கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்/004-010

விக்கிமூலம் இலிருந்து



புண்ணியத் தலம் நோக்கிப்
புறப்பட்ட கூட்டத்தோடு
நானும் போனேன்.

உன் கிராமத்துக்குப்
பக்கத்தில் வந்ததும்
நான் நின்று கொண்டேன்.

“இன்னும் எழுபது கல்
செல்ல வேண்டும்; புறப்படு”
என்று கூட்டத்தினர் கூறினர்

“நானோ
என் புண்ணியத் தலம்
இதோ தெரிகிறது
நீங்கள் போகலாம்”
என்று சொல்லிவிட்டு
என் பருவக் கனவுகள் படரும்
உன் வீட்டு முற்றத்தை
நோக்கினேன்.

சாளரத்தின் வழியாகப்
பரந்த உலகத்தைப் பார்த்துப்
பெருமூச்சுவிடும்
ஒரு சிறைக்கைதியைப் போல
நெடுநேரம்
அப்படியே நின்றேன்.

 

32



(Upload an image to replace this placeholder.)


 



(Upload an image to replace this placeholder.)


 



நான்
வீழ்ந்து விட்டேனாம்

பிரியத்தோடு
பாடம் படிக்க வந்த
பாவை ஒருத்தியிடம்
குரு ஒருவன்
வீழ்வதைப் போல் -

ஆர்வத்தோடு
பாதபூசை
செய்ய வந்த
பக்தை ஒருத்தியிடம்
யோகி ஒருவன்
வீழ்வதைப் போல் -
நான் வீழ்ந்து விட்டேனாம்!

என்னை
எவரெஸ்டாகப் பார்க்கும்
இந்த ஊரின் பார்வையில்
என் வீழ்ச்சி
மிகப் பெரிய வீழ்ச்சியே.

எனினும்
இது இயல்பானது
தடுக்க முடியாதது.

சமதளத்தில்
ஓடி வரும் நீரைத் தடுக்கலாம்.
அணை போடலாம்.
மலைத் தலையிலிருந்து
  விழும் நீரை
எப்படித் தடுக்க முடியும்?

என் வீழ்ச்சி
நீர் வீழ்ச்சியே!

 

33



‘இது தவறு’ என்று
என் ஆருயிர்த் தோழர் ஒருவர்
தினமும் இடித்துரைக்கிறார்.

ஒரு வேளை தவறாகவே இருக்கலாம்.

எனினும்
இந்தத் தவற்றைப் புரியும்
ஒவ்வொரு நொடியும்
ஒரு தவம் புரிவதைப் போல்
என்னை ஆக்கிக் கொள்கிறேன்.

எதிர்பார்த்துக் காத்திருந்து
உன்னை நெருங்கும்போது
வெடிமருந்துச் சாலையருகே
கொள்ளிக் கட்டையோடு
கவனமின்றிப் போகும்
ஒரு பேதையைப் போல்
நடந்து கொள்ளப் போகிறேன்
என்று அவர் கவலைப் படுகிறார்.

நானோ,
மூலத்தானம் அருகே
திருவிளக்கேந்திச் செல்லும்
அடியவனைப் போல்
ஆனந்தமடைகிறேன்.

 

34



சின்ன வயதில்
என்னை நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள்.

கையில் அரிவாள்;
கண்ணில் கொலைவெறி,
நாவில் குருதிப்பசி,
கோரத் தோற்றம்
கொண்ட ஒரு சிலையைக் காட்டி -
“இதுதான்
உன் குலதெய்வம், கும்பிடு”
என்றார்கள்
நாம் கும்பிட்டேனோ, என்னவோ?

அமிர்தத்தின் மகளான
உன்னைக் கண்டபோது
யாரும் கூறாமலேயே
என் வாய்,
குலதெய்வம், குலதெய்வம்
என்று உச்சரித்தது;
என்னைக் கேட்காமலேயே
என் கை குவிந்தது.

இனிமேல்
என்னை யாரும் ஏமாற்ற முடியாது.

 

35



உன்னிடம் எவ்வளவோ பேசவேண்டும்
என்று நினைக்கிறேன்.

அரங்கம் ஏறுமுன்
ஒத்திகை பார்க்கும்
ஒரு நல்ல நடிகனைப்போல்
நீ வருமுன் உன்னிடம்
என்னென்ன பேசவேண்டும் என்று
தைரியமாய்த் தீர்மானிக்கிறேன்.

நீ எதிரில்
தென்பட்ட நிமிடத்தில்
ஆசிரியரின் திடீரென்ற கேள்விக்குப்
பதில் சொல்ல முடியாத
ஒரு பள்ளிச் சிறுவனைப்போல்
பாவமாய் விழிக்கிறேன்.

 

36



நேற்றுவரை
ஊரார் என்னைக் கவிஞன் என்றார்கள்.

இன்று
‘பித்தன்’ என்கிறார்கள்.

அந்த மேடையில் ஒரு பெரியவர்,
தெய்வத்தை யாராவது பார்த்ததுண்டா
என்று கேட்டார்.
‘இதோ’ என்று
உன் உருவப் படத்தைக் காட்டினேன்.

அதனால்தான் பித்தன் என்கிறார்கள்;

ஊர் கிடக்கட்டும்.
கவிஞன், பித்தன் என்று
எதையாவது சொல்லும்.
நீ மட்டும் என்னை
என் இனிய ‘காதலன்’ என்று சொல்;
போதும்.

 

37



என் கொல்லையில்
வாழை வைத்திருக்கிறேன்.

வாழை நன்றாக
வளர்ந்திருக்கிறது.
பூத்துக் காய்த்துப்
பூரித்து நிற்கிறது.

நீ
ஒரு வார்த்தை சொல்.

கொல்லையில் நிற்கும் வாழையை
வாசலில் கொண்டுவந்து வைக்கிறேன்.

 

38



அந்த மரத்தடியில் நிற்கிறேன்;
        இன்று நேற்றல்ல..
எத்தனையோ நாட்களாக.

நீ போகும்போதும் வரும்போதும்
உன்னை ஒருமுறை பார்க்க வேண்டும்
என்ற பசியால்
நின்று கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும்
என்னைப் பார்த்துவிட்டுத்தான்
செல்கிறாய்.

என்றாவது ஒரு நாள்
என் அருகே வர மாட்டாயா
என்று காத்திருக்கிறேன்.

ஒரு நாள், உண்மையிலேயே
என் அருகே வருகிறாய்;
என் மணிக்கட்டைப் பற்றுகிறாய்;
என் தோளைத் தொடுகிறாய்;

என் காலைச் சுற்றிக்
கங்கை பாய்வதைப் போலவும்
என் மேனியெங்கும்
கோடிப்பூக்கள்
மலர்வதைப் போலவும்
நான் சிலிர்க்கிறேன்.

என் சிலிர்ப்பைப் புரிந்து கொண்ட நீ
"சிலை என்று நினைத்துத் தொட்டேன்.
ஓ... உயிர் இருக்கிறதா?” என்கிறாய்.

 



“இவ்வளவு நாட்களாகச்
சிலையாகத்தான் இருந்தேன்;
நீ தொட்டதால் உயிர் பெற்றேன்”
என்கிறேன் நான்.

ஓ... இது ஒரு கனவு தான்!

 

39