கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/17

விக்கிமூலம் இலிருந்து

17. சரோஜினி தேவி கவர்னர் ஆனார்!

பாரதநாடு தனது அடிமைச் சங்கிலியை உடைத் தெறிந்து ஏகாதிபத்திய ஆட்சியிலே இருந்து இந்தியா விடுதலை பெற்றது; சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று புகழ் பெற்ற வெள்ளையர்கள் ஆட்சியில் பாரதம் என்ற நாடு விடுதலை பெற்றுவிட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றது என்னவோ உண்மை தான்; ஆனால் அந்த நாட்டை உலகம் போற்றும் ஜனநாயக நாடாக மாற்றவேண்டும் அல்லவா? அதனால் நாடு விடுதலைப் பெற்றும் தலைவர்களுக்கு ஓய்வே இல்லாமல் இருந்தது.

அந்தந்த மாகாண நிர்வாகப் பொறுப்பும் ஆக்க வேலைகளும் அவர்களுக்கு நெருக்கடி தந்து கொண்டிருந்தன. கவிக்குயில் சரோஜினி தேவி ஐக்கிய மாகாணக் கவர்னராகப் பொறுப்பேற்று பணியாற்றினார்.

மகாத்மா காந்தியின் அகிம்சா தத்தவமும், தேசப் பற்றும், மக்கள் சேவையும்தான், சரோஜினி தேவியை முழுநேர அரசியல்வாதியாக மாற்றியது.

மனிதத் தன்மைக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு, மக்களை மீண்டும் மனித நேயத்துக்கு மீளுமாறு உழைத்து வந்த உத்தமப் பெருமானை, 1948 சனவரி 31ஆம் நாள் கோட்சே என்ற ஒரு இனவெறியன், மத விரோதி, சுட்டுக் கொன்றுவிட்டான்.

சரோஜினி தேவி காந்தியடிகளை ஆசானாக, அப்பாவாக, தலைவராக, வழிபட்டுத் தொண்டாற்றியவர்! குழந்தை போல காந்தியடிகளிடம் பழகியவர்; இருவரும் எப்போதும் நகைச்சுவை ததும்பவே பேசுவார்கள்.

மகாத்மா கருத்தை உலகுக்கு உணர்த்துவதில், பேசுவதில், எழுதுவதில் மிக வல்லவராக விளங்கியவர் சரோஜினி அதனால்தான், மகாத்மாவிடம் முழு நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார்.

மகாத்மா உண்ணாவிரதம் இருக்கும் போதும் சரி நோயுறும் போதும் சரி, சரோஜினி அவருடன் மகள்போல அமர்ந்து பணிவிடைகளை ஒவ்வொரு முறையும் செய்தவர் ஆவார். இந்த பாசத்தால் அவரது மரணச் செய்தி கேட்டதும் துடிதுடித்தது படபடப்புடன் ஓடினார்.

தில்லிக்கு ஓடிவந்தார் கவியரசி! காந்தியடிகளின் இறுதிச் சடங்கில் கண்ணீரும் கம்பலையுமாக, சோகமே உருவாகக் கலந்து கொண்டார்.

காந்தியடிகளது அஸ்தியிருத்த குடம் பின்வர, சரோஜினி தேவி முன்செல்ல டில்லியில் ஆஸ்திக்குடம் வந்து கொண்டிருந்தபோது, பண்டித நேரு, சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல்கலாம் ஆசாத், மற்றும் எல்லாத் தலைவர்களும் உடன் வந்தார்கள்.

மகாத்மா மரணமடைந்த சோகத்தினால் துக்கத்தில் ஆழ்ந்துவிட்ட நாட்டு மக்களுக்கு கவியரசி சரோஜினி விடுத்த துயரச் செய்தி வருமாறு:

“காந்தியடிகளின் உயிரும் எங்கள் உயிரும் ஒன்றே; அவை பிரிக்க முடியாதவை என்று எண்ணும்படி எங்களிலே சிலர் அவ்வளவு நெருங்கிப் பழகினோம்.

எங்களிலே பலர் அவருடன் உண்மையாகவே செத்து விட்டோம்; பாதி உயிர் போனவர்கள் போலாகி விட்டோம்! ஏனென்றால், நம் உயிரும், ஊனும், ரத்தமும் அவர் வாழ்க்கையோடு இணைந்தவை.

மகாத்மா மறைந்து விட்டார்; அவரோடு எல்லாமே போய்விட்டன என்று நாம் எண்ணினால், அது அவரை நிராகரித்ததாக ஆகும். அவருடைய உடல் நம்மிடையே இருந்து மறைந்து விட்டதால், அதனால் எல்லாவற்றையும் தாம் இழந்துவிட்டோம் என்று நினைத்தால், அவரிடம் நாம் வைத்திருந்த அளவுக்கும்: நம்பிக்கைக்கும் என்ன மரியாதை? அவருடைய வாரிசாக, பரம்பரையினராக, அவருடைய ஆன்மீக நிதியத்துக்கு உரிமையாளராக, அவருடைய இலட்சியங்களின் காவலராக நாம் இருக்கிறோம் என்பதை நாட்டுக்கு உணர்த்த வேண்டும். உரிமைக்காகத் துக்கம் காக்கும் காலம் கடந்துவிட்டது.

மரணத்தைக் கண்டு மாரடித்துக் கொண்டும், தலை மயிரைப் பிய்த்துக் கொண்டும் புலம்பும் நேரம் அல்ல இது. யார் யார் மகாத்மாவை எதிர்த்தார்கனோ அவர்களின் அறை கூவல்களை நாம் ஏற்றாக வேண்டும். பெற்ற விடுதலையை நாம் காப்பாற்றி, நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த உலகத்தின் முன்னிலையில் நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மகாத்மாவுக்குச் சேவை செய்வதற்கெனவே அவரிடம் சரணாகதி அடைந்தேன். மீண்டும் இன்றும் அதே கொள்கைகளுக்காகவே சரணடைகிறேன்!

மரணம் என்பது என்ன? எனை ஈன்ற தந்தையார் மகாத்மா மாண்டார்; "பிறப்பு உண்டு; இறப்பு இல்லை; சத்தியத்தை நோக்கிப் படிப்படியா உயிர் முன்னேறுவதே வாழ்க்கை" என்று காந்தியடிகள் உயிர் மறையும் முன்பு கூறினார்.

மகாத்மாவின் ஊனுடல் நேற்று நீராயிற்று; ஆனால், அவர் சாகவில்லை, அக்காலத்தில் இயேசுபிரான் உயிர் மீண்டு எழுந்து வந்துவிட்டார்.

மக்கன் புலம்புவதைக் கேட்டு உள்ளம் உருகி, வழி நடத்தும்படி உலகமே கோரியற்கு ஏற்றவாறு அவர் மீண்டும் தோன்றிவிட்டார்.

தில்லியில், அரசர்கள் பலர் துஞ்சிய இடத்திலேயே மகாத்மாவின் உடலும் தகனம் செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், அவர் அரசர்களின் அரசர்; சத்தியமே வடிவானவர். பெரும் வீரர்களுக்குகந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டதும் மிகப் பொருத்தம்; ஏனென்றால், அவர் வீரர்களின் வீரர்.

என் தலைவரின், என் குருநாதரின், என் தந்தையாரின் ஆன்மா அமைதி பெறாமல் இருக்குமாக! என் தந்தை ஓய்வு கொள்வதை அவர் விரும்பமாட்டார்.

எந்தாய்! தங்கள் மக்கள், வாரிசுகள், மாணவர்களாகிய நாங்கள் உங்களை வேண்டுகிறோம்; எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருளுங்கள்.

இன்றுவரை தோன்றிய இந்துக்களிலே மிகச் சிறந்த வரும், இந்துமத உண்மைகளையும், கடமைகளையும் கைக்கொண்டவருமான ஒரு மகான் அரசியல்யோகி! ஓர் இந்துவின் கையால் கொல்லப்பட்டது எவ்வளவு வருந்தத்தக்கது எண்ணிப்பார்த்து இதயம் நொந்து துடிக்கின்றது! தந்தையே! மகாத்மாவே! மீண்டும் எழுந்து வரமாட்டிரோ!