கவிபாடிய காவலர்/பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

விக்கிமூலம் இலிருந்து

10. பாண்டியன் ஆரியப்படை
கடந்த நெடுஞ்செழியன்

செழியன் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும். இங்குக் கூறப்பட்ட பாண்டிய மன்னர் தோற்றத்தால் நீண்டு வளர்ந்து காணப்பட்ட காரணத்தால் நெடுஞ் செழியர் என அழைக்கப்பட்டனர் எனலாம். இவர் வடவர்களாகிய ஆரியரோடு எதிர்த்துப் போரிட்டு அவர்கள் படையினைப் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்தவர். இதனால் இவர் ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன் என்ற சிறப்பு மொழிகளால் சிறப்பிக்கப்பட்டனர். கடந்த என்னும் மொழி எதிரிட்டு வென்ற என்னும் பொருளைத் தந்து நிற்கும். இவர் தோற்றப் பொலிவின் காரணமாக நெடுஞ் செழியர் என்று அழைக்கப் பட்டாரே னும், பாண்டியர் குடியினர் என்பதைத் தெற் றெனத் தெளிவிக்கப் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன் என்று குறிப்பிடப்பட்டார்.

இப் பாண்டியரே கோவலனை ஊழ்வலி காரணமாகக் கொல்லுவித்தவர். என்றாலும், குற்றத்தை உணர்ந்து அக் குற்றம் செய்த காரணத்தால் உம் உயிரையும் விடுத்துத் தம் நீதி நெறியினை நிலை நாட்டியவர். இல்லையானால்

“பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்

என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”

என்று கூறிவிட்டு இறப்பாரோ ? இறவார் அன்றோ? இங்கனம் நீதியை நிலை நாட்டக் கருதித் தம் உயிரை நீத்த மேம்பாட்டினை ஆசிரியர் இளங்கோ அடிகளாரும் நன்முறையில் அறிவித்திருப்பது இவ்வரசர் பிரானது அருமையினை அறிவிக்கின்றது. அவ்வாறு அறிவிக்கும் சிலப்பதிகார அடிகள்

“வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது”

என்பன. இத்தகைய மன்னர் பிரானார் நீதியில்தான் கண்ணும் கருத்துமாய் இருந்தார் என்று கூறுதற்கு இல்லை. கல்வியிலும் தம் கருத்தை முற்றிலும் செலுத்தியவர் என்பதை இவர் புறநானூற்றில் கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறும் பாடல் ஒன்றால் நன்கு அறிகிறோம். தமக்கு மிகுந்த புலமைப் பெருக்கு இருந்தால் அன்றி இவர் இத்தகைய கருத்துடைச் செய்யுளை யாத்திருக்க இயலாது.

இவர் கல்வியின் மாண்பினைக் கூறும் பாட்டில், கல்வி கற்பதாயின், ஆசிரியர்க்குப் பெரும் பொருள் கொடுத்தும், அவர்க்குத் துன்பம் வந்த போதெல்லாம் உதவி புரிந்தும் கற்றல் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். நாட்டிற்கு அடிப்படையாவார் கற்றவர். ஆதலின், அங்ஙனம் கற்றவர் பலரை ஆக்க வேண்டியவர் கணக்காயர், ஆதலின் கணக்காயர்கட்கு எந்த விதமான துன்பமும் நேரா வண்ணம் தம் காலத்தையும் கருத்தையும், குடிமக்களின் கல்வி அறிவு மிகுதற்குச் செல வழிக்கும் பொருட்டுப் பெரும் பொருள் கொடுக்க வேண்டும் என்று அரசர் திருவாயால் கூறியிருப்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும். மாணவர்களும் ஆசிரியரிடத்து அன்பும் மரியாதையும் காட்டி ஆசிரியரை வழிபட்டுக் கற்றால் அன்றிக் கல்வி செழிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிறப்பால் ஒருவன் சிறப்படைய இயலாது. கற்றிருந்தால் மட்டும் சிறப்படையலாம் என்றும் கூறியிருக்கும் கருத்தை ஒவ்வொருவரும் உளம் கொள்ளுதல் வேண்டும். கற்றவனையே பெற்ற தாயும் விரும்புவள் என்பதையும் அப்பாடலில் அறிவித்துள்ளார். நாடும் அரசும் அறிவுடையோர் சொல்படி கேட்கும் என்று அறிவித்திருப்பதையும் நாம் நன்கு சிந்தித்தல் வேண்டும். வயதுக்கும் பெருமையில்லை. வயதால் சிறியவனாயினும் அறிவால் பெரியவனாயின், அவனே யாவரினும் சிறந்தவன் என்பது இவர் கருத்து. இல்லையானால்,

“ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்”

என்று கூறுவாரா? கூறார் அன்றோ ?