கம்பர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
கம்பர்
அவ் அவ் அமையங்களில்
கூறிய
தனிப்பாடல்
திரட்டு
மொத்தம் பாடல்கள் 69
பக்கம் 45 முதல் 54
குறிப்புரை - செங்கைப் பொதுவன்

பாடல் 1-5[தொகு]

கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1)
வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி. (2)
வடக்கு திசைபழனி வான்கீழ் தென்காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் – கடற்கரையின்
ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம்
சேரனாட் டெல்லையெனச் செப்பு. (3)
மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்காம்
ஆர்க்கும் உவரியணி கிழக்கு – பார்க்குளுயர்
தெற்குப் பினாகினி திகழிருபதின் காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு. (4)
ஆழியான் பள்ளி யணையே யவன் கடைந்த
ஆழிவரையின் மணித் தாம்பே – பூழியான்
பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற
நாணே யகல நட. (5)

பாடல் 6-10[தொகு]

மங்கை யொருபங்கர் மணிமார்பில் ஆரமே
பொங்குங் கடல்கடைந்த பொற்கயிறே – திங்களையும்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே
ஏறிய பண்பே யிறங்கு. (6)
பாரைச் சுமந்த படவரவே பங்கயக்கண்
வீரன் கிடந்துறங்கு மெல்லணையே – ஈரமதிச்
செஞ்சடை யான்பூணுந் திருவா பரணமே
நஞ்சுடை யாய்தூர நட.(7)
சிரம் பார்த்தா னீசனயன் தேவிதனைப் பார்த்தான்
கரம் பார்த்தான் செங்கமலக் கண்ணன் – உரஞ்சேர்
மலைவெளுத்த திண்புயத்து வண்ணான் சீராமன்
கலைவெளுத்த நேர்த்துதனைக் கண்டு. (8)
ஆரார்தலை வணங்கார் ஆரார்தான் கையெடார்
ஆரார்தான் சத்திரத்தில்ஆராதார் – சீராருந்
தென்புலியூர் மேவுஞ்சிவன் அருள்சேர் அம்பட்டத்
தம்பிபுகான் வாசலிலே தான். (9)
கொங்கையான் மாறன் குலசேகரப் பெருமான்
பொற்கையான் ஆனகதை போதாதோ –நற்கமல
மற்றலே வாரி மணிவாசலை யசைக்கத்
தென்றலே ஏன்வந்தாய் செப்பு. (10)

பாடல் 11-15[தொகு]

பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம்
மார்பகலங் கண்டு மகிழ்வரே – போர்புரிய
வல்லான களங்கன் வாணன் றிருநாமம்
எல்லாம் எழுதலா மென்று.(11)
எலைக்குரிய பண்ட முவந்திரக்கச் சென்றால்
கொலைக்குரிய வேழங் கொடுத்தான் – தலைக்குரிய
வாணர் கோனாறை மகதேவனுக் கிந்தப்
பாணனோ டென்ன பகை. (12)
வாணன் பெயரெழுதா மார்புண்டோ மாகதர்கோன்
வாணன் புகழுரையா வாயுண்டோ – வாணன்
கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ வுண்டோ
அடிதாங்கி நில்லா வரசு.13)
உமையவளு நீயுமொருங் கொப்பே யொப்பே
உமையவளுக் குண்டங் கோரூனம் – உமையவடன்
பாகந்தோய்ந் தாண்டான் பலிக்குழன்றான் பாண்டியனின்
ஆகந்தோய்ந் தாண்டா னரசு.(14)
மோட்டெருமை வாவிபுக முட்டுவராற் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே –நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையப்ப னூர்.(15)

பாடல் 16-20[தொகு]

வெற்றிபுனை தாதகிக்கும் வேம்புக்கும் பெண்ணைக்கும்
சுற்றும் பெருநிழலாய்த் தோன்றுமே- கற்றோர்
திறந்தாங்குந் தாங்குஞ் செகமுழுதுந் தாங்கும்
அறந்தாங்குந் தொண்டை யரசு.16)
கந்தமலர்ப் பிரமன் கன்னிமடவார்க் கெல்லாம்
அந்தவிள நீரைமுலை யாக்கினான்- சுந்தரஞ்சேர்
தோற்றமிகு வல்லிக்குத் தோப்பை முலையாக்கினான்
ஏற்றமிதில் யார்தான் இயம்பு. (17)
இருந்தவளைப் போனவளை யென்னை யவளைப்
பொருந்தவளை பறித்துப் போனான்-பெருந்தவளை
பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டின்
மாத்தத்தன் வீதியினில் வந்து.(18)
ஆழியானாழி யயனெழுத் தாணி யென்பார்
கோழியான் குன்றெறிய வேலென்பான்-பூழியான்
அங்கை மழுவென்பான் அருள்பெரிய மாமண்டூர்ச்
சிங்கனுலைக் களத்திற் சென்று.(19)
குடகர் குணகட லென்பர் குடகுக்
கிடகர் வடகட லென்பர்-வடகடலோர்
தென்கட லென்பர் திருந்துதா ரச்சுதநின்
முன்கட நின்றார்க்கு முரசு.(20)

பாடல் 21-25[தொகு]

தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்குஞ் செந்நெல்
தனைவிளைத்தார் முற்றமது தானாங்-கனையு
முரசுணங்கச் சங்குணங்கு மூரித் தேர்த்தானை
அரசுணங்கு மச்சுதன் முற்றம். (21)
குறையுளா ரெங்கிரார் கூர்வேலி ராமன்
விறையாறு திங்களி ருந்தான்-முறைமையால்
ஆலிக்குந் தார்மார்பா வச்சுதா வந்நாளில்
வாலிக் கிளையான் கடை.(22)
அரசன் அகளங்கன் அச்சுதன் முற்றத்
தரசர் அவதரித்த வந்நாள்- முரசதிரக்
கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை
வெட்டி விடுமோசை மிகும். (23)
தலையவிழ் நாண்மாலைத் தாயரே யாவி
களையினு மென்கண் டிறந்து காட்டேன் –வளைகொடுபோம்
வன்கண்ணன் மாவிசயன் மால்யானை தன்னொடும்வந்
தென்கண் புகுந்தா னினி. (24)
பாண்டியனைப் பேர்மாற்றிப் பாணர்க் கரசளித்த
வாண்டகை யென்றுன்னை யறியேனோ- மூண்டெழுந்த
கார்மாற்றுஞ் செங்கைக் கடகரி வாணாவுனது
பேர்மாற்றுவ தரிதோ பேசு. (25)

பாடல் 26-30[தொகு]

வாட்டானைத் தென்னவர்கோன் மாகதற்குத் தோற்செய்தி
கேட்டானத் தீங்குரலுங் கேட்டதற்பி –னாட்டம்
பொருந்தாயிர விழியான் பொன்முடியைச் சாய்த்தங்
கிருந்தானிங் கென்னாகு மென்று.(26)
பாணன் மதுரைப் பதியாள வைத்தபிரான்
வாணர் புகழ வருமேகம்ப-வாடன்
கரும் போதகமே நின்கால் பணிவேன்மீண்டு
வரும் போதகமே வரின். (27)
படுபருந்துஞ் சூர்ப்பேயும் பன்மிருகஞ் செந்நாய்
கொடிகழுகு மித்தனையுங் கூடி –வடிவுடைய
கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு
போமாறு போமாறு போம். (28)
என்சிவிகை யென்கவிகை யென்றுவச மென்கவசம்
என்பரியீ தென்கரியீ தென்பரே- மன்கவன
மாவேந்தன் வாணன் வரிசை பரிசுபெற்ற
பாவேந்தரை வேந்தர் பார்த்து. (29)
சேற்றுக் கமலவயற் றென்னாறை வாணனையான்
சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் –வேற்றுக்
களிக்குமாவைத் தந்தான் கற்றவருக்குச் செம்பொன்
அளிக்குமா றெவ்வா றவன். (30)

பாடல் 31 - 35[தொகு]

தேருளைப்புரவி வாரணத்தொகுதி திறைகொணர்ந்து வருமன்னநின் தேசமேது னதுநாமமேது புகல் செங்கையாழ் தடவுபாணகேள்
வாருமொத்த குடிநீரு நாமுமக தேவனாறை நகர்காவலன் வாணபூபதி மகிழ்ந்தளிக்க வெகுவரிசை பெற்றுவரு புலவன்யான்
நீருமிப் பரிசுபெற்று மீளவரலாகு மேகுமவன் முன்றில்வாய் நித்திலச் சிகரமாட மாளிகை நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆருநிற்கு முயர் வேம்புநிற்கும் வளர்பனையு நிற்குமதன் அருகிலே அரசுநிற்கு மரசைச்சுமந்த சிலவத்தி நிற்கும் அடையாளமே. (31)
அலங்கலணி மார்பன் ஆறையர்கோன் வாணன்
விலங்கு கொடுவருக வென்றான்- இலங்கிழையீர்
சேரற்கோ சோழற்கோ தென்பாண்டி நாடாளும்
வீரற்கோ யார்க்கோ விலங்கு. (32)
பரப்போத ஞாலமொரு தம்பியாளப் பனிமதியந்
துரப்போ னொருதம்பி பின்வரத் தானுந் துணைவியுடன்
வரப்போன மைந்தருக்குத் தாதைபொறா துயிர்மாய்ந்தனனெஞ்
சுரப்போவெனக் கிங்கினியார் உவமை யரைப்பதற்கே.(33)
கண்டாயோ பார்வேந்தா கானகத்துக் கள்ளியின்கீழ்
வெண்டாழை பூத்து விளக்கெரியப்- பெண்டாலி
பூட்டுதற்கு முன்னமொரு புத்திரனைப் பெற்றெடுத்தாள்
காட்டிற் கழுகோட்டுங் கை.(34)
கன்னிக்கலச முலையாடன் காமக்குரோத பஞ்சத்தில்
என்னுக்கெழுதிக் கொடுத்தேனென் றியம்பக்கேளா யிகல்வேந்தே
மின்னுக்கெழுதி யிடைக்கெழுதி வேண்டும்பொருட்கு மெழுதியருட்
பொன்னுக்கெழுதிக் கொடுத்தேன்யான் பொய்யுமுரையேன் புகல்வேந்தே.(35)

பாடல்36-40[தொகு]

பாண்டியன் பாடியது

போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்
தூற்றினுந் தூற்றுவர் சொன்ன சொற்களை
மாற்றினு மாற்றுவர் வன்கணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடிய ராவரே. (36)
மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ
உன்னை யறிந்தோ தமிழை யோதினேன்- என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு. (37)
அன்றையிலும் வையமகன்றதோ வல்லவென்று
குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டாயோ-என்றும்
அடைந்தாரைக் காக்கு மகளங்கா துங்கா
நடந்தாயே நாலா றடி. (38)
காதமிருபத்து நான்கொழியக் காசினியை
ஓதக்கடல் கொண் டொளித்ததோ- மேதினியிற்
கொல்லிமலைத் தேன்சொரியுங் கொற்றவா நீமுனிந்தால்
இல்லையோ வெங்கட் கிடம். (39)
நீரெல்லாஞ் சேற்றுநாற்ற நிலமெலாங் கல்லுமுள்ளும்
ஊரெலாம் பட்டிதொட்டி யுண்பதோ கம்பஞ்சோறு
பேரெலாம் பொம்மன் திம்மன் பெண்களோ நாயும்பேயும்
காருலாங் கொங்குநாட்டைக் கனவிலு நினைக்கொணாதே. (40)

பாடல் 41-45[தொகு]

குமிண்டியும் பண்ணையுங் கூடமுளைக்கின்ற கொல்லைக் கம்பை
நிமிண்டியு மூதியுந் தின்னவல்லோ ரிந்தநீணிலத்திற்
றுமிண்டியாங் காய்தன்னை மொட்டையம்பா லெய்யுஞ் சூரர்கண்டீர்
நமண்டியிற் பள்ளிக ளத்தனை பேர்களுநல்லவரே. (41)
செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே- முட்டிபுகும்
பார்ப்பாரகத்தை யெட்டிப் பாரோமே யெந்நாளுங்
காப்பாரே வேளாளர் காண். (42)
மேழி பிடிக்குங்கை வேல்வேந்தர் நோக்குங்கை
ஆழி தரித்தே யருளுங்கை- சூழ்வினையை
நீக்குங்கை யென்று நிலைக்குங்கை நீடூழி
காக்குங்கை காராளர் கை. (43)
மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்து
சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே
விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி
நெற்கொண்டு பொமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே (44)

விருத்தம்

தேரையார் செவ்விள நீருண்ணாப் பழிசுமப்பர்
நாரியார் தாமறிவார் நாமவரை நத்தாமை
கோரைவாய்ப் பொன்சொரியுங் கொல்லிமலை நன்னாடா
ஊரை வாய்மூட வுலைமூடி தானிலையே.(45)

பாடல் 46-50[தொகு]

மட்டுப்படாக் கொங்கை மானார்கலவி மயக்கத்திலே
கட்டுப்பட்டா யென்ன காதல்பெற்றாய் மதன்கை யம்பினாற்
பட்டுப்பட்டா யினுந் தேறுவையே யென்றுபார்த் திருந்தேன்
வெட்டுப்பட்டாய் மகனே தலைநாளின் விதிப்படியே. (46)
வில்லம்பு சொல்லம்பு மேதினியி லிரண்டுண்டு
வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்- வில்லம்பு
பட்டுதடா வென்மார்பிற் பாண்டியா நின்குலத்தைச்
சுட்டுதடா வென்வாயிற் சொல்.(47)
கரைக்கு வடக்கிருக்குங் காளிகா ளம்மைக்
கரைத்து வழிசாந்தைத் தொட்டப்பேய்- உரைத்தும்
மறைக்க வறியாதவன் பேயின் கையைக்
குறைக்குமாங் கூன்கத்தி கொண்டு.(48)
காலப்புய நிகனிகர் காராளர் தம்மைக் கடலுடுத்த
தாலக்குல மங்கை பெற்றதனாற் சதாகாலமுமால்
கோலத்திரு முகத்தாலே முகந்தனன் கூடலிலே
சூலக்கரப் படையான் றலைமீது சுமந்தன்னே.(49)
கல்லங் காடுதனில் விளையாக் கடுகநிலத்திற் றான்முளையா
அல்லனிருந்த கருங்கூந்த லணங்குக் கணங்கு போலாவாள்
செல்லென்றேவி மனைகடொறுந் தேடித்தரிந்துந் காணாத
நெல்லஞ்சொறே கம்பஞ்சோற்றினை நீசுமந்து திரிவாயே. (50)

பாடல் 51-55[தொகு]

கம்பர் கற்றுச்சொல்லி

மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக்
காவுறங்கின வெங்கண் மானிருகண் ணுறங்கில ளையகோ
கோவுறங்கு கடைத்தலைக் குலதீபவள்ளை குதட்டிவாய்
ஆவுறங் குபகார சஞ்சலமஞ்ச லென்ன வடுக்குமே.(51)

அம்பிகாபதியும் கம்பரும் பாடியது

இட்டடி நோவ வெடுத்தடி கொப்புளிக்க
வட்டில் சுமந்து மருங்கசையக்- கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவா ணாவில்
வழங்கோசை வையம் பெறும்.(52)

அம்பிகாபதி

சற்றேபருத்த தனமே குலுங்கத் தரளவடந்
துற்றேயசையக் குழையூசலாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடனசிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே.(53
வெங்கண் சிவந்து வெடிவான் முறுக்கி வெகுண்டெழுந்தென்
அங்கம் பிளக்க வருங்களிறே யன்றிரணியனைப்
பங்கம்பட வுரங்கீண்டே யுதிரம் பருகுநர
சிங்கமிருக்குது காண் கெடுவா யென்றன் சிந்தையிலே. (54)
வீரமுண்டோ மதன்கை யம்பினால் வெந்து வீழுகைக்கு
நேரமுண்டோ வஞ்சிநேர் பட்டகாலை யிநெஞ்சைவிடப்
பேரமுண்டோ சொலவொண்ணாத காமப்பெரு நெருப்புக்
கீரமுண்டோ வையனே யென்னபாவ மினிச்சொல்வதே. (55)

பாடல் 56-60[தொகு]

உருகியுடல் கருகியுள் ளீரல்பற்றி
எரிவ தவியா தென்செய்வேன்-வரியரவ
நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே யிட்ட நெருப்பு. (56)
வாணன்புகழ்க் கெல்லை வாழ்த்துவோர் நாவெல்லை
வாணன்புகழ்க் கெல்லை மண்ணெல்லை- வாணன்
படைக்கெல்லை திக்கெல்லை பைந்தமிழ் தேர்வாணன்
கொடைக்கெல்லை ஏற்பவர் தங்கோள்.(57)
நில்லாதபல்லும் பறிபட்ட கூந்தலும் நீண்டகரிப்
பொல்லாவழுக்குப் புடைவையுமாய் வெகுபூச்சியம் போய்ச்
செல்லாப் பணத்துக்குத் தேட்டூணு மற்றுத்தியங்கி யொன்றும்
இல்லாதபாவி தனக்கார்துணை பொன்னி நாட்டினமே. (58)
வாசமலர் மடந்தை போலவார் மருதவனத்
தீசனடியா ரெழுப தின்மர்- நேசத்
திரவலர் மேனீட்டுவர் கையீண் டுலகையாளும்
புரவலர் மேனீட்டுவர் பொற்றாள். (59)

இடைக்காடர் பாடிய ஊசிமுறி

ஆற்றங்கரையி னருகிருக்கு மாமரத்திற்
காக்கை யிருந்து கககவெனக்- காக்கைதனை
எய்யக் கோலில்லாமல் 0 0 0 என்றானே
வையக் கோனாரின் மகன். (60)

பாடல் 61-65[தொகு]

ஏகம்பவாணன் மனைவி

சேனை தழையாக்கி செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்த வருஞ்சேற்றின்- மானபரன்
பாவேந்தர் வேந்தன் பறித்து நட்டானே கம்பன்
மூவேந்தர் தங்கண் முடி. (61)

கம்பர்வீட்டு வெள்ளாட்டி

நெற்படி விளைகழனி புடைசூழ் நென்மலி வாழ்தச்சன்
கற்படி பனைதோளான் பெயரோ கங் கண கண கணவன்
விற்படி வாணுதலாண் மனைவிமின் மினிமினி மினிமி
சொற்படி வேலைசெயும் மவளோதுந் துமி துரி துரிதி. (62)
வட்டமதி போலிருக்கும் வன்னிக்கொடி தாவுங்
கொட்டுவார் கையினின்று கூத்தாடும்-சுட்டால்
அரகரா வென்னுமே யம்பல சோமாசி
ஒருநாள் விட்டேனீ துரை. (63)
தென்னவா மீனவா சீவிலி மாறாமதுரை
மன்னவா பாண்டிவர ராமா- துன்னுஞ்
சுரும்புக்குத் தாரளித்த துய்யதமிழ் நாடா
கரும்புக்கு வேம்பிலே கண். (64)
மாப்பைந் தார்க்கல்ல முத்துவண்ணத் தார்க்கல்ல வஞ்சி
வேப்பந்தார்க் காசைகொண்டு விட்டாளே - பூப்பைந்தார்
சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவிலிமாறா தமிழை
ஆய்ந்திருக்கும் வீர மாறா. (65)

பாடல் 66-69[தொகு]

வேம்பாகிலு மினிய சொல்லுக்கு நீபுனைந்த
வேம்பாகிலு முதவ வேண்டாமோ- மீன்பாயும்
வேலையிலே வேலைவைத்த மீனவர் நின்புயத்து
மாலையிலே மாலைவைத்தாண் மான். (66)
இலகு புகழாறையே கம்ப வாணன்
அலகை வரும்வரு மென்றஞ்சி. உலகறிய
வானவர்கோன் சென்னிமிசை வண்கை வளையெறிந்த
மீனவர்கோன் கைவிடான் வேம்பு. (67)

பாண்டியன் மனைவி

வேண்டிய போதின்பம் விளைக்கு மடந்தையரைத்
தீண்டிய கையா லென்னைத் தீண்டாதே- பாண்டியா
முல்லைக் கதிபா முகம்பார்த் தகலநின்று
சொல்லக் கடவதெல்லாஞ் சொல்.(68)
கலையான் முலைமூடிக் கண்வலைக்குள் ளாக்கும்
விலைமாதர் தாம்வர விட்டாரோ- விலைமாதர்
கொங்கையிலே தோய்ந்த குறைதீரத் துய்யசிவ
கங்கையிலே நீராடி வா. (69)
"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பர்_தனிப்பாடல்கள்&oldid=28077" இலிருந்து மீள்விக்கப்பட்டது