கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/18

விக்கிமூலம் இலிருந்து

18. சரோஜினி கூண்டிலிருந்து குயில் புள் பறந்தது!


"குடம்பை தனித்து ஒழியப்புள் பறந்தற்றே;
உடம்போடு உயிரிடை நட்பு"

என்ற திருவள்ளுவர் பெருமான் எழுதிய திருக்குறள் தமிழ் மறைப்படி 'நிலையாமை என்ற தத்துவத்திற்கு ஏற்றவாறு, கவியரசி சரோஜினி என்ற உடம்புடன் நட்பாக இருந்த உயிர் என்ற குயிற்புள், 1949-ம் ஆண்டு மார்ச் வாதம் இரண்டாம் தேதி பறந்தோடி விட்டது.

காந்தியடிகள் 1948-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 30-ம் நாள், காலத்தோடு கரைந்துவிட்டார்! அவரது மரணத்திற்குப் பிறகு, ஏறக்குறைய பதினைந்து மாதங்களுக்குள் கவிக்குயில் சரோஜினியும் தனது எழுபதாவது வயதில் மரணமெனும் காற்றோடு கலந்து விட்டார்.

இனிமையுடனும், வன்மையுடனும் காந்தியத் தத்துவக் கீதங்களை இசைத்துக் கொண்டிருந்த இன்னிசைக் குயில் ஆன்மா ஓய்ந்த விட்டது. என்றாலும், அவரது பொது வாழ்க்கைத் தொண்டுகள், தேசப்பற்றுடன் அவர் ஆற்றிய சேவைகள் தம்மை விட்டு மறையாமல் கானம் பாடிக் கொண்டே இருக்கின்றன.

இசையரசி சரோஜினி தேவியின் வாழ்க்கை நமக்கு ஒரு நாட்டுப்பற்றுப் பாடமாக அமைந்துள்ளத்தை எவராலும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.

பெண் குலத்திற்கு சரோஜினி ஒரு மனப்பாடமாக இன்றும் நின்று நிலவுகிறார். சிறுமியாக இருந்தபோதே அவர் கவிபாடும் திறன் பெற்றிருந்தார். அதற்காகவே அவர் அயராது உழைத்து வாழ்ந்தார். குமரியான உடனே அவரது பாடல்கள் உலகத்தையே மெய்மறக்க வைத்தவையாகப் பாராட்டுப் பெற்றன.

மகாகவி ரவீந்திரநாத் தாகூர் பெற்ற 'கெய்சர் ஹிந்த்' என்ற விருதை, பிரிட்டிஷாரால் வழங்கிப் பாராட்டும் அளவுக்கு அவர் புலமை பெற்றது பெண்ணினத்துக்குரிய ஒரு பெருமையாக விளங்கியது.

தாய்க்குலம் கவனிக்கப்பட வேண்டிய படிப்பினைகள் என்னவென்றால்;

சரோஜினி தேவி தேசப்பக்திக்கே முதலிடம் தந்தார்; அதற்கு முன்னால் தனது சொந்த சுகபோக வாழ்க்கையை தூக்கி எறிந்தார். தியாகம் செய்ய எந்த ஆண் வேண்டுமானாலும் முன்வரக்கூடும்; ஆனால், சரோஜினி தேவி ஒரு பெண்! பருவ மங்கை, குமாரி இளமை எழிலாடும் இன்ப வாழ்வைப் பெற்றாக வேண்டிய வயது.

கணவன் இருக்க, செல்வச் செழிப்புத் தவழ, குழந்தை பேறு பூரிப்போடு காட்சிதர, பட்டம், பதவி, படிப்பு, சொல்வன்மை, அறம்பிறழ் நெஞ்சம் இத்தனையையும் இழந்து தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பண்பு எந்த பெண்ணுக்கு வரும் இந்த மனம் வியப்புக்குரிய ஒரு இயற்கை மனமல்லவா?

அன்னி பெசண்டுக்கு மதக் கொடுமைகள், கணவன் கொடுமைகள், பணிபுரிந்து வருவாய் தேட முடியாத சூழ்நிலை, தாய்வீட்டு ஆதரவோ, கணவன் ஆதரவோ, உடன் பிறப்பினர் உதவியோ இல்லாமையால், கற்றக் கல்வியை வளர்த்துக் கொண்டு வேறு ஒரு நாட்டுக்கு வந்து, தியாசாபிகல் சொசைட்டியின் முழு ஆதரவோடு அதன் தலைவியாகி இந்திய அரசியலிலே பெரும் செல்வாக்குப் பெற்றார் பெண் இன முன்னேற்றத்துக்கும் உழைத்தார்.

ஆனால், சரோஜினி தேவி மேற்கூறிய அவ்வளவு ஆதரவுகளும் இருந்தும் கூட. அவற்றை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, பெண் இன முன்னேற்றத்திற்காகவும், தேச சேவைக்காகவும், மக்கள் தொண்டுக்காகவும் பாடுபட முன் வருவோர் ஓரிருவராகவே இருக்க முடியும். அவர்களில் ஒருவர் சரோஜினி. விடா முயற்சியோடு அவர் பலதுறைகளில் ஈடுபட்டு பெற்ற வெற்றியும் புகழும் தாய்க்குலத்தை மேம்படுத்தும் எண்ணமல்லவா?

03-ம் ஆண்டு, சரோஜினி தேவியார், தனது இருபத்து நான்காவது வயதில் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மாணவர்கள் மத்தியிலே ஓர் உரையாற்றினார். அந்த பேச்சில் அவர் என்ன குறிப்பிட்டார் பாருங்கள்:

இளைஞர்களே! என்றார்! இந்த பெண்ணுக்கோ வயது இருபத்து நான்கு இருந்தும் பட்டப்படிப்பு படிக்கும் பருவமுடையவர்களைப் பார்த்து "இளைஞர்களே என்று கம்பீரமாகக் குரல் கொடுத்து. மேற்கொண்டு என்ன பேசுகிறார் தெரியுமா?. இதோ அது:

"உங்கள் விருப்பும் பற்றும் உங்கள் மாகாணத்துடன், உங்கள் நகரத்துடன், உங்கள் ஜாதியுடன், ஜாதியின் உட் பிரிவுடன், உங்கள் கல்லூரியுடன், உங்கள் வீட்டுடன், வீட்டிலும் உங்கள் உறவினர்களுடன், இறுதியில் உங்களுடனே நின்று விடுகின்றன.

இந்தச் சுயநலத்தை, தன்னை மட்டுக் காத்துக் கொண்டு மற்றவரைப் பாராமல் ஒதுங்கும் தன்மையை நீங்கள் கைவிடவேண்டும். நாடு பூராவையும், மக்கள் அனைவரையும், எல்லாப் பகுதியினரையும், எல்லா மதத்தினரையும், எல்லோரையும் சகோதரர்களாய் கருதி, சர்வஜன சகோதரத்துவத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

ஆங்கிலக் கவிகளான ஷெல்லியையும், கீட்சையும் படிக்கிறீர்கள்; அவர்கள் அறிவுறுத்தும் உலக சகோதரதுதுவத்தைப் போற்றுகிறீர்கள். ஆனால், நீங்கள் ஒழுகுவது எவ்வாறோ?

இந்து என்றும், முஸ்லிம் என்றும், பிராமணன், பிராமணன் அல்லாதவன் என்றும், சென்னைவாசி, வெளி மாகாணவாசி என்றும், வேற்றுமைகளைப் பாராட்டுவது ஏன்?

ஏட்டுக் கல்வி நாட்டுக்குப் பயன்படுவது அரிதுதான். ஆயினும், நான் சென்னைக்காரன், பிராமணன், பிராமணன் அல்லாதவன் என்று நீங்கள் கூறிக்கொள்வதால் பெருமை ஏதுமில்லை. அதற்கு மாறாக, நீங்கள் நான் இந்தியன், இந்திய ஜாதியைச் சேர்ந்தவன், தேசபக்தி உடையவன் என்று கூறிக்கொண்டால் அதற்குப் பெருமை உண்டு.

என் வாழ்க்கையில் நான் இந்தப் பரந்த, தேசிய சகோதரத்துவத்தைக் கடைபிடிக்க முயன்று வருகிறேன்" நான் வங்காளத்தில் பிறந்தவள். ஆனால், சென்னைக்குச் சொந்தமானவள், ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன்; அங்கேயே மணந்தேன்; இல்வாழ்க்கை நடத்தினேன்; ஆனால் நான் வங்காளி அல்ல; நான் ஒரு இந்தியப்பெண்!

நான் இந்துவும் அல்ல; பிராமண ஜாதியைச் சேர்ந்தவளுமல்ல; நான் ஓர் இந்தியப்பெண்! இந்துக்களும்-முஸ்லிம்களும் சகோதரர்கள்; இந்த இரு வகுப்பினரையும் மற்ற வகுப்பினரையும் நான் என்னுடன் பிறந்த சகோதரர்களாகவே கருதுகிறேன்-நேசிக்கிறேன்-மதிக்கிறேன்! என்று பேசியவர் சரோஜினி தேவியார்.

இதுதான் கவிக்குயில் சரோஜினி தேவியின் தம்மை மேம்படுத்தும் எண்ணங்கன்! அவர் ஓர் இந்தியப் பெண்ணாகவே வாழ்ந்தார்! தேசத் தொண்டாற்றினார்! கவிஞரானார்! எழுத்தாளாரானார்! மக்கள் வாழ்வுக்கு மாண்பு தேடியவராக மறைந்தார்! வாழ்க சரோஜினி!

(முற்றும்)