கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/பாவை விளக்கு

விக்கிமூலம் இலிருந்து
9. பாவை விளக்கு
—அகிலன்—

கனவு காணும் எழுத்தாளன் தணிகாசலம். படிப்புக்காகத் தன் தொலைதூர உறவினர்களின் வீட்டில் தங்கிப் படிக்கிறான். அங்கே ஒரு விதவை. அவள் பெயர் தேவகி. ‘அக்கா’என்று பாசம் காட்டுகிறான் தணிகாசலம். ஆனால், தேவகியோ, “அக்கா என்று அழைக்காதே” என்று துடிக்கிறாள்.

‘என்னைப் புரிந்து கொள்!’ என்று புரியவைக்க முயலுகிறாள் தேவகி. அவனது தூய்மை அவளைக் கூச வைக்கிறது. கடைசியில், தமிழ்ப் பெண்ணின் பண்பாடு உடைப்பெடுத்து அவளைத் தூய்மையாக்கி விடுகிறது.

படிப்பு முடிந்ததும் உலகத்தைக் காணும் எழுத்தாளன் மனம் குமுறுகிறது. பாவத்தை —ஏழ்மையை-அக்கிரமங்களை நீக்கிவிடத் துடிக்கிறது உள்ளம். சிற்றூரிலே கணக்கு வேலை. எழுத்துக்கள் பத்திரிக்கைகளைத் தேடி ஓடுகின்றன. 

ஆடலழகி செங்கமலத்தின் கடைக்கண்ணில் எழுத்தாளன் மனம் சிக்குண்டு சொக்கித் துடிக்கிறது. அவளே ஒடி வருகிறாள்! எழுத்தாளன் தணிகாசலம் தன்னை மறக்கிறான்! ஆனால் ஊரும் உலகமும் செங்கமலத்தின் தாயும் மறந்துவிடவில்லை. செங்கமலம் ஜமீன்தார் ஒருவருக்கு மாலையிடுகிறாள் எழுத்தாளன் மனம் உடைந்து கசிகிறது. ஆம்; அவன் இன்னும் குழந்தைதான்!

தன் சிற்றுருக்கு வருகிறான் தணிகாசலம், வேலை போன பின்பு. அத்தை மகள் கெளரி ‘அத்தான்’ என்கிறாள்! அவளுடைய காதலின் வேகம் அவனைத் திகைப்புறச் செய்கிறது. தேவகி அக்காளின் உதவியுடன், மேளம் முழங்க எழுத்தாளன் தாலியைக் கட்டுகிறான்.

பல சிக்கல்களில் அல்லாடுகிறான் எழுத்தாளன்! உலகம் தன் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறது! குற்றாலம் போகிறான். எழுத்தறிஞர் ஒருவரைக் காண! அங்கு ரசிகை ஒருத்தியைச் சந்திக்கிறான். அவள் கனவின் கனவு! எழிலின் எழில்! அவள்தான் நாயகி-உமா!

இப்பொழுது கற்பனையாளன் தணிகாசலத்தின் ஈடுபாடு உமாவிடம் திரும்புகிறது. உமா அவனில் சுழன்றாள். ‘மாமா’ என்று அழைத்தாள். அந்த அழைப்பில் அவள் உயிர் சிலு சிலுத்தது.

ஆண்டவன் விளையாடுகிறான். உமாவின் குடும்பத்தார் தணிகாசலத்தைத் ‘துரோகி’ என்கின்றனர்! தணிகாசலம் தன் மனைவியுடனும் குழந்தையோடும் பிரிகிறான். அதற்கு முன் உமா சுருண்டு விழுகிறாள். —உமாவுக்குத் திருமணம் ஏற்பாடு ஆகின்றது; ஆனால் உமா எங்கோ மறைந்து விடுகிறாள்.

உமாவைத் தேடிக்கண்டுபிடிக்க ஒடுகிறான் தணிகாசலம். தன் மகளைப் பறிகொடுத்த நேரத்தில்தான் உமாவைத் தேடி எங்கெல்லாமோ அவன் ஓடினான். ஓடியவன் கண்டது உமாவையல்ல! பம்பாயிலே கணிகையாக உலவிய செங்கமலத்தைக் காண்கிறான்! ஊழிக் கூத்து மீண்டும் நடக்கிறது. அத்துடன் முடிந்து விடுகிறது செங்கமலத்தின் கூத்தும்!

தேவகி வீட்டுக்கு ஓடி வருகிறான் தணிகாசலம். சாகக் கிடந்த உமாவைக் காண்கிறான். கண்ணீர் வடிக்கிறான். உமா தன் காவிய நாயகனைக் குழந்தை தணிகாசலத்துக்குக் காட்டுகிறாள். தணிகாசலத்தின் மகள் கல்யாணியின் மீது வைத்திருந்த பாசம் உமாவை உருக்குகிறது. தணிகாசலத்தின் மீது உமா கொண்டிருந்த பாசம் உமாவை உருக்குகிறது. தணிகாசலத்தின் மீது உமா கொண்டிருந்த தூய்மை மண்டிய-தெய்வீகக் காதல் அவளைமட்டு மன்று; அவனையும் திணறச் செய்கிறது!

உமா எழுதிய காவியம் தாஜ்மகால் அவனைப் பார்த்துச் சிரிக்கிறது-உமா தணிகாசலத்தை மணக்கிறாள்! ஆம்; கெளரி தன் கணவனுக்கு உமாவை மனம் செய்து வைக்கிறாள். இரவு வந்தது. பாவை விளக்கு சுடர் விட்டது. அணையப் போகும் உமா சுடர் விட்டாள்! அவன் மார்பில் துயின்ற உமா தூய சுடராகப் பொலிவுற்றாள்!!

கண் மயங்கிய நேரம். உமாவின் உயிரும் பாவை விளக்கும் சேர்ந்து அணைந்தன. தாஜ்மகால் சிதறியது!தணிகாசலம் கூவினான், அலறினான். “எல்லாம் ஆன ஒருவனே! எங்களால் தாங்க முடியாத துயரத்தை எங்களுக்குத் தராதே!” என்று கூவினான். இப்படிக் கூவத்தான் அவனால் முடிந்தது!...


என்னுள் அகிலன்

பாவை விளக்கை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். எனக்குத் தணிகாசலத்தின் உருவம் மட்டும் தட்டுப்பட மறுக்கிறது. ஆனால், அவனுடைய இதயக் குரலை மாத்திரம் என்னால் வாங்கிக் கொள்ள முடிந்தது.

‘எங்கும் நிறைந்த ஆண்டவனே! எல்லாம் ஆன. ஒருவனே! எங்களால் எந்தச் சுமையைத் தாங்க முடியாதோ, அந்தச் சுமையை எங்களுக்குத் தராதே! நாங்கள் வலுவிழந்த மனிதர்கள்!’ தணிகாசலத்தை நான் திரும்பவும் ஏறிட்டு நோக்குகிறேன்.தணிகாசலத்தில் உமாவையே காண்கிறேன். அகலையும் சுடரையும் சேர்த்துத் தாங்கி நிற்கின்றாள் உமா ‘உருவமில்லாப் பூங்குயில்’ அல்லவா அவள்...? 

திரு அகிலன் அவர்கள் என்னுள்-அதாவது, என் இலக்கிய மனத்துள் சன்னக் குரலெடுத்துக் கூறுகிறார்; அந்தக் குரலை என்னுடைய மனக்கண் படிக்கிறது. “உமா வாழப் பிறந்தவள்!”

நான் உமாவை மீண்டும் எடை போட முயற்சி செய்கிறேன். பாவை விளக்கின் உயிர் ஒளி இழை இழையாகப் பரவத் தொடங்குகிறது. என்ன நானே எண்ணி நிறுவை செய்து கொள்ளவும் அந்த ஒளி கைகொடுக்கிறது.

பொதுக் குரல்கள் சில என் காதுகளில் வந்து விழுகின்றன: “பாவை விளக்கு மிக அற்புதம்! ... படமாகிறது!... அகிலனை சிரஞ்சீவியாக்குவது இது ஒன்றுதான்! உமாவை என்னால் மறக்கவே முடியவில்லை...!”

பேராசிரியர் திரு அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் ‘திரு அகிலன் இத்தகைய அழியாப் படைப்புகள் பலவற்றைப் படைத்து உலவவிட இறைவன் அருள் புரிவானாக!’ என்று வாழ்துகிறார்.

இலக்கிய ஆடுகளம் சிந்திக்கத் தலைப்படுகிறது;


இதோ, கண்ணபுரம்!

கண்ணபுரத்தை உங்களுக்குத் தெரியுமா?...என்ன, அப்படி விழித்துப் பார்க்கிறீர்களே?...ஐயா, தயவு செய்து உங்கள் கையிலுள்ள நாட்டுப் படத்தைத் தார வைத்து விடுங்கள். ஏனென்றால், உங்கள் ஊனக் கண்களுக்கு அந்த ஊர் புலப்படாது. எனக்கு மட்டும் அவ்வூர் காட்சியளித்து விட்டதா என்று சிந்திக்கின்றீர்களா? ஆம்; தெரிந்தது, புதுக்கோட்டை என்னும் ‘தனியரசு’ தெரிந்தது; அந்தப் புதுக்கோட்டையில்தான் இப் பொழுது கண்ணபுரம் நிழலாடுகிறது. வேடிக்கையாகத் தோன்றுகிறதல்லவா?

வேடிக்கைதான்!

மேலைநாட்டு இலக்கிய மேதை ஸாமர்ஸ்ட் மாம் (Somerset Maugham) ஓர் இலக்கியத் திறனாய்வு நூலை வெளியிட்டிருக்கிறார். உலகத்துச் சிறந்த நவீனங்களை ஓரிடத்தில் சந்திக்க வைத்தார்; பிறகு தம்முடைய இலக்கிய மனம் தீர்ப்பளித்த பத்தே பத்து நவீனங்களை மட்டும் பொறுக்கியெடுத்து, விரிவான ஆராய்ச்சி நடத்துகிறார். அத்தகைய புதுமை நோக்கைத்தான் நாம் மேற்கண்ட நூலில் காண்கிறோம். கதை நிகழுகின்ற இடம், காலம், சூழல் ஆகிய அமைப்பு முறைகளைப் பற்றி (Novel Setting) அழுந்தக் கூறுகிறார். பெருங்கதைக்குப் பொறுக்கியெடுக்கும் ஊர், நகரங்களை முதன் முதலில் நேரில் போய்ப் பார்த்து அப்படி அப்படியே குறிப்பெடுத்துக் கொள்வாராம் அவர். இதுவே மேலை நாடுகளின் இலக்கிய மேதைகளிடையே பரவிவரும் பரம்பரைப் பழக்கமாகும். ஏன், நம்முடைய தவச் செல்வர் திரு கல்கி அவர்கள் சரித்திரப் பிரசித்திபெற்ற எல்லாப் பகுதிகளுக்கும் நேரில் சென்று, அதன்பின் சரித்திரத்தைப் பேச வைக்கவில்லையா? இதே முறை, சமுதாய அடிப்படை கொண்ட புதினங்களுக்கும் விலக்கல்லவே!

‘ஆக, ‘பாவை விளக்கு’ சம்பந்தப்பட்ட மட்டில், கண்ணபுரம் என்பது சமஸ்தானம்; அதாவது, தனியரசு. அது எப்படிக் கற்பனைப் பெயரோ அதுபோலவேதான், பொன் வயலும், புதுப்பட்டியும் கற்பனையில் வாழும் இடங்கள் ஆகும். ஆனால், மையத்தில் குறுக்கிடும். 'திருச்சிச் சந்திப்பு' மட்டும் உண்மைப் பெயர் மறந்துவிடப் போகிறீர்கள்!

இந்தக் கண்ணபுரத்தில் தணிகாசலம் வாழ்கிறான். நீங்கள்தான் ஆசிரியருடன் கண்ணபுரத்துக்குச் சென்று திரும்பியவர்கள் ஆயிற்றே!


விந்தை மனிதன்!

ரண்டாவது உலக மகா யுத்தத்தை தணிகாசலம் ஒருபோதும் மறக்கமாட்டான். ஏனென்றால், அன்றையச் சூழலில் அவன்தான் அவனுக்கு நாயகன்; இந்நாவலின் ஆசிரியருக்குக் கதாநாயகன். கெளரிக்கும் உமாவிக்கும் கணவன். இங்கேயும் ஒரு விந்தையைப் பார்க்கிறோம். வேடிக்கையான மனிதன் இந்தத் தணிகாசலம். இல்லையென்றால், தேவகியும் செங்கமலமும் இந்த ‘அறியாப் பிள்ளை’யை இப்படி ஆட்டிப் படைத்திருப்பார்களா? ஆன்மீக வளர்ச்சிக்குப் பரிபக்குவமடைய 'வெறும் ஏடுகளை' நம்பின இவனது மனித மனத்தில் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் போராட்டங்கள் மூண்டிருக்க முடியுமா? நிதரிசனமான வாழ்வுக்கும் கனவு நிலை கொண்ட தர்க்கத் துக்கும் வாதப் பிரதிவாதங்கள் தாம் முளைத்திருக்குமா?

சரி; யார் இந்தத் தேவகி போகட்டும்; செங்கமலம் யார்?


பேனா!

இன்றைக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவரின் நிழற்படத்தை வார ஏடொன்றில் பார்த்தேன். அன்றொரு நாள் எனக்கு ஏற்பட்ட ஒரு ‘விபத்’தும் கூடவே நினைவைச் சொடுக்கியது. புகைப்படம் எடுக்கச் சென்றேன். என்னை எழுத்தாளராகக் கண்டு பழகியவர் படம் பிடிப்பவர். ஆகவே, என் கையில் பேனா ஒன்றைக் கொடுத்தார். மேஜைக்கு முன்னே தலையணப் புத்தகங்களையும் விசிறிப் போட்டார். என் ‘விசிறி’ அவர், மனத்தில் காற்றோட்டம் இருந்தது. எடுக்கப்பட்ட படத்தில் ‘என்னை’விட, என் கையில் இருந்த பேனாவும் எதிரிலிருந்த ஊர் பேர் தெரியாத புத்தகங்களுமே துலாம்பரமாக விளங்கின. போதுமே! ஓர் எழுத்தாளனுக்கு இவைதாமே ‘வியாபாரக் குறியீடு’கள்?

இன்று நான் தணிகாசலத்தைச் சந்திக்கிறேன்; முதற் சந்திப்பு என்று சொல்ல முடியாது. ஆனால், திரு அகிலன் சந்தித்ததற்குப் பின்னர் எனக்கு அறிமுகமான பெயர் தான் தணிகாசலம் தொடக்கத்திலும் ஒரு பேனா; அது அவனுடைய சொந்தப் பேனா. முடிவிலும் ஒரு பேனா. இது உமா கொடுத்த அன்புப் பரிசு விலை மதிப்பில்லாதது!

ஓர் ஐயம்: நாவலாசிரியர் காணத் துடித்த, காண முயன்ற கண்ட அந்தத் தணிகாசலத்தைத் தான் நான் கண்டிருக்கிறேனா?

மனிதமனம் ஒரு ரசாயனக் கூடம். ஏனென்றால், உள்ளும் புறமும் மனத்தின் இரு துருவமாக இலங்குவது உண்டு; இரு மனம் கலந்த ஒரு மனமாகக் காட்சியளிப்பதும் இயல்பு. இந்த ஒரு மனத்தை பெளதிக மாற்றம் என்று குறிப்பிடலாம். விஞ்ஞானத்தில் இந்தத் தலைவலி, வரிகளை உங்களில் பலர் படித்திருப்பீர்கள். இரண்டு ரசாயனப் பொருள்கள் சேரும்போது புதிய பொருள் ஒன்று உண்டாகிறது. தற்காலிகமான இம் மாறுதலைத்தான் பெளதிக மாற்றம் (Physical change) என்கிறார்கள். இப்படிப்பட்ட பெளதிக மாற்றம் நம் தணிகாசலத்துக்கு ஒரு முறையல்ல, ஒன்பதாயிரம் முறைகள் ஏற்படுகிறது. ஆனால், பெண் ஒருத்தி தணிகாசலம் முகம் நோக்கி முகம் அமைத்துச் சொல்கிறாள்: “...அறியப் பிள்ளை என்ற ஒருவனும் அறிந்த மனிதன் என்ற மற்றொருவனும் ஆக இரண்டு பேர் சேர்ந்தவன் நீ!”

யார் இப்படிச் சொன்னார்கள்? சொன்ன உருவம் உங்களுக்குப் பழக்கப்பட்டதுதான். ஆனால் அந்த ‘உள்ளம்’ அன்று காட்சி கொடுத்ததைவிட இன்று அதிகமான எழிலுடன் எனக்குக் காட்சி தருகின்றது. அந்த உள்ளமும் உருவமும் யாருக்குச் சொந்தம்? அது: தேவகி. அவள் தேவகி. அவை: தேவகி!


புதிர் எனும் தேவகி

தேவகி...!’

தமிழ்ச் சாதிக்குக் கறையாக அமையாமல், கரையாக அமைந்து, பாலம் கட்டி நிற்கும் பெண்கள் பலர் வரலாற்றில் வாழ்கிறார்கள்; ஒத்த காலத்தில் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். இத்தகைய பட்டியலுக்குப் பயன் தர முடியாவிட்டாலும், பலம் தரக்கூடிய பெண் தேவகி கற்பனைப் பெண், அதாவது, கற்பனையில் வாழ்பவள்: இதயத்தால் வாழத் தெரிந்தவள். புருவமையம், நெற்றிமேடு, நேர்வகிடு ஆகிய இம்மூன்றும் தணிகாசலத்திற்கு மூன்று புள்ளிகள் உருவாக்கிக் கொடுத்த வட்டம் தேவகிக்கு மட்டுமல்ல, தணிகாசலத்திற்கும் சொந்தம். இந்த உரிமை யின் சரிபாதியை ‘அறியாப் பிள்ளை’ தணிகாசலத்திடம் சேர்ப்பது நலம் பயக்கும். எஞ்சும் பகுதியில் உறவு கொள்ள உரிமை பூண்டவள் தேவகி. கொண்டவன் அவளது திலகத்தைப் பறித்துக்கொண்டான். பறி போன திலகம் விதியைக் கண்டு சிரிக்கிறது; விதியோ தணிகாசலத்தைப் பார்த்துக் கள்ள நகை புரிகிறது; தணிகாசலமோ விதியை நம்பாமல், தேவகியை நம்பி, அவளுடன் மனம் விட்டுப் பேசவேண்டிய கட்டத்திற்கு உருவாக்கப் படுகிறான்; ஆனால் உண்மையாக மனம்விட்டுப் பேசியவள் தேவகி!

நடுச் சாமத்தில் தேவகி வருகிறாள்; தணிகாசலத்திடம் வருகிறாள். ‘உலகத்தின் சோகம் முழுவதும் அந்தக் கண்களில் நன்றாய்த் திரண்டு முத்து முத்தாகப் புறப்படுகிறது.' திடீரென்று கீழே சரிந்து விழுந்து தணிகாசலத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு தேம்புகிறாள். அவனது கால்களைத் தொட்டுக் கை தொழ அவளுக்குச் சொந்தம் வேண்டுமாம்...!

“நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள நினைப்பது நியாயந்தானா?” என்கிறாள் தேவகி.

“நியாயந்தான்!...” என்று சொல்கிறான் தணிகாலம். அதைத் தொடர்ந்து ஒரு ‘ஆனால்’ என்னும் முட்டுக் கட்டை புறப்படுகிறது. அதைக் குறுக்குக் கோடாக வைத்து எல்லை சொல்வதற்கு அவள் போதுமான காலவேளை கொடுத்தாள். எதற்கும் ‘வேளை’ வரவேண்டும், பாருங்கள். தணிகாசலத்துக்கோ, எட்டி நின்று பார்க்கும் வேளையில் மட்டுமேதான் தேவகி. அவன் மனத்தோடு ஒட்டுகிறாள்: ‘காத’லும் உறவு கொள்கிறது. பக்கத்தில் நின்று பார்க்கும்போது, அவளுடைய ‘அழகு’ அவனுக்குப் புலகை மறுக்கிறது. அவளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகின்றதாம் அவனுக்கு!

‘எனக்கு உன்னைத்தவிர வேறு வழியில்லை!’ என்று எல்லாவற்றையும் துறந்து பேசினாள் ‘எல்லாம் முடிந்து பட்ட’ தேவகி.

தணிகாசலத்தின் கண்ணீரைத் துடைக்கும் பேறு பெற்றாள் தேவகி. அவனுடைய திறந்த மனத்தினின்றும் அவனுக்குரிய கள்ளமிகு சபலமனம் வெளியேறியது! அவள் என் ‘பார்வை’க்குத் தமிழ்ப் பெண்; தணிகாசலத்திற்கு தேவகி அக்காள்.


நாயக-நாயகி

பாவை விளக்கில் நீங்கள் யாரைக் கதாநாயகியாக மதிக்கிறீர்கள்?”

எண்ணிப் பார்க்கிறேன். தாமஸ் ஹார்டி படைத்த பாத்திரங்களிலே என்னைக் கவர்ந்த பெண் மேரி. காதலில் தோற்றவள். ஆனால் அவள் மடிந்த கல்லறையின் உள்ளே அவளுடைய காதல் தூங்கிக் கொண்டிருக்கிறது. கல்லூரி வாழ்வு கழிந்தும் கூட அவளைப்பற்றிய நினைவை என்னால் துறக்கக் கூடவில்லை. இந்நினைவு கிளர்ந்தெழும் நிலையில், எனக்கு வேறொரு மதிப்பீடும் நெஞ்சில் இழை யோடுகிறது. ‘சிநேகிதி’ என்பது பாலாம்; அந்தப் பாலில் தண்ணீரைக் கொட்டிக் கலந்ததாம் ‘பாவை விளக்கு.’ வேறு யார் இப்படி எழுதப் போகிறார்கள்? ‘அவர்’தான் எழுதியிருக்கிறார்!

கதாநாயகிக் குழப்பத்துக்கு விடிவு காண வேண்டும். தணிகாசலத்தைக் காட்டிலும், ஏன், திரு அகிலனைப் பார்க்கிலும், உங்கள் எல்லோரையும் விட நான்தான் மிகுதியாகக் குழப்பமடைகிறேன். “சொல்லுங்கள், மாமா! நானும் ஆண்டாளும் ஒன்றுதானே?” என்ற உமாவின் வினா, மழையையும் இடியையும் எழுப்புகிறது. தணிகாசலத்தின் எழுத்துத் துறையில் உமா கொண்டு வந்த சீதனமான பாவை விளக்கு சுடர் விடுகிறது; கண்ணீர்மடை திறக்கிறது. “என் உயிர் வெறுங் காற்றுடன் கலக்கக் கூடாது. அது உங்கள் உயிர்க் காற்றுடன் கலக்க வேண்டும்!” என்ற உமாவின் வேண்டுகோள் எதிரொலிக்கக் கேட்கிறேன். அவனுக்கு ஒளி கொடுத்தவள் இருளில் தடுமாறுகிறாளே?...அவனுடைய மனப்பசிக்கு அவளது உயிர்ப்பசி உள்ளடங்க வேண்டுமென்பது என்ன நியதி?

ஆமாம்; கதாநாயகி யார்?

உமாவா?

பிறந்த கண்ணிர் களி துலங்கச் சிரிக்கிறது; காண்கிறேன். அந்தக் கண்ணீர்ச் சிரிப்பில் ஒரு முகம் தெரிகிறது. அந்த முகத்திற்குத் திலகம் தந்தவன் சென்னைக் கடலில் ஐக்கியமாகி விட்டானாம்! மீண்டும் பார்க்கிறேன். பார்த்த முகத்தில் பழைய ‘வெறுமை’யே விளையாடுகிறது. இப்போது நாவலாசிரியர் திரு அகிலனை என்னால் போற்ற முடிகிறதா?... யோசிப்போம்!

தேவகிதான் நான் தேர்ந்தெடுக்கும் கதாநாயகி!

நான் தணிகாசலத்தைக் கூர்த்தமதி பதித்து நோக்குகின்றேன். சந்தனமென்று நீங்கள் நினைத்த சிறு துரும்பு தன் ஆத்மாவையும் மரணத்தையும் இந்த வரிகளில் வடித்துவிட்டது. இனிமேல் நான் மணமற்ற மரத்துண்டு. என்னுடைய தோல்விக்கு மட்டும் நீங்கள் காரணமென்று நினைக்காதீர்கள். என் லட்சிய சித்தியான இந்தக் காதல் கவிதைகளின் தலைவர் நீங்கள் தாமே?...’ அவனுடைய விழி வெள்ளத்தின் கரை உடைபடுகிறது. ஏன்? உமாவின் தோல்விக்கு அவன்தான் மெய்யாகவே காரண கர்த்தாவா?

‘எனதுயிர் மன்னவனே!’ என்று உமா தன் கவிதைகளில் கூவி யழைத்தது அவனைத்தானா? ‘என்னிடம் நேரில் சொன்னையே, அது போல் நீ வேறு யாரையும் மனத்தால் கூட நினைக்காமல் இருந்தால் போதும்’ என்று செங்கமலத்துக்கு அனுப்பிய கடிதம் அவன் நினைவில் தோன்றிவிட்டதா, என்ன?

பெருமூச்சுத் தப்பிப் பிழைக்கிறது. என்னுடைய கைப் பேனா மைவழி ஓடுகிறது:

“தணிகாசலம் முழுமையடையாத ஓர் அரைகுறைப் பாத்திரம்!”


அடுக்கு மல்லிகை

உமா தன்னுள் எண்ணிப் பார்க்கின்றாள்:

‘அவர் என்னத் தவறன கண்கொண்டு நோக்கவில்லை. அவர் என்னை இழிந்த குணமுள்ளவளாக மதிக்கவில்லை. கண்ணியக் குறைவாக அவர் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. அப்படி ஏதும் நான் அவரிடம் குறை கண்டிருந்தால், என்றைக்கோ அவரை விட்டு விலகியிருப்பேன். பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இவர் உயர்ந்து கொண்டே போகிறாரே? இவரிடம் என்ன தனித்தன்மை இருக்கிறது?’ 

மனத்தை ஒரு சோதனைச் சாலைக்கு உவமை காட்டிச் சொல்வது எனக்கு நிரம்பப்பிடிக்கும். ஆனால் இங்கே உலகத்தையே சோதனைக் கூடமாக்கி, மனத்தைச் சோதனைப் பொருளாக்கி விட்டாள் உமா. வாழ்க்கையை கேலியாக - வம்பாக - பரிகாசமாக - வீம்பாக ஆக்கிக் கொண்ட அவள் ‘அவர், அவர்’ என்கிறாளே, அந்த அவர் யாரென்றுதான் உங்களுக்குப் புரிந்திருக்குமே?

அவர்: ஸ்ரீமான் தணிகாசலம்.

அகம், புறம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் சூழ்நிலையால் பாதிக்கப்படும் தன்மை வாய்ந்தவன் தணிகாசலம். ஆகவே, அவன் காணும் கனவுகளில், எண்ணும் கற்பனைகளில், சிந்திக்கின்ற எண்ணங்களில், எதிர்பார்க்கின்ற லட்சியங்களில், உருவாக்கிக் கொள்கிற ஆசாபாசங்களில், அழித்துக் கொள்கின்ற நப்பாசைகளில் அவன் அவனாகவே காட்சியளிக்கிறான். அவன் மனிதன். கடவுளைப் படைக்கும் வல்லமை பெற்ற மனிதன். ஆனால் கடவுளால் படைக்கப்படும் துர்ப்பாக்கியம் பெற்றவன். ‘இவரிடம் என்ன தனித்தன்மை இருக்கிறது?’ என்று பூப்போன்ற புனிதம் கொண்ட, பூப்போன்ற மென்மை வாய்ந்த ‘அடுக்கு மல்லிகை’யான உமாவின் பெண் இதயத்தை ஆராய்ச்சி செய்ய வைக்கத் தெரிந்தவன். ஆனால் அவன் அவளைப் புரிந்துகொண்டானா? இல்லை! தன்னைப் பற்றித் தான் அவன் தெரிந்துகொண்டானா? அதுவும் இல்லை! ஒரு வேளை, இந்த ஒரு விந்தைப்பண்புதான் அவனுடைய தனித் தன்மையோ? பட்டும் படாத இத்தகையதொரு ‘கோழைத்தனம்’ அவனது வெற்றியா? அந்த வெற்றி தான் உமாவின் தோல்வியாக அமைந்ததா? இந்த வெற்றிதோல்விகளுக்கு யார் பொறுப்பாளி உமாவா? தணிகாசலமா? ஆண்டவனா? யாரும் இல்லை; யாரும் காரணமாக இருக்க முடியாது. இருக்கவும் தேவையில்லை. ஆனால் ஒரே ஒருவர் மீது மட்டும்தான் நான் ‘குற்றப்பத்திரிகை’ படிக்கிறேன். அந்த ஒருவர்: திரு ‘அகிலன்!’


ஆண்டாள்தான் உமா!

ஆண்டாள் பாத்திரம் என்றால், எனக்கு என்றுமே ஓர் ஈடுபாடு. அது என் குறையென்று மதித்து நிர்ணயிக்கும் ‘பரிபக்குவம்’ உங்களுக்கு வளர்ந்திருந்தால், அதுவே என் வெற்றியெனக் கொள்வேன். என்னுள் இருக்கக்கூடிய குறையையே நிறையாகக் கண்டு அதையே வெற்றியாகக் கைக்கொண்டு உலவுகின்ற என்னைப் போலவேதான் ஆண்டாளும் இருந்தாள்; மண்ணில் இருந்துகொண்டே விண்ணுக்குத் தாவிப் பழகினாள். பேதை மனம் தெய்வத்தைக் காதலித்தது. அவளுடைய குறையை அவள் அறிந்திருந்தாள். அந்தக் குறைபாடு தான் கடைசியில் அவளிடம் கண்ணபிரானக் கொணர்ந்தது. இங்கேயும் குறை வெற்றி கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறதே? உங்களால் உணர முடிகிறதா? இல்லையா...?

ஆண்டாள் தெய்வத்தைக் காதலித்தாள். ஆமாம், ‘காதல்’ என்றால் என்ன அர்த்தம்? பலங் கெட்ட மனத்தின் இழிவான உணர்ச்சி என்கிறார்கள். காதல் என்பது தெய்வீகமானது என்று திரையில் 'நல்ல' கதாநாயகர்கள் சொல்லுகிறார்கள். ‘காதலிக்காமல் என்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது!’ என்று உளறிக்கொட்டிய மேலை நாட்டுப் பித்துக்குளியைப் பற்றியும் நீங்கள் அறிவீர்கள். இத்தகைய மாயப் பிரபஞ்ச வாழ்வில்தான், ஆண்டாளால் கண்ணனைக் காதலிக்க முடிந்தது. காதலிக்கத் தெரிந்தது. அவள் பாக்கியவதி. சூடிக் கொடுத்த நாச்சியாரானாள்.

உமா தெய்வப் பெண் அல்லள்; என்றாலும் அவளும் ஆண்டாள் மாதிரி ஒரு தெய்வத்தின் மீது காதல் கொண்டாள். ஆனால் இந்தத் தெய்வம் ஓர் ‘அப்பாவித் தெய்வம்.’ உமாவின் சிறிய தாயாரான சந்திரலேகாவிடம் தணிகாசலம் விழிப்பதைப் பாருங்களேன்!

“உமாவின் பேச்சும் சிரிப்பும் பார்வையும் உங்கள் கற்பனைகளைத் தூண்டவில்லையா? அவளை அடைய வேண்டுமென்று-உங்களுக்கு அவளைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்ட தில்லையா?”

“ஆசையில் பல விதங்களுண்டு. எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களுக்கு நான் அவ்வளாக ஆசைப்படுவதில்லை. எனக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக இருந்தாலும், உமா மிக உயர்ந்த பொருளாக இருந்தாள்.”

உமா சாதாரணப் பெண்தானே என்று வினவுகிறாள் சந்திரலேகா.

“அவள் சந்தன மரமென்பது எனக்குத் தெரியும், தெய்வமென்று என்னை நம்பி, அவளுக்காக என்னைத் தெய்வமாகவே நடிக்கச் செய்துவிட்டாள். எனக்குள்ளே இருந்த சிறுமையும் வெறியும் வெளிப்பட்டிருந்தால், என்றைக்கோ அவள் என்னைக் காறி உமிழ்ந்துவிட்டு ஓடியிருப்பாள்!” என்று பதில் கொடுக்கிறான் தணிகாசலம். இவனை ஓர் ‘அப்பாவித் தெய்வம்’ என்றேனே, சரிதான்; சரிதான்! அவனுக்குள்ளே இருந்த அந்தச் ‘சிறுமை’க்கும் ‘வெறி’க்கும் உதாரணம் வேண்டாமா? எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களில் ஆசை வைக்காத தணிகாசலம், அன்றைய சூழலில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக நிலவிய செங்கமலத்திடம் பழகிய எண்ணத்தை நெஞ்சில் சுமந்துதான் அவன் தனக்குத் தானே பழி சுமத்திக் கொண்டானா? தேவகிக்கும் தணிகாசலத்துக்கும் நடைபெற்று முடிந்து ஓய்ந்த புயலுக்குப் பின், அன்றிரவு மூன்று மணிக்கு தேவகியை நாடிச் செல்லும் அளவுக்கு தன்னுடைய மனம் பலங் கெட்டுப் போனதை ‘வெறி’ என்று குறிப்பிடாமல், வேறு எச் சொல்லால் சுட்டிக் காட்டுவான்?

தணிகாசலம் யார்? சர்வ சாதாரணமான ஒரு மனிதப் பிராணி. பேனா பிடிக்கும் நேரத்தில் மட்டுமே அவன் ஒரு மனிதன். மனிதன் என்றால், மிக மிகச் சாதாரணப் புள்ளி. மனிதனுக்கு இம்மாதிரி குணங்கள் தாம் இருக்க வேண்டுமென்று எல்லைக் கோடு எழுதி வைத்திருக்கின்ற இயற்கையின் நியதிப் போக்குக்கு, யதார்த்தமாக அமையும் மனித வாழ்வுக்கு, உருவான காதல் லீலைகளுக்கு, உருவாக்கிக் கண்ட தாம்பத்தியத்திற்கு அனுசரணையாக, அனுமானமாக, உதாரணப் பிரதிநிதியாக அவன் தன்னை, அமைத்துக் கொண்டான். அவன் அமைந்தான? அவன் அமைந்திருந்தால், அவனுக்கு அபலைப் பெண் கெளரி மாத்திரம் தானே கிட்டியிருக்க வேண்டும் பரபரப்பையூட்டும் அழகு வாய்ந்த தேவகியோ, தியானத்தில் அமரும் கன்னித் தெய்வமெனத் தோன்றிய உமாவோ அவன் வாழ்வில் குறுக்கிட யார் காரணம்? அவன்தான்! இந்த நிலைக்களன் தான் தணிகாசலத்தை அரைகுறைப் படைப்பாகவும் நிறைபெறாத மனிதனாகவும் (undeveloped and unfinished character) ஆக்கித் தொலைத்திருக்கிறது. ‘என் இருதயம் இலக்கியத்துக்கு; என் உடல் தாய்த் திருநாட்டுக்கு!” என்று இந்தக் ‘குயில்’ கூவியது. நடிப்பு...!


வட்டிச் சோறு

இலக்கியத் திறனாய்வுக் கலையில் வல்லமையும் வளப்பமும் கொண்டவர் திரு அ. ச. ஞா. அவர்கள். அவர் தம் முகவுரையில், “தணிகாசலத்தின் மனைவி கெளரி ஒரு தனிச் சிறப்புடன் விளங்குகிறாள். வட்டிச் சோற்றைப் பங்கிட்டாலும், வாழ்க்கையைப் பங்கிட மாட்டாள் பெண் என்பது பழமொழி. எனினும், கெளரி மனம் ஒப்பித் தன் வாழ்க்கையைப் பங்கிட முனைகிறாள்!” என்று எடுத்துரைக்கிறார். பொதுமை நோக்கில் பெண் ஆணுக்கெனத் தமிழ் மண்ணில் பெருமைகள் பல சொல்லப் பட்டிருக்கின்றன. ஆனால், புதுமை நோக்கில் அவற்றை அழித்தெழுத முயற்சிகள் பல நடைபெற்று வருகின்றன. இவ்விரண்டு வரம்புகளுக்கும் ஊடாக நின்று கெளரியைச் சக்தித்து, அறிமுகம் ஆகி, அவளும் அவள் கணவன் தணிகாசலமும் நடத்தி வந்த இல்லறத்தைப் பார்த்துக் கொண்டே வந்த எனக்கு கெளரி புதுமை காட்டித் திகழ்ந்தாளே தவிர, புதுமைப் பெண்ணாக என் முன் தோற்றம் தரவில்லை. உமா கொடுத்த படத்திலிருந்த வள்ளி-தெய்வயானையின் வாழ்வு வல்லவேல் முருகனுக்குப் பங்கிடப்பட்டிருக்கலாம். விந்தை ஏதும் காத்திருப்பதற்கில்லை. ஏனெனில், அவர்கள் மானிடர்களின் நெஞ்சங்களில் மட்டிலுமே வாழ்ந்தவர்கள். தன் வாழ்க்கையைக் கூறுபோட்டுப் பகிர்ந்தளித்தாள் கெளரி. பண்பு, பரிபக்குவம்,துணிச்சல், தியாகம்-இத்தகைய விலையுயர்ந்த குணநலன்களுக்கு உள்ளே கெளரி கூடாரம் அமைத்துக் கொடுக்கப் படுகின்றாள். அவள் கூடாரத்தை விட்டு விலகி வெளியே தலை நீட்டும்போது, அவளிடம் எந்தத் தனித்தன்மையை நான் காண முடிந்தது? நெடுமூச்சுத் தான் வருகிறது. காரணம், கெளரியை இதய பூர்வமாகவோ, விரிந்த அளவிலோ, அன்றி, சாங்கோபாங்கமாகவோ என்னால் படிக்கமுடியவில்லை. ஏன், தணிகாசலமாவது அவளை முழுமையாகப் படித்து வைத்திருக்தானா? என்னால் நம்ப முடியவில்லை.

நம் தணிகாசலம் பெயர் பெற்று விளங்கிய எழுத்தாளனாக இருந்துங்கூட, அவனால் அவனேயே உணரக் கொடுத்து வைக்கவில்லை. கிடைத்த அறிவு நூல்களின் இடைவெளியிலே ‘குடியிருந்த’ அவனுள்ளே நிலவிய ‘இரண்டு மனிதர்கள்’ என்றாவது ஒரு நாள் சந்தித்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? ஊஹூம்!

‘நானும் கண்ணனும் ஒன்றாக முடியுமா?’ என்று திணறியவனுக்கு உமா ‘இரண்டாவது மனைவி’யாகிறாள். பயப்படாதீர்கள். இருதாரச் சட்டம் அப்போது அமலில் இல்லை!

‘நீ என்னைக் காதலிக்கிறாயா?’ என்று தணிகாசலத்கைக் கேள்விக் கேட்கத் தூண்டிய பெருமை கார்த்திகை மைந்தனுக்கே உரிமை. ‘நான் உங்களைக் காதலிக்கிறேன்!’ என்று சொல்லாமல் சொல்லிவந்த மாற்றம் மேதை பிளாட்டோவுக்குத்தான் சொந்தம். ‘நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’ என்று நூதனமான வினாவைச் சொடுக்கிய பெருமை உமாவின் ‘கன்னி மனம்’ அடையத்தக்க பெருமை. “ஏசுநாதரை நினைப்பதற்கு முன்னால் நீ என்ன மறக்கக் கற்றுக்கொள்!” என்று உபதேசம் செய்த ‘குருநாதரே’ பின்னர் ஒரு நாளிலே “நான் உன் னைக் காதலிக்கிறேன்!” என்று மெய்ம்மறந்து பேசும் ‘பவித்திரப் பண்பு’ தணிகாசலத்துக்கே ‘உரிமை பதிவு பெற்றது’ ஆகும்!

உழைப்பை, பாசத்தை, அன்பை எடுத்துக்கொண்ட உமாவை நடைப் பிணமாக்கிய பிறகு தணிகாசலம் தன்னுடைய ‘அனுபவிக்கப்பட்ட வாழ்வை’ப் பகிர்ந்து கொடுக்கிறான். அவனை மூன்று சந்தர்ப்பங்களில் தொட்ட தணிகாசலம், நான்காம் முறையாகவும் தொட்டான்!

“உமா தன்னுடைய மனத்துக்குள் உங்களை வைத்துப் பூசைசெய்து கொண்டிருக்கிறாள். இனிமேல் வேறு ஒருவருடன் எப்படி அவளால் வாழமுடியும்? அவள் தன்னையும் என்னையும் ஒன்றாகவே நினைத்துப் பேசுகிருள்!” என்று ‘ஆறுதல்’ மொழிந்தாள் வாயில்லாப் பூச்சியான கெளரி. இந்த ஆறுதல்தான் தணிகாசலத்துக்குத் தென்பை ஊட்டியிருக்க வேண்டுமோ, என்னவோ..?

“ஏன் மாமா, நான் உங்களுடைய மனைவிதானே?” என்று தணிகாசலத்தின் ‘புதுமனைவி’ உமா கேட்கிறாள். இந்த ஒரு கேள்வி என் கண்களைக் கலங்கச் செய்தது. எனக்குத் தணிகாசலத்தின் பேரில் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. ‘நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’ என்று ‘புறம்’ தோற்றுவித்த பாணியில் உமா எதிர்க் கேள்வி கேட்டதற்கப்பால்தான், அவன் தன் உள்ளத்தை வெளித்திறந்து காட்டுகிறான்! காலங்கடந்த ‘அவதாரம்’ இது. அவனுக்கு ஏற்பட்ட மனமாற்றம் இயற்கையுடன் ஒன்றவில்லை. அதனால்தான். அவனுடன் வாழ விழையாமல் அந்தப் பஞ்சவர்ணக் கிளி பறந்துவிட்டதா? 

உமா!...என் போன்ற வாசகர்களின் மனங்களிலே நீ என்றென்றும் வாழ்வாய், அம்மா...!


பிறந்த விட்டுச் சீதனம்

உமாவின் பிறந்த வீட்டுச் சீதனம் அந்தப் பாவை விளக்கு.

இனம்புரியாத இயற்கையின் உள்ளுணர்வுச் சக்தியுடன், மனோதத்துவப் பின்னணியில் அன்புக் குரலெடுத்துப், பாசத்தையும் பக்தியையும் பண்பையும் குழைத்துச் ‘சாகாத குரல்’ கொடுத்துக் கூவிக் கொண்டிருக்கும் ‘பச்சைக் குழந்தை’யின் இதய ஒலியைத் தான் தணிகாசலம் செவிமடுத்துக் கொண்டிருக்கிறானா?’ “என் குழந்தை கல்யாணி! கல்யாணி என்னுடைய குழந்தை!” என்று அறிவறியாப் பெண்போல உரிமையிழந்திருந்த நேரத்தில் அலறித் துடித்த உமா, இப்போது தன்னுடைய உரிமையை நிலைப்படுத்திக்கொண்டு முடிந்ததும், தன் குழந்தையை உண்மையிலேயே தேடிக்கொண்டு போய் விட்டாளே!

‘என்னை அறவே மறந்துவிட்டு நீங்கள் எழுதுங்கள்!’ என்று மிக எளிதாக உமா தணிகாசலத்திடம் வேண்டினாள். அவனை மறந்துவிடத்தான் அப்படிக் கண்ணீர் வடிக்கிறானா அவன்? ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்!’ என்று ஒருவரி மறுமொழி அளித்திருந்தால் உமா அழிந்து பட்டிருக்கமாட்டாளே என்கின்ற மனச்சான்று அவனை அக்கக்காகப் பிய்த்தெடுத்து குதறிக்கொண்டிருக்கிறதா? அவள் கொடுத்து வைத்தவள்; அவளுடைய லட்சியப் புள்ளியான தணிகாசலத்தின் இதயத்தின் இதயத்தைப்பறித்தெடுத்துக் கொண்டு, தெய்வ மங்கையாகிவிட்டாள்! அவன், சாதாரணமான ஜடம்! பாவம், வெறும் ஐடம்!


பூவை விளக்கு

உயர்திரு அகிலன் அவர்கள் சந்தித்த பின் தணிகாசலத்தை நான் பழக்கப்படுத்திக் கொண்டேன். வழிந்த கண்ணீரை வழித்துவிட உரிமை பூண்ட கெளரி கல்லாய்ச் சமைந்து நின்றாள்; அந்த உரிமையின் மறுபாதியாகி, அவரது இனிய பாதியாகி ‘தற்காலிகப் பதவி’ தாங்கிய உமா பாவை விளக்கானாள். பாவை விளக்கையும் பூவை விளக்கையும் மாறி மாறிப் பார்த்து முடிந்ததும், ஆயிரத்தெட்டாவது தடவையாக தணிகாசலத்தைப் பார்வையிட்டேன். திரு. அகிலன் அவர்களின் பூரணமான ‘கருணை’க்கு இலக்கான கெளரி அவரது பரிபூரணமான அனுதாபத்துக்கு ஆளாகவில்லை. உமாவுக்குப் பின் கெளரியின் தியாகத்தின் விளைவாக, தணிகாசலம்-கெளரியின் தாம்பத்தியப் பிணைப்பில் ‘இறுக்கம்’ காட்ட புதியதொரு ஏடு காத்திருக்கிறதே? கெளரியின் அன்பு மனத்தை இன்னும் தெளிவாக உணர்ந்தறிந்து, அதன் மூலமாகக் கெளரிக்கு தணிகாசலத்தின் நெஞ்சில் நிரந்தரமான இடம் அருள மனமிரங்கியிருக்கலாகாதா? இந்த ஓர் இடைவெளி நிறைவு பெற்றிருந்தால், தணிகாசலத்தின் பாத்திரப் படைப்பு கட்டாயம் முழுமை பெற்றிருக்கும்


ஆசையின் பிழையாம்...!

ஆயிரக் கணக்கான வாசகர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து கதை சொல்லப் பழகியவர் நாவலாசிரியர் அகிலன். வாசகர்களுக்காக அவரால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் உமாவும் செங்கமலமும், அவர் தமக்காகப் படைத்துக் கொண்ட உருவம் தணிகாசலம். எனக்காக உருவான குணச் சித்திரம் தேவகி.

தேவகி தணிகாசலத்திற்கு ஒளி காட்டிய தெய்வமாகவே ஆகிவிட்டாள். மனித மனத்தின் பலங்கெட்ட உணர்ச்சித் தாக்குதல்கள் விளையாட முயற்சி செய்யும் தருணம். இளம் விதவையான தேவகியின் அறியாத் தனம் தணிகாசலத்தின் சலனம் கொண்ட உள்ளத்துடன் மோதுகிறது. உடலுறவு எட்டாத நிலையில் விதவைக் கோலம் ஏந்தும் விதி வாய்த்த தேவகிக்கு தணிகாசலம் சலனம் விளைவித்தது இயற்கை. ‘நான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள நினைப்பது நியாயந்தானா?’ என்று கேட்கும் தேவகியின் ‘இயற்கையான ஆசை’யை- ‘ஆசையின் பிழை’யைக் கேட்க எனக்குச் சுவையாக இருந்தது: அவனுடைய மனத்தைத் திறந்து பார்த்த தேவகி அங்கு கெளரியைக் கண்டதும், அவனது முழங்காலில் முகத்தைப் புதைத்துக்கொள்ளும் துணிவு பெற்றிருந்ததால் விலகிக்கொள்கிருள். “என்னுடைய குறையையெல்லாம் போக்கிவிட்டாய். என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷமாக நான் என்றைக்குமே இருந்ததில்லை!” என்று உணர்ந்து பேசுகிறாள். அவள் கனவும் கதையும் இத்துடன் முடிவடைகின்றன.

ஆனால், ‘குழந்தைத்தனம்’ கொண்டவன் தணிகாசலம் அடங்கிக் கிடந்த இனக் கவர்ச்சி நினைவுகள் தூண்டிவிடப்பட்டிருந்த நிலையிலே தணிகாசலம் விலங்காக முயன்று, முடியாமல், பிறகு மனிதனாகி விடுகிறான். வெறும் ஏடுகளை நம்பி ‘பகுத்தறிவு வாதத்தை’ கைப்பிடியில் பற்றியிருந்த அவனிடம் தேவகியை ஒப்படைக்க வேண்டுமென்கிறார்கள் பலர். இப்போது வரும் கதைகளில் இது ஒரு நாகரிகம். அகிலன் அன்புப்புரட்சி செய்பவர். தேவகியைக் காப்பாற்றிவிட்டார். அவர் தணிகாசலத்தின் பிற்கால வாழ்வை தீர்க்கதரிசனக் கண் கொண்டு வரையறுத்திருக்க வேண்டும். ‘கடன்’பட்ட தேவகி தன் கடனை தணிகாசலம் உணர வேண்டுமென்று எதிர்பார்த்திருந்தாள். தேவகியை நாவலாசிரியர் வஞ்சித்து விட்டார்!


ஆத்மாவுக்காக...!

தாமஸ் ஹார்டியின் ‘The woodlanders’ என்னும் நவீனத்தில் வரும் மேரியில் உமாவை என்ணால் தரிசிக்க முடிகிறது. தோன்றி மறையும் மின்னல் அவள். ஆத்மாவுக்காகவே ஆத்மா கொள்கிற ஆத்மீகக்காதலை (platonic love) படிப்படியாக வருணித்து, மன ஆழத்தின் விந்தை உணர்ச்சிகளையும் மனிதத் தன்மையின் இயந்திர கதியின் விளக்கத்தையும் ஒரு நிலைப்படுத்தி, நவீனத்தின் பிறப்புக்குக் (purpose of the novel) உமாவையே ஓர் உதாரணமாக்கி, அவளைப் பள்ளியறைப் பதுமையாக்குவதற்குச் ‘சட்டம்’இன்றி, சரியான நேரத்தில் (correct juncture) நாசூக்காகச் சாகடித்து அவளை அற்புதப் படைப்பாக்கி விட்டிருக்கிறார் திரு அகிலன்.

அந்தப்புர அந்தரங்கங்கள் பண்டை வரலாறுகளுக்கு மட்டுமே உரியவை என்று நினைத்திருந்தேன்.மேற்குறிப்பிட்ட உள் வாழ்வின் வெளிவிளையாட்டுக்கள் தணிகாசலத்திடமும் இருக்கக் கண்டபோது, வருத்தம் தான் எஞ்சியது. அதுவே அவனது பலத்தைப் போக்கடித்து விட்டது. வெறும் புத்தகப் பூச்சியாக மட்டுமே இயங்க முடிந்த தணிகாசலத்தை எழுத்தாளனக்கியிருக்கிறாள் ஆடலழகி செங்கமலம். அவள் அவனுக்கு ஏமாற்றத்தை மட்டுமன்று, ஒரு கதையையும் அளித்திருக்கிறாள். இம்முடிவு நம்முடைய நடைமுறை வாழ்வுக்கு ஒட்டி வருமானல், நூறாயிரம் தணிகாசலங்களை எழுத்தாளர்களாகக் கண்டிருக்குமே இந்தத் தமிழ் கூறும் கல்லுலகம்? புதுப்பட்டிச் சலனம் சின்னத் தனமான அற்ப நிலை கொண்ட காதல் லீலைகள் (silly romances) அல்லவா? நல்ல வேளை, அந்நாளில் ‘மஞ்சள் பத்திரிகை’ ஏதும் பிறக்கவில்லை.

தன் தலையெழுத்தை நிர்ணயிக்கத் தெரிந்து கொண்டிராத ‘இரண்டாவது பிரம்மா’ இவன். ஒருமுறை சொல்லும் செயலும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்கிறான். ஆனால், அவனிடமோ ‘வேறு மனிதர்களை’யே சந்திக்க நேர்கிறது. ‘தோல்வியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்!’ என்றான். ஆனால் அவனை கொண்ட காதலில், பிழைத்த பிழைப்பில் தோல்வி யடைந்தான். ‘தலைவிதியாவது, மண்ணுங்கட்டியாவது’ என்று பிதற்றுகிறான். கடைசியில் அவன் நம்பிய அதே தலைவிதியினால் அவனுடைய உமா மண்ணுங்கட்டியாகவே ஆகிவிட்டாள்!

உமாவுக்குத் தணிகாசலம் எழுத்தாளனாக் காட்சி கொடுத்தபடியினால்தான் அவன் அவளது தெய்வமாகக் கோயில் கொள்ள முடிந்தது. ஆனால் அதே எழுத்தாளனைச் செங்கமலத்தின் காலடியில் கிடக்கக்கண்டபோதும், கடைசியில், பம்பாயில் செங்கமலத்தின் இல்லத்தை அடைந்து, அவளை ஆடவைக்க வேண்டுமென்ற ‘வெறி யுணர்வு’ கிளர்ந்தெழ, அவளுடைய கரத்தைப் பற்றித் ‘தொட்டு’ இழுக்கப் போனபோதும் என் மனம் எழுப்பிய ஒரே கேள்வி இது: ‘தணிகாசலம் ஏன் எழுத்தாளன் ஆனான்?’


க. கா. சு - கல்கண்டு

ஓவியனுக்கும், நாவலாசிரியனுக்கும் ஓர் உடன்பாடு உண்டு. திரு அகிலன் அவர்களிடம் ஓவியனுக்கு இருக்க வேண்டிய ஆழ்ந்த புறநோக்கும், நாவலாசிரியனிடம் நாம் எதிர்பார்க்கும் பண்பட்ட இலக்கிய மனமும் இருக்கின்றன. அதனால்தான் ‘பாவை விளக்கு’ நல்லதொரு குணச்சித்திரமாக (nove of character) உருவாயிருக்கிறது.

எதிர்பாராத நிகழ்ச்சிகளை வாழ்க்கைப் பாதையின் எதிர்பார்த்த விபத்துகள் என்று சொல்ல வேண்டும். தேவகியும் கெளரியும் ‘எதிர்பார்த்த விபத்து’கள் என்பது என் கருத்து. செங்கமலமும் உமாவும் எதிர்பாராத சம்பவங்கள். காதலை முக்கோண வடிவில் வரைந்து பழக்கப்பட்டவர்களுக்கு தேவகி, உமா, செங்கமலம், கெளரி ஆகிய நான்கு புள்ளிகளை வைத்து நாற்கோட்டுருவம் சமைத்து அதனுள் தணிகாசலத்தைத் தள்ளி, உணர்ச்சியையும் அறிவையும் ஈந்து, போதாக் குறைக்கு அவனை எழுத்தாளனாகவும் ஆக்கி, ஆசைகளின் விபரிதச் சுழற்சி (fantacy of desires) திண்டாடித் திணற வடித்திருக்கும் முறை ஓர் ஆறுதலாக இருக்கலாம்!

‘சிநேகிதி,’ ‘வாழ்வு எங்கே?’ ஆகியவை திரு அகிலனின் நவினங்கள். ‘சிநேகிதி’ என்ற மூலப் பாலிலிருந்து நீர்க்கலவை செய்யப்பட்ட தண்ணீர் தான் ‘பாவை விளக்கு’ என்பது திரு க. கா. சு.வின் வாதம் ‘வாழ்வு எங்கே?’யும் ‘பாவை விளக்’கும் ஒன்றென ‘பிராய்ட் தேற்றம்’ போன்று ஒருமுறை பதிலிறுத்திருக்கிறார் ‘கல் கண்டு’ ஆசிரியர். இவ்விருவரும் அகிலனைக் குழப்பவில்லை; தங்களைத் தாங்களே தைரியமாகக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், அவர்கள் எழுத்தாளன் என்ற தணிகாசலத்தை அடித்தளமாக்கிக்கொண்டு குழம்பியிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? ‘சிநேகிதி’யில் ஓர் எழுத்தாளனும் ‘வாழ்வு எங்கே?’யில் ஓர் எழுத்து ஆசிரியனும் வருகிறார்கள்...!


அ. ச. ஞா. மறுக்கிறார்!

தணிகாசலத்தைக் கை குலுக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நம்பத்தகாத விதத்தில் அமைந்து இருப்பினும், நம்பத்தக்க சம்பவங்களாகவே (make-believe incident) ஆசிரியர் தமது நுணுகிய கட்புலனாலும் தேர்ந்த சொல் வளத்தாலும் எடுத்துக்காட்டுகிறார். அத்தகைய நிகழ்ச்சிகளில் போர்த்தியிருக்கின்ற ‘இயற்கையற்ற நிலை’யை நம் கண்களினின்றும் மறைத்துவிட்டுத் தப்பித்துக்கொண்டு கல்மூச்செறியும் சாகஸத்தையும். கற்றுக்கொண்டிருக்கிறார். மேற்படி சம்பவங்களின் செயல்பற்றிய வாதப் பிரதிவாதத்தில் (logic of action) அவர் வெல்லவும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. பதச்சோறு: ஓடும் ரெயில் வண்டியில் உமாவின் பூங்கரம் பற்றி இழுத்துக் காப்பாற்றிய தணிகாசலத்தின் கெட்டிக்காரத்தனம். ஸ்பரிச உணர்வு தான் மன வுணர்ச்சிகளின் கூத்துக்கு முதற்காரணம் என்பது உளநூல் வல்லாரின் கருத்து:

சமூகத்தின் சித்திரம் (picture of society) சுவைபூண்டது. ஆனால் சமூகத்தொண்டனாக, புரட்சியாளனாகத் தணிகாசலம் அடிக்கடி மாறி அறிவு, கலை, காட்டுத்தொண்டு என்று என்னவெல்லாமோ பேசுகிறான்! ஆழ்ந்த கருத்துக்களை மெல்லிய நகைச்சுவை உரையாடல்களின் வாயிலாக வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலப் பேசுகிறார் திரு அகிலன். அற்புதம்! தேவை தான். திரு ரகுநாதனுக்கும் திரு க. கா. சு. வுக்கும்கூட இஷ்டம்தான்! ஆனால், திரு அ. சா. ஞா. -மறுக்கிறார்கள்.


நெஞ்சின் அலைகள்

தணிகாசலத்தை-சராசரி மனிதனின் (average man) குறைநிறைகளின் பொலிவுடன் விளங்கும் தணிகாசலத்தைக் கண் விலக்கி, கண்ணீர் விலக்கி, இதயம் விலக்கி, இனிய நினைவு விலக்கிப் பார்க்கிறேன்; நுணுகி நுணுகிப் பார்க்கிறேன். தணிகாசலம் என்ற ‘உணர்ச்சிப் பிண்ட’த்திலிருந்து, அவனது உள்ளொளியைச் சுட்டிய தேவகி எழும்புகிறாள்; அந்த உள்ளொளியைத் தூண்டிய செங்கமலம் பிரிகிறாள்; அதற்கு அகலாக அமைந்த கெளரி நிற்கிறாள்; அகலையும் சுடரையும் சேர்த்து ஏந்திய உமா நிலைக்கிறாள். தணிகாசலத்தின் பலமிழந்த ஆசாபாசங்ளைக் கொண்டு பிறந்து, வளர்ந்து, வாழக் கனவுகண்டு, கண்ட கனவு கனவாகிப் போராடியவர்கள் இவர்கள்! இறுதியில், இயற்கையும் இருதயமுமே வெற்றி பெற்றன! கெளரியை வாழ்வின் துணைகலமாகக் கொண்ட தணிகாசலம் பேறுபெற்றவன்!

‘நெஞ்சின் அலைகளில்’ அறிமுகமாகிய புஷ்பாவில் உமாவும், கனகத்தில் கெளரியும் நிழலாடுகிருர்கள்.

நானூறு பக்கங்களிலே உருவாகி அழிந்த உமாவைக் காட்டிலும், நாலு பக்கங்களில் தோன்றி நிலைத்த தேவகி முழுமை பெற்ற தமிழ்ப்பெண்! ஆம்; இந்தக் கம்பசித்திரம் தீர்ந்த சிந்தனை கயமும், ஆழந்த கற்பனை வளமும், துண்ணிய அன்பு மனமும் கொண்ட குணச்சித்திரப் புதின வேந்தன் திரு அகிலன் அவர்களுக்கே ஆகிவந்த மாபெரும் வெற்றியாகும்.