கவியகம், வெள்ளியங்காட்டான்/காலத்தின் அருமை
Jump to navigation
Jump to search
காலத்தின் அருமை
மனிதனென என்னுடைய இனமாக நீயிந்த
மண்மேற் பிறந்திருந்தும்
மகிழ்ச்சியே இல்லாமல் இகழ்ச்சியாய் எல்லோரும்
மனம் வந்த வாறு பேச
இனிதெனும் புனிதவுண வாடைமனை யாதிபொருள்
எதுவொன்றும் எண்ணாமலே
என்னேரம் பார்த்தாலும் புத்தகமுங் கையுமாய்
இருந்தின்ன செற்றாயெனத்
தனதுமனம் இரங்கியொரு தனவந்தன் பெருஞ்செல்வம்
தந்துசுகி யென்றபோதும்
தலையாய இனியதமிழ் கலைபேணி வளர்க்காமல்
தன்னலங் கருது வோனாய்
எனதுவாழ் நாளிலொரு நாழிகையும் வீணாக
என்றுங் கழிக்க மாட்டேன்
என்பதனை இன்றுமக் கன்போடு ரைக்கிறேன்
இவ்வுலகு தானறியவே.