கவியகம், வெள்ளியங்காட்டான்/எழில் மிகுந்த மாலை

விக்கிமூலம் இலிருந்து


எழில் மிகுந்த மாலை


எழில்மி குந்த மாலை வேளை
எனக்கி ரங்கி வருகுது:
இதயம் கடலும் அலையு மாகி
இன்பம் பொங்கிப் பெருகுது:
முழவும் குழலும் முயங்கி நெஞ்சில்
மோகம் மூளப் புரியுது:
முல்லை மணத்தை அள்ளித் தென்றல்
முன்றில் தோறும் திரியுது:

தொழுவை ஒன்றிக்கிடந்த கன்றும்
துள்ளித் தாயைத் தேடுது:
தொலைவில் மேய்ந்த பசுவும்
திரும்பித் துரித நடையைப் போடுது:
அழகு கொழிக்கும் கிளியும் பழகும்
அரச மரத்தில் கூடுது:
அருமைக் காதல் மொழிக ளாடி
அகம கிழ்ந்து பாடுது!

பொழுதில் பூத்த லர்ந்த மலரும்
 பொன்வண் டணையக் கோருது:
புலனில் புதுமை பொலிய வண்டும்
பூவை நாடிச் சேருது;
எழுதும் தொழிலும் முடிந்து கொழுநன்
எழுந்திருக்கக் கோருது:
இனிக்கப் பேசிச் சிரித்து மகிழ
இதயம் முந்தித் தீருது!

முழுதும் வானில் முத்து திர்க்க
முந்தித் திங்கள் தெரியுது;
மோகனத்தின் சீவனாக
முனைந்து நிலவைச் சொரியுது:
தொழுது கூட நெஞ்சில் தோன்றும்
தூய காதல் அரியது;
தொடர்ந்து மாலைப் பொழுது நாளும்
தோன்றி உதவி புரியுது!