கரிகால் வளவன்/பாட்டும் பரிசும்

விக்கிமூலம் இலிருந்து
9. பாட்டும் பரிசும்

முடத்தாமக் கண்ணியார் பாடல், புலவர் அவைக்களத்தில் ஏறிப் பாராட்டைப் பெற்ற பிறகு வேறு புலவர்கள் கரிகாலனுடைய புகழைப் பல வகையிலே பாடி அரங்கேற்றிச் சோழ மன்னன் வழங்கும் பரிசிலைப் பெற்றுச் சென்றார்கள். கடியலூரில் உருத்திரன் என்பவருடைய புதல்வராகிய கண்ணனார் என்பவர் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கினார். அவரைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்று யாவரும் சொல்வார்கள். அவர் கரிகாலனைப்பற்றி ஒரு பெரிய பாட்டைப் பாடினர். காவிரிப்பூம்பட்டினம் வர வரச் சிறப்பு அடைந்திருப்பதைக் கண்டவர் அவர். அப் பட்டினம் வாணிகத்தினால் உலகில் உள்ள பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு விளங்கியது. தமிழ்நாட்டின் பண்டங்களையும் கரிகாலன் புகழையும் உலகெங்கும் பரப்புவதற்கு அந்தக் கடற்கரைப் பட்டினம் வாயிலாக இருந்தது. பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தையே குறிக்கும்படியாக அதற்குச் சிறப்பு அமைந்தது.

அந்த நகரத்தின் பெருமையையும் செல்வ மிகுதியையும் வாணிகத்தையும் வாயாரப் பாட வேண்டுமென்று உருத்திரங்கண்ணனார் எண்ணினார். அதோடு கரிகால் வளவனுடைய வரலாற்றையும் அந்தப் பாட்டில் இணைக்க விரும்பினார். பல நாள் சிந்தித்து, “பட்டினப் பாலை” என்ற நீண்ட

பாட்டை இயற்றி முடித்தார். 301 அடிகளைக் கொண்ட அந்தப் பாட்டு, காதலன் ஒருவன் சொல்வதுபோல அமைந்திருக்கிறது. இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருளைத் தேடும் பொருட்டுத் தன் காதலியைப் பிரிந்து செல்லலாம் என்று முதலில் அவன் நினைக்கிறான். பிறகு அவளைப் பிரிவது துன்பத்தைத் தரும் என்ற எண்ணம் உண்டாகிறது. அப்போது தன் நெஞ்சைப் பார்த்து, “காவிரிப்பூம்பட்டினத்தைப் பெற்றாலும், கரிகாலனுடைய வேலைக் காட்டிலும் வெம்மையான பாலை நிலத்தைக் கடந்து நான் வரமாட்டேன்; என்னுடைய காதலியின் தோள் அம் மன்னனுடைய செங்கோலை விடத் தண்மையை உடையது” என்று சொல்கிறான். இப்படிச் சொல்லும் போக்கில் காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையையும், கரிகாலனுடைய புகழையுமே புலவர் விரித்துரைக்கிறார்.

சுக்கிரன் வடக்கே இருந்தால் மழை பொழியும் என்று சொல்வார்கள். அது தெற்கே சென்றால் மழையின்றிப் பஞ்சம் உண்டாகும். அவ்வாறு பஞ்சம் உண்டாகி, வானம்பாடி வானத்தை நோக்கி மழைத்துளிக்காக வாய் திறந்து பாடியும் நீர் கிடைக்காமல் அது வாடும்படி பஞ்சம் உண்டானாலும் பொய்யாமல் குடகு மலையிலிருந்து வருகின்ற காவிரி தன் நீரைப் பரப்பிப் பொன்னைக் கொழிப்பது சோழநாடு. அந்த நாட்டில் என்றும் விளைவு அருத வயல்கள் பரந்திருக்கின்றன. சிறிய சிறிய

ஊர்கள் பல, நாடு முழுவதும் வளப்பத்தோடு விளங்குகின்றன. கரும்பும் நெல்லும், தென்னையும் கமுகும், மஞ்சளும் சேம்பும், மாவும் பனையும், இஞ்சியும் வளர்ந்து நல்ல பயனைத் தருகின்றன.

அங்கங்கே மகளிர் நெல்லை உலர்த்துகிறார்கள். அந்த நெல்லைத் தின்ன வரும் கோழியை ஓட்ட அருகிலே கல் இல்லை. வேறு யாதும் இல்லாமையால் தம்முடைய காதில் உள்ள குழையை வாங்கிக் கோழியின்மேல் எறிந்து ஓட்டுகிறார்கள். அந்தக் குழைகள், சிறு குழந்தைகள் விடும் விளையாட்டு வண்டிகளைத் தடுக்கின்றன.

ஒன்றுக்கு ஒன்று அருகருகாகப் பல ஊர்கள் நிறைந்தது சோழ நாடு. பகைவர்களால் உண்டாகும் அச்சமே அவ்வூர்களில் இல்லை. அந்த நாட்டில் கடற்கரையில் விளங்குவது காவிரிப்பூம்பட்டினம்.

படகிலே உப்பைக் கொண்டு வந்து நெல்லுக்கு அதை விற்று அந்தப் படகில் நெல்லை நிரப்பிக் கொள்கிறார்கள் பரதவர்கள். அந்தப் படகுகளைக் கழிகளின் பக்கத்தில் குதிரைகளைப் போலக் கட்டியிருக்கிறார்கள். நகரத்துக்குப் புறம்பே தோப்புகளும் பூஞ்சோலைகளும் செறிந்திருக்கின்றன. வலிமையைப் பெற்ற கரைகளையுடைய நன்னீர்ப் பொய்கைகள் இருக்கின்றன. அந்தப் பொய்கைகளில் பல நிறம் பொருந்திய மலர்கள் மலர்கின்றன. அவற்றுள் மிகப் பெரிய நீர்நிலைகள் இரண்டு உண்டு. அவற்றை இருகாமத் திணைஏரி என்று சொல்வார்கள்.

இந்த ஏரிகளுக்கு அப்பால் பலமான கதவுகளையுடைய மதில் ஓங்கி நிற்கிறது. அந்தக் கதவுகளில் சோழ அரசனுடைய புலிச்சின்னத்தைப் பொறித்திருக்கிறார்கள்.

நகரத்துக்குள்ளே புகுந்தால் முதலிலே கண்ணில் படுவது அன்னதானம் செய்யும் அறச்சாலை. அங்கே சோற்றை வடித்த கஞ்சி ஆற்றைப்போல ஓடுகிறது. அந்தக் கஞ்சியைக் குடிக்க வரும் காளை மாடுகள் தம்முள்ளே சண்டை போடுகின்றன. அதனால் கஞ்சி பாயும் இடம் சேறாகிவிடுகிறது. பிறகு அங்கே வண்டிகள் செல்வதனால் சேறு காய்ந்து புழுதி பறக்கிறது. அருகில் உள்ள மாடங்களிலே அந்தப் புழுதி படிகிறது.

இந்த அறச்சாலைக்கு அருகே பசு மாடுகளையும் எருதுகளையும் பாதுகாக்கும் சாலைகள் இருக்கின்றன. அவற்றினுள்ளே கேணிகள் உள்ளன. அப்பால் தவம் செய்பவர்களின் மடங்களும் முனிவர்கள் வேள்வி செய்யும் சாலைகளும் காளி கோயிலும் உள்ள இளமரச் சோலைகளைக் காணலாம்.

கடற்கரைப் பக்கத்தில் பரதவர் மக்கள் தமக்கு விருப்பமான ஊனைத் தின்றுவிட்டு அடப்பம்பூவைத் தலையிலே செருகிக்கொண்டு ஆட்டை முட்டவிட்டு விளையாடுகிறார்கள். காடை கவுதாரிகளைச் சண்டையிடச் செய்து பார்க்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் மற்போரும் வாட்போரும் செய்து விளையாட்டு அயர்கிறார்கள்.

பரதவர் தெருவில் உறைக்கிணறுகள் இருக்கின்றன. பன்றிகளையும் கோழிகளையும் அவர்கள்

வளர்க்கிறார்கள். அமாவாசை நாளிலும் பெளர்ணமியன்றும் கடலில் பரதவர் மீன் பிடிக்கப் போகாமல் தம்முடைய தெய்வமாகிய வருணனுக்குப் பூசை போடுகிறார்கள். தம் மனைவிமாருடன் சேர்ந்து மீனின் கொம்பை நட்டு அதில் வருணனை எழுந்தருளுவித்து வழிபடுகிறார்கள். கூதாளம் பூமாலையையும் தாழம்பூவையும் சூடிப் பனங்கள்ளை உண்டு விளையாடுகிறாகள். காவிரி கடலோடு கலக்குமிடத்தில் தீவினை போகக் கடலாடிப் பிறகு நல்ல நீரில் குளிக்கிறார்கள்.

பெரிய வீதிகளில் பல மாடங்கள் இருக்கின்றன. வானுலகத்தைப் போன்ற இன்பங்களை உடையவை அவை. அங்குள்ள மகளிர் இரவில் இனிய பாடலைக் கேட்டும், நாடகங்களைக் கண்டும், நிலாவிலே இருந்து மகிழ்ந்தும், கள்ளை அருந்தாமல் உயர்ந்த மதுபானங்களை அருந்தியும், பட்டைக் களைந்துவிட்டு மிக நுட்பமான துகிலை உடுத்தும் தம் கணவருடன் மகிழ்கின்றனர். அப்படியே அவர்கள் தூங்கிப் போகிறார்கள். மாடங்களில் ஏற்றிய விளக்குகள் விடியற்காலத்திலும் சுடர்விட்டு எரிகின்றன. இரவிலே மீன் வேட்டைக்காகச் சென்ற பரதவர்கள் அந்த விளக்கை ஒன்று இரண்டு என்று எண்ணுகிறார்கள்.

பரதவர் வாழும் அகன்ற தெருவிலே பண்ட சாலை இருக்கிறது. அங்கே கடுமையான காவலை அமைத்திருக்கிறார்கள். உள் நாட்டிலிருந்து வரும் பண்டங்களை அங்கே குவித்திருக்கிறார்கள். அவற்றிற்கெல்லாம் புலிப்பொறியையிட்டுச் சுங்கம் வாங்கிக் கப்பல்களில் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்.

அப்படியே கப்பலில் வெளிநாட்டிலிருந்து வரும் பண்டங்களுக்கும் முத்திரையிட்டுச் சுங்கம் வாங்குகிறார்கள். இந்தப் பண்டசாலையின் முற்றத்தே பல பண்டங்களையுடைய மூட்டைகள் மலையைப் போலக் குவிந்து கிடக்கின்றன. அவற்றின்மேல் நாயும் ஆடும் ஏறி விளையாடுகின்றன. சுங்க வரி தண்டும் அதிகாரிகள் நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். அவர்கள் சிறிதும் சோர்வில்லாமல் வேலை செய்கிறார்கள். அளந்தறியாத பல பண்டங்கள் அங்கே கிடக்கின்றன. ஏவலர்கள் அவற்றைக் கப்பலிலிருந்து இறக்குகிறார்கள்; பலவற்றைக் கப்பலில் ஏற்றுகிறார்கள்.

திருமகள் களிநடம் புரியும் அங்காடி வீதிகளிலே உயர்ந்த மாடங்கள் இருக்கின்றன. திண்ணைகளும் படிக்கட்டுகளும் இடைகழியும் பல கட்டுகளும் உடைய மாடங்கள் அவை. அங்கே அழகிய மகளிர் கடவுளை வணங்குகிறார்கள். குழல் அகவுகின்றது. யாழ் முரலுகின்றது. முழவும் முரசும் முழங்குகின்றன. எப்போதும் விழா அறாத ஆவண வீதி அது. அங்கே பல வகையான கொடிகள் அசைகின்றன.

கடவுளைத் தொழும் கோயில்களில் ஒரு வகையான கொடிகள் அசைகின்றன. இன்ன இன்ன பண்டங்கள் இங்கே விற்கப்பெறும் என்பதற்கு அடையாளமாக நட்ட கொடிகள் அங்கங்கே இருக்கின்றன. பல நூல்களைக் கற்றும் கேட்டும் கரை கண்ட அறிவுடைய நல்லாசிரியர், தம்மோடு யாரேனும் வாதம் செய்வாருண்டானால் வருக என்று தம் வீட்டு வாயிலில் நாட்டிய கொடிகள்

ஒரு சார் அசைகின்றன. கடற்பக்கத்தைப் பார்த்தால் கப்பல்களில் உள்ள கூம்புகளில் கொடிகள் பறக்கின்றன. கள் விற்கும் இடத்தில் அதைக் குறிக்கத் தனியே கொடியை நட்டிருக்கிறார்கள்.

இப்படிப் பல கொடிகளும் கலந்து பல நிறங்களோடு விளங்கும் பட்டினத்தில் கப்பலில் வந்த அழகான குதிரைகள் ஒருபக்கம் நிற்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து பிற நாட்டுக்குப் போகவேண்டிய மிளகு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப் பெற்றிருக்கிறது. இமயமலையிலே பிறந்த மணியும் பொன்னும் ஓரிடத்தில் விற்பனையாகின்றன. மேற்கு மலையிலே விளைந்த சந்தனமும் அகிலும் ஓரிடத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பாண்டி நாட்டுக் கடலிலே எடுத்த முத்தும் பவளமும் ஓரிடத்தில் பளபளக்கின்றன. கங்கைக்கரையிலே வினைத்தபண்டம் ஒரு பக்கம்; காவிரிக்கரையிலே விளைத்த பொருள் ஒரு பக்கம்; ஈழ நாடாகிய இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருள் ஒரு சார்; காழகமாகிய பர்மாவிலிருந்து வந்த பண்டம் ஒரு சார்.

இவ்வளவு பண்டங்கள் நிறைந்து கிடக்கும் ஆவணத்தில் நேர்மையான முறையில் வணிகர்கள் வியாபாரம் செய்கிறார்கள். வேளாளர்கள் நடுநிலையோடு வாழ்கின்றனர். கொலையும் களவும் இன்றி மக்கள் வாழ்கிறார்கள். பசுமாடுகளைப் பாதுகாக்கிறார்கள். புண்ணியச் செயல்களை இடையீடின்றிச் செய்து வருகிறார்கள்.

எங்கே பார்த்தாலும் வாணிகம். உலகில் உள்ள பண்டங்கள் அத்தனையும் இந்த அங்காடியிலே காணலாம். அதுமாத்திரம் அன்று. உலகத்து மொழிகள் பலவற்றையும் இங்கே கேட்கலாம். அந்த அந்த நாடுகளிலிருந்து வந்து செல்லும் மக்கள் பலர் இங்கே உலவுகிறார்கள். அவர்கள் தங்கள் மொழிகளிலே பேசிக்கொள்கிறார்கள்.

எப்போதும் விழா நிறைந்த வீதியாக விளங்குகிறது ஆவண வீதி.

காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை எண்ணி முடிவு காண முடியுமா?

வ்வாறு பூம்புகாராகிய பட்டினத்தைச் சிறப்பித்துப் பாடிய உருத்திரங் கண்ணனார் கரிகால் வளவனுடைய வீரத்தையும் பிற இயல்புகளையும் விரிவாகப் பாடினார். அவன் பகைவருடைய சிறையில் இருந்ததையும், அதனினின்றும் விடுதலை பெற்று அரசுரிமையைப் பெற்றதையும், பல போரில் வெற்றி பெற்றதையும், ஒளியர், அருவாளர், வடநாட்டார், குட நாட்டார், பாண்டியன், பொதுவர், இருங்கோ வேள் ஆகியவர்களைப் புறங்கண்ட சிறப்பையும் பாடினார்.

காட்டை அழித்து நாடாக்கிய நலத்தைப் புகழ்ந்தார். குளங்களை வெட்டி வளம் பெருக்கினான் கரிகாலன். உறையூரை விரிவாக்கி அங்கே அரண்மனையைக் கட்டிப் பல குடி மக்களைக் கொண்டு வந்து நாட்டினான். மதிலைக் கட்டி அங்கங்கே அம்புகளை வைக்கும் மறைவிடங்களை அமைத்தான். இவ்வாறெல்லாம் அவன் நகர நிர்மாணம் செய்ததையும் உருத்திரங் கண்ணனார் அழகாகப் பாடினார்.

பாட்டை நிறைவேற்றிய புலவர் கரிகாலனிடம் சென்றார். பல புலவர் கூடிய அவையில் அதனைப் படித்து அரங்கேற்றினார். சோழ நாட்டு வளத்தைக் கேட்டு மகிழ்ந்தார் பலர். பட்டினத்தின் சிறப்பைக் கேட்டுக் கேட்டு, ‘நன்று, நன்று’ என்று கூறிப் பாராட்டினர் பலர். காவிரிப்பூம்பட்டினத்தின் அமைப்பைச் சித்திரிக்கும் பகுதிகளைப் புலவர்கள் யாவரும் கேட்டுக் கேட்டு இன்பக் கடலில் மூழ்கினர். அப்பால் கரிகாலனுடைய வீரப் புகழை விரிக்கும் பகுதியைக் கேட்டு வியந்தார்கள். அரங்கேற்றம் நிறைவேறியது.

புலவருக்குத் தூசும் துகிலும் மணியாரமும் அளித்தான் கரிகாலன். அவற்றோடு பதினாறு லட்சம் பொன்னைப் பரிசாக அளித்தான். “பாட்டுக்கு ஏற்ற பரிசு” என்று யாவரும் பாராட்டினார்கள்.

“பட்டினத்தின் புகழை இவ்வளவு சிறப்பாகப் பாடினவர் யாரும் இல்லை; அப்படிப் பாடிய புலவருக்கு இவ்வளவு மிகுதியாகப் பரிசளித்த மன்னனும் யாரும் இல்லை.”

“உருத்திரங் கண்ணனார் வாக்கிலே பொன் கொழிக்கும் காவிரியைக் கண்டோம்; பொன் விளைக்கும் நிலத்தைக் கண்டோம்: பொன் வளரும் பட்டினத்தைப் பார்த்தோம். இத்தனையையும் பாடிய புலவரிடம் பொன் கொழிக்க வேண்டாமா? அதனால் அரசர் பிரான் இத்தனை பொன்னைப் பரிசாக அளித்திருக்கிறான்.”

“புலவர் பாடிய பாடல் நெடுங்காலம் நிற்கும்; புரவலன் வீரமும் அவன் பதினாறு நூறாயிரம் பரிசளித்த புகழும் இந்தப் பாட்டோடு நெடுங்காலம் வாழும்.”

இப்படிப் புலவர்களும் மற்ற மக்களும் பாட்டையும் பரிசையும் பற்றிப் பேசிப் பாராட்டினார்கள்.