணர வேண்டின் அனைவரு மேகி அம்பொன்
மேனிகொள் கமலத் தோனை வினவுதும் எழுதி ரென்றான். 38
1090 எழுதிரென் றுரைத்த லோடும் இந்திரன் முதலா வுள்ளோர்
விழியிடைத் தெரிய அன்னோர் மெய்த்தவம் புரிந்த நீரால்
அழிவற வுலகி லாடும் அறுமுகன் வதன மொன்றில்
குழவிய தென்ன அன்ன குன்றிடைத் தோன்றி னானால். 39
1091 வாட்டமொ டமரர் கொண்ட மயக்கறத் தனாது செய்கை
காட்டிய வந்தோன் மேருக் கனவரை யசைத்துக் கஞ்சத்
தோட்டிதழ் கொய்து சிந்துந் துணையென உயர்ந்த செம்பொற்
கோட்டினைப் பறித்து வீசிக் குலவினன் குழவி யேபோல். 40
1092 தோன்றிய குமரன் றன்னைச் சுரபதி சுரரா யுள்ளோர்
ஆன்றதோர் திசைகாப் பாளர் அனைவருந் தெரிகுற் றன்னோ
வான்தரை திரிபு செய்தோன் மற்றிவ னாகு மென்னாக்
கான்திரி அரியை நேரும் விலங்கெனக் கலங்கிச் சொல்வார். 41
1093 வேறு
நொய்தாங் குழவி யெனக்கொள்கிலம் நோன்மை நாடின்
வெய்தாம் அவுணக் குழுவோரினும் வெய்யன் யாரும்
எய்தாத மாயம் உளனால்இவன் றன்னை வெம்போர்
செய்தாடல் கொள்வம் இவணென்று தெரிந்து சூழ்ந்தார். 42
1094 சூழுற்ற வெல்லை இமையோர்க்கிறை தொல்லை நாளில்
காழுற்ற தந்தம் அறவேகிவெண் காட்டில் ஈசன்
கேழுற்ற தாள்அர்ச் சனைசெய்து கிடைத்து வைகும்
வேழத்தை உன்ன அதுவந்தது மேரு வின்பால். 43
1095 தந்தங்கள் பெற்று வருகின்ற தனிக்க ளிற்றின்
கந்தந் தனில்போந் தடல்வச்சிரங் காமர் ஔ¢வாள்
குந்தஞ் சிலைகொண் டிகல்வெஞ்சமர்க் கோல மெய்தி
மைந்தன் றனைவா னவரோடும் வளைந்து கொண்டான். 44
1096 வன்னிச் சுடர்கால விசையோடு மரீஇய பாங்கிற்
பன்னற் படுகுன் றவைசூழ்தரு பான்மை யேபோல்
உன்னற் கரிய குமரேசனை உம்பர் கோனும்
இன்னற் படுவா னவரும்மிகல் செய்ய வுற்றார். 45
1097 தண்ணார் கமலத் துணைமாதரைத் தன்னி ரண்டு
கண்ணா வுடைய உமையாள்தரு கந்தன் வானோர்
நண்ணா ரெனச்சூழ் வதுநோக்கி நகைத்தி யாதும்
எண்ணாது முன்போல் தனதாடல் இழைத்த வேலை. 46
1098 எட்டே யொருபான் படைதம்முள் எறிவ வெல்லாந்
தொட்டே கடவுட் படைதன்னொடுந் தூர்த்த லோடும்
மட்டேறு போதிற் கடுகின்றுழி வச்சி ரத்தை
விட்டே தெழித்தான் குமரன்மிசை வேள்வி வேந்தன். 47
1099 வயிரத் தனிவெம் படையெந்தைதன் மார்பு நண்ணி
அயிரிற் றுகளாய் விளிவாக அதனை நோக்கித்
துயரத் தழுங்க இமையோரிறை தொல்லை வேழஞ்
செயிருற் றியம்பி முருகேசன்முன் சென்ற தன்றே. 48
1100 செல்லுங் கரிகண் டுமையாள்மகன் சிந்தை யாலோர்
வில்லுங் கணைகள் பலவும் விரைவோடு நல்கி
ஒல்லென் றிடநா ணொலிசெய்துயர் சாபம் வாங்கி
எல்லொன்று கோலொன் றதன்நெற்றியுள் ஏக வுய்த்தான். 49
1101 அக்கா லையில்வேள் செலுத்துங்கணை அண்டர் தம்மின்
மிக்கான் அயிரா வதநெற்றியுள் மேவி வல்லே
புக்காவி கொண்டு புறம்போதப் புலம்பி வீழா
மைக்கார் முகில்அச் சுறவேயது மாண்ட தன்றே. 50
1102 தன்னோர் களிறு மடிவெய்தலுந் தான வேந்தன்
அன்னோ வெனவே இரங்கா அயல்போகி நின்று
மின்னோ டுறழ்தன் சிலைதன்னைம வெகுண்டு வாங்க
முன்னோன் மதலை பொருகோலவன் மொய்ம்பி லெய்தான். 51
1103 கோலொன்று விண்ணோர்க் கிறைமேல்கும ரேசன் உய்ப்ப
மாலொன்று நெஞ்சன் வருந்திப்பெரு வன்மை சிந்திக்
காலொன்று சாபத் தொழில்நீத்தனன் கையி லுற்ற
வேலொன் றதனைக் கடிதேகுகன் மீது விட்டான். 52
1104 குந்தப் படையோர் சிறுபுற்படு கொள்கை யேபோல்
வந்துற் றிடஅற் புதமெய்தினர் மற்றை வானோர்
கந்தக் கடவுள் சிலையிற்கணை யொன்று பூட்டித்
தந்திக் கிறைவன் தடம்பொன்முடி தள்ளி ஆர்த்தான். 53
1105 துவசந் தனையோர் கணைகொண்டு துணித்து மார்பிற்
கவசந் தனையோர் கணையால்துகள் கண்டு விண்ணோன்
அவசம் படஏழ் கணைதூண்டினன் ஆழி வேண்டிச்
சிவசங் கரஎன் றரிபோற்றிய செம்மல் மைந்தன். 54
1106 தீங்கா கியவோ ரெழுவாளியுஞ் செல்ல மார்பின்
ஆங்கார மிக்க மகவான் அயர்வாகி வீழ்ந்தான்
ஓங்கார மேலைப் பொருள்மைந்தனை உம்ப ரேனோர்
பாங்காய் வளைந்து பொருதார்படு கின்ற தோரார். 55
1107 இவ்வா றமரர் பொருமெல்லையில் ஈசன் மைந்தன்
கைவார் சிலையைக் குனித்தேகணை நான்கு தூண்டி
மெய்வா ரிதிகட் கிறைவன்றனை வீட்டி மற்றும்
ஐவா ளியினால் சமன்ஆற்றல் அடக்கி னானால். 56
1108 ஒரம் பதனால் மதிதன்னையும் ஒன்றி ரண்டு
கூரம் பதனாற் கதிர்தன்னையும் கோதில் மைந்தன்
ஈரம் பதனால் அனிலத்தையும் மேவு மூன்றால்
வீரம் பகர்ந்த கனலோனையும் வீட்டி நின்றான். 57
1109 நின்றார் எவருங் குமரேசன் நிலைமை நோக்கி
இன்றா ரையுமற் றிவனேயடு மென்று தேறி
ஒன்றான சிம்புள் விறல்கண்டரி யுட்கி யோடிச்
சென்றா லெனவே இரிந்தோடினர் சிந்தை விம்மி. 58
1110 ஓடுஞ் சுரர்கள் திறநோக்கி உதிக்கும் வெய்யோன்
நீடுங் கதிர்கள் நிலவைத்துரக் கின்ற தேபோல்
ஆடுங் குமரன் அவரைத்துரந் தண்டர் முன்னர்
வீடுங் களத்தி னிடையேதனி மேவி நின்றான். 59
1111 ஒல்லா தவரிற் பொருதேசில உம்பர் வீழ
நில்லா துடைந்து சிலதேவர்கள் நீங்க நேரில்
வில்லா ளியாகித் தனிநின்ற விசாகன் மேனாள்
எல்லா ரையும்அட் டுலவும்தனி ஈசன் ஒத்தான். 60
1112 வேறு
சுரர்கள் யாருந் தொலைந்திட வென்றுதான்
ஒருவ னாகி உமைமகன் மேவுழி
அருளின் நாரதன் அச்செயல் கண்டுவான்
குருவை யெய்திப் புகுந்தன கூறினான். 61
1113 நற்ற வம்புரி நாரதன் கூற்றினை
அற்ற மில்லுணர் அந்தணன் கேட்டெழீஇ
இற்ற தேகொல் இமையவர் வாழ்வெனாச்
சொற்று வல்லை துயருழந் தேகினான். 62
1114 ஆத பன்மதி அண்டர் தமக்கிறை
மாதி ரத்தவர் மால்கரி தன்னுடன்
சாதல் கொண்ட சமர்க்களந் தன்னிடைப்
போதல் மேயினன் பொன்னெனும் பேரினான். 63
1115 ஆவி யின்றி அவர் மறி குற்றது
தேவ ராசான் தெரிந்து படருறாத்
தாவி லேர்கெழு சண்முகன் அவ்விடை
மேவி யாடும் வியப்பினை நோக்கினான். 64
1116 முழுது ணர்ந்திடு மொய்சுடர்ப் பொன்னவன்
எழுதொ ணாத எழில்நலந் தாங்கியோர்
குழவி தன்னுருக் கொண்ட குமரனைத்
தொழுது நின்று துதித்திது சொல்லுவான். 65
1117 வேறு
கரியரி முகத்தினன் கடிய சூரனென்
றுரைபெறு தானவர் ஒறுப்ப அல்கலும்
பருவரல் உழந்துதன் பதிவிட் டிப்பெரு
வரையிடை மகபதி மறைந்து வைகினான். 66
1118 அன்னவன் நின்னடி அடைந்து நிற்கொடே
துன்னலர் தமதுயிர் தொலைத்துத் தொன்மைபோல்
தன்னர செய்தவுந் தலைவ னாகவும்
உன்னினன் பிறிதுவே றொன்றும் உன்னலான். 67
1119 பற்பகல் அருந்தவம் பயின்று வாடினன்
தற்பர சரவணத் தடத்திற் போந்தவுன்
உற்பவம் நோக்கியே உவகை பூத்தனன்
சொற்படு துயரெலாந் தொலைத்து ளானென. 68
1120 கோடலும் மராத்தொடு குரவுஞ் செச்சையுஞ்
சூடிய குமரநின் றொழும்பு செய்திட
நேடுறும் இந்திரன் நீயித் தன்மையின்
ஆடல்செய் திடுவரை அறிகி லானரோ. 69
1121 நாரணன் முதலினோர் நாடிக் காணொணா
ஆரண முதல்வனும் உமையும் அன்னவர்
சீரரு ளடைந்தனர் சிலரும் அல்லதை
யாருன தாடலை அறியும் நீரினார். 70
1122 பற்றிய தொடர்பையும் உயிரை யும்பகுத்
திற்றென வுணர்கிலம் ஏதந் தீர்கிலஞ்
சிற்றுணர் வுடையதோர் சிறியம் யாமெலாம்
உற்றுன தாடலை உணர வல்லமோ. 71
1123 ஆதலால் வானவர்க் கரசன் ஆற்றவும்
ஓதிதான் இன்மையால் உன்றன் ஆடலைத்
தீதெனா வுன்னிவெஞ் செருவி ழைத்தனன்
நீதிசேர் தண்டமே நீபு ரிந்தனை. 72
1124 மற்றுள தேவரும் மலைந்து தம்முயிர்
அற்றனர் அவர்களும் அறிவி லாமையால்
பெற்றிடுங் குரவரே பிழைத்த மைந்தரைச்
செற்றிடின் எவரருள் செய்யற் பாலினோர். 73
1125 சின்மய மாகிய செம்மல் சிம்புளாம்
பொன்மலி சிறையுடைப் புள்ளின் நாயகன்
வன்மைகொள் விலங்கினை மாற்ற வல்லது
மின்மினி தனையடல் விசய மாகுமோ. 74
1126 ஒறுத்திடும் அவுணர்க ளொழிய வேரொடும்
அறுத்தருள் உணர்விலா அளியர் உன்னடி
மறுத்தலில் அன்பினர் மற்றின் னோர்பிழை
பொறுத்தருள் கருணையாற் புணரி போன்றுவாய். 75
1127 பரமுற வணிகரைப் பரித்துப் பல்வளந்
தருகலங் கவிழ்ந்திடச் சாய்த்து மற்றவர்
ஒருதலை விளிதல்போல் உன்னிற் பெற்றிடுந்
திருவினர் பொருதுனைச் செருவில் துஞ்சினார். 76
1128 தொழுதகு நின்னடித் தொண்ட ராற்றிய
பிழையது கொள்ளலை பெரும சிந்தையுள்
அழிதரு மினையவர் அறிவு பெற்றிவண்
எழுவகை யருளென இறைஞ்சிக் கூறினான். 77
1129 பொன்னவன் இன்னன புகன்று வேண்டிட
முன்னவர் முன்னவன் முறுவல் செய்துவான்
மன்னவ னாதியர் மால்க ளிற்றொடும்
அந்நிலை எழும்வகை அருள்செய் தானரோ. 78
1130 வேறு
அந்தியின் வனப்புடைய மெய்க்குகன் எழுப்புதலும் அன்ன பொழுதே,
இந்திரனும் மாதிர வரைப்பினரும் வானவரும் யாவரு மெழாஅச்,
சிந்தைதனில் மெய்யுணர்வு தோன்றுதலும் முன்புரி செயற்கை யுணராக்,
கந்தனொடு கொல்சமர் புரிந்ததென உன்னினர் கலங்கி யெவரும். 79
1131 கலங்கினர் இரங்கினர் கலுழ்ந்தனர் புலர்ந்தனர் கவன்ற னர்உளம்,
மலங்கினர் விடந்தனை அயின்றவ ரெனும்படி மயர்ந்த னலிசேர்,
உலங்கென உலைந்தனர் ஒடுங்கினர் நடுங்கினர் உரந்த னையிழந்,
திலங்கெழில் முகம்பொலி விகந்தனர் பொருந்தமை யிகழ்ந்த னர்களே. 80
1132 துஞ்சியெழும் அன்னவர்கள் ஏழுலகு முன்னுதவு சுந்த ரிதரும்,
மஞ்சனரு ளோடுவிளை யாடுவது காண்டலும் வணங்கி யனையான்,
செஞ்சரண் இரண்டினையு முச்சிகொடு மோயினர் சிறந்த லர்துணைக்,
கஞ்சமல ரிற்பல நிறங்கொள்அரி யின்தொகை கவைஇய தெனவே. 81
1133 கந்தநம ஐந்துமுகர் தந்தமுரு கேசநம கங்கை யுமைதன்,
மைந்தநம பன்னிரு யுத்தநம நீபமலர் மாலை புனையுந்,
தந்தைநம ஆறுமுக வாதிநம சோதிநம தற்ப ரமதாம்,
எந்தைநம என்றுமிளை யோய்நம குமாரநம என்றுதொழுதார். 82
1134 பொருந்துதலை யன்புடன் எழுந்தவர்கள் இவ்வகை புகழ்ந்து மனமேல்,
அரந்தைகொடு மெய்ந்நடு நடுங்குதலும் அன்னதை அறிந்து குமரன்,
வருந்தலிர் வருந்தலி ரெனக்கருணை செய்திடலும் மற்ற வர்கடாம்,
பெருந்துயரும் அச்சமு மகன்றுதொழு தேயினைய பேசி னர்களால். 83
1135 ஆயவமு தத்தினொடு நஞ்சளவி உண்குநரை அவ்வி டமலால்,
தூயவமு தோவுயிர் தொலைக்குமது போலுனது தொல்ல ருளினால்,
ஏயதிரு வெய்திட இருந்தனம்உன் னோடமரி யற்றி யதனால்,
நீயெமை முடித்தியலை அன்னதவ றெம்முயிரை நீக்கி யதரோ. 84
1136 பண்டுபர மன்றனை இகழ்ந்தவன் மகத்திலிடு பாக மதியாம்,
உண்டபவம் இன்னமும் முடிந்தில அதன்றியும் உனைப்பொ ருதுநேர்,
கொண்டிகல் புரிந்தனம் அளப்பில்பவம் வந்தகும ரேச எமைநீ,
தண்ட முறை செய்தவை தொலைத்தனை உளத்துடைய தண்ண ளியினால். 85
1137 ஆதலின் எமக்கடிகள் செய்தஅரு ளுக்குநிக ராற்று வதுதான்,
ஏதுளது மற்றெமை உனக்டிய ராகஇவ ணீது மெனினும்,
ஆதிபரமாகிய உனக்கடியம் யாம்புதி தளிப்ப தெவனோ,
தாதையர் பெறச்சிறுவர் தங்களை அவர்ககருள்கை தக்க பரிசோ. 86
1138 அன்னதெனி னுந்தௌ¤வில் பேதையடி யேம்பிழை யனைத்தும் உளமேல்,
உன்னலை பொறுத்தியென வேகுமர வேள்அவவை யுணர்ந்து நமைநீர்,
முன்னமொரு சேயென நினைந்துபொரு தீர்நமது மொய்ம்பு முயர்வும்,
இன்னுமுண ரும்படி தெரித்துமென ஓருருவம் எய்தி னனரோ. 87
1139 எண்டிசையு மீரெழு திறத்துலகும் எண்கிரியு மேழு கடலுந்,
தேண்டிரையும் நேமிவரை யும்பிறவும் வேறுதிரி பாகி யுளசீர்,
அண்ட நிரை யானவு மனைத்துயிரும் எப்பொருளு மாகி அயனும்,
விண்டும் அரனுஞ்செறிய ஓருருவு கொண்டனன் விறற்கு மரனே. 88
1140 மண்ணளவு பாதலமெ லாஞ்சரணம் மாதிர வரைப்பும் மிகுதோள்,
விண்ணளவெ லாமுடிகள் பேரொளியெ லாம்நயனம் மெய்ந்த டுவெலாம்,
பண்ணளவு வேதமணி வாய்உணர்வெ லாஞ்செவிகள் பக்கம் அயன்மால்,
எண்ணளவு சிந்தை யுமை ஐந்தொழிலும் நல்கியருள் ஈச னுயிரே. 89
1141 ஆனதொரு பேருருவு கொண்டுகும ரேசனுற அண்டர் பதியும்,
ஏனையரும் அற்புதமி தற்புதமி தென்றுதொழு தெல்ல வருமாய்,
வானமிசை நோக்கினர்கள் மெய்வடிவம் யாவையும் வனப்பு முணரார்,
சானுவள வாஅரிது கண்டனர் புகழ்ந்தினைய சாற்றி னர்களால். 90
1142 வேறு
சேணலம் வந்த சோதிச் சிற்பர முதல்வ எம்முன்
மாணல முறநீ கொண்ட வான்பெருங் கோலந் தன்னைக்
காணலம் அடியேங் காணக் காட்டிடல் வேண்டு மென்ன
நீணலங் கொண்டு நின்ற நெடுந்தகை அதனைக் கேளா. 91
1143 கருணைசெய் தொளிகள் மிக்க கண்ணவர்க் கருளிச் செவ்வேள்
அருணமார் பரிதிப் புத்தேள் அந்தகோ டிகள்சேர்ந் தென்னத்
அருணவில் வீசி நின்ற தனதுரு முற்றுங் காட்ட
இரணிய வரைக்கண் நின்ற இந்திரன் முதலோர் கண்டார். 92
1144 அடிமுதன் முடியின் காறும் அறுமகன் உருவ மெல்லாங்
கடிதவ னருளால் நோக்கிக் கணிப்பிலா அண்ட முற்றும்
முடிவறு முயிர்கள் யாவும் மூவருந் தேவர் யாரும்
வடிவினில் இருப்பக் கண்டு வணங்கியே வழுத்திச் சொல்வார். 93
1145 அம்புவி முதலாம் பல்பே ரண்டமும் அங்கங் குள்ள
உம்பரும் உயிர்கள் யாவும் உயிரலாப் பொருளும் மாலுஞ்
செம்பது மத்தி னோனுஞ் சிவனொடுஞ் செறிதல் கண்டோம்
எம்பெரு மானின் மெய்யோ அகிலமும் இருப்ப தம்மா. 94
1146 அறிகிலம் இந்நாள் காறும் அகிலமும் நீயே யாகி
ளுறைதரு தன்மை நீவந் துணர்த்தலின் உணர்ந்தா மன்றே
பிறவொரு பொருளுங் காணேம் பெருமநின் வடிவ மன்றிச்
சிறியம்யாம் உனது தோற்றந் தெரிந்திட வல்ல மோதான். 95
1147 முண்டகன் ஒருவன் துஞ்ச முராரிபே ருருவாய் நேமிக்
கண்டுயில் அகந்தை நீங்கக் கண்ணுதற் பகவன் எல்லா
அண்டமும் அணிப்பூ ணார மாகவே ஆங்கொர் மேனி
கொண்டன னென்னுந் தன்மை குமரநின் வடிவிற் கண்டேம். 96
1148 நாரணன் மலரோன் பன்னாள் நாடவுந் தெரிவின் றாகிப்
பேரழல் உருவாய் நின்ற பிரான்திரு வடிவே போலுன்
சீருரு வுற்ற தம்மா தௌ¤கிலர் அவரும் எந்தை
யாரருள் எய்தின் நம்போல் அடிமுடி தெரிந்தி டாரோ. 97
1149 அரியொடு கமலத் தேவும் ஆடல்செய் தகிலந் தன்னோ
டொருவரை யொருவர் நுங்கி உந்தியால் முகத்தால் நல்கி
இருவரு மிகலு மெல்லை எடுத்தபே ருருநீ கொண்ட
திருவுரு விதனுக் காற்றச் சிறியன போலு மன்றே. 98
1150 ஆகையால் எம்பி ரான்நீ அருவுரு வாகி நின்ற
வேகநா யகனே யாகும் எமதுமா தவத்தால் எங்கள்
சோகமா னவற்றை நீக்கிச் சூர்முதல் தடிந்தே எம்மை
நாகமே லிருந்து மாற்றால் நண்ணினை குமர னேபோல். 99
1151 எவ்வுரு வினுக்கும் ஆங்கோ ரிடனதா யுற்ற உன்றன்
செவ்வுரு வதனைக் கண்டு சிறந்தனம் அறம்பா வத்தின்
அவ்வுரு வத்தின் துப்பும் அகலுதும் இன்னும் யாங்கள்
வெவ்வுரு வதத்திற் செல்லேம் வீடுபே றடைது மன்றே. 100
1152 இனையன வழுத்திக் கூறி யிலங்கெழிற் குமர மூர்த்தி
தனதுபே ருருவை நோக்கிச் சதமகன் முதலா வுள்ளோர்
தினகரன் மலர்ச்சி கண்ட சில்லுணர் வுயிர்க ளென்ன
மனமிக வெருவக் கண்கள் அலமர மயங்கிச் சொல்வார். 101
1153 எல்லையில் ஔ¤பெற் றன்றால் எந்தைநின் னுருவம் இன்னும்
ஒல்லுவ தன்றால் காண ஔ¤யிழந் துலைந்த கண்கள்
அல்லதும் பெருமை நோக்கி அஞ்சுதும் அடியம் உய்யத்
தொல்லையின் உருவங் கொண்டு தோன்றி யே அளித்தி யென்றார். 102
1154 என்றிவை புகன்று வேண்ட எம்பிரான் அருளால் வான்போய்
நிற்னபே ருருவந் தன்னை நீத்தறு முகத்தோ னாகித்
தொன்றுள வடிவத் தோடு தோன்றலுந் தொழுது போற்றிக்
குன்றிருஞ் சிறைகள் ஈர்ந்த கொற்றவன் கூற லுற்றான். 103
1155 தொன்னிலை தவாது வைகுஞ் சூரனே முதலா வுள்ள
ஒன்னலர் உயிரை மாற்றி உம்பரும் யானும் பாங்கர்
மன்னிநின் றேவல் செய்ய வானுயர் துறக்கம் நண்ணி
என்னர சியற்றி எந்தாய் இருத்திஎன் குறையீ தென்றான். 104
1156 இகமொடு பரமும் வீடும் ஏத்தினர்க குலப்பு றாமல்
அகனம ரருளால் நல்கும் அறுமுகத் தவற்குத் தன்சீர்
மகபதி யளிப்பான் சொற்ற வாசகம் சுடரொன் றங்கிப்
பகவனுக் கொருவன் நல்கப் பராவிய போலு மாதோ. 105
1157 வானவர் கோனை நோக்கி வறிதுற நகைத்துச் செவ்வேள்
நீநமக் களித்த தொல்சீர் நினக்குநாம் அளித்தும் நீவிர்
சேனைக ளாக நாமே சேனையந் தலைவ னாகித்
தானவர் கிளையை யெல்லாம் வீட்டுதும் தளரேல் என்றான். 106
1158 கோடலங் கண்ணி வேய்ந்த குமரவேள் இனைய கூற
ஆடியல் கடவுள் வௌ¢ளை அடற்களிற் றண்ணல் கேளா
வீடுற அவுண ரெல்லாம் வியன்முடி திருவி னோடுஞ்
சூடின னென்னப் போற்றிச் சுரரோடு மகிழ்ச்சி கொண்டான். 107
1159 அறுமுகத் தேவை நோக்கி அமரர்கோன் இந்த வண்டத்
துறைதரு வரைகள் நேமி உலகுயிர் பிறவும் நின்னால்
முறைபிறழ்ந் தனவால் இந்நாள் முன்புபோல் அவற்றை யெல்லாம்
நிறுவுதி யென்ன லோடும் நகைத்திவை நிகழத்த லுற்றான். 108
1160 இன்னதோ ரண்டந் தன்னில் எம்மில்வே றுற்ற வெல்லாந்
தொன்னெறி யாக என்றோர் தூமொழி குமரன் கூற
முன்னுறு பெற்றித் தான முறையிறந் திருந்த தெல்லாம்
அந்நிலை எவரும் நோக்கி அற்புத மடைந்து நின்றார். 109
1161 வேறு
நிற்கு மெல்லையின் நிலத்திடை யாகிப்
பொற்கெ னத்திகழ் பொருப்பிடை மேவுஞ்
சிற்கு ணக்குரிசில் சேவடி தாழூஉச்
சொற்க நாடுள சுரேசன் உரைப்பான். 110
1162 ஆண்ட கைப்பகவ ஆரண மெய்ந்நூல்
பூண்ட நின்னடிகள் பூசனை யாற்ற
வேண்டு கின்றும்வினை யேம்அது செய்ய
ஈண்டு நின்னருளை ஈகுதி யென்றான். 111
1163 என்ன லுங்குகன் இசைந்து நடந்தே
பொன்னி னாலுயர் பொருப்பினை நீங்கித்
தன்ன தொண்கயிலை சார்ந்திடு ஞாங்கர்
மன்னி நின்றதொரு மால்வரை புக்கான். 112
1164 குன்றி ருஞ்சிறை குறைத்தவன் ஏனோர்
ஒன்றி யேதொழு துவப்புள மெய்தி
என்றும் நல்லிளைய னாகிய எங்கோன்
பின்றொ டர்ந்தனர் பிறங்கலில் வந்தார். 113
1165 சூரல் பம்புதுறு கல்முழை கொண்ட
சாரல் வெற்பினிடை சண்முகன் மேவ
ஆரும் விண்ணவர் அவன்கழல் தன்னைச்
சீரி தர்ச்சனை செயற்கு முயன்றார். 114
1166 அந்த வேலையம ரர்க்கிறை தங்கண்
முந்து கம்மியனை முன்னுற அன்னான்
வந்து கைதொழலும் மந்திர மொன்று
நந்த மாநகரின் நல்கிவ ணென்றான். 115
1167 அருக்கர் தந்தொகை அனைத்தையு மொன்றா
உருக்கி யாற்றியென ஒண்மணி தன்னால்
திருக்கி ளர்ந்துலவு செய்யதொர் கோயில்
பொருக்கெ னப்புனைவர் கோன்புரி குற்றான். 116
1168 குடங்கர் போல்மகு டங்கெழு வுற்ற
இடங்கொள் கோபுர விருக்கையின் நாப்பண்
கடங்க லுழ்ந்திடு கரிக்குரு குண்ணும்
மடங்கல் கொண்தொர் மணித்தவி சீந்தான். 117
1169 ஈந்த வெல்லைதனில் இந்திரன் ஏவப்
போந்து வானெறி புகுந்திடு தூநீர்
சாந்த மாமலர் தழற்புகை யாதி
ஆய்ந்து தந்தனர்கள் அண்டர்கள் பல்லோர். 118
1170 வேறு
அன்ன காலையில் அண்டர்கள் மேலையோன்
சென்னி யாறுடைத் தேவனை வந்தியா
உன்ன தாளருச் சித்தியா முய்ந்திட
இந்நி கேதனம் ஏகுதி நீயென்றான். 110
1171 கூற்ற மன்னதுட் கொண்டுவிண் ணொரெலாம்
போற்ற மந்திரம் புக்கு நனந்தலை
ஏற்ற ரித்தொகை ஏந்தெழிற் பீடமேல்
வீற்றி ருந்தனன் வேதத்தின் மேலையோன். 120
1172 ஆன காலை அமரர்கள் வாசவன்
ஞான நாயக நாங்கள் உனக்கொரு
தானை யாகுந் தலைவனை நீயெனா
வான நீத்தத்து மஞ்சனம் ஆட்டினர். 121
1173 நொதுமல் பெற்றிடு நுண்டுகில் சூழ்ந்தனர்
முதிய சந்த முதலமட் டித்தனர்
கதிரும் நன்பொற் கலன்வகை சாத்தினர்
மதும லர்த்தொகை மாலிகை சூட்டினர். 122
1174 ஐவ கைப்படும் ஆவியும்* பாளிதம்
மெய்வி ளக்கமும் வேறுள பான்மையும்
எவ்வெ வர்க்கும் இறைவற்கு நல்கியே
செவ்வி தர்ச்சனை செய்தன ரென்பவே.
( * ஐவகைப்படும் ஆவி - நறுமணம் கமழும் பொருட்டு, கோட்டம்,
துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்ற ஐவகை வாசனை
பொருள்களைப் பொடித்து இடும் தூபம்.) 123
1175 புரந்த ரன்முதற் புங்கவர் தம்முளத்
தரந்தை நீங்க அருச்சனை செய்துபின்
பரிந்து தாழ்ந்து பரவலும் ஆயிடைக்
கரந்து வள்ளல் கயிலையிற் போயினான். 124
1176 வெற்பின் மிக்குயர் வௌ¢ளியம் பொற்றையில்
சிற்ப ரன்மறைந் தேகலுந் தேவரும்
பொற்பின் மேதகு பொன்னகர் அண்ணலும்
அற்பு தத்துடுன் அவ்வரை நீங்கினார். 125
1177 ஈசன் மைந்தன் இளையன் இமையவர்
பூசை செய்யப் பொருந்தலின் அவ்வரை
மாசில் கந்த வரையென யாவரும்
பேச ஆங்கொர் பெயரினைப் பெற்றதே. 126
1178 ஆன கந்த வடுக்கலைத் தீர்ந்துபோய்
வான மன்னன் மனோவதி நண்ணினான்
ஏனை வானவர் யாவரும் அவ்வவர்
தான மெய்தனர் தொன்மையில் தங்கினார். 127
1179 உயவல் ஊர்திகொண் டொய்யென முன்னரே
கயிலை யங்கிரி ஏகிய கந்தவேள்
பயிலும் வீரரும் பாரிட மள்ளரும்
அயலின் மேவர ஆயிடை வைகினான். 128

ஆகத் திருவிருத்தம் - 1179
15. தகரேறு படலம் (1180 - 1204)

1180 சூரன்முத லோருயிர் தொலைக்கவரு செவ்வேள்
ஆருமகிழ் வௌ¢ளியச லத்தின் அமர் போழ்தின்
மேருவி லுடைப்பரன் விரும்பஅகி லத்தே
நாரதனொர் வேள்வியை நடாத்தியிட லுற்றான். 1
1181 மாமுனி வருஞ்சுரரும் மாநில வரைப்பில்
தோமறு தவத்தினுயர் தொல்லை மறையோரும்
ஏமமொடு சூழ்தர இயற்றிய மகத்தில்
தீமிசை யெழுந்ததொரு செக்கர்புரை செச்சை. 2
1182 அங்கிதனில் வந்ததகர் ஆற்றுமகந் தன்னில்
நங்களின மேபலவும் நாளுமடு கின்றார்
இங்கிவரை யான்அடுவன் என்றிசைவ கொண்டே
வெங்கனலை யேந்துபரி மீதெழுதல் போலும். 3
1183 மாருதமும் ஊழிதனில் வன்னியும் விசும்பில்
பேருமுரும் ஏறுமொரு பேருருவு கொண்டே
ஆருவது போல்விரைவும் அத்தொளியும் ஆர்ப்புஞ்
சேரவெழும் மேடம்அடு செய்கைநினைந் தன்றே. 4
1184 கல்லென மணித்தொகை களத்தினிடை தூங்கச்
சில்லரிபெய் கிங்கிணி சிலம்படி புலம்ப
வல்லைவரு கின்றதகர் கண்டுமகத் துள்ளோர்
எல்லவரும் அச்சமொ டிரிந்தனர்கள் அன்றே. 5
1185 இரிந்தவர்கள் யாவரையும் இப்புவியும் வானுந்
துரந்துசிலர் வீழ்ந்துதொலை வாகநனி தாக்கிப்
பரந்ததரை மால்வரை பராகமெழ ஓடித்
திரிந்துயிர் வருந்தஅடல் செய்தது செயிர்த்தே. 6
1186 எட்டுள திசைக்கரி இரிந்தலறி யேங்கக்
கிட்டியெதிர் தாக்குமதி கேழ்கிளரும் மானத்
தட்டிரவி தேரொடு தகர்ந்துமுரி வாக
முட்டும்அவர் தம்பரியை மொய்ம்பினொடு பாயும். 7
1187 இனையவகை யால்தகரி யாண்டுமுல வுற்றே
சினமொடுயிர் கட்கிறுதி செய்துபெயர் காலை
முனிவர்களும் நாரதனும் மொய்ம்புமிகு வானோர்
அனைவர்களும் ஓடினர் அருங்கயிலை புக்கார். 8
1188 ஊறுபுக அன்னவர் உலைந்துகயி லைக்கண்
ஏறிவரு காலையில் இலக்கமுட னொன்பான்
வீறுதிறல் வீரரொடு மேவியுல வுற்றே
ஆறுமுக வண்ணல்விளை யாடலது கண்டார். 9
1189 ஈசனிடை நண்ணுகிலம் ஈண்டுகும ரேசன்
நேசமொடு நந்துயரம நீக்கவெதிர் வந்தான்
ஆசிறுவன் அல்லன்இவன் அண்டர்பல ரோடும்
வாசவனை வென்றுயிரை மாற்றியெழு வித்தான். 10
1190 எங்குறை முடித்திடல் இவற்கௌ¤து நாமிப்
புங்கவனொ டுற்றது புகன்றிடுது மென்னாத்
தங்களில் உணர்ந்துசுரர் தாபதர்கள் யாரும்
அங்கவன்முன் ஏகினர் அருந்துதிகள் செய்தே.. 11
1191 வந்துபுகழ் வானவரும் மாமுனிவர் தாமுந்
தந்திமுக வற்கிளவல் தன்னடி வணங்கக்
கந்தனவர் கொண்டதுயர் கண்டுமிக நீவிர்
நொந்தனிர் புகுந்தது நுவன்றிடுதி ரென்றான். . 12
1192 கேட்டிஇளை யோய்மறை கிளத்தும் ஒரு வேள்வி
வேட்டனமி யாங்களது வேலையிடை தன்னில்
மாட்டுகன லூடொரு மறித்தகர் எழுந்தே
ஈட்டமுறும் எம்மையட எண்ணியதை யன்றே. . 13
1193 ஆடெழு கிளர்ச்சியை அறிந்துமகம் விட்டே
ஓடியிவ ணுற்றனம் உருத்தது துரந்தே
சாடியது சிற்சிலவர் தம்மையத னாலே
வீடியத ளப்பிலுயிர் விண்ணினொடு மண்மேல். . 14
1194 நீலவிட மன்றிது நிறங்குலவு செக்கர்க்
கோலவிட மேயுருவு கொண்டதய மேபோல்
ஓலமிட எங்குமுல வுற்றதுயி ரெல்லாங்
காலமுடி வெய்துமொரு கன்னல்முடி முன்னம். . 15
1195 சீற்றமொ டுயிர்க்கிறுதி செய்துலவு மேடத்
தாற்றலை அடக்கியெம தச்சமும் அகற்றி
ஏற்றகுறை வேள்வியையும் ஈறுபுரி வித்தே
போற்றுதி யெனத்தொழுது போற்றிசெயும் வேலை. . 16
1196 எஞ்சுமவர் தம்மைஇளை யோன்பரிவின் நோக்கி
அஞ்சல்விடு மின்களென அங்கைய தமைத்தே
தஞ்சமென வேபரவு தன்பரிச னத்துள்
மஞ்சுபெறு மேனிவிறல் வாகுவொடு சொல்வான். . 17
1197 மண்டுகனல் வந்திவர் மகந்தனை அழித்தே
அண்டமொடு பாருலவி யாருயிர்க டம்மை
உண்டுதிரி செச்சைதனை ஒல்லைகுறு குற்றே
கொண்டணைதி என்றுமை குமாரனுரை செய்தான். . 18
1198 வேறு
குன்றெழு கதிர்போல் மேனிக் குமரவேள் இனைய கூற
மன்றலந் தடந்தோள் வீர வாகுவாந் தனிப்பேர் பெற்றான்
நன்றென இசைந்து கந்தன் நாண்மலர்ப் பாதம் போற்றிச்
சென்றனன் கயிலை நீங்கிச் சினத்தகர் தேட லுற்றான். 19
1199 மண்டல நேமி சூழும் மாநில முற்று நாடிக்
கண்டில னாகிச் சென்றேழ் பிலத்தினுங் காண கில்லான்
அண்டர்தம் பதங்கள் நாடி அயன்பதம் முன்ன தாகத்
தண்டளிர்ச் செக்கர் மேனித் தகர்செலுந் தன்மை கண்டான். 20
1200 ஆடலந் தொழில்மேல் கொண்டே அனைவரும் இரியச் செல்லும்
மேடமஞ் சுரவே ஆர்த்து விரைந்துபோய் வீர வாகு
கோடவை பற்றி ஈர்த்துக் கொண்டுராய்க் கயிலை நண்ணி
ஏடுறு நீபத் தண்டார் இளையவன் முன்னர் உய்த்தான். 21
1201 உய்த்தனன் வணங்கி நிற்ப உளமகிழ்ந்த தருளித் தேவர்
மெய்த்தவர் தொகையை நோக்கி ஏழகம் மேவிற் றெம்பால்
எய்த்தினி வருந்து கில்லீர் யாருநீர் புவனி யேகி
முத்தழல் கொடுமுன் செய்த வேள்வியை முடித்தி ரென்றான். 22
1202 ஏர்தரு குமரப் புத்தேள் இவ்வகை இசைப்ப அன்னோர்
கார்தரு கண்டத் தெந்தை காதல வேள்வித் தீயிற்
சேர்தரு தகரின் ஏற்றைச் சிறியரேம் உய்யு மாற்றால்
ஊர்திய தாகக் கொண்டே ஊர்ந்திடல் வேண்டு மென்றார். 23
1203 என்னலுந் தகரை அற்றே யானமாக் கொள்வம் பார்மேல்
முன்னிய மகத்தை நீவிர் முடித்திரென் றருள யார்க்கும்
நன்னய மாடல் செய்யும் நாரதன் முதலோர் யாரும்
அன்னதோர் குமர னெந்தை அடிபணிந் தருளாற் போந்தார். 24
1204 நவையில்சீர் முனிவர் தேவர் நயப்பநா ரதனென் றுள்ளோன்
புவிதனில் வந்து முற்றப் புரிந்தனன் முன்னர் வேள்வி
அவர்புரி தவத்தின் நீரால் அன்றுதொட் டமல மூர்த்தி
உவகையால் அனைய மேடம் ஊர்ந்தனன் ஊர்தி யாக. 25

ஆகத் திருவிருத்தம் - 1204
16. அயனைச் சிறைபுரி படலம் (1205 - 1223)

1205 மேடமூர்தி யாகவுய்த்து விண்ணுமண்ணும் முருகவேள்
ஆடல்செய் துலாவிவௌ¢ளி யசலமீதில் அமர்தரும்
நீடுநாளில் ஒருபகற்கண் நெறிகொள்வேதன் முதலினோர்
நாடியீசன் அடிவணங்க அவ்வரைக்கண் நண்ணினார். 1
1206 நவையில்சீர் முனிவர் தேவர் நயப்பநா ரதனென் றுள்ளோன்
எனாதியா னெனுஞ்செருக் கிகந்துதன் னுணர்ந்துளார்
மனாதிகொண்ட செய்கை தாங்கி மரபின்முத்தி வழிதரும்
அனாதியீசன் அடிவணங்கி அருளடைந்து மற்றவன்
தனாதுமன்றம் நீங்கிவாயில் சாருகின்ற வேலையில். 2
1207 ஒன்பதோடி லக்கமான அனிகவீரர் உள்மகிழ்ந்
தன்பினோடு சூழ்ந்துபோற்ற அமலன் அம்பொ னாலய
முன்புநீடு கோபுரத்துள் முழுமணித் தலத்தின்மேல்
இன்பொடாடி வைகினான் இராறுதோள் படைத்துளான். 3
1208 அங்கண்வைகும் முருகன்நம்பன் அடிவணங்கி வந்திடும்
புங்கவர்க்குள் ஆதியாய போதினானை நோக்குறா
இங்குநம்முன் வருதியா லெனாவிளிப்ப ஏகியே
பங்கயாச னத்தினோன் பணின்திடாது தொழுதலும். 4
1209 ஆதிதேவன் அருளுமைந்தன் அவனுளத்தை நோக்கியே
போதனே இருக்கெனாப் புகன்றிருத்தி வைகலும்
ஏதுநீ புரிந்திடும் இயற்கையென்ன நான்முகன்
நாதனாணை யால்அனைத்தும் நான்படைப்பன் என்றனன். 5
1210 வேறு
முருக வேளது கேட்டலும் முறுவல்செய் தருளித்
தரணி வானுயிர் முழுவதுந் தருதியே என்னில்
சுருதி யாவையும் போகுமோ மொழிகெனத் தொல்சீர்ப்
பிரமன் என்பவன் இத்திறம் பேசுதல் உற்றான். 6
1211 ஐய கேள்எனை யாதிகா லந்தனில் அளித்த
மையு லாவரு களத்தினன் அளப்பிலா மறைகள்
செய்ய ஆகமம் பற்பல புரிந்ததிற் சிலயான்
உய்யு மாறருள் செய்தனன் அவையுணர்ந் துடையேன். 7
1212 என்று நான்முகன் இசைத்தலும் அவற்றினுள் இருக்காம்
ஒன்று நீவிளம் புதியென முருகவேள் உரைப்ப
நன்றெ னாமறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான்
நின்ற தோர்தனி மொழியைமுன் ஓதினன் நெறியால். 8
1213 தாம ரைத்தலை யிருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாம றைத்தலை யெடுத்தனன் பகர்தலும் வரம்பில்
காமர் பெற்றுடைக் குமரவேள் நிற்றிமுன் கழறும்
ஓமெ னப்படும் மொழிப்பொருள் இயம்புகென் றுரைத்தான். 9
1214 முகத்தி லொன்றதா அவ்வெழுத் துடையதோர் முருகன்
நகைத்து முன்னெழுத் தினுக்குரை பொருளென நவில
மிகைத்த கண்களை விழித்தனன் வௌ¢கினன் விக்கித்
திகைத்தி ருந்தனன் கண்டிலன் அப்பொருட் டிறனே. 10
1215 ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாச மாய்எலா வெழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும்
மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான். 11
1216 தெருள தாகிய குடிலையைச் செப்புதல் அன்றிப்
பொருள றிந்திலன் என்செய்வான் கண்ணுதற் புனிதன்
அருளி னாலது முன்னரே பெற்றிலன் அதனால்
மருளு கின்றனன் யாரதன் பொருளினை வகுப்பார். 12
1217 தூம றைக்கெலாம் ஆதியு மந்தமுஞ் சொல்லும்
ஓமெ னப்படும் ஓரெழுத் துண்மையை யுணரான்
மாம லர்ப்பெருங் கடவுளும் மயங்கினான் என்றால்
நாமி னிச்சில அறிந்தனம் என்பது நகையே. 13
1218 எட்டொ ணாதவக் குடிலையிற் பயன்இனைத் தென்றே
கட்டு ரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய்
சிட்டி செய்வதித் தன்மைய தோவெனாச் செவ்வேள்
குட்டி னான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க. 14
1219 மறைபு ரிந்திடுஞ் சிவனருண் மதலைமா மலர்மேல்
உறைபு ரிந்தவன் வீழ்தரப் பதத்தினா லுதைத்து
நிறைபு ரிந்திடு பரிசன ரைக்கொடே நிகளச்
சிறைபு ரிந்திடு வித்தனன் கந்தமாஞ் சிலம்பில். 15
1220 அல்லி மாமலர்ப பண்ணவன் றனையருஞ் சிறையில்
வல்லி பூட்டுவித் தியவையும் புரிதர வல்லோன்
எல்லை தீர்தரு கந்தமால் வரைதனில் ஏகிப்
பல்லு யிர்த்தொகை படைப்பது நினைந்தனன் பரிவால். 16
1221 ஒருக ரந்தனில் கண்டிகை வடம்பரித் தொருதன்
கரத லந்தனில் குண்டிகை தரித்திரு கரங்கள்
வரத மோடப யந்தரப் பரம்பொருள் மகனோர்
திருமு கங்கொடு சதுர்முகன் போல்விதி செய்தான். 17
1222 உயிரி னுக்குயி ராகியே பரஞ்சுட ரொளியாய்
வியன்ம றைத்தொகைக் கீறதாய் விதிமுத லுரைக்குஞ்
செயலி * னுக்கெலாம் ஆதியாய் வைகிய செவ்வேள்
அயனெ னப்படைக் கின்றதும் அற்புத மாமோ.
( * விதிமுதல் உரைக்கும் செயல் - படைத்தல், காத்தல், அழித்தல்,
மறைத்தல், அருளுதல் என்ற ஐந்து தொழில்கள்.) 18
1223 தண்ணென் அம்புயத் தவிசினோன் சிறைபுகத் தானே
எண்ணி லாவுயிர்த் தொகையளித் தறுமுகன் இருந்தான்
அண்ண லந்திசை முகனொடு வந்துசூழ் அமரர்
உண்ண டுங்கியே தொழுதுதம் பதங்களி லுற்றார். 19

ஆகத் திருவிருத்தம் - 1223
17. அயனைச் சிறை நீக்கு படலம் (1224 - 1265)

1224 ஆல மாமிடற் றண்ணல்சேய் இத்திறம் அளப்பில்
காலம் யாவையும் அளித்தனன் இருத்தலுங் கரியோன்
நாலு மாமுகன் உவளகம் நீக்குவான் நாடிச்
சீல வானவர் முனிவரைச் சிந்தனை செய்தான். 1
1225 சீத ரத்தனிப் பண்ணவன் சிந்தனை தேறி
ஆத பத்தினர் பரிமுகர் வசுக்கள்அன் னையர்கள்
கூத மற்றிடும் விஞ்சையர் உவணரோ டியக்கர்
மாதி ரத்தவர் யாவரும் விரைந்துடன் வந்தார். 2
1226 மதியும் ஏனைய கோள்களுங் கணங்களும் வான்றோய்
பொதிய மேயவ னாதியாம் பொவில்மா தவரும்
விதிபு ரிந்திடு பிரமரொன் பதின்மரும் வியன்பார்
அதனை ஏந்திய சேடனும் உரகரும் அடைந்தார். 3
1227 இன்ன தன்மையில் அமரரும் முனிவரு மெய்த
அன்னர் தம்மொடுஞ் செங்கண்மால் கயிலையை அடைந்து
முன்னர் வைகிய நந்திகள் முறையினுய்த் திடப்போய்த்
தன்னை யேதனக் கொப்பவன் பொற்கழல் தாழ்ந்தான். 4
1228 பொற்றி ருப்பதம் இறைஞ்சியே மறைமுறை போற்றி
நிற்ற லுஞ்சிவ னருள்கொடே நோக்குறீஇ நீவிர்
எற்றை வைகலு மில்லதோர் தளர்வொடும் எம்பால்
உற்ற தென்கொலோ என்றலும் மாலிவை உரைப்பான். 5
1229 வேறு
இறைவ நின்மகன் ஈண்டுறு போதனை
மறைமு தற்பத வான்பொருள் கெட்டடலும்
அறிகி லானுற அன்னவன் றன்னைமுன்
சிறைபு ரிந்தனன் சிட்டியுஞ் செய்கின்றான். 6
1230 கந்த வேளெனக் கஞ்சனும் ஐயநின்
மைந்த னாம்அவன் வல்வினை யூழினால்
அந்த மிபகல் ஆழ்சிறைப் பட்டுளம்
நொந்து வாடினன் நோவுழந் தானரோ. 7
1231 ஆக்க மற்ற அயன்றன் சிறையினை
நீக்கு கென்று நிமலனை வேண்டலுந்
தேக்கும் அன்பிற் சிலாதன்நற் செம்மலை
நோக்கி யொன்று நுவலுதல் மேயினான். 8
1232 குடுவைச் செங்கையி னானைக் குமரவேள்
இடுவித் தான்சிறை என்றனர் ஆண்டுநீ
கடிதிற் சென்றுநங் கட்டுரை கூறியே
விடுவித் தேயிவண் மீள்கெனச் சாற்றினான். 9
1233 எந்தை யன்ன திசைத்தலும் நன்றெனா
நந்தி அக்கணம் நாதனைத் தாழ்ந்துபோய்
அந்த மற்ற அடற்கணஞ் சூழ்தரக்
கந்த வெற்பிற் கடிநகர் எய்தினான். 10
1234 எறுழு டைத்தனி ஏற்று முகத்தினான்
அறுமு கத்தன் அமர்ந்த நிகேதனங்
குறுகி மற்றவன் கோல மலர்ப்பதம்
முறைத னிப்ணிந் தேத்தி மொழிகுவான். 11
1235 கடிகொள் பங்கயன் காப்பினை எம்பிரான்
விடுதல் கூறி விடுத்தனன் ஈங்கெனைத்
தடைப டாதவன் றன்சிறை நீக்குதி
குடிலை யன்னவன் கூறற் கௌ¤யதோ. 12
1236 என்னு முன்னம் இளையவன் சீறியே
அன்ன வூர்தி யருஞ்சிறை நீக்கலன்
நின்னை யுஞ்சிறை வீட்டுவன் நிற்றியேல்
உன்னி யேகுதி ஒல்லையி லென்றலும். 13
1237 வேற தொன்றும் விளம்பிலன் அஞ்சியே
ஆறு மாமுகத் தண்ணலை வந்தியா
மாறி லாவௌ¢ளி மால்வரை சென்றனன்
ஏறு போல்முக மெய்திய நந்தியே. 14
1238 மைதி கழ்ந்த மணிமிடற் றண்ணல்முன்
வெய்தெ னச்சென்று மேவி அவன்பதங்
கைதொ ழூஉநின்று கந்தன் மொழிந்திடுஞ்
செய்தி செப்பச் சிறுநகை யெய்தினான். 15
1239 கெழுத கைச்சுடர்க் கேசரிப் பீடமேல்
விழுமி துற்ற விமலன் விரைந்தெழீஇ
அழகு டைத்தன தாலயம் நீங்கியே
மழவி டைத்தனி மால்வரை ஏறினான். 16
1240 முன்னர் வந்த முகில்வரை வண்ணனுங்
கின்ன ரம்பயில் கேசர ராதியோர்
நன்னர் கொண்டிடு நாகரும் நற்றவர்
என்ன ருந்தொழு தெந்தையின் ஏகினார். 17
1241 படைகொள் கையினர் பன்னிறக் காழக
உடையர் தீயி னுருகெழு சென்னியர்
இடிகொள் சொல்லினர் எண்ணரும் பூதர்கள்
புடையில் ஈண்டினர் போற்றுதல் மேயினார். 18
1242 இனைய காலை யினையவர் தம்மொடும்
வனிதை பாதியன் மால்விடை யூர்ந்துராய்ப்
புனித வௌ¢ளியம் பொற்றை தணந்துபோய்த்
தனது மைந்தன் தடவரை யெய்தினான். 19
1243 சாற்ற ருந்திறற் சண்முக வெம்பிரான்
வீற்றி ருந்த வியனகர் முன்னுறா
ஏற்றி னின்றும் இழிந்துவிண் ணோரெலாம்
போற்ற முக்கட் புனிதனுட் போயினான். 20
1244 அந்தி போலும் அவிர்சடைப் பண்ணவன்
கந்தன் முன்னர்க் கருணையொ டேகலும்
எந்தை வந்தனன் என்றெழுந் தாங்கவன்
வந்து நேர்கொண்ட டடிகள் வணங்கியே. 21
1245 பெருத்த தன்மணிப் பீடிகை மீமிசை
இருத்தி நாதனை ஏழுல கீன்றிடும்
ஒருத்தி மைந்தன் உயிர்க்குயி ராகிய
கருத்த நீவந்த காரியம் யாதென்றான். 22
1246 மட்டு லாவு மலர்அய னைச்சிறை
இட்டு வைத்தனை யாமது நீக்குவான்
சுட்டி வந்தன மாற்சுரர் தம்முடன்
விட்டி டையவென் றெந்தை விளம்பினான். 23
1247 நாட்ட மூன்றுடை நாயகன் இவ்வகை
ஈட்டு மன்பொ டிசைத்திடும் இன்சொலைக்
கேட்ட காலையிற் கேழ்கிளர் சென்னிமேற்
சூட்டு மௌலி துளக்கினன் சொல்லுவான். 24
1248 உறுதி யாகிய ஓரெழுத் தின்பயன்
அறிகி லாதவன் ஆவிகள் வைகலும்
பெறுவ னென்பது பேதைமை ஆங்கவன்
மறைகள் வல்லது மற்றது போலுமால். 25
1249 அழகி தையநின் னாரருள் வேதமுன்
மொழிய நின்ற முதலெழுத் தோர்கிலான்
இழிவில் பூசை இயற்றலும் நல்கிய
தொழில்பு ரிந்து சுமத்தினை யோர்பரம். 26
1250 ஆவி முற்றும் அகிலமும் நல்கியே
மேவு கின்ற வியன்செயல் கோடலால்
தாவில் கஞ்சத் தவிசுறை நான்முகன்
ஏவர் தம்மையும் எண்ணலன் யாவதும். 27
1251 நின்னை வந்தனை செய்யினும் நித்தலுந்
தன்ன கந்தை தவிர்கிலன் ஆதலால்
அன்ன வன்றன் அருஞ்சிறை நீக்கலன்
என்ன மைந்தன் இயம்பிய வேலையே. 28
1252 வேறு
மைந்தநின் செய்கை யென்னே மலரயன் சிறைவி டென்று
நந்திநம் பணியா லேகி நவின்றதுங் கொள்ளாய் நாமும்
வந்துரைத் திடினுங் கேளாய் மறுத்தெதிர் மொழிந்தா யென்னாக்
கந்தனை வெகுள்வான் போலக் கழறினன் கருணை வள்ளல். 29
1253 அத்தன தியல்பு நோக்கி அறுமுகத் தமலன் ஐய
சித்தமிங் கிதுவே யாகில் திசைமுகத் தொருவன் தன்னை
உய்த்திடு சிறையின் நீக்கி ஒல்லையில் தருவ னென்னாப்
பத்தியின் இறைஞ்சிக் கூறப் பராபரன் கருணை செய்தான். 30
1254 நன்சிறை எகினம் ஏனம் நாடுவான் அருளை நல்கத்
தன்சிறை நின்றோர் தம்மைச் சண்முகக் கடவுள் நோக்கி
முன்சிறை யொன்றிற் செங்கேழ் முண்டகத் தயனை வைத்த
வன்சிறை நீக்கி நம்முன் வல்லைதந் திடுதி ரென்றான். 31
1255 என்றலுஞ் சார தர்க்குட் சிலவர்க ளெகி யங்கண்
ஒன்றொரு பூழை தன்னுள் ஒடுங்கின னுறையும் வேதா
வன்றளை விடுத்தல் செய்து மற்றவன் றனைக்கொண்ட டேகிக்
குன்றுதொ றாடல் செய்யுங் குமரவேள் முன்னர் உய்த்தார். 32
1256 உய்த்தலுங் கமலத் தண்ணல் ஒண்கரம் பற்றிச் செவ்வேள்
அத்தன்முன் விடுத்த லோடும் ஆங்கவன் பரமன் றன்னை
மெய்த்தகும் அன்பால் தாழ்ந்து வௌ¢கினன் நிற்ப நோக்கி
எய்த்தனை போலும் பன்னாள் இருஞ்சிறை யெய்தி யென்றான். 33
1257 நாதனித் தன்மை கூறி நல்லருள் புரித லோடும்
போதினன் ஐய உன்றன் புதல்வன்ஆற் றியவித் தண்டம்
ஏதமன் றுணர்வு நல்கி யானெனும் அகந்தை வீட்டித்
தீதுசெய் வினைகள் மாற்றிச் செய்தது புனித மென்றான். 34
1258 அப்பொழு தயனை முக்கண் ஆதியம் பரமன் காணூஉ
முப்புவ னத்தின் மேவும் முழுதுயிர்த் தொகைக்கும் ஏற்ற
துப்புற வதனை நன்று தூக்கினை தொன்மை யேபோல்
இப்பகல் தொட்டு நீயே ஈந்தனை யிருத்தி யென்றான். 35
1259 அருளுரு வாகும் ஈசன் அயற்கிது புகன்ற பின்னர்
முருகவேள் முகத்தை நோக்கி முறுவல்செய் தருளை நல்கி
வருதியால் ஐய என்று மலர்க்கையுய்த் தவனைப் பற்றித்
திருமணிக் குறங்கின் மீது சிறந்துவீற் றிருப்பச் செய்தான். 36
1260 காமரு குமரன் சென்னி கதுமென உயிர்த்துச் செக்கர்த்
தாமரை புரையுங் கையால் தழுவியே அயனுந் தேற்றா
ஓமென உரைக்குஞ் சொல்லின் உறுபொரு ளுனக்குப் போமோ
போமெனில் அதனை யின்னே புகலென இறைவன் சொற்றான். 37
1261 முற்றொருங் குணரும் ஆதி முதல்வகேள் உலக மெல்லாம்
பெற்றிடும் அவட்கு நீமுன் பிறருண ராத வாற்றால்
சொற்றதோ ரினைய மூலத் தொல்பொருள் யாருங் கேட்ப
இற்றென வியம்ப லாமோ மறையினால் இசைப்ப தல்லால். 38
1262 என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னாத்
தன்றிருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும்
ஒன்றொரு பதத்தி னுண்மை உரைத்தனன் உரைத்தல் கேளா
நன்றருள் புரிந்தா னென்ப ஞானநா யகனாம் அண்ணல். 39
1263 அன்னதோர் ஐய மாற்றி அகமகிழ் வெய்தி அங்கண்
தன்னிளங் குமரன் றன்னைத் தலைமையோ டிருப்ப நல்கி
என்னையா ளுடைய நாதன் யாவரும் போற்றிச் செல்லத்
தொன்னிலை யமைந்து போந்து தொல்பெருங் கயிலை வந்தான். 40
1264 முன்புறும் அயன்மால் தேவர் முனிவரை விடுத்து முன்னோன்
தன்பெருங் கோயில் புக்கான் தாவில்சீர்க் கந்த வெற்பில்
பொன்புனை தவிசின் ஏறிப் புடைதனில் வயவர் போற்ற
இன்பொடு குமர மூர்த்தி இனிதுவீற் றிருந்தா னன்றே. 41
1265 ஆங்குறு குமரப் புத்தேள் அருமறைக் காதி யாகி
ஓங்குமெப் பொருட்கு மேலாம் ஓரெழுத் துரையின் உண்மை
தீங்கற வணங்கிக் கேட்பச் சிறுமுனிக் குதவி மற்றும்
பாங்குறும் இறைவன் நூலும் பரிவினால் உணர்த்தி னானால். 42

ஆகத் திருவிருத்தம் - 1265
18. விடைபெறு படலம் (1266 -1310 )

1266 எல்லை அன்னதின் மாலருள் கன்னியர் இருவர்
சொல்ல ரும்பெரு வனப்பினர் சுந்தரி அமுத
வல்லி என்றிடும் பெயரினர் கந்தவேள் வரைத்தோள்
புல்லும் ஆசையால் சரவணத் தருதவம் புரிந்தார். 1
1267 என்னை யாளுடை மூவிரு முகத்தவன் இரண்டு
கன்னி மாருமாய் ஒன்றிநோற் றிடுவது கருத்தில்
உன்னி யேயெழீஇக் கந்தமால் வரையினை யொருவி
அன்னை தோன்றிய இமகிரிச் சாரலை யடைந்தான். 2
1268 பொருவில் சீருடை இமையமால் வரைக்கொரு புடையாஞ்
சரவ ணந்தனிற் போதலுந் தவம்புரி மடவார்
இருவ ரும்பெரி தஞ்சியே பணிந்துநின் றேத்த
வரம ளிப்பதென் கூறுதிர் என்றனன் வள்ளல். 3
1269 மங்கை மார்கொழு தெம்மைநீ வதுவையால் மருவ
இங்கி யாந்தவம் புரிந்தனங் கருணைசெய் யென்ன
அங்கவ் வாசகங் கேட்டலும் ஆறுமா முகத்துத்
துங்க நாயகன் அவர்தமை நோக்கியே சொல்வான். 4
1270 முந்தும் இன்னமு தக்கொடி மூவுல கேத்தும்
இந்தி ரன்மக ளாகியே வளர்ந்தனை இருத்தி
சுந்த ரிப்பெயர் இளையவள் தொல்புவி தன்னில்
அந்தண் மாமுனி புதல்வியாய் வேடர்பால் அமர்தி. 5
1271 நன்று நீவிர்கள் வளர்ந்திடு காலையாம் நண்ணி
மன்றல் நீமையால் உங்களை மேவுதும் மனத்தில்
ஒன்றும் எண்ணலீர் செல்லுமென் றெம்பிரான் உரைப்ப
நின்ற கன்னியர் கைதொழு தேகினர் நெறியால். 6
1272 ஏகு மெல்லையில் அமுதமா மென்கொடி யென்பாள்
பாக சாதனன் முன்னமோர் கு£வியாய்ப் படர்ந்து
மாக மன்னநின் னுடன்வரும் உபேந்திரன் மகள்யான்
ஆகை யால்எனைப் போற்றுதி தந்தையென் றடைந்தாள். 7
1273 பொன்னின் மேருவில் இருந்தவன் புல்வியை நோக்கி
என்னை யீன்றயாய் இங்ஙனம் வருகென இசைத்துத்
தன்ன தாகிய தனிப்பெருங் களிற்றினைத் தனது
முன்ன ராகவே விளித்தனன் இத்திறம் மொழிவான். 8
1274 இந்த மங்கைநந் திருமக ளாகுமீங் கிவளைப்
புந்தி யன்பொடு போற்றுதி இனையவள் பொருட்டால்
அந்த மில்சிறப் பெய்துமே லென்றலும் அவளைக்
கந்த மேற்கொடு நன்றெனப் போயது களிறு. 9
1275 கொவ்வை போலிதழ்க் கன்னியை மனோவதி கொடுபோய்
அவ்வி யானையே போற்றிய தனையகா ரணத்தால்
தெய்வ யானைஎன் றொருபெயர் எய்தியே சிறிது
நொவ்வு றாதுவீற் றிருந்தனள் குமரனை நுவன்றே. 10
1276 பெருமை பொண்டிடு தெண்டிரைப் பாற்கடல் பெற்றுத்
திரும டந்தையை அன்புடன் வளர்த்திடும் திறம்போல்
பொருவில் சீருடைஅடல் அயிராவதம் போற்ற
வரிசை தன்னுடன் இருந்தனள் தெய்வத மடந்தை. 11
1277 முற்று ணர்ந்திடு சுந்தரி யென்பவள் முருகன்
சொற்ற தன்மையை உளங்கொடு தொண்டைநன் னாட்டில்
உற்ற வள்ளியஞ் சிலம்பினை நோக்கியாங் குறையும்
நற்ற வச்சிவ முனிமக ளாகவே நடந்தாள். 12
1278 இந்த வண்ணம்இவ் விருவர்க்கும் வரந்தனை ஈந்து
கந்த மால்வரை யேகியே கருணையோ டிருந்தான்
தந்தை யில்லதோர் தலைவனைத் தாதையாய்ப் பெற்று
முந்து பற்பகல் உலகெலாம் படைத்ததோர் முதல்வன். 13
1279 வேறு
இத்திறஞ் சிலபக லிருந்து பன்னிரு
கைத்தல முடையவன் கயிலை மேலுறை
அத்தனொ டன்னைதன் னடிப ணிந்திடச்
சித்தம துன்னினன் அருளின் செய்கையால். 14
1280 எள்ளருந் தவிசினின் றிழிந்து வீரராய்
உள்ளுறும் பரிசனர் ஒருங்கு சென்றிடக்
கொள்ளையஞ் சாரதர் குழாமும் பாற்பட
வள்ளலங் கொருவியே வல்லை யேகினான். 15
1281 ஏயென வௌ¢ளிவெற் பெய்தி யாங்ஙனங்
கோயிலின் அவைக்களங் குறுகிக் கந்தவேள்
தாயொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே
ஆயவர் நடுவுற அருளின் வைகினான். 16
1282 அண்ணணங் குமரவேள் அங்கண் வைகலும்
விண்ணவர் மகபதி மேலை நாண்முதல்
உண்ணிகழ் தங்குறை யுரைந்து நான்முகன்
கண்ணனை முன்கொடு கயிலை யெய்தினார். 17
1283 அடைதரும் அவர்தமை அமலன் ஆலயம்
நடைமுறை போற்றிடும் நந்தி நின்மெனத்
தடைவினை புரிதலுந் தளர்ந்து பற்பகல்
நெடிதுறு துயரொடு நிற்றல் மேயினார். 18
1284 அளவறு பற்பகல் அங்கண் நின்றுளார்
வளனுறு சிலாதனன் மதலை முன்புதம்
உளமலி இன்னலை யுரைத்துப் போற்றலுந்
தளர்வினி விடுமின்என் றிதனைச் சாற்றினான். 19
1285 தங்குறை நெடும்புனற் சடில மேன்மதி
யங்குறை வைத்திடும் ஆதி முன்புபோய்
நுங்குறை புகன்றவன் நொய்தின் உய்ப்பனால்
இங்குறை வீரென இயம்பிப் போயினான். 20
1286 போயினன் நந்தியம் புனிதன் கண்ணுதற்
றூயனை வணங்கினன் தொழுது வாசவன்
மாயவன் நான்முகன் வானு ளோரெலாங்
கோயிலின் முதற்கடை குறுகினா ரென்றான். 21
1287 அருளுடை யெம்பிரான் அனையர் யாரையுந்
தருதிநம் முன்னரே சார வென்றலும்
விரைவொடு மீண்டனன் மேலை யோர்களை
வருகென அருளினன் மாசில் காட்சியான். 22
1288 விடைமுகன் உரைத்தசொல் வினவி யாவருங்
கடிதினி லேகியே கருணை வாரிதி
அடிமுறை வணங்கினர் அதற்குள் வாசவன்
இடருறு மனத்தினன் இனைய கூறுவான். 23
1289 பரிந்துல கருள்புரி பரையொ டொன்றியே
இருந்தருள் முதல்வகேள் எண்ணி லாஉகம்
அருந்திறற் சூர்முதல் அவுணர் தங்களால்
வருந்தின மொடுங்கினம் வன்மை இன்றியே. 24
1290 அந்தமில் அழகுடை அரம்பை மாதரும்
மைந்தனும் அளப்பிலா வானு ளோர்களும்
வெந்தொழில் அவுணர்கள் வேந்தன் மேவிய
சிந்துவின் நகரிடைச் சிறைக்கண் வைகினார். 25
1291 இழிந்திடும் அவுணரா லியாதொர் காலமும்
ஒழிந்திட லின்றியே உறைந்த சீரொடும்
அழிந்ததென் கடிநகர் அதனை யானிவண்
மொழிந்திடல் வேண்டுமோ உணர்தி முற்றுநீ. 26
1292 முன்னுற யான்தவம் முயன்று செய்துழித்
துன்னினை நங்கணோர் தோன்ற லெய்துவான்
அன்னவ னைக்கொடே அவுணர்ச் செற்றுநும்
இன்னலை யகற்றுதும் என்றி எந்தைநீ. 27
1293 அப்படிக் குமரனும் அவத ரித்துளன்
இப்பகல் காறுமெம் மின்னல் தீர்த்திலை
முப்புவ னந்தொழு முதல்வ தீயரேந்
துப்புறு பவப்பயன் தொலைந்த தில்லையோ. 28
1294 சூருடை வன்மையைத் தொலைக்கத் தக்கதோர்
பேருடை யாரிலை பின்னை யானினி
யாரொடு கூறுவன் ஆரை நோகுவன்
நீருடை முடியினோய் நினது முன்னலால். 29
1295 சீகர மறிகடற் சென்று நவ்விசேர்
காகம தென்னஉன் கயிலை யன்றியே
ஏகவோர் இடமிலை எமக்கு நீயலால்
சோகம தகற்றிடுந் துணைவர் இல்லையே. 30
1296 ஏற்றெழு வன்னிமேல் இனிது துஞ்சலாந்
தோற்றிய வெவ்விட மெனினுந் துய்க்கலாம்
மாற்றலர் அலைத்திட வந்த வெந்துயர்
ஆற்றரி தாற்றரி தலம்இப் புன்மையே. 31
1297 தீதினை யகற்றவுந் திருவை நல்கவுந்
தாதையர் அல்லது தனயர்க் காருளர்
ஆதலின் எமையினி அளித்தி யாலென
ஓதினன் வணங்கினன் உம்பர் வேந்தனே. 32
1298 அப்பொழு தரியயன் ஐய வெய்யசூர்
துப்புடன் உலகுயிர்த் தொகையை வாட்டுதல்
செப்பரி தின்னினிச் சிற்துந் தாழ்க்கலை
இப்பொழு தருள்கென இயம்பி வேண்டினார். 33
1299 இகபரம் உதவுவோன் இவற்றைக் கேட்டலும்
மிகவருள் எய்தியே விடுமின் நீர்இனி
அகமெலி வுறலென அருளி ஆங்கமர்
குகன்முகன் நோக்கியே இனைய கூறுவான். 34
1300 வேறு
பாரினை யலைத்துப் பல்லுயிர் தமக்கும் பருவரல் செய்துவிண் ணவர்தம்,
ஊரினை முருக்கித் தீமையே இயற்றி யுலப்புறா வன்மை கொண் டுற்ற,
சூரனை யவுணர் குழுவொடுந் தடிந்து சுருதியின் நெறி நிறீஇ மகவான்,
பேரர சளித்துச் சுரர்துயர் அகற்றிப் பெயர்தியென் றனன்எந்தை பெருமான். 35
1301 அருத்திகொள் குமரன் இனையசொல் வினவி அப்பணி புரிகுவ னென்னப்,
புரத்தினை யட்ட கண்ணுதல் பின்னர்ப் பொள்ளென உள்ளமேற் பதினோர்,
உருத்திரர் தமையும் உன்னலும் அன்னோர் உற்றிட இவன்கையிற் படையாய்,
இருத்திரென் றவரைப் பலபடை யாக்கி ஈந்தனன் எம்பிரான் கரத்தில். 36
1302 பொன்றிகழ் சடிலத் தண்ணல்தன் பெயரும் பொருவிலா உருவமுந் தொன்னாள்,
நன்றுபெற் றுடைய உருத்திர கணத்தோர் நவிலருந் தோமரங் கொடிவாள்,
வன்றிறற் குலிசம் பகழியங் குசமும் மணிமலர்ப் பங்கயந் தண்டம்,
வென்றிவின் மழுவு மாகிவீற் றிருந்தார் விறல்மிகும் அறுமுகன் கரத்தில். 37
1303 ஆயதற் பின்னர் ஏவில்மூ தண்டத் தைம்பெரும் பூதமும் அடுவ,
தேயபல் லுயிரும் ஒருதலை முடிப்ப தேவர்மேல் விடுக்கினும் அவர்தம்,
மாயிருந் திறலும் வரங்களுஞ் சிந்தி மன்னுயிர் உண்பதெப் படைக்கும்,
நாயக மாவ தொருதனிச் சுடர்வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான். 38
1304 அன்னதற் பின்னர் எம்பிரான் றன்பா லாகிநின் றேவின புரிந்து,
மன்னிய இலக்கத் தொன்பது வகைத்தா மைந்தரை நோக்கியே எவர்க்கும்,
முன்னவ னாம்இக் குமரனோ டேகி முடிக்குதிர் அவுணரை யென்னாத்,
துன்னுபல் படையும் உதவியே சேய்க்குத் துணைப் படை யாகவே கொடுத்தான். 39
1305 நாயகன் அதற்பின் அண்டவா பரணன் நந்தியுக் கிரனொடு சண்டன்,
காயெரி விழியன் சிங்கனே முதலாங் கணப்பெருந் தலைவரை நோக்கி,
ஆயிர விரட்டி பூதவௌ¢ ளத்தோ டறுமுகன் சேலையாய்ச் சென்மின்,
நீயிரென் றருளி அவர்தமைக் குகற்கு நெடும்படைத் தலைவரா அளித்தான். 40
1306 ஐம்பெரும் பூத வன்மையும் அங்கண் அமர்தரும் பொருள்களின் வலியுஞ்,
செம்பது மத்தோ னாதியாம் அமரர் திண்மையுங் கொண்டதோர் செழுந்தேர்,
வெம்பரி இலக்கம் பூண்டது மனத்தின் விரைந்து முன் செல்வதொன் றதனை,
எம்பெரு முதல்வன் சிந்தையா லுதவி யேறுவான் மைந்தனுக் களித்தான். 41
1307 இவ்வகை யெல்லாம் வரைவுடன் உதவி யேகுதி நீயெனக் குமரன்,
மைவிழி உமையோ டிறைவனைத் தொழுது வலங்கொடே மும்முறை வணங்கிச்,
செவ்விதின் எழுந்து புகழ்ந்தனன் நிற்பத் திருவுளத் துவகையால் தழுவிக்,
கைவரு கவானுய்த் துச்சிமேல் உயிர்த்துக் கருணைசெய் தமலைகைக் கொடுத்தான். 42
1308 கொடுத்தலும் வயின்வைத் தருளினாற் புல்லிக் குமரவேள் சென்னிமோந் துன்பால்,
அடுத்திடும் இலக்கத் தொன்பது வகையோர் அனிகமாய்ச் சூழ்ந்திடப் போந்து,
கடக்கரும் ஆற்றல் அவுணர்தங் கிளையைக் காதியிக் கடவுளர் குறையை,
முடித்தனை வருதி என்றருள் புரிந்தாள் மூவிரு சமயத்தின் முதல்வி. 43
1309 அம்மையித் திறத்தால் அருள்புரிந் திடலும் அறுமுகன் தொழுதெழீஇ யனையோர்,
தம்விடை கொண்டு படர்ந்தனன் தானைத் தலைவராம் இலக்கமே லொன்பான்,
மெயம்மைகொள் வீரர்யாவருங் கணங்கள் வியன்பெருந் தலைவரும் இருவர்,
செம்மல ரடிகள் மும்முறை இறைஞ்சிச் சேரவே விடைகொடு சென்றார். 44
1310 நின்றிடும் அயன்மால் மகபதி எந்தாய் நீயெமை அளித்தனை நெஞ்சத்,
தொறாரு குறையும் இல்லையால் இந்நாள் உய்ந்தனம் உய்ந்தன மென்று,
பொன்றிகழ் மேனி உமையுடன் இறைவன் பொன்னடி பணிந்தெழ நுமக்கு,
நன்றிசெய் குமரன் தன்னுடன் நீரும் நடமெனா விடையது புரிந்தான். 45

ஆகத் திருவிருத்தம் - 1310
19. படையெழு படலம் (1311 - 1328)

1311 கண்ணுதல் விடைபெற் றரியயன் மகவான் கடவுளர் தம்மொடு கடிதின்,
அண்ணலங் குமரன் தன்னொடு சென்றே அயல்வரும் மருத்தினை நோக்கித்,
தண்ணளி புரியும் அறுமுகத் தெந்தை தனிபருந் தேர்மிசை நீபோய்ப்,
பண்ணொடு முட்கோல் மத்திகை பரித்துப் பாகனாய்த் தூண்டெனப் பணித்தான். 1
1312 மன்புரி திருமால் இனையன பணிப்ப மாருதன் இசைந்துவான் செல்லும்,
பொன்பொலி தேரின் மீமிசைப் பாய்ந்து பொருக்கென மருத்துவர் நாற்பான்,
ஒன்பது திறத்தார் புடைவரத் தூண்டி உவகையோ டறுமுகத் தொருவன்,
முன்புற வுய்த்துத் தொழுது மற்றிதன்மேல் முருகநீ வருகென மொழிந்தான். 2
1313 மாருதன் இனைய புகன்றுகை தொழலும் மற்றவன் செயற் கையை நோக்கிப்,
பேரருள் புரிந்து கதிரிளம் பரிதி பிறங்குசீர் உதயமால் வரைமேல்,
சேருவ தென்னக் குமரவேள் அனைய செழுமணி இரதமேற் செல்லச்,
சூரினி இறந்தான் என்றுவா சவனுஞ் சுரர்களும் ஆர்த்தனர் துள்ளி. 3
1314 வேறு
ஓங்கு தேர்மிசைக் குமரவேள் மேவலும் உவப்பால்
ஆங்க வன்றன தருள்பெறுந் திறலினோர் அணுகிப்
பாங்கர் நண்ணினர் முனிவருந் தேவர்கள் பலரும்
நீங்க லின்றியே அவர்புடை சூழ்ந்தனர் நெறியால். 4
1315 இனந்த னோடவர் முருகனை அடைதலும் இருநீர்
புனைந்த சென்னியன் கயிலையில் இருந்தவெம் பூதர்
அனந்த வௌ¢ளத்தில் இராயிர மாகும்வௌ¢ ளத்தர்
வனைந்த வார்கழற் றலைவர்தம் முரைகொடு வந்தார். 5
1316 எழுவி யன்கரை நேமிவெஞ் சூலம்வாள் எறிவேல்
மழுமு தற்படை யாவையும் ஏந்திய வலியோர்
நிழன்ம திப்பிறை ஞெலிந்தென* நிலாவுமிழ் எயிற்றர்
அழலு குத்திடும்** விழியினர் அசனியின் அறைவார்.
( * ஞெலிந்தன. ** அழலுருத்திடும்.) 6
1317 நெடியர் சிந்தினர் குறியினர் ஐம்பெரு நிறனும்
வடிவில் வீற்றுவீற் றெய்தினர் வார்சடைக் கற்றை
முடியர் குஞ்சியர் பலவத னத்தரோர் முகத்தர்
கொடிய ரென்னினும் அடைந்தவர்க் கருள்புரி குணத்தோர். 7
1318 நீறு கண்டிகை புனைதரும் யாக்கையர் நெடுநஞ்
சேறு கண்டனை அன்றிமற் றெவரையும் எண்ணார்
மாறு கொண்டவர் உயிர்ப்பலி நு குவோர் மறலி
வீறு கொண்டதொல் படைதனைப் படுத்திடு மேலோர். 8
1319 அண்டம் யாவையும் ஆண்டுறை உயிர்த்தொகை யனைத்தும்
உண்டு மிழ்ந்திட வல்லவர் அன்றியும் உதரச்
சண்ட அங்கியா லடுபவர் அட்டவை தம்மைப்
பண்டு போற்சிவன் அருளினால் வல்லையிற் படைப்போர். 9
1320 முன்னை வைகலின் இறந்திடும் இந்திரன் முதலோர்
சென்னி மாலைகந் தரத்தினில் உரத்தினில் சிரத்தில்
கன்ன மீதினில் கரத்தினில் மருங்கினில் கழலில்
பொன்னின் மாமணிக் கலனொடும் விரவினர் புனைவார். 10
1321 இந்த வண்ணமாஞ் சாரதப் படையினர் ஈண்டித்
தந்தம் வெஞ்சமர்த் தலைவர்க ளோடுசண் முகன்பால்
வந்து கைதொழு தேத்தியே இறுதி சேர்வைகல்
அந்த மில்புனல் அண்டம துடைந்தென ஆர்த்தார். 11
1322 ஆர்த்த சாரதர் எந்தைபா லாயினர் அதுகால்
பேர்த்தும் ஆயவர் இடித்தெனப் பூதரில் பெரியோர்
வார்த்த யங்கிய தண்ணுமை திமிலைவான் படகஞ்
சீர்த்த காகள முதலிய இயம்பினர் சிலரே. 12
1323 ஆன காலையில் அதுதெரிந் தறுமுகத் தொருவன்
வான ளாவிய புணரிகள் சூழ்ந்திட வயங்கும்
பானு நாயகன் வந்தெனப் பரந்துபா ரிடத்துச்
சேனை சூழ்தரக் கயிலைநீத் தவனிமேற் சென்றான். 13
1324 கொள்ளை* வெஞ்சினச் சாரதர் இராயிரங் குணித்த
வௌ¢ளம் வந்திடக் கந்தவேள் அவனிமேல் மேவக்
கள்ள வான்படை அவுணர்கள் கலந்துசூழ்ந் தென்னப்
பொள்ளெ னத்துகள் எழுந்தது வளைந்தது புவியை.
( * கொள்ளை - மிகுதி.) 14
1325 எழுத ருந்துகள் மாதிர வரைப்பெலாம் ஏகி
ஒழியும் வான்பதஞ் சென்றதால் ஆங்கவை யுறுதல்
குழுவின் மல்கிய சாரதர் ஆர்ப்புமுன் குறுகி
மொழிதல் போன்றன விண்ணுளோர் இமைப்பில்கண் மூட. 15
1326 கழிய டைத்திடு நேமிகள் பலவொடு ககன
வழிய டைத்திடு பூமியும் ஒலியும்மன் னுயிர்கள்
விழிய டைத்தன நாசியை யடைத்தன விளம்பு
மொழிய டைத்தன அடைத்தன கேள்வியின் மூலம்**.
( ** கேள்வியின் மூலம் - கேட்டற்கேதுவாயுள்ள செவி.) 16
1327 பேரி டங்களாந் தனுவுடைப் பூதர்கள் பெயரப்
பாரி டங்கள்தாம் இடம்பெறா ஆதலிற் பல்லோர்
காரி டங்கொளும் வான்வழிச் சென்றனர் கண்டோர்
ஓரி டங்களும் வௌ¢ளிடை இலதென வுரைப்ப. 17
1328 அவனி வானெலாம் பூழியால் மறைத்தலும் அதனைச்
சி¢வன்ம கன்றன தொளியினால் அகற்றினன் செல்வான்
கவன வாம்பரி இரதமேற் பனிபடுங் காலைத்
தவன நாயகன் *** அதுதடிந் தேகுதன் மையைப் போல்.
( *** தவனநாயகன் - சூரியன்.) 18


====
20. தாரகன் வரைப் படலம் (1329-1531)

1329 வெம்மை தீர்ந்திடும் அப்பெரு நெறியிடை விரைந்து
செம்மை சேர்தரு குமரவேள் படையொடு செல்ல
அம்ம சேர்ந்தது தாரகற் குறையுளாய் அடைந்தோர்
தம்மை வாட்டியே அமர்கிர வுஞ்சமாஞ் சைலம். 1
1330 விண்டு லாய்நிமிர் கிரவுஞ்ச கிரியினை விண்ணோர்
கண்டு ளம்பதை பதைத்தனர் மகபதி கலக்கங்
கொண்டு நின்றனன் நாரதன் அணுகியே குமரன்
புண்ட ரீகநேர் பதந்தொழு தின்னன புகல்வான். 2
1331 தூய நான்மறை அந்தணர் முனிவர்இச் சுரத்திற்
போய வெல்லையின் நெறியதாய் வரவரப் புணர்த்து
மாய்வு செய்துபின் குறுமுனி சூளின்இவ் வடிவாய்
ஏய தொல்பெயர்க் கிரவுஞ்ச மால்வரை இதுகாண். 3
1332 நேரில் இக்கிரிக் கொருபுடை மாயநீள் நகரில்
சூரெ னப்படும் அவுணனுக் கிளவலாந் துணைவன்
போரில் அச்சுதன நேமியை அணியதாப் புனைந்தோன்
தார கப்பெயர் வெய்யவன் வைகினன் சயத்தால். 4
1333 இன்ன வன்றனை அடுதியேல் எளிதுகாண் இனையோன்
முன்ன வன்றனை வென்றிட லெனமுனி மொழிய
மின்னு தண்சுடர் வேலவன் அவற்றினை வினவி
அன்ன வன்றனை முடிக்குதும் இவணென அறைந்தான். 5
1334 வேறு
சிறந்திடு முருகவேள் இனைய செப்பலும்
நிறைந்திடும் அமரரும் இறையும் நெஞ்சினில்
உறைந்திடு கவலொரீஇ உவகை எய்தினார்
இறந்தனன் தாரகன் இன்றொ டேயெனா. 6
1335 ஐயர்கள் பெருமகிழ் வடைய ஆறிரு
கையுடை முருகன்அக் காலை தன்புடை
மெய்யருள் எய்திய வீர வாகுவாந்
துய்யனை நோக்கியே இனைய சொல்லுவான். 7
1336 உற்றவக் கிரிகிர வுஞ்ச மாகுமால்
மற்றத னொருபுடை மாய நொச்சியுட்
செற்றிய அசுரர்தஞ் சேனை தன்னுடன்
அற்றமில் தாரகன் அமர்தல் மேயினான். 8
1337 ஏயநின் துணைவர்கள் இலக்கத் தெண்மர்கள்
ஆயிர வௌ¢ளமாம் அடல்கொள் பூதர்கள்
சாய்வறு தலைவர்கள் தம்மொ டேகியே
நீயவன் பதியினை வளைத்தி நேரிலாய். 9
1338 தடுத்தெதிர் மலைந்திடும் அவுணர் தானையைப்
படுத்தனை தாரகப் பதகன் எய்துமேல்
அடுத்தமர் இயற்றுதி அரிய தேலியாம்
முடித்திட வருகுதும் முந்துபோ வென்றான். 10
1339 நலமிகு குமரவேள் நவில இன்னணம்
வலமிகு சிறப்புடை வாகு நன்றெனாத்
தலைமிசை கூப்பிய கரத்தன் தாழ்ந்துமுன்
நிலமிசை இறைஞ்சினன் நேர்ந்து நிற்பவே. 11
1340 ஏந்தலந் துணைவராம் இலக்கத் தெண்மரை
ஆய்ந்திடு பூதரை யாதி நோக்கியே
வாய்ந்திடு பெருந்திறல் வாகு தன்னுடன்
போந்திடும் அவுணரைப் பொரவென் றேவினான். 12
1341 ஏவலும் அனையவர் யாரும் எம்பிரான்
பூவடி வணங்கியே போதற் குன்னலும்
ஆவியுள் ஆவியாம் அமலன் பாங்குறுந்
தேவர்கள் கம்மியற் கிதனைச் செப்புவான். 13
1342 மேதகு பெருந்திறல் வீர வாகுவை
தியர் தமக்கெலாம் அளிக்கும் பான்மையால்
ஏதமி லாதபல் லிரதம் நல்கெனா
ஓதினன் உலகெலாம் உதவுந் தொன்மையோன். 14
1343 அத்திறங் கேட்டதோர் அமரர் கம்மியன்
ஒத்ததோர் மாத்திரை ஒடுங்கு முன்னரே
சித்திர வயப்பரி சீயங் கூளிகள்
இத்திறம் பூண்டபல் லிரதம் நல்கினான். 15
1344 வேறு
அன்ன தேர்த்தொகை அதனை எம்பிரான்
மின்னு காலவேல் வீர வாகுவும்
பின்னர் எண்மரும் பிறருஞ் சாரத
மன்ன ரும்பெற வழங்கி னானரோ. 16
1345 பாகர் தூண்டிடப் படருந் தேர்கள்மேல்
வாகை சேர்தரும் வாகு வேமுதல்
ஆகினோர் அடைந் தம்பொன் மால்வரைத்
தோகை மைந்தனைத் தொழுது போற்றினார். 17
1346 தொழுது வள்ளலைச் சூழ்ந்து மும்முறை
விழுமி தாகிய விடைபெற் றேகினார்
பழுதில் நீத்தமோர் பத்து நூறெனக்
குழுமிப் பாரிடங் குலவிச் செல்லவே. 18
1347 பாய பூதர்தம் படைக்கு வேந்தராய்
ஏயி னார்க்குவீ றிலக்கத் தெண்மராய்
மேயி னார்க்கெலாம் வீர வாகுவோர்
நாய கம்பெறீஇ நடுவட் போயினான். 19
1348 அமர்வி ளைக்கமுந் தவனை யேவியே
தமர வேலையில் தானை சூழ்தர
இமைய வர்க்கிறை ஏனை யோர்தொழக்
குமர வேள்கடைக் கூழை யேகினான். 20
1349 வேறு
பிற்பட எம்பிரான் பெயர ஏவலால்
முற்படு வீரனை முயங்கிப் பாரிடச்
சொற்படை படர்வன தூமந் தன்னொடு
சிற்பரன் நகையழல் புரத்துச் சென்றபோல். 21
1350 அரிநிரை பூண்டதேர் அலகை பூண்டதேர்
பரிநிரை பூண்டதேர் படைக்குள் ஏகுவ
விரிகடல் வரைப்பினில் மேக ராசியுங்
கிரியுறழ் கலங்களுங் கெழுமிச் செல்வபோல். 22
1351 இடையகல் இரதமோ டிரதந் தாக்கிய
படையொடு படைவகை செறிந்த பல்வகைக்
கொடியொடு கொடிநிரை துதைந்த கூளியர்
அடுசமர் பயின்றிடும் அமைதி போலவே. 23
1352 சங்கொடு பணைதுடி தடாரி காகளம்
பங்கமில் தண்ணுமை யாதிப் பல்லியம்
எங்கணும் இயம்பின எழுந்து பூழிபோய்ச்
செங்கம லத்தவன் பதத்தைச் செம்மிற்றே. 24
1353 சாற்றுமிவ் வியல்புறத் தானை வீரருஞ்
சீற்றவெம் பூதருஞ் செல்ல வாகையான்
கோற்றொழில் அகற்றிய கோட்டு மாமுகன்
போற்றிய மாயமா புரியைச் சேர்ந்தனன். 25
1354 வேறு
சேர்ந்திடு மெல்லை பூதர் சேனைபோய் நகரம் புக்கு
நேர்ந்திடும் அவுண ரோடு நின்றமர் விளைத்து நின்றார்
ஓர்ந்தனர் அதனைத் தூத ரோடித்தங் கோயில் புக்குச்
சார்ந்திடு திருவில் வைகுந் தாரகற் றொழுது சொல்வார். 26
1355 எந்தைமற் றிதுகேள் நும்முன் இமையவர் தொகையை யிட்ட
வெந்துயர்ச் சிறையை நீக்க விரிசடைக் கடவுள் மைந்தன்
கந்தனென் றொருவன் வந்தான் அவுணரைக் கடக்கு மென்னா
அந்தர நெறிசெல் விண்ணோர் அறைந்திடக் கேட்டு மன்றே. 27
1356 என்னிவர் மாற்ற மென்னா யாந்தெரி குற்றே மாக
அன்னவர் இயம்பி யாங்கே ஆயிரத் திரட்டி யென்னப்
பன்னுறு பூத வௌ¢ளம் படர்ந்திடக் குமரன் போந்தான்
முன்னுறு தூசி நந்தம் முதுநகர் அலைத்த தென்றார். 28
1357 என்றலும் வடவைத் தீயில் இழுதெனும் அளக்கர் வீழத்
துன்றிய எழுச்சி மானத் துண்ணெனச் செற்றந் தூண்டே
மின்றிகழ் அரிமான் ஏற்று வியன்றவி சிருக்கை நீங்கிக்
குன்றுறழ் மகுடம் அண்ட கோளகை தொடவெ ழுந்தான். 29
1358 எழுந்ததுதன் மருங்கு நின்ற ஒற்றை நோக்கி இந்தச்
செழுந்திரு நகர்மேல் வந்த சேனையை முளிபுற் கானில்
கொழுந்தழல் புகுந்த தென்னக் கொல்வன்நந் தானை முற்றும்
உழுந்துருள் கின்ற முன்னர் ஒல்லைதந் திடுதி ரென்றான். 30
1359 வேறு
அன்னபணி முறைபுரிவான் ஒற்றுவர்கள் போயிடலும் அவுணன் நின்ற,
கொன்னுறுவேற் பரிசனரைக் கொடுவருதிர் இரதமெனக் கூற லோடும்,
முன்னமொரு நொடிவரையில் தந்திடலும் அதனிடையே மொய்ம்பிற் புக்குப்,
பின்னர்வரும் அமைச்சர்கள் தந்தொகைபரவ மதர்ப்பினொடு பெயர்த லுற்றான். 31
1360 வீடுவான் போலுமினித் தாரகனென் றவன்சீர்த்தி விரைவில் வந்து,
கூடியே புரள்வதுவும் அரற்றுவதுங் காப்பதுமாங் கொள்கைத் தென்ன,
நீடுசா மரத்தொகுதி பலவிரட்ட வௌ¢ளொலியல் நிமிர்ந்து வீசப்,
பீடுசேர் தவளமதிக் குடைநிழற்ற வலம்புரிகள் பெரிதும் ஆர்ப்ப. 32
1361 ஈமத்தே நடம்புரியுங் கண்ணுதலோன் எடாதசிலை யென்ன மாலோன்,
மாமத்தே யெனக்கிடந்த முழுவயிரத் தண்டமொன்று வயிரக் கண்டைத்,
தாமத்தேர் பெறுகின்ற மடஙகல்பல ஈர்த்துவருஞ் சகடத் திண்கால்,
சேமத்தேர் மிசைப்போத ஏனையபல் படைக்கலமுஞ் செறிந்து நண்ண. 33
1362 ஒற்றர்கூ வியவேலை ஏற்றெழுந்த அவுணர்கடல் ஒருங்கு செல்லக்,
கொற்றமால் கரிபரிதேர் இனத்தினொடு வந்தீண்டக் குழவித் திங்கட்,
கற்றைவார் சடைக்கடவுள் வாங்கியபொன் மால்வரையைக் காவ லாகச்,
சுற்றுமால் வரையென்னப் படைத்தலைவர் ப•றேரில் தவன்றிச் சூழ. 34
1363 மொய்யமர்செய் கோலமொடு முப்புரமேல் நடந்தருளும் முக்கண் மூர்த்தி,
பையரவின் தலைத்துஞ்சுங் கணைதூண்ட மூண்டதழல் பதகரானோர்,
மெய்யுடலம் முழுதுநுங்கத் தலைகொள்ளப் பெருந்தூம மிசைக்கொண் டென்னச்,
செய்யமுடி அவுணர்பெருங் கடலினிடை யெழும்பூழி சேட்சென் றோங்க. 35
1364 கார்க்குன்றம் அன்னதிறல் கரிமீதும் பரிமீதுங் கடிதில் தூண்டுந்,
தேர்க்குன்றம் அதன்மீதும் வயவர்கள்தங் கரங்களினுஞ் செறிப தாகை,
ஆர்க்கின்ற ஆயர்ந்தோங்கி அசைகின்ற தெம்மருங்கும் அம்பொன் நாட்டில்,
தூர்க்கின்ற பூழியினைத் துடைக்கின்ற பரிசேபோல் துவன்றித் தோன்ற. 36
1365 வாகையுள பல்லியமும் இயம்பத்தன் நகர்நீங்கி மன்னர் மன்னன்,
ஏகியதோர் படிநோக்கி உவரிமிசைக் கங்கைகள்வந் தெய்து மாபோல்,
சாகையுள பன்மரனும் பல்படையுங் குன்றுகளுந் தடக்கையேந்திச்,
சேகுடைய பெருஞ்சீற்றப் பூதர்படை யார்த்தெதிர்ந்து சென்ற தன்றே. 37
1366 எல்லோருந் தொழுதகைய குமரனடி இணைவழுத்தி இகல்வெம்பூதர்,
கல்லோடு மரனோடுங் கரையோடுங் கணிச்சியொடுங் கழுமுள் வீச,
வில்லோடுங் கணையோடும் வேலோடும் புரையுமனத்
தவுணர்படை எதிர்சிதறி அமர்செய் திட்டார். 38
1367 வேறு
எண்ணுறு படைகள் இவ்வா றெதிர்தழீஇ அடரும் வேலை
விண்ணுறு பூழி யென்னும் விரிதரு புகைமீச் செல்ல
மண்ணுறு குருதி யான வன்னியை மாற்று வார்போல்
கண்ணுறும் இமையோர் கண்கள் படிப்புனல் கான்ற அன்றே. 39
1368 இரிந்திட லின்றி நேர்வந் தேற்றமர் புரித லாலே
சொரிந்திடு குருதி பொங்கத் தோளொடு சென்னி துள்ளச்
சரிந்திடுங் குடர்கள் சிந்தத் தானவர் பல்லோர் மாயப்
பொருந்திறல் வயத்தால் மேலாம் பூதருஞ் சிலவர் பட்டார். 40
1369 தேருடைத் தெறிந்து பாய்மாத் திறத்தினைச் சிதைத்து நீக்கி
ஆருடைத் திகிரிச் சில்லி அங்கையால் எடுத்துச் சுற்றிப்
போருடைத் திறலோர் தம்பால் பொம்மென நடாத்தும் பொற்பால்
காருடைப் பூதர் சில்லோர் கண்ணனே போன்றார் அன்றே. 41
1370 தேர்பரித் தெழுந்து மண்ணில் செல்லுறாப் பவளச் செங்கால்
கார்பரித் தன்ன தோகைக் கவனவாம் புரவி யீட்டம்
போர்பரித் தொழுகு சீற்றப் பூதர்கள் புடைத்துச் சிந்திப்
பார்பரித் திடவே செய்தார் படிமகள் இடும்பை தீர்ப்பார். 42
1371 வாலுடைக் களிற்றின் ஈட்டம் வாரியே கரத்தா லெற்றிக்
காலுடைத் திகிரித் திண்டேர் கழல்களால் உருட்டிக் காமர்
பாலுடைப் புரவித் தானை பதங்களால் உழக்கிச் சென்றார்
வேலுடைத் தடக்கை அண்ணல் விடுத்தருள் வீர வீரர். 43
1372 வாருறு புரசை பூண்ட வன்களிற் றொருத்தல் யாவுஞ்
சூருறு நிலைய வாகித் துஞ்சிய தொகுதி சூழப்
பேருறு குருதி நீத்தம் பிறங்கழற் கதிர்கா ணாது
காருற வூர்கோள் தோன்றுங் காட்சியை யொத்த தன்றே. 44
1373 கண்ணெதிர் நின்று போர்செய் கார்கெழும் அவுணர்ப் பற்றித்
துண்ணெனப் பூதர் வீசத் துளங்கிய கலன்க ளோடும்
விண்ணிடை யிறந்து நொய்தின் வீழ்வது விசும்பில் தப்பி
மண்ணிடை மின்னு வோடும் வருமுகில் போன்ற தன்றே. 45
1374 ஆயிர வௌ¢ள மாகுங் கணவரும் ஆங்க ணுள்ள
பாயிருங் குன்ற மெல்லாம் பன்முறை பறித்து வீசி
மாயிருந் தகுவர் தானை வரம்பில படுத்து நின்றார்
ஏயென வுலகைச் சிந்தும் இறுதிநாள் எழிலி போல்வார். 46
1375 நிணங்கவர் ஞமலி யோர்சார் ஞெரேலெனக் குரைப்பப் புள்ளின்
கணங்களும் அலகை தானுங் கறங்கிடக் கானத் தோங்கிப்
பிணங்களின் அடுக்கல் ஈண்டிப் பேரமர் விலக்கி யார்க்கும்
அணங்குறு நிலைய வாகி அடுத்தன நடுவண் அம்மா. 47
1376 தரைத்தடஞ் சிலைய தாகத் தறுகண்வெம் பூத ரானோர்
வரைத்துணை அன்ன தாளே வலிகெழு குழவி யாகத்
திரைத்திழி குருதி நீராத் தீர்ந்திடு திறலோர் யாக்கை
அரைத்தென நடப்ப ஏற்றார் அவுணரும் அடுபோர் செய்வார். 48
1377 தத்துறு புரவித் திண்டேர்த் தானவர் நிகளத் தந்தி
பத்துநூ றொன்றில் வீழப் பழுமரப் பணைகொண் டெற்றி
முத்தலை யெ•கம் வீசி முசலத்திற் புடைத்து மொய்ம்பால்
குத்திநின் றுழக்கிப் பாய்ந்து கொன்றனர் பூத வீரர். 49
1378 விழுந்தன படிவம் யாண்டும் விரிந்தன கவந்த மேன்மேல்
எழுந்தன குருதித் தாரை ஈர்த்தன நீத்த மாக
அழுந்திய இறந்தோர் யாக்கை ஆர்த்தன பறவை செய்ய
கொழுந்தசை மிசைந்து நின்று குரவை யாட் டயர்ந்த கூளி. 50
1379 கண்டனன் இனைய தன்மை தாரகன் கடிய சீற்றங்
கொண்டனன் வையம் நீங்கிக் குவலய மிசைக்குப் புற்றுத்
தண்டமொன் றெடுத்துப் பூதப் படையினைத் தரையில் வீட்டி
அண்டமுங் குலுங்க ஆர்த்திட் டடிகளால் உழக்கிச் சென்றான். 51
1380 அல்லெனப் பட்டமேனி அவுணர்கட் கரசன் கையிற்
கல்லெனப் பட்ட தண்டாற் புடைத்தலுங் கரங்கள் சென்னி
பல்லெனப் பட்ட சிந்திப் பாய்புனல் ஒழுக்கிற் சாய்ந்த
புல்லெனப் பட்ட தம்மா பூதர்தஞ் சேனை யெல்லாம். 52
1381 பிடித்திடு வயிரத் தண்டம் பெருங்கடற் பூத வௌ¢ளம்
முடித்திடல் புகழோ அன்றால் தாரக மொய்ம்பின் மேலோன்
அடித்திடுங் காலை கீண்ட தம்புவி அடிப்பான் ஓங்கி
எடுத்திடுங் காலை கீண்ட தெண்டிசை அண்டச் சூழல். 53
1382 தாரிடங் கொண்ட மார்பத் தாரகன் வயிரத் தண்டம்
போரிடங் கொண்டோர் சென்னி புயமுரங் கரங்கள் சிந்திக்
காருடங் கண்ட பாந்தட் கணமெனத் துடிப்ப வீட்டிப்
பாரிடந் தன்னை யெல்லாம் பாரிடம் ஆக்கிற் றம்மா. 54
1383 அன்றரி விடுத்த ஆழி ரமா வணிந்த தீயோன்
கொன்றனன் அனிக மென்னுங் கொள்கையும் அவன்மேற் செல்லும்
வன்றிறல் தம்பால் இல்லா வண்ணமும் மதித்து நோக்கி
நின்றிலர் பூதர் வேந்தர் நெஞ்சழிந் துடைந்து போனார். 55
1384 திண்கண நிரையின் வேந்தர் சிந்துழிச் சீற்றந் தூண்ட
எண்கண மாகி யுள்ள இலக்கருஞ் சிலைகா லூன்றி
மண்கணை முழவம் விம்ம வயிரெழுந் திசைப்ப வாங்கி
ஒண்கணை மாரி தூவி அவுணனை ஒல்லை சூழ்ந்தார். 56
1385 சூழ்ந்தனர் துரந்த வாளி தோன்முகத் தவுணன் யாக்கை
போழ்ந்தில ஊறதேனும் புணர்த்தில புன்மை யாகித்
தாழ்ந்திடு நிரப்பின் மேலோன் ஒருமகன் தலைமை தாங்கி
வாழ்ந்தவர் தமக்குச் சொல்லுஞ் சொல்லென வறிது மீண்ட. 57
1386 தரைபடப் புகழ்வைத் துள்ள தாரகன் தடமார் பத்தைப்
புரைபடச் செய்தி டாது பொள்ளெனப் பட்டு மீண்டு
நிரைபடத் திறலோர் உய்த்த நெடுங்கணை யான வெல்லாம்
வரைபடச் சிதறுங் கல்லின் மாரிபோல் ஆன வன்றே. 58
1387 விடுகணை மாரி யாவும் மீண்டிட வெகுண்டு விண்ணோர்
படைமுறை வழங்கி நிற்பப் பதகன்மேல் அவைகள் எய்தா
உடையதம் வலியுஞ்சிந்தி ஒல்லென மறிந்து செல்லக்
கடவுளர் அதனை நோக்கிக் கரங்குலைத் திரங்க லுற்றார். 59
1388 மற்றது காலை தன்னில் வலியினால் வயிரத் தண்டஞ்
சுற்றினன் தற்சூழ் கின்ற சுடர்மணிக் கடுமான் தேர்கள்
எற்றினன் புழைக்கை நீட்டி இலக்கர்தந் தொகையும் வாரிப்
பொற்றனு வோடும் வீழப் புணரியின் மீது விட்டான். 60
1389 துளும்பிய அளக்கர் தன்னில் சூழுற நின்ற தெங்கின்
வளம்படு பழுக்காய் வர்க்கம் மாருதம் எறியச் சிந்திக்
குளம்புகு தன்மை யென்ன வீழ்தரு கொற்ற வீரர்
இளமபிறை புரையும் வில்லோ டெழுந்தொரு புடையிற் போனார். 61
1390 கொற்றவில் உழவன் வீர கோளரி யதனை நோக்கிச்
செற்றமோ டேகிச் செவ்வேள் சேவடி மனத்துட் கொண்டு
பற்றிய தனுவை வாங்கிப் பகழிநூ றுய்த்துத் தீயோன்
பொற்றட மவுலி தள்ளிப் புணரியும் நாண ஆர்த்தான். 62
1391 ஆர்த்திடு மோதை கேளா அண்டர்கள் அனையன் மீது
தூர்த்தனர் மலரின் மாரி தோன்முகன் அதனைக் காணா
வேர்த்தனன் மான முன்றான் வீரகே சரிமேல் அங்கைத்
தார்த்தடந் தண்டம் உய்த்துத் தனதுமான் தேரிற் சென்றான். 63
1392 வேறு
சென்றொர் மாமுடி புனைவுழித் தண்டமத் திறலோன்
மன்றல் மார்பகம் படுதலும் வீழ்ந்தனன் மயங்கி
வென்றி மொய்ம்புடை ஆண்டகை யதுகண்டு வெகுண்டு
குன்றம் அன்னதோள் தாரக னொடுபொரக் குறித்தான். 64
1393 வேறு
குறித்தேவிறல் புயன்தாரகக் கொடியோன்எதிர் குறுகி
வெறித்தேன்மலர்த் தொடைதூங்குதன் விறற்கார்முகங் குனியாப்
பொறித்தேயுறு கனல்வாளிகள் பொழிந்தேயவன் புரத்தில்
செறித்தேயுற வளைத்தான்ஒரு சிலைதானவர் தலைவன். 65
1394 பொழிந்தான்சர மழைநம்மவன் புரமேலது பொழுதின்
இழிந்தான்சிலை யுயர்ந்தான்கணை ஈரெழுதொட் டிறுப்ப
அழிந்தாயெனை எதிர்ந்தாய்இதற் கையமிலை யென்னா
மொழிந்தான்ஒரு சூலந்தனை மொய்ம்பிற்செல வுய்த்தான். 66
1395 பொருமூவிலை வேலங்கவன் பொன்மார்புறப் பொருமிப்
பெருமோகமோ டேநின்றிடப் பின்னங்கது காணா
உருமேறென அதிர்தாரக னுடனேயவன் துணையாய்
வருமூவரும் ஒருநால்வரும் மாறுற்றமர் இழைத்தார். 67
1396 அமர்செய்திடும் எழுவீரரும் அவுணன்றனக் குடையக்
குமரன்பதந் தலைக்கொண்டிடுங் கோமானது காணா
எமர்மற்றிவர் எல்லோர்களும் இரிந்தார்பொரு தென்னாச்
சமர்முற்றிட வருதாரகத் தகுவன்முனம் அடைந்தான். 68
1397 ஒருகார்முகம் இருகால்வளை வுறவேகுனித் துகுதேன்
அருகாதொழு கியதன்மையின் அவிர்நாணொலி யெடுப்பத்
திருகாநெடு வரையானவுந் தெருமந்தன அவுணர்
இருகாதையும் நனிபொத்தினர் ஏங்குற்றனர் இரிவார். 69
1398 நாண்கொண்டிடும் ஒலிகேட்டலும் நடுங்காவெரு வுற்றார்
பூண்கொண்டிடு சிலைவாங்கலும் மகிழ்வுற்றிடு புலவோர்
சேண்கொண்டிடும் முகில்வேண்டினர் அதுவந்திடச் சிறந்தே
மாண்கொண்டதன் உருமுச்செல மயங்கித்தளர் வதுபோல். 70
1399 வேறு
மேதா வியர்க பரவுந்திறல் வீரவாகு
மாதாரு வன்ன சிலைதன்னை வளைத்து வாகைத்
தாதார் பிணையல் புனைதாரகன் றன்னை நோக்கித்
தீதாம் அழல்போல் வெகுண்டேயிது செப்பு கின்றான். 71
1400 பொன்றா வலிகொண் டமராடிய பூதர் தம்மை
வன்றாழ் சிலைகொண் டிடுவீரரை வன்மை தன்னால்
வென்றா மெனவுன் னினைபோலும் விரைந்து நின்னைக்
கொன்றாவி உண்பன் எனலுங்கொடி யோன்உ ரைப்பான். 72
1401 மாயன் றனைவென் றவன்நேமியை மாசில் கண்டத்
தேயும் படியே புனைந்தேன்வலி எண்ணு றாதே
நீயிங் கடுவா மெனக்கூறினை நீடு மாற்றஞ்
சீயந் தனையும் நரிவெல்வது திண்ண மாமோ. 73
1402 சாருங் குறள்வெம் படையாவையுஞ் சாய்ந்த வீரர்
ஆருந் தொலைவுற் றனர்நீயும் அயர்ந்து நின்றார்
வீரம் புகல்வாய் விளிகின்ற விளக்கம் நேர்வாய்
பாரென் வலியால் உதாவி படுப்ப னென்றான். 74
1403 என்னுந் துணையில் சரமாயிரம் ஏந்தல் உய்ப்பத்
தன்னங் கையிலோர் சிலைவாங்கினன் தார கப்பேர்
மன்னன் கடிது கணையாயிரம் மாறு தூணடிச்
சின்னம் புரிந்து கணைநூறு செலுத்தி னானால். 75
1404 எவ்வக் கொடியோன் தொடுவாளியை ஏந்தல் காணா
அவ்வக் கணைகள் விடுத்தேயவை முற்று மாற்றக்
கைவிற் கொருவன் இவனாகுமிக் காளை தன்னைத்
தெய்வப் படையால் முடிப்பேனெனச் சிந்தை செய்தான். 76
1405 வேறு
வெங்கனற்படை தாரகன்விட வீரவாகு வெகுண்டுபின்
செங்கனற்படை யேவியன்னது சிந்தவேவரு ணப்படை
அங்கணுய்ததிட அவுணர்கோமகன் அடுபுனற்கிறை படையினைத்
துங்கமுற்றிய வீரனுய்த்தது துண்டமாம்வகை கண்டனன். 77
1406 இரவிதன்படை அவுணன்விட்டனன் இவனுமப்படை யேவியே
விரைவிலன்னது தொலைவுகண்டனன் வீரமேதகு தாரகன்
உரமிகுந்தனி ஊதைவெம்படை யுந்தினான் அது கந்தவேள்
அருள்மிகுந்தனி யடியன்மாற்றினன் அனையதொல்படை தனைவிடா. 78
1407 அனிலவெம்படை வீறழிந்திட அவுணர்கோமகன் அம்புயன்
அனதுதொல்படை ஏவினானது தணிவில்செற்றமொ டேகலும்
வனைகருங்கழல் வீரவாகுவும் மற்றவன்படை தூண்டியே
நினையுமுனனது தொலைவுசெய்தனன் நிகரில்வானவர் புகழவே. 79
1408 ஆயதன்மைகள் கண்டுதாரகன் அற்புதத்தின னாகியே
மேயவானவர் படைகள் யாவையும் வீரன்மற்றிவன் வென்றனன்
மாயநீர்மையின் இங்கிவன்றிறல் வனமைகொள்ளுதும் இனியெனாத்
தீயபுந்தியில் இனையவாறு தெரிந்துசிந்தனை செய்துமேல். 80
1409 தொல்லைமாயையின் விஞ்சைதன்னை நவின்றுளங்கொடு துண்ணென
மல்லன்மேவரு தாரகாசுரன் வடிவமெண்ணில தாங்கியே
எல்லைதீர்தரு படைவழங்கினன் எங்குமாகி இருட்குழாம்
ஒல்லைவந்து பரந்தபோல்அவன் ஒருவன்நின்றமர் புரியவே. 81
1410 கண்டுமற்றது வானுளோர்கள் கலங்கியேங்கினர் முன்னரே
விண்டுநீளிடை நின்றபூதர் வெருண்டுபின்னரும் ஓடினார்
மண்டுபேரமர் செய்தயர்ந்திடு மானவீரரும் அச்சமேல்
கொண்டுநின்றனர் முறுவல்செய்தனர் குணலையிட்டனர் அவுணரே. 82
1411 வேறு
தார கப்பெயர் அவுணர்கோன் மாயையின் சமரும்
ஆரும் அச்சுறு கின்றதும் ஆடல்மொய்ம் புடையோன்
பேர ழற்பொறி கதுவுற நோக்கியே பிறங்கும்
வீர பத்திரன் நெடும்படை எடுத்தனன் விடுவான். 83
1412 துங்க வுக்கிரச் சிம்புள்மாப் படையினைத் தூயோன்
செங்கை பற்றலும் அன்னது தாரகன் செயலால்
அங்கண் நின்றிடு மாயைகண் டச்சமுற் றழுங்கிப்
பொங்கு பானுமுன் இருளென முடிந்ததப் பொழுதே. 84
1413 தன்பு ணர்ப்புறு மாயைதான் உடைதலுந் தமியாய்
முன்பு நின்றதோர் தாரகன் மொய்ம்புளான் றன்னைப்
பின்பு மாயையிற் படுத்தவோர் சூழ்ச்சியைப் பிடித்து
மின்பொ லிந்ததன் தேரைவிட் டோடினன் விரைவில். 85
1414 தார கன்தொலைந் தோடலுந் தனக்கிணை யில்லோன்
போர ழிந்துவென் னிட்டவன் றன்மிசைப் புத்தேள்
வீர வெம்படை விடுப்பது வீரமன் றென்னாச்
சீரி தாகிய தூணியுள் அன்னதைச் செறித்தான். 86
1415 அற்ற போர்வலித் தாரகன் பின்வரைந் தணுகிப்
பற்றி நாண்கொடு புயந்தனைப் பிணித்தெனைப் பணித்த
கொற்ற வேலன்முன் உய்க்குவன் யானெனக் குறித்து
மற்ற வன்றனைத் தொடர்ந்தனன் நெடுந்திறல் வாகு. 87
1416 வேழ மாமுகற் கிளவலை உன்னியே வீரன்
ஆழி மால்கட லாமென ஆர்த்துவை தணுகச்
சூழு மாயையின் இருக்கையாந் தொல்கிர வுஞ்சப்
பாழி யொன்றுசென் றொளித்தனன் தாரகப் பதகன். 88
1417 முன்ன மாங்கவன் போகிய பூழையுள் முடுகிப்
பொன்னின் வாகையந் தோளுடை யாண்டகை புகலும்
அன்ன தோர்வரை யகமெலாம் ஆயிரங் கதிரின்
மன்ன னேகுறா இருள்நிலம் போன்றுவை கியதே. 89
1418 நீளு மாலிருள் படர்தலுஞ் சில்லிடை நெறியால்
தாளி னொற்றியே படர்ந்தனன் தாரகற் காணான்
ஆளி மொய்ம்புடை மேலையோன் அடுக்கலின் புணர்ப்பான்
மீளு கின்றதோர் நெறியையுங் கண்டிலன் வெகுண்டான். 90
1419 செற்ற மிக்கவன் மாயைஇவ் வரையெனச் சிந்தித்
துற்ற காலையில் அவுணனா கியகிர வுஞ்சப்
பொற்றை அன்னது கண்டுமோ கத்துயில் புரிந்து
மற்ற வன்றன துணர்வினை மையல்செய் ததுவே. 91
1420 இயலி சைத்தமிழ் முனிவரன் இசைத்தசூள் இசைவால்
வியலு டைத்திறல் வாகுவை அவ்வரை மிகவும்
மயலு டைப்பெரு மாயம தியற்றலும் மயங்கித்
துயில லுற்றனன் தொல்லையின் உணர்வெலாந் துறந்தே. 92
1421 அம்ம லைக்கணே முன்னவன் உறங்கலும் அனைய
செம்ம லுக்கிளை யோர்இரு நால்வருஞ் சிறந்த
தம்மி னத்தரோர் இலக்கருஞ் சாரதர் பலரும்
விம்ம லுற்றனர் சிறையிலாப் பறவையின் மெலிந்தார். 93
1422 உடைந்து போயின தாரகன் றன்னைநம் முரவோன்
தொடர்ந்து சென்றனன் மீண்டிலன் அவனொடுந் துன்னி
அடைந்து வெற்பினில் போர்புரி வான்கொலோ அங்கட்
படர்ந்து நாடுதும் யாமுமென் றெண்ணினர் பலரும். 94
1423 எண்ணி யேயிசைந் திளையரோ ரெண்மரும் இலக்கம்
நண்ணும் வீரரும் பாரிடந் தன்னுள்நா யகரும்
அண்ணல் வான்படை ஏந்தியே யாயிடை யகன்று
விண்ணு லாவுறு கிரவுஞ்சம் எய்தினர் விரைவில். 95
1424 ஆய வெற்பினில் வீரவா குப்பெயர் அடலோன்
போய பூழையுள் மற்றவர் யாவரும் புகலுந்
தீய தொல்வரை முன்னவற் கிழைத்திடு திறம்போல்
மாயம் எண்ணில புரிதலும் மயங்கியே வதிந்தார். 96
1425 வெற்றி வீரவா குப்பெயர் அண்ணலும் வீரர்
மற்றி யாவரு மயங்கலுந் தாரகன் வாரா
உற்று நோக்கிநம் மாயையால் இவரெலா மொருங்கே
இற்று ளாரென மகிழ்ந்துமால் வரைமிசை எழுந்தான். 97
1426 அண்ட மீமிசை நின்றவா னவர்கள்இவ் வனைத்துங்
கண்டு கட்புனல் பனிவர அரற்றியே கலங்கிக்
கொண்ட துன்பொடு பதைபதைத் தோடினர் கூளித்
தண்டம் யாவையும் வெருவின தலைவர்இன் மையினால். 98
1427 மலையின் மீமிசை பெழுதரு தாரகன் மற்றோர்
தலைமை யாகிய விரதமேல் கொண்டுதா னவர்கள்
பலரும் வந்துவந் தார்த்தனர் சூழ்தரப் பைம்பொற்
சிலைய தொன்றினை வாங்கியே செருநிலஞ் சென்றான். 99
1428 நீடு தன்சிலை நாணொலி கொண்டுநீள் சரங்கள்
கோடி கோடிமற் றொருதொடை யாகவே கொளுவி
ஆடல் சேர்தரு பூதர்மேற் பொழிதலும் அலமந்
தோட லுற்றனர் திசையினும் விண்ணினும் உலைந்தே. 100
1429 ஆன காலையின் நாரதன் இனையகண் டழுங்கி
மேனி துண்ணென வியர்ப்புற வழிக்கொடு விரைந்து
போன விண்ணவர் தம்மொடு சென்றுபுத் தேளிர்
சேனை காவலன் நின்றதோர் கடைக்கூழை சேர்ந்தான். 101
1430 அரிது மாதவம் புரிதரு நாரதன் அடலின்
விரவு மாயிரம் பூதவௌ¢ ளத்தொடு மேவுங்
கருணை சேரறு முகத்தனைக் கண்டுகண் களித்துச்
சுரர்க ளோடுபோய் இறைஞ்சியே இனையன சொல்வான். 102
1431 ஐய நின்படை வீரர்கள் பெருஞ்சம ராடி
வெய்ய தானவர் தானைகள் வரவர வீட்டிச்
செய்ய மந்திரித் தலைவரை அமைச்சரைச் செற்றுப்
பொய்யின் மொய்ம்புடைத் தாரகன் தன்னொடும் பொருதார். 103
1432 தலைக்க ணாகிய வீரனுந் தமிபியர் பிறரும்
இலக்க வீரரும் பாரிடத் தலைவர்கள் யாரும்
புலைக்கொ டுந்தொழில் தாரகன் றன்னொடும் பொரத்தன்
மலைக்கண் உய்த்தனன் அவர்தமைச் சூழ்ச்சியின் வலியால். 104
1433 உய்த்த காலையில் அவுணனா கியகிர வுஞ்சம்
மெத்து மாயைகள் அனையவர்க் கிழைத்தலும் வெருவிப்
பித்த ராமென மயங்கினர் போலுமால் பின்னர்
இத்தி றந்தனை உயர்ந்தனன் தாரக னென்போன். 105
1434 தெரிந்து தாரகன் மகிழ்வொடு பறந்தலை சென்று
துரந்து நம்பெருந் தானையைக் கணைமழை சொரிய
முரிந்து பேரீயின நிகழ்ச்சியீ துயிர்த்தொகை முற்றும்
இருந்த நாயக அறிதியே யாவையும் என்றான். 106
1435 என்ற காலையில் நாரதன் உள்ளமும் இமையோர்
நின்று தாமயர் கின்றதும் அமரர்கோன் நெஞ்சில்
துன்று சோகமும் நான்முக னாதியோர் துயரும்
ஒன்ற நோக்கியே அறுமுகப் பண்ணவன் உரைப்பான். 107
1436 வேறு
ஆருமிது கேண்மின் அம ராடுகளன் ஏகித்
தாரகனை வேல்கொடு தடிந்தவுணர் வைகும்
ஓரரண மானகிர வுஞ்சகிரி செற்றே
வீரர்தமை யோரிறையின் மீட்டிடுவன் என்றான். 108
1437 எந்தையிவை கூறுதலும் யாருமவை தேர்ந்து
சிந்தையுறு கின்றதுயர் செற்றுமுடி வில்லா
அந்தமில் மகிழ்ச்சியுடன் ஆடியிசை பாடிக்
கந்தனடி வந்தனை புரிந்தனர் களிப்பால். 109
1438 கந்தமுரு கேசனது காலைமுது பாகாய்
வந்ததொரு வந்தினை மகிழ்ச்சியொடு நோக்கிச்
சிந்தைதனில் முந்தும்வகை தேரதனை வல்லே
உந்துதி விரைந்தென உரைத்தருள லோடும். 110
1439 என்னவினி தென்றுதொழு தேழெழுவ கைத்தாந்
தன்னினம தாகியவர் தாங்கள்புடை போதக்
கொன்னுனைய தாமுளவு கோல்கயிறு பற்றித்
துன்னுபரி மான்நிரைகள் தூண்டிமிக ஆர்த்தான். 111
1440 வேறு
ஆன காலைதனில் அண்டமும் வையந்
தானும் அங்குள தடங்கிரி யாவும்
ஏனை மாகடலும் எண்டிசை யுள்ள
மான வேழமும் நடுங்கின மன்னோ. 112
1441 வாவு கின்றபல மாநிரை தூண்டத்
தேவர் தங்கள்சிறை தீரிய செல்வோன்
மேவு தொல்லிரதம் விண்ணெறி கொண்டே
ஏவ ரும்புகழ ஏகிய தன்றே. 113
1442 ஆதி யங்குமரன் அவ்வழி பொற்றேர்
மீது செல்லுதலும் விண்முகில் பல்வே
றோதும் வண்ணமுடன் உற்றென வானில்
பூத சேனைபுடை போயின அன்றே. 114
1443 போர ழிந்துபுற கிட்டெதிர் பூதர்
ஆரும் நேர்ந்துதொழு தாற்றலொ டெய்த
நார ணன்றனது நன்மரு கானோன்
தார கன்திகழ் சமர்க்களம் உற்றான். 115
1444 கவன மோடுபடர் காலினு முந்திச்
சிவன்ம கன்றனது சேனைய தானோர்
உவரி யாமென உறுந்திறம் நோக்கி
அவுணர் தானையை அணிந்தெதிர் சென்றார். 116
1445 சகந்து திக்கவரு சாரதர் தாமும்
அகந்தை யுற்றஅவு ணத்தொகை யோரும்
இகந்த வன்மையொ டெதிர்ந்திகல் எய்தி
வெகுண்டு பேரமர் விளைத்திட லுற்றார். 117
1446 கரங்கொள் நேமிகள் கணிச்சிகள் தீவாய்ச்
சரங்க ளாதியன தானவர் விடடார்
உரங்கொள் மால்வரைகள் ஓங்குமெ ழுக்கள்
மரங்கள் விட்டனர் மறங்கெழு பூதர். 118
1447 முரிந்த தேர்நிரை முடிந்தன மாக்கள்
நெரிந்த தானவர் நெடுந்தலை சோரி
சொரிந்த பூதர்மெய் துணிந்தன வானில்
திரிந்த பாறுகள் செறிந்தன வன்றே. 119
1448 நிறங்கொள் செங்குருதி நீத்தம தாகிக்
கறங்கி யோடின கவந்தமொர் கோடி
மறங்கொ டாடுவ வயின்தொறு மாகிப்
பிறங்கு கின்றன பிணங்கெழு குன்றம். 120
1449 அனைய வாறிவர் அருஞ்சம ராற்றப்
புனையல் வாகையுள பூதர்கள் தம்மால்
வினையம் வல்லவுணர் வெவ்வலி சிந்தி
இனைத லோடுமிரி குற்றனர் அன்றே. 121
1450 தன்ப படைத்தொலைவு தாரகன் நோக்கிக்
கொன்ப டைத்தகுனி விற்குனி வித்தே
மின்ப டைத்தபல வெங்கணை தூவி
வன்ப படைக்கணம் வருந்த நடந்தான். 122
1451 நடந்தெ திர்ந்தகண நாதரை யெல்லாந்
தொடர்ந்து பல்கணை சொரிந்து துரந்தே
இடந்தி கழ்ந்தஇமை யத்திறை நல்கும்
மடந்தை தந்ததிரு மைந்தன்முன் உற்றான். 123
1452 உற்ற காலைதனில் ஒற்றரை நோக்கிச்
சற்று நீதியறு தாரக வெய்யோன்
செற்றம் என்னுமழல் சிந்தையின் மூள
மற்றி வன்கொல்அரன் மாமகன் என்றான். 124
1453 என்ன லுங்குமரன் இங்கிவ னேயாம்
மன்ன என்றிடலும் மற்றவன் ஏறுந்
துன்னு தேர்கடிது தூண்டி எவர்க்கும்
முன்ன வன்மதலை முன்னுற வந்தான். 125
1454 வேறு
முழுமதி யன்ன ஆறு முகங்களும் முந்நான் காகும்
விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
அழகிய கரமீ ராறும் அணிமணித் தண்டை யார்க்குஞ்
செழுமல ரடியுங் கண்டான் அவன்தவஞ் செப்பற் பாற்றோ. 126
1455 தற்பம துடைய சிந்தைத் தாரகன் இனைய வாற்றால்
சிற்பர மூர்த்தி கொண்ட திருவுரு வனைத்தும் நோக்கி
அற்புத மெய்தி நம்மேல் அமர்செய வந்தா னென்றால்
கற்பனை கடந்த ஆதிக் கடவுளே இவன்கொ லென்றான். 127
1456 இந்தவா றுன்னிப் பின்னர் யார்க்குமே லாகும் ஈசன்
தந்ததோர் வரமும் வீரத் தன்மையும் வன்மைப் பாடும்
முந்துதாம் பெற்ற சீரும் முழுவதும் நினைந்து சீறிக்
கந்தவேள் தன்னைநோக்கி இனையன கழற லுற்றான். 128
1457 நாரணன் றனக்கு மற்றை நான்முகன் றனக்கும் வௌ¢ளை
வாரணன் றனக்கு மல்லால் மதிமுடி அமல னுக்குந்
தாரணி தனல்எ மக்குஞ் சமரினை இழைப்ப இங்கோர்
காரண மில்லை மைந்தா வந்ததென் கழறு கென்றான். 129
1458 அறவினை புரிந்தே யார்க்கும் அருளொடு தண்டஞ் செய்யும்
இறையவ னாகும் ஈசன் இமையவர் தம்மை நீங்கள்
சிறையிடை வைத்த தன்மை திருவுளங் கொண்டு நுந்தம்
விறலொடு வன்மை சிந்த விடுத்தனன் எம்மை யென்றான். 130
1459 வேறு
கூரிய வேற்படைக் குமர நாயகன்
பேரருள் நிலைமையால் இனைய பேசலும்
போரினை இழைத்திடும் பூட்கை மாமுகத்
தாரக னென்பவன் சாற்றல் மேயினான். 131
1460 செந்திருத் திகழுமார் புடைய செங்கணான்
சுந்தரக் கலுழன்மேல் தோன்றிப் போர்செய்தே
அந்தரக் கதிர்புரை ஆழி உய்த்ததென்
கந்தரத் தணிந்தது காண்கி லாய்கொலோ. 132
1461 இன்றுகக றெம்முடன் இகலிப் போர்செயச்
சென்றுளார் யாவருஞ் சிறிது போழ்தினுட்
பொன்றுவார் இரிந்தனர் போவ ரல்லது
வென்றுளார் இலையது வினவ லாய்கொலோ. 133
1462 முட்டிவெஞ் சமரினை முயல முன்னம்நீ
விட்டிடு தலைவரை வென்று வெற்பினில்
பட்டிட இயற்றினன் பலக ணங்ளை
அட்டனன் அவற்றினை அறிந்தி லாய்கொலோ. 134
1463 ஆகையால் எம்முடன் அமரி யற்றியே
சோகம தடையலை சூல பாணிபால்
ஏகுதி பாலநீ என்று கூறலும்
வாகையங் குமரவேள் மரபிற் கூறுவான். 135
1464 தாரணி மறையவன் ததீசி தன்மிசை
நாரணன் விடுத்ததோர் நலங்கொள் ஆழிதன்
கூரினை இழந்துபோய்க் குலாலன் சக்கர
நீர்மைய தானது வினவ லாய்கொல்நீ. 136
1465 சூற்புயல் மேனியான் துங்கச் செங்கையின்
பாற்படு திகிரிபோற் பழியில் துஞ்சுமோ
வேற்புறு படைக்கெலாம் இறைவ னாகுநம்
வேற்படை நின்னுயிர் விரைவின் உண்ணுமால். 137
1466 உங்கள்பே ராற்றல்இவ் வுலகை வென்றன
இங்குநாம் வருதலும் இமைப்பின் மாய்ந்தன
அங்கண்மா ஞாலமுண் டமரும் ஆரிருள்
பொங்குபே ரொளிவர விளிந்து போனபோல். 138
1467 ஈட்டிய மாயைகள் எவையுந் தன்வழிக்
காட்டிய கிரியையுங் கள்வ நின்னையுந்
தீட்டிய வேல்கொடு செற்றுச் சேனையை
மீட்டிடு கின்றனன் விரைவி னாலென்றான். 139
1468 என்றலுஞ் சீறியே இகலித் தாரகன்
குன்றுறழ் தன்சிலை குனியக் கோட்டியே
மின்றிகழ் நாணொலி எடுப்ப விண்மிசைச்
சென்றிடும் அமரருந் தியக்க மெய்தினார். 140
1469 எய்திய காலையில் எந்தை கந்தவேள்
கைதனில் இருந்ததோர் கார்மு கந்தனை
மொய்தனில் வாங்கிநாண் முழக்கங் கோடலும்
ஐதென உலகெலாம் அழுங்கிற் றென்பவே. 141
1470 நாரியின் பேரொலி நாதன் கோடலும்
ஆரணன் முதலினோர் தாமும் அஞ்சினார்
பேருல கெங்கணும் பேதுற் றேங்கின
தாரக முதல்வனுந் தலைது ளக்கினான். 142
1471 துளக்கிய தாரக சூரன் கைத்தலங்
கொளற்குரி வில்லுமிழ் கொள்கைத் தாலென
வளக்கதிர் நுனைகெழு வயிர வான்கணை
அளக்கரும் எண்ணில ஆர்த்துத் தூண்டினான். 143
1472 ஆயதோர் காலையில் ஆறு மாமுகன்
மீயுயர் சிலைதனில் விரைவில் ஆயிரஞ்
சாயகந் தூண்டியே தார காசுரன்
ஏயின பகழிக ளியாவுஞ் சிந்தினான். 144
1473 சிந்திய காலையில் செயிர்த்துத் தாரகன்
உந்தினன் பின்னரும் ஓராயி ரங்கணை
கந்தனும் அனையது கண்டு வல்லையின்
ஐந்திரு பகழிதொட் டவற்றை நீக்கினான். 145
1474 மீட்டுமத் தாரகன் விசிகம் வெஞ்சிலை
பூட்டிய வாங்கலும் புராரி காதலன்
ஈட்டமொ டொருகணை யேவி ஆங்கவன்
தோட்டுணை வில்லினைத் துண்ட மாக்கினான். 146
1475 வேறு
அங்கோர் சிலையைக் குனித்தானது காலை தன்னில்
எங்கோ முதல்வன் ஒருபாணியின் ஏந்து வில்லில்
செங்கோல் வகையா யிரம்பூட்டினன் செல்ல உய்த்தான்
வெங்கோல் நடாத்தி வருதாரக வெய்யன் மீதில். 147
1476 சேரார் பரவுந் திறல்வேலவன் செய்கை நோக்கித்
தாரார் முடித்தா ரகவீரன் தனது வில்லில்
ஓரா யிரம்வா ளிகள் பூட்டினன் ஒல்லை உய்த்து
நேராய் விரவுங் கணையாவையும் நீறு செய்தான். 148
1477 வெய்யான் அநந்தங் கணை தூண்ட விமலன் நல்குந்
துய்யான் அவைகள் அறுத்துக் கணைகோடி தூண்டி
மையார் அவுணர் புகழ்தாரக மான வேழம்
எய்யாகும் வண்ணஞ் செறித்தானவன் யாக்கை யெங்கும். 149
1478 ஒருகோடி வாளி உறலோடும் உருத்து நீசன்
இருகோடி வாளி விடஅன்னதை ஏவின் நீக்கி
இருகோ டியதார் அசுரேசன் முகங்கொள் கையும்
பொருகோடும் வீழ விடுத்தான்இரு புங்க வாளி. 150
1479 வந்தங் கிரண்டு சரமும்பட மாயை மைந்தன்
தந்தங்கள் கையோ டிறலோடுந் தளர்ச்சி யெய்தி
முந்துங் கணைஆ யிரந்தன்னை முனிந்து தூண்டிக்
கந்தன் தடந்தேர்த் துவசந்துகள் கண்டு நின்றான். 151
1480 மல்லற் கொடியிற் றதுகண்டு மறங்கொள் வெய்யோன்
வில்லைக் கணைநான் கிரண்டால் நிலமீது வீட்டித்
தொல்லைக் கனலின் கணையாயிரந் தூண்டி யன்னோன்
செல்லுற்ற திண்டேர் பரிபாகொடு சிந்தி நின்றான். 152
1481 வேறங் கொருதேர் மிசையேறியொர் வில்லை வாங்கி
நூறைந் திருதீ விசிகந்தனை நொய்தின் ஏவி
மாறின்றி வைகும் பரமன்வடி வான செவ்வேள்
ஏறுந் தடந்தேர் வலவன்புயத் தெய்த உய்த்தான். 153
1482 வென்றோர் புகழுங் குமரன்வியன் தேர்க டாவிச்
சென்றோன் வருத்தந் தெரிந்தாயிரந் தீய வாளி
வன்றோன் முகத்தா ரகன்நெற்றியுள் மன்ன வுய்ப்பப்
பொன்றோய் தனது தடந்தேரில் புலம்பி வீழ்ந்தான். 154
1483 வீழுற் றிடலும் விழுசெம்புனல் வௌ¢ள மிக்கே
தாழுற்ற பாரிற் புகுந்தேபுடை சார்த லுற்ற
பாழிக் கடலிற் பரிமாமுகம் பட்ட செந்தீச்
சூழிக் களிற்றின் வதனத்தினுந் தோன்று மென்ன. 155
1484 மன்னா கியதா ரகன்அங்கண் மயங்கி வீழ
அன்னான் றனது படைவீரர் அதனை நோக்கிக்
கொன்னார் சினங்கொண் டடுபோரைக் குறித்து நம்பன்
தொன்னான் உதவுந் திறல்மைந்தனைச் சூழ்ந்து கொண்டார். 156
1485 சூலந் திகிரிப் படைதோமரந் துய்ய பிண்டி
பாலஞ் சுடர்வேல் எழுநாஞ்சில் பகழி தண்டம்
ஆலங் கணையங் குலிசாயுத மாதி யாக
வேலும் படைகள் பொழிந்தார்த்தனர் எங்கும் ஈண்டி. 157
1486 கறுத்தான் அவர்தஞ் செயல்கண்டுதன் கார்மு கத்தை
நிறுத்தா வளையாக் கணைமாமழை நீட வுய்த்து
மறுத்தா னுடைய கொடுந்தானவர் வாகை சிந்தி
அறுத்தான் விடுதொல்படை யாவையும் ஆடல் வேலோன். 158
1487 வெய்தாகிய தீங்கணை மாரி விசாகன் மீட்டும்
பெய்தான் அவுணர் முடிதன்னைப் பிறங்கு மார்பைத்
துய்தா னுறும்வா யினையங்கையைத் தோளைத் தாளைக்
கொய்தான் குருதிக் கடலெங்கணுங் கொண்ட தன்றே. 159
1488 வில்லோர் பரவுந் திறல்வேலவன் வெய்ய கோலால்
அல்லோ டியதீ மனத்தானவர் ஆயி னோரில்
பல்லோர் இறந்தார் குருதிக் கடல்பாய்ந்து நீந்திச்
சில்லோர் கள்தத்தம் உயிர்கொண்டு சிதைந்து போனார். 160
1489 மைக்கார் சிவந்த தெனுந்தாரகன் மையல் நீங்கி
அக்காலை தன்னில் எழுந்தே அயல்போற்றி நின்று
தொக்கார் அமையாரையுங் காண்கிலன் துன்ப மெய்தி
நக்கான் அவர்தஞ் செயல்கண்டு நவிறல் உற்றான். 161
1490 வேறு
செய்ய வார்சடை ஈசன் நல்கிய சிறுவன் இங்கொரு வன்பொரக்
கையி ழந்துமு கத்தி னூடு கவின்கொள் கோடுமி ழந்தனன்
மைய லெய்திவி ழுந்த னன்பொரும் வலிய தானையும் மாண்டன
ஐய வீங்கொரு தமியன் நின்றனன் அழகி தாலென தண்மையே. 162
1491 தாவில் வெஞ்சிலை வன்மை கொண்டு சரங்கள் எண்ணில தூண்டியே
மேவ லானிவன் உயிர்கு டிப்பதும் வெல்லு கின்றதும் அரியதால்
தேவர் மாப்படை தொடுவ னிங்கினி யென்று சிந்தனை செய்துபின்
ஏவரும் புகழ் தார காசுரன் இனைய செய்கை இயற்றினான். 163
1492 வேறு
அடலரி நான்முக னாதி வானவப்
படையினை யாவையும் பவஞ்செய் தாரகன்
விடவிட வந்தவை வெருவி மேலையோன்
புடைதனில் ஒடுங்கியே போற்றி நின்றவே. 164
1493 செங்கண்மா லயன்முதற் றேவர் மாப்படை
துங்கமொ டேகியே துளங்கி வேலுடைப்
புங்கவன் பாங்கரிற் போற்றி நிற்றலும்
அங்கது கண்டனன் அவுணர் மன்னவன். 165
1494 ஒருவினன் அகநதையை உள்ள மோரிறை
வெருவினன் விம்மிதம் மிகவு மெய்தினான்
எரிகலுழ் விழியினன் இவனை வென்றிடல்
அரியது போலுமென் றகத்தில் உன்னினான். 166
1495 பாங்கரின் மாதுடைப் பரமன் தொல்படை
ஈங்கினி விடுதுமென் றெண்ணி யப்படை
வாங்கினன் அருச்சனை மனத்தி னாற்றினன்
ஓங்கிருஞ் சினமுடன் ஒல்லை யேவினான். 167
1496 சங்கரன் தொல்படை தறுகண் ஆலமும்
புங்கவர் படைகளும் பூத ராசியும்
அங்கத நிரைகளும் அளப்பில் சூலமும்
வெங்கனல் ஈட்டமும் விதித்துச் சென்றதே. 168
1497 கலைகுலாம் பிறைமுடிக் கடவுள் மாப்படை
அலகிலா உயிர்களும் அண்டம் யாவையும்
உலைகுறா தலமர வுரத்துச் சேறலும்
இலைகுலாம் அயிலுடை எந்தை நோக்கினான். 169
1498 கந்தவேள் அனையது கண்டு தந்தையைச்
சிந்தையின் உன்னியோர் செங்கை நீட்டியே
அந்தவெம் படையினை அருளிற் பற்றினான்
தந்தவன் வாங்கிய தன்மை யென்னவே. 170
1499 நெற்றியில் விழியுடை நிமலன் காதலன்
பற்றிய படையினைப் பாணி சேர்த்தினான்
மற்றது தாரக வலியன் கண்ணுறீஇ
இற்றது நந்திரு இனியென் றேங்கினான். 171
1500 தேவர்கள் தேவனார் தெய்வத் தொல்படை
ஏவினன் அதனையும் எதிர்ந்து பற்றினான்
மூவிரு முகமுடை முதல்வன் வன்மையை
நாவினி லொருவரால் நவிறற் பாலதோ. 172
1501 ஆயினும் அரன்மகன் அறத்தின் போரலால்
தீயதோர் கைதவச் செருவ துன்னலான்
மாயைகள் ஆற்றியே மறைந்து நின்றுநான்
ஏயென இயற்றுவன் அமரென் றெண்ணினான். 173
1502 கையனும் இவ்வகை கருத்தி லுன்னியே
ஒய்யென வேகிர வுஞ்ச வெற்பின்முன்
வையமொ டேகிநீ வல்ல மாயைகள்
செய்குதி செய்குதி யென்று செப்பினான். 174
1503 வேறு
செப்பிய இறுவரை கிரவுஞ்சந் திகழ்வுறு மாயையின் நிகழ்வுன்னி
முப்புர வகைபல வெனநிற்ப முரணுறு தாரக முதல்வன்றான்
அப்புர நிருதர்க ளெனநின்றான் அகல்வரை பலபல முகிலாக
ஒப்பறு சூரன திளையோனும் உருமென அவையிடை உலவுற்றான். 175
1504 வேலைக ளுருவினை வரைகொள்ள விசயம துடையதொ ரசுரேசன்
காலம திறுதியில் உலகுண்ணுங் கனையொலி அனலிக ளெனநின்றான்
சீலமின் முதுகிரி நெடுநேமித் திருவரை சூழ்தரும் இருளாக
மால்கரி முகமுள அவுணன்றான் வரையறு பாரிட நிரையானான். 176
1505 இந்திரன் முதலுள சுரர்வைகும் ஏழுட னொருதிசை வேழம்போல்
அந்தநெ டுங்கிரி வரலோடும் அருகினில் உறுகுல கிரியாகித்
தந்தியின் முகமுள அவுணன்றான் சடசட முதிரொலி யுடன்வந்தான்
முந்திய தந்தம துருமாறி முறைமுறை நின்றதொர் திறனேபோல். 177
1506 வாயுவின் உருவென மலைசெல்ல மதகரி முகமுள பதகன்றான்
தேயுவின் உருவென வரலுற்றான் திரியவும் நெடுவரை விரைவோடுங்
காய்கனல் உகுஞெகி ழிகளாகிக் ககனம திடையுற மிடைகாலை
ஆயிர கோடிவெய் யவரேபோல் அலமர லுற்றனன் அறமில்லான். 178
1507 அவ்வகை தாரகன் வரையோடும் அளவறு மாயையின் வடிவெய்தி
எவ்விடை யுஞ்செறி தரலோடும் எம்பெரு மானவன் இவைகாணாத்
தெவ்வலி கொண்டுறும் இவனாவி சிந்துவன் என்றுள மிசைகொண்டே
கைவரு வேற்படை தனைநோக்கி இனையன சிலமொழி கழறுற்றான். 179
1508 தாரகன் என்பதோர் பேரோனைச் சஞ்சல முறுகிர வுஞ்சத்தை
ஓரிறை செல்லுமுன் உடல்கீறி உள்ளுயி ருண்டுபு றத்தேகிப்
பாரிடர் தம்மை இலக்கத்தொன் பதின்மர்க ளாக உரைகின்ற
வீரரை மீட்டிவண் வருகென்றே வேற்படை தன்னை விடுத்திட்டான். 180
1509 சேயவன் விட்டிடு தனிவைவேல் செருமுயல் தாரகன் வரையோடும்
ஆயிடை செய்த புணர்ப்பெல்லாம் அகிலமும் அழிதரு பொழுதின்கண்
மாயையி னாகிய வுலகெங்கும் மலிதரு முயிர்களும் மதிசூடுந்
தூயவன் விழியழல் சுடுமாபோல் துண்ணென அட்டது சுரர்போற்ற. 181
1510 வேறு
அரண்டரு கழற்கால் ஐயன் அறுமுகத் தெழுந்த சீற்றந்
திரண்டொரு வடிவின் வேறாய்ச் சென்றதே யெனவு நான்கு
முரண்டரு தடந்தோள் அண்ணல் முத்தலை படைத்த சூலம்
இரண்டொரு படையாய் வந்த தென்னவும் ஏகிற் றவ்வேல். 182
1511 முடித்திடல் அரிய மாய மூரிநீர்க் கடலை வற்றக்
குடித்திடு கின்ற செவ்வேற் கூற்றம்வந் திடுத லோடுந்
தடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்த் தாரகன் இதனைப் பற்றி
ஒடித்திடு கிற்பேன் என்னா ஒல்லென உருத்து வந்தான். 183
1512 அச்சமொர் சிறிதுமில்லா அவுணர்கோன் உவணன் மேற்செல்
நச்சர வென்னச் சீறி நணுகலும் அவன்மார் பென்னும்
வச்சிர வரையின் மீது வானுரும் ஏறுற் றென்னச்
செச்சையந் தெரியல் வீரன் செலுத்தும்வேல் பட்ட தன்றே. 184
1513 தாரகன் மார்ப மென்னுந் தடம்பெரு வரையைக் கீண்டு
சீரிய கிரவுஞ் சத்திற் சேர்ந்துபட் டுருவிச் சென்று
வீரமும் புகழுங் கொண்டு விளங்கிய தென்ன அங்கட்
சோரியுந் துகளும் ஆடித் துண்ணென மீண்ட தன்றே. 185
1514 மீண்டிடு சீற்ற வைவேல் வெற்பினுள் துஞ்சு கின்ற
ஆண்டகை வீரர்தம்மை ஆயிடை யெழுப்பி வான்போய்
மாண்டகு கங்கை தோய்ந்து வாலிய வடிவாய் ஐயன்
தூண்டிய கரத்தில் வந்து தொன்மைபோல் இருந்த தம்மா. 186
1515 தண்டம தியற்றுங் கூர்வேல் தாரக வவுணன் மார்பும்
பண்டுள வரையும் பட்டுப் பறிந்தபே ரோசை கேளா
விண்டது ஞால மென்பார் வெடித்தது மேரு வென்பார்
அண்டம துடைந்த தென்பா ராயினர் அகிலத் துள்ளோர். 187
1516 வடித்ததை யன்ன கூர்வேல் மார்பையூ டறுத்துச் செல்லத்
தடித்திடு கின்ற யாக்கைத் தாரகன் அநந்த கோடி
இடித்தொகை யென்ன ஆர்த்திட் டிம்மென எழுந்து துள்ளிப்
படித்தலந் தன்னில் வீழ்ந்து பதைபதைத் தாவி விட்டான். 188
1517 தடவரை யனைய மொய்ம்பில் தாரகன் வேலாற் பட்டுப்
புடவியில் வீழா நின்றான் பொள்ளென வானில் துள்ளிக்
கடலுடைந் தென்ன ஆர்க்குங் காலையில் கலக்க மெய்தி
உடுகணம் உதிர்ந்த தஞ்சி யோடினன் இரவி யென்போன். 189
1518 தளர்ந்திடல் இல்லா வீரத் தாரகன் பட்டு வானில்
கிளர்ந்தனன் வீழு மெல்லைக் கீழுறு பிலமும் பாரு
பிளந்தன வரைகள் யாவும் பிதிர்ந்தன அதிர்ந்த தண்டம்
உளந்தடு மாறி யோலிட் டோடின திசையில் யானை. 190
1519 தண்ணளி சிறிது மில்லாத் தாரகன் கிளர்ந்து வான்போய்
மண்ணிடை மறிந்த தன்மை வன்சிறை இழந்த நாளில்
திண்ணிய மேரு இன்னுஞ் செல்லலாங் கொல்லென் றுன்னி
விண்ணிடை யெழுந்து வல்லே வீழ்ந்ததே போலும் அன்றே. 191
1520 வெற்றிய தாகுங் கூர்வேல் வெற்பினை அட்ட காலைச்
செற்றிய பூழி யீட்டஞ் சிதறிய பொறிக ளெங்கும்
பற்றிய புகையும் வந்து பரந்தன கரந்த தண்டம்
வற்றிய கடல்கள் வானிற் கங்கையும் வறந்த தன்றே. 192
1521 சிறந்திடு மாய வெற்பைத் திருக்கைவேல் பொடித்த காலைப்
பிறந்திடு கின்ற தீயைத் தீயெனப் பேச லாமோ
அறிந்தவர் தெரியில் குன்றம் அவுணனா கையினான் மெய்யில்
உறைந்திடு குருதி துள்ளி உகுத்தவா றாகு மன்றே. 193
1522 யானுற்ற குன்றந் தன்னை யெறிந்தனன் என்று செவ்வேள்
தானுற்ற நதியை வந்து தடிந்ததே என்ன வெற்பில்
ஊனுற்ற நெடுவேல் பாய உதித்திடும் பொறியின் ஈட்டம்
வானுற்ற கங்கை புக்கு வறந்திடு வித்த தன்றே. 194
1523 திறலுடை நெடுவேல் அட்ட சிலம்பினில் சிதறித் தோன்றும்
பொறிகளும் துகளும் ஆர்ப்பும் பொள்ளெனச் செறிந்த தன்மை
மறிகடல் முழுதும் அங்கண் வடவையும் அடைந்தொன் றாகி
இறுதியில் உலகங் கொள்ள எழுந்தது போலும் மாதோ. 195
1524 தந்தியின் வதனங் கொண்ட தாரக வவுணன் மார்வில்
சிந்துறு குருதச் செந்நீர் திரைபொரு தலைத்து வீசி
அந்தமில் நீத்த மாகி அயிற்படை அட்ட குன்றில்
வந்திடு பூழை* புக்கு மறிகடல் மடுத்த தன்றே.
( * பூழை - துவாரம்.) 196
1525 விட்டவேல் மீண்டு கந்த வேள்கரத் திருப்பத் தீயோன்
பட்டதும் வெற்பு மாய்ந்த பான்மையும் அவுணர் யாருங்
கெட்டது நோக்கி மாலுங் கேழ்கிளர் கமலத் தேவும்
முட்டிலா மகத்தின் வேந்தும் முனிவருஞ் சுரரும் ஆர்த்தார். 197
1526 ஆடினர் குமரற் போற்றி அங்கைக ளுச்சி மீது
சூடினர் தண்பூ மாரி தூர்த்தனர் அவனைச் சூழ்ந்து
பாடினர் தொழுது முன்னம் பன்முறை பணிந்து நின்றார்
நீடிய வுவகை யென்னும் நெடுங்கடல் ஆழும் நீரார். 198
1527 ஆங்கது காலை தன்னில் அளப்பிலா மாயை வல்ல
ஓங்கல திறப்ப அங்கண் உறங்கிய வீர ரெல்லாந்
தீங்குறு மையல் நீங்கிக் கதுமெனச் சென்று செவ்வேள்
பூங்கழல் வணங்கி நின்று போற்றியே புடையின் நின்றார். 199
1528 வாருறு கழற்கால் வீர வாகுவே முதலா வுள்ள
வீரர்கள் தம்மை யெல்லாம் வேலுடைக் கடவுள் நோக்கித்
தாரகன் வரை**யுட் பட்டுத் தகுமுணர் வின்றி நீவிர்
ஆருநொந் தீர்கள் போலும் மாயையூ டழுந்தி யென்றான்.
( ** தாரகன்வரை - தாரகாசுரனது ஆட்சிக்குட்பட்ட மலை.) 200
1529 செய்யவன் இனைய வாறு சீரருள் புரிய வீரர்
ஐயநின் னருளுண் டாக அடியம்ஊ றடைவ துண்டோ
மையலோ டுறங்கு வார்போல் மருவுமின் புற்ற தன்றி
வெய்யதோர் கிரிமா யத்தால் மெலிந்திலம் இறையு மென்றார். 201
1530 என்றலும் வீர மொய்ம்பின் ஏந்தலை விளித்துச் செவ்வேள்
வென்றிகொள் சூரன் பின்னோன் விட்டிடத் தான்முற் கொண்ட
வன்றிறற் படையின் வேந்தை*** மற்றவன் கரத்தின் நல்கி
நன்றிது போற்று கென்றே நவின்றுநல் லருள்பு ரிந்தான்.
( *** படையின் வேந்து - பாசுபதாஸ்திரம்.) 202
1531 தாரகன் போரில் துஞ்சுஞ் சாரதர் தம்மை யெல்லாம்
ஆருநீர் எழுதிர் என்னா அவரெலாம் எழுவே செய்து
பாரிட வனிகஞ் சூழப் பண்ணவர் பரவல் செய்யச்
சீரிய வயவர் ஈண்டச் செருநிலம் அகன்றான் செவவேள். 203

ஆகத் திருவிருத்தம் - 1531


21. தேவகிரிப் படலம் (1532-1563 )

1532 மாகவந் தங்கள் கூளி வாய்ப்பறை மிழற்ற ஆடும்
ஆகவந் தங்கு மெல்லை யகன்றுசெங் கதிர்வேல் அண்ணல்
சோகவந் தங்கொண் டுள்ள சுரருடன் அனிகஞ் சுற்றி
ஏகவந் தங்கண் நின்ற இமகிரி யெல்லை தீர்ந்தான். 1
1533 அரியயன் மகத்தின் தேவன் அமரர்கள் இலக்கத் தொன்பான்
பொருதிறல் வயவரேனைப் பூதர்கள் யாரும் போற்றத்
திருநெடு வேலோன் தென்பாற் செவ்விதின் நடந்து மேல்பால்
இரவியில் இரவி செல்ல இமையவர் சயிலஞ் சேர்ந்தான். 2
1534 ஒப்பறு சூர்பின் னோனை ஒருவன்வேல் அட்ட தன்மை
இப்புற வுலகின் உள்ளார் யாவரும் உணர்வர் இன்னே
அப்புற வுலகின் உள்ளார் அறிந்திட யானே சென்று
செப்புவ னென்பான் போலச் செங்கதிர் மறைந்து போனான். 3
1535 பானுவென் றுரைக்குமேலோன் பகற்பொழு தெலாங்கைக்கொண்டான்
ஏனைய மதியப் புத்தேள் இரவினுக் கரச னானான்
நானிவற் றிடையே சென்று நண்ணுவ னென்று செந்தீ
வானவன் போந்த தென்ன வந்தது மாலைச் செக்கர். 4
1536 வம்பவிழ் குமுத மெல்லா மலர்ந்திடு மாலை தன்னில்
வெம்படை பயிலத் தோன்றும் வேளுக்குத் தான்முன் வந்த
அம்புதி முருச மாயிற் றாகையால் தானும் வெற்றிக்
கொம்பென விளங்கிற் றென்ன எழுந்தது குழவித் திங்கள். 5
1537 ஏற்றெதிர் மலைந்து நின்ற இகலுடை யவுணர் தம்மேற்
காற்றெனத் தேர்க டாவிக் கடுஞ்சமர் புரிந்த வெய்யோன்
மாற்றருஞ் செம்பொன் மார்பில் வச்சிரப் பதக்கம் இற்று
மேற்றிசை வீழ்ந்த தென்ன இளம்பிறை வழங்கிற் றன்றே. 6
1538 கானத்தின் ஏனம் ஒத்த கனையிருட் சூழல் மற்றவ்
வேனத்தின் எயிற்றை யொத்த திளம்பிறை அதனைப் பூண்ட
கோனொத்த தண்டம் அந்தக் கூரெயி றுகுத்த முத்தந்
தானொத்து விளங்கு கின்ற தாரகா கணங்க ளெல்லாம். 7
1539 அல்லிது போந்த காலை ஆரமா மாலை யென்னக்
கல்¢லென அருவி தூங்குங் கடவுள்வெற் பொ சா ரெய்தி
மெல்லிதழ் வனசத் தேவும் விண்டுவும் விண்ணின் தேவும்
பல்லிமை யோருஞ் செவ்வேள் பதமுறை தொழுது சொல்வார். 8
1540 வன்கணே யுடைய சூர்பின் வருத்திட இந்நாள் காறும்
புன்கணே யுழந்தே மன்னான் பொருப்பொடு முடியச் செற்றாய்
உன்கணே வழிபா டாற்ற உன்னினம் இன்ன வெற்பின்
தன்கணே இறுத்தல் வேண்டுந் தருதியிவ வரம தென்றார். 9
1541 பசைந்திடும் ஆர்வங் கொண்ட பண்ணவர் இனைய தன்மை
இசைந்தனர் வேண்டு மெல்லை எ•குடை அண்ணல் அங்கண்
அசைந்திடு தன்மை யுன்னி அருள்செய வதுகண் டன்னோர்
தசைந்துமெய் பொடிப்பத் துள்ளித் தணப்பில் பேருவகை பூத்தார். 10
1542 ஒண்ணில வுமிழும் வேலோன் ஒலிகழற் றானையோடுங்
கண்ணனை முதலா வுள்ள கடவுளர் குழுவி னோடும்
பண்ணவர் கிரிமேற் சென்று பாங்கரில் தொழுது போந்த
விண்ணவர் புனைவன் றன்னை விளித்திவை புகல லுற்றான். 11
1542 புகலுறுஞ் சூழ்ச்சி மிக்கோய் புங்கவ ராயு ளோருந்
தொகலுறு கணர்கள் யாருந் துணைவரும் யாமும் மேவ
அகலுறும் இனைய வெற்பின் அருங்கடி நகர மொன்றை
விகலம தின்றி இன்னே விதித்தியால் விரைவின் என்றான். 12
1544 வேறு
குழங்கல் வேட்டுவக் கோதையர் ஆடலுங்
கழங்கு நோக்கிக் களிப்பவன் மற்றிது
வழங்கு மெல்லை வகுப்பனென் றன்னவன்
தழங்கு நூபுரத் தாள்பணிந் தேகினான். 13
1545 மகர தோரணம் வாரியின் மல்கிய
சிகர மாளிகை செம்பொனின் சூளிகை
நிகரில் பற்பல ஞௌ¢ளல்கள் ஈண்டிய
நகர மொன்றினை யாயிடை நல்கினான். 14
1546 அவ்வ ரைக்கண் அகன்பெரு நொச்சியுட்
கைவல் வித்தகக் கம்மியர் மேலவன்
எவ்வெ வர்க்கும் இறைவன் இருந்திடத்
தெய்வ தக்குல மொன்றுசெய் தானரோ. 15
1547 மாற்ற ரும்பொன் வரையுள் மணிக்கிரி
தோற்றி யென்னச் சுடர்கெழு மாழையின்
ஏற்ற கோட்டத் திழைத்தனன் கேசரி
ஆற்று கின்ற அரதனப் பீடிகை. 16
1548 இனைய தன்மையும் ஏனவும் நல்கியே
மனுவின் தாதை வருதலும் மள்ளர்தம்
அனிக மோடும் அமரர்கள் தம்மொடும்
முனையின் மேற்படை மொய்ம்பன்அங் கேகினான். 17
1549 அறுமு கத்தவன் அந்நக ரேகியே
துறும லுற்றிடுந் தொல்பெருந் தானையை
இறுதி யற்ற இருக்கைகொள் ஆவணம்
நிறுவ லுற்று நிகேதனத் தெய்தினான். 18
1550 இரதம் விட்டங் கிழிந்துபொற் பாதுகை
சரணம் வைத்துத் தணப்பரும் வீரருஞ்
சுரரு முற்றுடன் சூழ்தரத் துங்கவேல்
ஒருவன் மற்றவ் வுறையுளின் ஏகினோன். 19
1551 ஊறில் வெய்யவர் யாரும் ஒரோவழிச்
சேற லெய்திச் செறிந்தென வில்விடு
மாறில் செஞ்சுடர் மாமணிப் பீடமேல்
ஏறி வைகினன் யாரினும் மேலையோன். 20
1552 பொழுது மற்றதிற் பூவினன் ஆதியாம்
விழுமை பெற்றிடும் விண்ணவர் யாவருங்
குழும லுற்றுக் குமரனை அவ்விடை
வழிப டத்தம் மனத்திடை உன்னினார். 21
1553 புங்க வன்விழி பொத்திய அம்மைதன்
செங்கை தன்னிற் சிறப்பொடு தோன்றிய
கங்கை தன்னைக் கடவுளர் உன்னலும்
அங்கண் வந்ததை அப்பெரு மாநதி. 22
1554 சோதி மாண்கலன் தூயன பொற்றுகில்
போது சாந்தம் புகைமணி பூஞ்சுடர்
ஆதியாக அருச்சனைக் கேற்றன
ஏதும் ஆயிடை எய்துவித் தாரரோ. 23
1555 அண்டர் தொல்லை அமுத மிருத்திய
குண்ட முற்ற குடங்கர் கொணர்ந்திடா
மண்டு தெண்புனல் வானதி தன்னிடை
நொண்டு கொண்டனர் வேதம் நுவன்றுளார். 24
1556 அந்த வெல்லை அயன்முதற் றேவரும்
முந்து கின்ற முனிவருஞ் சண்முகத்
தெந்தை பாங்கரின் ஈண்டி யவன்பெயர்
மந்திரங் கொடு மஞ்சன மாட்டினார். 25
1557 வெய்ய வேற்படை விண்ணவற் கின்னணம்
ஐய மஞ்சனம் ஆட்டிமுன் சூழ்ந்திடுந்
துய்ய பொன்னந் துகிலினை நீக்கியே
நொய்ய ப•றுகில் நூதனஞ் சாத்தினார். 26
1558 வீற்றொர் சீய வியன்றவி சின்மிசை
ஏற்றி வேளை இருத்தி அவன்பெயர்
சாற்றி மாமலர் சாத்தித் தருவிடைத்
தோற்று பூவின் தொடையலுஞ் சூட்டினார். 27
1559 செய்ய சந்தனத் தேய்வைமுன் கொட்டினர்
ஐய பாளிதம் அப்பினர் நாவியுந்
துய்ய நானமுந் துன்னமட் டித்தனர்
மெய்யெ லாமணி மேவரச் சாத்தினார். 28
1560 சந்து காரகில் தண்ணென் கருப்புரங்
குந்து ருக்கமொண் குக்குலு வப்புகை
செந்த ழற்சுடர் சீர்மணி ஆர்ப்பொடு
தந்து பற்றித் தலைத்தலை சுற்றினார். 29
1561 இத்தி றத்தவும் ஏனவும் எ•கவேற்
கைத்த லத்துக் கடவுட்கு நல்கியே
பத்தி மைத்திற னாற்பணிந் தேத்தினர்
சித்தி சங்கற்பஞ் செய்திடுஞ் செய்கையோர். 30
1562 தேவு கொண்ட சிலம்பினில் பண்ணவர்
ஏவ ருங்குழீஇ யின்னணம் பூசனை
யாவ தாற்ற வதுகொண் டமர்ந்தனன்
மூவி ரண்டு முகனுடை மொய்ம்பினோன். 31
1563 அமரர் வெற்பில் அயிற்படை யேந்திய
விமல னுற்றது சொற்றனம் மேலினிச்
சமரி டைப்படு தாரகன் தந்திடு
குமரன் உற்றது மற்றதுங் கூறுகேம். 32

ஆகத் திருவிருத்தம் - 1563


222. அசுரேந்திரன் மகேந்திரஞ் செல் படலம் (1564-1628 )

1564 எந்தை குமரன் எறிந்ததனி மேற்படையாற்
தந்தி முகமுடைய தாரகன்றான் பட்டதனை
முந்துசில தூதர் மொழிய அவன்தேவி
அந்தமிலாக் கற்பிற் சவுரி அலக்கணுற்றான். 1
1565 வாழ்ந்த துணைவியர்கள் மற்றுள்ளோர் எல்லோருஞ்
சூழ்ந்து பதைத்திரங்கத் துன்பத் துடனேகி
ஆழ்ந்த கடல்படியும் அம்மென் மயிலென்ன
வீழ்ந்து கணவன் மிசையே புலம்புறுவாள். 2
1566 சங்குற் றிடுசெங்கைத் தண்டுளவோன் தன்பதமாம்
அங்குற் றனைஅன் றயன்பதஞ்செல் வாயன்று
கங்கைச் சடையான் கயிலையிற்சென் றாயல்லால்
எங்குற் றனைஅவ் விறைவன்அருள் பெற்றாயே. 3
1567 உந்துதனி யாழி உனக்கணியாத் தந்தோனும்
இந்திரனும் ஏனை இமையவர்க ளெல்லோரும்
அந்தகனார் தாமும் அனைவர்களும் இன்றன்றோ
சிந்தைதனி லுள்ள கவலையெலாந் தீர்ந்தனரே. 4
1568 பொன்னகரோர் யாரும் புலம்புற் றிடஅவுணர்
மன்னவரோ டென்பால் வரும்பவனி காணாதேன்
துன்னு பறவையினஞ் சூழத் துயிலுமுனை
இன்ன பரிசேயோ காண்பேனால் எம்பெருமான். 5
1569 புல்லா திருந்தனையான் புல்லுவது கண்டுமது
பல்லோருங் காணிற் பழியென் றொழிந்தாயேல்
மல்லாருந் தோளாய் மயக்குற்றேற் கோருரையுஞ்
சொல்லாய் வறிதே துயின்றாய் துனியுண்டோ. 6
1570 மையோ டுறழும் மணிமிடற்றோன் தந்தவரம்
மெய்யா மெனவே வியந்திருந்தேன் இந்நாளும்
பொய்யாய் விளைந்ததுவோ பொன்றினையால் என்றுணைவா
ஐயோ இதற்கோ அருந்தவமுன் செய்தாயே. 7
1571 தன்னோ டிணையின்றித் தானே தலையான
முன்னோன் அருள்புரிந்த முன்னோன் இளவல்வரின்
என்னொ அவனோ டெதிர்ந்தாய் இறந்தனையே
அன்னோ விதிவலியை யாரே கடந்தாரே. 8
1572 சந்தார் தடம்புயத்துத் தானவர்கள் தற்சூழ
அந்தார் கமழும் அரியணைமேல் வைகியநீ
சிந்தா குலத்திற் செருநிலத்தில் துஞ்சினையால்
எந்தாய் புகலாய் இதுவுஞ் சிலநாளோ. 9
1573 வென்றிமழு வேந்தும் விமலன் உனக்களித்த
துன்றும் வரத்தியலை யுன்னினையாற் சூழ்ச்சியினை
ஒன்று முணரா துயிருந் தொலைந்தனையே
என்று தமியேன் இனியுன்னைக் காண்பதுவே. 10
1574 வன்னி விழியுடையான் மைந்தன் அமர்புரிய
முன்னைவலி தோற்று முடிந்தா யெனக்கேட்டுப்
பின்னுமிருந் தேனென்னிற் பேரன் புடையோர்யார்
என்னினியான் செய்கேன் எனவே இரங்குற்றாள். 11
1575 மற்றைத் துணைவியரும் வந்தீண்டி மன்னவனைச்
சுற்றிப் புலம்பித் துயருற் றிடும்வேலை
அற்றத் தனனாகி ஆசுரத்தின் பாற்போன
கொற்றப் புதல்வன் வினவிக் குறுகினனால். 12
1576 தண்டா விறல்சேருந் தன்றாதை வீந்ததனைக்
கண்டான் உயிர்த்தான் கலுழ்ந்தான் கரங்குலைத்தான்
அண்டாத சோகத் தழுங்கினான் வெய்யகனல்
உண்டா னெனவீழ்ந் தயர்ந்தான் உணர்ந்தனனே. 13
1577 என்றுமுறா இன்ன லிடைப்பட் டவன்எழுந்து
சென்றுதன தன்னை திருத்தா ளிடைவீழா
உன்றலைவன் யாண்டையான் ஓதாய்அன் னேயென்று
நின்று புலம்பி நினைந்தினைய செய்கின்றான். 14
1578 அன்னைமுத லோரை அகல்வித் தொருசாரில்
துன்னுதிரென் றேவித தொலையாத தானவரில்
தன்னுழையோர் தம்மால்தழல்இந் தனமுதலாம்
மன்னு கருவி பலவும் வருவித்தான். 15
1579 வந்த பொழுதுதனில் வன்களத்தில் துஞ்சுகின்ற
தந்தைதனை முன்போல் தகவுபெற வொப்பித்தோர்
எந்திரத்தேர் மீதேற்றி ஈமத் திடையுய்த்துச்
சந்தனப்பூம் பள்ளி மிசையே தருவித்தான். 16
1580 ஈமக் கடன்கள் இயற்றித்தன் றாதைதனைத்
தாமக் கனலால் தகனம் புரிந்திடலுங்
காமுற் றனனென் கணவனுடன் செல்வதற்குத்
தீமுற் றருதி யெனஅன்னை சென்றுரைத்தாள். 17
1581 நற்றாய் மொழிந்ததனைக் கேட்டு நடுநடுங்கிப்
பொற்றாள் பணிந்தென்னைப் போற்றி யிருத்தியெனச்
சொற்றா னதுமறுத்துத் தோகை சுளித்துரைப்ப
அற்றாக வென்றான் அசுரேந் திரன்என்பான். 18
1582 ஏனைதோர் தாயர்களும் யாமுங் கணவனுடன்
வானகம்போய் எய்த வழங்கென் றிடவிசையா
ஆன படியே அழலமைக்க அன்னையராம்
மானனையார் எல்லோரும் வான்கனலி னுள்புக்கார். 19
1583 புக்கதொரு காலை புலம்பியே அந்நகரை
அக்கணமே நீங்கி அசுரேந் திரனென்போன்
தக்க கிளைஞர்சிலர் தற்சூழ வேயேகி
மைக்கடலுள் வைகும் மகேந்திரமூ தூர்உற்றான். 20
1584 வேறு
உளந்தளர் வெய்தித் தொல்லை ¤முகன் இழந்து மேனி
தளர்ந்தனன் வறியன் போன்று தாரக முதல்வன் தந்த
இளந்தனி மைந்தன் வல்லே யேகலும் அனைய நீர்மை
வளந்திகழ் தொல்லை வீர மகேந்திரத் தவுணர் கண்டார். 21
1585 உரங்கிளர் அவுணர் காணூஉ ஒய்யெனத் துளங்கி யேங்கிக்
கரங்களை விதிர்த்துக் கண்ணீர் கானெறி படர்ந்து செல்லப்
பெருங்கட லுடைந்த தேபோல் பேதுற வெய்தி யாற்ற
இரங்கியிக் குமர னுற்ற தென்கொலென் றிசைக்க லுற்றார். 22
1586 வஞ்சமுங் கொலையுஞ் செய்யான் மற்றிவன் இதற்குத் தாதை
வெஞ்சினங் கொடுபோ கென்று விடுத்தனன் போலும் என்பார்
தஞ்சம தாகி யுள்ள தாரகன் கொடுமை நோக்கி
அஞ்சியே அவனை நீங்கி அடைந்தனன் கொல்லோ என்பார். 23
1587 சீரொடு துறக்கம் நீத்துத் தேவர்கோன் உருவ மாற்றிப்
பாரிடை யுழந்தான் என்பார் மற்றவன் பரனை வேண்டிப்
பேரிகல் மாயம் வன்மை பெற்றுவந் தடுபோர் செய்யத்
தாரகன் இறந்தான் கொல்லோ தளர்ந்திவன் வந்தான் என்பார். 24
1588 மாண்கிளர் தார கப்பேர் மன்னவன் பகைஞர் ஆற்றும்
ஏண்கிளர் சமரில் வீந்தான் என்பதற் கேது வுண்டால்
சேண்கிளர் நிவப்பா லெங்குந் தெரிகிர வுஞ்ச வெற்பில்
காண்கிலம் அவுணர் தம்மைப் பூழியே காண்டும் என்பார். 25
1589 பையர வணையில் துஞ்சும் பகவன தாழி தன்னை
ஐயபொன் னணிய தாக அணிந்திடும் அவுண னோடு
மொய்யமர் புரிவார் யாரே முரணொடு வெம்போர் சில்லோர்
செய்யினும் அவரால் அன்னோன் முடிகிலன் திண்ணம் என்பார். 26
1590 அங்கையை ஒருவன் வாளால் அறுத்திடப் புலம்பி நங்கோன்
தங்கைவந் தமரர் தம்மைச் சயந்தனைச் சிறைசெய் வித்தாள்
இங்கிவன் தானுந் துன்புற் றேகுவான் இன்றும் அற்றே
புங்கவர் தமக்கே இன்னல் புரிகுவன் போலும் என்பார். 27
1591 மணிகிளர் எழிலி வண்ணன் மற்றவ னொடுபோர் ஆற்றான்
அணியுல களித்த செம்மல் அமர்த்தொழில் சிறிதுந் தேறான்
தணிவறு செயிர்மீக் கொண்ட தாரக னொடுபோர் செய்யின்
இணைகல் ஈசன் அன்றி யாவரே வல்லர் என்பார். 28
1592 இமையவர் கருடர் நாகர் இயக்கர்கந் தருவ ரேனோர்
நமரிடு பணிகள் ஆற்றி நாடொறுந் திரிந்தார் அற்றால்
சமரெதிர் இழைப்பார் இன்றித் தளர்ந்தனம் இந்நாள் காறும்
அமரினி யுளது போலும் ஐயம தில்லை என்பார். 29
1593 சேயிவன் அலக்கண் எய்திச் செல்லுறு பரிசா லங்கண்
ஆயதோர் தீங்கு போலும் ஐயமின் றிதனை நாடி
நாயகன் விடுக்கு முன்னம் நம்பெருந் தானை யோடு
மாயமா புரிகா றேகி அறிந்தனம் வருதும் என்பார். 30
1594 எனைப்பல இனைய வாற்றா லியாவரும் அவுணர் ஈண்டி
மனப்படு பைத லோடும் வயின்வயின் உரையா நிற்ப
நினைப்பருந் திருமிக் குள்ள நெடுமகேந் திரத்திற் சென்று
வனைப்பெருங் கழற்காற் சூர மன்னவன் கோயில் போந்தான். 31
1595 போந்துதா ரகன்றன் மைந்தன் பொள்ளெனப் படர்த லோடும்
வாய்ந்தபே ரவைய மன்றில் வரம்பிலா அவுணர் போற்ற
ஏந்தெழில் அரிகள் தாங்கும் எரிமணித் தவிசின் மீக்கண்
வேந்தர்கள் வேந்தன் சூரன் மேவிவீற் றிருந்தான் மாதோ. 32
1596 வீற்றிருந் தரசு போற்றும் வேந்தனை யெய்தி யன்னான்
காற்றுணை முன்னர் வீழ்ந்து கரங்களால் அவற்றைப் பற்றி
ஆற்றவும் அரற்றல் செய்ய அவுணர்கோர் அதுகண் டைய
சாற்றுதி புகுந்த தன்மை தளர்ந்தனை புலம்ப லென்றான். 33
1597 என்றலும் மைந்தன் சொல்வான் இந்திரன் புணர்ப்பால் ஈசன்
வன்றிறற் குமரன் பூத வயப்படை தன்னொ டேகி
உன்றன திளவல் தன்னை ஒண்கிர வுஞ்ச மென்னுங்
குன்றொடும் வேலாற் செற்றுக் குறுகினன் புவியி லென்றான். 34
1598 வெய்யசூர் அதனைக் கேளா விழுமிதென் றுருமின் நக்குச்
சையமாம் அவுண னோடு தாரக வலியோன் றன்னை
மையுறழ் கண்டத் தண்ணல் மைந்தனோ அடுதல் செய்வான்
பொய்யிது வெருவல் மைந்த உண்மையே புகறி என்றான். 35
1599 தாதைகேள் கரதம் ஈது தாரகத் தந்தை தன்னை
மேதகு கிரவுஞ் சத்தை வேல்கொடு பரமன் மைந்தன்
காதினன் சென்றான் ஈமக் கடன்முறை எந்தைக் காற்றி
மாதுயர் கொண்டு நின்பால் வந்தனன் என்றான் மைந்தன். 36
1600 வேறு
தோட்டுணைவ னாம்இளவல் துஞ்சினன் எனுஞ்சொல்
கேட்டலும் உளத்திடை கிளர்ந்தது சினத்தீ
நாட்டமெரி கால்வபுகை நண்ணுவன துண்டம்
ஈட்டுபொறி சிந்துவன யாக்கையுள் உரோமம். 37
1601 நெறித்தபுரு வத்துணைகள் நெற்றிமிசை சென்ற
கறித்தன எயிற்றினிரை கவ்விஅத ரத்தைச்
செறித்தன துடித்தன தெழித்தஇதழ் செவ்வாய்
குறித்தது மனங்ககன கூடமும் முடிக்க. 38
1602 அவ்வகை சினத்தெரி யெழுந்துமிசை கொள்ள
அவ்வெரியின் ஆற்றலை யவித்ததது போழ்தில்
வெவ்வினைகொள் தாரகன் மிசைத்தொடரும் அன்பால்
தெவ்வர்புகழ் சூரனிடை சேர்ந்ததுயர் ஆழி. 39
1603 துப்புநிகர் கண்புனல் சொரிந்தநதி யேபோல்
மெய்ப்புறம் வியர்த்தமுகம் வௌ¢ளமவை யீண்டி
அப்புணரி யானதுய ராழியது வென்றே
செப்புபொரு ளுண்மையது தேற்றியது போலும். 40
1604 பருவர லெனும்புணரி யூடுபடி வுற்றே
அரியணை மிசைத்தவறி அம்புவியில் வீழா
உருமென அரற்றினன் உணர்ந்ததனை யஞ்சி
நரலையொடு பாரகம் நடுங்கியதை யன்றே. 41
1605 கூற்றுள நடுங்கிய குலைந்தது செழுந்தீக்
காற்றுவெரு வுற்றது கதிர்க்கடவுள் சோமன்
ஏற்றமிகு கோளுடு விரிந்தபுவி முற்றும்
ஆற்றிய பணிக்கிறையும் அஞ்சிய தலைந்தே. 42
1606 பாங்கருறு தானவர்கள் பாசறையின் மூழ்கி
ஏங்கினர் விழுந்தனர் இரங்கினர் தளர்ந்தார்
ஆங்கனைய போழ்துதனில் அந்நகர மெல்லாம்
ஓங்குதுயர் கொண்டுகலுழ் ஓசைமலிந் தன்றே. 43
1607 ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
போனதொரு சீற்றவழல் புந்தியிடை மூள
மானமொடு நாணமட வல்லையில் எழுந்தே
தானுடைய ஏவலர் தமக்கிவை உரைப்பான். 44
1608 ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
மன்னிளவல் ஆருயிரை மாற்றிவரு கந்தன்
தன்னிகல் கடந்துசய மெய்திவரல் வேண்டும்
என்னிரதம் வெம்படை இடுங்கவசம் யாவும்
உன்னுகணம் ஒன்றின்முனம் உய்த்திடுதி ரென்றான். 45
1609 ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
இறையிவை புகன்றிடலும் ஏவலர்கள் யாரும்
முறையிலவை உய்த்திடுதல் முன்னினர்கள் போனார்
அறைகழ லுடைத்தகுவர் அன்னசெயல் நாடிக்
குறைவில்அனி கங்களொடு கொம்மென அணைந்தார். 46
1610 ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
ஆயசெயல் காண்டலும் அமைச்சரில் அமோகன்
மாயைதரு சூரனடி வந்தனை புரிந்தே
ஏயதொரு மாற்றம திசைப்பல்அது கேண்மோ
தீயசின மெய்திட லெனாஇனைய செப்பும். 47
1611 ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
வேறு
நஞ்சுறை படைகள் கற்று நவையுறா தொன்ன லாரை
வஞ்சினத் தெறியும் வீரர் வளநகர் அதனை மாற்றோர்
இஞ்சியைச் சூழ்ந்து போருக் கெய்தினும் எண்ணி யன்றி
வெஞ்சினத் தினைமேல் கொண்டு விரைந்தமர் இயற்றச் செல்லார். 48
1612 குலத்தினை வினவி உள்ளக் கோளினை வினவி வந்த
நிலத்தினை வினவித் தொல்லோர் நெறியினை வினவிக் கொணட
சலத்தினை வினவிப் போர்செய் தானையை வினவி அன்னோர்
வலத்தினை வினவி யல்லால் மற்றொன்று மனங்கொள் வாரோ. 49
1613 வரத்தினில் வலியி னாரோ மாயையில் வலியி னாரோ
கரத்தினிற் படைக்க லத்தின் கல்வியில் வலியி னாரோ
உரத்தினில் வலியி னாரோ உணர்ச்சிசேர் ஊக்க மான
சிரத்தினில் வயியி னாரோ என்றிவை தேர்வ ரன்றே. 50
1614 ஒற்றைரைத் தூண்டி அன்னோர் உறுவலி உணர்வ ரேனும்
மற்றுமோ ரொற்றின் அல்லால் அன்னது மனத்துட் கொள்ளார்
சுற்றுறும் அனிக மன்றி யொருபுடை துவன்றிச் சூழும்
பெற்றியும் உளதோ என்னாவேயொரீஇத் தேர்வர் பின்னும். 51
1615 வினையது விளைவை யென்றும் மெல்லிய என்கை வெ•கார்
அனிகமும் அனையர் தன்மை அதனையுஞ் சிறுமைத் தாக
நினைகிலர் தமக்கு மாற்றார் நேர்ந்தவ ராகின் மேலோர்
முனையுறு புலத்தி லாற்றும் மும்மையும் முன்னிச் செய்வார். 52
1616 மூவியல் மரபி னாலும் முற்றுறா தொழிந்த காலைக்
கோவியல் மரபுக் கேற்பக் கொடுஞ்சினந் திருகிக் கோட்புற்
றேவியல் படைஞ ரோடும் படையொடும் எதிர்ந்து சுற்றி
மேவலர் பான்மை யுன்னி வெற்றிகொண் டணைவர் அன்றே. 53
1617 நேர்ந்திட வலியி லோரும் ஞாட்பிடை நேர்தி ரென்னாச்
சேர்ந்திடும் போழ்தும் வேந்தர் செருவினைக் குறித்துச் சென்று
சார்ந்திடல் பழிய தன்றோ வெல்லினுந் தானை தூண்டிப்
பேர்ந்திடச் செய்வர் அ•தே பெறலரும் புகழ தன்றே. 54
1618 ஈதரோ உலகி லுள்ள இறைவர்தம் இயற்கை யாகும்
ஆதலார் நின்னொப் பாரில் அழிவிலா அகில மாள்வாய்
கூதமொன் றடையாய் வானோர் யாரையும் ஏவல் கொண்டாய்
போதனும் நெடுமா லோனும் வைகலும் புகழ வுற்றாய். 55
1618 இன்னதோர் மிடல்பெற் றுள்ள இறைவநீ அளிய னாகும்
பொன்னக ரவன்சொற் கேட்டுப் பூதமே படையா ஈசன்
நென்னலின் உதவும் பிள்ளை நேர்ந்திடின் அவனை வெல்ல
உன்னினை போதி யென்னின் உனக்கது வசைய தன்றோ. 56
1620 மாற்றலர் வன்மை யோராய் மற்றவர் படைஞர் தங்கள்
ஆற்றலை யுணராய் நின்றன் அரும்பெருந் தலைமை யுன்னாய்
போற்றிடும் அமைச்ச ரோடும் புரிவன சூழாய் வாளா
சீற்றமங் கதுமேல் கொண்டு செல்லலுந் திறலின் பாற்றோ. 57
1621 வீரமும் வலியும் மிக்கோ ராயினும் விதிவந் தெய்தில்
பாரிடை வலியி லோரும் படுத்திடப் படுவர் நின்போல்
பேருடல் அழியா ஆற்றல் பெறாமையால் இறுவா யெய்தத்
தாரகன் மழலை தேறாச் சிறுவனுந் தடியப் பட்டான். 58
1622 கலகல மிழற்றுந் தண்டைக் கழலடிச் சிறுவன் கைம்மாத்
தலையுடை இளவல் தன்னைத் தடிந்ததற் புதத்த தன்றால்
வலியரும் ஒருகா லத்தில் வன்மையை இழப்பர் ஆற்ற
மெலியரும் ஒருகா லத்தில் வீரராய்த் திகழ்வர் அன்றே. 59
1623 யாருநே ரன்றி வைகும் இறைவநீ சிறுவன் றன்மேற்
போரினை முன்னி யேகல் புகழ்மைய தன்றால் அன்னான்
சீரொடு மதுகை யாவுந் தேர்ந்துபின் னவனில் தீர்ந்த
வீரரைப் படையொ டேவி வெற்றிகொண் டமர்தி யென்றான். 60
1624 அறிதரும் அமைச்சர் தம்முள் அமோகன்இத் தன்மை தேற்ற
உறுதியீ தென்று சூரன் உள்ளுறு சினத்தை நீத்து
விறல்கெழும் அரிமான் ஏற்று விழுத்தகு தவிசின் ஏறிச்
செறிதரும் உழைஞர் தம்முட் சிலவரை நோக்கிச் சொல்வான். 61
1625 பகனொடு மயூரன் சேனன் பரிதியம் புள்ளின் பேரோன்
சுகனிவர் முதலா வுள்ள தூதரைத் தருதி ரென்னப்
புகழ்புனை சூர பன்மன் பொன்னடி இறைஞ்சி யேத்தித்
தகுவர்கள் தலைவர் மற்றச் சாரணர் தம்மை உய்த்தார். 62
1626 சாரணர் இஇனயர் போந்து தாள்முறை பணிந்து நிற்பச்
சூரனங் கவரை நோக்கித் துண்ணென நீவி ரேகிப்
பாரிடை வந்த கந்தன் பான்மையும் படைவெம் பூதர்
சேருறு தொகையும் யாவுந் தேர்ந்திவண் வருதி ரென்றான். 63
1627 ஒற்றுவர் உணர்ந்தந் நீர்மை உச்சிமேல் கொண்டு தங்கோன்
பொற்றடங் கழல்கள் தாழ்ந்து புடவியை நோக்கிச் சென்றார்
மற்றவர் போய பின்னர் மாறிலாச் சூர பன்மன்
வெற்றிகொள் அவுணர் போற்ற வீற்றிருந் தரசு செய்தான். 64
1628 ஏதமில் சூர பன்மன் இளவல்தன் முடிவு நேடி
மாதுயர் கொண்டு தேறி வைகிய தன்மை சொற்றாம்
ஆதியங் கடவுள் மைந்தன் அமரர்தங் கிரியை நீங்கிப்
பூதல மீது வந்த நெறியினைப் புகல லுற்றாம். 65

ஆகத் திருவிருத்தம் - 1628


23. வழிநடைப் படலம் (1629 - 1644 )

1629 குருமணி மகுடம் ஆறுங் குழைகளுந் திருவில் வீசத்
திருமணி வரையின் மேவுந் திருக்கைவேற் பெருமா னுககுக்
கருமணி யாழிப் புத்தேள் கையுறை யாக ஆங்கோர்
பருமணி நீட்டிற் றென்னப் பானுவந் துதயஞ் செய்தான். 1
1630 வேறு
மங்குல் வானமேல் வெய்யவன் கதிரென வழங்குஞ்
செங்கை கூப்பியே தொழுதிடு வானெனச் செல்ல
அங்கவ் வேலையில் அறுமுகன் கடவுள்வெற் பகன்று
பொங்கு தானையும் அமரருஞ் சூழதரப் போந்தான். 2
1631 தன்னை நீக்கியே சூழ்வுறுந் தவமுடைப் பிருங்கி
உன்னி நாடிய மறைகளின் முடிவினை யுணரா
என்னை யாளுடை யாளிடஞ் சேர்வன்என் றிமையக்
கன்னி பூசனை செய்தகே தாரமுன் கண்டான். 3
1632 பைய ராவின்மேற் கண்டுயில் பண்ணவன் றனக்குந்
தையல் பாதிய னேபரம் பொருளெனுந் தன்மை
மையல் மானுடர் உணர்ந்திட மறைமுனி யெடுத்த
கைய தேயுரைத் திட்டதோர் காசியைக் கண்டான். 4
1633 பருப்ப தப்பெயர்ச் சிலாதனற் பாலகன் பரமன்
இருப்ப வோர்வரை யாவனென் றருந்தவம் இயற்றிப்
பொருப்ப தாகியே ஈசனை முடியின்மேற் புனைந்த
திருப்ப ருப்பதத் தற்புதம் யாவையுந் தெரிந்தான். 5
1634 அண்டம் மன்னுயிர் ஈன்றவ ளுடன்முனி வாகித்
தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத் தேகியே யோர்குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான். 6
1635 சிலந்தி மாசுணம் மும்மதக் கரிசிவ கோசன்
மலைந்தி டுஞ்சிலை வேட்டுவன் கீரனே மடவார்
பலந்த ரும்வழி பாட்டினால் பாட்டினாற் பரனைக்
கலந்து முத்திசேர் தென்பெருங் கயிலையுங் கண்டான். 7
1636 கொடிய வெஞ்சினக் காளியிக் குவலய முழுதும்
முடிவு செய்வன்என் றெழுந்தநாள் முளரியன் முதலோர்
அடைய அஞ்சலும் அவள்செருக் கழிவுற வழியாக்
கடவுள் ஆடலால் வென்றதோர் வடவனங் கண்டான். 8
1637 அம்பு ராசிகொள் பிரளயத் தினுமழி வின்றி
உம்பர் மாலயற் குறையுளாய்க் கயிலைபோ லொன்றாய்
எம்பி ரான்தனி மாநிழல் தன்னில்வீற் றிருக்குங்
கம்பை சூழ்தரு காஞ்சியந் திருநகர் கண்டான். 9
1638 ஏல வார்குழல் உமையவள் பூசைகொண் டிருந்த
மூல காரண மாகிய முதல்வன் ஆலயமும்
மாலும் வேதனும் அமரரும் வழிபடு மற்றை
ஆல யங்களாய் உள்ளவுங் கண்டனன் ஐயன். 10
1639 வேறு
என்னிகர் எவரு மில்லென் றிருவரும் இகலும் எல்லை
அன்னவர் நடுவு தோன்றி அடிமுடி தெரியா தாகி
உன்னினர் தங்கட் கெல்லாம் ஒல்லையின் முத்தி நல்கித்
தன்னிகர் இன்றி நின்ற தழற்பெருஞ் சயிலங் கண்டான். 11
1640 மண்ணுல கிறைவன் செய்யும் மணந்தனை விலக்கி எண்டோள்
அண்ணலோர் விருத்தன் போல்வந் தாவண வோலை காட்டித்
துண்ணென வழக்கில் வென்று சுந்தரன் றனையாட் கொள்ளும்
பெண்ணையம் புனல்சூழ் வெண்ணெய்ப் பெரும்பதி தனையும் கண்டான். 12
1641 தூசினால் அம்மை வீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா வுயிர்கட் கெல்லாம் அஞ்செழுத் தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடு மியல்பால் அந்தக்
காசியின் விழுமி தான முதுகுன்ற வரையுங் கண்டான். 13
1642 விரிகனல் வேள்வி தன்னில் வியன்றலை அரிந்து வீட்டிப்
பொருவரு தவத்தை யாற்றும் பதஞ்சலி புலிக்கால் அண்ணல்
இருவரும் உணர்வாற் காண எல்லையில் அருளா லீசன்
திருநட வியற்கை காட்டுந் தில்லைமூ தூரைக் கண்டான். 14
1643 தண்டளிர்ச் சோலைத் தில்லைத் தபனிய மன்றி லென்றுந்
தொண்டையங் கனிவாய் மாது தொழச்சுராட் புருடன் உள்ளத்
தண்டரு மதிக்க லாற்றா அற்புதத் தனிக்கூத் தாடல்
கண்டனன் கசிவால் உள்ளங் களிப்புற வணங்கிப் போனான். 15
1644 குடமுனி கரத்தில் ஏந்துங் குண்டிகை இருந்து நீங்கிப்
படிதனில் வேறு வேறாய்ப் பற்பல நாமந் தாங்கிக்
கடல்கிளர்ந் தென்னச் செல்லுங் காவிரி யென்னு மாற்றின்
வடகரை மண்ணி யின்பால் வந்தனன் கருணை வள்ளல். 16

ஆகத் திருவிருத்தம் - 1644


24. குமாரபுரிப் படலம் (1645 - 1725)

1645 அளவில் பூதவெம் படையொடு மண்ணியா றதன்கட்
குளகன் வந்துழி எழுந்திடு பூழிவான் குறுகி
¤ரும் வெய்யவன் கதிர்தனை மறைத்தலா லோடி
வளைநெ டுங்கடல் மூழ்குவான் புக்கென மறைந்தான். 1
1646 மறைந்த காலையில் தோன்றின மாலையும் நிசியுங்
குறைந்த திங்கள்வந் துதத்தது தாரகை குறுகி
நிறைந்தெ ழுந்தவோர் மன்னவன் இறந்துழி நீங்கா
துறைந்த ஒன்னலர் யாவருங் கிளர்ந்தவர் றொப்ப. 2
1647 மிக்க தாருக வனத்தினை யொத்தது விசும்பில்
தொக்க பேரிருள் மாதரொத் தனஉடுத் தோற்றஞ்
செக்கர் ஈசனை யொத்ததொண் போனகஞ் செறிந்த
கைக்க பாலம தொத்தது கதிரிளம் பிறையே. 3
1648 நிலவு லாவிய ககனமா நீடுபாற் கடலில்
குலவு கின்றதோர் பொருளெலாங் கொண்டுகொண் டேகி
உலகில் நல்குவான் முயலெனும் ஒருமகன் உய்ப்பச்
செலவு கொண்டதோர் தோணிபோன் றதுசிறு திங்கள். 4
1649 ஆன காலையில் அறுமுகப் புங்கவன் அமல
மேனி சேரொளி நிலவொடு கங்குலை வீட்டிப்
பானு மேவரு மெல்லெனச் செய்தலிற் பரமாம்
வான நாயகன் கயிலைபோன் றிருந்ததவ் வையம். 5
1650 வேறு
வீசு பேரொளி விறற்குகன் இவ்வா
றாசின் மண்ணியின் அகன்கரை நண்ண
ஈச னாம்அவனை எய்துபு வேதாக்
கேச வன்முதல்வர் இன்ன கிளப்பார். 6
1651 ஆண்ட இந்நதி யகன்கரை எல்லாம்
மாண்ட வாலுகம் மலிந்தினி தாகும்
நீண்ட சோலைகள் நிரந்தன தோன்றி
ஈண்டி ஈண்டையின் இறுத்துள அன்றே. 7
1652 பிறைபு னைந்திடு பெருந்தகை தானம்
இறுதி யில்லன இருந்தன வற்றால்
நறிய தாகுமிந் நதிக்கரை தன்னில்
இறைவ இவ்விடை இருந்தருள் என்றார். 8
1653 வனையும் மேனிஅயன் மால்முதல் வானோர்
இனைய செப்புதலும் யாரினும் மேலோன்
வினைய மெத்தவுள விச்சுவ கன்மப்
புனைவ னுக்கிது புகன்றிடு கின்றான். 9
1654 மெய்வி தித்தொழிலில் வேதன் நிகர்க்குங்
கைவ லோய்ஒரு கணம்படு முன்னர்
இவ்வி டத்தினில் எமக்கொரு மூதூர்
செவ்வி திற்புனைவு செய்குதி யென்றான். 10
1655 என்ன லோடும்அவ் விடந்தனில் எங்கோன்
துன்னு தொல்படை சுராதிப ரோடு
மன்ன அங்கணொரு மாநகர் நெஞ்சத்
துன்னி நல்கலும் உவந்தனர் யாரும். 11
1656 அப்பு ரத்தையறி வன்கடி தாற்றி
முப்பு ரத்தையடு முன்னவன் நல்கும்
மெய்ப்பு ரத்தவனை நோக்குபு மேலோய்
இப்பு ரத்திடை எழுந்தரு ளென்றான். 12
1657 என்ற லோடும்இர தத்தின் இழிந்தே
துன்றும் வானவர் சுராதிப ரானோர்
சென்ற பூதர்கள் செறிந்துடன் ஏக
மன்றல் மாநகரில் வள்ளல் புகுந்தான். 13
1658 செல்லு மாமுகில் செறிந்திடு காப்பின்
மல்லல் மாநகர் வளந்தனை நோக்கி
எல்லை யில்அறிவன் யாமுறை தற்கு
நல்ல மாநகரி தென்று நவின்றான். 14
1659 வீர வேளிது விளம்புத லோடும்
ஆரும் வானவர்கள் அம்மொழி கேளா
ஏரெ லாமுடைய இந்கர் சேய்ஞ
லூர தென்றுபெயர் ஓதினர் அன்றே. 15
1660 ஆய காலையனி கப்படை சூழ
ஏய பின்னிளைஞர் இந்திரன் வேதா
மாயன் ஏனையர் வழுத்திட ஆண்டைக்
கோயில் செல்லுபு குமாரன் இருந்தான். 16
1661 வேறு
பன்னிரு புயத்தொகை படைத்தகும ரேசன்
தன்னருள் அடைந்துவிதி தன்னைமுத லானோர்
அன்னவன் விடுத்திட வகன்றுபுடை யேகித்
தொன்னிலை இருக்கைகள் தொறுந்தொறும் அடைந்தார். 17
1662 தானைகள் தமக்குரிய சாரதர் இலக்கர்
ஏனையர் வழுத்த எமை யாளுடைய வள்ளல்
கோனகர் இருக்கவிடை கொண்டுசெல் குழாத்துள்
வானவர் தமக்கிறை செயற்கையை வகுப்பாம். 18
1663 வேறு
தாங்கரும் பெருந்திறல் தார காசுரன்
பாங்கமர் குன்றொடும் பட்ட பான்மையால்
ஆங்கனம் புரந்தரன் அவலம் யாவதும்
நீங்கினன் உவகையால் நிறைந்த நெஞ்சினான். 19
1664 விருந்தியல் அமிர்தினை விழும மில்வழி
அருந்தின னாமென ஆகந் தண்ணெனப்
புரந்தரன் இருந்துழிப் புக்குத் தாழ்ந்ததால்
வரந்திகழ் சிரபுர வனத்தில் தெய்வதம். 20
1665 முகில்பொதி விண்ணகம் முதல்வன் பூண்களும்
நகில்பொதி சாந்துடை நங்கை பூண்களுந்
துகில்பொதி கிழியொடு தொல்லை வைத்தவை
அகில்பொதி காட்டகத் தடிகள் உய்த்ததே. 21
1666 முந்துற உய்த்தபின் முதல்வ கேட்டிநீ
பைந்தொடி அணங்கொடு பரமன் காழியில்
வந்தனை நோற்றநாள் வைத்த பூணிது
தந்தனன் கொள்கெனச் சாற்றி நின்றதே. 22
1667 நிற்புறு கின்றுழி நேமி அண்ணற்கு
முற்படு கின்றவன் முளரிப் பண்ணவன்
கிற்புறு செய்யபூண் கிழியை நோக்கினான்
கற்புடை யாள்விடுந் தூதின் காட்சிபோல். 23
1668 எரிமணி அணிகலன் இட்ட பூந்துகில்
விரிதரு பொதியினை விரலின் நீக்கினான்
திருமகள் அமர்தரு தெய்வத் தாமரை
வரியளி சூழ்வுற மலர்ந்த தென்னவே. 24
1669 துண்ணெனக் கிழியதன் தொடர்பு நீக்கலும்
ஒண்ணுதற் றுணைவிபூண் உம்பர் தோன்றலுங்
கண்ணுறக் கண்டவட கருதி னானவேரா
எண்ணுதற் கரியதோர் இன்பந் துய்த்துளான். 25
1670 பூட்கையின் முலையுடைப் பொன்னங் கொம்பின்மேல்
வேட்கைய தாயினன் மிகவும் பிற்பகல்
வாட்கையின் றிருந்தது மனத்தின் முன்னினான்
காட்கொளுங் காமநோய்க் கவலை எய்தினான். 26
1671 நெய்ம்மலி தழலென நீடிக் காமநோய்
இம்மென மிசைக்கொள இரங்கி ஏங்கினான்
விம்மினன் வெதும்பினன் வெய்து யிர்த்தனன்
மைம்மலி சிந்தையன் மருட்கை எய்தினான். 27
1672 பசையற வுலர்வுறு பராரைப் பிண்டியின்
தசைமலி முழுதுடல் தளர்ந்து வாடினான்
இசைவரு கைவலோன் எழுது பாவைபோல்
அசைவிலன் இருந்தனன் அணங்குற் றென்னவே. 28
1673 முருந்துறழ் எயிற்றினாள் முலைத்த டங்களில்
பொருந்துற மூஞ்கியே புணர்ந்து வைகலும்
இருந்திடு கின்றவன் இடர்ப்பட் டின்னணம்
பிரிந்திடின் வருந்துதல் பேசல் வேண்டுமோ. 29
1674 மெய்ந்நனி அலசுற விரக மீக்கொள
இன்னணஞ் சசிபொருட் டினையும் நீர்மையோன்
பொன்னணி தன்னையும் புனைதல் வேண்டலன்
தன்னுழை யவர்தமை நோக்கிச் சாற்றுவான். 30
1675 இக்கிழி யொன்றினை ஏந்தி முந்துபோற்
சிக்குற வீக்கியே சேமித் துங்கள்பால்
வைக்குதிர் என்றலும் எணங்கி நன்றொனா
அக்கணம் அனையவர் அதனை யாற்றினார். 31
1676 அன்னதோர் அளவையில் அடவித் தேவினைக்
கொன்னுனை வச்சிரக் குரிசில் நோக்குறா
நின்னுழை அளித்திட நீசெல் கென்றலும்
மன்னவ நன்றென வங்கிப் போயதே. 32
1677 போந்திடு காலையிற் புலோமசைப் பெயர்
ஏந்திழை காமநோய் எரியின் துப்பினாற்
காந்திய வுளத்தினன் கனலும் யாக்கையன்
ஓய்ந்தனன் தட்பமேல் உளம்வைத் தேகினான். 33
1678 ஆயிழை உழத்தியர் ஆமென் கூந்தலின்
அளியினம் நறவுதுய்த் தலரிற் கண்படு
நளியிருந் தண்டலை ஞாங்கர் பொங்கிய
புளினமொன் றதன்மிசை புக்கு வைகினான். 34
1679 தீந்தழல் வெங்கதிர் திளைத்த வாறென
நீத்தருங் கருங்குலின் நிலவுத் தீப்படப்
பூந்துணர் பரவிய புளினம் பொன்னகர்
வேந்தனுக் காற்றவும் வெம்மை செய்ததே. 35
1680 சூற்புயல் மாறிய சுரத்தில் தொக்குறு
மாற்பரல் வரைபுரை மணலின் திட்டையின்
பாற்படு கின்றனன் பனிம திக்கர்
மேற்பட அசைந்தனன் வினையம் வேறிலான். 36
1681 திங்களும் வெங்கனல் சிதறிக் காய்ந்திடத்
துங்கவேள் படையுடன் பிறவுஞ் சூழ்ந்திட
மங்கிய உணர்ச்சியன் மயலின் வன்மையான்
புங்கவர் மன்னவன் புலம்பல் எய்தினான். 37
1682 மட்டமர் புரிகுழல் மடந்தை என்னுடல்
இட்டுயிர் வவ்வினள் இருந்த யாக்கையுஞ்
சுட்டிடு கிற்றியால் தூய திங்கள்நீ
பட்டவர் தம்மையும் படுப்ப ரோவென்பான். 38
1683 எஞ்சலில் அமுதினை யார்க்கும் நல்குநீ
நஞ்சினை யுகுத்திநண் ணலரில் தப்பியே
உஞ்சனன் இவனுயிர் ஒழிப்பன் யானெனா
வஞ்சினம் பிடித்தியோ மதிய மேயென்பான். 39
1684 நிற்றலும் வருதிநீ நீடு தண்ணளி
உற்றிடல் அன்றியே ஒறுத்தி லாய்மதி
அற்றமின் றுன்னிவந் தடுதி யாரிடைக்
கற்றனை இத்திறங் கள்வ நீயென்பான். 40
1685 பெண்ணிய லாரிடைப் பிறங்கு காமமும்
உண்ணிகழ் விரகமும் உனக்கும் உண்டதை
எண்ணலை யழல்சொரிந் தென்னைக் காய்தியால்
தண்ணளி மதிக்கிது தகுவ தோவென்பான். 41
1686 அரியநற் றவம்பல ஆற்றி இன்றுகா
றுரியதோர் என்பல தூனில் யாக்கையேன்
பரிவுறச் சுடுவதிற் பயனென் பாரிலிவ்
வொருவனை விடுகென உரைத்து வேண்டுவான். 42
1687 அண்டமேல் நின்றனை அவனி வானகம்
எண்டிசை எங்கணும் எளிது காண்டியல்
ஒண்டொடி யொருத்திஎன் னுயிர்கொண் டுற்றனள்
கண்டதுண் டோமதிக் கடவுள் நீயென்பான். 43
1688 யான்முதல் தோன்றினன் எனது பின்னவன்
கான்முளை யாகிய காம நீபல
பான்மையின் எனையடல் பழிய தேயலால்
மேன்மைய தாகுமோ விளம்பு வாயென்பான். 44
1689 பரேருள உனதுமெய் படுத்த கண்ணுதல்
ஞெரேலென உதவிய நிமலன் ஈண்டுளன்
ஒரேகணம் ஒடுங்குமுன் உயிரும் வாங்குமால்
பொரேலினி மதனநீ போகு போகென்பான். 45
1690 வானுழை திரிதரு மதியம் போக்கிய
தீநுழை புண்ணில்வேல் செறித்த தென்னவேள்
கோனுழை கின்றன அதனில் கூடளி
ஈநுழை கின்றன போலும் என்கின்றான். 46
1691 வன்றிறல் கொலைஞர்கள் மாலில் கூவிமான்
ஒன்றறக் கவர்தல்போல் உயிரென் காலினை
இன்றது போலவந் துள்புக் கீர்த்ததால்
தென்றலுக் கியான்செய்த தீதுண் டோவென்பான். 47
1692 வாகுலப் பரியதோர் மாதர் மாலெனும்
ஆகுலப் புணரியுள் அழுந்தி னோரையும்
வீகுலத் தொகையினுள் விட்டி சைத்திடுங்
கோகிலப் பறவையுங் கொல்லு மோவென்பான். 48
1693 நம்முரு வாயினன் நாகர் கோனெனாத்
தம்மன முன்னியே தளர்வு நீக்கில
கொம்மென அரற்றியுங் கூவ லின்றியும்
எம்முயிர் கொள்வன இருபுளா மென்பான். 49
1694 தண்டுதல் இன்றியே தானு நானுமாய்ப்
பண்டொரு வனிதை*யைப் பரிவிற் கூடினேம்
அண்டரும் அறிகுவர் அற்றை நாட்சினம்
உண்டுகொல் கதிரினம் உதிக்கி லானென்பான்.
(*பண்டொருவனிதை - பெண் வடிவங்கொண்ட அருணன்) 50
1695 கோழிலை மடற்பனைக் குடம்பை சேர்தரு
மாழையம் பசலைவாய் மகன்றி லென்பவை
காழக வரிசிலைக் காமன் கோடுபோல்
ஊழியும் வீந்திடா தொலிக்கு மோவென்பான். 51
1696 துன்னல ராகிய தொகையி னோர்தமைத்
தன்னிடை வைத்தெனைத் தளர்வு கண்டதால்
அன்னதும் அன்றியின் றாவி கொள்ளவும்
உன்னிய தோகடல் உறங்க லாதென்பான். 52
1697 இவ்வகை யாமினி யெல்லை முற்றவும்
வெவ்வழல் சுற்றிடும் விரக நோய்தெற
உய்வகை யொன்றிலன் உயங்கல் அல்லது
செய்வது பிறிதிலன் தெருளில் சிந்தையான். 53
1698 வேறு
ஆக்கம் இத்திறம் அடைவுழிப் பத்துநூ றடுத்த
நோக்க முற்றவன் சசிபொருட் டுற்றநோய் அதனை
நீக்கு கின்றனன் யானெனா நினைந்துளான் என்ன
மாக்கள் பூண்டதேர் வெய்யவன் குணதிசை வந்தான். 54
1699 வெம்பு தொல்லிருள் அவுணர்தங் குழுவினை வீட்டி
உம்பர் மேற்செலும் மதியெனும் மடங்கலை உருத்துப்
பைம்பொன் வெஞ்சுடர்க் கரங்களால் அதன்வலி படுக்குஞ்
சிம்பு ளாமெனத் தோன்றினன் செங்கதிர்க் கடவுள். 55
1700 தொடர்ந்த ஞாயிறு விடுத்திடுங் கதிர்களாந் தூசி
படர்ந்த காலையில் நிலவெனும் அனிகமுன் பட்ட
அடைந்த மீனெனுந் துணைவரும் பொன்றினர் அமர்செய்
துடைந்த மன்னரில் போயினன் உடுபதிக் கடவுள். 56
1701 விரிந்த பல்கதிர் அனிகத்தை வெய்யவன் விடுப்பத்
துரந்த சோமனை அவன்புறங் காட்டினன் தொலைந்து
கரந்து போதலும் பின்னுறச் சென்றில களத்தில
இரிந்து ளோரையுந் தொடர்வரோ சூரர்தம் இனத்தோர். 57
1702 திங்கள் தன்குறை உணர்த்தவாய் திறந்தெனச் செய்ய
பங்க யங்கள்போ தவிழ்ந்தன குமுதங்கள் பலவுந்
தங்கள் நாயகன் உடைந்தது நோக்கியே தபனற்
கங்கை கூப்பிய திறனென ஒடுங்கிய அன்றே. 58
1703 வனமெ ழுந்தன வனசமு மெழுந்தன வரியின்
இனமெ ழுந்தன மாக்களும் எழுந்தன எழில்சேர்
அனமெ ழுந்தன புள்ளெலாம் எழுந்தன அவற்றின்
மனமெ ழுந்தன எழுந்தன மக்களின் தொகையே. 59
1704 ஞாயி றுற்றவவ் வளவையின் நனந்தலை உலகில்
ஏயெ னச்செறி இருளெலாம் மறைந்திருந் தென்னச்
சேய ரிக்கணி தந்திடு தௌ¤வில்கா மத்து
மாயி ருட்டொகை யொடுங்கிய திந்திரன் மனத்துள். 60
1705 கையி கந்துபோய்த் தன்னுயிர் அலைத்தகா மத்தீப்
பைய விந்திடு பாந்தள்போல் தணிதலும் பதைப்புற்
றொய்யெ னக்கடி தெழுநதனன் நகைத்து¦ளி குற்றான்
ஐய கோவிது வருவதே எனக்கென அறைந்தான். 62
1706 தீமை யுள்ளன யாவையுந் தந்திடுஞ் சிறப்புந்
தோமில் செல்வமுங் கெடுக்கும்நல் லுணர்வினைத் தொலைக்கும்
ஏம நன்னெறி தடுத்திருள் உய்த்திடும் இதனால்
காம மன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில். 63
1707 என்ப துன்னியே இந்திரன் ஆண்டைவைப் பிகந்து
தன்பு றந்தனிற் கடவுளர் குழுவெலாஞ் சார
அன்பொ டேபடர்ந் தறுமுகன் அடிகளை அடைந்து
முன்பு தாழ்ந்தனன் உரோமமுஞ் செங்கையும் முகிழ்ப்ப. 63
1708 தொழுத கையினன் கோட்டிய மெய்யினன் துகிலத்
தெழுது பாவையில் ஆன்றமை புலத்தினன் இறைஞ்சிப்
புழுதி தோய்தரும் உறுப்பினன் சுருதியின் பொருண்மை
முழுதும் ஊறிய துதியின னாகிமுன் நின்றான். 64
1709 கரிய வன்றனைச் செய்யவன் கருணைசெய் தருளி
வருதி யென்றுகூய் மறைகளும் வரம்புகாண் கில்லா
அரன தாள்களை அருச்சனை புரிதுநாம் அதனுக்
குரிய வாயபல் பரணமுந் தருதியென் றுரைத்தான். 65
1710 உரைத்த வெல்லையில் தொழுதுபோய் உழையரில் பலரைக்
கரைத்து வீற்றுவீற் றேவியே கடிமலர்க் கண்ணி
திரைத்து கிற்படா நறும்புனல் அவிபுகை தீபம்
விரைத்த கந்தங்க ளேனவுந் தந்தனன் விரைவில். 66
1711 அவ்வக் காலையில் ஆறுமா முகனுடைய யடிகள்
தெய்வக் கம்மியற் கொண்டோரு சினகரம் இயற்றிச்
சைவத் தந்திர விதியுளி நாடியே தாதை
எவ்வெக் காலமும் நிலையதோர் உருவுசெய் திட்டான். 67
1712 தேவு சால்மணிப் பீடத்தில் ஈசனைச் சேர்த்தி
ஆவின் ஓரைந்தும் அமுதமும் வரிசையால் ஆட்டித்
தாவி லாததோர் வாலிதாம் அணித்துகில் சாத்திப்
பூவின் மாலிகை செய்யசாந் தத்தொடும் புனைந்தான். 68
1713 மருந்தி னாற்றவுஞ் சுவையன வாலுவ நூல்போய்த்
திருந்தி னார்களும் வியப்பன திறம்பல வாகிப்
பொருந்து கின்றன நிரல்அமை கருனையம் புழுக்கல்
சொரிந்து பொற்கலத் தருத்தினன் மந்திரத் தொடர்பால். 69
1714 கந்தம் வௌ¢ளிலை பூகநற் காயிவை கலந்து
தந்து பின்முறை அருத்தினன் புகைசுடர் தலையா
வந்த பான்மைக ளியாவையும் வரிசையா லுதவி
முந்து கைதொழூஉப் போற்றினன் மும்முறை வணங்கி. 70
1715 வேறு
இருவரும் உணர்கிலா திருந்த தாள்களைச்
சரவண மிசைவரு தனயன் பூசனை
புரிதலும் உமையொரு புடையிற் சேர்தர
அருள்விடை மீமிசை அண்ணல் தோன்றினான். 71
1716 கார்த்திகை காதலன் கறைமி டற்றுடை
மூர்த்திநல் லருள்செய முன்னி வந்தது
பார்த்தனன் எழுந்தனன் பணிந்து சென்னிமேற்
சேர்த்திய கரத்தொடு சென்று போற்றினான். 72
1717 செயிர்ப்பறு நந்திதன் திறத்தில் வீரரும்
வியர்ப்பினில் வந்தெழு வீர ருங்குழீஇக்
கயற்புரை கண்ணுமை கணவற் காணுறீஇ
மயிர்ப்புறம் பொடிப்புற வணங்கி ஏத்தினார். 73
1718 முண்டகன் முதல்வரும் முரண்கொள் பூதருங்
கண்டனர் அனையது கரங்கள் கூப்பியே
மண்டனின் மும்முறை வணங்கி வானகம்
எண்டிசை செவிடுற ஏத்தல் மேயினார். 74
1719 வேறு
ஆயது காலை தன்னில் அருவுரு வாகும் அண்ணல்
சேயினை நோக்கி உன்றன் வழிபடற் குவகை செய்தேம்
நீயிது கோடி யென்னா நிரந்தபல் புவன முற்றும்
ஏயென முடிவு செய்யும் படைக்கலத் திறையை ஈந்தான். 75
1720 மற்றியது நம்பால் தோன்றும் வான்படை மாயன் வேதாப்
பெற்றுள தன்றி யார்இப் பெரும்படை பரிக்கும் நீரார்
முற்றுயிர் உண்ணும் வெஞ்சூர் முரட்படை தொலைப்பான் ஈது
பற்றுதி மைந்த என்னாப் பராபரன் அருளிப் போனான். 76
1721 கருணைசெய் பரமன் சேணிற் கரந்தனன் போன காலை
அருள்பெறு நெடுவேல் அண்ணல் அன்னவற் போற்றிப் பின்னை
விரவிய இலக்கத் தொன்பான் வீரரும் அயனும் ஏனைச்
சுரர்களும் வழுத்திச் செல்லத் தூயதன் தேரிற் புக்கான். 77
1722 சில்லியந் தேர்மேற் செவ்வேள் சேர்தலும் உலவை வேந்தன்
வல்லைதன் தமர்க ளோடும் வாம்பரி கடாவி உய்ப்ப
எல்லையிற் பரிதி தோன்ற எழுதரும் உயிர்க ளேபோல்
ஒல்லென எழுந்த தம்மா உருகெழு பூத வௌ¢ளம். 78
1723 சாரத நீத்த மெல்லாந் தரையின்நின் றெழுந்து சூழ்ந்து
போரணி யணிந்து போந்த புடைதனில் இலக்கத் தொன்பான்
வீரருஞ் சுரர்கள் யாரும் மேவினர் வந்தார் வான்றோய
தேர்மிசை அவர்க்கு நாப்பட் சென்றன் குமரச் செம்மல். 79
1724 மண்ணியங் கரையிற் றென்பால் வகுத்தசேய் ஞல்லூர் நீங்கி
எண்ணிய வுதவும்பொன்னியிகந் திடைமருதி னோடு
தண்ணியல் மஞ்ஞை யாடுந் தண்டுறை பறிய லூருங்
கண்ணுதல் இறைவன் தானம் ஏனவுங் கண்டு போனான். 80
1725 எழில்வளஞ் சுரக்குந் தொல்லை இலஞ்சியங் கானம் நோக்கி
மழவிடை இறைவன் பொற்றாள் வணங்கியே மலர்மென் பாவை
முழுதுள திருவும் என்றும் முடிவிம்மங் கலமும் எய்த
விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன்திரு வாரூர் கண்டான். 81

ஆகத் திருவிருத்தம் - 1725


25. சுரம்புகு படலம் (1726 - 1765)

1726 புற்றிடங் கொண்ட புத்தேள் புரந்தரற் கருள்செய் திட்ட
நற்றலந் தன்னைச் சேர்ந்த நகரமுள் ளனவுங் காணூஉக்
கொற்றவெங் கதிர்வேல் அண்ணல் கொல்லுலை அழலிற் செக்கர்
பற்றிய இரும்பு போலும் பாலையங் கானத் துற்றான். 1
1727 வேறு
ஏழு நேமியும் பெரும்புறக் கடலுமெண் டிசையுஞ்
சூழ அன்னதால் அழிவின்றித் தொன்மைபோ லாகி
ஆழி யுள்ளுறும் வடவையின் அவற்றினைப் பருகி
ஊழி தன்னினும் இருப்பதவ் வுயர்பெரும் பாலை. 2
1728 அண்டர் நாயகன் உலகடும் மகந்தனக் காகும்
பண்ட மேசெறி பல்வளம் ஆருயிர் பசுக்கள்
மண்டு நேமிநெய் நிலங்கல மாயுற மலர்தீக்
குண்ட மாயது கள்ளிசூழ் கொடியவெம் பாலை. 3
1729 வண்ண ஒண்சுதை மெய்யுடை வரநதி கேள்வன்
நண்ணு தொல்லுல காகியே நரலையுற் றென்னத்
தண்ணி லாவெழு நாத்தலை இரண்டுடைத் தழலின்
பண்ண வற்குல காயது முதுபெரும் பாலை. 4
1730 உடைய தொல்குலக் கேண்மையால் அவ்வனத் துறையுங்
கொடிய வன்னிபாற் சென்றதோ வெப்பமேல் கொண்டு
நடுந டுங்கிவெம் புகையுமிழ்ந் தரற்றிநா வுலர்ந்து
கடல்ப டிந்துநீர் பருகுமால் வடவையங் கனலே. 5
1731 கற்றை யங்கதிர்ப் பரிதியும் மதியுமக் கானஞ்
சுற்றி யேகுவ தல்லது மிசைபுகார் சுரரும்
மற்று ளார்களும் அனையரே எழிலியும் மருத்தும்
எற்றை வைகலும் அதன்புடை போகவும் இசையா. 6
1732 சேனம் வெம்பணி ஒண்புறா விரலைமான் செந்நாய்
ஆனை யாதிகள் அவ்வனத்திருக்கவும் ஆவி
போன தில்லையால் அங்கியிற் றோங்கிய பொருள்கள்
மேனி கன்றுவ தன்றியே விளியுமோ அதனால். 7
1733 எண்ணி னுஞ்சுடும் பாலையங் கானிடை எழுந்த
கண்ண கன்புகை அழல்படு கின்றகாட் சியவே
விண்ணின் நீலமுஞ் செக்கரும் அவற்றினால் வெடித்த
புண்ணும் மொக்குளுங் கதிர்களும் உடுக்களும் போலாம். 8
1734 வேக வெய்யவன் புடையுறா தவ்வன மிசையே
போக வோரிறை எழுந்தழல் சுட்டது போலும்
ஏகு தேரொரு காலிலா திழந்ததால் இருகால்
பாகி ழந்தனன் அவனன்கதிர் அங்கிபட் டனவே. 9
1735 தங்கள் தொல்பவம் அகன்றிலா விண்ணவர் தம்மைத்
துங்க முத்தியின் பொருட்டினால் அடைபவர் தொகைபோல்
அங்கம் நொந்துதம் போலவே வெப்பமுற் றயருங்
கங்கம் நாடியே நீழலும் கடைவன கலைகள். 10
1736 கோல வெங்கதிர் மதியிவர் வைகலுங் கொடிய
பாலை வெஞ்சுரத் தாரழல் வெம்மைபட் டனரோ
காலை தன்னினும் மாலையம் பொழுதினுங் கங்குல்
வேலை தன்னிலும் பிறவினும் வேலைநீர் படிவார். 11
1737 தொடரும் வானவர் யாவரும் ஐயைதாள் தொழுவார்
கொடிய பாலைமுன் னுணர்கிலா தணுகினர் கொல்லோ
அடிசி வந்தகம் வெம்பியே அமுதமுண் டதற்காப்
படியின் மேலென்றுஞ் செல்கிலர் விண்மிசைப் படர்வார். 12
1738 ¢ளி தாகிய தலைமையிற் பிறந்துளோர் உலகம்
எள்ளும் நல்குர வெய்தலால் இழிந்தவர் கண்ணுங்
கொள்ளு மாரொரு பயன்குறித் தேகல் போற்கொடிய
கள்ளி தன்புடை நீழலுக் கொதுங்குவ கரிகள். 13
1739 இரவி கம்மியன் சுட்டுறு கோல்கதிர் எரிதீ
மருவு செந்தரை பொறிமணி கொள்கலம் வறுங்கான்
கரிக ளேகரி காற்குழல் துதிக்கைநீர் கானல்
புரித ரும்பணி வெந்திடும் பணிக்குலம் போலும். 14
1740 ஆன்ற வான்புவி நதிப்புனல் பாதலம் அதன்கண்
தோன்று நீத்தநீர் யாவையும் ஒருங்குறத் துற்றுச்
சான்ற பாலையஞ் செந்தழல் அப்புனல் தன்னைக்
கான்ற வாறெனக் கிளர்வன அந்நிலக் கானல். 15
1741 விஞ்சு கானல்வெண் டேரினை யாறென விரும்பி
நெஞ்சில் உன்னியே இரலைமான் மடப்பிடி நெடுந்தாட்
குஞ்ச ரந்திரிந் துலைவன கொடியவெம் பணிகால்
நஞ்சு தன்னையும் அருந்துவ ஞமலிநீர் நசையால். 16
1742 செய்ய மண்மகள் உலப்புறா உந்தியந் தீயாய்
வெய்ய வன்செலற் கரியவப் பாலைமே வுதலான்
மொயயில் வெம்பணி புகையழல் உமிழ்வன முரணும்
மையு றுங்கொடு நஞ்சொடு கான்றசெம் மணிகள். 17
1743 முளையின் அஞ்சொரி முத்தமும் முந்துசெம் பரலும்
அளவில் பாந்தளின் மணிகளும் ஈண்டியே அமர்தல்
விளிவில் அவ்வனத் தீச்சுடத் தனதுமெய் வெடித்தே
உளையும் மண்மகள் மொக்குளுற் றிடுதிறன் ஒக்கும். 18
1744 கள்ளி பட்டன பாலையுந் தீந்தன கரிந்து
முள்ளி பட்டன எரிந்தன குராமரம் முளிந்து
கொள்ளி பட்டன காரகில் அன்னதாற் கொடுந்தீப்
புள்ளி பட்டது போன்றது பாலையம் புவியே. 19
1745 இன்ன தாகிய பாலையஞ் சுரத்திடை இறைவன்
தன்ன தாகிய தானைக ளொடுந்தலைப் படலும்
மின்னு மாமுகில் பொழிந்தபின் தண்ணளி மிக்கு
மன்னு கின்றபூங் குறிஞ்சிபோ லாயதவ் வனமே. 20
1746 ஆற்ற ருந்திறல் அங்கிதன் அரசியல் முறையை
மாற்றி எம்பிரான் வருணற்கு வழங்கினா னென்ன
ஏற்ற மாகிய வெம்மைபோய் நீங்கியே எவரும்
போற்று நீரொடு தண்ணளி பெற்றதப் புவியே. 21
1747 காதல் நீங்கலா தலமரும் ஆருயிர்க் கரணம்
ஆதி ஈசன தருளினால் அவனதா கியபோல்
கூது நீரிலா தழல்படு வெய்யகான் இளையோன்
போத லாற்குளிர் கொண்டது நறுமலர்ப் பொழிலாய். 22
1748 புறநெ றிக்கணே வீழ்ந்துளோர் சிவனருள் புகுங்கால்
அறிவும் ஆற்றலுங் குறிகளும் வேறுபட் டனபோல்
வறிய செந்தழல் வெவ்வனம் வேலவன் வரலால்
நறிய தண்மலர்ச் சோலையாய் உவகைநல் கியதே. 23
1749 வேறு
நீரறு முரம்பின் றன்மை நீங்குமச் சுரத்தின் தன்பால்
ஈரறு புயத்தன் செல்ல எழில்கெழு பரங்குன் றத்தில்
பாரறு தவம்பூண் டுள்ள பராசரன் சிறார்க ளாய
ஓரறு வகைமை யோரும் ஓதியால் அதனைக் கண்டார். 24
1750 தத்தனே அனந்தன் நந்தி சதுர்முகன் பரிதிப் பாணி
மெய்த்தவ மாலி என்ன மேவுமூ விருவர் தாமும்
அத்தன தருளை முன்னி அடுக்கலின் இருக்கை நீங்கி
உத்தர நடவை யெய்தி ஒய்யெனப் படர்த லுற்றார். 25
1751 ஆர்வல ராகும் மைந்தர் அறுவரும் அளகை நேடிப்
பார்¢வல்வந் தணையு மாபோல் பாலையென் றுரைக்கு மெல்லை
நேர்வரு கின்ற காலை நெடும்படை நீத்தஞ் சூழச்
சூர்வினை முடிப்பான் செல்லுந் தோன்றல்வந் தணிய னானான். 26
1752 அணிமையிற் சேயோன் நண்ண ஆறுமா முகமும் பன்னீர்
இணைதவிர் புயமுங் கையும் ஏந்தெழிற் படையின் சீரும்
மணியணி மார்புஞ் செங்கேழ் வான்றுகின் மருங்கும் பாதத்
துணையுமத் துணையிற் கண்டு தொழுதுகண் களிப்புக் கொண்டார். 27
1753 மூவிரு திறத்தி னோரும் முற்றொருங் குணர்ந்தள்ளல்
பூவடி வணங்கித் தேனீப் புதுநறா அருந்தி யார்த்து
மேவருந் தன்மைத் தென்ன வியப்பொடு வழுத்தி நின்று
தேவர்கள் தேவ எம்பால் திருவருள் செய்தி யென்றார். 28
1754 என்றிவை இருமூ வோரும் இசைத்துழி உயிர்கட் கெல்லாம்
ஒன்றிய உயிரு மாகி உணர்வுமாய் இருந்த மூர்த்தி
தன்றிரு மலர்த்தாள் முன்னந் தலையளி யோடு தாழ்ந்து
நின்றுகை தொதிட் டன்னோர் நிலைமையை மகவான் கூறும். 29
1755 மறுவறு பராச ரன்றன் மதலைக ளாகு மின்னோர்
அறுவருஞ் சிறாரே யாகி ஆடுறு செவ்வி தன்னில்
நிறைதரு சரவ ணத்து நெடுந்தடம் புனலிற் பாய்ந்து
முறைமுறை புக்கு மூழ்கி முகேரென அலைக்க லுற்றார். 30
1756 உலைத்தலை உணர்ச்சி கொள்ள உள்ளுயிர் திரியுமாபோல்
நிலைத்தலை யின்றி யார்க்கும் நீந்தல்செய் குண்டு நீத்தம்
அலைத்தலை யடையும் எல்லை ஆயிடை வதிந்த மீன்கள்
தலைத்தலை யிரிய இன்னோர் தன்மையங் கதனைக் கண்டார். 31
1757 அங்கது தெரிந்து நின்றோர் ஆண்டுறு மீன்கள் பற்றித்
துங்கம துடைய கோட்டின் சூழலுய்த் துலவு மெல்லைச்
செங்கதி ருச்சி வேலைச் செய்கடன் நிரப்ப உன்னிப்
பங்கமில் நோன்மை பூண்ட பராசரன் அங்கண் வந்தான். 32
1758 வள்ளுறை கொண்ட தெய்வ வான்சர வணத்து வந்தோன்
பிள்ளைக ளாகும் இன்னோர் பிடித்தபுன் றொழிலை நோக்கித்
தள்ளருஞ் சினமேல் கொண்டு தனயர்காள் நீவிர் ஈண்டே
துள்ளுறு மீன மாகிச் சுலவுதி ரென்று சொற்றான். 33
1759 அவ்வுரை இறுக்கு முன்னர் அறுவரும் மேனாள் ஆற்றும்
வெவ்வினை யூழின் பாலால் மீனுரு வாகி அஞ்சி
எவ்வமி தகலு கின்ற தெப்கல் உரைத்தி யென்னச்
செவ்விதின் உணர்ந்து மேலைத் திருமனி புகலல் உற்றான். 34
1760 இத்தடந் தன்னில் மேனாள் இராறுதோ ளுடைய அண்ணல்
அத்தன தருளால் வைக அனையனை யெடுக்கும் அம்மை
மெய்த்தனம் உகுக்குந் தீம்பால் வௌ¢ளமாம் அதனை நீவிர்
துய்த்திடும் எல்லை தன்னில் தொல்லுரு வாதி ரென்றான். 35
1761 என்றிவை முனிவன் கூறி இரும்பகற் கடனை யாற்றிச்
சென்றனன் அதற்பின் மீனின் திருவுரு அமைந்த இன்னோர்
அன்றுதொட் டளப்பில் காலம் அலமரும் உணர்ச்சி யெய்தி
மன்றலஞ் சரவ ணத்து மாண்பெருந் தடாகத் துற்றார். 36
1762 ஐயநீ யனைய பொய்கை அமர்தலும் அவ்வை கண்டாங்
கொய்யென எடுப்பக் கொங்கை உகளநின் றிழிந்த தீம்பால்
துய்யதோர் நீத்த மாகித் துறுமலும் அதனைத் துய்த்து
மையல்நீங் குற்றுத் தொல்லை வாலிய வடிவம் பெற்றார். 37
1763 தொல்லுரு வடைந்த இன்னோர் தூமதி வேணி யண்ணல்
நல்லருள் அதனால் வந்து நவையகல் பரங்குன் றத்தின்
எல்லையில் விரதம் பூண்டாங் கிருந்தனர் எந்தை ஈண்டுச்
செல்லுவ துணர்ந்து போந்தார் என்றனன் தேவர் செம்மல். 38
1764 தம்மக வுரைக்குங் கூற்றந் தாதையர் வினவு மாபோல்
அம்மக பதிசொற் கேளா அருள்செய்து பராச ரன்றன்
செம்மல்கள் தம்மை நோக்கிச் செயிரறு குணத்து நீவிர்
எம்மொடு செல்வீ ரென்றான் யாவையும் உணர்ந்த பெம்மான். 39
1765 பராசரன் மைந்த ரன்ன பான்மையை வினவிச் செவ்வேற்
கராசரண் அடைந்தேம் என்று கட்டுரைத் திறைஞ்சிச் செல்லச்
சராசரம் யாவுந் தந்த சண்முகன் தழல்கட் கெல்லாம்
இராசர்தந் தன்மை எய்தும் இருஞ்சுரங் கடந்து போனான். 40

ஆகத் திருவிருத்தம் - 1765


26. திருச்செந்திப் படலம் (1766 - 1783)

1766 சுரமது கடந்து நீங்கிச் சோதிவே லுடைய வள்ளல்
விரிவுனல் சடலத் தண்ணல் மேவுசெங் குன்றூர் நோக்கிப்
பருமணி வயிர முத்தம் பலவளம் பிறவும் ஆழித்
திரையெறி யலைவா யாகுஞ் செந்திமா நகரம் புக்கான். 1
1767 அறுமுகன் அங்க ணேகி அகிலகம் மியனை நோக்கி
இறையிலோர் சினக ரத்தை இயற்றுதி ஈண்டை என்னத்
திறனுணர் புனைவர் செம்மல் சிந்தையின் நாடித் தேவர்
உறைதிரு நகரம் வெ•க ஒரதிருக் கோயில் செய்தான். 2
1768 பொன்னுறும் இரதம் நீங்கிப் புறனெலாந் தானை நண்ண
அந்நகர் அதனு ளேகி அரும்பெருந் துணைவர் பூதர்
மன்னவர் அயன்மா லாதி வானவர் யாரும் போற்ற
மின்னுபொற் பீடத் தையன் வீற்றிருந் தருளி னானே. 3
1769 வேறு
பானிமிர் மென்குரற் பாற்படு நல்யாழ்
கானமி சைத்தனர் கந்தரு வத்தோர்
ஆனபல் சட்டுவம் அங்கைதொ றேந்தி
வானமிர் தைச்செவி வாக்குறு மாபோல். 4
1770 சுருதியெ லாமுணர் தூயவன் வானோர்
புரவலன் மாமுனி புங்கவர் யாரும்
மருமலர் மாரி வழுத்தினர் வீசி
இருபுடை தன்னினும் எய்தினர் ஈண்டி. 5
1771 வாலிய தூயொளி வானதி யாவும்
பாலகன் மெய்யணி பார்த்தனர் ஆடி
ஏலுறு பாங்கரின் ஈண்டிய வாபோல்
காலினர் சாமரை கைக்கொ டசைத்தார். 6
1772 ஒண்ணிழல் மாமதி யோரிரு வடிவாய்
அண்ணல் முகத்தெழி லார்ந்திட நண்ணி
விண்ணிடை நின்றென வெங்கனல் வருணன்
தண்ணிழல் வெண்குடை தாங்கினர் நின்றார். 7
1773 கட்டழல் கான்றிடு காமரு நாகம்
எட்டும லாதன யாவையும் ஈண்டி
உட்டௌ¤ வாற்பணி உற்றென ஆல
வட்டம சைத்தனர் வானவர் பல்லோர். 8
1774 வானுயர் தோள்விறல் வாகெனும் அண்ணல்
தானுடை வாள்கொடு சார்ந்தபயல் நிற்ப
ஏனைய தம்பியர் எண்மர் இலக்கர்
ஆனவர் போற்றி அகன்கடை நின்றார். 9
1775 வேறு
பொருந்தி இன்னவர் புறத்துற அங்கண்
இருந்த ஞானமுதல் எல்லையில் காலம்
வருந்து கின்றமக வான்முகம் நோக்கித்
தெரிந்தி டாதவரின் இன்னன செப்பும். 10
1776 துறந்து நீதியமர் சூர்முத லானோர்
பிறந்த வாறுமவர் பேணிய நோன்பும்
இறந்த செய்யவரம் எய்திய வாறுஞ்
சிறந்து பின்னரசு செய்திடு மாறும். 1
1777 மற்ற வெய்யவர்தம் மாயமும் முற்கொள்
வெற்றி யும்வலியும் மேன்மையும் நும்பால்
இற்றை நாள்வரை இயற்றிய துன்பும்
முற்று மொன்றற் மொழிந்திடு கென்றான். 12
1778 கோக்கு மாரன்இவை கூற இசைந்தே
மீக்கொள் பொன்னுலக வேந்தயல் நின்ற
வாக்கின் வல்லகுர வன்றனை அன்பால்
நோக்கி நீயிவை நுவன்றருள் கென்றான். 13
1779 வச்சி ரங்கொள்கரன் மற்றது செப்ப
அச்செ னக்குரவன் அன்ன திசைந்தே
செச்சை மொய்ம்புடைய சேயிரு பொற்றான்
உச்சி கொண்டுதொழு தின்ன துரைப்பான். 14
1780 அறிதி எப்பொருளும் ஆவிக டோறுஞ்
செறிதி எங்கள்துயர் சிந்துதல் முன்னிக்
குறிய சேயுருவு கொண்டனை யார்க்கும்
இறைவ நின்செயலை யாருணர் கிற்பார். 15
1781 எல்லை யில்புவனம் யாவையும் யாண்டும்
ஒல்லு மூவரும் உயிர்தொகை யாவுந்
தொல்லை மேனிகொடு தோன்றினை யால்நீ
வல்ல மாயவியல் மற்றெவர் தேர்வார். 16
1782 வெய்யர் தன்மையை வினாவிய தன்மை
ஐய அன்னதை யறிந்திட அன்றே
கைய ரேந்துயர் களைந்துள மீதில்
செய்ய இன்புதவு சீரரு ளாமால். 17
1783 ஆகையால் அவுணர் தன்மைக ளெல்லாம்
போகு மெல்லைபுகல் கின்றனன் என்னா
வாகை சேர்குமர வள்ளலை நோக்கி
ஓகை யோடரசன் ஓதிடு கின்றான். 18


== பாகம் 4 ==

2. அசுர காண்டம்
1. மாயைப் படலம் (1-86)

1 ஊரி லான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும்
பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோன்
சாரி லான்வரல் போக்கிலன் மேலிலான் தனக்கு
நேரி லான்உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான். 1
2 வீறு காசிபன் சிறார்களாய் மேவிய அறுபான்
ஆறு கோடிய தாகிய அவுணருக் கரசன்
மாறில் மங்கல கேசியாம் அரக்கியை மணந்து
பேற தாகவே சுரசையென் றொருமகட் பெற்றான். 2
3 தூய அம்மகள் வளர்ந்தபின் புகன்எனுந் தொல்லோன்
தீய மாயையின் கல்விகள் யாவையுந் தெருட்டி
ஆய விஞ்சையின் வல்லபம் நோக்கியே அவட்கு
மாயை என்றுபேர் கூறினன் மனத்திவை மதிப்பான். 3
4 இன்ன லெய்திய அவுணர்கள் சிறுமையும் இமையோர்
மன்ன னாதியர் பெருமையும் வானநாட் டுறைவோர்
நன்ன லந்தொலைந் தசுரரால் மலிந்திட நந்தி
சொன்ன வாய்மையுங் கருதினன் புகரெனுந் தூயோன். 4
5 கருதி இன்னண மேல்வருந் தன்மையுங் கண்டு
குருதி தோயும்வேல் அவுணர்கோன் பயந்தகோற் றொடியை
வருதி என்றுகூற் வரம்பறு பேரருள் வழங்கி
ஒருதி றந்தனைக் கேளெனத் தேசிகன் உரைப்பான். 5
6 வனச மங்கைதன் கணவனால் வாசவன் தன்னால்
முனிவர் தேவரால் அளப்பிலா அவுணர்கள் முடிந்தார்
அனையர் மேன்மையை யாவரும் உணர்குவர் அதனால்
உனது தந்தையும் வலியிழந் தேயொடுங் குற்றான். 6
7 மின்பொ ருட்டினால் கேதகை மலர்ந்திடும் விளங்கும்
என்பொ ருட்டினால் மாமழை சொரிந்திடும் ஈட்டும்
பொன்பொ ருட்டினால் யாவுமுண் டாமதுபோல
உன்பொ ருட்டினால் அவுணர்க்கு மேன்மைய துளதாம். 7
8 வாச மாமலர் மடந்தையும் வந்தடி வணங்கப்
பேசொ ணாததோர் பேரழ குருக்கொடு பெயர்ந்து
காசி பன்றனை அடைந்துநின் வல்லபங் காட்டி
ஆசை பூட்டியே அவனொடும் புணருதி அல்லில். 8
9 அல்லி டைப்புணர்ந் தசுரர்கள் தம்மையுண் டாக்கி
மெல்ல அங்கவர் தங்கட்கு நாமமும் விளம்பி
எல்லை யில்வளம் பெற்றிட அவுணருக் கியலுந்
தொல்லை வேள்வியும் விரதமும் உணர்த்துதி தோகாய். 9
10 இன்ன தன்மைகள் முடிந்தபின் நின்சிறார் எவரும்
நன்ன லந்தனை அடையவும் நண்ணல ரெல்லாம்
பன்ன ரும்பழி மூழ்கவும் அருந்தவம் பயில
அன்னை மீளுதி என்றனன் புகரெனும் ஆசான். 10
11 குரவன் வாய்மையை வினவியே கோதில்சீர் அவுணர்
மரபு மேம்படு தன்மையான் மற்றிவை யெல்லாம்
அருளு கின்றனை ஆதலால் இப்பணி யடியேன்
புரிகு வேனென அவனடி வணங்கியே போனாள். 11
12 மயிலை அன்னவள் அவுணர்தம் மன்னற்கும் இனைய
செயலை யோதியே அவன்விடை யுங்கொடு சென்று
கயிலை என்னநீ றாடியே காசிபன் இருந்து
பயிலும் நோன்புடை எல்லையை நாடியே படர்ந்தாள். 12
13 திருவும் மாரவேள் இரதிவேள் இரதியுந் திலோத்தமை யென்ன
மருவு தையலும் மோகினி யென்பதோர் மாதும்
ஒருத னித்திரு வடிவுகொண் டாலென உலகில்
பொருவில் மாயவன் பேரழ குருக்கொடு போனாள். 13
14 மண்ணுற் றோர்களும் மாதிரத் தோர்களும் மதிதோய்
விண்ணுற் றோர்களும் அன்னவள் எழில்நலம் விரைவில்
கண்ணுற் றோர்கிலர் அணுகினர் காமவேள் கணையின்
புண்ணுற் றோர்விளக் கழலுறு பறவையிற் புலர்ந்தார். 14
15 மதியும் ஞாயிறுஞ் சூழ்தரு மேருவின் வடபால்
விதிம கன்தவம் புரிதரும் வியனிலை மருங்கின்
அதிர்சி லம்பொடு மேகலை புலம்புற அனையாள்
திதிகொல் என்றெலாத் தேவரும் ஐயுறச் சென்றாள். 15
16 சென்ற மாயைஅக் காசிபன் இருக்கையில் திருவாழ்
மன்றல் லாவியுந் தடங்களுஞ் சோலையும் மணிசெய்
குன்று மாமலர்ப் பள்ளியும் மண்டபக் குழாமுந்
தன்றன் ஆணையால் துண்ணெனச் சூழ்தரச் சமைத்தாள். 16
17 இனைத்தெ லாமவண் வருதலும் எந்தைதன் னடியை
மனத்தி னிற்கொடு பொறியினை உரத்தினால் வாட்டித்
தனித்து நோற்றிடுங் காசிபன் புகுந்தஅத் தகைமை
அனைத்தும் நோக்கியீ தென்கொலென் றதிசய மடைந்தான். 17
18 முற்று மாங்கவை ஆசையின் நெடிதுபன் முறையால்
உற்று நாடியே மாயைதன் செயலென உணரான்
இற்றெ லாமிவண் இயற்றினர் யாரென எண்ணிச்
சுற்று நோக்கினன் யாரையுங் காண்கிலன் தூயோன். 18
19 வேறு
மெய்த்தவ வுணர்ச்சியை விடுத்து மேலையோன்
அத்தன தருளினால் அணங்கு மாயையால்
வைத்தன கண்ணுறா மனங்கொள் காதலாற்
சித்திர மெனவெரீஇ யினைய செப்புவான். 19
20 வானநா டிழிந்ததோ மகத்தின் வேந்துறை
தானநா டிழிந்ததோ தனதன் ஆதியோர்
ஏனைநா டிழிந்ததோ இதுவன் றேல்இவை
ஆனவா றுணர்கிலேன் அழுங்கு சிந்தையேன். 20
21 ஆரணன் செய்கையோ அகில முண்டுமிழ்
நாரணன் செய்கையோ அவர்க்கு நாடொணாப்
பூரணன் செய்கையோ பிறர்பு ரிந்ததோ
காரணந் தேர்கிலேன் கவலும் நெஞ்சினேன். 21
22 புன்னெறிக் கானிடைப் புகுந்த இத்திரு
நன்னெறிக் கேதுவோ நலந்த விர்ந்திடுந்
துன்னெறிக் கேதுவோ தொல்லை ஞாலமேல்
எந்நெறிக் கேதுவென் றிதுவுந் தேர்கிலேன். 22
23 என்றிவை சொற்றிவண் யாவ தாயினும்
நன்றதன் இயற்கையும் நமக்கு முன்னரே
ஒன்றறத் தெரிவுறும் உணர்ச்சி இங்ஙனஞ்
சென்றது பழுதெனச் சிந்தித் தானரோ. 23
24 தெற்றெனத் தன்மனந் தேற்றித் தொன்மைபோல்
நற்றவம் இயற்றுவான் நணுகும் வேலையில்
மற்றது தெரிந்திடு மாயை தூமணிப்
பொற்றையில் தமியளாய்ப் பொலிந்து தோன்றினாள். 24
25 தோன்றினள் நிற்றலுந் தொல்லை நான்முகற்
கான்றதொர் காதலன் அவளை நோக்கினான்
வான்றிகழ் கற்பக வல்லி செய்தவத்
தீன்றதொர் கொடிஇவண் எய்திற் றோவென்றான். 25
26 நாற்றலை யான்மகன் நம்முன் இக்கொடி
தோற்றிய தற்புதச் சூழ்ச்சிக் கேதுவென்
றாற்றுறு தவத்றின் அகற்றி யாயிடை
வீற்றிருந் திடுவது விடுத்துப் போயினான். 26
27 கண்ணகல் வரைமிசைக் கடிது போயுறீஇ
அண்ணிய னாதலும் அரிவை யாய்உறப்
பெண்ணுரு வேகொல்இப் பெற்றித் தாலென
எண்ணினன் மையலுக் கெல்லை காண்கிலான். 27
28 புண்டரி கத்திகொல் பொன்னம் பாவைகொல்
அண்டர்தம் அணங்குகொல் என்னின் அன்னரைக்
கண்டறி வேன்எனைக் காதல் பூட்டிய
ஒண்டொடி இனையள்என் றுணர்கி லேனரோ. 28
29 சேயிருங் கமலமேற் செம்மல் செய்கையால்
ஆயவள் என்னில்இவ் வழகு பெற்றிடான்
கூயது தேறினன் எல்லை இல்லதோர்
மாயையே பெண்ணென வந்த வாறென்பான். 29
30 புகன்றிவை பற்பல பொருவில் நான்முகன்
மகன்றன தருந்தவ வலியும் போதமும்
அகன்றனன் புணர்ச்சிவேட் டழுங்கி நைவதோர்
மகன்றிலின் பரிசென வருத்த மெய்தினான். 30
31 உண்ணிகழ் ஊன்பொருட் டுயிர்கொல் வேட்டுவர்
கண்ணியுட் பட்டதோர் கலையின் மாழ்குவான்
பெண்ணர சாயவிப் பேதைக் கென்கொலோ
எண்ணமென் றிடருழந் திரங்கி ஏங்கினான். 31
32 அதுபொழு தவுணரை அளிக்க வந்திடுந்
திதிநிகர் மடமகள் சிறந்த கண்களால்
பொதுவியல் நோக்கொடு புணர்ச்சி நோக்கினைக்
கதுமெனக் காட்டினள் முனிவன் காணுற. 32
33 கண்டனன் முனிவரன் கலங்கி னான்பொதுக்
கொண்டதோர் நோக்கியல் குறித்துக் கூடுதல்
எண்டரு நோக்கினால் இவளை யெய்துமா
றுண்டென நினைந்தனன் உவப்பின் உம்பரான். 33
34 பெருந்துயர் உதவுவெம் பிணியுந் தீர்ப்பதேர்
மருந்துமற் றாதலும் மையல் மேதகும்
அருந்தவ முனிவரன் அனைய மாதுதன்
திருந்திய நோக்கியல் தௌ¤ந்து செப்புவான். 34
35 கற்பனை முதலிய கடந்த கண்ணுதற்
சிற்பரன் யாவையுஞ் சிதைய ஈறுசெய்
அற்புத மும்மவன் அருளும் போன்றதால்
பொற்புறு கின்றஇப் பூவை நாட்டமே. 35
36 மாயையுங் கொலையுமே மருவி வைகலும்
ஆயதோர் உலகினை அளிக்கும் நீர்மையாற்
பாயிருந் திரைக்கடல் நடுவட் பள்ளிகொள்
தூயனை நிகர்த்ததித் தொகை நோக்கமே. 36
37 இயலிருள் மேனியால் இடியின் ஆர்ப்பினால்
வியனுயிர் முழுவதும் வெருவச் செய்துடன்
பயனுறு தீம்புனல் பரிவின் ஈதரு
புயலையும் நிகர்த்தன பூவை பார்வையே. 37
38 என்பன பலபல எண்ணி அன்னவள்
தன்படி வத்துரத் தகைமை காணுறீஇ
அன்பினில் வியந்துநின் றழுங்கு நெஞ்சொடு
நன்பெரு நயப்பினால் நவிறல் மேயினான். 38
39 வேறு
வானுறு புயலின் தோற்றம் வரம்பில்சீர்க் கங்குல் வண்ணம்
ஏனைய கருமை யெல்லாம் இலக்கணத் தொருங்கே ஈண்டி
மீனுறழ் தடங்க ணாள்பால் மேவிய என்ப தல்லால்
நானமார் கூந்தற் கம்மா நாம்புகல் உவமை யாதோ. 39
40 கோட்டுடைக் கு£வித் திங்கள் குனிசிலை இரண்டு மானின்
சூட்டுடை நுதற்கொவ் வாது தொலைந்துபோய்¢ தொல்லை வான
நாட்டிடைக் கரந்துந் தோன்ற நணுகியுந் திரியு மென்னின்
மீட்டிதற் குரைக்க லாகும் உவமைகள் வேறு முண்டோ. 40
41 அருவத்தில் திகழுங் காமன் ஆடலஞ் சிலையும் நெற்றி
உருவத்துக் குடைந்து வான்புக் கொதுங்கிய மகவான் வில்லும்
மருவத்தந் துரைத்தும் என்னின் மற்றவை யிரண்டும் மாதின்
புருவத்தைப் போலா தம்மின் மீமிசைப் பொருந்து மன்றே. 41
42 வண்ணமா வடுக்கோல் நீலம் வாளயில் கயல்சேல் என்றே
எண்ணின அவற்றி லொன்றும் யாவது மியல்புற் றன்றாற்
கண்ணிணைக் கிணையே தென்னிற் காமர்பாற் கடலுள் எங்கோன்
உண்ணிய எழுநஞ் சென்னில் ஒருசிறி தொப்ப தம்மா. 42
43 எள்ளென்றும் ஒத்தியென்றும் ஏர்கொள்சம் பகப்போ தென்றுந்
தள்ளருங் குமிழ தென்றுஞ் சாற்றினர் அவைகள் நாடில்
தௌ¢ளிறு மன்று வேறு செப்பவோர் பொருளு மில்லை
உள்ளதொன் றுரைக்க வேண்டுந் துண்டத்துக் குவமை தேரின். 43
44 கெண்டையந் தடங்கட் பாவை கேழ்கிளர் இதழ்க்கொப் புன்னில்
தொண்டையங் கனியுண் டென்று சொல்வனேல் அதுவுந் துப்பால்
உண்டிடும் விருப்பி னோருக் குலப்புறா அமிர்தம் நல்கிக்
கொண்டிருந் திடினே ஒப்பாம் இல்லையேற் கூடா தன்றே. 44
45 முகையுறு தளவும் புள்ளின் முருந்தமுங் குருந்து முத்தும்
அகையுறு முடுவுஞ் சாற்றின் அணியெயி றதற்கொவ் வாவால்
நகையது தெரிந்தோர் வெ·க நன்னலம் புரியும் நீரால்
நிகர்பிறி தில்லை திங்கள் நிலாவெனில் ஆகு மன்றே. 45
46 மயிரெறி கருவி வள்ளை தோரண மணிப்பொன் னூசல்
பெயர்வன நிகர்க்கு மென்று பேசுதல் பேதை நீர்த்தாஞ்
செயிரற வுலோக மாக்குந திசைமுகக் கொல்லன் செய்த
உயிரெறி கருவி போலும் ஒண்குழைக் காது மாதோ. 46
47 கொங்குறு கூந்த லாள்தன் கோலவாள் முகத்துக் கொப்பாம்
திங்களென் றுரைக்கில் தேயும் வளர்வுறுஞ் சிறப்ப தன்றால்
பங்கய மெனினும் உண்டோர் பழுதுமற் றதற்கும் என்னில்
அங்கதற் கதுவே யலலால் அறையலாம் படிமற் றுண்டோ. 47
48 சரந்தெறு விழியி னாள்தன் களத்தின தெழிலைச் சங்கங்
கரந்தன கமுகும் அற்றே அன்னது கண்டு நேரா
வரந்தரு புலவர் சொற்றார் மற்றவர் அதற்கோ நாளும்
இரந்திடு தொழில ராகி இழுக்கமுற் றார்கள் அன்றே. 48
49 மாயவன் அதரஞ் சேர்த்தி வரன்முறை இசைத்த பச்சை
வேயெனும் வதுவும் யான்செய் மெய்த்தவம் அனைய நீராள்
தூயபொற் றோள்கண் டஞ்சித் தோற்றதால் என்னில் அன்னான்
சேயவன் வணக்கா தேந்துஞ் சிலைகொலோ நிகர்ப்ப தம்மா. 49
50 பூந்தள வனைய மூரற் பொற்கொடி கரத்துக் கொவ்வா
காந்தளும் நறிய செய்ய கமலமா மலரும் என்னில்
மாந்தளிர் பொருவ துண்டோ வள்ளுகிர் கிள்ளை நாசி
ஏய்ந்தள வற்றுக் காமர் இலைச்சினை யாய தன்றே. 50
51 பொருப்பென எழுந்து வல்லின் பொற்பெனத் திரண்டு தென்னந்
தருப்பயில் இளநீ ரென்னத் தண்ணெனா அமுதுட் கொண்டு
மருப்பெனக் கூர்த்து மாரன் மகுடத்தில் வனப்பு மெய்தி
இருப்பதோர் பொருளுண் டாமேல் இணைமுலைக் குவமை யாமே. 51
52 அந்திரு வன்னாள் மேனி அமைத்துவெம் முலைக்கண் செய்வான்
சுந்தர வள்ளம் நீலுண் டுகிலிகை விதிகொள் போழ்திற்
சிந்திய துள்ளி யொன்றின் ஒழுக்கங்கொல் சிறப்பின் மிக்க
உந்தியின் மீது போய உரோமத்தின் ஒழுக்க மன்றே. 52
53 மாசடை யாத நீல மணியுறழ் வண்ண மாலோன்
காசடை அகலந் தாங்குங் கனங்குழைத் திருவும் போற்றுந்
தேசுடை மாதி னுந்திச் சீரினுக் கனையன் துஞ்சும்
பாசடை நேர்வ தாமோ பகரினும் பழிய தன்றோ. 53
54 கண்டுழி மாயும் அன்றே மின்னெனில் ககன மாகக்
கொண்டிடின் உருவின் றாகுங் கொடியெனில் துடிய தென்னில்
திண்டிறல் நாக மென்னில் சீரிதன் றணங்கின் நாப்பண்
உண்டிலை யென்று மானும் ண்மைக்கோ ருவமை யுண்டோ. 54
55 மயலுடைப் பணியும் ஆல வட்டமும் வனப்புச் செய்த
வியலுடைத் தேரும் அச்சுற் றிரங்கியே உயிர்க்கு மென்றாற்
கயலுடைக் கண்ணாள் அல்குற் கொப்பவோ காமர் வீடவ்
வியலுறுப் பென்பர் யாரும் மேலது காண்டும் அன்றே. 55
56 கோழிலை அரம்பை யீனுங் குருமணித் தண்டை வேழத்
தாழிருந் தடக்கை தன்னை நிகரெனில் தகுவ அன்றால்
மாழையுண் கருங்கண் மாதின் மகரிகை வயங்கு பொற்பூண்
சூழுறு கவானே போலும் அவையெனிற் சொல்ல லாமோ. 56
57 அலவனாம் ஞெண்டை அன்னாள் அணிகெழு முழந்தாட் கொப்பாப்
புலவர்கள் புகலா நின்ற வழக்கலாற் பொருந்திற் றன்றால்
திலகநன் மணியே போல்வாள் தெய்வத வடிவுக் கிந்த
உலகினுள் இழிந்த தொன்றை உரைக்கின· துவமை யாமோ. 57
58 தமனியத் தியன்ற பொற்பில் தாவிலா ஆவந் தானுஞ்
சிமையநேர் கொங்கை மாதின் திகழ்கணைக் காலுந் தூக்கிற்
சமமிது பொருளி தேன்றே தமியனேன் றுணிந்து சிந்தை
அமைவுற அறிதல் தேற்றேன் ஐயமுற் றிடுவன் யானே. 58
59 அரும்புறு காலைக் கொங்கைக் கழிவுற்று முகமொவ் வாது
சுரும்புற மலர்ந்த பின்னுந் தொலைந்துகை யினுக்குந் தோற்றுத்
திரும்பவும் அடிக்கும் அஞ்சிச் சிதைந்தது கமல மென்றால்
பெரும்பயம் உற்று நோற்றும் பிழைத்தது போலு மன்றே. 59
60 மேக்குயர் கூனல் ஆமை விரைசெறி குவளைத் தோடு
தாக்குறு பந்து பிண்டித் தண்டளிர் சார்பு கூறில்
தூக்குறு துலையின் தட்டுத் தொகுத்தொரு வடிவில் வேதா
ஆக்குறின் மாதின் தாளுக் கதுநிக ராகும் போலும். 60
61 ஆவியின் நொய்ய பஞ்சும் அனிச்சமா மலரும் அன்னத்
தூவிய மிதிக்கிற் சேந்து துளங்குறும் அடிகள் என்றால்
நாவியங் குழலின் மாது நடந்திட ஞாலம் ஆங்கோர்
பூவதோ அதுபூ அன்றேல் பொன்னடி பொருந்து மோதான். 61
62 கயலுறழ் கருங்கட் செவ்வாய்க் காரிகை தனது சாயல்
மயிலெனக் கூறின் அல்லால்¢ மற்றதற் குவமை யில்லை
இயலுறு வடிவிற் கொப்ப தேதுள திவளே போலச்
செயலுறுத் தெழுதிற் றுண்டேல் சித்திரம் அ·தே போலும். 62
63 ஆனனம் நான்கு செய்தாட் காயிர மடங்கேர் கொண்ட
மானினி தன்னை வேதா வகுத்திலன் கொல்லே அன்னான்
தானமைத் துளனே என்னில் தலைபல தாங்கி இந்தத்
தூநிலா நகையி னாளைத் தொடர்ந்துபின் திரிவன் அன்றே. 63
64 மையறு புவியில் வந்த மாதிவள் அடியி லுள்ள
துய்யதோர் குறிகள் வானில் தொல்பெருந் திருவில் வைகுஞ்
செய்யவன் றனதுதேவி சிரத்தினும் இல்லை யென்றால்
மெய்யுறு குறிகளெல்லாம் இனைத்தென விளம்பற் பாற்றோ. 64
65 வேறு
என்று முன்னிஅவ் வேந்திழை தன்முனஞ்
சென்று காமர் திருவினுஞ் சீரியோய்
நன்று நன்றுநின் நல்வர வேயெனா
நின்று பின்னும் நெறிப்பட ஓதுவான். 65
66 யாது நின்குலம் யாதுநின் வாழ்பதி
யாது நின்பெயர் யாருனைத் தந்தவர்
ஓது வாயென் றுரைத்தனன் உள்ளுறு
காத லான்மிகு காசிபன் என்பவே. 66
67 வனிதை கூறுவள் மாதவ நீயிது
வினவி நிற்றல் விழுமிதன் றென்னிடைத்
தனிய னாகியுஞ் சார்ந்தனை நோற்பவர்க்
கினிய வேகொல் இனையதோர் நீர்மையே. 67
68 ஏதில் நோன்பை இகந்துணர் வில்லதோர்
பேதை மாந்தரில் பேசியெற் சார்வது
நீதி யேயன்று நின்கடன் ஆற்றிடப்
போதி யென்ன முனிவன் புகலுவான். 68
69 மங்கை கேட்டி வரம்பறு பற்பகல்
அங்கம் வெம்ப அகமெலி வுற்றிடச்
சங்கை யின்றித் தவம்பல செய்திடல்
இங்கு வேண்டிய தெய்துதற் கேயன்றோ. 69
70 பொன்னை வேண்டிக்கொ லோபொன்னின் மாநகர்
தன்னை வேண்டிக்கொ லோசசி யாம்பெயர்
மின்னை வேண்டியே அல்லது வேறுமற்
றென்னை வேண்டிஅவ் விந்திரன் நோற்றதே. 70
71 ஐயதின் மேனி அலசுற யான்தவஞ்
செய்த திங்குனைச் சேருதற் கித்திறம்
நெய்தின் மேவினை நோற்றதற் குப்பயன்
எய்தி யுற்ற தினித்தவம் வேண்டுமோ. 71
72 பேரும் ஊரும் பிறவும் வினவினேற்
கோர வொன்றும் உரைத்திலை ஆயினுஞ்
சேர வேபின் தௌ¤குவன் காமநோய்
ஈர கின்ற திரங்குதி நீயென்றான். 72
73 மாயை கேட்டு வறிது நகையளாய்
நீயிவ் வாறு நெடுந்தவஞ் செய்ததும்
ஆயில் என்பொருட் டோஅ· தன்றரோ
தூயை வஞ்சஞ் சொலன்முறை யோவென்றாள். 73
74 மற்றிவ் வண்ண மயில்புரை சாயலாள்
சொற்ற காலை யனையவள் சூழ்ச்சியை
முற்று மோர்ந்து முதிர்கலை யாவையுங்
கற்று ணர்ந்திடு காசிபன் கூறுவான். 74
75 பொய்ம்மை யாதும் புகல்கிலன் நான்முகன்
செம்மல் யான்அது தேருதி போலுமால்
இம்மை யேபர மீந்திடு வோய்இவண்
மெய்ம்மை யேயுரைத் தேன்உள வேட்கையால். 75
76 பன்னெ டுந்தவம் பற்பகல் ஆற்றியான்
முன்னி நின்றது முத்திபெற் றுய்ந்திட
அன்ன தேயெற் கருள்செய வந்தனை
ளுன்னை மேவலன் றோஉயர் முத்தியே. 76
77 ஈத லான்மற் றெனக்கொரு பேறிலை
ஆத லாலுனை யேயடைந் தேனெனக்
காதன் மாதும்அக் காசிபற் கண்ணுறீஇ
ஓத லாம்பரி சொன்றை யுணர்த்துவாள். 77
78 வேறு
மங்கலம் இயைந்திடு வடாதுபுல முள்ளேன்
செங்கனக மேருவரை சேர்ந்ததொரு தென்பால்
கங்கைநதி யின்கரை கலந்திட நினைந்தேன்
அங்கணுறு கின்றதொ ரரும்பயன் விழைந்தே. 78
79 வல்லையவண் ஏகுறுவன் மாதவ வலத்தோய்
நில்லிவண் எனப்பகர நீனிறம தாகுஞ்
செல்லுறழு மேனிதரு செம்மல்அருள் மைந்தன்
ஒல்லையிது கேண்மென உரைக்கலுறு கின்றான். 79
80 கங்கைநதி யாதிய கவின்கொள்நதி யேழும்
அங்கணுல கந்தனில் அரன்பதிகள் யாவும்
மங்குல்தவழ் மேனியவன் வாழ்பதியு மற்றும்
இங்குற வழைப்பனொ ரிமைப்பொழுது தன்னில். 80
81 பொன்னுலகும் விஞ்சையர்கள் போதுலகும் ஏனோர்
மன்னுலகும் மாதிரவர் வாழுலகும் அங்கண்
துன்னியதொர் தேவரொடு சூழ்திருவி னோடும்
இன்னபொழு தேவிரைவின் ஈண்டுதர வல்லேன். 81
82 மூவகைய தேவரையும் முச்சகம துள்ளோர்
யாவரையு நீதெரிய எண்ணுகினும் இங்ஙன்
மேவரவி யற்றிடுவன் வெ·கல்புரி வாயேல்
காவலுறு பேரமிர்த முங்கடிதின் ஈவேன். 82
83 எப்பொருளை வேண்டினும் இமைப்பிலுன வாக
அப்பொருளி யாவையும் அளிப்பன்அ· தல்லால்
மெய்ப்புதல்வர் வெ·கினும் விதிப்பன்அவர் தம்மை
ஒப்பிலை இவர்க்கெனவும் உம்பரிடை உய்ப்பேன். 83
84 அந்தமிகு மேனகை அரம்பைமுத லானோர்
வந்துனடி யேவல்செய வல்லைபுரி கிற்பேன்
சிந்தைநனி மால்கொடு தியங்குமென தாவி
உய்ந்திட நினைந்தருடி ஒல்லைதனில் என்றான். 84
85 வேறு
முனியிது புகற லோடு முற்றிழை முறுவல் எய்தித்
தனியினள் என்று கொல்லோ சாற்றினை இனைய நீர்மை
இனியது தவிர்தி மேலோர்க் கிசையுமோ யானும் முன்னம்
நினைவுழிச் செல்வல் நோற்று நீயிவண் இருத்தி என்றே. 85
86 கங்கையின் திசையை முன்னிக் கடிதவட் செல்வாள் என்ன
அங்கவள் போத லோடும் அருந்தவன் தொடர்ந்து செல்ல
மங்கையும் அருவ மெய்தி மாயையிற் கரந்து நிற்ப
எங்கணும் நோக்கிக் காணான் இடருழந் திரங்கி நைவான். 86

ஆகத் திருவிருத்தம் - 86


2. காசிபன் புலம்புறு படலம் (87 - 138)

87 தேனீர் மையெனப் புகல்வாள் சிறிதுந்
தானீ ரமிலாள் தனிமா யவளே
மானீர் உமதாம் வயின்உற் றனளோ
ஏனீர் மொழியா திரிகின் றதுவே. 1
88 சிலைவா ணுதலாள் திறன்மா யையெனும்
வலைவீ சியெனா ருயிர்வவ் வினளால்
கலையீர் இவண்நீர் அதுகண் டனிரோ
நிலையீர் வெருளா நெடிதோ டுதிரால். 2
89 கடிதேர் களிறே கழிகா தலையாய்ப்
பிடிதேர் பரிசாற் பெயர்வாய் தமியேன்
நொடிதே தளரா நெறிநே டினையக்
கொடியாள் தலையுங் கொணராய் கொணராய். 3
90 அருளால் உனையே அளியென் றனரால்
பெரியார் அவர்சொற் பிழையா குவதோ
தரியா அரியே தமியேன் உயிரைத்
தெரிவான் நினைவோ திரிகின் றனேயே. 4
91 மேவிப் பிரிவாள் விழிபோல் அடுவாய்
ஆவிக் குறவோ அலைமன் மதனப்
பாவிக் கும்இனிப் படையாய் வருவாய்
வாவிக் குவளாய் எனைவாட் டுதியோ. 5
92 செந்தா மரைமேல் திருவாம் எனவே
வந்தாள் தணியா மயல்செய் தகல்வாள்
அந்தோ வினவா அவளைக் கொணர்வான்
சந்தா கிலையென் சந்தே உரையாய். 6
93 பொன்னிற் பொலிவுற் றிடுபூங் கமலந்
தன்னில் துணையோ டுதழீஇத் தணவா
அன்னப் பெடைகாள் அறனோ புகலீர்
என்னைத் தனிவைத் தவளே கியதே. 7
94 தணியா வகைமால் தமியேற் கருளித்
துணியா அகல்வாள் படர்தொல் நெறியைக்
குணியா வுரைசெய் குதியென் றிடினுங்
கணியாய் இதுவோ கணிதன் இயல்பே. 8
95 படைவேள் கணையே பரிதிக் குறவே
படவார் முகமே மதியின் பகையே
விடமே புரையும் விழிமெல் லியல்நின்
னிடமே வருவாள் ஔ¤யா திசையாய். 9
96 நின்றீர் மிகவுந் நெடியீர் பெரியீர்
இன்றீ ரமிலா தெனைநீங் கினள்முன்
சென்றீ ரவள்போஞ் செயல்கா ணுதிர்செய்
குன்றீர் மொழியீர் குறைசெய் துளனோ. 10
97 மயிலே ரியலாள் ஒருமா யவளே
இயலே தறியேன் இவண்நின் றனளோ
பயிலே சிலநீ பகர்வாய் அதனால்
குயிலே எனதா ருயிர்கொள் ளுதியோ. 11
98 நின்பால் வரவே நினைவாய் மொழிவாள்
என்பால் இலையிவ் வழியே கினளால்
மென்பா லெனமே வியமா ருதமே
தென்பால் வருவாய் செயல்கூ றுதிநீ. 12
99 ஆரத் தடமே அருள்நீ ரினைஉன்
ளீரத் தினையென் றெவரும் புகல்வார்
சாரிற் சுடுவாய் தளரேல் எனவே
சோர்வுற் றிடுமென் துயர்தீர்க் கிலையே. 13
100 களிசேர் மயிலே கவிரா கியவாய்க்
கிளியே குயிலே கிளைதான் அலவோ
தளரா வகைநீர் தகவே மொழியா
அளியேன் உயிருக் கரணா குதிரால். 14
101 அறவே துயர்செய் தணுகா திகலித்
துறவே துணிவாள் தொடர்புந் தொடர்போ
உறவே யினிநீர் உவள்போம் நெறியைப்
புறவே தமியேன் பெறவே புகல்வீர். 15
102 எனவே பலவும் இயல்சேர் முனிவன்
மனமால் கொடுசொற் றிடமற் றதனை
வினவா மகிழா வியன்மெய்ம் மறையா
அனமே யனையாள் அவணுற் றிடலும். 16
103 வேறு
நோற்குறு முனிவன் தன்பால் நொய்தென மாயை யெய்தித்
தீர்க்கலா மையல் பூட்டிச் செய்தவம் அழித்தாள் அந்தோ
பார்க்கிலன் இதனை யென்னாப் பரிவுசெய் தகன்றான் போலக்
கார்க்கடல் வரைப்பின் ஏகிக் கதிரவன் கரந்தான் அன்றே. 17
104 தந்தைகா சிபன்என் றோதுந் தவமுனி யவன்பாற் சார
வந்துளாள் யாயே அன்றோ மற்றியவர் தலைப்பெய் கின்ற
முந்துறு புணர்ச்சி காண்டல்முறைகொலோ புதல்வற் கென்னாச்
சிந்தைசெய் தகன்றான் போன்று தினகரக் கடவுள் சென்றான். 18
105 அந்தமில் நிருதர் என்னும் அளவைதீர் பானாட் கங்குல்
வந்திடு மின்னே யென்னா வல்லையின் மதித்து வானத்
திந்திரன் ஆணை போற்றும் இலங்கெழில் நேமிப் புத்தேள்
சிந்துவிற் கரத்தல் போன்று செங்கதிர்ச் செல்வன் போனான். 19
106 வேலையின் இரவி செல்ல விண்ணவர் யாருங் கொண்ட
வாலிய திருவுஞ் சீரும் வன்மையும் அகல மாயை
பாலுறும் அவுணர் தானைப் பல்குழுப் பரவிற் றென்ன
மாலையும் இருளின் சூழ்வும் வல்லைவந் திறுத்த வன்றே. 20
107 மாகமேல் நிமிர்ந்த செக்கர் மாலையம் பொழுது நல்கூர்ந்
திகெனா இரக்கும் நீரார்க் கிம்மியின் துணைய தேனும்
ஓகையால் வழங்கா நீதி ஒன்னலான் ஒருவன் செல்வம்
போகுமா றென்ன வாளா பொள்ளெனப் போயிற் றாமால். 21
108 இரும்பிறை உருவின் எ·கார் கூர்ங்குயத் தினுமீர்க் கல்லா
வரம்பறும் இருளின் கற்றை கணங்களும் மருளு நிராற்
பரம்பிய தியாண்டு மாகிப் பாரெனப் பட்ட மாது
கரும்படாம் ஒன்று மேற்கோள் காட்சியைப் போன்ற தன்றே. 22
109 வண்டுழாய் மோலி மைந்தன் மாலிருட் கங்குல் வேழத்
தெண்டரு வதனம் பட்ட இரும்புகர்ப் புள்ளி யென்ன
அண்டர்தந் தருக்கள் சிந்தும் அணிமல ரென்ன வான்றோய்
கொண்டலிற் படுமுத் தென்னத் தாரகை குலவிற் றன்றே. 23
110 துண்ணென உலக முற்றுஞ் சூழ்ந்தபே ரிருளா நஞ்சைத்
தெண்ணில வாகி யுள்ள செங்கையால் வாரி நுங்கி
விண்ணவர் புகழ நீல வியன்நிறந் தன்பாற் காட்டுங்
கண்ணுதல் போன்று முந்நீர்த் தோன்றினன் கதிர்வெண் டிங்கள். 24
111 அழுந்துறு பாலின் வேலை அமரர்கள் கடைந்த காலைச்
செழுந்துளி மணிக ளொடுந் தெறித்தென உடுக்கள் தோன்றக்
கழுந்துறும் அவுணர் என்னுங் காரிருள் தொலைய அங்கண்
எழுந்ததோ ரமுதம் போன்றும் இலங்கினன் இந்து வென்பான். 25
112 இரவெனும் வல்லோன் ஞால மென்பதோர் உலையில் வேலைக்
கரியுறு வடவைத் தீயில் களங்கொடு வெண்பொன் சேர்த்தி
விரைவொடு செம்மை செய்து மீட்டுமோர் மருந்தால் தொல்லை
உருவுசெய் தென்னச் செங்கேழ் ஔ¤மதி வௌ¤ய னானான். 26
113 அண்டருங் ககன மென்னும் அகலிருந் தடத்திற் பூத்த
விண்டதோர் குவளை ஆம்பல் போலுமால் மீன்கள் வௌ¢ளைப்
புண்டரீ கத்தைப் போலும் புதுமதி அதன்கட் டேனார்
வண்டினம் ஒப்ப தன்றே மாசுதோய் களங்க மாதோ. 27
114 அலைதரு நேமி என்னும் ஆன்றதோர் தடத்தின் பாலாம்
நிலவெனும் வலையை யோச்சி நிழல்மதிப் பரதன் ஈர்த்துப்
பலநிறங் கொண்ட மீன்கள் பன்முறை கவர்ந்து வான்மேற்
புலருற விரித்த தேபோற் பொலிந்தன உடுவின் பொம்மல். 28
115 கழிதரும் உவரி நீத்தங் கையகப் படுத்து மாந்தி
எழிலிகள் வான மீப்போய் இருநிலத் துதவல் காணூஉப்
பழிதவிர் மதியப் புத்தேள் பாற்கடல் பருகி யாண்டும்
பொழிதரும் அமிர்தம் என்னப் புதுநிலாப் பூத்த தன்றே. 29
116 மலர்ந்திடுங் கடவுட் டிங்கள் வாணிலாக் கற்றை எங்குங்
கலந்தன உலகில் யாருங் களித்தனர் குமுத மாதி
அலர்ந்தன தளிர்த்த சோலை அம்புயப் போது செல்வி
புலர்ந்தன ஒடுங்கு கின்ற புகைந்தன பிரிந்தோர் புந்தி. 30
117 அல்லவை புரியா ரேனும் அறிவினிற் பெரியா ரேனும்
எல்லவர் தமக்கு நண்பாய் இனியவே புரிதற் பாற்றோ
பல்லுயிர்த் தொகைக்கும் இன்பம் பயந்திடு மதிகண் டன்றோ
புல்லிய கமல மெல்லாம் பொலிவழிந் திட்ட வன்றே. 31
118 திங்களின் மலர்ந்த செல்வித் தேன்முரல் குமுதம் எங்கோன்
பங்கமுற் றார்கண் மேவான் பதுமம்ஏன் ஒடுங்கிற் றென்னாத்
தங்களில் உரைத்தல் போலாஞ்சசிக்கது உண்மை எம்பால்
இங்கிலை யென்ப போன்ற இசையளி பொதிந்த கஞ்சம். 32
119 கங்குல்வந் திறுத்த காலைக் கடிமனைக் கதவம் பூட்டிச்
செங்கண்மால் தன்னைப் புல்லித் திருமகள் இருந்தா ளென்னக்
கொங்கவிழ் கின்ற செங்கேழ்க் கோகன தங்கள் எல்லாம்
பொங்கிசை மணிவண் டோடும் பொதிந்தன பொய்கை யெங்கும். 33
120 வேறு
ஆனதோர் காலையில் அமரர் தம்மையுந்
தானவர் தம்மையுந் தந்த காசிபன்
வானகம் எழுதரும் மதியின் தெண்ணிலா
மேனிய தடைதலும் வெதும்பி னானரோ. 34
121 குலைந்தனன் தன்னுளங் குறைந்த வன்மையன்
அலந்தனன் ஒடுங்கினன் புலம்பி அங்கண்வான்
ரூ¤லந்தனில் எழுதரு விலவை நோக்கினான். 35
122 காலையில் எழுந்தசெங் கதிரின் நாயகன்
மாலையம் பொழுதினில் மறைந்து கீழ்த்திசை
வேலையில் விரைவுடன் மீண்டும் வந்துளான்
போலும்அந் தோவிது புதுமையோ வென்பான். 36
123 ஞாயிறும் அன்றெனில் நடுவ ணாகியே
பாயிரும் புணரியுட் பயின்று தோன்றலால்
ஏயென உலகட எண்ணி யாண்டுறுந்
தீயெனுங் கடவுளே திங்கள்அன் றென்பான். 37
124 இந்துவென் றுலகெலாம் இசைப்ப நின்றதோர்
செந்தழற் கடவுள்இத் திசையிற் செல்வுழி
வந்ததோர் சோதிகொல் வானம் எங்கணும்
அந்தியஞ் செக்கரென் றடைந்தவா றென்பான். 38
125 காண்டகு மதியெனக் கழறுஞ் செந்தழல்
மூண்டிடு புகைகொலோ முன்னம் வானமும்
ஈண்டுறு தரணியுந் திசையும் எங்குமாய்
நீண்டதோர் இருளென நிமிர்ந்தவா றென்பான். 39
126 தெண்டிசைப் பிறந்திடுந் திங்கட் செந்தழல்
கொண்டது வாலிதாங் கோலங் காரிடைக்
கண்டனன் இத்திறங் கரையில் ஆவிகள்
உண்டதிற் பெற்றதிவ் வுருவமே யென்பான். 40
127 ஊனமில் செக்கராய் உதித்துப் பின்னரே
வானிற னாகிய மதியத் தீத்தரத்
தானிறை புலிங்கமே அலது தாரகை
மீனெனப் படுவது வேறுண் டோவென்பான். 41
128 மால்கடல் அதனிடை வந்த பான்மையால்
ஆலமி தாகுமால் அமரர்க் கன்றெழு
நீலமெய் யுருவினை நீத்துத் திங்களின்
கோலமொ டின்றிவட் குறுகிற் றோவென்பான். 42
129 இங்கிவை யாவுமன் றேர்கொள் வேலையில்
வெங்கனல் முழுவதும் விடமும் ஆர்ந்தெழீஇ
மங்குலிற் சிதறிட வானிற் புக்கனன்
திங்களே யாமிது திண்ணம்என் கின்றான். 43
130 இனையன மருட்கையால் இசைத்த காசிப
முனிவரன் என்பவன் முன்னை மாயையை
நினைபவ னாகியே நெடிது காதலால்
அனையவள் தனைவிளித் தரற்றல் மேயினான். 44
131 வேறு
கொங்குண் கோதைத் தாழ்குழல் நல்லீர் கொடியேன்முன்
எங்கு மெங்குங் காணுறு கின்றீர் எழின்மின்னின்
பொங்குஞ் சோதி போலெதிர் புல்லும் படிநில்லீர்
மங்கும் போதோ சேருதிர் நெஞ்சம் வலியீரே. 45
132 முன்னஞ் செய்தீர் காதலை நோன்பை முதஅ லாடும்
பின்னஞ் செய்தீர் மாரனை ஏவிப் பிழைசெய்தீர்
சின்னஞ் செய்தீர் நல்லுணர் வெல்லாஞ் சிறியேனுக்
கின்னஞ் செய்யும் பெற்றியும் உண்டேல் இசையீரே. 46
133 வாகாய் நின்ற குன்றமும் யாவும் வருவித்தீர்
ஏகா நின்றீர் இவ்விடை தன்னில் ஏனைநீங்கிப்
போகா நின்றீர் வல்லையின் மீண்டும் புவியெங்கும்
ஆகா நின்றீர் நுஞ்செயல் யாரே அறிகிற்பார். 47
134 பற்றே நும்பால் ஆயினன் முன்னம் பயில்செய்கை
அற்றேன் வேளால் ஆற்றவும் நொந்தேன் அ·தொயும்
உற்றேன் அல்லேன் உம்மொடும் இன்னும் உழல்கின்றேன்
பெற்றேன் வாளா மாய்ந்தனன் என்னும் பிழையொன்றே. 48
135 நேயங் கொண்டீ ராமென வந்தீர் நெறிநில்லா
மாயங் கொண்டீர் வன்றிறல் கொண்டீர் மயல்செய்யுங்
காயங் கொண்டீர் ஆருயிர் நிற்கக் கருதீரேல்
தாயம் கொண்டீர் கூற்றொடு போலுந் தனிவந்தீர். 49
136 வேண்டேன் வேறோர் மாதரை நும்பால் வியன்மோகம்
பூண்டேன் உம்மை மாயவ ரென்னும் பொருள்கண்டேன்
ஈண்டே சென்றீர் போல்கர வுற்றீர் எய்தீரேல்
மாண்டேன் இன்னே ஆருயிர் நிற்பான் வருவீரே. 50
137 ஒன்றே யாகும் மாயம தால்நீ ருலகெல்லாம்
வென்றே செல்வீர் என்னுயிர் கொள்வான் விழைவீரேல்
நன்றே நன்றே நல்குவன் யானே நனிநண்பால்
சென்றே யோர்கால் மாமயல் தீரச் சேர்வீரே. 51
138 என்னா வென்னா இத்தகை பன்னி இடராழித்
துன்னா மாழ்கிச் சோர்தரும் எல்லைத் துகடீரும்
மின்னா கின்ற மாயவள் அன்னான் விழிகாண
முன்னாய் நின்றாள் எவ்வினை கட்கு முதலானாள். 52

ஆகத் திருவிருத்தம் - 138.


3. அசுரர் தோற்று படலம் (139 - 176)


ஆகத் திருவிருத்தம் - 176


4. காசிபனுபதேசப் படலம் (177 - 201)

139 கந்தார் மொய்ம்பிற் காசிபன் என்போன் கடிதங்கண்
வந்தாள் செய்கை காணுத லோடு மகிழ்வெய்தி
அந்தா உய்ந்தேன் யானென மின்கண் டலர்கின்ற
கொந்தார் கண்டல் போல்நகை யோடுங் குலவுற்றான். 1
140 ஆடா நின்றான் குப்புற லுற்றான் அவள்தன்மேல்
பாடா நின்றான் யாக்கைபொ டிப்பிற் படர்போர்வை
மூடா நின்றான் அன்னதொர் மாயை முன்சென்றான்
வீடா நின்ற தன்னுயிர் காக்கும் விதிகொண்டான். 2
141 வேறு
என்னேசெய வேண்டிற்றவை எல்லாமிசை வாலே
முன்னேபுரி கிற்பேன்இவண் முனிகின்றதை ஒருவி
நன்னேயமொ டெனையாளுதிர் நனிவல்லையில் என்னாப்
பொன்னேர்அடி மிசைதாழ்தலும் அவள்இன்னது புகல்வாள். 3
142 வெருவுற்றிடல் இவணின்றஅன் வியன்மெய்யினுக் கியையுந்
திருமிக்குறு தகவாகிய திறன்மேனியும் மேற்கொள்
உருவொப்பதொர் வடிவும்முடன் உடனெய்திடு வாயேல்
மருவுற்றிடு கின்றேனென மயில்சொற்றனள் அன்றே. 4
143 ஏமுற்றிடு முனிவர்க்கிறை இதுகேட்டலும் முன்னங்
காமக்கடல் படிகின்றவன் களிசேர்தரும் உவகை
நாமக்கட லிடை ஆழ்ந்தனன் நன்றால்இ· தென்றான்
சேமத்திரு நிதிபெற்றிடும் இரவோன்எனத் திகழ்வான். 5
144 அற்றேமொழி தருதன்மையில் ஆர்வத்தொடு தமியேன்
குற்றேவல்செய் கிற்பேன்இளங் கொடியோரிடை யென்னாச்
சொற்றேதவ முயல்வன்மையில் துகடீர்தரும் அனிலப்
பொற்றேரவற் கிலதென்பதொர் புத்தேள்உருக் கொண்டான். 6
145 அன்றாயதொ ருருவெய்திய அறிவன்றனை வியவா
நன்றாலுன தியல்பாமென நகையாக்கரம் பற்றாக்
குன்றாகிய முலையாள்அவற் கொடுபோந்தனள் அங்கட்
பொன்றாழ்கிரி யெனவோங்மொர் பொலன்மண்டபம் புகுந்தான். 7
146 வேறு
கற்பனை இன்றியே கடிதின் முன்னுறம்
அற்புத மண்டபத் தாணை யால்வரும்
பொற்புறு சேக்கையிற் பொருந்தி னாரரோ
எற்படு கங்குலின் முதலி யாமத்தில். 8
147 சூருறு வெம்பசி தொலைப்ப வைகலும்
ஆரஞர் எய்தினோன் அரிதின் வந்திடு
பேரமு துண்குறு பெற்றி போலவக்
காரிகை தனைமுனி கடிதிற் புல்லினான். 9
148 புல்லலும் எதிர்தழீஇப் புகரில் காசிபன்
தொல்லையில் உணர்வொடு தொலைவில் செய்தவம்
வல்லையில் வாங்குறு மரபில் அன்னவன்
மெல்லிதழ் அமிர்தினை மிசைதல் மேயினாள். 10
149 பின்னுற மாயவள் பெரிதுங் காமுறும்
அன்னவன் புணர்தர அறிவ தொன்றையுந்
தொன்னெறி அளித்தெனத் தொண்டைச் சேயிதழ்
முன்னுறும் அமிர்தினை முனிக்கு நல்கினாள். 11
150 உட்டௌ¤ வின்றியே யுலப்பின் றோடிய
மட்டறு காமமாம் வாரி யுற்றுளான்
அட்டொளிர் பொன்னனாள் அல்கு லாஞ்சுழிப்
பட்டனன் இன்பமாம் பரவை நண்ணுவான். 12
151 தோமறு முனிவரன் சுரதத் தாற்றினாற்
காமரு மதனநூல் கருத்திற் சிந்தியாத்
தேமொழி மயிலொடு செறிந்து போகமார்
பூமியி னேரெனப் புணர்தல் மேயினான். 13
152 செம்மயி லன்னஇத் தெரிவை தன்னிடை
எம்மையும் இல்லதோர் இன்பம் இங்ஙனம்
மெய்ம்மையின் நல்கிய விதியி னார்க்கியான்
அம்மசெய் கின்றதோர் அளவுண் டோவென்றான். 14
153 ஆறறி முனிவரன் அநங்க நூன்முறை
வீறொடு புணர்தலும் வெய்ய மாயவள்
கீறினள் நகத்தினாற் கீண்ட பால்தொறும்
ஊறிய காமநீர் ஒழுகிற் றென்பவே. 15
154 உணர்வுடை முனிவரன் உயர்ந்த விஞ்சையர்
மணமுறை அதுவென மாயை தன்னொடு
புணர்தொழில் புரிந்தனன் போக முற்றினான்
துணையறும் இன்பெனுங் கடலில் தோய்ந்துளான். 16
155 வேறு
அந்த வேலையில் முகுந்தனும் அன்புயத் தவனும்
இந்தி ராதியர் யாவரும் முனிவரர் எவருந்
தந்தம் உள்ளமேல் நடுக்குற மாயவள் தன்பால்
வந்து தோன்றினன் சூரபன் மாஎனும் வலியோன். 17
156 துயக்கம் இல்லதோர் சூரன்வந் திடுதலுந் தொல்லை
முயக்க வேலையில் இருவர்பால் முறைமுறை இழிந்த
வியப்பில் வந்தனர் முன்னபதி னாயிர வௌ¢ளம்
வயக்க டுந்திறல் தானவர் யாரினும் வலியோர். 18
157 அன்னர் தம்மையும் முதலவன் தன்னையும் அங்கண்
நின்மி மீரென நிறுவியே ஆயிடை நீங்கி
மின்னு நூலணி முனியொடு மாயவள் வேறோர்
பொன்னின் மாமணி மண்டபம் அதனிடைப் புகுந்தாள். 19
158 மானை நேர்பவள் ஆயிடைத் தொல்லுரு மாற்றி
மேன சூரரிப் பிணாவுருக் கௌ¢ளலும் விரைவில்
தானு மோர்திறல் மடங்கலே றாமெனச் சமைந்தான்
மோன மாய்முனம் அருந்தவம் இயற்றிய முதல்வன். 20
159 மங்கை யோடவன் மடங்கலாய் மகிழ்வுடன்புணரக்
கங்குல் வாயிரண் டாகிய யாமமேற் கடிதே
அங்கை ஓரிரண் டாயிரம் ஆயிர முகமாய்ச்
சிங்க மாமுகன் தோன்றினன் திடுக்கிடத் திசைகள். 21
160 இத்தி றத்திவர் இருவரும் புணர்வுழி யாக்கை
மெத்தி வீழ்தரும் வியர்ப்பினில் விறல்அரி முகராய்ப்
பத்து நால்வகை ஆயிர வௌ¢ளமாம் படைஞர்
கொத்தி னோடுவந் துதித்தனர் கூற்றுயிர் குடிப்பார். 22
161 மற்றும் அத்தொகை யோரையும் மாமகன் றனையும்
நிற்றிர் ஈண்டென மாயவள் வீற்றொரு நிலயந்
தெற்றெ னப்புகுந் தோர்பிடி உருக்கொடு சேரக்
கொற்ற மால்களிற் றுருவினை முனிவனுங் கொண்டான். 23
162 பேரு மும்மத மால்களிற் றுருக்கொடு பிடிமேல்
சேரு கின்றுழி மூன்றெனச் செல்லும்யா மத்தில்
ஈரி ரண்டுவாள் எயிற்றுடன் யானைமா முகத்துத்
தார காசுரன் தோன்றினன் அவுணர்கள் தழைப்ப. 24
163 ஏலும் அங்கவர் மெய்ப்படு வியர்ப்பினும் இபத்தின்
கோல மானவர் தோன்றினர் அவர்குழுக் குணிக்கின்
நாலு பத்தின்மேல் ஆயிர வௌ¢ளமா நவின்றார்
மூல நாடியே இப்பரி சுணர்த்திய முனிவர். 25
164 ஆண்டு தாரகன் தன்னையும் அவுணர்கள் தமையும்
ஈண்டு நிற்றிரென் றோர்மணி மண்டபத் திறுத்து
மாண்ட யாமமேல் தகர்ப்பிணா உருக்கொள மாயை
பூண்ட அன்பினான் செச்சையின் உருக்கொடு புணர்ந்தான். 26
165 புணர்ந்த காலையில் அசமுகி தோன்றினள் புவியோர்க்
கணங்கு செய்தகர் முகவராய் அங்கவர் வியர்ப்பில்
கணங்கொள் முப்பதி னாயிர ¦ளிளமாங் கணிதத்
திணங்கு தானவர் உதித்தனர் இமையவர் கலங்க. 27
166 மீள மற்றவர் தம்மையும் நிறுவிவே றுள்ள
சூளி கைப்பெரு மண்டபந் தொறுந்தொறும் ஏகி
வாளி வல்லியம் புரவிமான் ஒரிஎண் கேனங்
கூளி ஆதியாம் விலங்கின துருவெலாங் கொண்டார். 28
167 இறுதி யில்லதோர் விலங்கின துருவுகொண் டிரவின்
புறம தாகிய புலரிசேர் வைகறைப் பொழுதின்
முறையின் மாயையும் முனிவனும் ஆகியே முயங்கி
அறுப தாயிர வௌ¢ளமாம் அவுணரை அளித்தார். 29
168 மிகுதி கொண்டிடும் இரண்டுநூ றாயிர வௌ¢ளந்
தகுவர் தம்மையுஞ் சூரனே மதலினோர் தமையும்
புகலும் ஓரிராப் பொழுதினில் அளித்ததற் புதமோ
அகில மும்வல மாயவட் கிச்செயல் அரிதோ. 30
169 ஆங்க வெல்லையின் அண்டமா யிரத்தெட்டின் உள்ளுந்
தீங்கு கொண்டிடுங் குறிகளுள் ளனவெலாஞ் செறிந்து
நீங்க லின்றியே நிகழ்வன நீர்மைகண் டெவரும்
ஏங்கு கின்றனர் விளைவதென் னோவென இரங்கி. 31
170 அல்லெ னும்பொழு திறத்தலும் மாயவ ளரிவைத்
தொல்லை நல்லுருக் கோடலும் முனியும்அத் துணையே
வல்லை தன்னுரு முன்னையிற் கொண்டனன் மறறவ்
வெல்லை தன்னிடை உதயவாய் அணுகினன் இரவி. 32
171 நிட்டைக் கேற்றிடு முனிவனை மாயவள் நிசியில்
விட்டுப் போந்திலள் அற்புதம் என்விளைந் ததுவோ
கிட்டிக் காண்பன்என் றுதயமாங் கிரிப்புறத் தணுகி
எட்டிப் பார்த்தனன் என்னவஅ உதித்தனன் இரவி. 33
172 வேறு
எல்லைவந் திடுதலும் ஈன்ற மாயவள்
செல்லுறும் அப்புவி செறிந்து சேணினுஞ்
சொல்லிய திசையினுந் துவன்றி யார்த்திடும்
ஒல்லெனுஞ் சனத்தினை உவந்து நோக்கினாள். 34
173 விண்டுறு தானவர் வௌ¢ளம் யாவையும்
கண்டனன் எந்தைதன் கருமம் இச்செயல்
கொண்டிலம் மாயையிற் கூடிற் றீதெனா
அண்டரும் அற்புதம் அடைகுற் றான்முனி. 35
174 பற்பகல் அருந்தவம் பயின்ற தூயனும்
பொற்புறு மாயையும் புதல்வர் தந்தொகை
அற்புத மோடுகண் டன்பின் நீரராய்
நிற்புழித் தெரிந்தனன் நேரில் சூரனே. 36
175 இருமுது குரவரும் ஈண்டுற் றரவர்
திருவடி வணங்கியாஞ் செய்தி றத்தினை
மரபொடு வினவுதும் வம்மின் நீரெனா
அரிமுகன் தாரகன் அறியக் கூறினான். 37
176 அறைகழல் இளையவர் அதனைத் தேர்வுறீஇ
உறுதியி தாமென வுரைத்துப் பின்வரத்
துறுமல்கொண் டிருந்ததன் தொல்ப தாகியை
நிறுவினன் அவ்விடை நின்று நீங்கினான். 38
177 நீங்கிய சூர்முதல் நெறியின் ஏகியே
யாங்கவர் அடிதொழு தருள்செய் மேலையீர்
யாங்கள்செய் கின்றதென் இசைமின் நீரென
ஓங்கிய காசிபன் உரைத்தல் மேயினான். 1
178 உறுதிய தொன்றினை உணர்த்து கின்றனன்
அறைகழல் மைந்தர்காள் அரிய மாதவ
நெறிதனில் மூவிரும் நிற்றிர் அன்னதன்
முறைதனை வாய்மையான் மொழிவன் கேண்மினோ. 2
179 சான்றவர் ஆய்ந்திடத் தக்க வாம்பொருள்
மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன
ஆன்றதோர் தொல்பதி ஆரு யிர்த்தொகை
வான்றிகழ் தளையென வகுப்பர் அன்னவே. 3
180 அளித்திடல் காத்திடல் அடுதல் மெய்யுணர்
ஔ¤த்திடல் பேரருள் உதவ மேயெனக்
கிளத்திடு செயல்புரி கின்ற நீலமார்
களத்தினன் பதியது கழறும் வேதமே. 4
181 பற்றிகல் இல்லதோர் பரமன் நீர்மையை
இற்றென உரைப்பரி தெவர்க்கும் என்பரால்
சொற்றிடும் வேதமுந் துணிதி லாஅவன்
பெற்றியை இனைத்தெனப் பேச வல்லமோ. 5
182 மூவகை யெனுந்தளை மூழ்கி யுற்றிடும்
ஆவிகள் உலப்பில அநாதி யுள்ளன
தீவினை நல்வினைத் திறத்தின் வன்மையால்
ஓவற முறைமுறை உதித்து மாயுமே. 6
183 பாரிடை உதித்திடும் பாரைச் சூழ்தரு
நீரிடை யுதித்திடும் நெருப்பில் வாயுவில்
சீருடை விசும்பிடைச் சேரும் அன்னவைக்
கோரிடை நிலையென உரைக்கற் பாலதோ. 7
184 மக்களாம் விலங்குமாம் மாசில் வானிடைப்
புக்குலாம் பறவையாம் புல்லு மாம்அதில்
மிக்கதா வரமுமாம் விலங்கல் தானுமாந்
திக்கெலாம் இறைபுரி தேவும் யாவுமாம். 8
185 பிறந்திடு முன்செலும் பிறந்த பின்னர்மெய்
துறந்திடுஞ் சிலபகல் இருந்து துஞ்சுமால்
சிறந்திடு காளையில் தேயும் மூப்பினில்
இறந்திடும் அதன்பரி சியம்ப லாகுமோ. 9
186 சுற்றுறு கதிரெழு துகளி னும்பல
பெற்றுள என்பதும் பேதை நீரதால்
கொற்றம துடையதோர் கூற்றங் கைக்கொள
இற்றவும் பிறந்தவும் எண்ணற் பாலவோ. 10
187 கலைபடும் உணர்ச்சியுங் கற்பும் வீரமும்
மலைபடு வெறுக்கையும் வலியும் மற்றது
மலைபடு புற்புத மாகும் அன்னவை
நிலைபடு பொருளென நினைக்க லாகுமோ. 11
188 தருமமென் றொருபொருள் உளது தாவிலா
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்குமால்
அருமையில் வரும்பொரு ளாகும் அன்னதும்
ஒருமையி னோர்க்கலால் உணர்தற் கொண்ணுமோ. 12
189 தருமமே போற்றிடின் அன்பு சார்ந்திடும்
அருளெனுங் குழவியும் அணையும் ஆங்கவை
வருவழித் தவமெனும் மாட்சி எய்துமேல்
தெருளுறும் அவ்வுயிர் சிவனைச் சேருமால். 13
190 சேர்ந்துழிப் பிறவியுந் தீருந் தொன்மையாய்ச்
சார்ந்திடு மூவகைத் தளையும் நீங்கிடும்
பேர்ந்திடல் அரியதோர் பேரின் பந்தனை
ஆர்ந்திடும் அதன்பரி சறைதற் கேயுமோ. 14
191 ஆற்றலை யுளதுமா தவம தன்றியே
வீற்றுமொன் றுளதென விளம்ப லாகுமா
சாற்றருஞ் சிவகதி தனையும் நல்குமால்
போற்றிடின் அனையதே போற்றல் வேண்டுமால். 15
192 அத்தவம் பிறவியை அகற்றி மேதகு
முத்தியை நல்கியே முதன்மை யாக்குறும்
இத்துணை யன்றியே யிம்மை இன்பமும்
உய்த்திடும் உளந்தளில் உன்னுந் தன்மையே. 16
193 ஆதலிற் பற்பகல் அருமை யால்புரி
மாதவம் இம்மையும் மறுமை யுந்தரும்
ஏதுவ தாகுமால் இருமை யும்பெறல்
ஆதியம் பகவன தருளின் வண்ணமே. 17
194 ஒருமைகொள் மாதவம் உழந்து பின்முறை
அருமைகொள் வீடுபே றடைந்து ளோர்சிலர்
திருமைகொள் இன்பினிற் சேர்கின் றோர்சிலர்
இருமையும் ஒருவரே எய்தி னோர்சிலர். 18
195 ஆற்றலில் தம்முடல் அலசப் பற்பகல்
நோற்றவர் அல்லரோ நுவலல் வேண்டுமோ
தேற்றுகி லீர்கொலோ தேவ ராகியே
மேற்றிகழ் பதந்தொறும் மேவுற் றோர்எலாம். 19
196 பத்திமை நெறியொடு பயிற்றி மாதவ
முத்திபெற் றரனடி முன்னுற் றோர்தமை
இத்துணை யெனல்அரி திருமை யும்பெறு
மெய்த்தவர் மாலொடு விரிஞ்ச னாதியோர். 20
197 பல்லுயிர் தன்னையும் மாய்த்துப் பாரினுக்
கல்லல்செய் தருந்தவம் ஆற்றி டாதவர்க்
கில்லையே இருமையும் இன்பம் ஆங்கவர்
சொல்லரும் பிறவியுள் துன்பத் தாழுவார். 21
198 அறிந்திவை உரைப்பினும் அவனி மாக்கள்தாம்
மறங்கொலை களவொடு மயக்கம் நீங்கலர்
துறந்திடு கின்றிலர் துன்பம் அற்றிலர்
பிறந்தனர் இறந்தனர் முத்தி பெற்றிலார். 22
199 தவந்தனின் மிக்கதொன் றில்லை தாவில்சீர்த்
தவந்தனை நேர்வது தானும் இல்லையால்
தவந்தனின் அரியதொன் றில்லை சாற்றிடில்
தவந்தனக் கொப்பது தவம தாகுமே. 23
200 ஆதலின் மைந்தர்காள் அறத்தை ஆற்றுதிர்
தீதினை விலக்குதிர் சிவனை உன்னியே
மாதவம் புரிகுதிர் மற்ற தன்றியே
ஏதுள தொருசெயல் இயற்றத் தக்கதே. 24
201 வேறு
உடம்பினை ஒறுத்த நோற்பார் உலகெலாம் வியப்ப வாழ்வர்
அடைந்தவர்க் காப்பர் ஒல்லார்க் கழிவுசெய் திடுவர் வெ·கும்
நெடும்பொருள் பலவுங் கொள்வர் நித்தராய் உறைவர் ஈது
திடம்பட உமக்கோர் காதை செப்புவன் என்று சொல்வான். 25

ஆகத் திருவிருத்தம் - 201


5. மார்க்கண்டேயப் படலம் (202 - 486)

202 நச்சகம் அமிர்தம் அன்ன நங்கையர் நாட்ட வைவேல்
தைச்சக மயக்கல் செய்யாத் தடுப்பருந் தவத்தின் மிக்கான்
இச்சகம் புகழு கின்ற இருபிறப் பாளர் கோமான்
குச்சகன் என்னும் பேரோன் கொடிமதிற் கடகம் வாழ்வோன். 1
203 அவற்கொரு புதல்வன் உண்டால் அருமறை பயின்ற நாவான்
கவுச்சிகன் என்னும் பேரோன் கரையொரு சிறிதுங் காணாப்
பவக்கடல் கடக்கும் ஆற்றாற் பராபர முதல்வற் போற்றித்
தவத்தினை இழைப்ப ஆங்கோர் தண்புனல் தடாகஞ் சார்ந்தான். 2
204 அத்தலை ஒருசார் எய்தி ஆனினந் தீண்டு குற்றி
ஒத்தென அசைத லின்றி உயிர்ப்பொரீஇ உலக மெல்லாம்
பித்தென உன்னி மாயாப் பேரின்ப அளக்கர் மூழ்கி
நித்தன்ஐ யெழுத்தும் அன்னான் நிலைமையும் நினைந்து நோற்றான். 3
205 ஓவிய மவுன முற்றாங் குணவொடும் உறக்கம் நீங்கித்
தாவற நோற்கும் வேலைத் தடமரை கடமை யாதி
மேவிய விலங்கு தத்தம் மெய்யகண் டூயம் யாவும்
போவது கருதி அன்னான் புரத்திடை உரைத்துப் போமால். 4
206 இப்பரி சியன்ற போழ்தும் யாவதும் உணரா னகி
ஒப்பற நோற்கும் வேலை ஒல்லையில் அதனை நாடி
முப்புரஞ் சிதைய மோனாள் முனிந்தவன் அருளி தென்னாத்
செப்பினன் இமையோர் சூழச் சேணிடைத் திருமால் சேர்ந்தான். 5
207 அற்புதம் எய்தி மைந்தன் அருந்தவம் புகழ்ந்து முன்போய்
எற்படும் அவன்றன் மேனி எழின்மலர்க் கரத்தால் நீவி
வெற்பன மனிவ நின்பேர் மிருககண் டூயன் என்னார்
சொற்பயில் நாமஞ் சாத்த ஏழுந்துகை தொழுது நின்றான். 6
208 தொழுதெழு முனியை நோக்கித் தூமதிச் சென்னி யோன்றன்
முழுதுறு கருணை நின்பால் முற்றுக முன்னஞ் செய்த
பழுதவை நீங்க வென்னாப் பரிவுசெய் தருளி வானோர்
குழுவுடன் உவண வூர்தி கொம்மென மறைந்து போனான். 7
209 போனபின் முனிவர் மேலோன் புரமெரி படுத்த முக்கண்
வானவன் அருளி னாலே வல்விரைந் தேகித் தாதை
யானவன் முன்னர் எய்தி அடிமுறை வணங்க அன்னான்
தானுள மகிழ்ந்து கண்டாங் கெடுத்தனன் தழுவிக் கொண்டான். 8
210 தவத்திடை யுற்ற தன்மை மொழிகெனத் தனயன் தானும்
உவப்புறு தாதை கேட்ப உள்ளவா றுரைத்த லோடும்
நிவப்புறு முவகை மிக்கு நின்குலத் தவர்க்குள் நின்போல்
எவர்க்குள தினைய நோன்மை யாதுநிற் கரிய தொன்றே. 9
211 பாருளார் விசும்பின் பாலார் பயனுகர் துறக்க மென்னும்
ஊருளார் அல்லா ஏனை உலகுறு முனிவர் தம்மில்
ஆருளார் நின்னை ஒப்பார் ஐயநீ புரிந்த நோன்மை
காருளார் கண்டத் தெந்தை யன்றிமற் றெவரே காண்பார். 10
212 எனப்பல புகழ்த லோடும் இவன்வழி மரபு தன்னில்
மனப்படும் ஒருசேய் பின்னாள் மறலியைக் கடக்குங் கூற்றால்
வினைப்பகை இயல்பு நீக்கும் விமலன தருளால் வேறோர்
நினைப்பது வரலுந் தாதை நெடுமகற் குரைக்கல் உற்றான். 11
213 கிளத்துவ துனக்கொன் றுண்டால் கேண்மதி ஐய மேனாள்
அளப்பரு மறைக ளாதி அறைந்தன யாவ ரேனுந்
தளத்தகு பரிசு மன்றால் சால்புடை அந்த ணாளர்
கொளப்படு கடனே யாகும் நாற்பெருங் கூற்ற தன்றே. 12
214 உனற்கரும் பிரமந் தன்னில் ஒழுகல்இல் லறத்தில் நிற்றல்
வனத்திடைச் சேறல் பின்னர் மாதவத் துறவில் வாழ்தல்
எனப்படும் அவற்றி னாதி இயற்றினை யின்று காறும்
நினக்கது புகல்வ தென்னோ நீயவை அறிதி யன்றே. 13
215 பின்னவை இரண்டும் பின்னர்ப் பேணுதல் பேச வொண்ணா
முன்னதும் இயற்ற லாலே முற்றிய திடையின் வைத்துச்
சொன்னதோர் கடன்இஞ் ஞான்று தொடங்கிய வேண்டுந் தூயோய்
அன்னதன் நிலைமை தன்னை ஆற்றினை கோடி யென்றான். 14
216 முனிவரன் இதனை ஆங்கண் மொழிதலும் இதனைக் கேளா
இனியதோர் உறுதி சொற்றார் எந்தையார் எனக்கீண் டென்னா
மனமுற முறுவல் செய்து மதலையாம் ஒருவற் கீது
வினையறு தவத்தின் நீரும் விளம்புதல் மரபோ வென்றான். 15
217 வேறு
பேதைப் படுக்கும் பிறவிக் கடல்நீந்தும்
ஓதித் திறத்தை உணர்ந்துடையோன் ஆதலினால்
காதற் புதல்வன் கவுச்சிகனென் போன்தனது
தாதைக் கினைய பரிசுதனைச் சாற்று கின்றான். 16
218 முன்னருள பாச முயக்கறுக்க வேண்டியநான்
பின்னுமொரு பாசம் பிணிக்கப் படுவேனேல்
தன்னிகரில் ஈசன் றனையெவ்வா றெய்துவன்யான்
இன்னலெனும் ஆழி யிடைப்பட் டுலைவேனே. 17
219 மொய்யான தில்லா முடவன்ஒரு வன்தனது
கையா னவையிரண்டுங் கந்தாத் தவழ்தருவான்
ஐயா அதற்கும் அரும்பிணியொன் றெய்தியக்கால்
உய்யானே யானும் உவன்போல் தளர்வேனோ. 18
220 மொய்யுற் றிடவே முயலுந் தவத்தினன்றிப்
பொய்யுற்ற இல்லொழுக்கம் பூண்டுவினை போக்குவது
மெய்யுற் றிடுதுகளை மிக்க புனலிருக்கச்
செய்யற்சின் னீரிடத்துத் தீர்க்குஞ் செயலன்றோ. 19
221 மண்ணுலகி லுள்ள வரம்பில் பெரும்பவத்தைப்
பெண்ணுருவ மாகப் பிரமன் படைத்தனனால்
அண்ணல் அ·துணர்தி அன்னவரைச் சிந்தைதனில்
எண்ண வரும்பாவம் எழுமையினும் நீங்குவதோ. 20
222 ஆதரவு கொண்டே அலமந்த ஐம்புலமாம்
பூதவகை யீர்க்கப் புலம்புற்ற புன்மையினேன்
மாதரெனுங் கணமும் வந்தென்னைப் பற்றியக்கால்
ஏதுசெய்கேன் அந்தோ எனக்கோ இதுவருமே. 21
223 பன்னாளும் பாரிற் பரவரலின் மூழ்குவிக்கும்
பின்னாள் நிரயப் பெரும்பிலத்தி னூடுய்க்கும்
எந்நாளில் ஆண்டகையோர்க் கின்பம் பயந்திடுமோ
மின்னார்கள் தம்மை விழையுற்ற வேட்கையதே. 22
224 துன்பம் நுகரும் வினையின் தொடர்ச்சியினோர்
இன்பம் நுகர்வார்போல் ஏந்திழையார் கட்பட்டார்
தன்பல் மிகநடுங்க ஞாளி தசையில்லா
என்பு கறித்திட்டால் இருஞ்சுவையும் பெற்றிடுமோ. 23
225 அஞ்சன வைவேற்கண் அரிவையர்தம் பேராசை
நெஞ்சு புகின்ஒருவர் நீங்கும் நிலைமைத்தோ
எஞ்சல்புரி யாதுயிரை எந்நாளும் ஈர்ந்திடுமால்
நஞ்சம் இனிதம்ம ஓர்நாளும் நலியாதே. 24
226 கள்ளுற்ற கூந்தல் கனங்குழைநல் லார்கருத்தில்
கொள்ளப் படமெண் குணிக்குந் தகைமையதோ
தள்ளற் கரிதாகித் தம்மொடுபன் னாட்பழகி
உள்ளுற்ற தேவும் உணர்தற் கரிதன்றோ. 25
227 ஓதலும் ஒன்றா உளமொன்றாச் செய்கையொன்றாப்
பேதை நிலைமை பிடித்துப் பெரும்பவஞ்செய்
மாதர் வலைப்பட்டு மயக்குற்றார் அல்லரோ
சாதல் பிறப்பில் தடுமாறு கின்றாரே. 26
228 ஆனால் உலகில் அருங்கற் பினையுடைய
மானார் இலரோ எனவே வகுப்பீரேல்
கோனான தங்கள் கொழுநன் இயல்வழுவாத்
தேனார் மொழியாரும் உண்டு சிலர்தாமே. 27
229 உற்ற வுலவையிடை ஓர்புலிங்கம் ஊட்டியக்கால்
கற்றை விடுசுடர்மீக் கான்று கனல்மிக்குப்
பற்றுதல் செல்லாத பலவினும்போய்ப் பற்றிடுமால்
அற்றெனலாம் ஈங்கோர் அரிவைமுயங் காதரமே. 28
230 சந்திரற்கு நேருவமை சாலுந் திருமுகத்துப்
பைந்தொடிக்கை நல்லார் பலரும் புடைசூழக்
குந்தமொத்த நாட்டத்துக் கோதமனார் பன்னியினால்
இந்திரற்கு நீங்கா இடர்ப்பழிஒன் றெய்தியதே. 29
231 வேறு
கூன்முகத் திங்கள் நெற்றிக் கோதையர் குழுவுக் கெல்லாந்
தான்முதல் இறைவி யாகத் தன்கையாற் சமைக்கப் பட்ட
மான்முக நோக்கி முன்னோர் மலரயன் மையல் எய்தி
நான்முகன் ஆனான் என்ப நாமுண ராத தன்றே. 30
232 மற்றுள முனிவர் தேவர் மாயமாங் காமந் தன்னால்
உற்றிடு செயற்கை யெல்லாம் உரைப்பினும் உலப்பின் றாமால்
அற்றெலா நிற்க யான்அவ் வாயிழை மடந்தை கூட்டம்
பெற்றிடும் ஒழுக்கந் தன்னைப் பேணலன் பிறப்பு நீப்பேன். 31
233 பூண்டகு விலங்கல் திண்டோட் புரந்தரன் முதலோர் சீரும்
வேண்டலன் இல்வாழ் வென்னும் வெஞ்சிறை அகத்தும் வீழேன்
மாண்டகு புலத்தின் மாயும் மயக்கொரீஇத் தவமென் றோதும்
ஈண்டிய வெறுக்கை மேவி இன்பமுற் றிருப்ப னென்றான். 32
234 இவைபல உரைத்த லோடும் இருந்தகுச் சகன்தான் இந்தக்
குவலய மதிக்கு மாற்றாற் கூறும்இல் லொழுக்கந் தன்னை
நவையென இகழா நின்றான் நான்மறைத் துணிவுங் கொள்ளான்
தவமயல் பூண்டான் என்னாத் துயர்கொடு சாற்ற லுற்றான். 33
235 புலத்தியன் போலு மேலோய் பொருவின்மங் கலஞ்சேர்பொன்னின்
கலத்தியல் வதுவை பூண்டோர் கன்னியைக் கலத்தல் செய்து
குலத்தியல் மரபின் ஓம்பக் குமரரைப் பயந்தே அன்றோ
நலத்தியல் தவத்தை ஆற்றி நண்ணருங் கதியிற் சேரல். 34
236 மன்பதை உலக மேபோல் மாலுறா மயங்கு காம
இன்பநீ நுகர்தற் கேயோ இசைத்தனன் இறந்த மேலோர்
துன்பமும் நிரயஞ் சேர்வுந் துடைத்திடுந் தொன்மை நோக்கி
அன்புறு புதல்வர்க் காக அரிவையைக் கோடி ஐயா. 35
237 சித்திரம் இலகு செவ்வாய்ச் சீறடிச் சிறுவர் தம்மைப்
புத்திர ரென்னுஞ் சொற்குப் பொருணிலை அயர்த்தி போலாம்
இத்தக வதனை நாடி இல்லறம் பூண்டு நிற்றல்
உத்தம நெறியே யாகும் தவத்தின தொழுக்கும் அ·தே. 36
238 குவவுறு நிவப்பின் மிக்க கோடுயிர் குடுமிக் குன்றின்
இவர்வுறு காத லாளர் இயற்படு சார லெய்தித்
திவவொடு போத லன்றிச் சேணுற உகளுந் தன்மைக்
குவமைய தாகும் இன்னே உயர்தவத் தொழுக உன்னல். 37
239 தருவினில் விலங்கில் அன்ன தகையன பிறவிற் சால
வருபயன் கோடற் கன்றோ மற்றவை வரைதல் செய்யார்
பெருகும்இல் லறத்தி னோடும் பெருமகப் பொருட்டால் நீயும்
அரிவையை மணந்து பின்னாள் அருந்தவம் புரிதி அன்றே. 38
240 இந்தநன் னிலைமே னாளே எண்ணிலை இந்நாள் காறும்
முந்துசெய் கடன தாற்றி முற்றினை முறையே பன்னாட்
சிந்தனை செய்த வானோர்க் கவிமுதற் சிறப்புச் செய்யாய்
மைந்தநீ இன்னே நோற்கும் வண்ணமே எண்ணற் பாற்றே. 39
241 இந்திரர் புகழுந் தொல்சீர் இல்லறம் புரிந்து ளோர்க்குத்
தந்தம தொழுக்கந் தன்னில் தகுமுறை தவற்றிற் றேனுஞ்
சிந்திடுந் தீர்வும் உண்டால் செய்தவர்க் கனைய சேரின்
உய்ந்திடல் அரிதால் வெற்பின் உச்சியின் தவற லொப்ப. 40
242 சுழிதரு பிறவி யென்னுஞ் சூழ்திரைப் பட்டுச் சோர்வுற்
றழிதரு துயர நேமி அகன்றிடல் வேண்ட மேனுங்
கழிதரு நாளான் அல்லாற் கதுமெனத் துறக்க லாமோ
வழிமுறை நும்மு னோரின் மற்றது புரிதி மன்னோ. 41
243 தேவரும் முனிவர் தாமுஞ் செங்கண்மா லயனும் மற்றும்
யாவரு மடந்தை மாரோ டில்லறத் தொழுகுந் தன்மை
மேவரப் பணித்தான் அன்றே விமலையோட டணுகி மேனாள்
தாவரும் புவன மாதி சராசரம் பயந்த தாணு. 42
244 மறுக்கலை அவன்றான் செய்த வரம்பினை வழியை வேண்டி
வெறுக்கலை எனது கூற்றை விலக்கலை உலகின் செய்கை
செறுக்கலை இகலு மாற்றாற் செப்பலை சிறிது மாற்றந்
துறக்கலை எமரை இன்னே தொன்முறை உணர்ந்த தூயோய். 43
245 வேறு
ஆடக வனப்புடை அருந்ததியை நீங்கான்
மாடுற இருத்தியும் வசிட்டமுனி யென்போன்
நீடுதவ நோன்மைகொடு நின்றனன் அதன்றிப்
பீடுகெழு ஞாலமிசை பெற்றபழி யுண்டோ. 44
246 துயக்குறு பவத்திடை தொடர்ச்சியறு தூயோர்
நயப்பொடு வெறுப்பகலின் நாளுமட மானார்
முயக்குறினும் மாதவ முயன் றிடினும் அன்னோர்
வியத்தகு மனத்துணர்வு வேறுபடு மோதான். 45
247 மேனவியல் பான்வரையும் மெல்லியலை மேவில்
தானமுள தாகும்அரி தானதவ மாகும்
வானமுள தாகுமிவண் மண்ணு முளதாகும்
ஊனமில தாகும்அரி தொன்றுமிலை யன்றே. 46
248 காண்டகைய தங்கணவ ரைக்கடவு ளார்போல்
வேண்டலுறு கற்பினர்தம் மெய்யுரையில் நிற்கும்
ஈண்டையுள தெய்வதமும் மாமுகிலு மென்றால்
ஆண்டகைமை யோர்களும் அவர்க்குநிக ரன்றே. 47
249 ஆயிழையொ டின்புறும் அறத்தைமுத லாற்றாய்
தூயதவ நன்னெறி தொடங்கல்புரி வாயேல்
மாயமிகு காமவிடம் வந்தணுகின் அம்மா
மேயவிதி காக்கினும் விலக்கியிட லாமோ. 48
250 துறந்தவர்கள் வேண்டியதொர் துப்புரவு நல்கி
இறந்தவர்கள் காமுறும் இருங்கடன இயற்றி
அறம்பலவும் ஆற்றிவிருந் தோம்புமுறை யல்லால்
பிறந்தநெறி யாலுளதொர் பேருதவி யாதோ. 49
251 மெத்துதிறல் ஆடவரும் மெல்லியல்நல் லாருஞ்
சித்தமுற நன்கினொடு தீதுசெயல் ஊழே
உய்த்தபடி யல்லதிலை யாம்உழவர் ஒண்செய்
வித்துபய னேயலது வேறுபெற லாமோ. 50
252 நற்றவம தாகுமில றந்தனை நடாத்திச்
சுற்றமற நீங்குதுற வேதுறவ தம்மா
மற்றது புரிந்திடின் உனக்குநவை வாரா
அற்றது மறுத்துரையல் ஆணைநம தென்றான். 51
253 அன்னபல மாமுனி யறைந்திடலும் ஓரா
முன்னமறை யாதிய மொழிந்ததுணி வென்றார்
பன்னகம் அணிந்திடு பரன்பணியும் என்றார்
என்னினி உரைப்பதென எண்ணிஇனை கின்றான். 52
254 தத்தமத ருட்குரவர் தாவில்வளம் நீங்கி
அத்தியிடை யாழ்கெனினும் அன்பினது செய்கை
புத்திரர்கள் தங்கள்கட னாம்புதுமை யன்றே
இத்திறம் மறுக்கலன் இசைந்திடுவன் யானும். 53
255 தந்தைசொல் மறுப்பவர்கள் தாயுரை தடுப்போர்
அந்தமறு தேசிகர்தம் ஆணையை இகந்தோர்
வந்தனைசெய் வேதநெறி மாற்றினர்கள் மாறாச்
செந்தழல வாயநிர யத்தினிடை சேர்வார். 54
256 ஆதலின் விலக்கல்முறை அன்றென வலித்துக்
கோதறு குணத்தின்மிகு குச்சகர்தம் அம்பொற்
பாதம திறைஞ்சிமுனி யேல்பணியில் நிற்பன்
ஓதுவ துனக்குள தெனக்கழறல் உற்றான். 55
257 தன்னுரைகொ ளாதமனை வாழ்க்கையது தன்னில்
வெந்நிரயம் வீழும்வகை யேவிழுமி தம்மா
அன்னரொடு மேவியமர் ஆடவர் தமக்குப்
பின்னுமொரு கூற்றுமுள தோபிணியும் உண்டோ. 56
258 என்னுரையி னிற்சிறிதும் எஞ்சலில வாகி
மன்னுமியல் பெற்றிடு மடந்தையுள ளேல்அக்
கன்னிதனை யான்வரைவல் காயெரிமுன் என்னாச்
சொன்னமொழி கேட்டுமகிழ் வுற்றுமுனி சொல்லும். 57
259 வேறு
யானும் உய்ந்தனன் என்கிளை யுய்ந்தன இனையதால் நினையீன்றாள்,
தானும் உய்ந்தனள் தவங்களும் உய்ந்தன தண்ணளி யது மற்றால்,
வானும் உய்ந்தன மண்ணுல குய்ந்தன வாசவ னெனவாழுங்,
கோனும் உய்ந்தனன் என்னுரை மறாமலுட் கொண்டனை அதனாலே. 58
260 வேண்டும் வேட்கையை உரைத்தியால் மைந்தநீ விளம்பிய இயல்பெல்லாம்,
பூண்டு குற்றமோர் சிறிதுமில் லாததோர் பூவையைப் புவியின்பாற்,
தேண்டி நின்வயிற் புணர்க்குவன் அங்கது செய்கலா தொழிவேனேல்,
மாண்டி றந்திடுங் குறைமதிக் கதிரென மாய்கஎன் தவமென்றான். 59
261 இனைய பான்மையிற் குச்சகன் சூளுரை இயம்பலுந் திருமால் முன்,
புனையும் மெய்ப்பெயர் தரித்தசேய் ஆங்கவன் பொலங்கழல் தனைப்பூண்டோர்,
தனயன் உய்பொருட் டாலிது புகன்றனை தவத்தினில் தலையான,
முனிவ நீயுனக் கரியதாய் ஒருபொருள் முச்சகந் தனிலுண்டோ. 60
262 ஆவ தேனும்யான் உரைப்பதுண் டத்தனை யற்றவர் அருளும்யாய்,
சாவ தாயினர் தன்னையர் இல்லவர் தங்கையர் இலரானோர்,
காவ லாடவர் தம்முடன் உதித்திடார் காசினி தனிலன்னோர்,
வீவதாயினர் பெருங்கிளை இல்லவர் வியத்தகு திருவற்றோர். 61
263 குடிப்பி றந்திலர் பிணியுறும் இருமுது குரவர்பாற் குறுகுற்றோர்,
கடுத்த யங்கிய மிடற்றிறை யாதியாங் கடவுளர் பெயர்கொள்ளா,
தடுத்த மாக்கடம் பெயர்பெறு பீடிலர் அலகைதன் நாமத்தோர்,
படித்த லந்தனில் புன்னெறிச் சமயமாம் படுகுழிப் பட்டுள்ளோர். 62
264 பிணியர் மூங்கையர் பங்கினர் வெதிரினர் பிறர்மனை தனிற் செல்வோர்,
கணிகை மாதரின் விழிப்பவர் பன்முறை காளையர் தமை நோக்கி,
நயிண காதலான் முன்கடை நிற்பவர் நலம்பெறப் புனைகின்றோர்,
தணிவில் துயில்மிகும் இயல்பினர் தன்னினும் மூப்புற்றோர். 63
265 ஒருமை தங்கிய கோத்திர மரபினர் உயாந்தவர் குறளானோர்,
பருமை தங்கிய யாக்கையர் மெல்லுருப் படைத்தவர் பயனில்லாக்,
கருமை தங்கிய வடிவினர் பொன்னெனக் கவின்றெழு காயத்தோர்,
இருமை தங்கிய பசப்பினர் விளர்ப்பினர் எருவையின் உருமிக்கோர். 64
266 நாணி லாதவர் ஆடவர் புணர்ச்சியில் நணியவர் நகைக்கின்றோர்,
ஏணி லாதவர் பெருமிடல் சான்றவர் இருமுது குரவோர்தம்,
ஆணை நீங்கினர் சினத்தினர் இகலினர் அடுதிறம் முயல்கின்றோர்,
காண வேணடினர் நடமுத லாயின காமனாற் கவல்கின்றோர். 65
267 ஈசன் அன்பிலர் பெருந்தகை முனிவரை இகழ்பவர் உயிர்மீது,
நேசமென்பன இல்லவர் தங்குல நெறிதனில் நில்லாதோர்,
மாசு தங்கிய குணத்தினர் நிறையிலார் மனமெனுங் காப்பில்லோர்,
தேசி கன்றனை மனிதனென் றுன்னினர் தேவரைச் சிலையென்றோர். 66
268 பத்தின் மேற்படும் ஆண்டினர் பூத்திடு பருவம்வந் தணுகுற்றோர்,
ஒத்த பண்பிலர் அச்சமில் மனத்தினர் உருமென வுரை செய்வோர்,
அத்தன் அன்னையீந் தருளுமுன் ஒருவர்பால் ஆர்வமுற்றவர்சேர,
வைத்த சிந்தையர் பெருமிதம் உற்றுளோர் மடமொடு பயிர்ப்பில்லோர். 67
269 பிறப்பின் எல்லையில் விழியிலார் தோற்றிய பின்றையே இழக்கின்றோர்,
மறுப்ப யின்றிடுங் கண்ணினர் படலிகை வயங்கிய நோக்கத்தார்,
குறிப்பின் மெல்லென வெ·கியே விழித்திடுங் குருடர்சாய் நயனத்தோர்,
சிறப்பில் பூஞையின் நாட்டத்தர் கணத்தினில் திரிதரு செங்கண்ணோர். 68
270 தூறு சென்னியர் நரைமுதிர் கூந்தலர் துகளுறும் ஐம்பாலார்,
வீறு கோதையர் சின்னமார் குழலினர் விரிதரும் அளகத்தோர்,
ஈறில் செம்மயிர்ப் பங்கியர் நிலனிடை இறக்கிய கேசத்தோர்,
ஊறு சேர்தரும் ஓதியர் விலங்கென உரமிகு குரலுள்ளோர். 69
271 சிறுகு கண்ணினர் மிகநெடுந் துண்டத்தர் சேர்ந்திடு புருவத்தோர்,
குறிய காதினர் உயர்தரும் எயிற்றினர் கோணுறு கண்டத்தோர்,
மறுவி ராவிய முகத்தினர் சுணங்குறா மணிமுலை மார்பத்தோர்,
வெறிய தாகிய நுசுப்பிலர் சிலையென வியன்மிகு வயினுள்ளோர். 70
272 காய நூல்முறை உரைத்திடும் இயல்பிலாக் கடிதட நிதம்பத்தோர்,
வாயும் அங்கையும் நகமுமுள் ளடிகளும் வனப்புறு சிவப்பில்லோர்,
மேய சின்மயிர் பரந்திடு பதத்தினர் மென்சிறை எகினம்போல்,
தூய நன்னடை இல்லவர் அங்குலி தொல்புவி தோயாதோர். 71
273 இனைய தன்மைய ராகிய மாதர்கள் ஏனையர் இவர்யாவரும்,
புனையு மங்கல மாகிய கடிவினை புரிதர வரையாதோர்,
அனைய ரேயெனின் வேண்டலன் முழுவதும் அவரியல் அணுகாத,
வனிதை யுண்டெனின் வேண்டுவன் தேர்ந்தனை மரபினில் தருகென்றான். 72
274 காட்டில் நின்றிடு குற்றியின் நோற்புறு கவுச்சிகன் இவைகூறக்,
கேட்டு மூரலும் உவகையுங் கிடைத்தனன் கேடில்சீர் உலகுள்ள,
நாட்ட கந்தனில் நாடிநல் லியல்புள நங்கையை நின்பாலிற்,
கூட்டுகின்றனன் மானுதல் ஒழிகெனக் குச்சகன் உரைசெய்தான். 73
275 உரைத்த குச்சகன் மைந்தனை நிறுவியே ஒல்லைசென் றகிலத்தில்,
திருத்த குஞ்சுடர் மலிதரு செம்பொனிற் செய்ததோர் அணிநாப்பண்,
அருத்தி சேர்தரக் குயிற்றிட வேண்டியோர் அருமணி தனைக்கொள்வான்,
கருத்தி லுன்னுபு தெரிபவன் போல்ஒரு கன்னியைத் தேர்கின்றான். 74
276 வேறு
அன்னவன் தன்னேர் முனிவரர் சிலர்வந் தணுகலும் அவரொடும் வினாவிச்,
சென்னிதன் தேயத் தநாமயம் என்னுஞ் செயிரிலா வனத்துசத் தியன்பால்,
கன்னிகை யிருத்தல் உணர்ந்துமற் றவன்பாற் கதுமெனச் சேறலுங் காணூஉத்,
தன்னடி வணங்க வெதிருறத் தொழுது தழுவியே அவனொடுஞ் சாரா. 75
277 மாசற வியன்ற உறையுளிற் கொடுபோய் வரன்முறை வழாமலே அமைத்த,
ஆசனத் திருத்திக் கன்னிகை யொடுதன் பன்னியை யாயிடை அழைத்துத்,
தேசிக னுற்றான் பணிமின்நீர் என்னாச் சென்னியால் இறைஞ்சுவித் துரிய,
பூசனை புரிந்து நகையொடு முகமன் புகன்றள வளாயினன் புனிதன். 76
278 அறுசுவை கெழுவும் நறியசிற் றுண்டி அமுதினில் தூயன அருத்திக்,
குறைவறும் அடிகட் கென்னிடை வேண்டுங் கொள்கைய தென்னெனக் கூற,
மறுவறு தவத்துக் குச்சக முனிவன் மகிழ்ந்துநீ மாதவம் புரிந்து,
பெருமகள் தன்னை யெனதொரு மகற்குப் பேசுவான் பெயர்ந்தனன் என்றான். 77
279 இனையசொல் வினவி முனிவரன் மகிழா என்மகள் விருத்தையை இயல்சேர்,
உனதுமைந் தற்கு நல்கமுன் செய்த உயர்தவம் என்கொலென் றுரைத்து,
மனமுற நகையும் உவகையுங் கிளர மணவினை இசைந்துமா தவத்துப்,
புனிதனை அங்கட் சிலபகல் இருத்திப் போற்றிசெய் தொழுகுறும் பொழுதின். 78
280 வேறு
பங்கமில் உசத்தியன் பன்னி யாகிய
மங்கலை விடுத்திட மகள்வி ருத்தைதான்
அங்குள இகுளையர் ஆயந் தன்னுடன்
செங்கயல் பாய்புனல் திளைப்பப் போயினாள். 79
281 காடுற வந்திடு கலுழி மாண்புனல்
ஆடினள் மகிழ்சிறந் தணங்க னாரொடு
மாடுறு பொதும்பர்போய் மலர்கொய் தன்னவை
சூடினள் இருந்தனள் தொடலை ஆற்றியே. 80
282 பாசிழை மங்கையர் பண்ணை யோடெழீஇ
ஆசறு பொதும்பினும் அணங்கை யன்னவள்
மாசறு தாரகை மரபிற் சூழ்தருந்
தேசுறு மதியெனத் திரும்பவும் வேலையே. 81
283 உருகெழு கனையொலி உருமுக் கான்றிடுங்
கருமுகில் இ·தெனக் கனன்று காய்கனல்
சொரிதரும் விழியது சூர்த்த மெய்யது
பெருமத நதியொடு பெயரு கின்றதே. 82
284 தாழுறு கரத்தது தடத்தின் சால்பெனக்
காழுறும் எயிற்றத கறைகொள் காலதால்
ஏழுகியர் குறும்பொறை இபமொன் றேற்றெதிர்
பாழிய வரைதுகள் படுத்துச் சென்றதே. 83
285 காண்டலும் வெருவினர் கவன்றவ் வாறுசெல்
ஆண்டகை யோர்களும் அகன்று சிந்தினார்
நீண்டிடு கடலிடை நிமிர்ந்த வெவ்விடம்
ஈண்டலும் இரிந்தபுத் தேளிர் என்னவே. 84
286 கன்னிகை விருத்தையாள் கண்டு துன்புறா
அன்னமென் னடையினர் அகன்று சிந்தலும்
என்னினி இழைப்பதென் றிரங்கி யேங்கியே
உன்னருங் கடுப்பினில் உஞற்றி யோடலும். 85
287 கீழ்ந்தறை போகிய கிளைஞ ராமெனத்
தாழ்ந்திடு பசும்புதல் செறியத் தான்மறைந்
தாழ்ந்திடு கூவலொன் றணுக அன்னதில்
வீழ்ந்தனள் அழுந்தினள் விளிவுற் றாளரோ. 86
288 முடங்களை அலங்குறு முதிய பூநுதல்
மடங்கலின் ஏறெதிர் வரினும் மாறுகொள்
கடங்கலுழ் மால்கரி கல்லென் ஆர்ப்பொடு
நடந்தது மலையமா னாடு சாரவே. 87
289 இரிந்திடு மாதரார் யாண்டு மாகியே
விரிந்திடு வோர்குழீஇ வியர்க்கு மேனியர்
சரிந்திடு கூந்தலர் தளரும் நெஞ்சினர்
பிரிந்திடும் உவகையர் பெயர்ந்து நாடினார். 88
290 தண்டம தெங்கணுந் தானஞ் சிந்திடக்
கொண்டலின் எய்திய கோட்டு மாதிரங்
கண்டிலர் கன்னிகை தனையுங் காண்கிலர்
உண்டிலை யெனவுயிர் உயிர்ப்பு நீங்கினார். 89
291 மண்ணிடை யாறென வழிக்கொண் டேகவே
கண்ணிணை புனலுகக் கலுழ்ந்து சோர்வுறாத்
துண்ணென உணர்வுறத் துளங்கிச் சூழ்கனல்
புண்ணுறு வோரெனப் புலம்பல் மேயினார். 90
292 வேறு
பெண்ணுக் கணிகலமே பேராகுக் கோருருவே
கண்ணுக் கணியே கமலத்துச் செந்திருவே
மண்ணிற் புனல்படிந்தாய் வானதியும் ஆடுவதற்
கெண்ணித் துணிந்தோ எமைவிட்டுப் போயினையே. 91
293 வன்னப் புனலாட்டி வல்லே புறங்காத்தென்
மின்னைத் தருதி ரெனவே விடைகொடுத்த
அன்னைக்கென் சொல்வேம் அடுகளிற்றின் முன்னாக
உன்னைத் தனிவிட் டுயிர்கொண்டு போந்தனமே. 92
294 ஐயர் உசத்தியரும் அன்னையெனும் மங்கலையும்
வையம் பரவுகின்ற மாதுலராங் குச்சகருங்
கையறவின் மூழ்கக் கரந்தாய் இனியொருகால்
செய்ய முகமுந் திருநகையுங் காட்டாயோ. 93
295 என்னப் பலவும் புலம்பி இரங்குற்றே
உன்னற் கருஞ்சீர் உசத்தியன்றான் நற்றவத்தின்
மன்னுற்ற தெய்வ வனத்தின் மலைவாழக்கைப்
பன்னிக் கிவையுரைத்துப் பாவைநல்லார் ஆவலித்தார். 94
296 கேட்டிடலும் அன்னை வயிறதுக்கிக் கேழ்கிளர்தீ
ஊட்டரக்கே யென்ன உருகி மனமறுகி
வாட்டடங்கண் நீர்குதிப்ப வாய்வெரீஇத் தன்கணவன்
தாட்டுணையில் வீழ்ந்து புகுந்தபடி சாற்றினளால். 95
297 ஒன்றுபுரி காட்சி முனிவன் உவைகேட்டுக்
கன்றுபிரி தாயின் கவன்றரற்றிக் கன்னியொடு
சென்றுபிரி வுற்றோரை நோக்கிச் சினக்களிறு
கொன்றதுவோ அஞ்சாது கூறுமெனச் செப்புதலும். 96
298 தூயபுன லாடித் துறைபுகுந்து சூழ்பொதும்பில்
ஆயமுடன் ஆடி யகன்றிங்கு வந்திடலுங்
காயுமழல் வெங்கட் கடகளிறு வந்ததுகண்
டோயுமுணர் வெய்தி எல்லோமும் ஓடினமால். 97
299 ஓடி யுலையா ஒருவர் நெறியொருவர்
கூடல் இலதா அணியின் குழாஞ்சிந்திச்
சாடு மதகரியில் தப்பி விருத்தைதனைத்
தேடியங்ஙன் காணாது சென்றனம்யாம் என்றிடலும். 98
300 சென்றாங்கவ் வெல்லைதனில் தேடித் தியங்குற்று
நின்றான் மகள்தன் நிறங்கிளரும் பொற்கலனோர்
ஒன்றாக வெவ்வே றொருநெறியில் சிந்திடக்கண்
டென்றாய் படர்ந்தநெறி ஈதுகொலென் றேமுற்றான். 99
301 பூண்போ கியநெறியே தொட்டுப் புதல்விதனைக்
காண்போ மெனவே கனங்குழையா ரோடேகி
மாண்போய கூவலொன்று வந்தணுக ஆங்கதனில்
சேண்போய தன்மகளைக் கண்டு தெருமந்தான். 100
302 வேறு
கூவலுறு வதுநோக்கி நெடிதுயிர்த்து விழிவழிநீர் குதிப்பக் குப்புற்,
றாவலியா மகளையெடுத் தகன்கரையின் பாற்படுத்தி அழுங்கலோடும்,
பாவையர்கள் தழீஇக்கொண்டு புலம்பினரால் அதுகேட்டுப் பயந்த நற்றாய்,
காவிலுறு கோகிலம்போல் நெடிதரற்றிப் பெருந்துயரக் கடலுட் பட்டாள். 101
303 தன்பால்வந் தவதரித்த நங்கைதனைக் கைவிட்டுத் தரியா ளாகி,
அன்பாலே உயிர்பதைப்ப வயிறதுக்கி ஆகுலியா அரற்றி யேங்கி,
மின்பாலோர் மின்படிந்த தன்மையென அவளாக மிசையே வீழ்ந்து,
தென்பாலிற் புகுந்தனையோ ஓமகளே யெனப்புலம்பித் தேம்ப லுற்றாள். 102
304 அன்னேயோ அன்னேயோ ஆகொடிய தறனேயோ அறியேன் அந்தோ,
முன்னேயோ நெடுங்காலங் குழவியின்றிப் பெரநோன்பு முயன்று பெற்ற,
மின்னேயோ உயிரிழந்து வௌ¢ளிடையிற் கிடந்திடுமால் விதியார் செய்கை,
இன்னேயோ யானொருத்தி பெண்பிறந்து பெற்றபயன் இதுவே யன்றோ. 103
305 புலிக்கணங்கள் திரிகானில் ஒருமானை வளர்த்ததனைப் போக்கி நின்றே,
அலக்கணுறு வோரெனவே கைவிட்டுத் தமியேனும் அழுங்கா நின்றேன்,
மலர்க்கமலத் திருவைநிகர் என்மகளைக் கொல்லியமுன் வந்த தந்தக்,
கொலைக்க ளிற்றின் வடிவன்றே கொடியேன் செய் பெரும்பவத்தின் கோல மன்றோ. 104
306 அறங்காட்டிற் சென்றதுவோ தெய்வதமும் இங்கிலையோ அரிதா முத்தித்,
திறங்காட்டுந் தவநெறியும் பொய்த்தனவோ கலியுமினிச் சேர்ந்த தேயோ,
மறங்காட்டும் வனக்களிறு வந்தடர்க்க ஈண்டெனது மாது மாண்டு,
புறங்காட்டிற் கிடந்திடுமோ என்னேயென் னேயிதுவோர் புதுமை யாமே. 105
307 வேறு
என்றிவை பலவும் பன்னி இடருழந் தரற்றும் வேலை
மன்றலங் குழலின் மாதர் வளைந்தனர் இரங்கி மாழ்க
ஒன்றிய கேளிர் அல்லா ரியாவரும் உருகி நைந்தார்
அன்றவண் நிகழ்ந்த பூசல் ஆகுலம் அறைதற் பாற்றோ. 106
308 கோட்டமில் சிந்தை யோனாங் குச்சகன் குறுகி யங்கண்
நாட்டநீர் பனிப்பச் சோரும் நங்கையர் தம்பா லெய்தி
மீட்டினித் தருவன் மாதை விம்மலிர் என்னா வேறோர்
மாட்டுற விருந்த தந்தைக் கினையன வகுத்துச் சொல்வான். 107
309 மறைமுத லாய நுண்ணூல் மருளற உணரா மாக்கள்
சிறியரே முதியர் பாலர் சேயிழை மகளிர் இன்னோர்
உறுவதோர் அவலஞ் செய்தாய் ஊழ்வினை முறையும் ஓராய்
அறிவநீ இன்னே யாயின் ஆரிது தணிக்கற் பாலார். 108
310 கேளையா மனத்தில் துன்பங் கிளத்தலை கேடு நீங்கி
நீளயா வுயிர்த்தார் போலிந் நேரிழைக் கன்னி தன்னை
நாளையான் விளித்து நின்பால் நல்குவன் நல்க நீநங்
காளையா னவற்குப் பின்னாட் கடிமணம் புரிதி அன்றே. 109
311 ஐயமென் றுளத்தி லுன்னி அழுங்கலை விதியு மற்றே
மெய்யுணர் வதனாற் கண்டாம் ¤வருத்தைதன் யாக்கை தன்னை
மொய்யுறு தயிலத் தோணி மூழ்குவித் திருத்தி யின்றே
ஒய்யென நோற்று மீட்டுத் தருகுவன் உயிரை யென்றான். 110
312 சாற்றிய துணர்ந்து தாதை தயிலத்தி லிட்டு மாதைப்
போற்றினன் இருப்ப மேலோன் போயொரு பொய்கை மூழ்கிக்
கூற்றுவற் புகழ்ந்து நோற்பக் கொடுங்குழை மடவார் அஞ்சக்
காற்றென முன்னர் வந்த களிறுமீண் டணைந்த தம்மா. 111
313 தடமிகு புனலுட் புக்குத் தாளினால் உலக்கிச் சாடிப்
படவர வனைய செய்கைப் பருவலித் தடக்கை தன்னால்
இடைதொறுந் துழாவி நின்ற இருந்தவ முனிவற் பற்றிப்
பிடர்மிசை யேற்றிக் கொண்டு பெரிதுசேண் பெயர்ந்த தன்றே. 112
314 கோதறு குணத்தின் மேலாங் குச்சகன் என்னுந் தொல்பேர்
மாதவன் உணர்ந்து பின்னர் மதக்களி றதனை நோக்கி
ஈதெனைப் பற்றிச் செல்வ தென்கொல்கா ரணமென் றெண்ணி
ஓதியின் வலியா லன்ன தூழமுறை உன்ன லுற்றான். 113
315 வேறு
மாவ தத்தினை இழைத்திடும் பூட்கையின் மதநீர்
காவ தத்தினுங் கமழ்தரு கலிங்கநாட் டதன்பால்
ஆவ தத்நேர் மாக்கள்வாழ் அரிபுரம் அதனில்
தேவ தத்தன்என் றுளன்ஒரு வணிகரில் திலகன். 114
316 தவத்தின் அன்னவன் பெறுமகன் தருமதத் தன்எனப்
புவிக்கண் மேலவர் புகழ்செய அறம்புரி புகழோன்
கவற்சி யின்றியே மூவகைப் பொருளையுங் காண்போன்
உவப்பு நீடிய இருநிதிக் கிறையினும் உயர்ந்தோன். 115
317 தந்தை அன்னையும் இறத்தலுந் தமியனே யாகச்
சிந்தை வெந்துயர் உழந்துபின் ஒருவகை தேற
அந்த வேலையின் அவன்பெருந் திருவினை அகற்ற
வந்து தோன்றினன் மனமருள் செய்வதோர் வாதி. 116
318 முண்டி தப்படு சென்னியன் தாதுவின் முயங்கு
குண்ட லத்தினன் கோலநூல் மார்வினன் நீற்றுப்
புண்ட ரத்தயல் நெற்றியண்¢ கஞ்சுகன் புதியோன்
கண்டி கைக்கலன் புனைந்துளோன் வேத்திரக் கரத்தோள். 117
319 அவனைக் கண்டனன் அடிமுறை வணங்கின் அருவாஞ்
சிவனைக் கண்டன னாமெனப் பெருமகிழ் சிறந்தான்
புவனிக் குள்ளவர் என்னினுஞ் சாலவும் புதியர்
தவமிக் கோரிவர் என்றுகொண் டுறையுளிற் சார்ந்தான். 118
320 பொன்ன ருங்கலந் திருத்துபு குய்யுடைப் பழுக்கல்
நன்ன லம்பெற அருத்தினன் முகமனும் நவின்றான்
பின்னர் அன்னவன் றனையெதிர் நோக்கினன் பெரியோய்
என்னி வண்வந்த தென்றனன் வணிகருக் கிறைவன். 119
321 ஈசன் தந்திடு விஞ்சையொன் றெமக்குள தெவர்க்கும்
பேசுந் தன்மைய தன்றது குரவர்பாற் பெரிதும்
நேசம் பூண்டவர்க் குரைப்பது நெஞ்சினில் சிறிதும்
மாசின் றாயநிற் குணர்த்துவன் அ·தென வகுத்தான். 120
322 சரத மேயிது சம்புவின் வந்ததோர் தகைசால்
இரத முண்டது பொன்னெனச் செய்தனம் எமக்கோர்
அரிது மன்றது போல்வன பலவுள அவைதாம்
விரத மாதவர் அல்லதி யார்கொலோ விரும்பார். 121
323 காரி ரும்பையும் நாகத்திற் காட்டுதுங் கரிய
சீரி ரும்பினைப் பொன்னென உரைபெறச் செய்வாம்
மேரு வுங்கயி லாயமும் என்றிரு வெற்பை
யாரும் நோக்கவே காட்டுதும் இவைநமக் கரிதோ. 122
324 எய்தும் ஈயமும் இரதமும் வௌ¢ளிய தெனவே
செய்து மன்றியும் வங்கத்திற் செம்பொனுந் தெரிப்பாம்
நொய்தின் அன்னது வலியுறக் காட்டுதும் நுவலுங்
கைத வம்பயில் மாக்களுக் கினையன கழறாம். 123
325 இரும்பி னிற்செம்பு வாங்குவம் ஈயமும் அற்றே
வரம்பி லாததோர் தரணியண் டஙகளை மரபின்
அரும்பொன் வண்ணம தாக்குவம் வல்லவா றறைய
விரும்பி னாமெனின் யாண்டுமோர் அளப்பில வேண்டும். 124
326 ஒன்று கோடிபொன் னாக்குவங் கோடிய துளவேல்
குன்று போலவே கோடியிற் கோடிசெய் குவமால்
நின்ற னக்குள பொருளெலாந் தருதியேல் நினது
மன்றல் மாளிகை நிதிக்கிடம் இல்லென வகுப்பாம். 125
327 என்ன வேமொழி சோரனை வணங்கினன் இமைப்பின்
முன்னர் உள்ளதுந் தான்றன துரிமையால் முயலப்
பின்னர் எய்திய நிதியமும் பேழையான் அவற்றின்
மன்னு பூண்களுங் கொணர்ந்தனன் முன்புற வைத்தான். 126
328 வைத்த மாநிதி நோக்கலும் வணிகரில் திலகர்
உய்த்த செல்வமும் இதுகொலோ ஓவென உரையாக்
கைத்த லங்கொடு கைத்தலம் புடைத்துடுக் கணங்கள்
நத்த வேலையிற் ஒருங்குபட் டாலென நகைத்தான். 127
329 இந்த நின்பொருள் நம்முடை விஞ்சையில் இறைக்கும்
வந்தி டாதுநாம் உருக்குறு முகந்தனில் வழுவிச்
சிந்து கின்றதற் கிலையிது நமதுபின் திரியின்
அந்த மில்பொருள் கொடுக்குவம் வைத்தியென் றறைந்தான். 128
330 முனியல் ஐயநீ வேண்டிய பெருநிதி முழுதும்
இனிது நாடியே கொணருவன் இருத்தியென் றுரைத்துப்
புனையும் ஆடையும் நிலங்களும் மணிகளும் ம்
மனையும் மாக்களும் பகர்ந்தனன் நிகரிலா வணிகன். 129
331 பொரும தத்தினை இழைத்திடு மருப்புயர் புழைக்கைப்
பெரும தக்கரி யென்னவே மயங்கினன் பெரிதும்
வரும தத்தமென் றறத்தையும் பர்ந்துமெய் வணிகன்
தரும தத்தனாம் பெயரினை நிறுவினன் தரைமேல். 130
332 இத்தி றத்தினில் தேடிய பெருநிதி எனைத்துங்
கைத்த லங்கொடு தாங்கியே கரவன்முன் காண
வைத்து நிற்றலும் மகிழ்ந்தனன் அவையெலாம் வாங்கி
மொய்த்த செங்கணல் தீயிடை உருக்குதல் முயன்றான். 131
333 திரட்டி யாவையும் ஓருரு வாக்கினன் செழும்பொன்
இரட்டி தூக்கிய இரதமாங் கொருசிலை யிட்டு
மருட்டி ஆடக முழுவதும் உரைத்தவை வலிதா
உருட்டி மட்பெருங் குகையினில் மருந்தையுள் ளுறுத்தான். 132
334 பண்ணு றுத்திய கனகமுள் ளிட்டதன் பாலும்
எண்ணு றுத்திய மிசைக்கணுங் களங்கமொன் றிட்டு
மண்ணு றுத்திநற் றுகில்கொடு பொதிந்தனன் மருங்கிற்
கண்ணு றுத்திய செந்தழற் புடைமிசை கரந்தான். 133
335 நூற்று நான்கொடு நான்குகுக் குடபுடம் நொய்தின்
வீற்று வீற்றதா விட்டது நோக்கினன் மிகவும்
மாற்று வந்தது பழுக்குமோர் வராகியின் மருளேல்
காற்றி லாததோர் உறையுள்காட் டென்றனன் கரவன். 134
336 சேமஞ் செய்ததோர் உறையுளைக் காட்டலுஞ் சென்று
வாமஞ் செய்ததோர் இந்தனக் குவான்மிசை மறவோர்
ஈமஞ் செய்தசெந் தழற்கொடு வராகிமே லிட்டுத்
தூமஞ் செய்தனன் அங்கியும் அவனெதிர் துரந்தான். 135
337 ஓங்கி நாட்டநீர் பொழிதர ஆருயிர் உலைய
வீங்கு கின்றமெய் வெதும்புற எங்கணும் வியர்ப்ப
மூங்கை யாமென மொழிகிலான் போவது முயலான்
பாங்கி ருந்திடு வணிகர்கோன் பட்டதார் பகர்வார். 136
338 எல்லை அன்னதிற் பொதிந்திடு பொற்குறை யெடுத்து
மெல்லெ னத்தன தாடையிற் கரந்தனன் வெய்யோன்
வல்லை யக்குகை போலஒன் றிருந்தது மருங்கில்
செல்ல வைத்தனன் தழற்பெரும் புகையையுந் தீர்த்தான். 137
339 தந்த இக்குகை நின்கையில் தாங்கினை தழல்மேல்
வைத்தி என்றனன் அவனது புரிதலும் மரபின்
அத்த குஞ்செயற் குரியன யாவையும் அமைத்து
வித்த கம்பெறச் சேமியா ஒருசெயல் விதித்தான். 138
340 வேறு
உண்டி இகந்துரை யாடலை யாகிப்
பெண்டிரை வெ·கல் பெறாய்பிறர் தம்மைக்
கண்டிடல் இன்று கருத்தினில் என்மைக்
கொண்டிரு முப்பகல் கோதில் குணத்தோர். 139
341 நெய்கமழ் செஞ்சடை நீலிதன் முன்னோர்
மொய்கனல் வேள்வி முடித்திடல் உண்டால்
செய்கடன் அன்னது தீர்த்தபின் நாலாம்
வைகலின் ஏகுதும் மற்றிவண் என்றான். 140
342 அம்முறை செய்கென ஆங்கவன் அடியை
மும்முறை தாழ்ந்து முதற்பெரு வணிகச்
செம்மல வன்புடை சென்றிலன் நின்றான்
மைம்மலி சிந்தையன் வல்லை அகன்றான். 141
343 காவத மோரொரு கன்னலின் ஆகப்
போவது செய்து புறத்துரு மாறி
வாவினன் வேறொர் வளாகம துற்றான்
ஏவலின் வைகினன் இத்தலை வணிகன். 142
344 முப்பகல் போதலும் மூதறி வுள்ளோன்
செப்பிய நாள்வரை சென்றுள வன்றே
இப்பகல் வந்திலன் என்னை அவன்சொல்
தப்புவ னோவென வேதளர் கின்றான். 143
345 நீடிய தொல்புகழ் நீலி இருக்கை
நாடினன் மேதகு நன்னகர் எங்கும்
தேடினன் மாலுறு சிந்தைய னானான்
வாடினன் மீண்டனன் மாளிகை வந்தான். 144
346 அடுத்துமுன் வைத்த அருங்குகை தன்னை
எடுத்தது நோக்க இரும்பது வாக
வடுத்தவிர் சிந்தையன் மாயைகொ லென்னா
விடுத்தனன் அன்னது வீழுமுன் வீழ்ந்தான். 145
347 அத்தம் அனைத்தும் அகன்றிட லோடும்
பித்தின் மனத்தொடு பீழை யனாகி
எய்த்தனன் ஆயுளின் எல்லையும் எய்தத்
தத்தனும் விண்ணிடை சார்ந்தனன் அன்றே. 146
348 அறந்தனை விற்ற அருஞ்செய லாலே
மறந்தரு தந்தனு மால்கரி யாகிப்
பிறந்தனன் முன்னுறு பெற்றிய தெல்லாம்
மறந்தனன் என்று மனத்திடை கொண்டு. 147
349 மாற்றுவன் இப்பவம் வல்லையி னென்னாச்
சாற்றினன் முன்பு தவம்புரி வேலை
நோற்றிடு மோர்பகல் நோன்பவை தான்இவ்
வாற்றல்இ பத்துழை யாகுக வென்றான். 148
350 இப்பரி சங்கண் இயம்புத லோடும்
அப்பொழு தன்னவன் ஆண்டுறு வேழம்
மெய்ப்படி வந்தனை வீட்டினன் யாருஞ்
செப்பரி தாகிய தேவுரு வானான். 149
351 அந்தர துந்துபி யார்த்தன வானோர்
சிந்தினர் பூமழை சேணிடை நின்றும்
வந்தது தெய்வத மானம தன்பால்
இந்திர னாமென ஏறினன் அன்றே. 150
352 பாசிழை மங்கையர் பற்பலர் சுற்றா
வீசினர் சாமரை விண்ணுறை கின்றோர்
ஆசிகள் கூறினர் அங்கவண் நிற்குந்
தேசிக னாரடி செங்கை குவித்தான். 151
353 நோக்கினன் மாதவ நோன்மை யுளானை
வாக்கினில் வந்தன வந்தனை செய்தான்
நீக்கரும் வல்வினை நீக்கினை யென்னா
மேக்குயர் புங்கவர் விண்ணுல குற்றான். 152
354 விண்ணிடை யேயவன் மேவுத லோடு
மண்ணிடை நின்றிடு மாதவன் முன்போல்
எண்ணரு நோன்ப தியற்றலும் அன்னோன்
கண்ணிய தென்றிசை காவலன் வந்தான். 153
355 முன்னுறு கூற்றுவன் முப்பகை வென்றோய்
உன்னிலை நோக்கி உவந்தனம் நம்பால்
என்னைகொல் வேண்டிய தென்றலும் அன்னோன்
தன்னடி வீழ்ந்திது சாற்றுதல் உற்றான். 154
356 உந்திய சீர்த்தி உசத்தியன் மானென்
மைந்தன் மணஞ்செய வந்தனன் அன்னாள்
முந்துறு நென்னல் முடிந்தனள் முன்போல்
தந்தருள் என்றிது சாற்றுத லோடும். 155
357 அத்தகு போழ்தினில் அந்தகன் என்போன்
இத்தவன் வேண்டிய ஏந்திழை ஆவி
வைத்தன மேயது வல்லையின் மீட்டிங்
குய்த்திடு வாயென ஒற்றொடு சொற்றான். 156
358 கொற்றவன் இங்கிது கூறி மறைந்தான்
சொற்ற துணர்ந்திட தூதுவன் முன்போய்
உற்றிடு மவ்வுயி ரைக்கொடு போந்து
மற்றவள் யாக்கையுள் வந்திடு வித்தான். 157
359 வேறு
உடற்குளுயிர் வந்திடலும் புகுந்ததுமெய் யுணர்வுசிறி துயிர்த்த நாசி,
துடித்தனகால் பதைத்ததுரந் துளங்கிமுகம் விளங்கியதால் துவண்ட தாகம்,
எடுத்தனகை யசைந்தனதோ ளிமைத்தனகண் விழித்தனவால் இனைய காலை,
மடக்கொடியுந் துயிலுணர்ந்தாள் போலெழுந்தாள் எல்லோரும் மருங்கிற் சூழ்ந்தார். 158
360 அன்னையவள் தனைத்தழுவி இரங்குற்றாள் தந்தையெடுத் தணைத்துப் பல்காற்,
சென்னிதனில் உயிர்த்தேதன் இருகுறங்கின் மீமிசையே திகழச் சேர்த்தி,
என்னடிகள் என்கடவுள் எனதுதவப் பயனாகும் எந்தை நென்னல்,
சொன்னபடி தவமியற்றி உய்வித்தான் இவளை யென்று துணிவிற் சொற்றான். 159
361 சுற்றுகின்ற கிளைஞர்களும் அல்லோரும் அதிசயிப்பத் தொல்லை ஞாலம்,
பெற்றதிரு அனையாளதன் பெண்ணணங்கை முகநோக்கிப் பேதை நீயீண்,
டுற்றதுவும் இறந்ததுவும் மீண்டதுவும் முறைப்படவே உரைத்தி யென்னப்,
பொற்றொடியாள் அதுவினவிப் புகுந்ததொரு பரிசனைத்தும் புகல லுற்றாள். 160
362 நீடியமங் கையர்பண்ணை தன்னுடனே போந்ததுவும் நெடுநீர்க் கான்யா,
றாடியதும் மீண்டதுவுங் கடகளிறு போந்ததுவும் அதனைக் கண்டே,
ஓடியதுந் தானொருத்தி தனித்ததுவுங் கூவலிடை உலைந்து வீழ்ந்து,
வீடியதும் மீண்டதுவுந் தென்றிசைக்கண் நிகழ்வனவும் விரித்துச் சொற்றாள். 161
363 சொன்னமொழ யதுகேளா மிகமகிழும் வேலைதனில் துகளில் தூயோன்,
கொன்னவிலும் முத்தலைவேற் கூற்றுவன்றன் அருள் பெற்றுக் குறுக லோடு,
முன்னுறவே எதிர்சென்று பெருங்கிளையும் பன்னியுமா முனியும் பெற்ற,
கன்னியும்வந் தடிவணங்கிப் போற்றி செய வரன்முறையே கருணை செய்தான். 162
364 என்னுயிரும் பெருங்கிளைஞர் தம்முயிரும் இல்லறத்திற் கியன்ற பன்னி,
தன்னுயிரும் நட்டோர்கள் தமதுயிரும் நின்றிடயான் தவத்திற் பெற்ற,
மின்னுயிர்தந் தருளினையால் அரிதோநிற் கிதுவம்மா வேலை ஞாலம்,
மன்னுயிர்காத் தளிப்பவனும் நீயெனவே எனதுள்ளம் மதித்த தன்றே. 163
365 வள்ளலையுன் றிருவுளத்தை யாருணர்வார் கவுச்சிகனா மகற்கியான் பெற்ற,
தௌ¢ளமிர்த மனையமொழி விருத்தையெனுங் கன்னிகையைத் திசையின் நாடிக்,
கொள்ளுதற்கு வந்தனையோ கூற்றுவனாற் போனவுயிர் குறுகி மீண்டு,
மௌ¢ளவரும் படியஆ£த்துத் தந்திடுவான் வந்தனையோ விளம்பு கையா. 164
366 எனமுனிவன் தனைநோக்கி முகமன்கள் இவைபலவு மெடுத்துக் கூறி,
அனையவனை யுடன்கொண்டு கூற்றத்தா ரெல்லாரு மடைந்து சூழ,
மனைவியொடும் புதல்வியொடும் மடமாதர் தங்களொடும் வல்லையேகித்,
தனதுறையுள் இடைப்புகுந்து வீற்றிருந்தான் ஆற்றரிய தவத்தின் மேலோன். 165
367 பின்புமொரு சிலவைகல் குச்சகனை அவணிருத்திப் பெரியோய் இங்ஙன்,
என்புதல்வி தனையளிப்பன் உன்மதலை தனைக்கொண்டேயேகு கென்னத்,
தன்புதல்வற் கொடுவரலும் விருத்தையெனுங் கன்னிகையைத் தழல்சான் றாக,
அன்பினொடு நன்னாளி லோரைதனில் விதிமுறையே அருள்செய் தானால். 166
368 வேறு
அருள்புரிந் திடுதலும் அன்பி னான்இயைந்
யூ¤ருவரும் இல்லறம் இயற்றப் பல்பகல்
கருணைசெய் குச்சகன் கண்டு மாதவம்
புரிதர வேவட புலத்திற் போயினான். 167
369 போதலும் இருந்திடும் புனித வேதியன்
மாதவ வலியினால் மாதின் நோன்பினால்
மேதினி வியந்திட மிருகண் டென்னவோர்
காதலன் உதித்தனன் கணிப்பில் காட்சியான். 168
370 அப்புதல் வற்கியாண் டாறு சென்றுழி
மெய்ப்பிர மச்செயல் விளங்கு பான்மையால்
முப்புரி நூல்வினை முடித்துத் தாதைபோல்
செப்பரு மாதவஞ் செய்யப் போயினான். 169
371 ஊற்றமா மிருககண் டூயன் என்றிடும்
ஆற்றன்மா முனிவரன் அகல வன்னவன்
தோற்றமா கியசுதன் தொன்மை நாடியே
போன்றினன் ஆதியிற் புரியுஞ் செய்கடன். 170
372 சொற்கலை தெரிமருத் துவதி யென்றிடும்
முற்கலன் மகள்தனை முறைவ ழாதுபின்
நற்கலை யணிகலன் நல்கி நீக்கிய
வற்கலை யுடையினான் வதுவை முற்றினான். 171
373 இருந்தனன் அநாமயம் என்னும் பேரொடும்
பொருந்திய வனத்திடைப் புதல்வர் இன்றியே
வருந்தினன் தமரொடும் மாது தன்னொடும்
அருந்தன் காசியை அடைதல் மேயினான். 172
374 அடைந்ததோர் பொழுதினில் அமரர் யாவருங்
கடைந்திடு திரைக்கட லனைய கங்கைநீர்
குடைந்தனன் ஆடினன் குழுமி மாதவர்
மிடைந்திடு மறுகிடை விரைவில் மேவினான். 173
375 பொன்றிரண் மாமதில் புடைய தாமணி
கன்றிகை யென்பதோர் கடவுள் ஆலயஞ்
சென்றனன் சூழ்ந்தனன் திங்கள் வேணியான்
மன்றமர் திருவடி வணங்கிப் போற்றினான். 174
376 மெய்ப்படு மறையுணர் மிருகண் டென்பவன்
அப்பெருங் கோயிலுக் கணித்தொர் பாங்கரில்
செப்புறும் ஆகமத் தௌ¤வு நாடியே
மைப்பெருங் கண்டனை வழிபட் டானரோ. 175
377 ஆதவம் பனிமழை அனிலத் தச்சுறாப்
பாதவ மாமெனப் பரவ மாறினும்
பேதைபங் குடையவெம் பிரானை உன்னியே
மாதவம் புரிந்தனன் மதலை வேண்டியே. 176
378 அருந்தவம் ஓரியாண் டாற்றத் தொல்லைநாட்
பொருந்திய மூவெயில் பொடித்த புங்கவன்
வரந்தனை உதவுவான் வந்து தோன்றலும்
இருந்தவ முனிவரன் இறைஞ்சிப் போற்றினான். 177
379 முந்துறு முனிவரன் முகத்தை நோக்கிநீ
சிந்தையில் விழைந்ததென் செப்பு கென்றலும்
மைந்தனை வேண்டினன் வரத்தை நல்கென
எந்தையும் முறுவல்செய் தினைய கூறுவான். 178
380 வேறு
தீங்குறு குணமே மிக்குச் சிறிதுமெய் யுணர்வி லாமல்
மூங்கையும் வெதிரு மாகி முடமுமாய் விழியும் இன்றி
ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி யுழப்போ னாகி
ஈங்கொரு புதல்வன் தன்னை யீதுமோ மாத வத்தோய். 179
381 கோலமெய் வனப்பு மிக்குக் குறைவிலா வடிவ மெய்தி
ஏலுறு பிணிகள் இன்றி எமக்குமன் புடையோ னாகிக்
காலமெண் ணிரண்டே பெற்றுக் கலைபல பயின்று வல்ல
பாலனைத் தருது மோநின் எண்ணமென் பகர்தி யென்றான். 180
382 மாண்டகு தவத்தின் மேலாம் மறைமுனி அவற்றை யோரா
ஆண்டவை குறுகி னாலும் அறிவுள னாகி யாக்கைக்
கீண்டொரு தவறு மின்றி எம்பிரான் நின்பா லன்பு
பூண்டதோர் புதல்வன் தானே வேண்டினன் புரிக வென்றான். 181
383 என்றிவை துணிவி னாலே இசைத்தலும் ஈசன் நிற்கு
நன்றிகொள் குமரன் தன்னை நல்கின மென்று சொல்ல
நின்றிட முனிவன் போற்றி நெஞ்சகம் மகிழ்ச்சி யெய்தி
ஒன்றிய கேளி ரோடும் உறைந்தனன் உறையும் நாளில். 182
384 பூதல இடும்பை நீங்கப் புரைதவிர் தருமம் ஓங்க
மாதவ முனிவர் உய்ய வைதிக சைவம் வாழ
ஆதிதன் னருளி னாலே அந்தகன் மாள அன்னான்
காதலி உதரத் தாங்கோர் கருப்பம்வந் தடைந்த தன்றே. 183
385 அடைதலும் அதனை நோக்கி அறிதரு முனிவன் ஆண்டை
விடையவன் அடியார் யார்க்கும் வேண்டிய வேண்டி யாங்கே
நெடிதுபல் வளனும் ஈந்து நிறைதரு திங்க டோறுங்
கடனியல் மரபு மாற்றிக் காசியின் மேவி னானே. 184
386 கறையுயிர்த் திலங்கு தந்தக் காய்சின அரவங் கவ்வக்
குறையுயிர்ப் படிவத் திங்கள் அமிர்தினைக் கொடுத்திட் டாங்கு
மறையுயிர்த் தருளுஞ் செவ்வாய் மதலையை வயாவின் மாழ்கிப்
பொறையுயிர்த் தருளில் தந்தாள் பொறைதரு திருவைப் போல்வாள். 185
387 மீனமும் முடிந்த நாளு மேவுற மிதுனஞ் செல்ல
ஊனமில் வௌ¢ளி தானும் ஒண்பொனும் உச்ச மாகுந்
தானமுற் றினிது மேவத் தபனனே முதலா வுள்ள
ஏனையர் முனிவர் நாகர் இந்தொறும் இருப்ப மன்னோ. 186
388 நன்ணினன் புவியின் மைந்தன் நவமணிக் குலமும் பொன்னுஞ்
சுண்ணமும் மலருந் தாதுந் தூயமென் கலவைச் சாந்தும்
தண்ணுறு நானச் சேறுந் தலைத்தலைக் கொண்ட தாவில்
விண்ணவர் மண்ணு ளோர்கள் வியப்புற வீசி ஆர்த்தார். 187
389 தேவதுந் துபிகள் ஆர்த்த செய்தவை யோம்பி மாற்றும்
மூவர்கள் அன்றி ஏனோர் முறைமுறை ஆசி செய்தார்
யாவதென் றுணர்தல் தேற்றா திந்நகர் அன்றி நேமி
காவல்செய் உலகம் யாவுங் களிமயக் குற்ற வன்றே. 188
390 தந்தையும் அதனைக் கேளாத் தடம்புனற் கங்கை மூழ்கி
அந்தணர் முதலோர்க் கெல்லாம் ஆடகம் பலவும் நல்கி
முந்துறு கடன்கள் ஆற்ற முளரிமேல் முனிவன் மேவி
மைந்தனுக் குரிய நாமம் மார்க்கண்டன் என்று செய்தான். 189
391 மறுப்படாத் திங்கள் போல வளர்தலும் மதியந் தோறும்
உறுப்படை உபநிட் டானம் ஓதனம் பிறவும் முற்ற
நெறிப்படு மோரி யாண்டின் நெடுஞ்சிகை வினையும் ஆற்றிச்
சிறப்புடை இரண்டாம் ஆண்டிற் செவிநெறி புரித லுற்றான். 190
392 ஏதமில் ஐந்தின் முந்நூல் இலக்கண விதியுஞ் செய்தே
ஓதிடுங் கலைக ளெல்லாம் உள்ளுற வுணர்த்துங் காலை
வேதமும் பிறவுங் கொண்ட வியன்பொருள் தெரிந்து மேலாம்
ஆதியே சிவனென் றெண்ணி அவனடி அரணென் றுற்றான். 191
393 அரனைமுன் இறைஞ்சி யன்னான் அன்பரைத் தாழ்ந்து தங்கள்
குரவனை வணக்கஞ் செய்து கோதறு முனிவர் தம்மைப்
பரவியே பயந்த மேலோர் பாதபங் கயங்கள் சூடிப்
பிரமமாம் ஒழுக்கம் நாளும் பேணினன் பிறப்பு நீப்போன். 192
394 இந்தவா றியலுங் காலை எண்ணிரண் டான யாண்டும்
வந்ததால் அதனை நோக்கி மைந்தனை நோக்கி வாளா
தந்தையும் பயந்த தாயுந் தனித்தனி இருந்து சால
வெந்துயர்க் கடலின் மூழ்கி விம்மலுற் றிரங்கி நைந்தார். 193
395 ஆங்கது மதலை காணா அடியினை வணங்கி அன்னோர்
பாங்குற அணுகி நீவிர் பருவரல் உறுகின் றீரால்
ஈங்கிது வென்னே என்னும் யாதுமொன் றறிதல் தேற்றேன்
நீங்குமின் அவலம் நும்பால் எய்திய நிகழத்து மென்றான். 194
396 கூறிய மொழியுட் கொண்டு குமரநீ யிருக்க நம்பால்
வேறொரு துயர மெய்தி மெலிவதும் உண்டோ மேனாள்
ஏறுடை அமல மூர்த்தி யாண்டுநின் தனக்கீ ரைந்தும்
ஆறுமென் றளித்தான் அந்நாள் அடைதலின் அவலஞ் செய்தேம். 195
397 என்றுரை செய்த தாதை இடருறு முகத்தை நோக்கி
ஒன்றுநீர் இரங்கல் வேண்டாம் உயிர்க்குயி ராகி யென்றும்
நின்றிடும் அரனை யேத்தி அருச்சனை நிரப்பிக் கூற்றின்
வன்றிறல் கடந்து நும்பால் வல்லைவந் தடைவன் மன்னோ. 196
398 இருத்திரால் ஈண்டே என்னா ஏதுக்கள் பலவுஞ் செப்பிக்
கருத்துற நெடிது தேற்றிக் கான்முறை வணங்கி நிற்பத்
திருத்தகு குமரற் புல்லிச் சென்னியும் மோந்து முன்னர்
வருத்தமும் நீங்கிச் சிந்தை மகிழ்ந்தனர் பயந்த மேலோர். 197
399 இருமுது குரவர் தத்தம் ஏவலின் ஈசன் என்னும்
ஒருவன தருளும் அன்பு முடனுறு துணையாய்ச் செல்லப்
பொருவரு மகிழ்ச்சி பொங்கப் பொள்ளெனப் பெயர்ந்து போகித்
திருமணி கன்றி கைப்பேர்ச் செம்பொன்ஆ லயத்திற் புக்கான். 198
400 என்புநெக் குருகக் கண்ணீர் இழிதர வலஞ்செய் தீசன்
முன்புற வணக்கஞ் செய்து முடிமிசை யடிகள் சூடித்
தென்புலத் தொருசா ரெய்திச் சிவனுருச் செய்து பன்னாள்
அன்புடன் அருச்சித் தேத்தி அருந்தவம் இயற்றி யிட்டான். 199
401 வேறு
ஈசனும் அவ்வழி யெய்தி நற்றவம்
பூசனை அதனொடு புரிதி யாலது
மாசில தாதலின் மகிழ்ந்து நீயினிப்
பேசுக வேண்டிய பெறுதற் கென்னவே. 200
402 ஐயனே அமலனே அனைத்து மாகிய
மெய்யனே பரமனே விமல னேயழற்
கையனே கையனேன் காலன் கையுறா
துய்யநேர் வந்துநீ உதவென் றோதலும். 201
403 அஞ்சலை அஞ்சலை அந்த கற்கெனாச்
செஞ்சரண் இரண்டையுஞ் சென்னி சேர்த்தலும்
உஞ்சனன் இனியென ஓத வொல்லையில்
நஞ்சணி மிடற்றினான் மறைந்து நண்ணினான். 202
404 நண்ணிய பின்னரே நவையின் மைந்தனுக்
கெண்ணிரண் டாண்டெனும் எல்லை செல்லலும்
விண்ணிவைட முகிலென விசைகொண் டொல்லையில்
துண்ணென வோர்யம தூதன் தோன்றினான். 203
405 பண்டுமுப் புரமெரி படுத்த புங்கவன்
புண்டரீ கப்பதம் பரவும் பூசனை
கண்டனன் வெருவிமார்க் கண்டன் தன்னையான்
அண்டுவ தரிதென அகன்று போயினான். 204
406 தீயெழ நோக்கியே சென்றி டாதுசேண்
போயதோர் வல்லியம் போலுந் தன்மையான்
வேயென வந்துபின் மீண்டு தென்புல
நாயகன் அடிதொழா நவிறல் மேயினான். 205
407 இந்திரன் புகழ்தரும் இறைவ கேட்டியால்
அந்தியின் நிறமுடை அண்ணல் பாலுறு
சிந்தையன் அவனடி சேருஞ் சென்னியோன்
சந்தத மவன்புகழ் சாற்றும் நோன்மையோன். 206
408 ஈசன தருச்சனை இயற்று கின்றனன்
ஆசறு மனத்தினன் அறிவன் அந்தணன்
காசியின் இடத்தன்மார்க் கண்ட னாமெனப்
பேசிய சிறப்புடைப் பெயர்பெற் றோங்குவான். 207
409 அன்னதோர் பாலனை அணுக அஞ்சினன்
முன்னரும் ஏகலன் முக்கண் எம்பிரான்
தன்னுழை இருந்தனன் தண்டக நாயக
உன்னுதி இதுவென உணரக் கூறினான். 208
410 கூறிய அளவையிற் கூற்றன் துப்பினை
ஆறிய செந்தழற் கருத்தி னாலெனச்
சீறினன் உயிர்த்தனன் சிறுவன் ஆங்கவன்
ஈறில னாகிய இறைவ னோவென்றான். 209
411 தருதியென் கணகரை யென்று தணடகன்
உரைசெய நின்றதோர் ஒற்றன் ஓடியே
வருதிர்நும் மழைத்தனன் மன்னன் என்றிடக்
கரணர்கள் வந்தனர் கழல்வ ணங்கினார். 210
412 இறையவன் அவ்வழி எவருங் காணொணா
அறைகழல் அண்ணலை யருச்சித் தேத்திய
மறுவறு காட்சியான் மார்க்கண் டப்பெயர்ச்
சிறுவனுக் கிறுவரை செப்பு மென்னவே. 211
413 சித்திர குத்தரென் றுரைக்குஞ் சீரியோர்
ஒத்திடும் இயற்கையர் உணர்வின் மேலையோர்
கைத்தல மிருந்ததங் கணக்கு நோக்கியே
இத்திறங் கேளென இசைத்தல் மேயினார். 212
414 கண்ணுதல் இறையவன் கருதி மேலைநாள்
எண்ணிரண் டாண்டென இறுதி கூறினான்
அண்ணலே சென்றதால் அதுவும் ஆங்கவன்
பண்ணிய பூசனை அறத்தின் பாலதே. 213
415 முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்
பொதுவறு திருவொடு பொலிவ ராயினும்
மதியின ராயினும் வலிய ராயினும்
விதியினை யாவரே வெல்லும் நீர்மையார். 214
416 ஆதலின் அமருல கடைவ தாயினன்
பேதுறு நிரயமும் பிழைத்து நீங்கினான்
ஈதவன் நிலைமையென் றிருவ ருஞ்சொல
மேதகு தண்டகன் வெகுட்சி எய்தினான். 215
417 அந்தகன் அத்துணை யமைச்ச னாகிய
வெந்திறற் காலனை விளித்துக் காசியில்
அந்தணன் ஒருமன் அவன தாவியைத்
தந்திடு கென்றலுந் தரணி எய்தினான். 216
418 மற்றவன் காசியில் வந்து மாசிலா
நற்றவன் இருந்துழி நணுகி நான்மறைக்
கொற்றவன் பூசையுங் குறிப்பும் நோக்கியே
எற்றிவன் வரவதென் றெண்ணி யேங்கினான். 217
419 விழியிடைத் தெரிவுற மேவி மைந்தனைத்
தொழுதனன் யாரைநீ சொல்லு கென்றலும்
முழுதுல குயிரெலா முடிக்கும் ஆணையான்
கழலிணை யடிமைசெய் கின்ற காலன்யான். 218
420 போந்ததிங் கெவனெனப் புகலு வீரெனின்
ஆய்ந்தது மொழிகுவன் ஆதி நாயகன்
ஈந்திடு காலமெண் ணிரண்டு நென்னலே
தேய்ந்தது தென்புலஞ் சேர்தல் வேண்டுநீர். 219
421 வேறு
தடுக்குந் தன்மைய தன்றிது சதுர்முகத் தவற்கும்
அடுக்குந் தன்மையே புதுவது புகுந்ததோ அன்றே
கொடுக்குந் தன்மைபோற் காத்திடுந் தன்மைபோற் கூற்றன்
படுக்குந் தன்மையுங் கறைமிடற் றிறையருட் பணியே. 220
422 ஆத லால்உமை விளித்தனன் அன்றியும் அமலன்
பாத மாமலர் அருச்சனை புரிவது பலரும்
ஓத வேமன மகிழ்ந்துமைக் காணிய வுன்னிக்
காத லாகியே நின்றனன் தென்றிசைக் கடவுள். 221
423 அடுத லோம்பிய செய்கையன் என்பதால் அவனைக்
கொடியன் என்பரால் அறிவிலார் செய்வினை குறித்து
முடிவில் ஆருயிர் எவற்றிற்கும் முறைபுரிந் திடலால்
நடுவன் என்கின்ற தவன்பெயர் உலகெலாம் நவிலும். 222
424 சிந்தை மீதினில் யாவதும் எண்ணலீர் தென்பால்
அந்த கன்புரம் அடைதிரேல் அவனெதிர் அணுகி
வந்து கைதொழு தேத்தியே நயமொழி வழங்கி
இந்தி ரன்பதம் நல்குவன் வருதிரென் றிசைத்தான். 223
425 மாற்ற மிங்கிது கேட்டலும் மதிமுடி அரனைப்
போற்று மன்பர்கள் இந்திரன் உலகினும் போகார்
கூற்று வன்றன துலகினும் நும்மொடு குறுகார்
ஏற்ற மாகிய சிவபதம் அடைந்தினி திருப்பார். 224
426 நாத னார்தம தடியவர்க் கடியவன் நானும்
ஆத லான்நும தந்தகன் புரந்தனக் கணுகேன்
வேதன் மாலமர் பதங்களும் வெ·கலன் விரைவில்
போதி போதியென் றுரைத்தலும் நன்றெனப் போனான். 225
427 போன காலனும் மறலியை வணங்கியே புகுந்த
பான்மை யாவையும் உரைத்தலும் உளம்பதை பதைப்ப
மேனி மார்பகம் வியர்ப்புற விழிகனல் பொழியக்
கூனல் வார்புரு வக்கடை நிமிர்ந்திடக் கொதித்தான். 226
428 அழைத்திர் மேதியை யென்னலும் போந்ததால் அதன்மேல்
புழைக்கை மால்கரி யாமென வெரிநிடைப் புகுந்து
நிழற்று கின்றதோர் கவிகையுந் துவசமும் நிவப்ப
வழுத்தி வீரர்கள் சுற்றிட அந்தகன் வந்தான். 227
429 போந்து காசியின் முனிமகன் இருந்துழிப் போகிச்
சேந்த குஞ்சியும் முகில்புரை மேனியுஞ் சினத்திற்
காந்து கண்களும் பிடித்ததோர் பாசமுங் கரத்தில்
ஏந்து தண்டமுஞ் சூலமு மாகியே எதிர்ந்தான். 228
430 வேறு
வந்து தோன்றலும் மார்க்கண்ட னென்பவன்
அந்த கன்வந் தணுகின னாமெனச்
சிந்தை செய்தவன் செய்கையை நோக்கியே
எந்தை யாரடி யேத்தி இறைஞ்சினான். 229
431 அன்ன வேலையில் அந்தகன் மைந்தநீ
என்நி னைந்தனை யாவ தியற்றினை
முன்னை யூழின் முறைமையும் முக்கணான்
சொன்ன வாறுந் துடைத்திட லாகுமோ. 230
432 சிறிதும் ஊழ்வினைத் திண்மையுந் தேர்கிலாய்
உறுதி யொன்றும் உணர்கிலை போலுமால்
இறுதி யேபிறப் பென்றிவை யாவரும்
பெறுவர் அன்னது பேசுதல் வேண்டுமோ. 231
433 பீடு சாலும் பெருந்தவர்க் காயினுங்
கூடு றாவிது கூடுமென் றுன்னியே
நாடி யின்னணம் நண்ணுதல் கற்றுணர்
ஆட வர்க்கும் இயற்கைய தாகுமோ. 232
434 ஈச னார்தம் இணையடி மீமிசை
நேச செஞ்சினை நித்தலும் நீபுரி
பூசை வெம்பவம் போக்குவ தன்றியான்
வீசு பாசம் விலக்கவும் வல்லதோ. 233
435 சிந்து வின்கட் செறிமணல் எண்ணினும்
உந்து வானத் துடுவினை எண்ணினும்
அந்த மின்றியென் ஆணையின் மாண்டிடும்
இந்தி ரன்றனை எண்ணிட லாகுமோ. 234
436 இற்ற வானவர் தம்மையும் என்னின்நீ
றுற்ற தானவ ராகியுள் ளோரையும்
முற்ற ஓதில் முடிவில தாதலால்
மற்றை யோரை வகுத்திடல் வேண்டுமோ. 235
437 கனக்கு முண்டகக் காமரு கண்ணினான்
தனக்கு முண்டு சதுர்முகற் குண்டுமற்
றெனக்கு முண்டு பிறப்பிறப் பென்றிடின்
உனக்கு முண்டென றுரைத்திடல் வேண்டுமோ. 236
438 வாச மாமல ரிட்டு வழிபட
ஈச னார்முன் எனக்கருள் செய்தன
ஆசி லாவிவ் வரசியல் ஏந்திய
பாச சூலம் படைமழுத் தண்டமே. 237
439 தேவர் காப்பினுஞ் செய்தளித் தீறுசெய்
மூவர் காப்பினும் மொய்ம்பின ராயினோர்
ஏவர் காப்பினுங் காத்திட இன்றுநின்
ஆவி கொண்டன்றி மீண்டும் அகல்வனோ. 238
440 துன்ப மென்பது கொள்ளலை சூலிதன்
அன்ப ராயினும் அந்தம்வந் தெய்திடில்
தென்பு லந்தனிற் சேர்த்துவன் திண்ணமே
என்பின் நீயினி யேகென் றியம்பலும். 239
441 மைந்தன் ஆங்கது கேட்டு மறலிகேள்
எந்தை யாரடி யார்தமக் கில்லையால்
அந்தம் என்பதுண் டாயினும் நின்புரம்
வந்தி டார்வௌ¢ளி மால்வரை ஏகுவார். 240
442 அனையர் தன்மை அறைகுவன் ஆங்கவர்
புனித மாதவ ராயினும் பொற்புடை
மனையின் வாழ்க்கையின் மல்கின ராயினும்
வினையின் நீங்கிய வீட்டின்பம் எய்துவார். 241
443 ஏதந் தீர்சுடர் தன்னையும் எண்ணும்ஐம்
பூதந் தன்னையும் போதிகன் தன்னையும்
பேதஞ் செய்வர் பிறப்பொழித் தோரவர்
பாதஞ் சேர்தல் பரபதஞ் சேர்வதே. 242
444 உன்னை எண்ணலர் உம்பரை எண்ணலர்
மன்னை எண்ணலர் மாமலர்ப் பண்ணவன்
தன்னை எண்ணலர் தண்டுள வோனையும்
பின்னை எண்ணலர் பிஞ்ஞகன் அன்பினோர். 243
445 நாதன் தன்னையும் நாதன தம்புயப்
பாதஞ் சேர்ந்து பரவினர் தம்மையும்
பேதஞ் செய்வது பேதைமை நீரென
வேதங் கூறும் விழுப்பொருள் பொய்க்குமோ. 244
446 செம்மை யாகிய சிந்தையர் சீரியோர்
வெம்மை என்பதை வீட்டி விளங்கினோர்
தம்மை யுந்துறந் தேதலை நின்றவர்
இம்மை தன்னினும் இன்பத்தை வேவுவார். 245
447 இன்மை யாவதி யாண்டுமில் லாதவர்
நன்மை என்ப தியல்பென நண்ணினோர்
புன்மை யான பொருள்விரும் பார்அவர்
தன்மை யாவரே சாற்றவல் லார்களே. 246
448 வேறு
அன்னார் தன்மை தேர்கிலை வையத் தவர்போல
உன்னா நின்றாய் ஆங்கவர் தம்பா லுறுகின்ற
என்னா விக்குந் தீங்கு நினைத்தாய் இவையெல்லாம்
உன்னா விக்கும் இத்தலை மைக்கும் ஒழிவன்றோ. 247
449 தீதா கின்ற வாசகம் என்றன் செவிகேட்க
ஓதா நின்றாய் மேல்வரும் ஊற்ற முணர்கில்லாய்
பேதாய் பேதாய் நீயிவண் நிற்கப் பெறுவாயோ
போதாய் போதாய் என்றுரை செய்தான் புகரில்லான். 248
450 கேட்டான் மைந்தன் கூறிய மாற்றங் கிளர்செந்தீ
ஊட்டா நின்ற கண்ணினன் யானச் சுறுமாற்றல்
காட்டா நின்றாய் நம்முயிர் கூற்றன் கைக்கொள்ள
மாட்டான் என்றே எண்ணினை கொல்லோ வலியில்லாய். 249
451 என்றான் வானத் தேறென ஆர்த்தான் இவன்நேரே
நின்றால் வாரான் என்று நினைந்தே நெடுநீலக்
குன்றா மென்னப் பாலகன் முன்னங் கொலைவேலான்
சென்றான் பாசம் வீசுவ தற்குச் சிந்தித்தான். 250
452 எறிந்தான் பாசம் ஈர்த்திடல் உற்றான் இதுபோழ்தில்
அறிந்தான் தானும் ஈசனை ஏத்தி அடிநீழற்
பிறிந்தான் அல்லன் மற்றினி இந்தப் பெருமைந்தன்
மறிந்தான் அன்றோ என்றிமை யோரும் மருளுற்றார். 251
453 ஈர்க்கும் பாசங் கந்தர முற்றும் இடரில்லா
மார்க்கண் டன்முன் தோன்றினன் நின்பால் வருதுன்பந்
தீர்க்கின் றாம்நீ அஞ்சலை என்றே திரையாழிக்
கார்க்கண் டத்துக் கண்ணுதல் ஐயன் கழறுற்றான். 252
454 மதத்தான் மிக்கான் மற்றிவன் மைந்தன் உயிர்வாங்கப்
பதைத்தான் என்னா உன்னிவெ குண்டான் பதிமூன்றுஞ்
சிதைத்தான் வாமச் சேவடி தன்னால் சிறிதுந்தி
உதைத்தான் கூற்றன் விண்முகில் போல்மண் ணுறவீழ்ந்தான். 253
455 வீழுங் காலத் தம்புய னாதி விண்ணோர்கள்
வாழுந் தன்மைத் தெவ்வுல கென்னா மறுகுற்றார்
சூழும் வேலை ஆர்த்தில தண்டத் தொகையெல்லாங்
கீழும் மேலும் நெக்கன பாருங் கிழிந்தன்றே. 254
456 பாங்காய் நின்ற தானையும் ஊரும் பகடுந்தான்
ஏங்கா நின்றே பார்மிசை வீழா இறவுற்ற
தீங்காய் நின்ற செய்னி யாளர் சிதைவாகிப்
போங்கா லத்திற் சேர்ந்தவர் தாமும் போகாரோ. 255
457 அந்தக் காலத் தெம்முயிர் காப்பான் அரனுண்டால்
வந்தக் கூற்றன் என்செய்வ னென்னா வடதொன்னூல்
சந்தப் பாவிற் போற்றுதல் செய்தே தனிநின்ற
மைந்தற் காணூஉ எம்பெர மானும் மகிழ்வுற்றான். 256
458 வேறு
மைந்த நீநமை வழுத்தி மாசிலா
முந்து பூசனை முயன்ற தன்மையால்
அந்த மில்லதோர் ஆயுள் நிற்கியாந்
தந்து நல்கினாம் என்று சாற்றினான். 257
459 சாற்றும் எல்லையில் தனது தாளிணை
போற்று கின்றவன் பூசை செய்திடும்
ஏற்ற தாணுவுக் கிடைய தாகவே
கூற்றின் கூற்றுவன் குறுகுற் றானரோ. 258
460 மறைய வன்கணும் மன்னு தென்புலத்
திறைய வன்கணும் இகல்பற் றின்றரோ
அறிவர் தேர்குறின் ஐயன் செய்தன
முறைய தாகுமால் முதன்மைப் பாலதே. 259
461 நின்ற மைந்தனும் நித்தன் மேனியை
ஒன்றும் அன்பினால் உன்னி யேமணி
கன்றி கையெனுங் கடவுள் ஆலயஞ்
சென்று நாதன்றாள் சென்னி சேர்த்தினான். 260
462 புந்தி நைந்திடப் புலம்பி நாட்டநீர்
சிந்தும் வேலையில் திளைத்துச் சாம்பிய
தந்தை அன்னைதாள் தழுவித் தாழ்ந்திடா
முந்து மாகுலம் முழுதும் மாற்றினான். 261
463 அங்கண் சில்பகல் அமர்ந்து நீங்கியே
செங்கண் ஏறுடைச் செல்வன் மல்கியே
தங்கு கின்றநற் றானம் யாவையும்
பொங்கு காதலிற் போற்றல் மேயினான். 262
464 அத்தன் ஆலயம் அனைத்தும் வைகலும்
பத்தி யோடுமுன் பரவி யேமிகுஞ்
சுத்த னாகியே தொலைவில் ஆருயிர்
முத்தி யெய்தினான் முழுது ணர்ந்துளான். 263
465 விண்ணின் பாலுளன் விரும்பிப் போற்றுவோர்
கண்ணின் பாலுளன் கருத்தின் பாலுளன்
மண்ணின் பாலுளன் மற்ற வன்செயல்
எண்ணின் பாலதோ இசையின் பாலதோ. 264
466 முண்ட கத்திடை முளைத்த வன்துயில்
கொண்ட வெல்லையைக் குணிக்கி லாவதென்
அண்டம் நல்கியோன் துஞ்ச ஆங்கவன்
கண்ட கற்பமோ கணக்கி லாதவே. 265
467 அன்ன வன்றனை அலக்ண் செய்திடுந்
தென்ன வன்உயிர் சிதைந்து போதலால்
பன்ன கத்திறை பரித்த பார்மிசை
மன்னு பல்லுயிர் வளர்ந்து மல்கிற்றே. 266
468 முடிவின் றாமுயிர் முற்றும் பற்பகல்
மடிவின் றாகியே மலியும் பான்மையால்
படியின் மங்கையும் பரம்பொ றாதுமால்
அடியின் வீழ்ந்துதன் அயர்வு கூறினாள். 267
469 கொண்டல் வண்ணனுங் குலச பாணியும்
புண்ட ரீகமேற் பொலிந்த போதனும்
அண்டர் யாவரும் அணுகி ஆலமார்
கண்டன் மேவுறுங் கயிலை மேவினார். 268
470 காவி யம்மலர் கடுத்த கந்தரத்
தேவு பொற்பதஞ் சென்னி சேர்த்தியே
தாவில் பங்கயச் சதுர்மு கத்தனும்
பூவை வண்ணனும் போற்றல் மேயினார். 269
471 நீல கண்டனாம் நிமலன் முன்னரே
சாலும் அன்பொடுந் தாழ்ந்து போற்றலும்
மாலை நோக்கிநீர் வந்த தென்னென
ஏலு மாற்றினால் இதனைக் கூறுவான். 270
472 வேறு
பங்கய மிசைவரு பகவன் ஆதியா
இங்குள தலைவர்கள் எவரும் இத்துணைத்
தங்கள்தம் அரசியல் தவாது போற்றினர்
அங்கவர் தமக்குநீ அளித்த வண்ணமே. 271
473 ஐயநீ எனக்குமுன் அளித்த காப்பினைத்
துய்யநின் திருவருள் துணைய தாகவே
வைகலும் புரிகுவன் வழாது மற்றதற்
கெய்திய தோர்குறை இசைப்பன் கேட்டிநீ. 272
474 நின்பெருந் திருவருள் நினைகி லாமையால்
தென்புலக் கோமகன் சிதைந்து போயினான்
மன்பதைக் குலம்பிற வளர்ந்து மிக்கன
துன்பமுற் றனள்அவை சுமக்கும் பூமகள். 273
475 தன்புடை எவற்றையுந் தாங்கு கின்றவள்
துன்புற உயிரெலாந் தோன்றித் தோன்றியே
பின்பிற வாமலே பெருகி வைகுமேல்
என்படும் என்படும் எனது காவலே. 274
476 இறுத்திடும் அரசினுக் கெவரு மில்லைநீ
செறுத்திடல் அந்தகன் செய்த தீமையைப்
பொறுத்தருள் அவன்றனைப் புரிதி ஈங்கிது
மறுத்திடல் என்றடி வணங்கி வேண்டவே. 275
477 அந்தக எழுகென அமல நாயகன்
முந்தருள் புரிதலும் முடிந்த கூற்றுவன்
வந்தனன் தொழுதனன் வணங்கித் தாள்பட
உய்ந்தனன் அடியனென் றுணர்ந்து போற்றினான். 276
478 போற்றிடு தருமனைப் புராரி நோக்கியே
சாற்றிடு கின்றனன் தயங்கு கண்டிகை
நீற்றொடு புனைந்தெமை நினையும் நீரர்பால்
கூற்றுவன் யானெனக் குறுகு வாயலை. 277
479 நண்ணருங் கதிபெறு நமது தொண்டரை
மண்ணுல கத்தவர் மனித ரேயென
எண்ணலை அவர்தமை யாமென் றெண்ணுதி
கண்ணுறின் அன்னவர் கழலின் வீழ்தியால். 278
480 கண்ணிய மனமொழி காயம் ஈறதா
எண்ணிய கருவிகள் இடைய தாகவே
புண்ணிய மொடுபவம் புரியும் ஏனையர்
விண்ணொடு நிரயமேல் மேவச் செய்திநீ. 279
481 என்றருள் புரிந்துநின் படையொ டேகென
மன்றமர் அடிமிசை வணங்கி முன்னரே
பொன்றிய பகட்டொடும் பொருநர் தம்மொடும்
தென்றிசை புகுந்துதன் செயலின் மேவினான். 280
482 சித்தசற் புரிதரு செங்கண் மான்முதல்
மொய்த்திடு கடவுளர் முனிவர் மும்முறை
நித்தனை வணங்கினர் கயிலை நீங்கினர்
தத்தம துறையுளில் சார்தல் மேயினார். 281
483 கொன்னவில் அடுபடைக் கூற்றன் பண்டுபோல்
இன்னமும் விளைகுவ தென்கொ லோவெனா
மன்னருள் பெற்றமார்க் கண்டன் மாக்கதை
பன்னினர் முன்னமும் படர்தற் கஞ்சுமால். 282
484 ஆதலிற் குச்சகன் அருந்த வத்திலோர்
மாதுயிர் அளித்தனன் மால்க ளிற்றினைக்
காதுகை நீக்கியொன் கடவு ளாக்கியே
மேதகு விண்ணிடை மேவச் செய்தனன். 283
485 உதவிய மிருககண் டூயன் மால்அயன்
முதலவர் புகழ்தரு முதன்மை பெற்றனன்
விதிமுறை அவனருள் மிருகண் டொப்பிலோர்
புதல்வனைப் பெற்றனன் புரிந்த நோன்மையால். 284
486 அப்பெருந் திருமகன் ஆற்றும் நோன்பினால்
தப்பரும் விதியினைத் தணந்து கூற்றுவன்
துப்பினை அகற்றியே தொலைவு கண்டுபின்
எப்பொழு தத்தினும் இறப்பின் றாயினான். 285

ஆகத் திருவிருத்தம் - 486



6. மாயையுபதேசப் படலம் (487 - 510)

487 அன்னது சரதமே அறிதிர் ஆதலால்
இன்னமும் மொழிகுவன் இயற்று நோன்பென
முன்னுறு காசிப முனிவன் செப்பலும்
நன்னய மாயவள் நகைத்துக் கூறுவாள். 1
488 மறைதெரி முனிவநீ வாய்மை யாகிய
உறுதியை மொழிந்தனை உயர்ந்த வீடுறும்
அறிவுடை முனிவரர்க் கன்றி நாமருள்
சிறுவருக் கித்திறஞ் செப்ப லாகுமோ. 2
489 நன்பெருஞ் செல்வமும் நவையில் கொற்றமும்
இன்பமும் அழிவிலா திருக்கும் ஆயுளும்
மன்பெருஞ் சீர்த்தியும் மறுவில் வாழ்க்கையும்
அன்புடை யினையவர் அடைதல் வேண்டுமால். 3
490 காதலால் அவையெலாங் கடிதிற் பெற்றிட
மாதவ முனிவர வகுத்தி யென்றலும்
ஈதுகொ லோவுன தெண்ணம் நீயவர்க்
காதகும் இயல்பினை அறைதி யென்னவே. 4
491 மாயவள் தன்சிறார் வதனம் நோக்கியே
தூயவிம் முனிவரன் சொற்ற துண்மையே
ஆயினும் உங்களுக் காவ தன்றவை
நீயிர்கள் கேண்மென நெறியிற் கூறுவாள். 5
492 மாற்படு புந்தியின் மறுவில் சேதனம்
பாற்படும் உயிர்க்கெலாம் பவத்தின் மாண்பயன்
நூற்படு கல்வியின் நுவல்வ ளத்தினின்
மேற்படு கின்றதில் விழுமி தில்லையே. 6
493 திருமைகொள் வளனொடு தீதில் கல்வியாம்
இருமையின் ஒன்றினை எய்தி டாதெனின்
அருமைகொள் அவ்வுயிர் அதனின் ஆற்றவும்
பெருமைய துடையது பேயின் தோற்றமே. 7
494 பிறந்தநல் லுயிர்க்கெலாம் பெருமை நல்கிய
இறந்ததோர் பொருண்மைய திரண்டின் வன்மையும்
அறிந்தவர் தெரிவரேல் அரிய கல்வியில்
சிறந்தது திருவெனச் செப்ப லாகுமால். 8
495 சொற்றரு கலையெலாந் தொடர்ந்து பற்பகல்
கற்றவ ராயினுங் கழிநி ரப்பினால்
அற்றவ ராவரே ஆக்க வேண்டிய
பற்றலர் தம்மையும் பணிந்த நிற்பரால். 9
496 அளப்பருங் கல்வியும் ஆக்கம் யாவையுங்
கொளப்படு தன்மையிற் குறைவு றாதவை
வளர்த்தலின் மேதக வனப்புச் செய்தலிற்
கிளத்திடின் மேலது கேடில் செல்வமே. 10
497 நூலுறு கல்வியை நுனித்து நாடியே
வாலறி வெய்திய வரத்தி னோர்களும்
மேலுறு திருவொடு மேவு றாரெனின்
ஞாலமங் கவர்தமை நவையுள் வைக்குமால். 11
498 அளப்பரும் விஞ்சையே அன்றி மேன்மையும்
உளப்படு தருமமும் உயர்ந்த சீர்த்தியுங்
கொளப்படு கொற்றமும் பிறவுங் கூட்டலால்
வளத்தினிற் சிறந்தது மற்றொன் றில்லையே. 12
499 ஆக்கமிங் கொருவரால் அணுக வேண்டுமேல்
ஊக்கமுண் டாவரேல் உறுவர் அன்னது
நீக்கமில் கொள்கையின் நிற்ப ரேயெனின்
மேக்குறு பெருந்திரு விரைவின் மேவுமால். 13
500 அவ்வளம் பலவகைத் தாகும் ஆங்கவை
எவ்வரும் பெறுகிலர் இயல்பின் யாவையுஞ்
செவ்விதியின் நீர்பெறச் சிந்தை செய்யுமின்
உய்வது வேறிலை உறுதி யீதலால். 14
501 எங்கள்பால் நென்னலின் யாமந் தோன்றலால்
துங்கமா நிருதர்தங் கதியில் துன்னினீர்
உங்களுக் கொன்னலர் உம்பர் யாவருந்
தங்கள்தம் முயற்சியால் தலைமை பெற்றுளார். 15
502 நீவிர்கள் அனையரின் நிவந்த கொள்கையர்
ஆவிர்கள் போலுமால் ஆக்க மெய்துவான்
மூவிரும் முயலுதிர் முயலும் பெற்றியை
ஏவிருங் கேட்கயான் எடுத்துக் கூறுகேன். 16
503 ஆனதோர் இத்திசை ஆலந் தீவெனத்
தானறை கிற்பர்இத் தரைக்கு நேரதாய்ப்
போனதோர் உத்தர பூமி யாயிடை
தானவர் நோற்றிடத் தகுவ தென்பதே. 17
504 அப்புவி யதனிடை ஆற்றற் கீறிலா
இப்பரி சனமொடும் ஏகி யாயிடை
ஒப்பறு குண்டமும் ஒழிந்த செய்கையும்
மெய்ப்பட இயற்றுதிர் வேள்வி செய்யவே. 18
505 காரிகொள் இந்தனங் கதழ விட்டுமுன்
ஆரழல் மூட்டியே அழலின் பண்டமுஞ்
சோரியும் ஊன்களும் பிறவுந் தூவியே
வீரர்கள் புரிதிரால் வெய்ய வேள்வியே. 19
506 செங்கண்மால் அயன்முதல் தேவர் யாவரும்
எங்கணா யகனென இறைஞ்ச மேதகு
கங்கைவார் சடைமுடிக் கடவுட் போற்றியே
பொங்குதீ வேள்வியைப் புரிதிர் பற்பகல். 20
507 அம்மகம் புரிதிரேல் அருளின் முன்னுறீஇ
மைம்மலி மிடறுடை வான நாயகன்
மெய்ம்மையின் நிவிர்கள் வெ·கி யாங்கெலாம்
இம்மையின் எய்துமா றினிது நல்குமால். 21
508 மூண்டவிவ் வேள்வியை முயல மூவிரும்
ஆண்டுசென் றுற்றுழி அன்ன தற்கவண்
வேண்டிய பொருளெலாம் வேறு வேறதா
ஈண்டுற வுதவுவன் ஏகு வீரென்றாள். 22
509 தந்திர நெறிகளுந் தவறில் பான்மையும்
மந்திர முறைகளும் மற்று முள்ளவும்
இந்திர வளனுறும் இயல்பின் மூவர்க்கும்
முந்திர வுதவிய முல்வி நல்கினாள். 23
510 இன்னதோர் காலையில் ஈன்ற மாயவள்
அன்னொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே
அன்னவர் விடுத்திட அவுணர் மேலையோன்
பின்னவர் தம்மொடும் பெயர்வுற் றேகினான். 24

ஆகத் திருவிருத்தம் - 510


7. மாயை நீங்கு படலம் (511 - 527)

511 ஏகிய காலையில் இணையில் மாயவள்
மோகமொ டயலுற முனியை நோக்கியே
போகுவன் யானினிப் புதல்வர்ப் பேணுவான்
நீகவ லேலென நிறுவிப் போயினாள். 1
512 போதலும் முனிவரன் புந்தி யுள்ளுறும்
ஆதர வுந்திட அவள்பின் னேகியே
ஏதில னாமென எனைவிட் டேகுதல்
நீதிய தாகுமோ உரைத்தி நீ¦னிறான். 2
513 ஆயிழை புகலுவாள் அழுங்கல் மாதவ
பேயினர் பொருட்டுனைச் சேர்ந்த தன்றியீண்
டேயது நின்னுடன் இருக்க அன்றியான்
மாயவன் அறிகென மறைந்து போயினாள். 3
514 அருவினள் சேறலும் அற்புதத்தவன்
வருபொருள் யாவையும் மறைந்து போயின
வெருவரு முறைபுரி வேந்தை விட்டகல்
திருவொடு பெயர்வதோர் செல்வம் போலவே. 4
515 மாணலன் எய்திய மாயை தன்ருக்
காணலன் ஆகிய கமலத் தோன்மகன்
பூணலன் தௌ¤வினைப் பொருமி ஏங்கியே
ஆணலன் அழிவுற அழுங்கி மாழ்குவான். 5
516 வாவியுந் தடங்களும் வரையும் ஏனவுந்
தேவருங் காமுறச் செறிந்த அற்புதம்
யாவையுங் காண்கிலான் இரங்கி நின்றனன்
ஆவியில் குரம்பையன் ஆகு மென்னவே. 6
517 மைந்தன துறுதுயர் மலரின் மேவிய
தந்தைதன் உணர்வினால் தகவின் நாடியே
அந்தர நெறியில்வந் தங்கண் மேவலும்
எந்தைவந் தனன்கொலென் றெழுந்து தாழவே. 7
518 ஆசிகள் செய்துநின் னரிய நோன்பொரீஇக்
காசிப மெலிவது கழறு கென்றலும்
பேசினன் நிகழ்ந்தன பிரமன் கேட்டுளங்
கூசினன் அவன்மனங் கொள்ளத் தேற்றுவான். 8
519 வேதமுங் கலைகளும் உணர்ந்து மேலதா
மூதறி ¦யிதிய முனிவ நீயொரு
மாதுதன் பொருட்டினால் மையல் எய்தியே
பேதுறு கிற்றியோ பேதை மாந்தர்போல். 9
520 கண்டதோர் நறவமே கம மேயென
எண்டரு தீப்பொரள் இருமைத் தென்பரால்
உண்டுழி அரிக்குமொன் றுணர்வை யுள்ளமேற்
கொண்டழி உயிரையுங் கொல்லு மொன்றரோ. 10
521 உள்ளினுஞ் சுட்டிடும் உணருங் கேள்வியிற்
கொள்ளினுஞ் சுட்டிடுங் குறுகி மற்றதைத்
தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை ஈதினால்
கள்ளினுங் கொடியது காமத் தீயதே. 11
522 ஈட்டுறு பிறவியும் வினைகள் யாவையுங்
காட்டிய தினையதோர் காம மாதலின்
வாட்டமில் புந்தியான் மற்றந் நோயினை
வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்துளார். 12
523 நெஞ்சினும் நினைப்பரோ நினைந்து ளார்தமை
எஞ்சிய துயரிடை ஈண்டை உய்த்துமேல்
விஞ்சிய பவக்கடல் வீழ்த்தும் ஆதலால்
நஞ்சினுந் தீயது நலமில் காமமே. 13
524 ஆதலிற் காமமுற் றழுங்கல் நீபுணர்
மாதரும் வஞ்சக மாயை யாகுமால்
தீதிவண் இழைத்தனை தீரத் தொன்மைபோல்
நீதவம் புரிகென நிறுவி ஏகினான். 14
525 மாறகல் நான்முகன் வாய்மை தேர்தலுந்
தேறினன் மையல்நோய் தீர்ந்து காசிபன்
ஏறமர் கடவுளை இதயத் துன்னியே
வீறொடு நோற்றனன் வினையின் நீங்குவான். 15
526 ஆண்டவண் அகன்றிடும் அணங்கு தன்சிறார்
மூண்டிடு தீமகம் முயலு மெல்லையில்
வேண்டிய துதவுவான் விமலற் போற்றியே
பூண்டனள் பெருந்தவம் புகரின் ஏவலால். 16
527 காசிபன் மாயையைக் கலந்த வண்ணமும்
ஆசுறும் அவுணர்கள் வந்த வண்ணமும்
பேசினம் அங்கவர் பெற்ற பேற்றினை
ஈசன தருளினால் இனியி யம்புவாம். 17

ஆகத் திருவிருத்தம் - 527


8. அசுரர் யாகப் படலம் (528 -643)

528 அன்னைதன் ஏவலால் அழல்ம கஞ்செய
ளுன்னின னாகியே ஒல்லை ஏகிய
முன்னவன் இளைஞர்தம்முகத்தை நோக்கியே இன்னது கேண்மென இசைத்தல் மேயினான். 1
529 அடல்கெழு பெருமகம் அதனை ஆற்றவே
வடதிசை செல்வுழி மல்கு தானையின்
கடையொடு நெற்றியில் காவ லாகியே
படருதி ராலெனச் சூரன் பன்னினான். 2
530 இனிதென அடிதொழு திளவல் தாரகன்
அனிகம தீற்றினில் அடைவல் என்றனன்
முனிதரு கோளரி முகத்து மொய்ம்பினான்
தனியகல் நெற்றியிற் சார்வல் என்றனன். 3
531 பின்னர் இருவரும் பேசி இத்திறம்
முன்னவன் விடைகொடு முறையிற் போயினார்
அன்னவர் பணியினால் ஆர்ப்புற் றேயெழீஇச்
சென்னெறி படர்ந்தன சேனை வௌ¢ளமே. 4
532 வேறு
தானவர் அனிக வௌ¢ளந் தரைமிசைப் பெயர்த லோடும்
மானில மடந்தை ஆற்றாள் வருந்தினள் பணிக ளோடு
கோனுமங் கயரா நின்றான் குலவரை கரிகள் மேரு
ஆனவுஞ் சலித்த ஆதிக மடமும் அழுங்கிற் றன்றே. 5
533 மண்டுறு பூமி ஈட்டம் மலரயன் உலகந் தாவி
விண்டல மீது போதல் மேதினி அசுர வௌ¢ளம்
எண்டரு நிலைமைத் தன்றால் யான்பொறுக் கல்லேன் என்னாக்
கொண்டல்வண் ணத்த னோடு கூறுவான் சேறல் போலும். 6
534 காழுறும் அவுணர் தானைக் கனைகழல் துழனி முன்னர்
ஆழியங் கடலும் நேரா ஆர்த்திடுங் கொல்லோ என்னா
ஊழுறு சினங்கொண் டென்ன உலப்பிலா அவுணர் தாளில்
பூழிய தெழுந்து சென்று புணரிவாய் பொத்திற் றன்றே. 7
535 மரந்துகள் பட்ட மேரு வரயெனச் சிறந்த மெய்ப்பூ
தரந்துகள் பட்ட யாதுந் தனதெனத் தாங்கு சேடன்
உரந்துகள் பட்ட நேரும் உயிர்துகள் பட்ட தொன்னாட்
புரந்துகள் பட்ட தேபோல் புவிதுகள் பட்ட தன்றே. 8
536 ஆடலின் அவுண வௌ¢ளத் தரவமும் அனையர் செல்ல
நீடிய பூழி தானும் நெறிப்பட வருத லோடும்
நாடிய அமரர் அஞ்சி நடுக்குறா நமது வேதா
வீடினன் கொல்லோ நீத்தம் விண்ணுறும் போலும் என்றார். 9
537 மாசகல் திருவின் மிக்க மாயவள் முன்னந் தந்த
தேசுறும் அவுண வௌ¢ளந் திசையெலாம் அயுதம் என்னும்
யோசனை யெல்லை யாக உம்பரி னிடத்து மற்றைக்
காசினி யிடத்து மாகிக் கலந்துடன் தழுவிச் சென்ற. 10
538 அஞ்சினன் அமரர் வேந்தன் அயர்ந்தனன் அங்கிப் புத்தேள்
எஞ்சினன் வன்மை கூற்றன் இனைந்தனன் நிருதி எய்த்தான்
தஞ்சமில் வருணன் வாயுத் தளர்ந்தனன் தனதன் சோர்ந்தான்
நெஞ்சழிந் தனன்ஈ சானன் நிருதர்பேர் அரவஞ் சூழ. 11
539 வள்ளுறு மெயிற்றுச் செங்கண் வலிகெழும் அவுணர் தானை
வௌ¢ளம தேகப் பூழி விரிந்தெழீஇ யாண்டும் போகிப்
பொள்ளென மெய்யே தீண்டிப் புறத்தெழில் அழித்த வானோர்
உள்ளுணர் வழித்த தன்றே அனையர்கள் ஆர்க்கும் ஓதை. 12
540 பேருமிவ் வவுணர் தானைப் பெருக்கின தணியின் முன்னர்
ஆரழல் வெருவு சீற்றத் தரிமுகன் செல்லக் கூழை
தாரக விறலோன் செல்லத் தலையளி புரிந்து நாப்பட்
சூரனென் றுரைக்கும் வெய்யோன் துண்ணென ஏகி னானால். 13
541 வேறு
ஆன பொழுதத் தவர்க்கா ணியநினைந்து
தானவர்கள் போற்றுந் தனிக்குரவன் தண்டரள
மானமிசை யூர்ந்து வந்தணுகி வல்லவுணர்
சேனையெனச் செல்லுந் திரைக்கடலைக் கண்ணுற்றான். 14
542 கண்ணின்ற வீரர் கடுப்பும் பெருமிடலும்
உண்ணின்ற காழ்ப்பும் உரனுங் கொடுந்திறலும்
எண்ணங்கொள் வேர்வும் இகலுந் தெரிவுற்றுத்
துண்ணென்ன நெஞ்சம் புகரும் துளக்குற்றான். 15
543 கண்டேன் இவர்தங் கடுந்திறலின் ஆட்சிதனைப்
பண்டே அவுணர் அளப்பிலரைப் பார்த்துணர்வேன்
தண்டே னிதழியான் தன்னருளின் வண்ணமோ
உண்டே இவருக் கொருவர்நிகர் உற்றாரே. 16
544 வானோர் இறையுடனும் மாலுடனும் மற்றுள்ள
ஏனோ ருடனும் இகலாடி வென்றிடுகை
தானோர் பொருளோ தமையெதிர்ந்த மாற்றலர்தம்
ஊனோ டுயிரை யொருங்குண்ணுந் தீயவர்க்கே. 17
545 இன்னோர் தம் வன்மைக் கிறுதி யிலவேனும்
முன்னேர் தமைப்போல் முயலுந் தவவலியும்
பின்னோர் வரமும் பெரும்படையுங் கொண்டிலரால்
அன்னோ இவர்க்குங் குறையுண்மை ஆகியதே. 18
546 தண்டத் திறையைக் கடந்த தனியாற்றல்
கொண்டுற் றவற்கே குறைகண் டிலம்ஏனை
அண்டத் தவர்க்கும் அனைவர்க்கும் ஒவ்வொர்குறை
உண்டத் தகைமை எவரும் உணர்குவரால். 19
547 ஆதலின்இன் னோர்பால் அடைவுற் றிடும்வறுமை
போதுசில நோன்பு புரியின் அகன்றிடுமால்
ஈதுநிலைத் தன்றே இழிந்தோர் உயர்ந்திடுவர்
காதி புதல்வன் இதற்குக் கரியன்றோ. 20
548 என்னப் பலவும் இசைத்துநின்று தானவர்கள்
மன்னர்க்கு மன்னாக வாழ்வெய்து சூரபன்மன்
முன்னுற் றிடவும் முகமன் மொழிந்திடவும்
உன்னுற் றனனால் உணர்வுசேர் காப்பியனே. 21
549 தீயின் திறமுருக்குஞ் சீற்றத் தவுணன்எதிர்
போயங் குறவும் புகன்றிடவுந் தானரிதால்
ஏயுந் தகுவருடன் என்னுழையிற் சார்வதற்கோர்
மாயங்கொள் விஞ்சை புரிவேன் எனமதித்தான். 22
550 மண்ணில் உயிரை வசிகரிக்கும் மந்திரமொன்
றெண்ணி விதிமுறையே நோக்கி யெதிர்சென்று
நண்ணிய வெஞ்சேலை நரலைநடு வட்புக்கான்
அண்ணல் அவுணற் கணித்தாய் அடைகுற்றான். 23
551 கள்ள மிகுமவுணர் சிந்தையெனுங் காழிரும்பா
யுள்ள உருகி உரைகெழுமா யத்தீயின்
எள்ள வருங்கறையும் ஏகிநயந் திட்டனவால்
வௌ¢ளி மிகப்புணர்க்கின் அலையுரு நின்றிடுமோ. 24
552 சூழிக் கடலின் துவன்றும்அவு ணப்படைஞர்
காழற்ற புந்தியொடு கைதொழலும் கேசரிக்கும்
பூழைக் கரன்றனக்கும் முன்னைப் புரவலன்முன்
கேழுற்ற வாசி குரவன் கிளத்திடுவான். 25
553 வாலாதி மான்தேர் மகபதிக்கும் ஏனையர்க்கும்
மேலாதி தானவர்கள் வெய்யதுயர் நோயகற்ற
ஏலாதி யேகடுகம் என்றுரைக்கும இன்மருந்து
போலாதி யென்ன அவுணன் புகன்றிடுவான். 26
554 காரையூர் கின்ற கடவுளர்கோன் வைகலுறும்
ஊரையோ மேலை உலகுதனில் உள்ளாயோ
பாரையோ கட்செவிகள் பாதலத்தை யோஎந்தாய்
யாரைநீ தேற்றேன் இவணுற்ற வாறென்னோ. 27
555 உன்பால்என் நெஞ்சம் உருகும் அ·தன்றி
என்பா னதும்உருகா நிற்கும் எனையறியா
தன்பாகி நின்ற தருந்தவத்தை ஆற்றவனம்
தன்பால் அணுகுதற்குத் தாளுமெழு கின்றிலவே. 28
556 நன்னேயம் பூண்டு நடந்தாய் உயிரெல்லாம்
அன்னே யெனவந் தளிக்குந் தகையாயோ
இன்னே யுனையெதிர்ந்தேன் யாக்கை மிகவருந்தி
முன்னே தமியேன் புரிந்ததவம் மொய்ம்பன்றோ. 29
557 வேறு
என்றலுங் கவிஞன் கேளா இருவிசும் பாற்றிற் செல்வேன்
உன்றனி மரபிற் கெல்லாம் ஒருபெருங் குரவ னானேன்
நன்றிகொள் புகரோன் என்னும் நாமமுற் றுடையோன் நின்பாற்
சென்றனன் உறுதி யொன்று தௌ¤த்திடல் வேண்டி யென்றான். 30
558 அவுணர்கள் முதலா யுள்ளோன் ஆங்கது வினவி யாற்ற
உவகைய னாகி எந்தாய் உய்ந்தனன் இவண்யான் என்னாக்
கவிஞனை அணுகி நின்று கைதொழூஉப் பரவ லோடுஞ்
சிவனருள் நெறியால் அன்னோன் இத்திறஞ் செப்ப லுற்றான். 31
559 நூறொடர் கேள்வி சான்றோய் நோற்றுநீ இருக்கு மெல்லை
உறுசெய் கிற்பர் ஒன்னார் உனையவை குறுகா வண்ணங்
கூறுதுந் திறனொன் றென்னாக் கூற்றுவற் கடந்த மேலோன்
மாறின்மந் திரம தொன்று மரபுளி வழாமல் ஈந்தான். 32
560 மொய்கெழு கூற்றை வென்ற முதல்வன்மந் திரத்தை நல்கி
வைகலும் இதனை யுன்னி மனத்தொடு புலனொன் றாக்கிப்
பொய்கொலை களவு காமம் புன்மைகள் உறாமே போற்றிச்
செய்குதி தவத்தை யென்னாச் செவியறி வுறுத்தல் செய்தான். 33
561 அப்பரி சனைத்துந் தேரா அவனடி வணங்கி எந்தாய்
இப்பணி புரிவன் என்ன எல்லைதீர் ஆசி கூறி
மெய்ப்புகர் மீண்டு சென்றான் மேதகும் அவுணர் சூழ
ஒப்பரு மாயை செம்மல் வடபுலத் தொல்லை போனான். 34
562 வழிமுறை பயக்க நோற்கும் வடபுலந் தன்னி லேகிப்
பழுமர வனத்தில் ஆகோர் பாங்கரில் குறுகிச் சூரன்
அழல்கெழு மகத்தை யாற்ற அயுதயோ சனையுள் வைத்துச்
செழுமதி லதுசூழ் பான்மை செய்திடச் சிந்தை செய்தான். 35
563 அடல்கெழு தானை யாகும் அவுணர்தங் குழுவைக் கூவிப்
படிதனில் அடுக்கல் யாவும் பறித்தனர் கொணர வித்து
வடவரை நிவப்பிற் சூழ வாரியாப் புரிவித் தாங்கே
நடுநெடு வாயில் போக்கி ஞாயிலும் இயற்று வித்தான். 36
564 நூற்படு செவ்வி நாடி நொய்தென அங்கட் செய்த
மாற்பெரு மதிலைச் சூழ வரம்பறு தானை தன்னை
ஏற்புடை அரண மாக இயற்றுவித் தியாருஞ் செல்ல
நாற்பெருந் திசையி னூடு நலனுற வாய்தல் செய்தான். 37
565 பூமியும் வானும் ஒன்றப் பொருப்பினாற் புரியப் பட்டு
நாமியம் புரிதா நின்ற நாமநீள் காப்பும் அப்பால்
ஏமுறும் அவுண வௌ¢ளத் தெடுத்திடும் எயிலுஞ் சேர்ந்து
நேமியங் கிரியுஞ் சூழ்ந்த நிசியுநேர்ந் திருந்த வன்றே. 38
566 ஞாயிலின் வேலி மான நகங்களால் அடுக்கல் செய்த
பாயிரு நொச்சி தன்னிற் படைகுலாம் புரிசை தன்னில்
வாயில்க டோறும் போற்ற மந்திர முறையாற் கூவி
நேயமொ டடுபோர் மாதை நிறுவினன் நிகரி லாதான். 39
567 ஆளரி முகத்தன் முன்னோன் அடுக்கலாற் படையாற் செய்த
நீளிகல் வாரி முன்னர் நெறிகொள்மந் திரத்தாற் கூவிக்
கூளிகள் தொகையும் மோட்டுக் குணங்கரின் தொகையுஞ் சீற்றக்
காளிகள் தொகையுஞ் சூழ்போய்க் காப்புற நிறுவி விட்டான். 40
568 கயிரவ மனைய செங்கட் காளிகள் முதலோர் தம்மைச்
செயிரற நிறுவிப் பின்னர்ச் சீர்கொள்மந் திரத்தாற் பன்னி
அயிரற நெடிது போற்றி அவுணர்கோன் அங்கண் வந்த
வயிரவ கணத்தை வேள்வி காத்திட வணங்கி வைத்தான். 41
569 வேறு
தள்ளரி தாகிய காப்பிவை செய்திடு தனிவீரன்
உள்ளுற ஆயிர வாயிர யோசனை யுறுநீளங்
கொள்வதொ ராழமு மாயிட வோரோம குண்டந்தான்
நள்ளிடை யேபுரி வித்தனன் மாமகம் நலமாக. 42
570 ஆதித னக்கனல் வேள்வி இயற்றிட அடுசூரன்
வேதித னைப்புரி வித்திடு காலையில் வியன்ஞாலம்
பாதகர் எம்மை வருத்தினர் என்று பதைப்புற்றுப்
பேதுற வெய்தி இரங்கி ஒடுங்கினள் பெயர்வில்லாள். 43
571 ஆழம தாயிரம் யோசனை யாவவண் அகழசெய்கை
ஊழுற நாடிய சேடனும் ஆயிடை உறைவோருங்
கீழுறு வார்இவண் எய்துவர் தானவர் கிளையென்னாத்
தாழுற வேகினர் முன்னுறு தொன்னிலை தனைநீங்கி. 44
572 ஆழ்ந்திட அம்மக வேதியி யற்றலும் அதுபோழ்தில்
தாழ்ந்திடு நீத்தமெ ழுந்திட நாடிய தனிவேந்தன்
சூழந்தனர் நுங்களை உண்குவர் மீதெழல் துணிபன்றே
போழ்ந்தனை பாதல மேகென அவ்வழி போகிற்றால். 45
573 போதலும் அப்புனல் அவ்வழி கீழிடை போகின்ற
பாதலம் ஈறெனும் ஏழ்நிலை யோரது பாராநின்
றீதிவண் வந்துள தென்னென அற்புத வியல்எய்தாப்
பேதுறு கின்றனர் தீங்கிது வென்று பிடித்தாராய். 46
574 சீறரி மாமுகன் முன்னவ னாகிய திறன்மேலோன்
மாறகல் குண்டம திவ்வகை நாப்பண் வகுப்பித்தே
நூறுடன் எட்டது சூழ்தர ஆக்குபு நுவல்வேதி
வேறுமொ ராயிர வெட்டவை சுற்ற விதிப்பித்தான். 47
575 மூவகை வேதியும் ஆனபின் வேள்வியை இயல்வானய்
ஆவதொர் பல்பொருள் வேண்டி நினைந்தனன் அருள்யாயைப்
பாவனை பண்ணலும் அங்கது கண்டனள் பரிவெய்தித்
தேவர்கள் தேவன தின்னரு ளால்இவை சேர்விப்பாள். 48
576 சீயம் வயப்புலி யாளியொ டெண்கு திறற்கைம்மாப்
பாய்பரி செச்சைகள் ஆதிய வாகிய பன்மாவின்
தூய புழுக்கலின் ஊனவி நேமி தொகுப்பித்தாள்
ஆய வுடற்குரு திக்கடல் தன்னையும் அமர்வித்தாள். 49
577 பழிதரும் எண்ணெயெ னுங்கடல் ஓரிடை பயில்வித்தாள்
இழுதெனும் வாரிதி தானுமொர் சாரில் இருப்பித்தாள்
தொழுதகு பால்தயிர் நேமியும் ஓரிடை தொகுவித்தாள்
வழிதரு மட்டெனும் வேலையும் ஓரிடை வருவித்தாள். 50
578 ஐயவி காருறு தீங்கறி யேமுதல் அழல்காலும்
வெய்யன பல்வளன் யாவையும் ஓர்புடை மிகுவித்தாள்
நெய்யுறு முண்டியின் மால்வரை யோர்புடை நிறைவித்தாள்
மையறு தொல்பசு யாவையும் ஓர்புடை வருவித்தாள். 51
579 அரும்பெறல் நாயக மாகிய வேதியின் அகல்நாப்பண்
வரும்பரி சால்நிறு வுற்றிட மேலுயர் வடிவாகிப்
பெரும்புவி உண்டுமிழ் கண்ண பிரான்துயில் பெற்றித்தாய்
உரம்பெறு வச்சிர கம்பம தொன்றினை உய்த்திட்டாள். 52
580 தெரிதரு செந்நெலின் வால்அரி யோர்புடை செறிவித்தாள்
அரிசனம் நீவிய தண்டுல மோர்புடை அமைவித்தாள்
மருமலர் மான்மத மாதிய ஓர்புடை வருவித்தாள்
சுருவையும் நீடுத ருப்பையும் ஓர்புடை தொகுவித்தாள். 53
581 ஆலமு யிர்க்கும் வரம்பில தாருவின் அணிகொம்பர்
வாலிதின் மெய்ச்சமி தைக்குல மாமென வரையேபோல்
சாலமி குத்தனள் ஓர்புடை வேள்வி தனக்கென்றோர்
பாலின்நி ரைத்தனள் கொள்கல மாகிய படியெல்லாம். 54
582 பொன்னின் அகந்தொறும் வௌ¢ளி முளைத்திடு பொருளேபோல்
செந்நெலின் உற்றிடு தீம்பொறி யோர்புடை செறிவித்தே
துன்னிய வெண்முதி ரைக்குல மோர்புடை தூர்த்திட்டாள்
பின்னரும் வேண்டுவ யாவையும் நல்கினள் பெருமாயை. 55
583 மூவகை யாயிர யோசனை எல்லையின் முருண்வேள்விக்
காவன நல்கினள் போதலும் யாய்செய லதுநோக்கி
ஓவிது யாரின் முடிந்திடும் வேண்டுவ உய்த்தாளே
ஏவரு மெண்ணஇவ் வேள்வியி யற்றுவன் இனியென்றான். 56
584 ஊன்புகு பல்வகை ஆவியும் ஈண்டிய வுலகெல்லாந்
தான்புகு தன்விறல் காட்டிய நாட்டிய தாணுப்போல்
மேன்புகு சூரன் நடுத்திகழ் வேதியின் மிகுநாப்பண்
வான்புகு வச்சிர கம்பம் நிறீஇயினன் வலிதன்னால். 57
585 வச்சிர கம்பம் நிறீஇயின பின்னர் மகம்போற்றும்
நொச்சியின் நாற்றிசை வாயில் தொறுந்தொறும் நொய்திற்போய்
அச்சுறு வீர மடந்தையை உன்னி அருச்சித்துச்
செச்சைக ளாதிய ஊன்பலி நல்குபு செல்கின்றான். 58
586 வேறு
செல்லுஞ் சூரன் நொச்சியின் நாப்பட் செறிகின்ற
கல்லென் வெஞ்சொற் பூதர் தொகைக்குங் கணமென்றே
சொல்லும் பேயின் பல்குழு வுக்குஞ் சோர்வின்றி
ஒல்லும் பான்மை ஊன்பலி யாவையும் உதவுற்றான். 59
587 சீற்றத் துப்பிற் காளிக ளுக்குந் தென்பாலின்
கூற்றைக் காயும் வயிரவர் தங்கள் குழுவுக்கும்
ஏற்றத் தோடும் அர்ச்சனை செய்தே யினிதாகப்
போற்றிப் போற்றி ஊன்பலி வேண்டுந புரிகுற்றான். 60
588 குழாம் எட்டே யாயிர வேதி தொறுநாப்பட்
காழார் நஞ்சின் இந்தனம் இட்டுக் கனல்மூட்டித்
தாழா மேதன் தம்பிய ரோடுந் தகுசூரன்
ஊழால் நாடுற் றூனவி வர்க்க முறநேர்ந்தான். 61
589 நேருந் தோறும் எந்தைதன் நாம நெறிசெப்பிச்
சேரும் அன்பா லன்ன தவன்பாற் செலவுய்த்துச்
சூரன் பின்னர் இம்மகம் ஆற்றுந் தொழில்வல்லோன்
ஆரென் றுன்னித் தாரக னைப்பார்த் றைகின்றான். 62
590 ஏற்றஞ் சேரிவ் வேதிகள் தோறும் இறைதாழா
தூற்றங் கொண்டே ஏகினை வேள்வி யுலவாமல்
ஆற்றுந் தன்மை வல்லவன் நீயே அதுவல்லே
போற்றிங் கென்னாக் கூறி நிறுததிப் போகுற்றான். 63
591 அப்பா லேகி நூறுடன் எட்டாம் அகல்வேதி
துப்பா லெய்தி முன்னவை யேபோல் தொடர்வேள்வி
தப்பா தாற்றிச் சீய முகத்தோன் றனைநோக்கி
இப்பா லுற்றிம் மாமகம் ஆற்றாய் இனிதென்றான். 64
592 வேறு
தெரிய இன்னணஞ் செப்பி அவுணர்கோன்
அரியின் மாமுகத் தானை அவண்நிறீஇப்
பெரிது நள்ளுறு பெற்றியிற் செய்ததன்
உரிய வேதியின் ஒல்லையின் மேவினான். 65
593 வேதி யெய்தி விதியுளி அர்ச்சனை
யாது மோர்குறை இன்றியி யற்றியே
மாதொர் பங்குடை வள்ளலை உன்னியோர்
ஏதில் வேள்வி இயற்றுதல் மேவினான். 66
594 நஞ்சு பில்கு நவையுடைத் தாருவின்
விஞ்சு சாகை வியன்துணி யாவையும்
புஞ்ச மோடு பொருக்கென வேதியில்
துஞ்சி டும்வகை சூரனுந் தூவினான். 67
595 ஆல மாகி அமர்தரு வின்ஞெலி
கோலின் ஆக்கிய கொந்தழ லிட்டுமுன்
ஏல மூட்டி இழுதெனு மாமழை
சீல மந்திரத் தோடு சிதறினான். 68
596 அன்ன தற்பினர் அம்பொற் குழசிகள்
துன்னு கின்ற துணிபடும் ஊன்தொகை
வன்னி யின்கண் மரபின்நின் றுய்த்தனன்
செந்நி றக்குரு திக்கடல் சிந்தியே. 69
597 செய்ய தோர்மகச் செந்தழல் மீமிசைத்
துய்ய ஓதனஞ் சொன்முறை தூர்த்தனன்
நெய்யும் எண்ணெயும் நீடிய சோரியும்
வெய்ய பாலுந் ததியும் விடுத்துமேல். 70
598 மேன சாலியின் வெண்பொரி யின்குவை
ஆன நல்கி அழிதரும் ஈற்றினில்
வானு லாய மறிகட லாமெனத்
தேனும் ஆலியுந் தீமிசைச் சிந்தியே. 71
599 தோரை ஐவனஞ் சூழ்தடத் துற்றநீ
வாரம் ஏனல் இறுங்கொடு மற்றவும்
மூரி யௌ¢ளு மதிரையின் வர்க்கமுஞ்
சேர வுய்த்தனன் நெய்க்கடல் சிந்தினான். 72
600 கொடிய ஐயவி கூர்கறி யாதியாப்
படியில் வெய்ய பலபொருள் யாவையும்
நெடிதும் ஓச்சினன் நேயம தாகிய
கடலை வன்னி கவிழ்த்தன னென்பவே. 73
601 இன்ன பல்வகை யாவும் இயல்பினாற்
பொன்னு லாஞ்சடைப் புண்ணியன் றன்னையே
முன்னி வேள்வி முயன்றனன் ஞாலமேல்
துன்னு சீர்த்தியன் சூரபன் மாவென்பான். 74
602 வேறு
சூர னாமவன் அவ்வழிப் பெருவளஞ் சுட்டி
வீர வேள்வியை வேட்டலுஞ் செந்தழல் விரைவின்
ஆரும் அச்சுற வெழுந்துமீச் சென்றன அடுதீப்
பாரை நுங்கிவா னுலகெலாம் உணவெழும் பரிசின். 75
603 வானம் புக்கது மாதிரம் புக்கது மலரோன்
தானம் புக்கதெவ் வுலகமும் புக்கது தரைக்கீழ்
ஏனம் புக்குமுன் நாடருங் கழலினாற் கியற்றுங்
கானம் புக்கதோர் வேள்வியின் எழுங்கொழுங் கனலே. 76
604 பானு வின்பதஞ் சுட்டது பனிமதி பதமும்
மீனெ னும்படி நின்றவர் பதங்களும் மேலோர்
போன மேக்குயர் பதங்களுஞ் சுட்டது புலவோர்
கோனு றும்பதஞ் சுட்டது வேள்வியிற் கொடுந்தீ. 77
605 செற்று வாவசன் பதந்தனைச் சுட்டபின் சேண்போய்
மற்றை மேவர் பதமெலாஞ் சுட்டது மருங்கில்
சுற்று பாலர்தம் புரங்களுஞ் சுட்டது சூரன்
அற்ற மில்வகை ஆற்றிய வேள்வியுள் அனலே. 78
606 காலம் எண்ணில தவம்புரி காசிப முனிவன்
பாலன் ஈண்டையில் வலியினோர் மகமது பயில
ஏல நீடுதீ யுலகெலாம் முருக்கிய தென்னில்
மேல வன்செயும் பரிசெலாம் யாவரே விதிப்பார். 79
607 கார்ம றைத்தன கதிர்மதி மறைத்தன கரியோன்
ஊர்ம றைத்தன அயன்பதம் மறைத்தன உலவா
நீர்ம றைத்தன நெருப்பையும் மறைத்தன நீடும்
பார் மறைத்தன இடையிடை யெழும்புகைப் படலை. 80
608 சொற்ற வேதிஇவ் வியற்கையால் எரிந்தது சூரன்
பிற்றை யோர்கள் தம் எட்டுநூ றாயிரபேதம்
உற்ற வேதிகள் யாவையும் எரிந்தன ஒருங்கே
முற்றும் வன்னிகள் இறுதிநாள் உலகின்மொய்த் தெனவே. 81
609 வேள்வி இத்திறஞ் சூர்புரி தன்மையை விரைவில்
கேள்வி யாலுணர் இந்திரன் அச்செயற் கேடு
சூழ நாடினன் முடிப்பருந் தன்மையில் துளங்கி
ஆழ்வ தோர்துயர்க் கடலிடை அழுந்தினன் அயர்ந்தே. 82
610 சூன்மு கக்கொண்டல் மேனியும் முனிவரர் தொகையும்
நான்மு கத்தனுஞ் சூரபன் மன்செயல் நாடிப்
பான்மை மற்றிது யாவரே புரிவர்இப் பதகன்
மேன்மை பெற்றிட முயன்றனன் கொல்லென வெருண்டார். 83
611 இந்த வண்ணத்தின் ஒருபதி னாயிரம் யாண்டு
முந்து சூர்தன திளைஞரோ டருமகம் முயல
அந்தி வார்சடைக் கண்ணுதல் நின்மலன் அவன்பால்
வந்தி லானது தேர்ந்தனன் நிருதர்கோன் மாதோ. 84
612 கண்ணு தற்பரன் அருள்செயாத் தன்மையை கருத்தில்
எண்ணி இச்செயற் குறுவனோ சிவனென இசையாப்
பண்ணு மத்தொழி பின்னவர் தங்கள்பாற் பணித்து
விண்ண கத்தின்மீச் சென்றனன் கடவுளர் வெருவ. 85
613 வான கத்திடை நிற்புறு சூரபன் மாவாந்
தான வர்க்கிறை வாள்கொடே ஈர்ந்துதன் மெய்யின்
ஊன னைத்தையும் அங்கிமேல் அவியென ஓச்சிச்
சோனை யொத்ததன் குருதியை இழுதெனச் சொரிந்தான். 86
614 சோரி நெய்யவா ஊன்களே அவியவாச் சூரன்
வீர மாமகம் புரிவுழித் தனதுமெய்ம் மிசையூன்
ஈர ஈரவே முன்னையின் வளர்தலும் இதுகண்
டாரும் அச்சுறத் தெழித்தனன் விம்மித மானான். 87
615 சிந்தை யிற்பெரு மகிழ்ச்சிய னாகியிச் செய்கை
எந்தை யற்புறு நிலையதோ வெனமனத் தெண்ணா
மந்த ரப்புய நிருதர்கோன் பின்னும்அம் மரபால்
அந்த ரத்திடைத் தசைப்பெரு வேள்வியை அயர்ந்தான். 88
616 ஆண்டொ ராயிரம் இம்மகம் அந்தரத் தியற்ற
நீண்ட மாலுடன் நான்முகன் தேடரும் நிமலன்
ஆண்டும் வந்திலன் சூரன்அத் தன்மைகண் டழுங்கி
மாண்டு போவதே இனிக்கட னெனமனம் வலித்தான். 88
617 உன்னி இத்திறஞ் சூரபன் மாவெனும் ஒருவன்
வன்னி சுற்றிய ஆதிகுண் டத்திடை வதிந்து
செந்நி றத்ததாய் ஆணையால் அங்கியிற் சிதையாக்
கொன்னு னைத்தலை வச்சிர கம்பமேற் குதித்தான். 90
618 கடிதின் உச்சிநின் றுருவியே வச்சிர கம்பத்
தடித னிற்சென்று சூரபன் மாவெனும் அவுணன்
படிவ முற்றுநுண் துகளுற உளம்பதை பதைத்து
முடிய மற்றது கண்டனன் மடங்கல்மா முகத்தோன். 91
619 கண்ட காலையின் உளம்பதை பதைத்தது கண்கள்
மண்டு சோரிநீர் கான்றன கரங்களும் வாயுங்
குண்ட வேள்வியில் தொழில்மறந் திட்டன குறிப்போர்
உண்டு போலுமென் றையுற ஒதுங்கிய துயிரே. 92
620 துயர்ப்பெ ருங்கடல் நடுவுற ஆழ்ந்துதொல் லுணர்ச்சி
அயர்த்து மால்வரை யாமென மறிந்தனன் அறிவு
பெயர்த்தும் வந்துழிப் பதைபதைத் தலமந்து பெரிதும்
உயிர்த்து வாய்திறந் தன்னவன் புலம்புதல் உற்றான். 93
621 வேறு
மாயை தரும்புதல்வா மாதவஞ்செய் காசிபற்கு
நேய முருகா நிருதர் குலத்திறைவா
காயமுடன் நின்னையான் காணேனால் எங்கொளித்தாய்
தீய மகம்பலநாட் செய்துபெற்ற பேறிதுவோ. 94
622 தாயுந் தலையளிக்குந் தந்தையுநி தானவரை
ஆயுந் தலைவனும்நீ ஆவியும்நீ என்றிருந்தோய்
நீயங் கதனை நினையா திறந்தனையே
மாயுஞ் சிறியோர்க்கு மற்றிங்கோர் பற்றுண்டோ. 95
623 வீரனே தானவர்க்குள் மிக்கோனே மிக்கபுகழ்ச்
சூரனே நின்போல் தொடங்கிஇந்த வேள்விதனை
ஆரனே கம்வைகல் ஆற்றினார் ஆற்றியநீ
ஈரநே யங்கொள்ளா தெம்மைஅகன் றேகினையே. 96
624 நின்கண் அருளில்லா நீர்மையுண ராய்பன்னாட்
புன்கண் உறுவாய் புரமூன்று முன்னெரித்த
வன்க ணரைக்குறித்தே மாமகஞ்செய் தாய்அதற்கோ
உன்கண் உளதாம் உயிர்தனையுங் கொண்டனரே. 97
625 உன்போல் உயிர்விட் டுயர்மகஞ்செய் தோரும்அரன்
தன்போல் அருளாத் தகைமையரும் ஆங்கவைகண்
டென்போல் உயிர்கொண் டிருந்தோரும் இல்இவருள்
வன்போ டியமனத்து வன்கண்ணர் ஆர்ஐயா. 98
626 ஈசன் அருளால் எரிவேள் வியைஓம்பிப்
பேசாய வன்மைதனைப் பெற்று நமதுயிரும்
ஆசில் வளனும் அகற்றுவரென் றேயயாந்த
வாசவனும் இன்றோ மனக்கவலை தீர்ந்ததுவே. 99
627 எல்லாரும் போற்ற எரிவேள் வியைஓம்பிப்
பல்லா யிரநாட் பழகி எமக்குமிது
சொல்லா திறந்தாய் துணைவராய் நம்முடனே
செல்லார் இவரென்று சிந்தைதனிற் கொண்டனையோ. 100
628 ஈண்டாருங் காண எரியினிடைத் தம்பமிசை
வீண்டாய் உயிர்போய் விளிந்தாய் மிகும்வன்கண்
பூண்டாய்நின் மெய்யும் ஔ¤த்தாய் புலம்புமியாம்
மாண்டாலும் உன்றன் மதிவதனங் காண்போமோ. 101
629 என்றின் னனசொற் றிரங்கி அரிமுகத்தோன்
முன்றன்னை நல்கி முலையளிக்குந் தாய்காணாக்
கன்றென்ன வீழ்ந்தழுங்கக் கண்டதனைத் தாரகனுங்
குன்றென்னத் தன்கை குலைத்தரற்றி வீழ்ந்தனனே. 102
630 வீழ்ந்தான் உயிர்த்தான்அவ் வேள்விக் களமுற்றுஞ்
சூழ்ந்தான் புரண்டான் துளைக்கையி னால்நிலத்தைப்
போழ்ந்தா னெனவே புடைத்தான் துயர்க்கடலுள்
ஆழ்ந்தான்விண் ணஞ்ச அரற்றினான் தாரகனே. 103
631 சிங்க முகனுந் திறல்கெழுவு தாரகனுந்
தங்கண் முதல்வன் தவறுற் றதுநோக்கி
அங்கண் அரற்ற அதுகண்ட தானவர்கள்
பொங்குங் கடல்போல் பொருமிப் புலம்பினரே. 104
632 தாரகனுஞ் சீயத் தனிவீ ரனும்அவுணர்
ஆரும் நெடிதே அரற்றும் ஒலிகேளாச்
சீரில் வியனுலகில் தேவர்கோன் தன்னொற்றால்
சூரன் மகத்தீயில் துஞ்சு செயல்உணர்ந்தான். 105
633 தண்டார் அகலச் சதமகத்தோன் தானவர்கோன்
விண்டா னெனவே விளம்புமொழி கேளா
அண்டா மகிழ்ச்சியெனும் ஆர்கலியிற் பேரமுதம்
உண்டா னெனவேதன் உள்ளங் குளிர்ந்தனனே. 106
634 சிந்தை குளிர்ந்து செறியுமுரோ மஞ்சிலிர்த்து
முந்து துயர முழுதுந் தொலைத்தெழுந்து
வந்து புடைசூழும் வானோ ருடன்கடவுள்
தந்தி மிசையெய்தித் தனதுலகம் நீங்கினனே. 107
635 பொன்னுகம் நீங்கிப் புரைதீர் மதிக்கடவுள்
தன்னுலகம் நீங்கித் தபனன் பதங்கடந்து
துன்னும் அவுணர் துயரஞ் செயல்காண்பான்
மின்னுலவு மேக வியன்பதத்தில் வந்தனனே. 108
636 விண்ணாடர் தங்களுடன் வேள்விக் கிறைவிசும்பின்
நண்ணா மகிழா நகையாத்தன் நற்றவத்தை
எண்ணா வியவா இரங்கும் அவுணர்தமைக்
கண்ணார நோக்கிக் களிப்புற்று நின்றனனே. 109
637 நின்றதொரு காலை நிருத ருடன்அரற்றித்
துன்றுதுயர் மூழ்கிச் சோர்கின்ற சீயமுகன்
நன்றெனுயிர் போக நானிருப்ப தேயிங்ஙன்
என்று கடிதுமனத் தெண்ணி எழுந்தனனே. 110
638 அன்ன திறல்அவுணன் ஆயிரமென் றுள்ளஅகன்
சென்னிபல வுந்தனது செங்கைவா ளால்ஈர்ந்து
முன்னம் முதல்வன் முயன்ற பெருவேள்வி
வன்னி அதனுள் மறம்பேசி இட்டனனே. 111
639 ஈர்ந்து தலைகள் எரியில் இடுமுன்னர்ச்
சேர்ந்த வனையான் சிரங்கள் அவைமுழுதும்
பேர்ந்தும் அரிந்து பிறங்கு தழலினிடை
நேர்ந்து தனிநின்றான் நிருதர்க் கிறையோனே. 112
640 முன்னோன் எழுந்து முயலுஞ் செயல்நோக்கிப்
பின்னோன் தனது பெருஞ்சிரமுந் தான்கொய்து
மன்னோன் மகமியற்றும் வான்தழலி னுள்ளிட்டான்
அன்னோ வெனவே அவுணர் குழுஇரங்க. 113
641 சென்னி தலையரிந்து செந்தழலின் நாப்பணிடு
முன்ன மதுபோல வேறே முளைத்தெழலும்
பின்னும் அனையான்அப் பெற்றிதனை யேபுரிய
அன்ன படிகண்ட அவுணர் தமிற்சிலரே. 114
642 தங்கள் சிரமுந் தனிவாளி னால்துணியா
அங்கி மிசையிட்டும் அதன்கண் உறவீழ்ந்தும்
அங்கி உயிரதனை மாற்றிடலுஞ் சூரன்போல்
சிங்க முகனும்எரி செல்லத் துணிந்தனனே. 115
643 மோனத்தின்* வேள்வி முயன்றதொரு முன்னவன்போல்
வானத் தெழுவான் வலித்துனங் கொண்டிடலுங்
கானக் கடுக்கை கலைமதிசேர் செய்யசடை
ஞானப் பொடி**புனையும் நாதனது கண்டனனே.
( * மோனம் - மௌனம். ** ஞானப்பொடி - விபூதி. ) 116

ஆகத் திருவிருத்தம் - 643


9. வரம்பெறு படலம் (644 - 671)

644 கண்ட கறைமிடற்றுக் கண்ணுதலோன் சுந்தரனை
விண்டு முதலோர் வியப்பவே வெண்ணையிலாட்
கொண்ட தொருபனவக் கோலந் தனைத்தரித்துத்
தண்டும் ஒருவகை தனில்ஊன்றி வந்தனனே. 1
645 அங்கண் மகவேதி அணித்தாக வேகுறுகிச்
சிங்க முகனைச் சிவபெருமான் கண்ணுற்றே
இங்கு மிகநீ ரெவரும் இரங்குகின்றீர்
நுங்கள் பரிசு நுவலு மெனமொழிந்தான். 2
646 எந்தை பெருமான் இயம்ப அதுநாடித்
தந்தை யனையார் தமியேந் துயர்கண்டு
வந்து வினவுகின்றார் மற்றிங் கிவர் அருள்சேர்
சிந்தை யினரென்று சீயமுகன் உன்னினனே. 3
647 உன்னி அமலன் உகள மலர்ப்பதமேல்
சென்னி பலவுஞ் செறியப் பணிந்தெழுந்தெம்
இன்னல் வருவாயும் எமது வரன்முறையும்
பன்னி யிடுவ னெனவே பகர்கின்றான். 4
648 வேறு
தந்தை யாவான் காசிபனே தாயும் மாயை தானென்பான்
மைந்தர் யாங்கள் ஒருமூவர் மக்கள் பின்னும் பலருண்டால்
எந்தம் அன்னை பணிதன்னா லியாங்கள் ஈசன் றனக்காக
இந்த வனத்தில மூவருமிவ் வேள்வி தன்னை இயற்றினமே. 5
649 அங்கப் பரிசே யாண்டுபல அகல மகத்தை ஆற்றிடவுங்
கங்கைச் சடையோன் முன்னின்று கருணை சிறிதுஞ் செய்திலனால்
எங்கட் கெல்லாம் முன்னவனாம் இகல்வெஞ் சூர னதுநாடி
மங்குற் செறியும் வானிற்போய் வாளால் தசையீர்ந் திட்டனனே. 6
650 மின்போல் இலங்கும் வாளாற்றன் மெய்யிற் றசைகள் ஈர்ந்துளத்தில்
துன்போர் இறையும் இல்லாத சூரன் மகத்தீ மிசையிடலும்
முன்போல் தன்னூன் வளர்ந்திடவே பின்னும் அ·தே முயன்றதற்பின்
தன்போல் ஔ¤ர்வச் சிரகம்பத் தலைவீழ்ந் துருவித் தழல்புக்கான். 7
651 புக்கு முன்னோன் ஈறாகிப் போந்த காலை யாங்கண்டு
மிக்க மனத்தில் துயர்கொண்டு வெருவிப் புலம்பி எமதுயிரும்
ஒக்க விடவே நினைந்தேமால் உம்மைக் கண்டோ ரிறைதாழத்தோம்
தக்க திதுநம் வரன்முறையுந் தமியேந் துயரு மெனமொழிந்தான். 8
652 மொழிந்த காலை அங்கண்நின்ற முக்கண் இறைநும் முன்னோன்போல்
ஒழிந்து நீரும் மாயாதே உமது சூரன் தனையின்னே
அழிந்த தீயுள்நின் றெழுவித் தருள்செய் கின்றாம் அதுகாண்டிர்
கழிந்த சோகம் விடுதிரெனாக் கங்கை தன்னை நினைந்தனனே. 9
653 முன்னாள் அம்மை அங்குலியின் முளைத்த கங்கை தனிலெங்கோன்
மின்னார் சடையிற் கரந்தனவே யன்றி மகவான் விரிஞ்சன்மால்
என்னா நின்ற மும்மையினோர் இருக்கை தோறும் அளித்தவற்றுட்
பொன்னாட் டிருந்த நதிதன்னைப் புந்தி மீதில் உன்னினனே. 10
654 மாயோன் தன்பால் முற்கொண்ட வலிசேர் தண்ட மேந்திவரு
தூயோன் உன்ன அக்கங்கை துண்ணென் றுணர்ந்து துளங்கி விண்ணோர்
ஆயோர் எவரும் வெருக்கொள்ள அளப்பில் முகங்கொண் டார்த்தெழுந்து
சேயோ ரெல்லாம் அணித்தாகத் திசையோர் அஞ்சச் சென்றதுவே. 11
655 மேலா கியவிண் ணுலகனைத்தும் விரைவிற் கடந்து மேதினியின்
பாலாய் எங்கள் பிரான்பதங்கள் பணிந்து பணியாற் படர்செந்தீ
ஏலா நின்ற நடுக்குண்டத் திடையே புகலும் எறிகடல்வாய்
ஆலா லம்வந் துதித்ததென அவுணர் கோமா னார்த்தெழுந்தான். 12
656 தொன்மை போல வேதியினிற் சூர பன்மாத் தோன்றலுமத்
தன்மை கண்ட அரிமுகனுந் தார கப்பேர் வீரனுமாய்
இன்மை கொண்டோர் பெருவளம்பெற் றென்ன மகிழ்வுற் றெல்லையிலா
வன்மை யெய்திக் கடிதோடி மன்னன் பதமேல் வணங்கினரே. 13
657 தங்கோன் தன்னைப் பின்னோர்கள் தாழுஞ் செயலைத் தானவர்கண்
டெங்கோன் வந்தான் வந்தானென் றெவருங் கேட்ப எடுத்தியம்பிப்
பொங்கோ தஞ்சேர் கடன்மதியப் புத்தேள் வரவு கண்டதென
அங்கோ தையினால் வாழியவென்றவனைப் போற்றி ஆர்த்தனரே. 14
658 எண்மேற் கொண்ட நிருதர்குழாம் ஏத்த எரிநின் றெழுசூரன்
மண்மேற் கொண்ட திறங்காணூஉ வானோர் தொகையும் மகபதியும்
விண்மேற் கொண்ட புயல்கண்ட வியன்கோ கிலம்போல் வெருவித்தம்
முண்மேற் கொண்ட செல்லலொடும் ஓடித் தம்மூர் உற்றனரே. 15
659 வேறு
அரந்தைதனை இகந்தஇரு துணைவர்களும் பாங்கருற அவுணர் சேனை,
பரந்துபல வாழ்த்தெடுப்பச் சூரபன்மன் திகழ் வேலைப்படியும் வானும்,
நிரந்தபுனற் கங்கைதனை வருவித்து மறையவன்போல் நின்ற எம்மான்,
கரந்துதனை உணர்கின்ற உருவினோடு தோன்றினனால ககன மீதே. 16
660 நாரிபா கமும்இமையா முக்கண்ணுந் திருப்புயங்கள் நான்குமாகி,
மூரிமால் விடைமேல்கொண் டெம்பெருமான் மேவுதலும் உன்னி நோக்கிப்,
பாரின்மீ மிசைவீழ்ந்து பணிந்தெழுந்து பலமுறையும் பரவிப் போற்றிச்,
சூரனா ராதபெரு மகிழசிறந்து துணைவரொடுந் தொழுது நின்றான். 17
661 நின்றுபுகழ் சூரபன்மன் முகநோக்கி நமையுன்னி நெடிது காலம்,
வன்றிறன்மா மகமாற்றி எய்த்தனையால் வேண்டுவதென் வகுத்தி யென்னப்,
பொன்றிகழு மலர்க்கமலப் பொகுட்டுறைவோன் முதலியபுத் தேளிர் யாரும்,
இன்றெமது தலைமையெலாம் போயிற்றா லென இதங்க இதனைச் சொல்வான். 18
662 கொன்னாரும் புவிப்பாலாய்ப் பலபுவனங் கொண்டவண்டக் குழுவுக் கெல்லாம்,
மன்னாகி யுறல்வேண்டும் அவைகாக்குந் தனியாழி வரலும் வேண்டும்,
உன்னாமுன் அவையனைத்துஞ் செல்லுவதற் கூர்திகளும் உதவல் வேண்டும்,
எந்நாளும் அழியாமல் இருக்கின்ற மேனியுமெற் கீதல் வேண்டும். 19
663 அலையாழி மிசைத்துயில்கூர் பண்ணவனே முதலோர்கள் அமர்செய் தாலும்,
உலையாது கடந்திடுபேர் ஆற்றலொடும் பலபலடையும் உதவல் வேண்டும்,
தொலையாமே எஞ்ஞான்றும் இருந்திடலும் வேண்டுமெனச் சூரன் வேண்டக்,
கலையார்வெண் மதிமிலைச்சுஞ் செஞ்சடிலத் தனிக்கடவுள் கருணை செய்வான். 20
664 மண்டனக்கா யிரகோடி அண்டங்க ளுளவாகு மற்ற வற்றுள்,
அண்டமோ ராயிரத்தெட் டுகநூற்றெட் டாள்கவென அருளால் நல்கி,
எண் டொகைபெற் றிடுகின்ற அவ்வண்டப் பரப்பெங்கும் ஏகும் வண்ணம்,
திண்டிறல்பெற் றிடுகின்ற இந்திரஞா லமதென்னுந் தேரும் நல்கி. 21
665 எண்ணுபல புவனங்கள் கொண்டஅண்டத் தொகைதன்னை யென்றும் போற்றக்,
கண்ணனது நேமியினும் வலிபெறுமோர் அடலாழி கடிதின் நல்கி,
அண்ணலுறு சினவேற்றுக் கோளரியூர் தியும்நல்கி அகிலத்துள்ள,
விண்ணவர்கள் யாவருக்கும் அன்றுமுதன் முதல்வனாம் மேன்மை நல்கி. 22
666 மேற்றிகழும் வானவரைத் தானவரை ஏனவரை வெற்றி கொள்ளும்
ஆற்றலொடு பெருந்திறலும் பாசுபத மாப்படையே ஆதி யாகித்
தோற்றமுறு கின்றதெய்வப் படையனைத்தும் எந்நாளுந் தொலைந்தி டாமல்
ஏற்றமிகும் வச்சிரமா கியமணிமே னியுமுதவி இதற்குப் பின்னர். 23
667 ஆறுசேர் கங்கைதனை விண்ணுலகு தனிலேவி அக்கங் கைக்குங்
கூறுசேர் பெருவேள்விச் செந்தழற்குந் தோற்றமெய்திக் குலவும் வண்ணம்
வீறுசேர் பெருங்கடல்போல் ஒருபதினா யிரகோடி வௌ¢ள மாகுந்
தாறுபாய் கரிதிண்டேர் வயப்புரவி அவுணரெனுந் தானை நல்கி. 24
668 வேறு
துன்னுறு பெரும்புகழ்ச் சூர பன்மனுக்
கின்னதோ ரருள்புரிந் திட்ட வெல்லையில்
அன்னவற் கிளைஞர்வந் தடிப ணிந்தெழத்
தன்னிகர் இல்லதோர் தலைவன் கூறுவான். 25
669 வேறு
சூரன் என்பவன் தோளிணை போலவே
வீரம் எய்தி விளங்கிநூற் றெட்டுகஞ்
சீரின் மேவுதிர் தேவர்கள் யாரையும்
போரில் வென்று புறந்தரக் காண்டிரால். 26
670 தேவர் யாவருஞ் சென்று தொழப்படு
மூவ ராகி மொழிந்திடு நுங்களைத்
தாவி லாதநஞ் சத்தியொன் றேயலால்
ஏவர் வெல்பவர் என்று விளம்பிமேல். 27
671 ஈறு றாத விரதமுந் தன்பெயர்
கூறு தெய்வப் படையுங் கொடுத்திடா
வேறு வேறு மிகவருள் செய்துமேல்
ஆறு சேர்சடை ஆண்டகை ஏகினான். 28

ஆகத் திருவிருத்தம் - 671


10. சுக்கிரனுபதேசப் படலம் (672 -722)

672 அற்றா கின்ற வேலையின் முன்னோர் அரணம்போற்
சுற்றா நிற்குந் தானவர் தங்கோன் தொலைவில்சீர்
பெற்றான் என்னுந் தன்மையை உன்னிப் பெருவன்மை
உற்றா ரொல்லென் றார்த்தனர் ஆற்ற உவப்புற்றார். 1
673 ஊழியில் வேதன் கண்டுயில் வேலை உலகஞ்சூழ்
ஆழிக ளேழும் ஆணையின் நிற்றல் அதுநீங்கி
மாழைகொள் மேருச் சுற்றிய தென்ன மகத்தெல்லை
சூழறல் நீங்கிச் சூர்முதல் தன்பால் துன்னுற்றார். 2
674 கண்டார் ஆர்த்தார் கான்மிசை வீழ்ந்தான் கமழ்வேர
கொண்டார் ஒத்தார் கைத்தொழு கின்றார் குப்புற்றார்
> அண்டா ஓகை பெற்றனர் தொன்னாள் அயர்வெல்லாம்
விண்டார் வெஞ்சூர் தன்புடை யாகி விரவுற்றார். 3
675 முன்னா குற்றோ ரிற்சிலர் தம்மை முகநோக்கி
இந்நாள் காறும் நீர்வலி யீர்கொ லெனவோதி
மன்னா குற்றோன் நல்லருள் செய்ய மகிழவெய்தி
அன்னார் யாரும் இன்னதொர் மாற்றம் அறைகுற்றார். 4
676 தீயுண் டாகுங் கண்ணுதல் கொண்ட சிவனுண்டு
நீயுண் டெங்கட் கோர்குறை யுண்டோ நிலையாகி
ஏயுஞ் செல்வஞ் சீரொடு பெற்றோம் இடரற்றோம்
தாயுண் டாயின் மைந்தர் தமக்கோர் தளர்வுண்டா. 5
677 என்பார் தம்பால் அன்பின னாகி இறைபின்னோர்
தன்பா லாக நிற்புழி இந்தத் தகுவன்றான்
வன்பா லானான் செய்வதென் என்னா வானோர்கள்
துன்பாய் அச்சுற் றேங்கினர் ஆவி தொலைவார்போல். 6
678 வேறு
சேனை நள்ளிடைச் சீர்கெழு வன்மையான்
மேன தன்மை விருப்பினிற் கண்ணுறீஇ
மான மேற்சென்று மன்னொடுந் தானவர்
சோனை மாரியில் தூமலர் தூவினார். 7
679 தூசு வீசினர் சூர்முதல் வாழயென்
றாசி கூறினர் ஆடினர் பாடினர்
பேச லாத பெருமகிழ் வெய்தினார்
வாச வன்றன் மனத்துயர் நோக்கினார். 8
680 அண்ண லார்அரு ளால்அழல் வேதியின்
கண்ணில் வந்த கணிப்பில் படைக்கெலாம்
எண்ணி லோரை இறையவர் ஆக்கினான்
நண்ணி நாளும் நவையறப் போற்றவே. 9
681 கண்ண கன்புயக் காவலன் தானைகள்
மண்ணும் வானமும் மாதிர வெல்லையுந்
தண்ண றச்செலத் தம்பியர் தம்மொடும்
எண்ணி வேள்வி இருங்களம் நீங்கினான். 10
682 நீங்கி மீண்டு நெடுந்தவத் தந்தைதன்
பாங்கர் எய்திப் பணிந்து பரமனால்
வாங்க லுற்ற வரத்தயல் கூறியே
யாங்கள் செய்வகை என்னினி யென்னவே. 11
683 தந்தை கேட்டுச் சதமகன் வாழ்வினுக்
கந்த மாகிய தோவண்ட ருக்கிடர்
வந்த தோவெம் மறைநெறி போனதோ
எந்தை யார்அருள் இத்திற மோவெனா. 12
684 உன்னி யுள்ளத் துணர்வுறு காசிபன்
தன்னின் வந்த தனயரை நோக்கியே
முன்னி நுங்கண் முதற்குருப் பார்க்கவன்
அன்ன வன்கண் அடைகுதிர் அன்பினீர். 13
685 அடைதி ரேயெனின் அன்னவன் உங்களுக்
கிடைய றாவகை இத்திரு மல்குற
நடைகொள் புந்தி நவின்றிடும் நன்றெனா
விடைபு ரிந்து விடுத்தனன் மேலையோன். 14
686 விட்ட காலை விடைகொண்டு வெய்யவன்
மட்டி லாத வயப்படை யோடெழா
இட்ட மான இயற்புக ரோனிடங்
கிட்டி னானது கேட்டனன் ஆங்கவன். 15
687 கேட்டு ணர்ந்திடு கேழ்கிளர் தேசிகன்
வாட்ட நீங்கி மகிழ்நறை மாந்தியே
வேட்ட மெய்தி விரைந்துதன் சீடர்தங்
கூட்ட மோடெதிர் கொண்டு குறுகவே. 16
688 கண்ட சூரன் கதுமெனத் தன்பெருந்
தண்ட முன்சென்று தம்பியர் தம்மொடு
மண்டு காதலின் மன்னிய தேசிகன்
புண்ட ரீகமென் பொன்னடி தாழந்தெழ. 17
689 நன்று வாழிய நாளுமென் றாசிகள்
நின்று கூறி நிருதர்க் கிறைவனைத்
தன்று ணைக்கரத் தால்தழு விப்புகர்
என்றும் வாழ்தன் னிருக்கைகொண் டேகினான். 18
690 ஏகு மெல்லை இளவற் கிளவலை
வாகு சேர்ந்தநம் மாப்படை போற்றென
யூக மோடு நிறீஇயுர வோனொடும்
போகல் மேயினன் புந்தியில் சூரனே. 19
691 ஆரு யிர்த்துணை யான அரிமுகன்
வார முற்றுடன் வந்திட வந்திடுஞ்
சூர பன்மனைச் சுக்கிரன் தன்னிடஞ்
சேர வுய்த்துச் செயன்முறை நாடியே. 20
692 ஆச னங்கொடுத் தங்கண் இருத்தியே
நேச நெஞ்சொடு நீடவும் நல்லன
பேசி நீர்வரும் பெற்றியென் னோவெனாத்
தேசி கன்கொலச் செம்மல் உரைசெய்வான். 21
693 ஓங்கு வேள்வி உலப்பறச் செய்ததும்
ஆங்க னம்வந் தரனருள் செய்ததும்
தாங்க ரும்வளந் தந்ததுங் காசிபன்
பாங்கர் வந்த பரிசும் பகர்ந்துமேல். 22
694 தாதை கூறிய தன்மையும் முற்றுற
ஓதி யாமினி ஊக்கி யியற்றிடும்
நீதி யாது நிகழ்த்துதி நீயெனத்
தீது சால்மனத் தேசிகன் கூறுவான். 23
695 பாச மேன்றும் பசுவென்றும் மேதகும்
ஈச னென்றும் இசைப்பர் தளையெனப்
பேசல் மித்தை பிறிதிலை ஆவியுந்
தேசு மேவு சிவனுமொன் றாகுமே. 24
696 தீய நல்லன வேயெனச் செய்வினை
ஆயி ரண்டென்பர் அன்னவற் றேதுவால்
கூயு மால்பிறப் பென்பர்இன் பக்கடல்
தோயும் என்பர் துயருறு மென்பரால். 25
697 ஒருமை யேயன்றி ஊழின் முறைவிராய்
இருமை யுந்துய்க்கும் என்பர்அவ் வெல்லையில்
அரிய தொல்வினை யானவை ஈட்டுமேல்
வருவ தற்கென்பர் மன்னுயிர் யாவையும். 26
698 ஈட்டு கின்ற இருவினை யாற்றலான்
மீட்டு மீட்டும் விரைவின் உதித்திடும்
பாட்டின் மேவும் பரிசுணர்ந் தன்னவை
கூட்டு மென்பர் குறிப்பரி தாஞ்சிவன். 27
699 சொற்ற ஆதியுந் தோமுறு வான்றளை
உற்ற ஆவியும் ஒன்றல ஒன்றெனில்
குற்ற மாகும்அக் கோமுதற் கென்பரால்
மற்ற தற்கு வரன்முறை கேட்டிநீ. 28
700 ஆதி யந்தமின் றாகி அமலமாஞ்
சோதி யாயமர் தொல்சிவன் ஆடலின்
காத லாகிக் கருதுதல் மாயையாற்
பூதல் யாவும் பிறவும் புரிவனால். 29
701 இடங்கொள் மாயையின் யாக்கைக ளாயின
அடங்க வும்நல்கி அன்னவற் றூடுதான்
கடங்கொள் வானிற் கலந்துமற் றவ்வுடல்
மடங்கு மெல்லையின் மன்னுவன் தொன்மைபோல். 30
702 இத்தி றத்தின்எஞ் ஞான்றும்அவ் வெல்லைதீர்
நித்தன் ஆடல் நிலைமை புரிந்திடும்
மித்தை யாகும் வினைகளும் யாவையும்
முத்தி தானு முயல்வதும் அன்னதே. 31
703 பொய்ய தாகும் பொறிபுலம் என்றிடின்
மெய்ய தோவவை காணும் விழுப்பொருள்
மையில் புந்தியும் வாக்கும் வடிவமுஞ்
செய்ய நின்ற செயல்களும் அன்னதே. 32
703 அன்ன செய்கைகள் அன்மைய தாகுமேற்
பின்னர் அங்கதன் பெற்றியின் வந்திடும்
இன்னல் இன்பம் இரண்டுமெய் யாகுமோ
சொன்ன முன்னைத் துணிபின வாகுமே. 33
705 மித்தை தன்னையும் மெய்யெனக் கொள்ளினும்
அத்த குந்துய ரானதும் இன்பமும்
நித்த மாகும் நிமலனை எய்துமோ
பொத்தி லான பொதியுடற் காகுமே. 34
706 தோன்று கின்றதும் துண்ணென மாய்வதும்
ஏன்று செய்வினை யாவதுஞ் செய்வதும்
ஆன்ற தற்பரற் கில்லை அனையதை
ஊன்றி நாடின் உடற்குறு பெற்றியே. 35
707 போவ தும்வரு கின்றதும் பொற்புடன்
ஆவ தும்பின் அழிவதுஞ் செய்வினை
ஏவ தும்மெண்ணி லாத கடந்தொறும்
மேவு கின்றதொர் விண்ணினுக் காகுமோ. 36
708 அன்ன போல்எங்கும் ஆவியொன் றாகியே
துன்னி நின்றிடு தொல்பரன் வேறுபா
டென்ன தும்மிலன் என்றுமொர் பெற்றியான்
மன்னும் அங்கது வாய்மையென் றோர்திநீ. 37
709 தஞ்ச மாகும் தருமநன் றாலென
நெஞ்ச கத்து நினைந்து புரிவதும்
விஞ்சு கின்ற வியனபவந் தீதென
அஞ்சு கின்றது மாம்அறி வின்மையே. 38
710 யாது யாதுவந் தெய்திய தன்னதைத்
தீது நன்றெனச் சிந்தைகொள் ளாதவை
ஆதி மாயையென் றாய்ந்தவை ஆற்றுதல்
நீதி யான நெறிமைய தாகுமே. 39
711 தருமஞ் செய்க தவறுள பாவமாங்
கருமஞ் செய்யற்க என்பர் கருத்திலார்
இருமை தன்னையும் யாவர்செய் தாலுமேல்
வருவ தொன்றிலை மாயம்வித் தாகுமோ. 40
712 கனவின் எல்லையில் காமுறு நீரவும்
இனைய வந்தவும் ஏனை இயற்கையும்
நனவு வந்துழி நாங்கண்ட தில்லையால்
அனைய வாம்இவண் ஆற்றுஞ் செயலெலாம். 41
713 இம்மை யாற்றும் இருவினை யின்பயன்
அம்மை எய்தின்அன் றோவடை யப்படும்
பொய்ம்மை யேயது பொய்யிற் பிறப்பது
மெய்ம்மை யாகும தோசுடர் வேலினோய். 42
714 நெறிய தாகுமிந் நீர்மையெ லாம்பிறர்
அறிவ ரேயெனின் அன்னதொர் வேலையே
பெறுவர் யாமுறும் பெற்றியெ லாமவை
உறுதி யுண்டெனின் உண்மைய தாகுமே. 43
715 சிறிய ரென்றுஞ் சிலரைச் சிலரைமேல்
நெறிய ரென்றும் நினைவது நீர்மையோ
இறுதி யில்லுயிர் யாவுமொன் றேயெனா
அறிதல் வேண்டும· துண்மைய தாகுமே. 44
716 உண்மை யேயிவை ஓதியி னர்உணர்
நுண்மை யாம்இனி நுங்களுக் காகிய
வண்மை யுந்தொல் வழக்கமும் மற்றவுந்
திண்மை யோடுரை செய்திடக் கேட்டிநீ. 45
717 தேவர் தம்மினுஞ் சீதர னாதியோர்
ஏவர் தம்மினும் ஏற்றம தாகிய
கோவி யற்கையுங் கொற்றமும் ஆணையும்
ஓவில் செல்வமும் உன்னிடை யுற்றவே. 46
718 வேறு
உற்றதோர் மேன்மை நாடி உன்னைநீ பிரம மென்றே
தெற்றெனத் தௌ¤தி * மற்றத் திசைமுகன் முதலோர் தம்மைப்
பற்றலை மேலோ ரென்று பணியலை இமையோர் உங்கள்
செற்றலர் அவரை வல்லே செறுமதி திருவுஞ் சிந்தி.
( * இது மாயாவாத உபதேசம் ஆகும்.) 47
719 இந்திர னென்போன் வானோர்க் கிறையவன் அவனேநென்னல்
அந்தமில் அவுணர் தங்கள் ஆருயிர் கொண்டான் அன்னான்
உய்ந்தனன் போகா வண்ணம் ஒல்லையில் அவனைப் பற்றி
மைந்துறு நிகளஞ் சேர்த்தி வன்சிறை புரிதி மாதோ. 48
720 சிறையினை இழைத்துச் செய்யுந் தீயன பலவுஞ் செய்து
மறைபுகல் முனிவர் தம்மை வானவர் தம்மைத் திக்கின்
இறையவர் தம்மை நாளும் ஏவல்கொண் டிடுதி அன்னார் 49
721 கொலையொடு களவு காமங் குறித்திடும் வஞ்ச மெல்லாம்
நிலையெனப் புரிதி யற்றால் நினக்குமேல் வருந்தீ தொன்றும்
இலையவை செய்தி டாயேல் இறைவநீ விரும்பிற் றெல்லாம்
உலகிடை ஒருங்கு நண்ணா உனக்கெவர் வெருவும் நீரார். 50
722 வண்டுழாய் மிலைச்சுஞ் சென்னி மால்விடைப் பாகன் தந்த
அண்டமா யிரமே லெட்டும் அனிகமோ டின்னே ஏகிக்
கண்டுகண் டவண்நீ செய்யுங் கடன்முறை இறைமை யாற்றி
எண்டிசை புகழ மீண்டே ஈண்டுவீற் றிருத்தி யென்றான். 51

ஆகத் திருவிருத்தம் - 722


11. அண்டகோசப் படலம் (723 -789)

723 தீயதோ ரினைய மாற்றஞ் ரெப்பலும் இதுநன் றெந்தை
ஏயின பணியில் நிற்பன் இறையவன் எனக்குத் தந்த
ஆயிரத் தெட்டென் றோதும் அண்டங்கள் நிலைமை யாவும்
நீயுரை யென்ன ஆசான் நிருபனுக் குரைக்க லுற்றான். 1
724 மேலுள பொருளுந் தத்தம் விளைவது நிற்க இப்பால்
மூலமாம் பகுதி தன்னின் முளைத்திடும் புந்தி புந்தி
ஏலுறும் அகந்தை ஒன்றின் எய்தும்ஐம் புலனும் ஆங்கே
வாலிய ககனந் தொட்டு மாநிலங் காறும் வந்த. 2
725 அப்பெரும் புவிக்குத் தான்ஓர் ஆயிர கோடி யண்டம்
ஒப்பில வென்ன உண்டால் ஒன்றினுக் கொன்று மேலாச்
செப்புறு நிலைமைத் தன்று தெரிந்திடிற் பரந்து வைகும்
வைப்பென லாகும் அன்ன மற்றவை அம்பொன் வண்ணம். 36
724 அங்கண்மா ஞாலத் தண்டம் ஆயிர கோடி தன்னில்
இங்குநீ பெற்ற அண்டம் ஆயிரத் தெட்டி னுள்ளுந்
துங்கமாம் அண்ட மொன்றின் இயற்கையைச் சொல்லு கின்றேன்
செங்கைசேர் நெல்லி யென்னச் சிந்தையிற் காண்டி யன்றே. 4
727 கதிரெழு துகன்எண் மூன்று கசாக்கிர கந்தான் ஆகும்
இதுதொகை இருநான் குற்ற திலீக்கையவ் விலீக்கை யெட்டால்
உதிதரும் யூகை யன்ன யூகையெட் டியவை யென்ப
அதினிரு நான்கு கொண்ட தங்குலத் தளவை யாமே. 5
728 அங்குலம் அறுநான் கெய்தின் அதுகரம் கரமோர் நான்கு
தங்குதல் தனுவென் றாகும் தனுவிரண் டதுஓர் தண்டம்
இங்குறு தண்ட மான இராயிரங் குரோசத் தெல்லை
பங்கமில் குரோசம் நான்கோ ரியோசனைப் பால தாமே. 6
729 அந்தயோ சனையின் எல்லை ஐம்பதிற் றிரண்டு கோடி
வந்ததிவ் வண்டத் திற்கும் மாயிரும் பரவை வைப்பும்
முந்திய நிவப்பு மாகும் மொழிந்திடும் அண்டங் கட்கும்
இந்தவா றளவைத் தென்றே எண்ணுதி இலைகொள் வேலோய். 7
730 ஒண்புவ னிக்குக் கீழாம் யோசனை ஐம்பான் கோடி
திண்புவி தனக்கு மேலாய்ச் சேர்தரும் அளவும் அ·தே
மண்புகழ் மேரு வுக்கு மாதிரம் அவையோ ரெட்டும்
எண்படும் ஐம்பான் கோடி கடாகத்தின் எல்லை யோடும். 8
731 அண்டமார் கடமோர் கோடி அதற்குமீ தினிலோர் கோடி
திண்டிறல் காலச் செந்தீ யுருந்திரர் செம்பொற் கோயில்
ஒண்டழற் கற்றை யுள்ள தொருபது கோடி மீக்கட்
கொண்டெழு தூம வெல்லை குணிக்கின்ஐங் கோடி யாமே. 9
732 அரித்தவி சுயர்ச்சி ஆங்கோர் ஆயிரம் அளவைத் தாகும்
பரத்தலும் அதற்கி ரட்டி படர்தரு காலச் செந்தீ
உருத்திரர் அழலின் மேனி யோசனை அயுத மாகுந்
திருத்தகு பலகை வாள்வில் செஞ்சர மேந்திச் சேர்வார். 10
733 ஓங்கிய காலச் செந்தீ யுருத்திரர் தம்மைப் போல்வார்
ஆங்கொரு பதின்மர் சூழ்வர் அன்னவர் ஏவல் ஆற்றிப்
பாங்குற வொருபான் கோடிப் பரிசன மேவும் அன்னோர்
பூங்கழல் வழுத்தி ஆதி கமடம்அப் புவனம் வைகும். 11
734 அன்னதோர் புவன மீக்கண் அடுக்குறு நிலைய வாகித்
துன்னுறு நாலேழ் கோடி தொகைப்படு நிரயத் தெல்லை
உன்னத மான கோடி ஒன்றொழி முப்பான் மேலும்
பன்னிரண் டிலக்கம் அண்டத் தளவுறும் பரப்பு மன்னோ. 12
735 உற்றிடு நிரய மீதில் ஒன்றிலா இலக்கம் நூறு
பெற்றிடு முயர்வு தன்னிற் பிறங்குமோர் புவனம் கீழ்மண்
பற்றிய இரும்பு நாப்பண் பச்சிமம் பசும்பொற் சோதி
மற்றதன் மேல்பா கத்தில் வதிவர்கூர் மாண்டர் என்போர். 13
736 காழக முகத்தா கூர்வாய்க் கணிச்சியம் படைசேர் கையர்
ஊழியங் கனலை அன்ன உருவினர் திரியுங் கண்ணர்
மாழையம் பீட மீக்கண் வைகுகூர் மாண்டர் தம்பால்
சூழுருத் திரராய் உள்ளோர் தொகுதியை அளக்கொ ணாதால். 14
737 அப்புவ னத்து மீதே அந்தரம் இலக்க மொன்பான்
செப்புவர் அதனுக் கும்பர் சிறந்தபா தலங்கள் என்ப
ஒப்பறு பிலமொன் றற்கே ஒன்ப·தி லக்க மாக
இப்படி அறுபான் மூன்றாம் இலக்கமேழ் பிலத்தின் எல்லை. 15
738 பரத்தினி லுறுங்க னிட்ட பாதலம் எட்டி லக்கம்
அரத்தினுக் ககற்சி வெவ்வே றயுதமாம் அவைமுப் பாகம்
உரத்தகும் அவுணர் கீழ்பால் ஔ¢ளெயிற் றுரகர் நாப்பண்
திருத்தகும் அரக்கர் மேல்பால் சிறந்துவீற் றிருந்து வாழ்வோர். 16
739 இதன்மிசை இலக்க மொன்பான் ஆடகர் இரக்கை யாகும்
இதன்மிசை வௌ¤ஓர் கோடி இலக்கமும் இருப துண்டால்
இதன்மிசைக் களிறு பாந்தள் எட்டுடன் சேடன் ஏந்தும்
இதன்மிசைப் புவியின் ஈட்டம் எண்ப·தி லக்க மாமே. 17
740 ஈடுறு பிலங்கட் கெல்லாம் இறைவராய்ப் பாது காப்போர்
ஆடகர் தாமே நாகர் அவுணர்வாள் அரக்கர் அன்னார்
தாடொழு சனங்கள் அண்ட கடமுதல் தரையீ றாகக்
கோடியோர் ஐம்பான் ஆகுங் குணித்தனை கோடி யன்றே. 18
741 பலவகைப் பிலங்கட் கெல்லாம் பரமதாய் உற்ற தொல்பார்
உலகினுள் விரிவும் அங்கண் உள்ளவும் உரைப்பன் கேட்டி
குலவிய சம்பு சாகங் குசைகிர வுஞ்சம் கோதில்
இலவுகோ மேத கம்புட் கரம்இவை ஏழு தீவே. 19
742 பரவுமிவ் வுலகில் உப்புப் பால்தயிர் நெய்யே கன்னல்
இரதமா மதுநீ ராகும் எழுகடல் ஏழு தீவும்
வரன்முறை விரவிச் சூழும் மற்றதற் கப்பால் சொன்னத்
தரையது சூழ்ந்து நிற்கும் சக்கர வாளச் சையம். 20
743 அன்னதற் கப்பால் வேலைக் கரசனாம் புறத்தி லாழி
பின்னது தனக்கும் அப்பால் பேரிருள் சேர்ந்த ஞாலம்
மன்னவ காண்டி அப்பால் வலிகெழும் அண்டத் தோடு
துன்னுமிப் பொருள்கள் யாவுஞ் சூழ்ந்துகொண் டிருக்கு மன்றே. 21
744 எல்லைதீர் முன்னைத் தீவோ ரிலக்கமாங் கடலும் அற்றே
அல்லன தீவும் நேமி அதற்கதற் கிரட்டி யாகச்
சொல்லினர் ஆங்ஙன் கண்ட தொகையிரு கோடி அன்றி
நல்லதோர் ஐம்பான் மேலும் நான்கெனும் இலக்க மாமே. 22
745 ஐயிரு கோடி சொன்னத் தணிதலம் அதுசூழ் நேமிச்
சையமோர் அயுத மாகும் சார்தரு புறத்தின் நேமி
எய்திய கோடி மேலும் இருபதோ டிலக்க மேழாம்
மையிருள் சேர்ந்த பாரின் எல்லைமேல் வகுப்பன் மன்னோ. 23
746 ஆரிருள் உலகம் முப்பான் அஞ்செனுங் கோடி மேலும்
ஓரொரு பத்தொன் பானூ றுற்றநான் கயுதமாகும்
பேரிருள் சூழ்ந்த அண்டப் பித்திகைக் கனமோர் கோடி
பாரிடை யகலந் தேரில் பாதியோர் ஐம்பான் கோடி. 24
747 நடைதரு தொன்னூ லாற்றான் நாம்புகல் கணிதந் தன்னை
உடையதோர் திசையே இவ்வ றொழிந்தமா திரத்தும் வைக்கின்
வடகொடு தென்றி கீழ்மேல் மற்றுள கோண முற்றும்
நொடிதரிற் கோடி கோடி நூறுயோ சனைய தாமே. 25
748 முள்ளுடை மூல மான முண்டகத் தவிசின் மேய
வள்ளறன் வலது மொய்ம்பான் வந்தசா யம்பு மைந்தன்
அள்ளிலை வேற்கை நம்பி அன்புடை விரதன் ஞாலம்
உள்ளதோ ரெல்லை முற்றும் ஒருதனிக் குடையுள் வைத்தான். 26
749 அங்கவன் தனது மைந்தர் அங்கிதீ ரன்மே தாதி
துங்கமாம் வபுட்டி னோடு சோதிட்டுத் துதிமான் தொல்சீர்
தங்குமவ் வியனே மிக்க சவனனாம் எழுவர் தாமும்
பங்குகொண் டேழு தீவும் பாதுகாத் தரசு செய்தார். 27
750 வேறு
சீரியசம் புத்தீபம் புரந்த அங்கி தீரன்என்போன்
      தான் அருளுஞ் சிறுவ ராயோர்,
பாரதன்கிம் புருடன்அரி கேது மாலன் பத்திரா
      சுவனன்இளா விருத னென்போன்,
ஏருடைய இரமியன்நல் லேமப் பேரோன் இயற்குருவாம்
      ஒன்பதின்மர் இவர்கள் பேரால்,
ஓரொருவர்க் கொவ்வொன்றா நாவற் றீவை
      ஒன்பதுகண் டமதாக்கி உதவி னானால். 28
751 விண்ணுயர்சம் புத்தீவின் நடுவு நின்ற
      மேருவரை செங்கமலப் பொகுட்டுப் போல,
நண்ணுமதற் கியோசனைஉன் னதம்எண்
      பத்து சென்னி யகலம் முப்பா
னிராயிரமாம் பராரையெல்லை
      அதனிற் பாதி,
வண்ணமிகு மேகலைமூன் றதனுள் உச்சி
      வாய்த்திடுமே கலையினிற்பல் சிகர மல்கும். 29
752 மேருவரை அதற்குநடுப் பிரமன் மூதூர் மிக்கமனோ
      வதிஅதற்கு மேலைத் திக்கின்,
நாரணன்வாழ் வைகுண்டம் வடகீழ் பாலின்
      நாதனமர் சோதிட்கம் திசைக ளெட்டுஞ்,
சீரியவிந் திரன்முதலாம் எண்மர் தேயந் தெற்குமுதல்
      வடக்களவு மருங்கு தன்னில்,
நேரிய தோர் தேசமது செவ்வே போகும்
      நெடும்பூழை யொன்றுளது நினைக மாதோ. 30
753 அந்தவரைக் கீழ்த்திசைமந் தரமாம் வெண்மை
      அதன்தெற்குக் கந்தமா தனம்பொன் மேல்பால்,
சுந்தரமாம் விபுலம்நீ லம்வ டக்குச் சுபார்சுவம்மா
      துளைப்போது கடம்பு சம்பு,
நந்தியதோர் போதிஆல் குணபா லாதி நாற்றிசையில்
      வரைமீது நிற்கும் நாவல்,
முந்துமிரண் டாயிரயோ சனையாம் ஏனை
      முத்தருவும் இதிற்பாதி மொழியும் எல்லை. 31
754 அத்தகைய கீழ்த்திசையில் அருணம் மேல்பால்
      அசிதோதம் தென்றிசைமா னதமே யல்லா,
உத்தரத்தின் மாமடுநீர் நிலையாய் மேவும்
      உய்யானஞ் சயித்திரதங் குணக்கு வைகும்,
வைத்தபெரு நந்தனந்தக் கிணத்தில் ஓங்கும்
      வைப்பிரசங் குடக்கமரும் வடாது பாங்கின்,
மெத்துதிரு தாக்கியம்உற் றிடுமிவ் வாறு மேருவரைச்
      சாரலிடை விரவு மன்றே. 32
755 கடிகமழும் நாவலொன்று தென்பால் நின்ற
      காரணத்தால் பாரதன்றன் கண்ட முற்றும்,
இடனுடைய நாவலந்தீ வெனப்பேர் பெற்ற திருத்தருவின்
      தீங்கனிநீ ராறாய் மேருத்,
தடவரையைப் புடைசூழ்ந்து வடபாற் சென்று சாம்புநதப்
      பெயர்பெறுமச் சலிலந் துய்த்தோர்,
உடல் முழுதும் பொன்மயமாய் அயுத மேலும் ஒருமூவா
      யிரமாண்டங் குறுவர் அன்றே. 33
756 நாற்றிசையில் வரைப்பரப்பு மேல்கீழ் தானும்
      நவின்றிடின்மே ருவிற்பாதி அதற்குக் கீழபால்,
மாற்றரிய மாலியவான் மேல்பாற்கந்த
      மாதனந்தென் றிசைநிசதம் ஏம கூடம்,
ஏற்றஇமம் வடபால்நீ லம்சுவேதம் இயற்சிருங்கம்
      எட்டுவரை இவையாம் நீலம்,
மேற்றிகழ்பொன் மண கனகம் பனியே நீலம்
      வெண்மைமதி காந்தம்இவை மேனி தாமே. 34
757 நிசதமொடு பொற்கூடம் இமையங் கீழ்மேல்
      நெடுங்கடலைத் தலைக்கூடி நிமிரும் சோமன்,
திசையுளபூ தரமூன்றும் அனைய எட்டுத் திண்கிரியும்
      இராயிரயோ சனைவான் செல்லும்,
வசையில்கந்த மாதனமா லியவான் என்னும்
      மால்வரைகள் தமதகலம் அயுதம் மற்றை,
அசலமிரு மூன்றுமரா யிரம்இத் தீவுள் அமருநவ
      கண்டவெல்லை அறைவன் மாதோ. 35
758 கோதில்வட கடல்முதலாச் சிருங்கங் காறுங்
      குருவருடம் சிருங்க முதற் சுவேத மட்டும்,
நீதிஇர ணியவருடம் சுவேத நீல நெடுங்கிரியின்
      நடுவண்இர மியமாம் மேருப்,
பூதரஞ்சூழ் வருடம்இளா விருதமாகும் பொலிந்தகந்த
      மாதனமேற் புணரி நாப்பண்,
கேதுமால் வருடம்மா லியவான் தொட்டுக் கீழ்கடலின்
      இறுவாய்பத் திரம தாமே. 36
759 அம்புவியின் நிசதமுதல் ஏமங் காறும்
      அரிவருடம் ஏமமுதல் இமைய நாப்பண்,
கிம்புருடம் தென்கடற்கும் இமைய மென்னுங்
      கிரிக்குநடுப் பாரதமாம் கேது மாலோ,
டிம்பர்புகழ் பத்திரமுப் பத்து நாலா யிரம்நின்ற
      தொன்பதினா யிரமா மெல்லை,
உம்பர்தம துலகனைய பரத மென்னும் ஒன்றொழிந்த
      கண்டமெட்டும் உற்று ளோர்க்கே. 37
760 ஆங்குருநாட் டுறைபவர்ஓர் பொழுதின் யாய்பால்
      ஆடூவு மகடூவு மாகத் தோன்றித்,
தாங்கள்விழை விற்புணர்வர் அவர்க்குத் தெய்வத்
      தருமலர்கள் உதவும்உணாக் கனியுங் காயும்,
ஓங்குபச்சை நிறம் ஆயுள் அயுத மேலும் ஒரமூவா
      யிரம்அதற்குள் வடபா கத்திற்,
பாங்கமர்வர் முனிவரர்சா ரணரே சித்தர் பதின்மூவா
      யிரம்ஆயுள் படிகம் வண்ணம். 38
761 பரவுபத்தி ராசுவத்தோர் கனிகாய் துய்ப்போர்
      பதின்மூவா யிரம்ஆயுள் படைத்த சேயோர்,
இரணியத்தோர் பலநுகர்வோர் மதிநேர் மெய்யர்
      இராயிரமைஞ் ஞூறயுதம் ஆண்டு பெற்றோர்,
பொருவரிய இரமியத்தி னுள்ளோர் ஆலின் புன்கனிகள்
      மிசைகுவர்பூங் குவளை போல்வார்,
வருடமவர்க் கொருபதினா யிரமே யன்றி
      மற்றுமிரண்டாயிர மாச் சொற்ற தொன்னூல். 39
762 விராவும்இளா விருதத்தோர் வௌ¤ய மெய்யர்
      மிசைவதுதீங் கரும்பிரதம் அயுத மேலும்,
இராயிரமாம் யுகம்கேது மாலத் தன்னில்
      இருப்பவர்பைங் குவளைநிறம் இனிதி னுண்டல்,
பராரையுள கண்டகியின் கனியே ஆயுள்
      பத்துளவா யிரம்அரிகண் டத்து வாழ்வோர்,
ஒராயிரமோ டொன்பதினா யிரம தெல்லை
      உணவுகனி காய்மதியம் ஔ¤ய தன்றே. 40
763 போற்றியகிம் புருடத்தோர் இறலித் தீய
      புன்கனியே மிசைவர் நிறம் பொன்மை ஆயுள்,
சாற்றியிடும் ஓரயுதம் ஏமகூடத் தடவரைத்
      தென் பால்இமைய வடபால் தன்னில்,
ஏற்றமிகுங் கயிலைநிற்கும் அதற்கு மீதே
      இமையாமுக் கட்பகவன் உமையா ளோடும்,
வீற்றிருப்பன் ஊழிதனில் அண்டங் காறு
      மேலொடுகீழ் சென்றிடுமவ் வெற்பு மாதோ. 41
764 இந்தவிரு நாற்கண்டத் துறையும் நீரார்
      இன்னல்பிணி நரை திரைமூப் பிறையுஞ் சேரார்,
முந்தையுகம் போலேனை மூன்றி னுள்ளும்
      மொய்ம்புநிறை அறிவுடலம் முயற்சி ஆயுள்,
அந்தமில்சீர் முதலெல்லாம் ஒருதன் மைத்தா
      அடைகுவர்முன் பாரதத்தில் அவதரித்து,
வந்துபுரி வினைப்பயனை நுகர்வர் என்பர் வானமுகில்
      சென்று புனல் வழங்கா தங்ஙன். 42
765 பாரதத்துள் ளார்அவனி கிளைத்து மற்றும்
      ப·றொழிலும் புரிந்து மறம் பாவம் ஈட்டிப்,
பேரருள்பௌ திகமெழுவா யான மூன்றிற்
      பெறுபயன்கொண் டுய்வர்என்பர் பெருமை யாற்றல்,
சீரறிவு நிறை ஆயுள் உருவம் உண்டி செய்கையுகங்
      களுக்கியைந்த திறனே சேர்வர்,
தோரைமுதற் பலபைங்கூழ் விளையுள் ஆக்கந்
      தூயகனி காய்கந்தம் பிறவுந் துய்ப்பார். 43
766 நாலிருகண் டத்தோரும் விண்ணு ளோரும்
      நரகினரும் அவ்விடத்தில் நண்ணி வைகி,
மேலையிரு வினையாற்றி அவற்றிற் கேற்ற
      வியன்பயன்கள் துய்ப்பரென விளம்பு மாற்றால்,
சீலமிகு பாரதமாங் கண்டமொன்றே தீவினைநல்
      வினையாகுஞ் செயற்கைக் கெல்லாம்,
மூலமொரு குறைபெறினே வந்து தேவர் முனிவர்களுந்
      தவம்பூசை முயல்வர் அங்கண். 44
767 கவிபுகழும் பரதனும்இந் திரனாம் பேரோன்
      கசேருகன்தா மிரபன்னன் கபத்தி நாகன்,
சவுமியனே கந்தருவன் வருணன் என்னுந்
      தனயருடன் குமரியெனும் வனிதை தன்னை,
உவகைதனில் உதவிஅவர் தத்தம் பேரால்
      ஒன்றற்கோ ராயிரம்யோ சனைய தாகப்,
புவிபுகழ்பா ரதத்தை நவ கண்ட மாக்கிப் பொற்பினுடன்
      அனையவர்க்குப் புரிந்தான் அன்றே. 45
768 கங்கைகவு தமியமுனை கவுரி வாணி
      காவிரிநன் மதைபாலி கம்பை பம்பை,
துங்கபத் திரைகுசைகோ மதிபாஞ் சாலி
      சூரிசிகி பாபகரை தூத பாபை,
சங்கவா கினிசிகைபா ரத்து வாசி சார்வரிசந்
      திரபாகை சரயு வேணி,
பிங்கலைகுண் டலைமுகரி பொருநை வெ·காப் பெண்ணை
      முதல் ஆறனந்தம் பெருகி நண்ணும். 46
769 மன்னுமகேந் திரமலயஞ் சையஞ் சத்தி
      மாநிருடம் பாரியாத் திரமே விந்தம்,
என்னுமலை ஓரேழுங் காஞ்சி யாதி எழுநகருந்
      தானமொரா யிரமேல் எட்டும்,
என்னும்அரு மறைமுதலோர் மேய தேயம்
      பற்பலவுஞ் சுருதிமுறை பயில்வு மேவி,
மெய்ந்நெறிசேர் வதுகுமரி கண்டம் ஏனை
      மிலேச்சரிடம் ஓரெடடும் வியப்பி லாவே. 47
770 இங்கிவைசம் புத்தீவி னிடனே தண்பால்
      இருங்கடல்சூழ் சாகத்தின் எல்லை தன்னில்,
தங்கியகோ மேதாதி அவற்கு மைந்தர்
      சாந்தவயன் சிசிரன்கோ தயன்ஆ னந்தன்,
துங்கமிகு சிவனொடுகே மகன்சி றந்த
      துருவன்இவர் பேராலேழ் வருட மாக்கி,
அங்கவருக் கருள்புரிந்தான் கடவுள் வாயு
      ஆரியர்விந் தகர்குகரர் ஆண்டு வாழ்வார். 48
771 சோமகமே சுமனங்சந் திரமே முந்துந்
      துந்துபிவப் பிராசனநா ரதியந் தொல்சீர்க்,
கோமதமாம் எழுகிரியுஞ் சிவைவி பாபை
      குளிர் அமிர்தை சுகிர்தைமநு தத்தை சித்தி,
மாமைதரு கிரமையெனும் ஆறங் கேழும்
      மருவியிடும் ததிக்கடல்தான் வளைய நின்ற,
ஏமமுறு குசத்தீவில்வபுட்டு வென்னும் இறையவற்குஞ்
      சிறுவர்களாய் எழுவ ருண்டால். 49
772 சுப்பிரதன் உரோகிதனே தீரன் மூகன் சுவேதகன்சித்
      தியன் வயித்தி தன்னென் றோதும்,
இப்புதல்வர் பேராலேழ் வருட மாக்கி ஈந்தனன்உன்
      னதங்குமுதங் குமாரம் மேகம்,
வைப்புறுசந் தகம்மகிட மேது ரோணம் மலையேழுஞ்
      சோனைவௌ¢ளி மதியே தோமை,
ஒப்பறுநேத் திரைவிமோ சனைவி ருத்தி ஓரேழு
      நதியுளவால் உலவை புத்தேள். 50
773 தர்ப்பகரே கபிலர்சா ரணர்நீ லத்தர் தண்டர்விதண்
      டகராண்டைச் சனங்கள் ஆவார்,
அப்புற நெய்ப் புணரிகிர வுஞ்ச தீபம் அதற்கு மன்னன்
      கோதிட்டாம் அவன்றன் மைந்தர்,
மெய்ப்படுசா ரணன் கபிலன் கிருதி கீர்த்தி வேணுமான்
      இலம்பகன்உற் பிதனே யென்னச்,
செப்புமெழு பேராலேழ் வருட மாக்கிச் சிறப்புடனே
      அவரரசு செய்தற் கீந்தான். 51
774 மன்னுகுசே சயம்அரிவித் துருமம் புட்பா வருத்தம்இமம்
      துதிமானே மந்த ரந்தான்,
என்னுமலை ஏழுசிவை விதூத பாபை இமை
      புனிதை பூரணையோ டகில பாபை,
சென்னெறிசேர் தம்பைஎனு நதியோரேழு சேர்ந்துளது
      தபதர்சடா வகர்மந் தேகர்,
பன்னுபுகழ் அனேகர் அவர் சனங்க ளாவார் பங்கயனே
      அங்குடைய பகவன் அம்மா. 52
775 மற்றதனுக் கப்பாலை அளக்கர் கன்னல் வளைந்துடைய
      தீபஞ்சான் மலியாம் அங்கட்,
கொற்றவனாந் துதிமானன் அவன்றன் மைந்தர் குசலன்
      வெய்யன் தேவன்முனி அந்த காரன்,
அற்றமிலா மனோரதன்துந் துபியாம் அன்னோர்க்
      களித்தனன்ஏழ் கூறாக்கி யசலம் ஏழுஞ்,
சொற்றிமிரம் சுரபிவா மனம்வி ருத்தம் துந்துபிசம்
      மியத்தடம்புண் டரீகம் நிற்கும். 53
776 போதுகுமு தங்கவரி யாதி யாமை புண்டரிகை
      மனோபமைசந் தியையென் றோதுஞ்,
சீதநதி யேழுசெல்லும் புட்க லாதர் சிறந்திடுபுட்
      கரர்தனியர் சிசிரர் என்போர்,
ஏதமிலா துறைசனங்கள் கடவுள் ஈசன் இதற்குமப்பால்
      மதுக்கடல்சூழ்ந் திருந்த தீபம்,
மேதகுகோ மேதகம்அவ் வியனே தொன்னாள் வேந்தன்அவற்
      கெழுமைந்தர் மேனாள் வந்தார். 54
777 தூயவிமோ கனன்மோகன் சகலன் சோமன் சுகுமாரன்
      குமாரன்மரீ சகனாம் மைந்தர்க்,
காயதையேழ கூறுபுரிந் தளித்தான் சிங்கம் அத்தம்உத
      யம்சலகம் கிரவுஞ்சம் ஆம்பி,
கேயம்இர மியங்கிரியேழ் அயாதி தேனுக் கிளர்கபத்தி
      சுகுமாரி குமாரி இக்கு,
மாயைநதி ஏழுளமந் தகர்ஆ மங்கர் மாகதர்மா
      னசர்மாக்கள் மதிமுன் தெய்வம். 55
778 புடையினது தூயபுனற் கடலாந் தீபம் பட்கரமன்
      னன்சவனன் புதல்வ ரானோர்,
அடல்கெழுவு தாதகிமா பீத னென்போர்க் கதனையிரு
      கூறுபடுத் தளித்தான் என்ப,
இடபமகேந் திரம்வருணம் வராக நீலம் இந்திரமந்
      திரியமெனும் ஏழு வெற்புக்,
குடிலைசிவை உமை தரணிசுமனை சிங்கை குமரியெனும்
      எழுநதியுங் கொண்டு மேவும். 56
779 மேனிலா வியநகரர் நாகர் என்போர் மேவியமர்
      பரிசனம்வெய் யவனே புத்தேள்,
ஆனதோர் புட்கரத்தின் முடிவில் ஐம்ப தாயிரம்யோ
      சனைதன்னில் அசல மொன்று,
மானசோத் தரம்எனவே சகடக் கால் போல் வட்டணைபெற்
      றிடுமதன்கண் மகவா னுக்கும்,
ஏனையோர் எழுவருக்குங் குணபா லாதி எண்டிசையி
      னும்பதங்கள் எய்தும் அன்றே. 57
780 பொங்குதிரைப் புணரிகளின் முடிவு தோறும் புடையுறவே
      வளைந்தொவ்வோர் பொருப்பு நிற்கும்,
இங்குளதோர் சாகமுதல் தீப முற்றும் இருக்குநர்க்கு
      நரைதிரைமூப் பின்னல் இல்லை,
அங்கவர்கள் கலியினுங்கிம் புருடர் தன்மை யடைவர்பதி
      னாயிரமாண் டமர்வர் அப்பால்,
தங்கியது தபனியப்பார் அதனைச் சூழ்போய்த் தடம்பெருநே
      மிப்பொருப்புச் சார்வுற் றன்றே. 58
781 நேமிவரை அதற்கிப்பாற் சுடரே அப்பால் நிசிப்படலஞ்
      செய்ய மணி நிறனே மன்னர்,
காமருசீர் இயக்கர்இராக் கதரே வெம்பேய்க்
      கணங்கள்அமர்ந் திடுவர் திசைக் கடவு ளோருந்,
தாமுடைய மாதிரத்தின் மேரு வின்கண் தங்குதல்போல்
      வைகுவர்அங் கதனுக் கப்பால்,
ஏமமுறு புறக்கடல்அங் கதனுக் கப்பால்
      இருளாகும் அதற்கப்பால் எய்தும் அண்டம். 59
782 ஊழினெறி யால்தத்தம் உயிரைத் தாமே
      ஒழிவுசெய்தோ ருந்தெருளு முணர்வி லோரும்,
ஆழிவரைப் புறஞ்சூழ்வர் அப்பா லாகும்
      ஆரிருள்சேர் எல்லைதனில் அநாதி யீசர்,
வாழுமொரு பெருங்கயிலை யுண்டவ் வண்ட
      மருங்கதனிற் கணநிரைகள் வதிந்து மல்குஞ்,
சூழுறுசம் புத்தீப முதலா அண்டச் சுவர்காறும்
      புவியென்பர் தொல்லை யோரே. 60
783 இப்புவியின் மேற்கணத்தின் உலக மாகும்
      இதன்மிசைக்குய் யக லோகம் இதற்கு
மீது, வைப்புடைய ஈரைங்கால் வயங்கு தேயம்
      மற்றதன்மேல் எழுபுயலும் வழங்கு மெல்லை,
முப்பதினா யிரகோடி முகில்ஒவ் வொன்றை
      முறைசூழ்வுற் றிடும்அதற்கு முன்ன ராகச்,
செப்பரிய கிம்புருடர் கருட ரானோர் சித்தர்கள்விஞ்
      சையர்இயக்கர் செறியும் மூதூர். 61
784 இங்கிதன்மேற் சுரநதிசெல் லிடனே அப்பால்
      இரவிபதம் தரணிக்கோர் இலக்க மாகும்,
அங்கதனின் முப்பான்முக் கோடி தேவர்
      அருக்கனுடன் வழக்கொள்வர் அதற்கு மீதே
திங்கள்உல கோரிலக்கம் உம்பர் தன்னில்
      செறிதருதா ரகையுலம் இலக்கஞ் சேணிற்,
பொங்கொளிசேர் புதன்உலகீ ரிலக்கம் அப்பாற்
      புகர்உலகம் ஈரிலக்கம் பொருந்திற் றன்றே. 62
785 அந்தரமேற் சேய்உலகீ ரிலக்கம் மேலே
      அரசன்உல கீரிலக்கம் அதற்கு மீதே,
மந்தன்உல கீரிலக்கம் அதன்மேல் ஓரேழ்
      மாமுனிவர் உலகிலக்க மாகும் அப்பால்,
நந்துருவன் உலகிலக்கம் புவாலோ கத்தின்
      நலத்தகைய தொகைபதினைந் திலக்க மாகும்,
இந்தவுல கத்துமிசை யுடைய தேயம் எழுவகையா
      மருத்தினமுங் கெழுவு மெல்லை. 63
786 தொகலோடு சேர்தருமிப் பதத்தின் மீதிற்
      சுவர்லோகம் எண்பத்தஞ் சிலக்க மாங்கே,
புகலோடு வானவரும் பிறரும் போற்றப் புரந்
      தரன்வீற் றிருந்தரசு புரிவன் அப்பால்,
மகலோகம் இருகோடி மார்க்கண்டாதி
      மாமுனிவர் பலர்செறிவர் மற்ற தன்மேல்,
இகலோகம் பரவுசன லோகம் எல்லை
      எண்கோடி பிதிர்தேவர் இருப்பர் அங்கண். 64
787 தவலோகம் உன்னதமீ ராறு கோடி சனகர்முத
      லாவுடைய வனகர் சேர்வர்,
அவண்மேற்சத் தியவுலகம் ஈரெண் கோடி
      அயன்இன்பத் தலமஉலக மளிக்குந் தானம்,
நவைதீரும் பிரமபதம் மூன்று கோடி
      நாரணன்வாழ் பேருலகம் ஓர்முக் கோடி,
சிவலோகம் நாற்கோடி அதற்கு மீதே
      திகழண்ட கோளகையுங் கோடி யாமே. 65
788 வேதமொடு தந்திரமும் அவற்றின் சார்பு
      மிருதிகளும் பிறநூலும் வேறு வேறா,
ஓதிடுமண் டத்தியற்கை மலைவோ வென்றால்
      உண்மை தெரிந் திடிற்படைப்பும் உலப்பில் பேதம்,
ஆதலினால் அவ்வவற்றின் றிரிபு நாடி அறிந்தஉனக்
      கீண்டுண்மை யதுவே சொற்றாம்
ஏதமில் இவ் வண்டத்தில் புவன நூற்றெட் டிறையருள்சேர்
      உருத்திரர்தம் மிருக்கை யாமே. 66
789 வேறு
இந்த அண்டத்தின் இயற்கைய முன்னுனக் கிறைவன்
தந்த அண்டங்கள் ஆயிரத் தெட்டுமித் தகைமை
மைந்த நீசென்று காணுதி யெனவகுத் துரைப்ப
அந்த மில்லதோர் மகிழ்ச்சியின் உணர்ந்தனன் அவுணன். 67

ஆகத் திருவிருத்தம் - 789


12. திக்குவிசயப் படலம் (790 -925)

790 குணங்கள் பற்பல உணர்த்திய குரவன்றன் கழல்கள்
வணங்கி வாளரி முகனொடு விடைகொண்டு வயமான்
அணங்கு வைகிய திறலுடைச் சூரர்கோன் அவுணர்
இணங்கு தானையங் கடலிடைப் புக்கனன் இமைப்பில். 1
791 சேனை யின்றலை புகுதலுந் தாரகன் சென்று
கோனை வந்தனை செய்துதன் முன்னவற் குறுகி
ஆன பான்மையின் வணங்கிமுன் னின்றிட ஆசான்
போன எல்லையிற் புகன்றன பரிசெலாம் புகன்றான். 2
792 ஆவ தாகிய பரிசெலாங் கேட்டுணர்ந் தவனுந்
தாவி லாததன் மனங்கொடு நன்றிது தலைவ
மேவ லார்களை யாமினி வென்றிட விரைவில்
போவ தேகடன் என்றனன் அன்னதோர் பொழுதின். 3
793 அந்தி வார்சடைக் கண்ணுதற் கடவுள்தன் அருளான்
மைந்தர் மூவரும் பெற்றதொல் வரங்களும் வலியுஞ்
சிந்தை யுள்ளுற நாடியே யளியொடுஞ் சேணில்
வந்து தோன்றினள் தொல்லைநாள் நோற்றிடு மாயை. 4
794 தோன்று மெலலையின் முந்துறக் கண்டுவெஞ் சூரன்
ஆன்ற தம்பியர் தம்மொடும் அசமுகி யோடும்
ஊன்றும் அன்பொடு பணிதலும் அன்னைதன் உள்ளம்
ஈன்ற ஞான்றினும் உவந்தனள் ஆசிகள் இசைத்தாள். 5
795 ஆசி கூறியே வேள்வியிற் செய்கையும் அதனுக்
கீசன் நல்கிய வரங்களுங் கேட்டனன் ஈண்டு
நேச மோடுமைக் காணிய வந்தனன் நீவிர்
வாச வன்முத லோர்தமை வெல்லுதி வலியால். 6
796 வென்ற பின்னர்எவ் வுலகமும் புரந்துமே தினியில்
என்றும் வாழுதிர் மாயைகள் வேண்டிடின் என்னை
ஒன்றும் அன்புடன் உன்னுதிர் உன்னிய பொழுதே
சென்று வெ·கிய தன்மைகள் செய்தியான் முடிப்பேன். 7
797 ஈத லால்உமைப் பிரியலன் பன்முறை யானே
காத லோடுமைக் காணிய செல்குவன் கலந்து
பேத நீரற இருத்திரால் ஈண்டெனப் பேசி
மாதும் ஏகினள் மைந்தர்கள் மூவரும் வணங்க. 8
798 தோடு லாவிழிப் பொற்றொடி ஏகலுஞ் சூரன்
கோடி தேருடன் தானவர் தங்களைக் கூவி
நீடு நம்பெருந் தானைகள் நிதிபதிக் கேகப்
பாடல் மாமுர சறைமினோ கடிதெனப் பணித்தான். 9
799 அரசன் ஏவலும் அவுணர்கள் அன்னவா றறைந்து
அரசம் எறறினர் கேட்டலும் அத்திசை முன்னி
உரைசெய் நான்முகன் உறங்குழிப் புவிகொள ஒருங்கே
திரைசெய் வான்கடல் சென்றெனச் சென்றது சேனை. 10
800 பத்து நூறுடன் ஆயிர மாதியாய்ப் பலவாங்
கொத்து நீடிய சென்னியர் கொடுமைசேர் குணத்தோர்
மெத்து பல்படை ஏந்திய கரத்தினர் விறலோர்
கத்து வார்கடல் ஆர்ப்பினர் அவுணர்தங் கணத்தோர். 11
801 விண்ணிற் பாய்வன இரவிதேர் பாய்வன வேலைக்
கண்ணிற் பாய்வன திசைகளிற் பாய்வன கனல்மேற்
பண்ணிற் பாய்வன வரைகளிற் பாய்வன பரவை
மண்ணிற் பாய்வன புரவிகள் அளப்பில மாதோ. 12
802 பாறு சென்றிடக் கொடியினஞ் சென்றிடப் பலபேய்
வேறு சென்றிடப் பாரிடஞ் சென்றிட விண்மேல்
மாறு சென்றிடப் பிளிறொலி சென்றிட மதநீர்
ஆறு சென்றிடச் சென்றன யானையின் அனிகம். 13
803 மேருச் சையமுங் கயிலையும் அல்லது வேறு
நேரற் கொத்திடு கிரிமிசைச் செல்வன நீலக்
காரிற் செல்வன விண்மிசைச் செல்வன கடல்சூழ்
பாரிற் செல்வன செல்வன ஆழியம் ப·றேர். 14
804 மூன்று கோடியோ சனையதாய் நாற்றிசை முற்றும்
ஆன்ற வெல்லையின் அவ்வகைத் தாகிய அனிகம்
ஏன்று சென்றன சென்றதோர் அளவையின் இனன்போல்
தோன்று பொன்சுடர் அளகையை அடைந்தன தூசி. 15
805 பூதம் ஐந்தினும் மிகவலி யுடையது பொலன்சேர்
ஆத வன்றனித் தேரினுஞ் சிறப்புற்ற தவனில்
சோதி பெற்றது பேருணர் வுள்ளது தொல்சீர்
மாதி ரங்களை அகற்சியான் மறைப்பது மன்னோ. 16
806 என்று மேயழி வில்லது மேருவோ டிகலுங்
குன்று போலுவ தகிலமும் இமைப்பினிற் குறுகிச்
சென்று மீள்வது குறப்பினிற் செல்வது சிதையா
ஒன்று கோடிய வாம்பரி பூண்டுள தொருங்கே. 17
807 அழிவி லாப்பல சாரதி உள்ளதங் களப்பில்
விழுமி தாகிய படையெலாங் கொண்டது மேவார்
ஒழிய அன்னவர் தேர்மிசைச் செல்வலுவ துருமேற்
றெழிலி அச்சுறப் பன்மணி கறங்குவ தென்றும். 18
808 பாரை நேர்தரு பரப்பின துலகெலாம் படைத்த
நாரி பாதியன் அளித்தருள் இந்திர ஞாலத்
தேரின் மால்வரை மிசையுறும் வயப்புலி செலல்போல்
சூரன் ஏறியே போந்தனன் அவுணர்கள் தொழவே. 19
809 ஆண்டவ் வெல்லையில் ஆயிர மாயிரம் யாளி
தாண்டு வெம்பரி ஆயிர மாயிரந் தடந்தோள்
நீண்ட பாரிடம் ஆயிர மாயிர நிரலே
பூண்ட தேர்மிசை ஏறியே அரிமுகன் போந்தான். 20
810 காலும் உள்ளமும் பின்னுற முன்னுறு கவனக்
கோல மாப்பதி னாயிரம் பூண்டதோர் கொடிஞ்சிச்
சால மார்தரு வையமேற் புகுந்துதா ரகனும்
ஆல மென்பது சென்றென நடந்தனன் அன்றே. 21
811 அன்ன தாரக வீரனும் அரிமுகத் தவனும்
மன்ன னோர்இரு பாங்கரு மாயினர் வந்தார்
துன்னு தானவத் தானையந் தலைவர்கள் தொலையாய்
பொன்னின் மாமணித் தேரொடும் ஏகினர் புடையில். 22
812 விரவு கின்றதோர் ஏனையர் சேனையின் வீரர்
கரியெ னுங்கடல் மீதினுங் கலினமார் கவனப்
பரியெ னுங்கடல் மீதினும் முதல்வனைப் பரவி
இரும ருங்கினும் போயினர் கூற்றனும் இரங்க. 23
813 அடல்செ றிந்திடும் ஒன்பதிற் றிருவகை யாகும்
படைக ளேந்தியே அளவிலா அவுணர்கள் பரவிக்
கடல்கி ளர்ந்தவண் சூழ்வன போன்றுகா வலர்தம்
புடையில் வந்தனர் அசனியும் அச்சுறப் புகல்வார். 24
814 இன்ன தன்மையி னாற்படை சூழ்தர இதன்பாற்
துன்னு தேரென உள்ளவுந் துரகமுள் ளனவும்
பன்னெ டுங்கரி உள்ளவும் அவுணர்கள் பலரும்
மன்னி வந்திட நடுவுற ஏகினன் மன்னன். 25
815 வயங்க ளார்த்திடு தானவ ரோதையும் மான்தேர்
அயங்க ளார்த்திடு மோதையும் அன்னவை அணித்தாய்க்
கயங்க ளார்த்திடு மோதையுங் கண்டையின் கலிப்பும்
இயங்க ளார்த்திடு மோதையும் மிக்கன வெங்கும். 26
816 அரியெ னுந்திறல் அவுணர்கள் அங்கையி லேந்தும்
உரிய வெம்படை முழுவதும் ஒன்றொடொன் றுரிஞ்ச
எரிபி றந்தன செறிந்தன எம்பிரான் முனிந்த
புரமெ னும்படி யாகிய வரைகளும் புவியும். 27
817 நிரந்த தானவர் எழுந்திடப் பூழிகள் நிலமேற்
பரந்து வானகம் புகுதலும் அனையது பாரா
விரிந்து போவதை நீங்கியே அவைதனை எய்தக்
கரந்து வைகினன் ஆழியந் தேருடைக் கதிரோன். 28
818 பூந டுங்கின பணிக்குலம் நடுங்கின புரைதீர்
வான டுங்கின மாதிரம் நடுங்கின வரைகள்
தாந டுங்கின புணரிகள் நடுங்கின தறுகட்
டீந டுங்கின நிருதர்கோன் பெரும்படை செல்ல. 29
819 இனைய தன்மையிற் சேனைகள் தம்மொடும் இறைவன்
தனதன் மாநகர் வளைந்தனன் அன்னதோர் தன்மை
வினவி யோடியே தூதுவர் இயக்கர்கோன் மேவுங்
கனக மாமணிக் கோநகர் சென்றனர் கடிதின். 30
820 வேறு
சென்றிடும் ஒற்றர் தங்கோன் சேவடிக் கமலந் தாழ்ந்து
வன்றிறற் சூர பன்மன் மாநகர் வளைந்து கொண்டான்
இன்றினி யழியும் போலும் ஈண்டுநீ யிருத்தல் சால
நன்றல அனிகத் தோடு நடத்தியால் அமருக் கென்றார். 31
821 தூதுவர் உரைத்தல் துன்புகூர் துளக்க மெய்தி
கூதமில் அவுணர் யாம் வெலற் கரிது முக்கண்
ஆதிதன் வரங்கொண் டுள்ளார் அவர்ப்புகழ்ந் தாசி செய்வான்
போதுதல் கடனே யென்னாப் பொருக்கென எழுந்து போனான். 32
822 போயினன் அளகை அண்ணல் புட்பக மீது சென்று
தூயதோர் இயக்க ரோடுஞ் சூரனைத் தொழுது போற்றி
ஏயின ஆசி கூறி யான்நுமக் கடிய னென்ன
நீயினி திருத்தி யென்றே விடுத்தனன் நிருதர்¢ போற்றி. 33
823 வேறு
அன்னது கண்டுழி அவுணர் மாப்படை
மின்னவிர் முகிலினம் வெரவ ஆர்த்தன
துன்னுறும் இனையவ ரோடுஞ் சூரனும்
மன்னவன் அவ்வழி மகிழ்ச்சி எய்தினான். 34
824 அதுபொழு தவுணர்கள் அளவை யூடுபோய்
நிதிகளும் மணிகளும் நீடு மானமுஞ்
சிதைவறு படைகளுந் தேரும் மாக்களுங்
கதிகெழு களிறுடன் கவர்ந்து மேவினார். 35
825 மைம்மலி தானவர் வலிந்து வவ்வலாற்
பொய்ம்மையில் பெருவளம் யாவும் போக்கிய
செம்மையில் அந்நகர் திருவும் நீங்கிய
கைம்மைதன் வடிவெனுங் காட்சித் தாயதே. 36
826 ஆறலை கள்வரின் அவுணர் யாவருஞ்
சூறைகொண் டந்நகர் தொலைத்து போதலும்
ஊறுகொள் நிதிபதி உள்ளம் நாணியே
வீறகல் அளகையின் மீண்டும் ஏகினான். 37
827 ஆண்டுறு தனதனை அடித்தொண் டாற்றுவான்
மாண்டனன் இவனென மனத்தி லுன்னியே
ஈண்டிய தானையொ டிமைப்பிற் பாகரைத்
தூண்டுதிர் தேரெனச் சூரன் போயினான். 38
828 அளகையை நீங்கியே ஆசைக் கீறதாய்
உளநகர் எய்தினன் ஔ¤ரு நீலமார்
களனுரு வெய்திய கடவுள் வைகிய
வளநகர் ஈதென மன்னன் உன்னினான். 39
829 அந்தமா நகரைவிட் டவுணர் கோமகன்
முந்துதன் படையொடு முனிந்து கீழ்த்திசை
இந்திரன் நகர்புக இதனை நாடியே
வெந்துயர் அமரர்கோன் விண்ணிற் போயினான். 40
830 போயதை நாடிஅப் புரத்தை முற்றவுங்
காயெரி கைக்கொளக் கடிதின் நல்கியே
ஆயிடை அனிகமோ டகன்று வெய்யசெந்
தீயுறு நகரிடைச் சேறல் மேயினான். 41
831 சேறலும் நாடியத் தீயின் பேரினான்
ஈறகல் வெஞ்சினம் எய்தி ஆயிர
நூறெனுங் கோடியர் நொய்திற் சூழ்தர
மாறிகல் புரிந்திட வந்து நேர்ந்தனன். 42
832 நேர்தலும் அங்கிதன் நீடு தானையுஞ்
சார்தரும் அவுணர்தம் படையுந் தாமுறாப்
போர்தலை மயக்குறப் பொருத எல்லையிற்
சூர்தரு கனல்படை தொலைந்து போயதே. 43
833 தன்படை உடைதலுந் தழலின் பண்ணவன்
துன்படை மனத்தனாய்த் தொல்லை ஊழிநா
ளின்படை உலகெலாம் ஈறு செய்திடு
வன்படை பேருரு வல்லை தாங்கினான். 44
834 சிறந்திடும் அவுணர்கோன் சேனை மாக்கடல்
வறந்திட இப்பகல் மாய்ப்பன் யானெனா
நிறைந்திடும் அவுணமா நீத்தம் எங்கணுஞ்
செறிந்தனன் வளைந்தனன் சிதைத்தல் மேயினான். 45
835 கடல்கெழு சேனையைக் கலந்து பாவகன்
சடசட முதிரொலி தழங்கப் புக்குலாய்
அடலுறு மெல்லையில் அதுகண் டாழிவாய்
விடமென உருத்தனன் வீரன் தாரகன். 46
836 உருத்திடு தாரகன் ஒருதன் தேரொடு
மருத்தினும் விசையுற வந்து தானையை
எரித்திடும் அங்கியை எதிர்ந்து செங்கையில்
தரித்திடு கார்முகந் தன்னை வாங்கினான். 47
837 வானவர் தமையும்இவ் வன்னி தன்னையும்
ஏனையர் தம்மையும் முடிப்பன் இன்றெனாத்
தேனிவர் இதழியந் தேவன் மாப்படை
ஆனதை எடுத்தனன் அருச்சித் தேத்தியே. 48
838 எடுத்திடு மெல்லையில் எரிகண் டிங்கிது
தொடுத்திடின் உலகெலாந் தொலைக்கும் என்னையும்
முடித்திடும் நான்முகன் முதலி னோரையும்
படுத்திடும் இன்றெனப் பையுள் எய்தினான். 49
839 சுடுங்கனற் கடவுளுஞ் சுருக்கித் தன்னுரு
ஒடுங்கினன் ஆகுலம் உற்றுச் சிந்தையும்
நடுங்கினன் தாரகன் முன்னர் நண்ணினான்
கடுங்கதி அதனொடுங் கரங்கள் கூப்பியே. 50
840 தோற்றுவித் துலகெலாந் தொலைக்கும் எம்பிரான்
மாற்றரும் படைக்கலம் மற்றென் மேவிடப்
போற்றினை எடுத்திஎப் புவனத் துள்ளவர்
ஆற்றலும் உயிர்களும் அதன்முன் நிற்குமோ. 51
841 கழிதரு சினங்கொளல் கடவுள் மாப்படை
விழுமிய தன்னதை விடுத்து ளாயெனின்
அழிதரும் உலகெலாம் அதுவும் அன்றியே
பழிபெறும் அன்னதோர் படையின் வேந்துமே. 52
842 பொறுத்தியென் பிழையெனப் போற்றி நிற்றலும்
கறுத்திடு மிடறுடைக் கடவுள் மாப்படை
செறுத்தவன் மீமிசைச் செல்ல விட்டிலன்
மறுத்தனன் சினத்தினை மகிழ்ச்சி எய்தினான். 53
843 எற்றிடும் எற்றிடும் இவனை வல்லையிற்
செற்றிடுஞ் செற்றிடுந் தீயன் சாலவுங்
குற்றிடுங் குற்றிடு மென்று கூறியே
சுற்றினர் அவுணர்கள் தீயைச் சூழவே. 54
844 தானவர் யாரையும் விலக்கித் தாரகன்
நீநம தேவலின் நிற்றி நின்னுயிர்
போனதை உதவினம் போதி போதிநின்
மாநக ரிடையென வல்லை கூறினான். 55
845 விடுத்தனன் அங்கியை விடுக்கு முன்னரே
அடுத்திடு தானவர் அவன்றன் ஊர்புகா
மடுத்திடு வளனெலாம் வாரி வாரிமீன்
படுத்திடு கொலைஞர்தம் பரிசின் மீண்டனர். 56
846 வேறு
மீண்டனர் அவுணர் அங்கி வௌ¢கியே தன்னூர் புக்கான்
ஆண்டவண் அகன்று போனான் தாரகன் அவ்வா றெல்லாங்
காண்டலுஞ் சூர னென்போன் கலினமான் தேரைப் பாக
தூண்டுதி நடுவன் மேவுந் தொல்லைமா நகரத் தென்றான். 57
847 கடவுதி தேரை என்னக் கைதொழு தைய நொய்தின்
அடுதொழில் அவன்பால் உய்ப்பன் அன்னது காண்டி யென்னாப்
படர்தரும் வலவ ரோடும் பலிங்கன்என் றுரைக்கு மேலோன்
சுடர்மலி கதிரும் நாணத் தண்ணெனத் தூண்டி ஆர்த்தான். 58
848 ஆர்த்தன படருஞ் சேனை அதிர்ந்தன முரச மெங்கும்
போர்த்தன கரிதேர் வாசி புகுந்தன பூழி வேலை
தூர்த்தன துவசம் விண்ணைத் தொடர்ந்தன தூசி யென்னுந்
தார்த்தொகை முன்ன மேகித் தண்டனூர் உடைந்த வன்றே. 59
849 அடைதலும் நடுவன் தன்பால் ஆங்கொர்தூ தெய்தி நந்தங்
கடிநகர் கலந்த அந்தக் காசிப முனிவன் மைந்தர்
கொடியவெஞ் சேனை யென்னக் கூற்றெனுங் கடவுள் கேளா
இடியுறும் அரவம் என்ன ஏங்கினன் இரங்கு கின்றான். 60
850 வேறு
முன்னுறு தனதனும் முளரித் தேவனும்
மன்னனை யெதிர்கொளா வழுத்திப் போயினார்
அன்னது புரிவதே அழகி தாமென
உன்னினன் நடுவனும் உணர்வி னும்பரான். 61
851 தேற்றமொ டெழுந்துதன் மகிடஞ் சேர்ந்தனன்
ஏற்றமில் படைஞரும் ஈண்ட ஏகியே
கூற்றுவன் இமைப்பினிற் குறுகிச் சூரனைப்
போற்றினன் தொழுதனன் புகலும் ஆசியான். 62
852 திருத்தகு மறலிதன் செய்கை நோக்கியே
அருத்தியின் மகிழ்வுறும் அவுணன் நம்பணி
பரித்தனை யீண்டுநின் பரிச னத்தொடும்
இருத்தியென் றனையனை ஏவிப் போயினான். 63
853 இறுதியை இயற்றுவான் இருக்கை யென்பதோர்
மறிகடல் அதனிடை வளங்கொள் வாரியைத்
திறலுறும் அவுணர்தஞ் சேனை சென்றரோ
முறைமுறை கவர்ந்தன முகிலின் தன்மைபோல். 64
854 கூற்றுவன் பெருவலி குறைந்த வண்ணமும்
போற்றினன் போயதும் புந்தி உன்னியே
ஆற்றவும் மகிழ்வுறீஇ அனிக மோடுதென்
மேற்றிசை நிருதிமேல் விரைவின் ஏகினான். 65
855 நிருதியும் இ·தெலாம் நேடி யாமிவர்ப்
பொருவதும் அரியதாற் போரி யற்றினும்
வருதிறல் இல்லையால் வசைய தேயெனாக்
கருதினன் அவரொடு கலத்தற் குன்னினான். 66
856 உன்னினன் தானையோ டொருங்கு மேவியே
மன்னவன் எதிர்புகா வழுத்தி மற்றவன்
தன்னடி வணங்கியுன் தமரி யானெனாப்
பன்னினன் தாரகன் பாங்கர் ஏகினான். 67
857 அருகுற வருதலும் அவுணர் கோமகன்
நிருதியின் நகரினை நீங்கி யேகலும்
வருணனும் மருத்துவும் வாரி தன்னினும்
இருவ்செறி உலகினும் இமைப்பிற் போயினார். 68
858 போதலும் அவரவர் புரத்தைச் சூறைகொண்
டேதம தியற்றுவித் தெழுவ கைத்தெனும்
பாதல வுலகினிற் படர்ந்து தானவ
ராதியர் போற்றிட அருள்செய் தேகினான். 69
859 உற்றனன் நாகர்கோன் உலகில் அன்னவன்
செற்றமொ டேசெருச் செய்யத் தானையால்
வெற்றிகொண் டேயவன் வியந்து போற்றிட
மற்றவன் இருக்கையோர் வைகல் வைகினான். 70
860 அத்தலை உரகர்கோன் அமரர் தந்திட
வைத்திடும் அமுதினை வலிதின் வாங்கியே
மெய்த்தகு தம்பிய ரோடு மேன்மையால்
துய்த்தனன் அகன்றனன் சூர பன்மனே. 71
861 ஏனைய பிலந்தொறும் ஏகி அவ்வயின்
மேனதோர் விருந்தினை வியப்பின் நாடியே
மானவர் படையொடும் வல்லை மீண்டனன்
போனதோர் நிலைதொறும் புகழை நாட்டினான். 72
862 வேறு
பூவுல கிடையே போந்து புணரியொன் றகன்று மற்றைத்
தீவினை யொருவிச் சூரன் சேனைமா நீத்தஞ் சூழ
மாவொடு புவனி போற்ற வரியரா அணையின் நேமிக்
காவலன் துயில்கூர் பாலின் கடலிடைக் கடிது புக்கான் 73
863 புக்கதோர் வேலை யன்னான் போர்ப்படை அவுணர் யாரும்
மைக்கடன் மேனி மாயோன் மன்னினன் ஈண்டை யென்னா
அக்கடல் அதனைத் தொன்னாள் அமரர்கள் கடைந்த தேபோல்
மிக்கதோர் ஆர்ப்பி னோடும் விரைவுடன் கலக்க லுற்றார். 74
864 ஆர்த்திடு முழக்கங் கேளா அம்புயத் திருவும் பாரும்
வேர்த்துடல் பதைப்ப அஞ்சி வெருக்கொடு கரிய மேனித்
தீர்த்தன தகலத் தூடு சேர்ந்தனர் தழுவ அன்னோன்
பார்த்தனன் அஞ்சல் என்று பகர்ந்தனன் துயிலை நீங்கி. 75
865 இம்மெனப் பணியின் மீதும் எழுந்தனன் இறுதி செய்யும்
வெம்மைகொள் கடவுட் டீயும் வெருவர உருத்துச் சீறி
நம்மையும் பொரவுந் தீயோர் நண்ணினர் போலும் அன்னார்
தம்வலி காண்டும் என்னாத் தடக்கைகள் புடைத்து நக்கான். 76
866 சிந்தையில் உன்னும் முன்னந் திறல்மிகும் உவணர்கோமான்
வந்தனன் அவன்பொற் றோள்மேல் மடங்கலே றென்னப் புக்குச்
சந்திரன் அனைய சங்கஞ் சக்கரங் கதைவாள் சாபம்
ஐந்தெனும் படையும் ஏந்தி அவுணர்தம் படைமுற் சென்றான். 77
867 கோட்டினன் சார்ங்க மென்னுங் குனிசிலை யினைநாண் ஓதை
காட்டினன் அவுணர் உள்ளங் கலக்கினன் கொண்ட செற்றம்
வீட்டினன் தானை யாவும் விலக்கினன் பகழி மேன்மேற்
பூட்டினன் சோனைக் கொண்மூ வாமெனப் பொழித லுற்றான். 78
868 பொழிந்திடு கின்ற காலைப் போர்கெழும் அவுணர் தானை
அழிந்தன தேரும் மாவும் ஆடலங் கரிகள் தாமும்
ஒழிந்தன விறலும் போரின் ஊக்கமும் படையு மெல்லாங்
கழிந்தன சூறை யுற்ற காரெனல் ஆய வன்றே. 79
869 சூழ்ந்திடும் அவுணர் சென்னி துணிந்தன தோளுந் தாளும்
வீழ்ந்தன கரங்கள் சிந்தி விரவின குருதி நீத்தம்
ஆழ்ந்திடு புணரி யெல்லாம் ஆயின அவனி தானுந்
தாழ்ந்தன பிணத்தின் குன்றந் தகைந்தன தபனன் தேரை. 80
870 ஒடிந்தன இரதம் ஆழி உருண்டன கவனப் பாய்மா
மடிந்தன களிறு நொந்து மாண்டன வயவர் பல்லோர்
முடிந்தனர் குருதி நீத்தம் மூடின அதனுள் மூழ்கிப்
படிந்தன அலகை ஈட்டம் பாரிடம் பரந்த வன்றே. 81
871 சுடர்கெழு நேமி அண்ணல் துயிலுறு பாலின் வேலை
இடையொரு சிறிது மின்றி எங்கணும் எருவை யாகி
அடைவது கடவு ளாடும் ஆரழல் அதனை உண்ணக்
கடையுகம் விரவு கின்ற காட்சியைப் போன்ற தம்மா. 82
872 விண்ணுலாம் படிவ மாயோன் மேதகும் உவணத் தோடு
மண்ணுலாம் கடலா மென்ன அவுணரை வளைந்து சுற்றி
எண்ணிலா உருவங் காட்டி யாவரும் போகா வண்ணம்
அண்ணல்வாம் பகழி சிந்தி அமர்செய்தான் அமரர் ஆர்ப்பு. 83
873 அடுசமர் புரியும் எல்லை ஆங்கவை உருத்து நோக்கி
உடைவதோர் அனிகந் தன்னை யொன்றுநீர் அஞ்ச லென்னா
வடவரை யனைய ஆற்றல் மாபெருந் தனுவொன் றேந்தி
இடியுறழ் கலிமான் தேர்மேல் தாரகன் இமைப்பின் வந்தான். 84
874 வானில மளவு செய்த மலர்ப்பதத் தண்ணல் முன்னந்
தானெதிர் புகுந்து வெய்யோன் தன்பெருந் தனுவை வாங்கி
மேனகு சரங்கள் கண்ணன் மிசையுற வேலை மீதில்
சோனைவிண் பொழிவ தென்னத் துண்ணெனத் தூவி ஆர்த்தான். 85
875 ஆர்த்திடும் அளவை தன்னில் அச்சுதன் அயில்வே லென்னக்
கூர்த்திடும் உலப்பில் வாளி கொடியதா ரகன்றன் மேனி
தூர்த்தனன் தேரும் பாகுந் தொலைத்தலுஞ் சோர்வி லாதான்
பேர்த்தொரு தடந்தேர் உற்றுப் பெருஞ்சிலை வாங்கி னானால். 86
876 உற்றிடும் அவுணன் மால்மேல் ஒராயிரம் பகழி ஓச்சி
அற்றமில் கருடன் மீதும் ஆயிரம் விசிக முய்ப்ப
மற்றவை அவன்பால் தீய மாசுணம் பலவுந் தங்கள்
பற்றலன் தன்னை வவ்வும் பரிசெனச் செறிந்த வன்றே. 87
877 ஆயிடை உவணர் கோமான் அலக்கணுற் றதனை நோக்கி
மாயவன் உலப்பி லாத வடிவினை யெய்தி அந்தத்
தீயவற் சூழ்ந்து வெம்போர் செய்துழி அவனுந் தங்கள்
தாயருள் மனுவை உன்னித் தானுமந் நிலைய னானான். 88
878 தாரக வசுரன் தானுந் தணப்பில்பல் லுருவங் கொள்ளா
ஈரிரு வைகல் காறும் இந்திரை கேள்வ னோடு
பேரமர் புரிந்த வெல்லைப் பிதாமகன் இதனை நோக்கி
யாரிவன் எதிர்நிற் பாரென் றதிசய நீர னானான். 89
879 எல்லையங் கதனின் மாயோன் எறுழ்வலி அவுணன் ஏறுஞ்
சில்லியந் தேரும் மாவுந் திறன்மிகு வலவன் தானும்
வில்லொடு துணிந்துவீழ விசிகமோர் கோடி உய்த்தான்
ஒல்லையின் அதனை நாடி உம்பர்கோன் உவகை பூத்தான். 90
880 திண்டிறற் பரியுந் சிலையொடு வலவன் தானுந்
துண்டம தடைத லோடுஞ் சூரனுக் கிளைய தோன்றல்
தண்டமொன் றெடுத்துக் கீழ்போய்த் தலைபனித் தமரர் அஞ்ச
அண்டமுங் குலுங்க ஆர்த்தங் கரிதனை யெதிர்ந்து சென்றான். 91
881 எதிர்வரும் அவுணன் தன்மேல் எண்ணிலாப் பகழி மாரி
விதியினை அளித்த மாயன் வீசலும் அவற்றை யெல்லாங்
கதைகொடு விலக்கிச் சிந்திக் கனன்றுமுற் கடிதிற் செல்ல
அதுதனை நோக்கி மாலும் ஆழியம் படையை உய்த்தான். 92
882 ஓரிமை யொடுங்கு முன்னர் உலகெலாந் தொலைக்குந் தன்மைப்
போரயில் நேமி தானும் புராரிதன் வரத்தாற் சென்று
தாரக வசுரன் கண்டந் தன்னைவந் தணுகிச் செம்பொன்
ஆரம தாயிற் றம்மா தவத்தினும் ஆக்க முண்டோ. 93
883 பணியுறு கடவுள் நேமிப் படையுமாங் கவுணன் கண்டத்
தணியதா யிருத்த லோடும் அரனருள் வரத்தை யுன்னித்
தணிவிலற் புதத்த னாகித் தாரகன் வலிய னென்னா
மணிகிளர் மேனி மாயோன் மற்றிது புகலல் உற்றான். 94
884 அயனொடு ததீசி யென்னும் அருந்தவத் தோனும் வெம்போர்
முயலுறும் அவுணர் யாரும் மொழிந்திடின் உனக்கொப் பல்லார்
செயலுரை யின்றி உண்டாற் சிறுவிதி மகத்தைச் செற்ற
வயமிகு கழற்கால் வீரன் மற்றுனக் கிணையா மென்றான். 95
885 வன்றிறற் கடவு ளாழி மணிப்பணி யாயிற் றென்றால்
வென்றியும் உனதே யன்றோ வேறினிப் போரும் உண்டோ
உன்றிறம் இதுவே என்னின் உனக்குமுன் னவராய் அங்கண்
நின்றவர் பெருமை தன்னை யாவர்கொல் நிகழத்தற் பாலார். 96
886 சங்கரன் மகிழும் ஆற்றல் தழல்மகம் பன்னாள் ஆற்றி
உங்களின் வலிபெற் றுள்ளார் அவுணரில் ஒருவர் இல்லை
இங்குமை வெல்வார் யாரே எமக்குநீர் தமரே யென்னா
மங்கல மரபின் ஆசி வரம்பில புகன்று போனான். 97
887 பார்த்தனர் அனைய தெல்லாம் பாயிருள் கான்ற மேனி
நீர்த்திரை அனைய செங்கை நிருதராம் புணரி யாயோர்
ஆர்த்தனர் அமரர் யாரும் அகன்றனர் அஞ்சி அங்கம்
வேர்த்தனர் விளிவோ ரென்ன மெலிந்தனர் விழுமத் துள்ளார். 98
888 மாதவன் அகன்ற காலை மற்றுமோர் வையத் தேறித்
தாதவிழ் தொடையல் வாகைத் தாரகன் தம்முன் நேராய்ப்
போதலும் அவனு மீண்டு புகுந்தவா றுணர்ந்து புல்லி
ஆதர மகிழ்ச்சி எய்தி அனிகமோ டகன்றான் அப்பால். 99
889 ஆழியங் கிரியின் காறும் அகலிட வரைப்பு முற்றச்
சூழுற நாடிப் போந்து தொல்லிரு விசும்பின் ஏகித்
தாழுறு நிலையிற் செல்லுந் தபனனே முதலோர் யாரும்
வாழியென் றாசி கூற வானுயர் துறக்கம் புக்கான். 100
890 வேறு
இந்தவா றவுணர்கோன் துறக்கத் தேகலும்
முந்திய ஒற்றரில் சிலவ ரோடியே
வந்தனன் சூரனாம் வலியன் தானெனா
அந்தர நாயகன் அறியக் கூறவே. 101
891 அஞ்சினன் உயிர்த்தனன் அலந்து தேம்பினன்
துஞ்சின னேயென உணர்வு சோர்ந்துளான்
எஞ்சலில் வன்மைய திகந்து தன்னுடை
நெஞ்சினில் இனையன நினைத்தல் மேயினான். 102
892 அவ்வயிற் போந்திடும் அவுணர் தன்னெதிர்
செவ்விதிற் சென்றியான் செருவில் நேர்வனேல்
இவ்வுயிர்க் கிறுதியாம் இருப்ப னேல்இடர்ப்
பவ்வமுற் றிறந்திடப் பழியில் மூழ்குவேன். 103
893 புன்செய லாய்இவட் புகுந் திடுஞ்செயல்
என்செய லால்வரும் இயற்கை யல்லது
பின்செயல் ஒன்றிலை பிறர்செய் கின்றதுந்
தன்செயல் என்பரால் சார்பின் மேலையோர். 104
894 திருவுறு கின்றுழி மகிழ்ந்துந் தீர்வுழிப்
பருவரல் எய்தியும் பாசந் தன்னிடை
அரிதுணர் கேள்வியர் அழுங்கு வார்கொலோ
வருவது வரும்அது மறுக்க லாகுமோ. 105
895 ஆதலின் அமர்இழைத் தாவி நீங்கலன்
பேதுறு கின்றிலன் பீழை யுற்றுளோர்
ஓதரு மகிழ்ச்சியும் உறுவர் ஆங்கது
தீதுசெய் அவுணர்தந் திறத்துக் காண்பனால். 106
896 நாணொடும் ஒன்னலர் நகையுங் கொள்ளலன்
தூணம துறழ்புயச் சூர பன்மனைக்
காணுவன் என்னினுங் கறுவு சிந்தையான்
ஏணுறு தளையிடும் எனையென் றெண்ணினான். 107
897 இம்முறை வாசன் எண்ணி யேயெழீஇக்
கொம்மென மனையுடன் குயிலு ருக்கொடே
விம்முறு பீழையன் விண்ணிற் போயினான்
தெம்முனை அவுணர்கள் தேடிக் காண்கிலார். 108
898 ஒன்னலர் நாடுவ துணர்ந்து வானவர்
மன்னவன் ஆக்கமும் மாயும் போலுமால்
என்னினிச் செய்வதென் றிரக்க மெய்தியே
பொன்னகர் எங்கணும் பொலிவு மாய்ந்ததே. 109
899 பிடித்தனர் அமரரை அவுணர் பேதுற
அடித்தனா¢ குற்றினர் அனையர் தானையால்
தடித்திடுந் தோள்களைத் தமது கைகளால்
ஒடித்தன ராமென ஒல்லை வீக்கினார். 110
900 தண்ணளி யாவுமின் றாய தானவர்
விணணவர் தங்களை விழுமஞ் செய்திடா
அண்ணலந் திருவுறும் அரசன் முன்னுறத்
துண்ணென உய்த்தலுந் தொழுது போற்றுவார். 111
901 அவுணரில் உதித்தனை ஆற்று நோன்புறீஇச்
சிவனருள் பெற்றனை திசையி னோர்முதல்
எவரையும் வென்றனை என்னின் இங்கெமை
நவைபடச் செய்வதே நன்று போலுமால். 112
902 மறலியும் இருக்குமோ மற்றை மாதிரத்
திறைவரும் இமையவர் யாரும் உய்வரோ
இறுதியின் றாகுமே உலகம் ஈங்கொரு
சிறிதுநீ வெஞ்சினஞ் சிந்தை செய்யினே. 113
903 இற்றையிப் பகல்முதல் என்றும் எங்களுக்
குற்றதோர் கடவுள்நீ ஓம்பும் வேந்துநீ
பற்றுள தமரும்நீ பலரும் யாம்இனி
மற்றுன தேவலை மரபிற் செய்துமால். 114
904 வேறு
என்றிவை புகன்று போற்றும் இமையவர் தம்மை நோக்கி
நன்றுநுஞ் செய்கை யென்னா நகைசெய்து யாப்பு நீக்கி
மன்றநம் பணிமேல் கொண்டு வைகுதிர் இனிநீ ரென்னா
அன்றவர் தம்மை விட்டான் அழல்மகத் தாவி விட்டான். 115
905 வாசவன் வளத்தை யெல்லாம் அவுணர்கள் வவ்விச் செல்லப்
பேசரு மகிழ்ச்சி கொண்டு பின்னவர் பாங்கர் ஏகக்
காசிபன் அளித்த மேன்மைக் காதலன் அனிகஞ் சூழ
ஓசைகொள் மறைகள் ஆர்க்கும் உயர்மக லோகம் புக்கான். 116
906 கற்றுணர் கேள்வி யான்மாக் கண்டேய னாதி வானோர்
உற்றிடும் பதமாந் தொல்பேர் உலகமே முதல மூன்றும்
மற்றவர் பரவ நீங்கி மலரயன் பதத்திற் போகத்
தெற்றென அதனைத் தேர்ந்து திசைமுகன் துணுக்கமுற்றான். 117
907 வேறு
வசையில் நோன்புடை வாலறி வுள்ளோர்
இசைகொள் வேதம் இயம்பினர் சூழ
நசையி னீரொடு நான்முக வேதா
அசுரர் கோனைய டைந்தன னன்றே. 118
908 ஆழி மால்கடல் அன்னதொர் சேனை
சூழ வேவரு சூரனை யெய்தி
வாழி வாழிய வைகலும் என்னாக்
கேழி லாசி கிளத்திய பின்னர். 119
909 மன்ன நீயிவண் வந்திட மேனாள்
என்ன நோன்பை இயற்றின னோயான்
அன்ன வாறுண ரேன்சிவன் அல்லால்
அன்னி நாடி யுணர்ந்துளர் யாரே. 120
910 கற்றை வார்சடை யான்கழல் பேணி
அற்றம் நீங்கி அருந்தவம் ஆற்றி
மற்றிவ் வாறு வளத்தியல் யாவும்
பெற்று ளாய்பெரு வன்மை பிடித்தாய். 121
911 பொன்னை மேவு பொலன்கெழு மார்பன்
தன்னை வானவர் தங்களை யெல்லாம்
இன்ன நாள்இளை யோற்கொடு வென்றாய்
உன்னை நேருள ரோவுல கத்தில். 122
912 காத லான்மிகு காசிபன் மைந்தன்
ஆத லால்அவு ணர்க்கிறை நின்மூ
தாதை யான்சர தம்மிது நின்சீர்
ஏதும் என்புகழ் யான்பிறன் அன்றே. 123
913 என்று பன்முக மன்கள் இசைத்தே
நின்று தம்பியர் தங்களை நேர்ந்து
பொன்றி டாதபொ லஞ்சிலை திண்டேர்
ஒன்று தன்படை யும்முத வுற்றான். 124
914 வெருவ ரச்சுரர் வீற்றுறு பான்மை
இருவ ருக்கும் அளித்தலும் யாரும்
பரவு கொற்றவன் அன்னது பாராப்
பெரும கிழ்ச்சிகொள் பெற்றியன் ஆனான். 125
915 அருத்தி யெய்தி அயன்றனை யங்கண்
இருத்தி மாயைமுன் ஈந்தருள் மைந்தன்
மருத்து ழாய்முடி மன்னவன் வைகுந்
திருத்த கும்முல கத்திடை சென்றான். 126
916 அந்த வேலையில் ஆண்டுறும் மாலோன்
வந்து சூரபன் மாவினை யெய்தி
நந்தல் இல்லதொர் நாளொடு வாழ்கென்
றந்த மில்பல ஆசி புகன்றான். 127
917 ஆசி கூறினன் ஆற்றவும் இன்சொற்
பேச வேபெரு மாமகிழ வெய்தி
மாசில் அவ்வுல கெங்கணும் வல்லே
பாச னத்தொடு பார்த்தனன் அன்றே. 128
918 பார்த்த பின்பணி யின்மிசை வைகுந்
தீர்த்தன் ஆண்டு திகழந்துற நல்கிக்
கார்த்தி லங்குறு கந்தர முக்கண்
மூர்த்த வைகிய மூதுல குற்றான். 129
919 வேறு
அரியயன் முதலா வுள்ள அமரர்கள் யார்க்குந் தத்தம்
உரியதோ ராணை யெல்லாம் உலப்புறா துதவி வைகும்
பரமன துலகம் நண்ணிப் பரிசனம் யாவும் நீங்கிச்
சுரர்புகழ சூர பன்மன் துணைவாக ளோடு போனான். 130
920 போந்தனன் அமலன் கோயிற் புறங்கடை வாயில் நின்றே
ஆய்ந்திடு நந்தி யெந்தை அருள்முறை உய்ப்பச் சென்று
காந்தளை யனைய செங்கைக் கவுரியோ டுறையும் முக்கண்
ஏந்தல்முன் அணுகி ஆர்வத் திறைஞ்சியே ஏத்தி நின்றான். 131
921 கண்டநஞ் சுடைய அண்ணல் கருணைசெய் தினிநீ யேனை
அண்டமுஞ் சென்று நாடி ஆணையால் அகிலம் யாவும்
எண்டிசை புகழும் ஆற்றால் இறைபுரிந் திருத்தி யென்னப்
புண்டரீ கத்தாள் போற்றி விடைகொண்டு புறத்து வந்தான். 132
922 புறந்தனில் வந்து சூரன் பொம்மெனத் தானை யெய்திச்
சிறந்திடு கின்ற அண்ட கோளகை சேர்த லோடு
மறந்தரு ஞமலி மேலோர் உருத்திரர் வரம்பி லோர்கள்
உறைந்தனர் அனைய ரெல்லாம் உமாபதி யருளுட் கொண்டார். 133
923 பாங்குறும் அண்டஞ் செல்லும் பான்மையில் வாயில் காட்டி
ஆங்கவர் விடுப்ப மற்றை அண்டத்துச் சூர பன்மன்
ஓங்கிய தானை யோடும் ஒல்லையிற் போகி யாண்டும்
ஈங்கிது போல நாடி யாரையும் வென்று போனான். 134
924 ஏனையண் டங்க ளெல்லாம் எம்பிரான் கணமா யுள்ளோ
ரானவர் அருளிற் போகி அகிலமும் நாடி அங்கண்
வானவர் தம்மை வென்று வளமெலாங் கவர்ந்து தன்பால்
தானவர் பலரை அங்கண் தன்னர சளிப்ப உய்த்தான். 135
925 இத்திறம் வீற்று வீற்றா எல்லையில் அண்டந் தோறும்
மெய்த்தம ராகி யுள்ள அவுணரை வேந்த ராக
வைத்தனன் துணைவ ரோடு மீண்டனன் மற்றிவ் வண்டப்
பித்திகை அதனுட் சென்று பெறலருந் துறக்க முற்றான். 136

"https://ta.wikisource.org/w/index.php?title=கந்த_புராணம்&oldid=1116204" இலிருந்து மீள்விக்கப்பட்டது