கலிங்கத்துப் பரணி/கோயில் பாடியது

விக்கிமூலம் இலிருந்து

பழையகோயிலும் புதியகோயிலும்[தொகு]

97

ஓதி வந்தவக் கொடிய கானகத் துறைய ணங்கினுக் கயன்வ குத்தவிப்ள்
பூத லம்பழங் கோயி லென்னினும் புதிய கோயிலுண் டதுவி ளம்புவாம். 1


புதிய கோயிலுக்குக் கடைக்கால்[தொகு]

98

வட்ட வெண்குடைச் சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடைப்
பட்ட மன்னர்தம் பட்ட மங்கையர் பரும ணிக்கருத் திருவி ருத்தியே. 2

கோயில் இயல்பு[தொகு]

99

துவர்நி றக்களிற் றுதிய ரேவலிற் சுரிகை போர்முகத் துருவி நேரெதிர்த்
தவர்நி ணத்தொடக் குருதி நீர்குழைத் தவர்க ருந்தலைச் சுவர டுக்கியே. 3

தூணும் உத்தரமும்[தொகு]

100

அறிஞர் தம்பிரா னபயன் வாரணம் அரசர் மண்டலத் தரண றப்பறித்
தெறித ரும்பெருங் கணைம ரங்கள்கொண் டெழுது தூணொடு த் திரமி யற்றியே. 4

கை மரமும் பரப்பு மரமும்[தொகு]

101

கடித ழிந்துபோர் மிதிலை யிற்படுங் கரிம ருப்பினைத் திரள் துலாமெனும்
படிப ரப்பியப் பரும யானையின் பழுவெ லும்பினிற் பாவ டுக்கியே. 5

மேல் முகடு[தொகு]

102

மீளி மாவுகைத் தபயன் முன்னொர்நாள் விருத ராசரைப் பொருது கொண்டபோர்
ஆளி வாரணங் கேழல் சீயமென் றவை நிரைத்துநா சிகையி ருத்தியே. 6

வெற்றிடத்தை மூடுதல்[தொகு]

103

துங்க பத்திரைச் செங்க ளத்திடைச் சோள சேகரன் வாளெ றிந்தபோர்
வெங்க தக்களிற் றின்ப டத்தினால் வெளிய டங்கவே மிசைக விக்கவே. 7

கோபுரமும் நெடுமதிலும்[தொகு]

104

கொள்ளிவாய்ப் பேய்காக்குங் கோபுரமு நெடுமதிலும்
வெள்ளியாற் சமைத்ததென வெள்ளெலும்பி னாற்சமைத்தே. 8

கோயில் வாயிலில் மகரதோரணம்[தொகு]

105

காரிரும்பின் மகரதோ ரணமாகக் கரும்பேய்கள்
ஓரிரண்டு கால்நாட்டி யோரிரும்பே மிசைவளைத்தே. 9

மதில்களின் காட்சி[தொகு]

106

மயிற்கழுத்துங் கழுத்தரிய மலர்ந்தமுகத் தாமரையு மருங்கு சூழ்ந்த
எயிற்கழுத்து நிணக்கொடியு மிளங்குழவிப் பசுந்தலையு மெங்குந் தூக்கி. 10

மதுரையின் மகரதோரணம்[தொகு]

107

பணியாத வழுதியர்தம் பாய்களிற்றின் செவிச்சுளகு பலவுந் தூக்கி
மணியூச லெனமதுரை மகரதோ ரணம்பறித்து மறித்து நாட்டி. 11

ஈம விளக்கு[தொகு]

108

பரிவிருத்தி யலகிட்டுப் பசுங்குருதி நீர்தெளித்து நிணப்பூச் சிந்தி
எரிவிரித்த ஈமவிளக் கெம்மருங்கும் ஏற்றியதோ ரியல்பிற் றாலோ. 12

வீரர்களின் பேரொலி[தொகு]

109

சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்
பலியாக வுறுப்பரிந்து தருது மென்று பரவுமொலி கடலொலிபோற் பரக்குமாலோ. 13

வீர வழிபாடு[தொகு]

110

சொல்லரிய ஓமத்தீ வளர்ப்ப ராலோ தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி
வல்லெரியின் மிசையெரிய விடுவ ராலோ வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ. 14

தலை துதிக்கும் முண்டம் வழிபடும்[தொகு]

111

அடிக்கழுத்தி னெடுஞ்சிரத்தை யரிவ ராலோ
அரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ. 15

அச்சுறுத்தும் தலைகள்[தொகு]

112

நீண்டபலி பீடத்தி லரிந்து வைத்த
நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி
ஆண்டலைப்புள் ளருகணைந்து பார்க்கு மாலோ
அணைதலுமச் சிரமச்ச முறுத்து மாலோ. 16

அஞ்சி அலைந்தன[தொகு]

113

கடன மைந்ததுக ருந்தலைய ரிந்த பொழுதே கடவ
தொன்றுமிலை யென்றுவிளை யாடு முடலே
உடல்வி ழுந்திடினு கர்ந்திடவு வந்த சிலபேய்
உறுபெ ரும்பசியு டன்றிடவு டன்றி ரியுமே. 17

குரல் ஒலியும் வாத்திய ஒலியும்[தொகு]

114

பகடி டந்துகொள்ப சுங்குருதி யின்று தலைவீ
பலிகொ ளென்றகுர லெண்டிசைபி ளந்து மிசைவான்
முகடி டந்துருமெ றிந்தெனமு ழங்க வுடனே
மொகுமொ கென்றொலிமி குந்தமரு கங்கள் பலவே. 18

மெய்க் காப்பாளர்கள்[தொகு]

115

தமரு கங்கள்தரு கின்றசதி யின்கண் வருவார்
அமரி யின்புறும நாதிவரு சாத கர்களே. 19

யோகினிப் பெண்கள்[தொகு]

116

படைவ லங்கொடுப சுந்தலையி டங்கொ டணைவார்
இடைமொ ழிந்திடைநு டங்கவரு யோகி னிகளே. 20

பெருந்தலை கண்டு பேய் உறங்காமை[தொகு]

117

வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறுந் திசைதோறும் விழித்து நின்று
தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய். 21

காலன் இடும் தூண்டில்[தொகு]

118

அரிந்ததலை யுடனமர்ந்தே ஆடுகழை அலைகுருதிப் புனலின் மூழ்கி
இருந்தவுடல் கொளக்கால னிடுகின்ற நெடுந்தூண்டி லென்னத் தோன்றும். 22

கொள்ளிவாய்ப் பேயின் தன்மை[தொகு]

119

கொல்வா யோரி முழவாகக் கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு
நல்வாய்ச் செய்ய தசைதேடி நரிவாய்த் தசையைப் பறிக்குமால். 23

கோயிலைச் சுற்றியுள்ள சுடலை[தொகு]

120

நிணமுந் தசையும் பருந்திசிப்ப நெருப்பும் பருத்தி யும்பொன்று
பிணமும் பேயுஞ் சுடுகாடும் பிணங்கு நரியு முடைத்தரோ. 24