கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/தாகூரின் சமயக் கொள்கை

விக்கிமூலம் இலிருந்து



4. தாகூரின் சமயக் கொள்கை


நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பதற்கேற்ப, தாகூர் குடும்பத்தையே பல்கலைக் கழகம் என்று பெருமிதத்தோடு கூறலாம். அத்தகைய ஒரு கலைக்கழகமாக தாகூர் குடும்பமும் திகழ்ந்தது. தேவேந்திர நாத் வீட்டில் அவர் பெற்ற மக்கள் எப்போதும் அறிஞர்களோடு அளவளாவிக் கொண்டே இருப்பார்கள்! அப்படிப்பட்ட பல்கலைவாணர்களுடன் ரவீந்திரர் பழகும் வாய்ப்பு உருவானது. அதுவும் அவருக்கு உதவியது.

ரவீந்திரரின் பெரிய அண்ணன் பல்கலையில் வல்லவர். அவருடைய தத்துவஞான வித்தகமும், கணக்கியலறிவும் ரவீந்திரரைப் பெரிதும் ஈர்த்தன! அதே நேரத்தில் வங்க மொழியில் பாடல் எழுதுவதில் மிகச் சிறப்பானவர். அவர் தனது தம்பி ரவீந்திரருக்கு நீச்சல் கலையைக் கற்றுக் கொடுத்தார்.

ஐந்தாம் அண்ணன் ஜோதிரீந்திர நாத் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. வங்க சமுதாயத்தில் நிலவி வரும் மூடப் பழக்க வழக்கங்களை எதிர்ப்பவர். வங்க மக்களிடையே ஒரு மறுமலர்ச்சி இயக்கம் உருவாக வேண்டும் என்று அரும்பாடு பட்டு வந்தவர்! பிரம்ம சமாஜம் போன்ற சமூக சீர்திருத்த இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்.

ஊருக்கு மட்டும்தான் சீர்திருத்தவாதியின் உபதேசம்! அவனது வீட்டுக்குள் இல்லை என்ற நிலையிலே நில்லாமல், மூடப் பழக்க வழக்கங்களில் ஒன்றான, பெண்களின் முகத்தையும் உடலையும் மறைத்துக் கொள்ள பயன்பட்ட ‘பர்தா’வை அகற்றிய சீர்திருத்தக்காரா் ஆவார்.

அந்த நேரத்தில் வங்காளத்தில் பெண்கள் அணியும் பர்தா முறையை அகற்றுவதென்பது அவ்வளவு சாமானியமானதல்ல. ஆனாலும் எது வந்தாலும் ஏற்கத் தயார் என்ற துணிவோடு தாகூர் குடும்பம் அந்த முறையை அகற்றி விட்டது. தனது ஐந்தாம் அண்ணன் செய்த இந்த மகத்தான சமுதாய சீர்திருத்தச் செயல் ரவீந்திரருக்கு மிகவும் பிடித்திருந்தது.

என்றாலும், அவரது ஐந்தாவது அண்ணனிடமிருந்து அவருக்கு மிகவும் பிடித்தது அவருடைய இசை ஞானம் தான். அதே மாதிரி அவருடைய நாடகக் கலை அறிவும், நடிப்பாற்றலும் ரவீந்திரருக்குப் பிடித்திருந்தது. அக்கலையைத் தாமும் பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டிக் கொண்டே இருந்தது.

ஜோதிரீந்தா் தாகூர் இசைக் கருவிகளை இயக்கிப் பாடும் போதெல்லாம், தம்பி ரவீந்திரர் தனது பாடல் புனையும் ஞானத்தால் அண்ணனுக்கேற்ற ‘பா’க்களை எழுதிக் கொடுப்பார்! எழுதிக் கொடுப்பதோடு மட்டும் நில்லாமல் தமையனின் ராகத்திற்கேற்றவாறு பாடவும் செய்வார்; இசை ஆர்வம் அவ்வளவு இருந்தது அவருக்கு!

எதிர்காலத்தில் உலகப் பெரும் கவிஞர்களுள் ஒருவராக விளங்கப் போகின்ற தாகூருக்கு இந்தப் பயிற்சி ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகவே அமைந்தது. ஒவ்வொரு நாளும், மாலை வேளை தோறும் தனது அண்ணியார் எதிரே அமர்ந்து பாராட்டி மகிழ, அண்ணன்மார்களுள் ஒருவரான ஜோதிரீந்திர நாத் வீணை வாசிக்க, ரவீந்திரர் பாடல்களைப் பாடிப் பாடி வீட்டாரைப் பரவசப் படுத்துவார்.

பங்கிம் சந்திரா் கருத்து கவர்ந்தது

உலகத்திலும், இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்களிலும் வங்காள இலக்கியத்தைப் பற்றி பெரியதோர் மதிப்பும், மரியாதையும் அக்காலத்தில் பரவியிருந்தது. அந்த இலக்கியவாதிகளில் முக்கியமானவரும் பெரும் புகழுக்குப் பாத்திரமானவருமான சந்திர சட்டர்ஜி. மிகச் சிறந்த நாவலாசிரியா்; சிறந்த சிறுகதை மன்னா்; வங்க இலக்கிய உலகில் ஈடும் இணையுமற்றவராக விளங்கினார். பிற்காலத்தில் ‘ஆனந்த ஆஸ்ரமம்' போன்ற பல கதைகள் திரைப்படமாக வந்து இந்திய மக்களைப் பெரிதும் கவர்ந்தன என்பது மட்டுமன்று; இந்திய மக்களையும் பெருமைப்படுத்தின.

அத்தகைய பெரும் எழுத்தாளர், வங்கத்திலே இருந்து வெளிவந்து கொண்டிருந்த “பங்க தாஸன்” என்ற ஒரு வங்க மொழி மாதப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்தார். மக்கள் அக் கதைகளைத் தொடர்ந்து வாங்கிப் படித்து, பங்கிம் சந்திரனைப் புகழ்ந்தார்கள்.

தாகூர் குடும்பமும் அந்தப் பத்திரிக்கையைத் தொடர்ந்து வாங்கிப் படித்து வந்தது. அதனால், பங்கிம் சந்திரருடைய பெருமையை அவர்களும் பாராட்டினார்கள். அந்தப் பத்திரிகையிலே தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பங்கிம் சந்திரர் கதைகளை ரவீந்திரர் ஆர்வமாய் உரக்க எல்லாரும் கேட்கும்படி படிப்பார்!

‘பங்காதஸன்’ என்ற வங்கமொழி மாதஇதழைப் போலவே, ரவீந்திரரின் தமையன் மார்களுன் ஒருவரான சத்யேந்திர நாத் என்பவர், ‘பாரதி’ என்ற பெயரில் ஒரு மாதப் பத்திரிகையைத் துவக்கினார். சத்யேந்திரர் ஐ.சி.எஸ். பட்டம் பெற்றவர். ரவீந்திரரின் மூத்த அண்ணன் அதற்கு ஆசிரியராக இருந்தார்.

ரவீந்திரர், பாரதி பத்திரிகையில் தமது பாடல்களையும், கதைகளையும், கருத்துக்களையும் எழுதி வெளியிட்டார். பத்திரிகை நிர்வாகக் குழுவிலும் ஒருவராகச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது பதினாறு!

‘பாரதி’ பத்திரிகையில் ஜோதிரீந்தரர் நாடகங்களைத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்த நாடகத்தை அப்போதைய கல்கத்தா நகர மக்களில் சிலர், அவரவர் வீடுகளிலே நாடகமாக்கி நடித்தார்கள். அந்த நாடகத்தை ரவீந்திரரும் தனது இல்லத்தில் நாடகமாக்கி நடித்தார்.

துன்பவியலானாலும் சரி, இன்பியலானாலும் சரி, அல்லது வேடிக்கைப் பகுதியானாலும் சரி, உணர்ச்சியூட்டிடும் பகுதிகளானாலும் சரி, எந்தக் கட்டத்தையும் அதனதன் சுவையுணர்வுகளுக்கு ஏற்றவாறு அவர் நடித்துக் காட்டிப் பாராட்டுப் பெற்றவரானார். ரவீந்திரரின் இந்த நாடகப் புலமைத்திறமை பதினாறு வயதோடு நின்று விடவில்லை. வாழ்நாள்முழுவதும் அவர் இக்கலையிலே ஒன்றி விட்டார்!

இலக்கியம் படிக்க லண்டன் சென்றார்

ரவீந்திரர், பதினான்காம் வயதில் தாயை இழந்தார். தாய் இறக்கும் போது அவருக்கு மரண துன்பம் ஏதும் எழவில்லை. பிறந்தவர் இறப்பது தானே நியாயம் என்ற நினைப்பில் மரணத்துக்கு அவர் மதிப்பு தரவில்லை! ஆனால், அவரது அன்னை உடல் வீட்டைவிட்டு தகனத்துக்காக வெளியே வந்தபோது, தனது தாயின் முகம் கண்டு கதறி விட்டார்! கண்ணீர் சிந்தினார்! மீளாத்துயருற்றார்!

தாய்க்குப் பிறகு ரவீந்திரருடைய அக்காள், அண்ணி, அண்ணன்மார்கள், அப்பா உட்பட பலர் அவருக்கு ஆறுதல் கூறியும் கூட, அவரது துன்பத்தை எவரும் தணிக்க முடியாததாக இருந்தது. அதே நேரத்தில் அவர் கடைசிப் பையனல்லவா? அதனால் எல்லாரும் அவரைப் பரிவுடனும், பாசத்துடனும் வளர்த்து வந்தார்கள். ஜோதிரீந்தரரின் மனைவி தான் ரவீந்திரரை மிகப் பாசமாக தனது பிள்ளையைப் போல வளர்த்து வந்தார். அதனால் அவர் தனது அண்ணியின் கடைசி நாள் வரை அவரது பாசத்தை மறவாமல் நன்றி காட்டிவந்தார்.

ரவீந்திரர் எவ்வாறு தனது தாயின் மரணத்தைக் கண்டாரோ, அந்த நிலை அவரது பிள்ளைகளுக்கும் வந்து விட்டது. ரவீந்திரரின் அருமை மனைவி மிருணாளினி மரணப் படுக்கையிலே வேதனையுற்றபோது, தனது இரண்டாம் மகனான சமீந்திர நாதனைத் தன் தாயருகே இருக்கவிடவில்லை அவர். மரணத்தின் வேதனையை தமது மக்கள் காணக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு அவர் செய்தார். ஆனால்,துன்பங்கள் அடுக்கடுக்காய்த் தொடர் கதையாயின.

சத்யேந்திர நாத் தாகூர், 1878ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். லண்டன் மாநகரில் இங்கிலீஷ் இலக்கியங்களைக் கற்றிட ரவீந்திரா், தனது அண்ணனுடன் சென்றார். ஓர் ஆங்கிலப் பள்ளியில் அவர் சேர்ந்தபோது, அப் பள்ளி மாணவர்கள் அவருடன் அன்பாகப் பழகினார்கள்.

பிறகு, லண்டன் மாநகரிலே உள்ள ஓர் ஆங்கிலக் கல்லூரியில் சேர்ந்து இங்கிலீஷ் இலக்கியங்களைக் கற்றார். ஏறக்குறைய 18 மாதங்கள் அக் கல்லூரியிலே சேர்ந்து அவர் படித்தும்கூட, எந்த ஓர் இலக்கியப்பிரிவிலும் அவர் தேறவில்லை. மாறாக, ஆங்கில மாணவர்கள் சிலரிடம் அரிய நண்பராக, அவர் நெருங்கிப் பழகினார். அவர்களிடம் நட்பு பெற்றதுதான் அவருக்கு லாபமாக இருந்ததே தவிர, எந்தப் பட்டமும் பெறாமலேயே அவர் இந்தியா திரும்பி வந்தார்.

எந்தப் படிப்பும் படிக்காமல், எந்தப் பட்டமும் பெறாமல், எடுத்த பாடப் பிரிவுகளையும் முடிக்காமல் அரை குறையாகவே ரவீந்திரா் இருப்பதைக் கண்ட குடும்பத்தினர் அனைவரும் மிகவும் கவலையும்- வருத்தமுமுற்றார்கள். அதனால், சட்டப்படிப்பு படிப்பதற்காக மறு ஆண்டே அவர் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கல்கத்தா நகரிலே இருந்து தனது அண்ணன் மகனுடன் கப்பல் ஏறினார்! இருவரும் சென்னை துறைமுகம் வந்தபோது, ரவீந்திரர் அண்ணன் மகன் நோய் வாய்ப்பட்டார். அதனால், ரவீந்திரர் லண்டன் போகாமல், சென்னையிலே இருந்து நேராகக் கல்கத்தா சென்று விட்டார். சட்டப் படிப்பும் இத்துடன் முற்றுப் பெற்று விட்டது. இப்போது ரவீந்திரருக்கு இருபது வயது. கிழக்கு வங்காளத்திலுள்ள நிலங்களில் விவசாயம் செய்யும்படி தேவேந்திரா் ரவீந்திரரிடம் அதற்கான பொறுப்புகளை எல்லாம் ஒப்படைத்தார்.

சட்டப்படிப்பு படிக்க லண்டன் சென்ற ரவீந்திரர் சென்னை துறைமுகத்தோடு மீண்டும் கல்கத்தா திரும்பிய பிறகு, மறுபடியும் வழக்குரைஞர் பணிக்காகக் கல்வி கற்றிடும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு அவர் கலை, இலக்கியத் துறையிலே ஈடுபடலானார்.

தாகூர் எழுதிய முதல் புத்தகம்

முதலில் இசைத் துறையில் மும்முரமாகப் பணியாற்றினார். புதிய சில இசை நயங்களைக் கண்டு பிடித்து வங்காளத்திற்கு வழங்கினார். அந்த நேரத்தில் வங்காளத்தில் கல்கத்தா அருகே கங்கை நதிக் கரையிலே உள்ள சந்திர நாகூர் என்னும் நகரில் அவரது அண்ணன் ஒருவர் வசித்து வந்தார்.

அந்த ஊருக்கு ரவீந்திரர் சென்றார். கங்கை நதியில் பொங்கி வரும்வெள்ளத்தின் அழகையும், அதன் ஆரவார ஆர்ப்பரிப்பு ஓசை நயங்களையும் பலவிதமாகப் பல முறைகள் பார்த்தும், கேட்டும் வியந்தார்.

கங்கை ஆறு ஓரத்திலே ஓரிடத்தில் அமர்ந்து, அதன் ஒசை, வேகம், வெள்ளப்பெருக்கு நீர்க்கொந்தளிப்பு ஆகியவற்றைக் கூர்மையாகக் கவனித்து, அதனதன் செயலசைவுகளுக்கு ஏற்றவாறு பல பாடல்களை எழுதினார்.

இவ்வாறு அவர் தொடர்ந்து எழுதிய பாடல்கள் பற்பல. அவற்றை எல்லாம் தொகுத்து ‘மாலைப் பாடல்கள்’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக ரவீந்திரா் வெளியிட்டார். இந்தப் புத்தகம் தான் அவரது பெயரில் வெளியான முதல் புத்தகமாகும்.

‘மாலைப் பாடல்கள்’என்று வெளி வந்த தாகூரின் முதல் புத்தகத்தைப் பார்த்து அவரது தந்தையார் தேவேந்திர நாத் தாகூர், பேரானந்தம் பெற்றார். அதனைப் போலவே, ரவீந்திரரின் எல்லா அண்ணன்மார்களும், அண்ணியார்களும், மகிழ்ச்சியடைந்தார்கள்.

அந்த நூல், வங்காளத்து மக்களிடையே பெரும் பரபரப்புடன், விற்றது. ஒவ்வொரு இசைக் கலைஞர்களும் அந்த நூலைப் பாராட்டி மகிழ்ந்து போற்றினார்கள். விற்பனையும் அதிகமானது. வங்க மக்களின் இலக்கிய அறிவாளர்கள் பலர் அந்நூலின் சொற்சுவை, பொருட்சுவை, இசை நயச்சுவை அனைத்தையும் வாயார வாழ்த்தியது மட்டுமின்றி, ‘வங்காளத்தின் ஷெல்லி’ என்று தாகூரை மனம் திறந்து பாராட்டினார்கள். இசை உலகுக்கு அன்று வரை கிடைக்காத ஒரு இசைப் பாடல் தொகுப்பு நூற் புதையல் ஒன்று கிடைத்ததாக எல்லாகும் வியந்தார்கள்!

கல்கத்தா நகரில் புகழ் பெற்ற ஒரு குடும்பத்தினரின் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண வீட்டார் புகழ்பெற்ற வங்கக் கவிஞரான தாகூருக்கும் அழைப்பு அனுப்பி, அவரை நேரிடையாகச் சென்று வரவேற்றார்கள். காரணம், வங்கத்தில் புதிதாகப் புகழ்பெற்றுவரும் ஓர் இளையதலைமுறைக் கவிஞர் தமது திருமண நிகழ்ச்சியில் கலந்து வாழ்த்துவது மண வீட்டார்களுக்கும் பெருமை அல்லவா? அதனால் தாகூரை நேரில் சென்று இரு வீட்டாரும் அழைத்தார்கள்.

அந்த அழைப்பை ஏற்று வங்கக் கவிஞர் தாகூர் சென்றிருந்தார். அவரை அமோகமாக இரு வீட்டாரும் வரவேற்று அமரச் செய்தார்கள்.

அப்போது, வங்க மொழி மக்கள் இடையே மிகச் சிறந்த நாவலாசிரியர் என்று புகழ் பெற்றிருந்தவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, அவரையும் திருமண வீட்டார் நேரில் சென்று அழைத்ததால், அவரும் அந்த திருமண நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்தார்!

பங்கிம் சந்திரர் பாராட்டு

இந்தச் சம்பவத்தைக் குறித்து பிற மொழியாளர்கள் சிந்திக்கும் போது ஒன்று புரிகின்றது. அதாவது, வங்க மொழியைத் தாய் மொழியாகப் பெற்றவர்கள். அந்த மொழிக்குத் தொண்டு செய்வோரை, அவர்கள் தங்களுக்கு முன்பின் நேரிடையான அறிமுகமோ, அல்லது தொடர்போ இல்லாமலிருந்தாலும் கூட, அந்த வங்கமொழி வித்தகா்களை அவரவர் வீட்டிலே நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்து பலரறியப் பாராட்டி அறிமுகப்படுத்துவதையும்-மொழித் தொண்டாகக் கருதி இருந்தார்கள்.

அந்தத் திருமணத்திற்கு பங்கிம் சந்திரரும், கவிஞர் தாகூரும் வந்திருந்தார்கள்! அப்போது திருமணம் நடத்துவோர். தாகூரையும், சட்டர்ஜியையும் பெருமைப்படுத்துவதற்காக மலர்மாலைகைளை எடுத்துக் கொண்டு வந்து, முதன் முதலாக சட்டரிஜி கழுத்தில் அணிய முற்பட்டபோது, பங்கிம் சந்திரர் அதைத் தடுத்தார்!

அந்த மாலையைத் தனது கைகளிலே வாங்கிக் கொண்டு, இரண்டு மூன்று இருக்கைக்கு அப்பால் அமர்ந்திருந்த ரவீந்திரரிடம் சென்று, அவர் கழுத்திலே சூட்டி சட்டர்ஜியே முதலில் கையொலியை எழுப்பினார்.

அனைவரது முன்பும் தாகூரது கலைத் தொண்டைப் பாராட்டி அங்குள்ள அனைவருக்கும் மூத்த எழுத்தாளரான சட்டர்ஜி அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்! பிறகு திருமண மண்டபமே அதிர கையொலிகள் எழுந்தன!

இதுபோன்ற சான்றாண்மை மனம் தமிழ்நாட்டு எழுத்தாளர்களிடம் இன்றாவது இருக்கின்றதா? “தந்தை பெரியார் சொல்வதைப் போல மூன்று புலமையாளர்கள் கூடினால் போலீஸ் லாரிதான் வரும்”

காண்பனவெல்லாம்; கவின் மிகு காட்சியே!

ஒரு நாள் காலையில் கல்கத்தா நகரில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்தார் ரவீந்திரர். அப்போது சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. இரண்டு மரங்களுக்கு இடையில் கதிரவன் ஒளிக்கதிர்கள் பரவி ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்ததைத் தாகூர் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே நின்றார். அப்போத அந்தக்காட்சி அவரது சிந்தனையிலே ஒரு புதிய மாற்றத்தைப் புகுத்திக் கொண்டிருந்தது.

அன்றுவரையில் அவரது கண்கள் உலகை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால், அப்போது பார்த்த பார்வையில் அவருடைய உள்ளமும். உயிரும் ஒன்றி எதையோ நோக்குவதாகவும் உணர்ந்தார்.

அப்போது வீதியிலே இரண்டு பேர் கை கோத்துச் சிரித்து மகிழ்ந்து செல்லும் காட்சியில் புதிய ஓர் இன்பம் பூத்து உலவுவதையும் அறிந்தார்.

ஒரு பசு தனது இளங்கன்றுடன் தலையை ஆட்டியாட்டிச் சென்றது. ஒருதாய் தனது குழந்தையை அணைத்துக் கொண்டு நடந்தது போன்றவை அழியாக் காவியமாக அவருக்குத் தெரிந்தன.

ஊற்றின் எழுச்சி

இதற்கு முன்பு பார்த்துப் பழகுவதற்கு வெறுப்பாக இருந்த ஒருவன், அவரை நெருங்கி வந்து கொண்டிருப்பதைத் தாகூர் கண்டனர்; ஆனால், பழைய வெறுப்பே தோன்றாமல், அன்பும் பரிவும் அவனைக் கண்டதும் தனது உள்ளத்தில் உந்துவதை அவர் உணர்ந்தார். அந்தப் புதிய இன்ப உணர்ச்சியைப் பாட்டாக அவர் எழுதினார். ஊற்றின் எழுச்சி’ என்று அதற்குப் பெயரிட்டார்.

அன்று முதல் அவர் கண்டபுதிய மாறுதல் என்னவென்றால், கண்களுக்குப் பயனற்ற பொருளாக எதுவும் கிடையாது என்பதாகும். இயற்கையில் எந்தப் பொருளும், கை புனைந்தியற்றாக் கவின் பெறும் அழகின் பகுதியாகவே தோன்றுகின்றது. அந்த தோற்றமே தாகூர் உள்ளத்திற்கு ஒரு கலை விருந்தாகியது.

இயற்கையின் இந்தக் கண்டுபிடிப்பு அவருக்கு 1882-ஆம் ஆண்டில்தான் தெரிந்தது. இந்த புதிய மாறுதல் அவருக்குப் புறத்தே ஏற்பட்ட மாறுதலன்று; உள்ளத்திலே உதயமான ஒரு புதுமையான மாறுதலாகும்.

இயற்கை அழகு அவரது உள்ளத்திற்கு எப்படி ஒரு புதிய உணர்வையூட்டியதோ, அதே போல-அன்பு நெறியும் அவருக்கு ஒரு புத்துணர்வை புகுத்தியது.

இலக்கிய உலகைக்கலக்கிய ‘துறவி’

இந்தியாவின் மேற்குக் கரையில் அதாவது அரபிக் கடலோரத்திலே உள்ள கத்தியவார் நகரில் தாகூரின் அண்ணன் சத்யேந்திர நாதத்தின் குடும்பம் இருந்தது. ரவீந்திரர் அந்த அண்ணன் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார்.

அரபிக்கடலின் அகன்ற தோற்றமும், அதன் அழகும் ரவீந்திரர் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தது. அக் கடலோரத்தின் அலைகளது ஆடலும் அதன் ஒசைகளும், இவற்றிடையே அவர் இரவின் நிலவொளியில் நடந்து செல்வதும் அவருக்குப் பேரின்பமாக இருந்தது.

அந்தக் கடலோரக் காட்சிகளை அனுபவித்துக் கொண்டே ஒரு நாடகத்தை எழுதினார்! அதற்கு ‘துறவி’ என்ற பெயரைச் சூட்டினார்! அந்த நாடகம் இன்றும் இலக்கிய உலகிலே ஒரு விண்மீனாக விளங்கி, மக்கள் பாராட்டைப் பெற்று வருகின்றது.

உலகத்தின் ஆசைகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்ட ஒரு துறவி. அவர் நீண்ட நாட்களாகத் துறவு மனப்பான்மையில் பழுத்த ஞானி! எல்லாவற்றையும் அறவே துறந்துவிட்ட சந்நியாசி அவர். அவருக்கு தன் துறவு மீதிருந்த அசைக்க முடியாத மன உறுதியால், இனி ஊருக்குள்ளே செல்லலாம், மக்களது ஆசாபாசங்கள் நம்மை எந்த விதத்திலும் ஊனப்படுத்தாது என்ற மன உறுதியோடு ஓர் ஊருக்குள்ளே வந்தார்.

ஒரு இடத்தில் வசந்தி என்ற ஒரு பெண் குழந்தை யாரும் அற்ற அநாதையாகத் துறவி பக்கத்திலே வந்து உட்கார்ந்தது. துறவிதானே அவர், அதனால் மனதிலே எந்தச் சலனமும் இல்லாமல் அக்குழந்தைக்கு தன் பக்கத்திலே அமர இடம் கொடுத்தார்.

அந்த குழத்தை துறவியிடம் அதிகமான அன்பைக் காட்டிப் பழகியது. பாறை போன்ற துறவியின் மனம் அக்குழந்தையின் அன்புள்ளத்தால் நெகிழ்கின்றது. என்னடா நமது உள்ளம் இவ்வாறு ஓர் உருக்கத்தை அப்பெண் குழந்தையிடம் காட்டுகின்றதே என்று எண்ணிய துறவி, சந்நியாசி நெஞ்சில் பாசச்சலனம் புகக் கூடாது என்ற முடிவில், குழந்தையான வசந்தியை விட்டு விட்டு ஓடுகின்றார்!

ஓடிக்கொண்டிருக்கும் துறவி, வேறோர் சிறு பெண், தனது தந்தையைக் காணாமல் அப்பா, அப்பா என்று அழுதபடியே வறுமைக் கோல வடிவத்தோடு வருவதை, தனது ஓட்டத்தைத் தீடீரென்று நிறுத்தி விட்டுக் கவனித்தார்.

அப்போது, முன்பு அன்பைப் பொழிந்த வசந்தி என்ற குழந்தையின் நிலையை எண்ணி துறவியின் நெஞ்சம் உருகுகின்றது. அதனால், மீண்டும் வசந்தியைப் பார்க்க வேண்டும் ஆறுதல் கூற வேண்டும் என்று நெஞ்சம் உருகி பழைய இடத்திற்கே மீண்டும் ஓடி வருகிறார் வசந்தியைக் காணவில்லை அக்கம் பக்கம் எங்கும் தேடி அலைகிறார்! பரிதவிக்கின்றார்!

துறவுக்குரிய கமண்டலத்தைக் கீழே போட்டு உடைக்கிறார். திரி தண்டத்தை உடைத்தெறிகிறார்! அந்த வழியே வருகின்றோர் போகின்றோர் அனைவரிடமும் வசந்தியைப் பார்த்தீர்களா? என்று கதறிக் கேட்கிறார். வசந்தி எங்கே? எங்கே வசந்தி? என்று கூவுகின்றார்! ஓலமிட்டுக்கொண்டே ஓடி ஓடி அலைகின்றார்! இறுதியில் ஒருவர். வசந்தி இறந்து விட்டாள் என்று கூறக் கேட்டு துயரடைகின்றார்! அழுது கொண்டே அமர்ந்து விடுகின்றார் துறவி!

தாகூர் எழுதிய அந்தத் ‘துறவி’ என்ற கதை இதுதான். உலக வாழ்க்கை, உயர்வுக்குத் துணையே அன்றித் தடை ஆகாது என்பதற்காகவும், அன்பு நெறிதான் வாழ்க்கைக்கு உரியது என்பதை உலகுக்கு உணர்த்தவும், இந்தத் துறவி நாடகத்தை அவர் உலகுக்கு வழங்கினார்!

வாழ்வியலில் தாகூர் துன்பவியலை எழுதுவதில் வல்லவர் என்பதை நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அதற்குரிய சான்றான ஒன்றுதான் ‘துறவி’ நாடகமாகும்.

அதே ஆண்டில், ரவீந்திரருக்குத் திருமணமும் நடந்தேறியது. மிருணாளினி என்ற மாதரசியை, அவருக்கு மனம் செய்வித்தார்கள். அந்த அம்மையார் கவிஞர் தாகூரின் குண்ங்களுக்கேற்ப பண்பரசியாகவே அமைந்தார்!

“என் சமயம் மனிதன் என்பதே!”

கவிஞர் இரவீந்திர நாத் தாகூரின் தந்தையார், பிரம்ம சமாஜம் எனும் ஓர் அமைப்பை உருவாக்கிய சான்றோர்களிலே ஒருவர். இந்த அமைப்பு இந்து மதத்திலே உள்ள மூடப்பழக்க வழக்கங்களை அகற்றி, மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அமைந்த ஒரு சீர்திருத்த அமைப்பாகும்.

பலதெய்வ உருவ வழிபாடுகளை எதிர்த்தும், ஒன்றே தேவன் என்பதை ஆதரித்தும் உருவான அமைப்புதான் பிரம்ம சமாஜம்! தனது தந்தையாருக்குப் பிறகு அந்த சமாஜம் உடைந்து போனதால், ரவீந்திரர் ஆதி பிரம்ம சமாஜம் என்ற ஒரு பிரிவுக்கு செயலாளரானார்! தனது இயக்கத்தை ஆதரித்துப் பல கூட்டங்களிலே அவர் பேசினார்! மக்களுக்கான தொண்டுகளைச் செய்தார்.

சமயத்தின் பெயரால் பல பிரிவுகளும் வேறுபாடுகளும் உருவாகிக் கொண்டே போனதை எதிர்த்து, அவர் அந்த இயக்கத்தை விட்டு விலகினார். ஆனால் “எனக்கென்று ஒரு சமயம் உள்ளது ‘என் சமயம் மனிதன் என்பதே” என்று உலகுக்கு உணர்த்தினார்.

நான் மனிதன்; சமய வேறுபாடுகளைக் கடந்தவன்; தேச பக்தியிலும் நான் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் என்றார். நாடுகளுக்கு இடையே வளரும் பகையைத் தாகூர் வெறுத்தார். ஆனால், நாட்டிற்குத் தொண்டாற்றுவதே பிறவியின் பணி என்று நம்பினார். அதனால், தான் அவர் எந்த நாட்டுப் பற்றாளர்களுக்கும் குறைந்தவர் அல்லர் என்பதைப் பல நேரங்களிலே நிரூபித்துக் காட்டினார்.

தேசத்திற்கு யார் தீங்கிழைத்தாலும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவற்றை உடனுக்குடன் கண்டிப்பதையே தனது தேசத் தொண்டடென்றும் கருதினார். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் அவர் நாட்டு மக்களுக்கு விரோதமாக நடந்தவரல்லர். அவருடைய நெஞ்சம் பகைக்கும் அன்பு காட்டும் மனமாக இருந்தது.