கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/ஆங்கிலமொழியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்

விக்கிமூலம் இலிருந்து



5. ஆங்கிலமொழியின்
ஆதிக்கத்தை எதிர்த்துப்
போராடினார்

கவிஞர் தாகூர் மனதில் உலகம் வாழ்ந்து கொண்டிருந்தது; உலக மக்கள் எல்லாரும் அவருடைய அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். அதே போல தாகூர் மனமும் உலக மக்களது நல்வாழ்வின் மீதே நாட்டமாக இருந்ததால், அவரது கவிதைகளில், சிறுகதைகளில், நாடகங்களில், பாடல்களில் மக்கள் வாழ்க்கைக்குரிய நீதிகளை, நெறிகளை, அறவழிகளை, அன்புரைகளை, பண்புரைகளை, நாட்டுப்பற்றுணர்வுகளை, ஆன்மிக மார்க்கங்களை, பொதுச் சேவைகளின் மாண்புகளை எல்லாம் விதையாக விதைத்தார்.

உலக மக்கள் அனைவரும் அமைதியான, இன்பமான வாழ்வு வாழ வேண்டும் என்பதே தாகூருடைய தொண்டுகளின் அடிப்படையான, உணர்வாக அமைந்தது.

கவிஞர் தாகூர் எழுதிய பாடல்களில் வங்க நாட்டின் முன்னேற்றமே தலையாயதாக இருந்தது. வங்க மொழியின் பெருமையே, தாய்மொழிப் பற்றே தன்மான உணர்சிசியாகத் தலை நிமிர்ந்து நின்றது. திரும்பத் திரும்ப அந்த உணர்ச்சிகளையே அவருடைய பாடலில் அவர் கூறியிருந்தார்.

வங்க மக்கள் இடையே பரவியிருந்த ஆங்கில மோக வெறியை வீழ்த்திட அவர் பெரும்பங்காற்றினார். சிங்கமாக நின்றார்!

எந்தப் பள்ளிகளானாலும் சரி, ஆங்கிலத்தின் குழந்தைகளுக்குப் பாடல்களைப் போதிப்பதை அவர் மிக வன்மையாகக் கண்டித்தார். ஒவ்வொரு பள்ளியும் தாய்மொழி மூலமாகத்தான் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்பதிலே அவர் கண்டிப்பாக இருந்தார். ஏனென்றால், தாய் மொழியின் வாயிலாகத்தான் அறிவை வளர்க்க வேண்டும் என்ற உலக நோக்கம் அவரிடையே ஆழமாக வேரூன்றியிருந்தது.

எவருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஆங்கிலேயர் ஆட்சியினுடைய கல்விக் கொள்கைகளை ஆணித்தரமாக எதிர்த்து, உறுதி வாய்ந்த உள்ளத்தோடு எடுத்துரைத்தார்! அதற்கு முன்னோடியாக, ஆங்கிலத்திலே பேசுவதைக் கண்டனம் செய்தார். அதை ஒரு பழக்கமாக்கக் கூடாது என்று தாகூர் போராடினார்.

அதற்குச் சான்றாக, கவிஞர் தாகூர் தனது தாய் மொழியிலேயே எல்லா நிகழ்ச்சிகளிலும் பேசிப் பெருமை பெற்றார். மற்றவர்களும் தாய் மொழியிலேயே எழுத, பேச வேண்டும் என்று வற்புறுத்தினார். அறிவுறுத்தினார்.

கல்கத்தா பல்கலைக் கழகத்துப்பட்டமளிப்பு விழா சொற்பொழிவாற்றிட செல்வோர் எல்லாரும், அங்கே சென்று ஆங்கிலத்திலே பட்டமளிப்பு விழா உரையாற்றக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு ஆங்கில மோகிகளாக நடமாடுவது உயர்ந்த நாகரிகமாகாது என்று கண்டித்தார் வங்காளி ஒருவன் வங்க மொழியிலே பேசாமல் வேற்று மொழியிலே பேசுவது பிறந்த மண்ணுக்குச் செய்யும் துரோகம் என்று முழக்கமிட்டார். பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு பல்கலைக்கழகம் அவரை அழைத்தபோது, வங்கமொழியிலே அங்கே முழக்கமிட்டு தனது தாய்மொழிக்கு உயர்வு தேடினார்.

வங்கமொழியை வளர்ப்பதுதானே வங்காளியின் உரிமை? அதைவிடுத்து இங்கிலீஷ் மொழிக்கா அவன் பெருமை தேடுவான்? தனது தாய் மொழியை அவனவன் வளர்க்காமல் அதற்குப் பெருமை சேர்க்காமல், பிற மொழிக்குப் புகழ் தேடி அடிமையாகவா வாழ்வான்? என்ற கேள்விகளை எல்லாம் பட்டமளிப்பு உரையிலே எழுப்பினார்!

தாய் மொழி உரிமைக்காக மட்டுமே அவர் போராடவில்லை. கிராம முன்னேற்றங்களுக்காகவும் அவர் அயராது உழைத்தார். குறிப்பாக, வங்க மாநிலத்தில், பத்மா என்ற ஆற்றங்கரையிலே உள்ள நிலபுலங்களைக் கவனிக்கும் பொறுப்பை அவரது தந்தையார் ஒப்படைத்த பிறகு. கிராமங்கள் என்றால் என்ன? உழவர்கள் உழைப்பு என்பது என்ன? கிராமங்கள் சீரழிந்து, சிறப்பிழந்து நிற்பது ஏன்? என்ற காரணங்களை அவர் கண்டுணர்ந்தார்.

கிராம மக்கள் அரசியல்வாதிகளை நம்பி, பணக்காரர்களுக்கு அடிமையாகி, தங்களது முன்னேற்றங்களுக்காக உழைக்கும் தன்னம்பிக்கைகளையும், முயற்சிகளையும் செய்யாமல் கோழைகளாய், ஊமைகளாய் வாழ்வதைக் கிராமங்களுக்கு நேரில் சென்று கண்டறிந்தார். அவர்களை வாழ்விக்க என்ன வழிகள் என்பதைக் கவிஞர் தாகூர் இரவு பகலாகச் சிந்தித்தார்.

கிராமங்கள் பலவற்றுக்கும் அவர் சென்று கண்டறிந்த விவரங்களை எல்லாம் செய்திகளாக, கிராமத்துச் சிறுகதைகளாக, எழுதினார்! பிற்காலத்தில் அந்த எழுத்துக்கள் எல்லாம் உயர்ந்த இலக்கியங்களாகப் போற்றப்பட்டன. அதேநேரத்தில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் அனைவரையும் கிராமச் சீர்திருத்தத்தில் ஈடுபட வைத்தார். இவ்வாறு கவிஞர் தாகூர், தனது எழுத்துக்களின் வலிமைகளை, வலியோர் சிலரை எதிர்க்கவும், எளியோர் பலரை வாழ்க்கையில் உயர்த்தவும், கிராம முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சாந்திநிகேதன் பற்றி காந்தியடிகள் கருத்து

கவிஞருக்கு இப்போது வயது நாற்பது. அதாவது 1901-ஆம் ஆண்டில் மற்றுமோர் மாறுதல் அவரிடையே தோன்றியது. அவரது உள்ளத்திலிருந்து அமைதி கலைந்தது. ஏதோ ஒரு புது உணர்வைத் தேடி அவரது அறிவு அலைந்தது.

தேவேந்திர நாத் தாகூர் போல்பூர் அருகே சாந்திநிகேதன் என்ற ஓர் அமைதிக் கோயிலை உருவாக்கி இருந்ததையும், முன்பே கவிஞர் தாகூர் தனது தந்தையாருடன் சென்று அந்த ஆசிரமத்தைக் கண்டு ஆனந்தப்பட்டதையும் ஆண்ட்ரூஸ், பியர்சன் போன்ற பேரறிவாளர்கள் பலர் அங்கே சென்று கல்வி, கலை, அமைதி, தியானம் போன்ற வளர்ச்சிகளுக்காக உழைத்து வந்ததையும், அதுதான் இன்றும் உலகம் போற்றும் சாந்திநிகேதன் என்ற கலைக்கோட்டம் என்பதையும் முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.

இப்போது கவிஞர் தாகூருக்கு ஏற்பட்டுள்ள புத்துணர்வு சாந்திநிகேதன் என்ற இத்தொண்டுக் கோயிலைக் கலைத் தொண்டு புரிய வழி வகுப்பதாகும்.

சாந்திநிகேதனத்தைப் பற்றி உலக உத்தமரும், அகிம்சா மூர்த்தியுமான மகாத்மா காந்தியடிகளார் என்ன பேசுகிறார் என்பதைக் கேளுங்கள்;

“ராஜ் கோட்டிலிருந்து சாந்திநிகேதனுக்குச் சென்றேன். அங்கே ஆசிரியர்களும், மாணவர்களும் என்னை அன்பில் மூழ்கடித்து விட்டனர். எளிமையும் அன்பும் கலந்ததாக இருந்தது. வரவேற்பு இந்த சாந்திநிகேதனில்தான் காக்கா சாகிப் என்பவரை நான் முதன் முதலில் சந்தித்தேன். காகா என்றால் சிற்றப்பா என்று பொருள் என்பதையும் உணர்ந்தேன்.

“பல ஸ்தாபனங்களையும் பார்த்து அனுபவம் பெறுவதற்காகக் காக்கா சாகிப் அப்பொழுது பிரயாணம் செய்து வந்தார். நான் சாந்திநிகேதனுக்குச் சென்றபோது அவர் அங்கே இருந்தார். சிந்தாமணி சாஸ்திரியும் அப்பொழுது அங்கே இருந்தார். இவருவரும் அங்கே சமஸ்கிருதம் கற்பிப்பதில் உதவி செய்து வந்தார்கள்.

தென்னாப்பிரிக்காவில் நான் துவக்கிய மாணவர் பள்ளியைச் சேர்ந்த போனிக்ஸ் குடும்பத்தினருக்குச் சாந்திநிகேதனில் தனி இடம் கொடுத்திருந்தார்கள். அக் குடும்பத்திற்குத் தலைவராக இருந்தார். மதன்லால்காந்தி, போனிக்ஸ் ஆசிரமத்தின் விதிகள் யாவும் இங்கேயும் கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வருகின்றனவா? என்று கவனிப்பதை அவர் தமது வேலையாகக் கொண்டார். அவர் தமது அன்பினாலும், விடா முயற்சியினாலும் தம்முடைய புகழ்மணம் சாந்திநிகேதனம் முழுவதிலும் கமழும்படி செய்திருந்ததைக் கண்டேன்.

சி.எஃப். ஆண்டரூசும் அங்கே இருந்தார். பியர்சனும் இருந்தார். வங்காளி ஆசிரியர்களில் ஜகதான்ந்த பாபு, நோயால் பாபு, சந்தோஷ்பாபு, க்ஷிதி மோகன் பாபு, நாகேன் பாபு, சரத்பாபு, காளி பாபு ஆகியவர்களுடன் ஓரளவுக்கு நெருங்கிய பழக்கம் எங்களுக்கு ஏற்பட்டது.

என்னுடைய வழக்கப்படி அங்கே இருந்த ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் நான் சீக்கிரத்தில் ஒன்றிப் போய் விட்டேன். அவரவர்களின் காரியங்களை அவர்களே செய்து கொள்ளுவதைக் குறித்து அவர்களுடன் விவாதித்தேன். ஆசிரியர்களுக்கு ஒரு யோசனை கூறினேன்.

“சம்பளத்திற்கு வைத்திருக்கும் சமையற்காரர்களை அனுப்பிவிட்டு, ஆசிரியர்களும், மாணவர்களுமே தங்கள் உணவைச் சமைத்துக் கொள்ளுவதானால் சிறுவர்களின் உடலுக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ற வகையில் சமையலறையை நிர்வகிக்க ஆசிரியர்களால் முடியும் என்றேன். இது, தங்கள் காரியங்களைத் தாங்களே செய்துகொள்ள வேண்டும் என்பதில் மாணவருக்கு ஓர் அனுபவப் பாடமாகவும் இருக்கும் என்றேன்.

ஆசிரியர்களில் இரண்டொருவர், அது ஆகாத காரியம் என்று தலையை அசைத்தார்கள். சிலர், என் யோசனையைப் பலமாக ஆதரித்தார்கள். சிறுவர்களும் அதை வரவேற்றனர். புதுமையான காரியங்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு இருக்கும் ருசியே இதற்குக் காரணமக இருக்கலாம். ஆகவே, நாங்கள் இப்பரீட்சையில் இறங்கினோம்.

இதுபற்றி தமது கருத்தைத் தெரிவிக்குமாறு கவிஞர் தாகூரை நான் கேட்டதற்கு, அதை ஆசிரியர்கள் ஆதரிப்பதாயிருந்தால் தமக்கு ஆட்சேபமில்லை என்று கூறினார். ‘இந்தச் சோதனையில் சுயராஜ்யத்தின் திறவு கோல் அடங்கியிருக்கிறது’ என்று கவிஞர் சிறுவர்களிடம் கூறினார்.

இந்தப் பரீட்சை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஸ்ரீ பியர்சன் தமது உடலை வருத்திப் பாடுபட்டார். அதிக உற்சாகத்தோடு இவ் வேலைகளில் ஈடுபட்டார். காய்கறிகளை நறுக்குவதற்கு ஒரு கோஷ்டி, தானியத்தைச் சுத்தம் செய்வதற்கு ஒரு கோஷ்டி, என்று இவ்விதம் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கோஷ்டி அமைக்கப்பட்டது.

சமையலறையையும், அதன் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் வேலையை நாகேன் பாபுவும், மற்றவர்களும் மேற்கொண்டனர். கையில் மண்வெட்டியுடன் அவர்கள் வேலை செய்வதைப் பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது.

அங்கே நூற்றியிருபத்தைந்து பையன்களும், அவர்களின் ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் எல்லோரும், உடலுழைப்பான இந்த வேலையைச் சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்று எதிர் பார்த்துவிட முடியாது. தினமும் விவாதங்கள் நடந்து வந்தன. சிலர் சீக்கிரத்திலேயே சோர்வடைந்து விட்டனர் என்பது தெரிந்தது. ஆனால், அப்படிச் சோர்ந்து விடக் கூடியவரல்ல பியர்சன். எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்துடன் சமையலறையிலோ அதன் பக்கத்திலோ அவர் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.

பெரிய பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்யும் வேலையை அவர் மேற்கொண்டார். பாத்திரங்களைத் துலக்குகிறவர்களுக்கு அந்த வேலையில் சலிப்புத் தோன்றாமல் இருப்பதற்காகச் சில மாணவர்கள் அவர்களுக்கு முன்னால் சித்தார் வாத்தியம் வாசிப்பார்கள். எல்லோருமே இந்த வேலையில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். தேனீக்கள் சுறுசுறுப்பாக இருக்கும். தேன் கூடுபோல் இருந்தது சாந்தி நிகேதன்.

இத்தகைய மாறுதல்கள் ஒரு முறை ஆரம்பமாகி விட்டால், எப்பொழுதும் வளர்ந்து கொண்டே இருக்கும். போனிக்ஸ் கோஷ்டியினர் தாங்களே சமைத்துக் கொண்டனர். அவர்கள் சாப்பாடு மிகவும் எளிமையாகவும் இருந்தது. மசாலாச் சாமான்களே அந்தச் சாப்பாட்டில் இல்லை.

அரிசி, பருப்பு, கறிகாய் மாத்திரமேயன்றிக் கோதுமை மாவுகூட ஒரே சமயத்தில், ஒரே பாத்திரத்தில் நீராவியில் சமைக்கப்பட்டன. வங்காளிச் சமையலில் சீர்த்திருத்தம் செய்வதற்காகச் சாந்தி நிகேதனின் பையன்கள் அதே போன்ற சமையலைத் தொடங்கினார்கள். இரண்டொரு உபாத்தியாயர்களும், சில மாணவர்களும் இச் சமையலைச் செய்து வந்தார்கள்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு இப் பரீட்சை நிறுத்தப்பட்டுவிட்டது. பிரபலமான இந்த ஸ்தாபனம், கொஞ்ச காலத்திற்கு இந்தப் பரீட்சையை நடத்தியதால், அதற்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை என்பதே என் அபிப்ராயம். இதனால் ஏற்பட்ட சில அனுபவங்கள் உபாத்தியாயர்களுக்குப் பயனுள்ளதாகவே இருந்திருக்க முடியும்.

சாந்திநிகேதனில் கொஞ்ச காலம் தங்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், விதியோ, வேறு விதமாக இருந்து விட்டது. நான் சாந்திநிகேதனத்திற்கு வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இதற்குள் கோபாலகிருஷ்ண கோகலே காலமாகி விட்டார் என்று புனாவிலிருந்து எனக்குத் தந்தி வந்தது.

சாந்திநிகேதனும் துக்கத்தில் ஆழ்ந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள். தேசத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் குறித்துத் துக்கப்படுவதற்காக சாந்தி நிகேதனின் கோயிலில் ஒரு விசேஷக் கூட்டம் மிகுந்த பயபக்தியுடன் நடந்தது. அன்றே நான் என் மனைவியோடும், மகன் லாலுடனும் புனாவுக்குப் புறப்புட்டேன். மற்றவர்கள் எல்லோரும் சாந்திநிகேதனிலேயே தங்கினார்கள்.

(காந்தியடிகள் எழுதிய “சத்திய சோதனை”
பக்கம் 456-453)
தேவேந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனை ஓர் அமைதிக்கான ஆசிரமமாக உருவாக்கினார்! அவருக்குப் பிறகு அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கவிஞர் தாகூர், அந்த அமைதிக் கோட்டத்தைக் கலைக் கோயிலாக்கி உலகத்துக்கே ஒரு கல்விக் கோட்டமாக்கினார்! ஆண்டுதோறும் உலகக் கல்வியாளர்கள் அங்கு வருகை தந்து, அங்கே நடைபெற்றுவரும் அறிவற்புதங்களைக் கண்டு களித்துக் கற்றுச் செல்கிறார்கள்.

ரவீந்திரநாத் தாகூர். மேலாளராக இருந்தபோது. கவிஞரின் உள்ளத்தில் குழந்தைகள் மேல் அன்பும், அவர்களது கல்வி போதனைகளில் அக்கறையும் கொண்டிருந்தார். இன்றைக்கு வேண்டுமானல் எண்ணற்றோர் குழந்தை நலம் பேணுபவராகவும். குழந்தைகளைப் பற்றிப் பாடிய கவிஞர்களாகவும் வரலாம்; வாழலாம் ஆனால், கவிஞர் தாகூரைப் போல குழந்தைகளுக்காகப் பாடியவர்கள், அவர்களது எதிர் காலம் மேல் அக்கறை கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே ஆவர்!

இளம் பிஞ்சுகளான குழந்தைகள் அதனதன் ஆசைகளைப் போல ஆடிப்பாடி வளரவேண்டும். கட்டுப்பாடுகள், இருக்கக் கூடாது என்பது அவரது ஆவல். அவ்வாறு அந்தக் குழந்தைகள் வளர்ந்தால் தான், உள்ளத்திறனும், உயர்வும், எண்ண எழுச்சியும் பண்பாடும் சிறப்பும் என்பது அவரது முடிவு. அதனால்தான், குழந்தைகளின் அறிவை வளர்க்கும் மென்மைபான கல்வியைப் போல வேறொன்றும் இல்லை என்று அமெரிக்கக் குழந்தைகள் விழாவிலே அவர் பேசிய போத பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் கவிஞர் தனது இளமைக் காலத்தில் கல்விக்காகப் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் அவர் அடிக்கடி நினைவு கூருவார். அந்த அனுபவத்தைக் கொண்டு தான், பள்ளி வாழ்க்கை ஒரு சிறைக் கூடமாகக் குழந்தைகளுக்குக் காட்சிதரும் கொடுமையை எப்படியும் மாற்றியே தீரவேண்டும் என்று திட்டமிட்டார். அது போலவே, உணர்வற்ற பாடப் புத்தகங்களிலே இருந்து கண்மூடிப் பழக்க வழக்கங்களை மாற்றக் கடுமையாகப் போராடினார்.

பொருள் விளங்காத பாடங்களை யந்திரம் போல் குழந்தைகள் கற்பதால், இயற்கையாக அவர்களுக்குள்ளே இருக்கும் தெளிவு, ஆற்றல் உணர்ச்சி போன்றவை மயங்குவதால் அதை மாற்றிடச் சிந்தனை செய்தார். குழந்தைகள் அவர்கள் ஆசை போல ஆட வேண்டும், பாட வேண்டும் என்ற உரிமைகளை அவர்களுக்கு மறுக்கக் கூடாது என்று முடிவு செய்தார்.

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் திட்டமிட்டு, குழந்தைகளை விளையாட விட்டு, வேண்டியவற்றை கற்கும்படி உரிமை கொடுக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகள் அறிவு தட்டுத் தடங்கல் இல்லாமல் வளரும் சூழ்நிலை உருவாகும் என்று கருதினார்.

இசையாலும், நாடகத்தாலும், குழந்தைகளுக்கு கல்வி புகட்டவேண்டும். குழந்தைகளுக்கு இயற்கை நண்பனே தவிர விரோதி அல்ல என்பதை உணர்த்தி, இயற்கையோடு பழகிக் கற்கச் செய்ய வேண்டும். என்றெல்லாம், தாகூர் குழந்தைகளைப் பற்றி வெளிப்படையாகவே தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

கவிஞர் எளிமையும்; மனைவியின் மாண்பும்!

கவிஞர் தாகூர், தனது அருமை மனைவியோடு இல் வாழ்க்கையை பதினைந்து ஆண்டுகளே நடந்தினார். மனைவி மிருணாளினி கணவனுக்கு ஏற்ற இல்லத்தரசியாகவே வாழ்ந்து வந்தார். இனிமையான சொற்களோடு வருவார்போவார்களை இன்முகங்காட்டி உபசரிப்பார். உயர் பண்புகளுக்கான உறைவிடமாகத் திகழ்ந்தார்.

கணவர் கலையுள்ளச்சிந்தனைகளுக்கேற்ப அந்தக் கற்புக்கரசி மிருணாளினி திகழ்ந்தார். அந்த அம்மையார் குடும்பப் பொறுப்புக்களை ஏற்று, அத்தனை பெரிய மூத்தவர்கள் அனைவரிடமும், அவர்களது துணைவியார்களிடமும், மாமனால் மாமியாரிடமும், மற்றுமுள்ள சுற்றத்தார்களிடமும் உண்மையான பாச உணர்வோடு வாழ்ந்தார்.

கவிஞரது துணைவியார் எந்தவிதமான குடும்பப் பாரத்தையோ, கஷ்ட நஷ்டங்களையோ, சிக்கல்களையோ கணவரிடம் விடாமல் எல்லாவற்றையும் தானே சுமந்து கொண்டு வாழ்ந்தார். அதனால் தான், கவிஞர் தாகூர் எந்தவிதமான கவலைகளும் இல்லாமல் அவரது சிந்தனைகளைச் செம்மையாக ஓட வைத்தார்! அந்த ஓட்டம் உலகம் போற்றும் பல நூல்களை உருவாக்கியது.

கவிஞர் தாகூர் கலைத் தொண்டுகளுக்காக அடிக்கடி சாந்தி நிகேதன் செல்வார். அங்கே நாள் கணக்கில் தங்கி நூல்களை எழுதி முடித்துவிட்ட பிறகே கல்கத்தா திரும்புவார். கவிஞர், ஆண் மக்கள் இருவருக்கும், பெண் மக்கள் மூவருக்கும் அரிய தந்தையாக விளங்கினார்.

கவிஞர் தாகூர் தனது தந்தையாரைப் போலவே ஆடம்பரத்தை வெறுத்தார். பகட்டு, படாடோபம், வெற்று விளம்பரம், இலக்கியக் கோஷ்டி, அரசியல் கோஷ்டி தன்னைப் புடை சூழாமல், ஜால்ரா தட்டிகளையும், முகஸ்துதியாளர்களையும் அண்ட விடாமல் செம்மையாக வாழ்ந்து காட்டினார்.

தூய்மை என்பதும், அழகு என்பதுமே அவருடைய உள்ளத்தை ஈர்த்தன! அதற்காக அவர் ஆடம்பரத்தை நாடிய வரல்லா்! தமது குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் துணி மணிகள் வாங்கும் நிலையேற்படும்போது, எளிமையாகவும், சிக்கனமாகவும் இருப்பார்! அதிகச் செலவுகளை யார் செய்தாலும் தடுப்பார்.

பணக்காரக் குடும்பத்திலே பிறந்து வளர்ந்த மாதரசியான மிருணாளினி, தனது கணவர் என்ன சொல்கிறாரோ, எப்படிச் செயல்படுகின்றாரோ அவற்றையெல்லாம் வரும்பொருள் உரைக்கும் மந்திரியைப் போல, வருமுன் உணர்ந்து நடந்து கொள்ளும் அருங்குணவதியாக வாழ்ந்தார். பெற்றோர் அணிவித்த நகைகளை எல்லாம் பெட்டிக்குள் வைத்துவிட்டு, ஓர் ஏழைப் பெண்போலவே அவர் விளங்கினார். அந்த அரிய பண்பை அவரது வீட்டார் அனைவரும் பாராட்டி மகிழ்வார்கள்.

தாகூர், தேவேந்திர நாத் குடும்பத்தின் பதினான்காவது, கடைசிப் பிள்ளை அல்லவா? அதனால், கவிஞரது மனைவியார் எல்லா மருமகள்களையும் விட மிக இளைய மருமகளாகவும், அழகாகவும், எளிய கோலமாகவும் இருந்ததைக் கண்ட குடும்பத்தினர் எல்லாருமே அந்த அம்மையாரிடம் தனி அன்பு, மரியாதை, மதிப்பு வைத்தே பழகி வந்தார்கள்.

அத்தகைய மதிப்பு வைத்திருக்கும் அவர்கள் எதிரே பணிவாகவும், அடக்கத்தோடும், செல்வந்தன் மகள் என்ற செருக்கற்றும், நகையலங்காரம், ஏதுமின்றி பொறுமையாகவும், பெருமையாகவும் அந்த அம்மையார் நடந்து கொண்டது கவிஞருக்கு மிகப் பெரிய மரியாதையை அந்தக் குடும்பத்தில் பெற்றுத் தந்தது.

கவிஞர் தாகூருக்கு பிறந்த நாள் விழா வந்தது. அப்போது கணவருக்குத் தங்கத்தால் பொத்தான்கள் செய்து கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார் கவிஞர் மனைவி. அதற்குத் தாகூர் ‘நான் என்ன பெண்ணா? ஆண்கள் நகை அணிந்து கொள்வதா! என்று பேசி, அந்தப் பொத்தான்களை அணிந்துகொள்ள மறுத்து விட்டார். அம்மையாரும் அவரது எண்ணத்தை வரவேற்றார்.

மனைவி மிருணாளினி தேவியோடு கவிஞர் தாகூர் சாந்தி நிகேதன் சென்று அமைதியை நாடினார்! மற்றவர்கள் எப்படி அங்கே குடிசையிலே வாழ்ந்தார்களோ, அதுபோல தாகூரும் தனக்கென ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு வாழ்ந்தார்! எளிமையான உணவு வகைகளையே அவர் உண்டார்.

மிருனாளினி அம்மையார், கணவருடைய கொள்கைகளையும், அவரது மன உறுதிகளையும் ஏற்று, மதித்து அவருக்குத் தக்கவாறு, உண்மையான வாழ்க்கைத் துணைவியாக நடந்தார்! கவிஞர் ரவீந்திரரும் தனது மனைவியின் அற்புதமான குடும்பச் சேவையை எண்ணிப் போற்றினார்!

இவர் மனைவியாக வாய்த்த அருமையைதாம் பெற்ற பெரும் பேறாகவே மதித்தார். சில நேரங்களில் சமையலறைக்கே வந்து மனைவிக்கு தக்கபடி உதவுவார்!

மிருனாளினி தேவியார் திடீரென நோய் வாய்ப்பட்டார். படுத்த படுக்கையாக இரண்டு மாதம் நோயால் வருந்தினார்! வேதனைப்பட்டார்! அப்போதெல்லாம் கவிஞர் பெருமான் தாகூர், தனது மனைவி அருகேயே அமர்ந்து, வாடிய முகத்தோடு இரவு பகல் என்று பாராமல் கண் விழித்தபடியே விசிறிக் கொண்டே இருந்தார்! மனைவியின் அருமைச் செயல்களை எண்ணியெண்ணி மனம் தளர்ந்து, அம்மையாரின் இறுதி நேரம் வரை அருகிருந்தே எல்லாப் பணிகளையும் செய்தார்! அதைப் பார்த்து சாந்தி நிகேதனே வியந்து இந்தக் கணவன்-மனைவி உறவினைப் பாராட்டியது.

கவிஞர் தாகூர் பெருமான் திடீரெனக் கண்ணீர் விட்டார். வாய்விட்டு அழமுடியாமல் தேம்பித் தேம்பிக் கண் கலங்கினார்! அதாவது தனது அருமை மனைவி மிருணாளினி மறைந்து விட்டார் என்று மற்றவர்களுக்குக் கூற முடியாமல் அவரது கண்கள் கண்ணீரை மட்டுமே சிந்திக் கொண்டிருந்தன!

மிருணாளினி தேவியார் அருகே உலகம் புகழும் கவிஞர் பெருமான்! பெற்ற பெண்கள் மூவர்! மகன்கள் இருவர்! பதின்மூன்று மூத்தார்கள் கண்ணிர் பெருக்கோடு; அவர்களது துணைவியர்கள் அனைவரும் கதறலோடு, மாமியாரும், மாமனாரும் துன்ப உணர்வுகளோடு துவண்டு கிடந்தார்கள்.

முப்பத்தொன்பதாம் வயதிலேயே கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மனைவியை இழந்தது முனிவர் போல வாழ்ந்தார்!