கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/தொடக்கப் பள்ளி நடைமுறையை வெறுத்தார்

விக்கிமூலம் இலிருந்து

2. தொடக்கப் பள்ளி
நடைமுறையை வெறுத்தார்

இந்திய நாடு, உலகப் புகழ் பெறுவது வானைமுட்டும் இமயச் சிகரங்களாலோ, கங்கை, பிரமபுத்ரா, யமுனா, கோதாவரி, மஹாநதி, காவேரி, வைகை ஆறுகளாலோ சித்தன்ன வாசல், மாமல்லபுரம், குடுமியான் மலை, திருச்சி, காஞ்சி, அஜந்தா, எல்லோரா, தாஜ்மஹால், பூரி ஜகன்னாத், ஆக்ரா, அஜ்மீர் போன்ற சிற்பக் கோயில் கட்டடங்களாலோ நெய்வேலி நிலக்கரி, சேலம் இரும்பாலை, டாடா இரும்பு ஜெம்ஷெட்பூர் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்பெட்டி அல்லது கோலார் தங்க வயல்களாலோ சென்னை மரீனா, திருவனந்தபுரம், கோவளம், விஜயவாடா கப்பல் தொழிற்சாலை, கல்கத்தா துறைமுகக் கடற்கரைகளாலோ அன்று!

திருவள்ளுவர் பெருமான், காந்தியண்ணல்; நேரு பெரு மகன் சுபாஷ் சந்திர போஸ், ஜகதீச சந்திர போஸ், சர்.சி.வி.ராமன், அப்துல்கலாம், டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், கணக்கியல் மேதை ராமானுஜம், வல்லபாய் படேல், வீரசாவர்கர், டாக்டர் அம்பேத்கர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற பெருமக்கள் ஒவ்வொருவரும்

ஒவ்வொரு துறையிலும் தோன்றி, அவரவர் சான்றாண்மைகளை நிலைநாட்டுவது தான் இந்தியா புகழ் பெறக் காரணம்,

வெறும் இயற்கைச் செல்வங்களின் பெருமைகளால் மட்டுமே ஒரு நாட்டின் சான்றாண்மையை நிலை நாட்டி உலகின் முன் புகழ்பெற இயலாது. இந்த மண்ணிலே தோன்றி, அந்த மண்ணிற்காக அரும்பெரும் தியாகத்தைச்செய்து, அரிய பணிகள் பலவாற்றி, தன்நலம் மறந்து பொதுநலம் பேணி, தனது நாட்டு மக்களுக்காக உடல், பொருள், ஆவி, அனைத்தையும் ஈந்து ஒவ்வொரு துறையிலும் ஈந்து யார்யார் புகழ் பெறுகிறார்களோ. அவர்களால் தான் ஒரு நாடு வானளாவிய புகழையும், வல்லமையையும் பெற முடியும்.

இந்த அளவுகோல் படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு துறையில் நாம் நோக்கும் போது, கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் இலக்கியத்துறையிலே, ஈடில்லாப் புகழ்பெற்று, இந்திய நாட்டுக்கு உலக அரங்கில் பெரும் பெருமையை நிலை நாட்டியவர்.

அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், அரசியல், புரட்சி போன்ற பல துறைகளிலே பெரும் பெரும் அறிவாளர்களை ஈன்றளித்துள்ள மாநிலம், வங்காள மாநிலமாகும்! குறிப்பாகக் கூறுவதானால், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் அரவிந்த கோஷ், சுபாஷ் சந்திர போஸ், ஜகதீச சந்திர போஸ், சரத் சந்திர போஸ், பங்கிம் சந்திர சட்டர்ஜி, ரவீந்திர நாத் தாகூர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.

வங்கம் என்றால், பண்டைய ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று, பதினெட்டு மொழிகளிலே ஒன்று; மரக்கலம், வளைவு என்றும் மேலும் பல பொருள்கள் உள்ளன. வங்க நாட்டிலே தோன்றிய மேதைகள் எல்லாம் பலதுறைகளிலும் பலவாறு பங்களித்துள்ளனர்.

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், கொல்கத்தா மாநகரிலே, 1861-ஆம் ஆண்டில், தாகூர் எனும் செல்வாக்கான குடியிலே தோன்றினார்! தந்தை பெயர் தேவேந்திர நாத் தாகூர்; அவர் உயர்ந்த பண்பாளர்; சிறந்த அறிஞர்; எல்லாரிடமும் மனித நேயத்தோடு பழகும் நல்ல உள்ளம் பெற்றவர்!

தேவேந்திர நாத் தாகூர் சற்றேறக் குறைய வங்காளத்துக்கு குசேலரோ என்னவோ, பதினான்கு பிள்ளைகளுக்கு தகப்பனாராக விளங்கினார். குழந்தைகளை ஆடம்பரம் ஏதுமில்லாமல் எளிமையோடு வளர்த்து வந்தார். தந்தை எவ்வழியோ அவ்வழியே- அவரது மக்களும் ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்தார்கள்.

ரவீந்திரர் தனக்குரிய விளையாட்டுப் பொருட்களைத் தாமே தயாரித்துக் கொள்ளும் புத்திசாலியாக சிறுவயதிலேயே விளங்கி வந்தார். தேவேந்திர நாத் தாகூரின், எளிமையான, சிக்கனமான, ஆடம்பரமற்ற வாழ்க்கை அவரது மக்களையும் தங்களை அறியாமலேயே, பின்பற்றிடச் செய்தது.

ரவீந்திரர் வெளியுலகம் தெரியாத குழந்தையாகவே வளர்ந்தார். எந்நேரமும் தனது வீடு, முற்றம், பின்புறத் தோட்டம் என்றே விளையாடிக் காலம் தள்ளுவார். தனது வீட்டுத்திண்ணையிலே அவர் உட்கார்ந்து கொண்டு, வீதியிலே போவோர்-வருவோர், வண்டி-வாகனங்கள் மக்களிடையே மூளும் சண்டை சச்சரவு குழப்பங்கள் போன்றவற்றைத்தான் அவர் பார்த்துரசிப்பார்!

வீட்டுத்தோட்டம், முற்றம்,தெருத்திண்ணைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன ரவீந்திரர், சில நேரங்களில் தனது அண்ணன்மார்களோடு விளையாடலாம் என்று அவர்களை நாடுவார். ரவீந்திரர், தேவேந்திர நாத் தாகூரின் கடைசி மகன்; அதாவது பதினான்காம் குழந்தை.

அதனால், எல்லா அண்ணன்களும் அவரைத் தம்மிடம் சேரவிடாமல்,அன்பாக, செல்லமாக, “ரவீந்திரா,நீ,நல்ல தம்பி தானே! தனியாகவே போய் விளையாடுதம்பி, போ,” என்று ரவீந்திரரைத் தட்டிக் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

உடனே, தன்னை ஏன் எல்லாரும் சேர்த்துக் கொண்டு விளையாட மறுக்கிறார்கள்? என்ன காரணம் என்று அந்தச் சிறிய வயதிலேயே அவர் சிந்திக்கலானார்! பிறகு, வேறு வழியெதுவும் தெரியாமையால், தனது வீட்டிலிருக்கும் வேலைக்காரர்களிடம் நட்புக்கொள்வார்.

சிறுவரல்லவா ரவீந்திரர்? அதனால் கிராமத்துக் கதைகளை எல்லாம் வேலைக்காரர்கள் மூலம் கேட்பார். அவர்கள் ஆடியும்-பாடியும் கூறுவார்கள்.

அந்த வேலைக்காரர்கள் சொல்லும் கதைகள் ஒவ்வொன்றிலும் உள்ள சொற்களை, வாக்கியங்களை, நீதிகளை, ரவீந்திரர் ஆழ்ந்து கவனிக்கின்றார் என்று அந்த வேலைக்காரர்களுக்குக் கதை சொல்லும்போது தெரியாது!

ஆனால், வேலைக்காரர்கள் என்னென்ன சொன்னார்கள் என்பதை, ரவீந்திரர் மறுநாள் அவர்களிடம் சொல்லிக் காட்டி, நான் சொன்னது நீங்கள் கூறிய கருத்துக்கள் தானே! ‘சரியாக இருக்கின்றதா?’ என்று அவர்களைக் கேட்கும் நேரத்தில்தான், ஓ, சிறுவன் நாம் சொல்லும் எல்லாவற்றையும் ஆழமாகக் கூர்ந்து கேட்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார்கள். 

இவ்வாறு தாகூர் அறிந்த விவரங்கள் எல்லாம் பிற்காலத்தில் அவருக்கு எவ்வெவ்வாறு பயன்படப் போகின்றன என்ற உணர்வுகள் அவர்களுக்குத் தெரியாதல்லவா?

தனது வீட்டு வேலைக்காரர்கள் மூலம் கிடைக்கும் கருத்துக்களை, உணர்வுகளைத் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆர்வம், அவருக்கு ஏற்படும் போதெல்லாம், ரவீந்திரர் அவர்களை நாடிச் செல்வார்.

சில நேரங்களில் வேலைக்காரர்கள் இல்லாதபோது, தனது தாயிடமும், அத்தையிடமும் சென்று அவர்களை வற்புறுத்தி வற்புறுத்திக் கதைகளைக் கேட்பார். அவர்களும் தங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களிலே எல்லாம் வங்காளத்துக் கதைகளை எல்லாம் கூறுவார்கள். ரவீந்திரரின் இலக்கிய தாகத்தை அவர்கள் தீர்த்து வைத்தார்கள்.

வேலைக்காரர்களிடம் கேட்ட கதைகள் அம்மா, அத்தையிடம் அறிந்து கொண்ட இலக்கிய உணர்வுகளுடன் தேவேந்திர நாத தாகூர் பணியாற்றிடும் அலுவலக கணக்கர் கைலாசம் என்பவரும் கதை சொல்வார். அந்தக் கணக்கர் தேவேந்திர நாத தாகூரின் குடும்ப நண்பர்களுள் ஒருவர். வங்க மொழியின் புராணக் கதைகளை அறிந்தவர்! புராணிகர் அவரிடம் சென்று கதைகள் கூறுமாறு தொல்லைகளைக் கொடுப்பார் ரவீந்திரர்.

அதனால் தனக்குத் தெரிந்த புராணக்கதைகளைக் கூறி மகிழ்விப்பார் .இடையிடையே புராண, இதிகாச ஸ்லோகங்களையும் எடுத்துச் சொல்லி அவற்றுக்குப் பொருள் உரைத்து விளக்கிச் சொல்வார்.

ரவீந்திரர் இவ்வளவு பேர்களிடம் கேட்ட கதைகளை எல்லாம் தொகுத்துத் தொகுத்துச் சிந்திப்பார்! வங்காள மொழியிலே உள்ள சொற்களை எல்லாம் புரிந்து கொண்டு, அதற்கு இணையான பொருள் தரும் சொற்களை எல்லாம் தெரிந்து தனிமையிலே இவற்றை எண்ணியெண்ணி- எழுதியெழுதி மனப்பாடம் செய்து மகிழ்வார்.

கவிதைக்குச் சொல்லடுக்குவது கவிஞர்களது இளமைக் காலப் பைத்தியம்: இந்த ஞானக் கிறுக்குதான். சிறுவன் ரவீந்திரனைப் பிற்காலத்தில் ‘கீதாஞ்சலி’ என்ற உலகம் போற்றும் இலக்கியத்தை எழுத வைத்தது. அதன் எதிரொலி தான் தாகூர் பெற்ற நோபல் பரிசு!

தமிழ் நாட்டிலே கூட விடுதலைக் கவிஞர் பாரதியாரை, அவரது தந்தை ‘கணக்கு போட்டு விட்டாயா?’ என்று கேட்டதும், உடனே பாரதியார் கணக்கு, பிணக்கு, மணக்கு, ஆமணக்கு என்று பிதற்றிய படியே தந்தையார் கேட்ட எண்ணத்தைச் சிதறடிப்பாராம்!

“ஏன், விழிக்கிறாய்? என்று தந்தை மீண்டும் பாரதியாரை வலியுறுத்திக் கேட்டால், உடனே அவர், ‘விழி, கழி, சுழி, வழி, குழி, பழி, இழி, பிழி’ என்று சொற்களை அடுக்கிக் கொண்டே போய் தந்தையைச் சொல் ஜால மாயத்திலே மயக்கிவிடுவதும் உண்டாம் என்பர்!

அதனைப் போல, அமரகவி பாரதியாருக்கு வழிகாட்டியாக, ஒரு முன்னோடியாக ரவீந்திரரும் இருந்துள்ளார். பாரதி யாரைப் போல ரவீந்திரர் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள.

அன்னை, அத்தை, தனது வீட்டுப் பணியாளர்கள், தந்தை அலுவலகக் கணக்கர் கைலாசம் போன்றவர்கள் கூறிய கதைகளை எல்லாம் காட்சி காட்சியாக, ரவீந்திரர் தொகுத்து, அக்காட்சிகளை தனது மனக் கண்முன் கற்பனை உருவிலே கொண்டு வருவார்! அப்போது, அவரது வீட்டுத் தாழ்வாரத்தில் ஒரு பழைய பல்லக்கு இருந்தது. அது சவாரி செய்வாரற்று இருந்தது.

ரவீந்திரர் கற்பனை வானிலே சிறகடித்துப் பறக்கும் போது, அந்தப் பல்லக்கினுள்ளே ஏறி அமர்ந்து அதன் கதவை மூடிக் கொள்வார்! அவ்வளவுதான்! உடனே ரவீந்திரர் கற்பனையில் ராவணனுடைய புஷ்பக விமானம் போல் அந்தப் பல்லக்கு பறக்குமாம். அந்த மாயவிமானம் வானில் ஊர் ஊராக, சிற்றூர் பேரூராக, காடு காடாக பாலைவனம் தாண்டி, ஆறுகள் பலகடந்து, கடல்கள் தாண்டி, ஏதோ ஒரு குபேரபுரி போன்ற பெரும் நகரத்துக்குப் போகுமாம். உள்ளே உட்கார்ந்துள்ள சிறுவர் ரவீந்திரர் உடனே அலெக்சாண்டராவாராம், இராமனாக மாறுவாராம்; அசோகனைப் போல முடி சூட்டிக் கொண்டு பெருமிதமாக நீதி விசாரணையினை நடத்துவாராம். பல்லக்கு அந்நகரத்துக்குள் தரை இறங்குமாம், காலாட்படை, குதிரைப்படை, வேழப்படை, தேர்ப்படை இவையெல்லாம் அவரது பல்லக்கைப் புடைசூழ்ந்து கொள்ளுமாம்! உடனே பல்லக்கில் மீண்டும் பேரரசுப் பெருமிதத்தோடு அங்கிருந்து அவர் புறப்பட்டு விடுவாராம்.

மீண்டும் திரும்பும்போது கடல்கள் குறுக்கிட்டால், கப்பலாக மாறிவிடுமாம் பல்லக்கு, ஆறு தென்படுமானால் அதே பல்லக்கு அழகான ஓடமாக மாறுமாம்!

இயற்கை அவரை ஈர்த்தது எப்படி?

ரவீந்திரர் சிறுவராக இருக்கும்போது, இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பார் என்று முன்பே குறிப்பிட்டோம்! மக்களிடையே நடக்கும் இயற்கைச் சம்பவங்களை எல்லாம் கண்டு அதற்கேற்ப தனது கற்பனையை வளர்த்து பெருக்கிக் கொள்வார்.

மழை பொழியும் அழகை ரசிப்பார். பெய்த மழை சிறு சிறு கால்வாய்களாக நகரின் ஓரத்திலே ஓடும் சலசல என்ற ஒலியைக் கேட்டும் பார்த்தும் மகிழ்வார்! பனிக்காலங்களிலே புற்களில் காலையிலே காணப்படும் பனிநீர்த் துளிகளைக் கண்டு மெய் மறந்து சிந்திப்பார்!

மழைக் காலங்களிலும், பனிக்காலங்களிலும் துளிர்விடும் மரத்தின் புதிய இலைகள், செடி, கொடிகளின் இலைகளிலே படர்ந்து தங்கியுள்ள பனித்துளிகளின் பளபளப்புத் தோற்றம், அப்போது வீசும் மெல்லிய காற்றில் மலர்வனத்துப் பூக்கள் அசைந்தாடும் காட்சிகள் அவருடைய குழந்தை மனத்தை பித்துப் பிடிக்க வைத்து விடுமாம். மெய் மறந்து ரசிப்பாராம்.

வயது என்னவோ ஏழு எட்டிலே நடைபோடும் சிறு பருவம்தான், என்றாலும் அந்த வயதிலேயே அவர் விண்ணையும் மண்ணையும் தனது கற்பனையால் அளந்து பார்த்தார்!

வீட்டு வாயிலின் முன்பு விசேஷ நாட்களில் பந்தல் போட குழி தோண்டும் போதும், கம்பங்களை நடும் போதும், எதற்கு எது ஆதாரமென்று மண்ணின் ஆழத்தை, அதன் குழியைப் பார்ப்பாராம். அதாவது மண்ணுக்குக் கீழே பாதாள லோகம் இருக்கிறது. என்று அத்தை சொன்னதை வைத்து பந்தல்

கம்பங்களை நடுவதற்குத் தோண்டிய குழிகளின் கீழே மேலும் ஆழமாகத் தோண்டத் தோண்ட என்னென்ன புதுமைகள் புலப்படுமோ என்று ரவீந்திரர் எதிர் பார்ப்பாராம் ஆனால், வேலைக்காரர்கள் கம்பம் நடுமளவு ஆழம்தானே தோண்டுவர் அதனால், சிறுவன் மனம் ஏமாறும்!

நீலவாளில் நிலவு இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி, அதன் விரிப்பு அவருக்கோர் விருந்தாகவே விளங்கியது.

வாணவெளியில் அதிகாலையிலும், மாலையிலும் பாடிப் பறந்து செல்லும் பறவை இனங்களின் பல்விதக் குரலோசைகள் அவருடைய காதுகளுக்கு ஓர் இசைத் தேனாகவே இனித்தது.

சுருக்கமாகச் சொன்னால், அவர் வானியல் ஆய்வுப் பேராசிரியரைப் போலவே அவற்றையெலாம் கேட்டுக்கேட்டு, பார்த்துப் பார்த்துப் புரிந்து கொண்டார். அந்தச் சிறுவயதில் அதாவது ஏழெட்டு வயதுக் காலத்திலேயே அவர் ரசிக்காத, கற்பனை செய்யாத, ஆழ்ந்து நோக்காத துறைகளே இல்லையென்று கூறலாம். ஆன்மிகத் துறை ஒன்றைத் தவிர!

தாய்மொழியில் ஆரம்பக் கல்வி

ரவீந்திர நாத் தாகூரின் அண்ணன்கள் அனைவரும் நாள்தோறும் பள்ளிக்குச் சென்று வருவார்கள். இவர் மிகமிகச் சிறுவர் என்பதால், இவரைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப் பெற்றோருக்கும் விருப்பமில்லை; உடன் பிறப்புக்களுக்கும் மனமில்லை. அதனால், அவர் வீட்டிலே தனிமையாக இருக்கும் நிலை ஏற்பட்டது.

சிறுவன் ரவீந்திரருக்குத் தனிமை பிடிக்கவில்லை; ஒருவித விரக்தியும், வெறுப்பும் ஏற்பட்டது. அதனால், அவர் கல்வி கற்றிடப் போக வேண்டும் என்று, தந்தையாரையும், தமையன்மார்களையும் வற்புறுத்திப் போராடினார்! அவர்களும் சிறுவன் என்று மறுத்துவிட்டார்கள். இருந்தாலும், போயே தீருவேன் என்ற பிடிவாதத்திலே ரவீந்திரர் வெற்றி பெற்று பள்ளி செல்லத் தொடங்கினார்.

எந்தப் பள்ளிக் கூட வாழ்க்கைக்காகப் போராடினாரோ அப்பள்ளி வாழ்க்கை அவருக்கு எட்டிக் காயாகக் கசந்தது. ஏனென்றால், பள்ளிக்குப் போய் வருவது, வீட்டில் அவர் தனிமையாக இருந்ததைவிட, மிகக் கொடுமையான சிறை வாழ்க்கையாக இருந்தது என்கிறார்.

ஆரம்பப் பள்ளிக் கல்வி வாழ்க்கை எப்படிப்பட்டது தெரியுமா? என்ற கேள்வியை எழுப்பிய ரவீந்திரர், அதை “அந்தமான் தீவு” என்று குறிப்பிட்டார். ஆரம்பப் பள்ளிகளில் சிறுவர்களைக் கல்வி என்ற பெயரால் கொடுமைப்படுத்துவதைத் தவிர, சிறுவர்களின் உள்ளம் கவர்ந்திழுக்கும் பகுதி ஒன்றும் இல்லை. அதனால், அவர் ஆரம்பக் கல்வி நடை முறைகளை அடியோடு வெறுத்தார்.

அக்காலம் வெள்ளையர் ஆட்சிக் காலம் அல்லவா? அதனால், ஆங்கில மோகம் அனைவரையும் ஆட்டிப்படைத்தது. பிற்கால வாழ்க்கைக்கு அரசுப் பணியைச் சுலபமாகப் பெறலாம் என்ற ஆசையினாலே நூற்றுக்கு எண்பது பேர் ஆங்கிலக்கல்வி ஆசையில் உழன்றார்கள். இதை ரவீந்திரர் எதிர்த்தார்.

அந்நிய நாகரிகமோகம், நடை உடை பாவனைகள், பேச்சு, எழுத்து, எல்லாம் அளவுக்கு மேலே தீராத ஒரு நோய் போல நடுத்தர, மேல்மட்ட மக்களைப் பற்றியிருந்தது.

ரவீந்திரருக்கு தனது தாய்மொழியான வங்காள மொழியிலேயே ஆரம்பக் கல்வியை வீட்டில் கற்பிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். இவ்வாறு ஏற்பட்ட அடிப்படைத் தாய் மொழிக் கல்விப் போதனை, பிற்காலத்தில் ரவீந்திரருக்கு சிறந்த உதவியானது.

ரவீந்திரருக்கு காலை, மாலை இருவேளைகளிலும் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அத்துடன் ஓவியம் எழுதுவதிலும் அவர் பயிற்சி பெற்றார். ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசான் தினந்தோறும் இரவு நேரங்களில் வந்து கற்றுக் கொடுப்பதால், சில நேரங்களில் துக்கம் கெட்டுவிடுகின்றது என்பதால், ஆங்கிலம் கற்பதிலே அவருக்கு வெறுப்பு உருவானது. எப்போது மணி ஒன்பது அடிக்கும், ஆங்கில ஆசிரியர் பாடத்தை முடித்துக் கொண்டு வெளியேறுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார். ரவீந்திரா்!

ஒன்பது மணிக்குப் பிறகு, தனது அன்னையிடம் செல்வார். கதைகள் ஏதாவது கூறுமாறு கேட்பார். அம்மையார் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கும் போது தாய் மடியிலே மகன் உறங்கிவிடுவாராம்.

பள்ளிக் கூடப் பாடம் ஒரு புறம்; அதே நேரத்தில் வீட்டிலே இங்கிலீஷ் ஆசிரியர் நடத்தும் பாடம் மறுபுறம்! இந்தக் கல்விச் சுமைகளே அவருக்குப் பெரிய பாரமாகி விட்டது. ஆங்கிலப் பாடம் நடக்கும்போது, ரவீந்திரா் தனக்கு வயிற்றுவலி என்று பொய்க் காரணம் சொல்லி, ஆங்கிலப் பாடச் சுமையிலே இருந்து தப்பித்துக் கொள்வார் பள்ளிக்கூடப்பாடச் சுமைகளைத் தாங்க முடியாமல் வெறுப்பு ஏற்படுவதுபோல, வீட்டுப் பாடப் போதனைகளையும் அவர் வெறுப்பதற்காகவே, ஏதாவது நோய் தமக்கு வாராதா என்று எதிர்பார்ப்பாராம்.