கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/தாகூரைக் கவர்ந்தன காளிதாசர் நூல்கள்

விக்கிமூலம் இலிருந்து



3. தாகூரைக் கவர்ந்தன
காளிதாசர் நூல்கள்

ரவீந்திரருக்குப் பாட்டு எழுதும் ஆசை, அவர் பள்ளியில் படிக்கும்போதே ஏற்பட்டது. பாடங்களை எழுதிட நோட்டுப் புத்தகங்களை அவரது தந்தையார் வாங்கிக் கொடுத்தால், அவற்றில் எல்லாம் பாடல்களாக நிரப்பிவிடுவார்.

நோட்டுப் புத்தகங்களை நிரப்பி விடுவதோடு மட்டும் நில்லாமல், தான் எழுதிய பாடல்களை தனது வீட்டிலேயே எல்லாருக்கும் கேட்கும்படி தாகூர் படித்துக் கொண்டே இருப்பார்! உரத்த குரலில் அவர் படிப்பதை அவருடைய தந்தையும், அண்ணன்களும் கேட்டு ரசிப்பார்கள்.

தந்தையின் கனவு

தனது மகன் பதினொரு வயதிலேயே வங்கமொழியின் அருஞ்சொற்களைத் தனது பாடல்களில் புகுத்தி எழுதியிருப்பதைக் கண்ட அவரது தந்தை, மிக வியந்து கேட்பார்! எதிர்காலத்தில் தனது மகன் சிறந்த ஒரு வங்கக் கவிஞன் ஆவானோ என்று அவர் பலமுறை ஆச்சரியப்பட்டதுமுண்டு. அந்த அளவுக்கு தாகூர் தனது சிறு சிறு பாடல் வரிகளிலே வங்க மொழியின் அருஞ்சொற்களை எழுதிவந்தார்!

தாகூர் எழுதிய பாடல்களிலே இன்பவியல் சம்பவங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால், துன்பவியல் கருத்துக்களும், சம்பவக் கோர்வைகளுமே அதில் குவிந்து கிடந்தன! சோக நிகழ்ச்சிகளை அவர் அழகாக எழுதுவதையே தனது கொள்கையாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் பள்ளியின் தலைமையாசிரியர் ரவீந்திரரை அழைத்து, ‘தாகூர் நீ பாட்டு எழுதுவதாக உன்னுடன் படிக்கும் நண்பர்கள் கூறுகிறார்களே, இது உண்மைதானா?’ என்று கேட்டு, ஒரு பொருளைத் தலைப்பாகக் கொடுத்து ‘இதைப் பற்றி எழுது பார்ப்போம்’, என்று கேட்டார்!

உடனே ரவீந்திரர், அவர் எதிரிலேயே, அந்தப் பொருளைப் பற்றிய பாடலொன்றை எழுதி, பாடியும் காட்டினார். வகுப்பு மாணவர்கள் கையொலி எழுப்பி மகிழ்ந்தார்ள். பொறாமை மனங்கொண்ட ஒரு சில மாணவர்களும் இருந்தனர்.

அவர்களில் ஒருவன் எழுந்து, தலைமையாசிரியர் முன்பே, ‘இந்தப் பாடல் ரவீந்திரன் எழுதியதன்று; புத்தகங்களில் ஏற்கனவே படித்து மனப்பாடம் செய்து வைத்திருந்த கருத்துக்களைப் புகுத்தி அடுக்கிக் காட்டியது போல இருக்கிறது என்றான்.

ஆனால், ஆசிரியர், அந்த அழுக்காறுப் பேச்சை நம்ப வில்லை. நான் திடீரென்றுதானே உங்கள் கண்ணெதிரே பாடல் தலைப்பைத் தந்து பாடல் எழுதுமாறு கேட்டேன். உங்கள் எதிரிலே அல்லவா எழுதிய பாடல் இது? இதை எப்படிக்குறை கூறிட உங்களுக்கு மனம் வந்தது? என்று கேட்டுவிட்டு, ரவீந்திரரைத் தன்னருகே அழைத்து, தழுவி, தட்டிக்கொடுத்துப் பாராட்டி, ‘ரவீந்திரா, மேலும் முயற்சி செய்!உனக்கு எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும்’ என்று அனுப்பி வைத்தார்.

நாடகப் பயிற்சி

தேவேந்திர நாத் தாகூரின் இல்லம் எப்போதும் ஒரு கலைக்கூடமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கும். அவரது மூத்த மகன்களில் சிலர் நாடகம் எழுதி பொழுது போக்காக நடிப்பார்கள் இதை வீட்டார் எல்லாரும் உற்சாகத்துடன் ஒன்று சேர்ந்து வேடிக்கை பார்த்து மகிழ்வார்கள்.

அந்த நாடகத்தைப் பார்க்க அக்கம் பக்கத்துச் சிறுவர்களை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். காரணம் படிக்கும் சிறுவர்கள் மனதைக் கூத்தாட்டத்திலே திளைக்க விடக் கூடாது. எதிர்காலத்தில் அவர்கள் படிப்புக்கு ஏதாவது தீமைகள் நிகழ்ந்து விடக் கூடாது என்ற அக்கறையால் சிறுவர்களைப் பார்க்கவிட மறுத்தார்கள்.

ரவீந்திரருக்கு மட்டும் இதில் விதி விலக்களிப்பார்களா என்ன? எனவே, தமது தம்பி ரவீந்திரரையும் நாடகம் பார்க்கவிடுவதில்லை. அதனால் அவர், முற்றத்தில், தோட்டத்துச் சுவரோரங்களில் நின்று கொண்டே நாடக வசனங்களைக் கேட்டு மகிழ்வார். சில நேரங்களில் எட்டியெட்டிப் பார்த்துக்களிப்பார்.

எதிர்காலத்தில் உலகம் போற்றும் நாடகங்களை எழுதப் போகும் ரவீந்திரனின் ஆற்றலை அவர்கள் எப்படி அறிவார்கள்? உலகப் பெரும் பேரறிவாளர்கள், மகாத்மா காந்தியடிகள், லோகமான்ய பால கங்காதர திலகர், பண்டிதர் மதன் மோகன் மாளவியா, சி.எஃப். ஆண்ட்ரூஸ் போன்றவர்கள் அனைவரும், ரவீந்திரரின் நாடக அறிவை, ஆற்றலைக் கண்டு பாராட்டப் போகிறார்கள் என்பதை அவருடைய வீட்டாரால் எவ்வாறு உணரமுடியும?

வீட்டுக்குள் நடக்கும் நாடகத்தையே பார்க்க விடாத ரவீந்திரரின் குடும்பத்தார், பிறகு எப்படி வெளியிடங்களுக்கு அவரை அனுப்பி வைப்பார்கள்? இதனால், அவர் பூட்டிய இரும்புக் கூட்டுக்குள் அடைபட்ட சிங்கமாகவே காலம் கழித்து வந்தார். கல்கத்தாவிலே ஒடும் ரயிலிலே கூட அவர் ஏறிப் பார்த்ததில்லை, பாவம்!

முதல் இரயில் பயணம்

தேவேந்திர நாத் தாகூர் ஒரு முறை போல்பூர் என்ற நகருக்கும், அங்கேயிருந்து இமயமலைச் சாரலுக்கும் போக வேண்டிய சூழ்நிலை வந்தது. அதனால், தனது கடைசி மகன் ரவீந்திரரை அவர் உடன் அழைத்துச்சென்றார். அப்போதுதான், ரவீந்திரா் முதன் முதலாக வெளியுலகைக் காணும் நிலை யேற்பட்டது. முதல் முறையாக அப்போதுதான் ரயில் வண்டி ஏறிப் பயணமும் செய்தார்! அந்த அனுபவம் அவருக்கு அளவில்லா ஆனந்தத்தை அளித்தது. மகிழ்ச்சி உண்டானது மட்டுமன்று; ரவீந்திரர் அண்ணன்மார்களில் ஒருவரான சத்யா என்பவர், ரயிலில் பயணம் செய்வது பெரிய ஆபத்தானது; ரயில் நடுங்கும், கர்ஜிக்கும் நினைத்தால் உலுக்கும்; குலுக்கும்! முடிந்தால் பள்ளத்திலே கூடத் தள்ளிவிடும்; புகையைக்கக்கும்; கண்களைக் கசக்கும் படியான கரித்தூள்களை நம்மேலே வாரி வீசும் என்றெல்லாம் பயங்காட்டி இருந்தார்! சிறுவரல்லவா ரவீந்தர்! அதை அப்படியே நம்பிவிட்டார்! அதற்கேற்ப அனுபவம் இல்லை. அந்தப் பயத்தை எல்லாம், தந்தையுடன் சென்ற போல்பூர் ரயில் பயணம் தகர்த்தெறிந்ததைக் கண்டு பேரானந்தம் அடைந்தார்.

சாந்தி நிகேதனும் தாகூரும்

போல்பூர் நகரிலே இருந்து இரண்டு மைல் தூரத்தில், அவரது தகப்பனார் தேவேந்திர நாத் ஓர் ஆசிரமம் கட்டி இருந்தார்! அங்கே அவர் அடிக்கடி சென்று அமைதியை நாடுவார்! சில நாட்கள் தங்கி இருப்பார். அந்த ஆசிரமத்திற்கு அவர் தந்தை சூட்டிய பெயர் சாந்தி நிகேதன்! இன்றும் உலகம் போற்றும் ஆலயமாக சாந்திநிகேதன் விளங்குகின்றது.

அந்த சாந்தி நிகேதனுக்கு ரவீந்திரர் தனது தந்தையுடன் 1873-ஆம் ஆண்டு சென்றார். அப்போதுதான் அவருக்கு வெளியுலகம் என்றால் என்ன என்பது புரிந்தது.

சாந்திநிகேதன் முழுவதையும் ரவீந்திரர் சுற்றிப் பார்த்தார். அங்கே தவழ்ந்த தட்ப வெட்பத்தையும், இதமான சாந்தி நிலையையும் கண்டு வியந்தார். தனது தந்தை காலை விடியுமுன்பு எழுந்து, அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதையும் அவரது வழிபாட்டையும் பார்த்து அவரும் ஒருவித மனத்தெம்பு பெற்றார்.

இவற்றையெல்லாம் ரவீந்திரர் அன்றே மிகக் கூர்ந்து கவனித்ததால் தான் பிற்காலத்தில் அவர் பெரியவரான பிறகு, தனது தந்தையார் வழிபட்டுவந்த தியான இடத்தை அவரது நினைவுக்குரிய சிறந்த அடையாளமாகப் போற்றி அமைத்தார்.

அவரது தந்தையார் தியானம் செய்த இடத்திலே இருந்த இரண்டு மரங்களை இன்றும் சாந்தி நிகேதன் செல்வோர் காணலாம். அந்த மரங்களுக்கு இடையே தனது தந்தை யாருக்குரிய நினைவு மண்டபத்தை அமைத்துள்ளார். 

இமயமலையில்; தந்தையும்-மகனும்!

இமயமலையின் அடிவாரத்தில் டல்ஹவுசி என்ற ஓர் இடம் உள்ளது. அது ஓர் அழகான தோற்றமுடைய சிற்றூர். பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னர்-ஜெனரலாக இருந்த டல்ஹவுசி என்பவரின் பெயரை அதற்குச் சூட்டினர். சுற்றுலா செல்பவர்கள் தங்குவதற்கான அழகான விருந்தினர் மாளிகையும் அங்கே இருந்தது. இமய மலையின் அழகையும், அதன் சாரல் சுகபோகங்களையும் அனுபவிக்கச் செல்பவர்கள் டல்ஹவுசியிலே தங்குவது உண்டு.

அந்த டல்ஹவுசியிலே தேவேந்திர நாத் தாகூரும், ரவீந்திர நாத் தாகூரும், அதாவது தந்தையும்-மகனும் நான்கு மாதம் தங்கியிருந்தார்கள். அங்கே, ரவீந்திரர் தனது கவிதை உள்ளத்திற்கேற்றவாறு விருப்பம்போல இயற்கைக் காட்சிகளைச் சுற்றிச் சுற்றிப் பலமுறை பார்த்தார்.

அந்தக் குளிர்ச்சியான இடத்திலும் தேவேந்திரர் தனது மகனை குளிர்ந்த தண்ணீரிலேயே குளிக்க வைப்பார்! எக்காரணம் கொண்டும் வெந்நீரே தரமாட்டார்.

தனது மகன் பலவழிகளிலும், இன்ப-துன்ப நிலைகளிலும் பழக வேண்டும்; இயற்கையோடு அவனது உடலும் ஒத்துப் போக வேண்டும்; என்ற ஆசைதான். அங்கே இருக்கும் தண்ணீர் பனிக்கட்டிபோல சில்லென்று இருப்பதைக் கண்ட பிறகும், தனது தந்தையார் விருப்பத்திற்குகந்தவாறு ரவீந்திரர் பச்சைத் தண்ணீரிலேயே தினந்தோறும் குளித்துப் பழகினார். இதனால் பிற்காலத்தில் அவர் இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றிருந்த போது, அங்கு குளிர் காலத்திலும் தினந்தோறும் குளிர்ந்த தண்ணீரிலேயே குளித்தார்.

இமயமலைச் சாரலுக்கு அவர் சென்று நான்கு மாதங்கள் தங்கியிருந்ததால் ஏற்பட்ட மற்றோர் நன்மை ரவீந்திரருக்கு உண்மையான கல்வி அங்கேதான் தொடங்கியது எனலாம். தேவேந்திர நாத் தாகூர் அங்கே தனது மகனுக்கு இங்கிலீஷ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளையும் போதித்தார். அதேநேரத்தில் அவர் தனியாகவும் படித்துக் கொள்ளக் கூடிய திறனையும் உருவாக்கினார்.


கவிகாளிதாஸை படித்தார்

வட நாட்டிலே மிகப் பெரும் புகழ் பெற்ற மகாகவி காளிதாசர் எழுதிய காவியங்களைத் திரும்பத் திரும்பப் படித்து. அக் காவியச் சுவைகளிலே தனது மனத்தைப் பறிகொடுத்தார். ஓய்வு கிடைக்கும் நேரத்திலே எல்லாம் காளிதாசரின் இயற்கைக் காட்சி வருணனைகளை ஆழ்ந்து ஊடுருவிப் படித்தார்! அவ்வாறு அவர் கற்ற இயற்கை வருணனைகளில் மேலும் ஊக்கம் பெறும் எண்ணத்தில் இமயமலைக் காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வார்! குறிப்பாக, காளிதாசர் எழுதிய மேக தூது’ எனும் இலக்கிய நூலைத் திரும்பத் திரும்பப் படித்தார். அதன் சொற்சுவை அவருக்கோர் ஆசானாகவே அமைந்து விட்டது.

தந்தை மகற்காற்றும் நன்றி எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கேற்ப, ஒவ்வொரு நாள் இரவு வந்ததும், தேவேந்திர நாத் தனது அருமை மகனை அருகே அமர வைத்து வானவியல் தத்துவங்களைக் கற்பிப்பார். அதுவும் அவர்கள் தங்கியிருந்த இடம் இமயமலை அடிவாரமல்லவா?

வான மண்டலத்தின் கோள்களைப் பற்றி அவர் தந்தை விளக்குவார்; அவற்றின் இயக்கங்களை விவரிப்பார். அப்போதுள்ள விண்மீன்களின் தோற்ற இயல்புகளைச் சுட்டிக் காட்டிக் கற்பிப்பார். இவ்வாறு வானவியல் இயக்கத்தைக் கற்பிப்பதன் மூலமாக, ரவீந்திரருக்கு வானியல் கல்வியைப் போதித்தார்.

இமயமலைச் சாரல்களில் தந்தையும் மகனும் காலையில் எழுந்து நடை பயிலும்போது, மரம், செடி, புல், பூண்டு போன்றவற்றின் பயன்பாடுகளையும் சொல்லிக் கொடுத்து, தாவரவியலின் தத்துவங்களை எடுத்துரைப்பார்.

இன்றைய மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும் பரீட்சையில் எந்தெந்த கேள்விகள் வருமோ, அவற்றை இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு தெரிந்து கொள்கிறார்கள். அக் கேள்விகளுக்குரிய விடைகளை கிளிப் பிள்ளைகளைப் போல மனனம் செய்கிறார்கள். தேர்வில் அக் கேள்விகளுக்குரிய பதில்களை மனப்பாடம் செய்தபடி வந்து எழுதுகிறார்கள்.

எந்தக் கேள்விகளைக் கேட்டாலும், அதை உணர்ந்து எழுதும் அறிவு என்று மாணவர்களிடம் வளருகின்றதோ அன்றுதான் மாணவர்களின் அறிவு நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படும்! இந்த எண்ணமுடைய லட்சியவாதிதான் தேவேந்திரநாத் தாகூர்.

அதனால்தான் தன் செல்வன் ரவீந்திரர் எதையும் எண்ணி உணரும் அறிவு வளர அரும்பாடுபட்டார். அதற்கு ஒரு தந்தை என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றையெல்லாம் செய்து கல்வி கற்க வைத்தார்.

சில நேரங்களில் ரவீந்திரர் தனது தந்தையிடம் அவர் சொல்லிக் கொடுக்கும்போது அடாவடித் தனமான கேள்வி களையும், தவறான வினாக்களையும் கேட்டு வாதாடுவார். அந்த நேரங்களிலே எல்லாம் ஒரு தந்தையின் கடமையை உணர்ந்த தேவேந்திரா், பொறுமையாகவும், பொறுப்பாகவும் கோபப்படாமல், எரிச்சல் அதட்டல் உருட்டல் ஏதும் காட்டாமல், மகனுடைய அறிவு வளர்ச்சிக்கு இடம்தந்து, தவறான கேள்விகளைச் சுட்டிக்காட்டி, விளக்கமளித்து மகனை திருப்திப்படுத்தி நிறைவு செய்வார்.

ரவீந்திரரின் அறிவில் அஞ்சாமையும், நேர்மையும் இருந்ததை அவருடைய பேச்சிலும், எழுத்திலும் இன்றும் நம்மால் காண முடிகின்றது. அது மட்டுமன்று, எதையும் எப்போதும் அவராகவே எண்ணிப் பார்க்கும் தெளிந்த சிந்தனைத் திறனும் இருந்தது.

இமயமலைச் சாரலைவிட்டும், சாந்தி நிகேதனத்திலிருந்தும், தந்தையும்-மகனும் கல்கத்தா நகருக்கு மீண்டும் வந்து சேர்ந்தார்கள். தேவேந்திரர் தனது செல்வன் ரவீந்திரரை,கல்கத்தா நகரிலே உள்ள புகழ்பெற்ற செயிண்ட் சேவியர் கல்லூரியிலே சேர்த்தார்.

கல்கத்தா நகர் சூழ்நிலை கல்வி கற்க ஏற்றவாறு வசதியாக அமைந்திருந்தது. அவருடைய மனநிலைக்கேற்றவாறு செயிண்ட் சேவியர் கல்லூரியில் போதனைகளும் இருந்தன. ஆங்கில வகுப்பு ஆசிரியர் ஒருவர், உலகப் புகழ்பெற்ற நாடகச் சக்கரவர்த்தியான ஷேக்ஸ்பியர் எழுதிய ‘மாக்பெத்’ என்ற நாடகத்தை வங்காள மொழியிலே மொழி பெயர்க்குமாறு கூறினார்.

ரவீந்திரரின் நெஞ்சைவிட்டு, இமயமலைச் சாரல்களின் இயற்கைக் காட்சிகளும் பேரின்பங்களும், அகலவில்லை. சாந்தி நிகேதனில் அனுபவித்த தியான அமைதிச் சூழ்நிலைகளும் அவர் மனதை விட்டு அகலவில்லை. அந்த இன்பங்களை எண்ணும் போதெல்லாம் பள்ளிக்கூட கல்வி, கல்லூரிக் கல்வி எல்லாம் அவரைக் கவரவில்லை.

தந்தையுடன் ரவீந்திரர் இமயமலைச் சாரலுக்குச் சென்று திரும்பியது முதல் தமது தம்பியின் சிந்தனையில் ஏதோ ஒரு திருப்பு முனை நிகழ்ந்துள்ளதை அவரது அண்ணன்கள் கண்டார்கள். அதனால், பள்ளி கல்லூரிக் கல்வியை தம்பி வெறுப்பதை அவர்கள் எவரும் எதிர்க்கவில்லை. காரணம் தம்பி ரவீந்திரன் தானாகவே படித்து முன்னேறி அறிவுத் தெளிவடைந்துள்ளான் என்பதை அவர்கள் அறிந்தார்கள்.

அதனால், ரவீந்திரா் வீட்டிலிருந்தவாறே தனது அறிவை வளர்த்துக் கொள்வதை அவர்கள் ஆதரித்தார்கள்.