கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்/003-010

விக்கிமூலம் இலிருந்து



உலக மொழிகள் அனைத்திலுமுள்ள
உயர்ந்த கவிதைகளைத்
தேடி எடுத்துப் படித்துள்ளேன்.

என்றாலும்
எனக்குப் பிடித்த கவிதை
உன் பெயர்தான்!

வையப் புகழ் வாய்ந்த
ஒவியர்கள் வரைந்துள்ள
சிறந்த சித்திரங்களை
விரும்பி வாங்கிப் பார்த்துள்ளேன்;

என்றாலும்
எனக்குப் பிடித்த சித்திரம்
உன் முகம்தான்!

 

22



சமீபத்தில்
உதக மண்டலம் போயிருந்தேன்.

நீலகிரியின்
மாயக் கவர்ச்சியில்
மயங்கிய நான்
மலர்க் கண்காட்சிக்குச்
சென்றிருந்தேன்.

அங்கே
இலையுதிர் காலத்தில் மலரும்
விதவிதமான பூக்களை
வைத்திருந்தார்கள்.

அதில்,
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்
பிறகு மலர்ந்த
குறிஞ்சிப் பூக்களும் இருந்தன.

அவற்றைப் பார்த்துச்
சிலர் அதிசயித்தார்கள் -

நானோ
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
மலர்ந்துள்ள உன்னை
அந்தப் பூக்களுக்கிடையே
வைத்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
என்று எண்ணினேன்.

 

23



கோடைக்
வரும்போதெல்லாம்
ஓர் எஸ்கிமோவைப் போல்
பனிப் பிரதேசத்தின்
பக்கம் திரியவேண்டும்
என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.

குளிர்காலம்
வரும்போதெல்லாம்
ஒரு புகைவண்டி ஓட்டியைப்போல்
நெருப்பின் பக்கம்
நிற்கவேண்டும்
என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.

இப்போது
எந்தக் காலத்திலும்
உன் பக்கமே இருக்கவேண்டும்
என்று ஆசைப்படுகிறேன்.

 

24

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)


 
உண்மையை ஒப்புக் கொள்கிறேன்;
நான் பேராசைக்காரன்தான்.

முதலில்
உன் இதழ்களால்
பால்போன்ற புன்னகைகளைச்
சிந்தினால் போதும்
வேறு எதுவும் வேண்டாம்
என்று எண்ணினேன்;
நீ என் எண்ணத்தைப்
பொய்யாக்கவில்லை.
அத்தோடு என் ஆசை அடங்கியதா?

பின்னர்,
உன் இதழ்களால்
தேன்போன்ற சொற்களைச்
சிந்தினால் போதும்
இதற்குமேல் எதுவும் வேண்டாம்
என்று ஏங்கினேன்;

நீ என் ஏக்கத்தைக்
கனவாக்கவில்லை;
அத்தோடும் என் ஆசை அடங்கியதா?

கொஞ்ச காலமாக
உன் இதழ்களால்
அமுதம் போன்ற.......
.......... .....

நான் பேராசைக்காரன் தான்.

 


25



பொய்யல்ல..
இதற்குமுன்
எந்தப் பெண்ணையும்
ஏறெடுத்துப் பார்த்ததில்லை

உன்னைப் பார்த்த பிறகு
எதிரில் வரும்
எந்தப் பெண்ணையும் விடுவதில்லை.

என் பார்வையில்
இருட்டில் கட்டிப்பிடிக்கும்
இச்சை எதுவும் இல்லை.

என் காதலிக்கு இணையாக
இன்னொருத்தி இருக்கிறாளா என்று
வெளிச்சத்தில் கண்டுபிடிக்கும்
ஒரேஒரு இலட்சியம் உண்டு.

இன்றுவரை... இன்றுவரை..
எனக்குத் தோல்வியே!

 

26




ஒரு காலத்தில்
தன் காதலிக்காகத்
தலையைக் கொடுத்தான்
ஒரு கவிஞன்
என்று படித்தபோது
‘இது என்ன மூடத்தனம்’
என்று எண்ணிப்
பரிகசித்தேன்.

இப்போது -
எனக்கு
ஒரே ஒரு தலை தானே இருக்கிறது
என்று நினைத்துப்
பரிதவிக்கிறேன்.

 

27


என் மூதாதை ஒருவன்
பராசக்தியிடம் வரம் கேட்டான்.

காணி நிலம்
மாட மாளிகை
தென்னந் தோப்பு
அது இது என்று வேண்டி
இறுதியில்
ஒரு பத்தினிப் பெண்ணைக் கேட்டான்

நான் கேட்டால்
உன்னை மட்டும்தான் கேட்பேன்.

உன்னைப் பெற்றால்
உலகத்தில் உள்ள
எல்லாம் பெற்ற மாதிரி தானே!

 


28



பால்யத்தில்
என் பாட்டி என்னைத்
திருவிழாவுக்குக்
கூட்டிக் கொண்டு போகும் போது
கண்டகண்ட மிட்டாய்களைக் காட்டி
வாங்கித்தா என்று
அடம் பிடிப்பனாம், அழுவேனாம்.

இப்போது
என் பாட்டி இல்லையே.

இந்தக் கற்கண்டை
வாங்கித்தா
என்று அழுது பார்க்கலாம்.

இப்போது
என் பாட்டி இல்லையே!

 


29



நான் துறவியாகப் போகிறேன்.

பற்றுகள் அனைத்தையும்
முற்றும் நீக்கிப்
பரம்பொருளிடம் மட்டும்
பற்று வைக்கும் துறவிகளை
நீ கேள்விப்பட்டிருப்பாய்.

நான்
சகல பற்றுகளையும்
வீசியெறிந்து விட்டு
உன் மீது மட்டும்
பற்று வைக்கும்
துறவியாகப் போகிறேன்.

 

30



சில நாட்களுக்கு முன்பு
காட்டுக்குப் புறப்பட்டேன்.

தலையை வெளுக்கச் செய்யும்
அற்பக் கவலைகளையும்
அன்றாடச் சிக்கல்களையும்
இறக்கி வைத்துவிட்டு
மனித ஒலி பெருக்கிகளற்ற
மலையடிவாரத்திற்குப் புறப்பட்டேன்.

அதற்குள் நீ வந்துவிட்டாய்
உன்னால்
என் பயணம்
ஒத்திவைக்கப்பட்டது.

இதோ,
மீண்டும் தயாராகிவிட்டேன்
ஆனால், தனியாக அல்ல..
துணையோடு!

காற்றைப் போலவும்
கலைமான்களைப் போலவும்
கட்டின்றித் திரியலாம்.

பர்ணசாலைகளில் மலர் மஞ்சங்களில்
பனிக்கால இரவுகளை வரவேற்கலாம்.

என் இரண்டாம் சீதையே, எழு!

 

31