காளமேகப் புலவர் பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
வித்வசிரோமணியாகிய
காளமேகப் புலவர்
அவ்வவ் அமையங்களில் பாடிய
தனிப்பாடல் திரட்டு
மொத்தம் 158 பாடல்கள்
மற்றும் அதிமதுரக் கவிராயர் பாடிய பாடல் 1
தனிப்பாடல் திரட்டு நூலில் பக்கம் 9 முதல் 32
பாடல்கள்
;தனிப்பாடல் திரட்டு நூலின் காப்பு வெண்பா
ஏரானைக் காவிலுறை என்னானைக் கன்றளித்த
போரானைக் கன்றுதனைப் போற்றினால் – வாராத
புத்திவரும் பத்திவரும் புத்திரவுற் பத்திவரும்
சத்திவருஞ் சித்திவருந் தான்.

பாடல் 1-5[தொகு]

;காளமேகப் புலவர் பாடல்களுக்கான காப்பு வெண்பா
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை
அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
சரியா சனம்வைத்த தாய். (1)
அரசன் திருமலைராயன் அரசவையில் கலைமகளை வேண்டித் தான் அமர அரியணை பெற்றது. அரசனுக்குச் சரிநிகரான இருக்கையில் என்னை அமர வைத்த என் தாய் கலைமகளாகிய கல்வித்தெய்வம் வெள்ளை ஆடை அணிந்திருப்பாள்; வெள்ளை அணிகலன்களை பூண்டிருப்பாள்; வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பள்.
;சிலேடைகள்

ஆமணக்குக்கும் யானைக்கும்

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு மால்யானை யாம். (2)
ஆமணக்குச் செடியில் அமணக்குக் கொட்டைமுத்து இருக்கும். (ஊன்றுகோல் போன்ற) தன் கொம்பை அசைக்கும். உள்ளே துளை உள்ள மூரித்தண்டு ஏந்தி வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தித் தலையைச் சாய்க்கும்.
யானை முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும்.

வைக்கோலுக்கும் யானைக்கும்

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை யாம். (3)
வைக்கோலானது வாரிக் களத்தில் அடிக்கப்படும். பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாக புகுத்தப்படும். வைக்கோல் போரில் அது சிறந்து பொலிவுற்றிருக்கும்ய
யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். பின்பு வந்து அதன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகும். போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும்.

பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும்

நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம். (4)
பாம்பிடம் நஞ்சு இருக்கும். பாம்பு தன் தோலை உரிக்கும். சிவபெருமான் முடிமேல் இருக்கும். கொடிய சினத்தில் அதன் பல்லால் கடிக்கப்பட்டால் உயிர் மீளாது.
வாழைப்பழம் நைந்துபோயிருக்கும். வாழைப்பழத்தின் தோல் உரிக்கப்படும். சிவபெருமான் படையலில் மேலான பொருளாக இருக்கும். கொடிய பசியோடு இருக்கும் ஒருவர் பல்லில் பட்டால் அப் பழம் மீண்டுவராது.

பாம்புக்கும் எள்ளுக்கும்

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது .(5)
பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்தில் அடைந்துகொள்ளும். படமெடுத்து ஆடும்போதே 'உச்' என்று இரையும். பாம்பாட்டி பாம்புப்பெட்டியின் மூடியைத் திறந்தால் பாம்பு தன் முகத்தைக் காட்டும். ஓடிப்போய் மண்ணால் செய்த மண்டை ஓட்டில் சுருண்டு படுத்துக்கொண்டு பரபர என ஒலி வருமாறு அசையும். பார்க்கப்போனால் அதற்குப் பிளவுபட்ட நாக்கு உண்டு.
எள்ளானது செக்கில் ஆடி எண்ணெயாகக் குடத்தில் அடையும். செக்கில் ஆட்டப்படும்போது செக்கின் இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்தின் மூடியைத் திறந்தால் நம் முகத்தை அது நிழலாகக் காட்டும். நம் தலை மண்டைக்குள் ஓடிப் பரபர என்று தேய்க்கப்படும். பார்க்கப்போனால் அதற்குப் பிண்ணாக்கு உண்டு.

பாடல் 6-10[தொகு]

பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும்

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்
தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம் {6}
பாம்பு பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் (சினம்) குணம் உடையது
எலுமிச்சம்பழம் பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.

முகுந்தனுக்கும் முறத்துக்கும்

வல்லரியாய் உற்றிடலான் மாதர்கையில் பற்றிடலான்
சொல்லரிய மாப்புடைக்கத் தோன்றுதலால் – வல்லோர்
அகந்தனிலே வாழ்தலா லன்றுல களந்த
முகுந்தனுமே யகும் முறம்..{7}
உலகளந்த பெருமாளாகிய முகுந்தன் வலிமை மிக்க சிங்கமாகத் தோன்றினான். குழந்தை கண்ணனாக மாதர் கையில் பிடிபட்டான். சொல்வதற்கு அரிய பெருமை மிக்க மா என்னும் திருமகள் தன் நெஞ்சில் புடைத்திருக்கத் தோன்றுகிறான். நெஞ்சுரம் மிக்கவர் செஞ்சகத்தில் வாழ்கிறான்.
முறம் வலிமை மிக்க மூங்கில் என்னும் அரியால் பின்னப்பட்டது. மகளிர் புடைப்பதற்காகக் கையில் பற்றுகின்றனர். சொல் என்னும் நெல்லு மாவைப் புடைப்பதற்காகத் தோன்றி வந்துள்ளது. வலிமை மிக்கார் வீடுகளில் வாழ்கிறது.

சந்திரனுக்கும் மலைக்கும்

நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்து
சிலபோது உலாவுதலாற் சென்று – தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதிக்கு நிகராக வழுத்து (8)
சந்திரன் நிலாவாக விளங்குகிறது. நீண்ட வானத்தில் படிந்து சில நேரங்களில் உலாவுகிறது. தலைக்கு மேல் தோன்றி வருகிறது.
மலையானது நிலத்தின் வாய் போலப் பிளவு அடுக்ககுகளோடு காடப்படுகிறது. நீண்ட வானத்தில் படிந்திருப்பது போலத் தோன்றுகிறது. சில வேளைகளில் நாம் மலைமேல் உலாவி வருகிறோம். நம் மேல் உயரமாகத் தோன்றுகிறது.

நாய்க்கும் தேங்காய்க்கும்

ஓடு மிருக்கும்அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு . (9)
சேடி = தோழி வாய் = வாய், இடம்; உள்வாய் = வாயின் உள், உட்பக்கம்; குலை = வாலைக்குலை, தேர்ங்காய்க்குலை; வரை = மலை;
நாயானது ஓடும். இருக்கும். அதன் உள்வாய் வெள்ளையாக இருக்கும். நம்மை நாடி வரும். வாலைக் குலைத்து வருவருவதற்கு வெட்கப்படாது.
தேங்காயில் ஓடும் இருக்கும். தேங்காயின் உள்பகுதி வெள்ளையாக இருக்கும். தென்னை மரத்தில் நாம் விரும்பும் தென்னங்குலை தள்ளும். தென்னைமரமாக இருக்கும்போது வளைந்துகொடுக்காது.

மீனுக்கும் பேனுக்கும்

மன்னீரிலே பிறக்கும மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரி யாமே. (10)
மீனானது நிலைபெற்ற நீரிலே பிறக்கும். மற்று அதன் நீரலையிலே மேயும். திரும்பும் பின்-நீச்சலில் குத்தும்.
பேனானது நிலைத்திருக்கும் ஈரிலே பிறக்கும். மன்னித் தலையிலே மேயும். பின்னி எடுத்து ஈச்சு என்னும் ஈர்கொல்லியில் குத்தப்படும். இவை இரண்டிற்கும் பெருமை.

பாடல் 11-15[தொகு]

பனைமரத்துக்கும் வேசைக்கும்

கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால்
எட்டின்பன் னாடை யிழுத்தலால் - முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலா லப்பனையும்
வேசையென லாமேவி ரைந்து. (11}
பனைமரம் – பனைமரத்தில் ஏறுவோர் அதனைக் கட்டித் தழுவிக்கொண்டும் காலைச் சேர்த்து வைத்துக்கொண்டும் ஏறுவர். எட்டி அதன் பன்னாடையை இழுத்து எறிவர். முட்டிக்கொண்டு தன் ஆசை வாயால் அதன் கள்ளை அருந்துவர்.
வேசை என்னும் பொதுமகள் – வேசையரைக் கட்டித் தழுவுவர். காலைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவள்மீது ஏறுவர். எட்டிப் பிடித்து அவளது பன்னாடையை (மடித்துக் கட்டிய ஆடையை) இழுத்து அவிழ்ப்பர். முட்டிக்கொண்டு அவளது ஆசைகாட்டும் வாயிலுள்ள எச்சில் கள்ளை அருந்துவர்.

தென்னைமரத்துக்கும் வேசைக்கும்

பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேல்சுற்றும்
சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்
ஏறி இறங்கவே இன்பமாம் தென்னைமரம்
கூறும் கணிகைஎன்றே கொள்.

வெற்றிலைக்கும் வேசைக்கும்

கொள்ளுகையா னரிற் குளிக்கையான் மேலேறிக்
கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் – தெள்ளுபுகழ்ச்
செற்றலரை வென்ற திருமலைரா யன்வரையில்
வெற்றிலையும் வேசையாமே. (12)
வெற்றிலை – விற்போர் கையால் கொள்ளும் நீரால் குளிப்பாட்டப்படும். கொடிக்காலில் மேலே ஏறி வெற்றிலையைக் கிள்ளுவர். கவுளி கவுளியாக அடுக்கிக் கட்டி வைக்கப்படும்.
வேசை என்னும் விலைமகள் – வேசை கையால் தழுவிக்கொள்ளப்படுவாள். குளித்துவிட்டு உலாத்துவாள். அவன் மேல் ஏறிக்கொண்டு அவள் அழகு மேனியை ஆசையாகக் கிள்ளுவர்.

கண்ணாடிக்கும் அரசனுக்கும்

யாவருக்கும் ரஞ்சனைசெய் தியாவருக்கு மவ்வவராய்ப்
பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் – மேவும்
எதிரியைத் தன்னுள் ளாக்கியேற் றரசத்தால்
சதிருறலா லாடிய ரசாம் (13)
கண்ணாடி – எவருக்கும் வஞ்சனை செய்யாது. எல்லாரையும் அவரவராய் அவரவரது பாவனையைக் காட்டும். தன் முகத்தில் உள்ள தீங்கைப் பார்த்து அகற்றிக்கொள்ள எல்லாரும் கண்ணாடி பார்ப்பர். எதிரில் உள்ளவரைத் தன் உள்ளுக்குள் காட்டும். பின்புறம் ‘ரசம்’ பூசப்பட்டிருக்கும். சதுரமாகவும் இருக்கும்.
அரசன் - ஓரவஞ்சனை செய்யாமல் எல்லாரையும் தன்னை ஒத்தவராய்ப் பாவித்து அவரது தீது அகலும்படி பார்த்துக்கொள்வான். எதிரியைத் தன் ஆட்சிக்குள் அடக்கி ஏற்றுக்கொண்டு சுவைப்பான். நால்வகையான சதுரப்படைகளை உடையவன்.

கூத்தியாருக்கும் குரங்குக்கும்

ஓட்டங் கடியதா லுள்ளவரை மேவுதலால்
சேட்டை யெவரிடத்துஞ் செய்தலால் நாட்டமுடன்
காத்திரத்திற் குட்டியுறக் கட்டுதலாற் றெட்டுதலால்
கூத்தியர்க்கு நேராங் குரங்கு (14)
கூத்தியார் என்னும் வைப்பாட்டி – கடியதாய் (விரைவாக) ஓடிவிடுவாள். கைப்பொருள் உள்ளவரை விரும்புவாள். எல்லாரிடத்திலும் காதல் சேட்டை செய்வாள். ஆசையுடன் காப்பாற்றும்போதே குட்டிவிடுவாள். கட்டிப்பிடித்துக் கையிலுள்ள பொருளைத் தெட்டி (தெற்றி)ப் பறித்துக்கொள்வாள்.
குரங்கு – விரைவாக ஓடும். தான் உள்ள வரையை (மலையை) விரும்பும். எவராயிருந்தாலும் சேட்டை செய்யும். விருப்பத்துடன் காக்கும்பொருட்டுத் தன் குட்டியைப் பற்றிக் கட்டிக்கொள்ளும். பிறரிடமுள்ள பொருளைத் தெட்டிப் பறித்துக்கொள்ளும்.

குதிரைக்கும் காவிரியாற்றுக்கும்

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்
தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்
ஆடுபரி காவிரி யாமே. (15)
குதிரை – ஓடும். நல்ல குதிரைக்கு அடையாளமான ‘சுழி’ சுத்தம் உண்டாகியிருக்கும். பகைவரை விரட்டியடிக்கும். தன்னை வளர்ப்பவனிடம் அன்பால் தலை சாய்க்கும்.
காவிரி ஆறு நீராய் ஓடும். நீர்ச்சுழி இருக்கும். நீர் சுத்தம் ஆகும். தன்னைத் துன்னும் அலரைச் சாடும் (தன்னை அடையும் மலரை அடித்துக்கொண்டு ஓடும்). மக்கள் குளிப்பதற்காக விருப்பமுடன் அதன்மீது தலைசாய்ப்பர்.

பாடல் 16-20[தொகு]

கீரைப்பாத்திக்கும் குதிரைக்கும்

கட்டி யடிக்கையாங் கான்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியா குமே. (16)
வளமான கீரைப் பாத்தி – கீரை விதை தெளிக்கும்போது பாத்தியிலுள்ள மண்ணாலகட்டிகள் அடித்து உடைக்கப்படும். வாய்க்காலில் மடை மாறித் தண்ணீர் பாயும். பாயும் மடையின் கரை வெட்டி மறிக்கப்படும். மேன்மை அதற்கு உண்டு. பாத்தியின் எல்லையில் நீர் முட்டியபின் பாத்தி-மடை திருப்பிவிடப்படும்.
குதிரையானது வண்டியில் கட்டி அடிக்கப்படும். முன்னங்கால் பின்னங்கால் என்று கால் மாறிப் பாயும். காலைத் தரையில் வெட்டிக் காட்டித் தன் மேன்மையைக் குதிரை விளக்கும். தடை வரும்போது திரும்பி ஓடும்.

ஆட்டுக்கும் கதவுக்கும்

செய்யுட் கிடைமறிக்குஞ் சேர்பலகை யிட்டுமுட்டும்
ஐயமற மேற்றா ளடர்க்குமே – துய்யநிலை
தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில்
ஆடுங் கதவுநிக ராம் (17)
கதவு – செய்யப்பட்டதாய் வீட்டின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் மறித்துக்கொண்டிருக்கும். பலகைகள் சேர்க்கப்பட்டு முட்டு ஆணி வைக்கப்பட்டிருக்கும். ஐயமில்லாமல் மேலே தாள் (தாழ்ப்பாள்} போடப்படும்.
ஆடு – செய்யுளில் (வயலில்) கிடை மறிக்கக்கடும். சேர்த்துப் பலகை இட்டுக் கிடையில் மூடப்படும். ஐயம் இன்றிப் போரடிக்கும் களத்தின்மேல் தன் தாளால் (கால்களால்) மிதித்துக் களத் தரையைக் கெட்டிப்படுத்தும்.

குதிரைக்கும் ஆட்டுக்கும்

கொம்பிலையே தீனிதின்னுங் கொண்டகான்மேல் வெட்டுதலால்
அம்புவியி னன்னடைய தாதலால் – உம்பர்களும்
தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆடுங முதிரையுநே ராம் (18)
குதிரை – குதிரைக்குக் கொம்பு இல்லை. தீனி தின்னும். கொண்டிருக்கும் காலை மேலே தூக்கி வெட்டிக் காட்டி ‘வெட்டுங்குதிரை’ என்று விழாக்கால இறைவன் ஊர்திக் குதிரை பெயர் பெறும். நிலவுலகில் நல்ல நடை இதற்கு உண்டு.
ஆடு – கொம்பிலுள்ள இலைகளைத் தின்னும். தன் காலை மேலே தூக்கி வெட்டி உயரத்தில் இருக்கும் இலை-தழையைத் தின்னும். நன்னடத்தை உடையது.

துப்பாக்கிக்கும் ஓலைச்சுருளுக்கும

ஆணி வரையுறலா லானகுறிப் பேதரலால்
தோணக் கருமருந்தைத் தோய்ந்திடலால் – நீணிலத்தில்
செப்பார்க் குதவாத் திருமலைரா யன்வரையில்
துப்பாக்கி யோலைச் சுருள் (19)
துப்பாக்கி – துப்பாக்கி இடைப்பகுதியில் ஆணி இருக்கும். குறிப்பைத் தாக்கி இலக்கைத் தரும். கருமருந்து உள்ளே வைக்கப்பட்டிருக்கும்.
ஓலைச்சுருள் – ஓலைச்சுருள் எழுத்தாணியால் எழுதப்படும். எழுதியவன் கருத்துக் குறிப்பைத் தரும். எழுதிய பின்னர் எழுத்துத் தெரிவதற்காக அதில் கருமருந்து பூணப்படும்.

வானவில்லுக்கும் விஷ்ணுவுக்கும் வெற்றிலைக்கும்

நீரிலுளவா னிறம் பச்சையாற் றிருவால்
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் – சாருமனுப்
பல்வினையை மாற்றுதலாற் பாரீர் பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை (20)
வானவில் – நீரினால் உண்டாகும். நிறம் பச்சையாக இருக்கும். ‘திருவில்’ எனப் போற்றப்படும். உலகில் பகைமையை ஒழித்து ஒற்றுமையுடன் வாழச் செய்யும். அதனைச் சார்ந்த மனு என்னும் அரசனின் வல்வினையைப் போக்கிற்று.
விஷ்ணு – பாற்கடல் நீரில் இருக்கிறான். பச்சைநிறம் கொண்டவன். பாரதப் போரில் பகைமையைத் தீர்த்து வைத்தான். மனு என்னும் அரசனின் வல்வினையை மாற்றினான்.
வெற்றிலை – நீரில் முளைத்து வளரும். பச்சைநிறம் கொண்டது. திரு என்னும் மங்கலச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்படும். பகை நீங்கி உறவாடுவதன் அடையாளச் சின்னமாக வெற்றிப்பாக்கு வைக்கப்படும். வினை தீர்க்கும் மருந்தாக விளங்கும்.

பாடல் 21-25[தொகு]

பூசணிக்காய்க்கும் பரமசிவனுக்கும்

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துக
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு – வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசணிக்கா யீசனெனப் போற்று (21)

ஓடத்துக்கும் நிதம்பத்துக்கும்

பலகையிடும் உள்ளே பருமாணி தைக்கும்
சலமிறைக்கும் ஆளேறித் தள்ளும் - உலகறிய
ஓடமுமொன் றேயுலக நாதன் பெண்டிரே
மாடமுமொன் றேற்ற மயிர். (22)

கரண்டகத்துக்கும் பெண்குறிக்கும்

இட்டிட்டு வாங்குதலால் இன்பவெள்ளை தோன்றுதலால்
மட்டிட்டு மூடி மறைக்கையால் - முட்டத்
தெருண்டோர்கள் போற்றும் திருமலைரா யன்சீர்க்
கரண்டகமும் பெண்குறியாம் காண். (23)
அரக ரதிருச்சிற் றம்பலவா ணாவந்
தரரூ பமகே சசிதம் - பரதே
வசிதம் பரதே வசிதம் பரதே
வசிதம் பரதேவ னே. (24)
இந்தோ திலகநுதல் ராமராம மாவனசக்
கொந்தோ களபமுலை கோவிந்தா – சந்ததமும்
வேலோ விணைவிழிகள் வேங்கடவா நல்லவயி
ராலோகா ணாராய ணா. (25)

பாடல் 26 முதல் 30[தொகு]

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு வேழெட்டு
ஒன்பது பத்துப பதினொன்று – பன்னி
ரண்டுபதின் மூன்றுபதி னான்குபதி னைந்துபதி
னாறுபதினேழ்பதி னெட்டு (26)
ஓ கா மா வீ தோ வுரைப்பன் டு டு டு டு டு
நாகார் குடந்தை நகரக்கதிபர் - வாகாய்
எடுப்பர் நடமிடுடி ரேறுவ ரன்பர்க்குக்
கொடுப்ப ரணிவர் குழைக்கு (27)

குடத்திலே கங்கை யடங்குமெனப் பாடியது

விணணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் –பெண்ணை
இடத்திலே வைத்த வி றைவர் சடாம.
முடத்திலே கங்கை யடங்கும் (28)

பச்சைவடம் பாகு சேலை சோமன் என்று பாடியது

மாயன் துயின்றதுவு மாமலராள் சொல்லதுவும்
ஏய குருந்திற்கொண் டேறியதும் - தூயை
இடப்பாகன் சென்னியின்மே லேறியதும் பச்சை
வடப்பாகு சேலைசோ மன். (29)

கின்னரி வாசிக்கும் கிளியெனப் பாடியது

ஆடல் புரிந் தா னென்று மந்நாளி லேமூவர்
பாடலுகந் தானென்றும் பானமையினால் –கூடலிலே
நன்னரிவா சிக்குநடை பயிற்றினா னென்றும்
கின்னரிவா சிக்கும் கிளி. (30)

பாடல் 31 முதல் 35[தொகு]

பொன்னாவரையிலை காய் பூவென்று பாடியது

உடுத்ததுவு மேய்த்ததுவு மும்பர்கோன் றன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப் – படுத்ததுவும்
அந்நா ளெறிந்த்துவு மன்பி னிரந்த்துவும்
பொன் னா வரை யிலை காய் பூ .(31)
தோய்த்தான் மேய்த்தான் குடையாத் தூக்கினான் மேன்மேலாச்
சாய்ந்தா னெறிந்தான்பின் சாப்பிட்டான் – ஆய்ந்துசொலும்
மன்னா வரத்தில்வரு மால்சாமி நாதாகேள்
பொன்னா வரையிலை காய்பூ .(32)

செங்கழுநீர் கிழங்கென்று பாடியது

வாதமண ரேறியது மாயன் துயின்றதுவும்
ஆதிதடுத் தாட்கொண்ட வவ்வுருவம் –சீதரனார்
தான்கொண் டளந்த்துவும் தண்கச்சிக் காவலா
கேள்செங் கழுநீர்க் கிழங்கு .(33)

நாநீ நூநே என்று பாடியது

அரையின் முடியி லணிமார்பி னெஞ்சில்
தெரிவை யிடத்தமர்ந்தான் சேவை – புரையறவே
மானார் விழியீர் ம ல ர வொற்றிற்கும்
ஆனாலா நா நீ நூ நே .(34)

ஈயேற மலை குலுங்கப் பாடியது

வாரணங்க ளெட்டு மகமேருவுங் கடலும்
தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்
பண்வா யடைச்சி பருமத்தி னாலடித்த
புண்வாயி லீமொய்த்த போது . (35)

பாடல் 36 முதல் 40[தொகு]

கடுங்காற்று மழைகாட்டும் கடுநட்புப் பகைகாட்டும்எனப் பாடியது

நீரே பிறவா நெறிகாட்டி யாரெமக்கு
நீரோ சமுசைநிலை யிட்டீர் – நீரேயிவ்
விங்களமேன் செய்தீர் விடுங்கடுங்காற் றும்மழைகாட்
டுங்கடுநட் புப்பகைகாட் டும். (36)s

விநாயகர் முருகர் பரமசிவனுக்குச் சிலேடை

சென்னிமுக மாறுளதாற் சேர்கரமுன் னாலுமையால்
இன்னிலத்திற் கோடென் றிருக்கையால் – மன்னுகுளக்
கண்ணுறுத லானுங் கணபதுயுஞ் செவ்வேளும்s
எண்ணரனு நேலா வரே. (37)

மும்மூர்த்திகளின் உணவு முதலியனs

சிறுவ னளைபயறு செந்நெற் கடுகுs
மறிதிகிரி தண்டுமணி நூற் – பொறியரவம்s
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்s
கற்றாழம் பூவே கறி .(38)

இராசியை அடைசொலில்லாமற் பாடியது

பகருங்கான் மேடமிடபம் மிதுனங் கரக்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் – சிகந்த
நுசுமகரக் கும்பமீனம் பன்னி ரண்டும்
வரையறு மிராசி வளம் (39 )

தை மாசி பங்குனி யென்று பாடியது

பாணரக்குச் சொல்லுவதும் பைம்புனலை மூடுவதும்
தாணு வுரித்ததுவுஞ் சக்கரத்தோன் – ஊணதுவும்
எம்மானை யேத்துவது மீசனிடத் துஞ்சிரத்தும்
தைமாசி பங்குனிமா தம் (40)

பாடல் 41 முதல் 45[தொகு]

ஞானசபை கனகசபை சிற்றம் பலம்பே
ரானந்தக்கூ டந்திருமூ லட் – டானம்பே
ரம்பலம்பஞ் சாவரண நாற்கோ புரம்பொற்
கம்பமண் டபஞ்சிவ கங்கை (41)
சங்குதரத் தந்திருச் சாளரவா யில்வீர
சிங்கா சனத்திருவந் திக்காப்புப் –பங்குனிமா
தத்திருநா டீர் த்தத் திருவினா தன்கோயில்
உத்தரபா கந்திருவா ரூர் (42)
அப்பா குமரகோட் டக்கீரை செவிலிமேட்
டுப்பாகற் காய்பருத்திக் குழிநீர் – செப்புவா
சற்காற்றுக் கம்பத் தடியிர் றவங்கருமா
றிப்பாய்ச்சல் யார்க்கு மினிது . (43)

பாதி வெண்பாவில் மாலவதாரஞ் சொன்னது

மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற் தாதியிலென்
இச்சையிலுன் சென்ம மெடுக்கவா – மச்சாகூர்
மாகோலா சிங்கா வாமா ராமாராமாரா
மாகோபா லாமாவா வாய் . (44)
திருக்குடந் தையாதி கும்பேசர் செந்தா
மரைக்குளங் கங்கை மகங்கா – விரிக்கரையின்
ஓரங்கீழ்க் கோட்டங்கா ரோணமங்கை நாயகியார்
சாரங்க பாணி தலம் . (45)

பாடல் 46 முதல் 50[தொகு]

மன்னென்றெடுத்து மலுக்கென்று முடிந்த்து

மன்னுதிரு வண்ணா மலைச்சம்பந் தாண்டாற்க்குப்
பன்னுந் தலைச்சவரம் பண்ணுவதேன் – மின்னின்
இளைத்தவிடை மாதரிவன் குடுமி பற்றி
வளைத்திழுத்துக் குட்டாம லுக்கு . (46)

சோகாமா ஏவாதாவென்று பாடியது

சோ கா மா ஏ வா தா சொல்லின்மனைக் கூட்டியுமை
பாகார்ந்த தில்லைப் பரமேசர் – வாகாய்த்
தரித்தா ரெரித்தார் தறித்தா ருதைத்தார்
உரித்தார் கணைபடைத்தா ரூர்க்கு . (47)

கொட்டைப்பாக்கென் றெடுத்துகளிப்பாக்கென்று முடித்தது

கொட்டைப்பக்கும் மொருகண் கூடையைப் பார்க்கும்மடியில்
பிட்டைப்பாக்கும் பாகம் பெண்பாக்கும் – முட்டநெஞ்சே
ஆரணனு நாரணனுமாதி மறையுந் தேடும்
காரணனைக் கண்டுகளிப் பாக்கு (48)

செருப்பென்றெடுத்து விளக்குமாறென்று முடித்தது

செருப்புக்கு வீரர்களைச் சென்றுயக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல – மருப்புக்குத்
தண்டேன் பொழிந்த திருத்தாமரை மேல்வீற்றிருக்கும்
வண்டே விளக்கு மாறே .(49)

கரியென்றெடுத்து உமியென்று முடித்தது

கரியதனை யேயரித்த கையாவளை யேந்
தரியயற்கு மெட்டா தவையா – பரிவாக
அண்டரெல்லாங் கூடியமு தங்கடைந்த பொழு
துண்ட நஞ்சையிங் கேயுமி (50)

பாடல் 50 முதல் 55[தொகு]

கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீத்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் – உருக்கமுள்ள
அப்பக்காய் நெய்துவட்ட லாக்கினா ளத்தைமகள்
உப்புக்காண் சீ சீ யுமி. (51)
கூறிக்கெட் டேழுங்குலைந்து நடுநடுங்கிப்
பூதிக்கொப் பாகவன் றேபோய் விடுமே – ஆதி
நரக்காட் டகவரியை நற்சரப மாகிச்
சுருக்கா விடி னஞ்சுணி . (52)

சீத்துப் பூத்தென்று பாடியது

அப்பூருஞ் செஞ்சடைமே லம்புவியைப் பார்த்துப்பார்த்
தெப்போதுஞ் சீத்துப்பூத் தென்னவே – முப்போதும்
வாலங்காட் டாநிற்கும் வாயங்காக் காநிற்கும்
ஆலங்காட்டான் பூ ணரா .(53)

பாற்கடலிற் செந்தூளெழும்ப்பஃ பாடியது

சுத்தபாற்கட லினடுவினிற் றூளிதோன்றிய வதிசயமதுகேள்
மத்தககக்கரியை யுரித்தவன்மீது மதன்பொலுதழிந் திடுமாற்றம்
வித்தகக்கமலை செவியுறக்கேட்டாள் விழுந்துநொந் தயர்ந்தழுதேங்கிக்
கைத்தலமலரான் மாரபுறப்புடைத்தா ளெழுந்தது கலவையின்செந்தூள் . (54)
தடக்கடலிற் பள்ளிக்கொள் வோமதனை நற்சங்கரனார்
அடற்புலிக்குட்டிக் களித்தனரா மதுகேட்டு நெஞ்சில்
நடுக்கம்வந் துற்றதுகைகா லெழாநளினத்தி யென்னை
இடுக்கடிபாயைச் சுருட்டடி யேகடி யம்பலத்தே . (55)

பாடல் 56 முதல் 60[தொகு]

செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில்
வெற்றிபரி யும்வாளே வீரவாள் – மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவாளிவ ளாவா ளாம் . (56)
தெருமுட் டப்பாளை சிதறிவளர் பூகத்
தருமுட்டச் செவ்வாளை தாவும் – திருமுட்டத்
தூரிலேகண் டேனொரு புதுமைபன் றிக்கு
மாரிலே கொம்பான வாறு . (57)
நூலாநாலாயிர நானூற்று நாறபத் தொன்பான்
பாலாநானூற்று நாற்பத் தொன்பான் – மேலாநாற்
பத்தொன்பான் சங்கமறு பத்துநாலாட லுக்கும்
கர்த்தன் மதுரையிற் சொக்கன் (58)
இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா
இருந்தாலிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய் . (59)
குரங்கனலில் வீழ்ந்து வெறிகொண்டு தேள்கொட்டக்
கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வ – விரைந்துபேய்
பற்றவேகள் ளுண்டுபச்சை மிளகைக் கடித்தால்
எத்தனைபார் சேட்டைக் கிடம். (60)

பாடல் 61 முதல் 65[தொகு]

நீறாவாய் நெற்றிநெருப் பாவா யங்கமிரு
கூறாவாய் மேனிகொளுந் துவாய் – மாறாத
நட்டமாவாய் சொறுநஞ்சாவாய் நாயேனை
இட்டமாய் காப்பா யினி . (61 )
சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்குலர்ந் தவாயா புலையா – திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே யுனையொருத்திப்
போட்டாளே வேலையற்றுப் போய் .(62)
பெருமாளு நல்ல பெருமா ளவர்தந்
திருநாளு நல்ல திருநாள் –பெருமாள்
இருந்திடத்திற் சும்மா யிராமையினா லையோ
பருந்தெடுத்துப் போகிதே பார் .(63)
வாலெங்கே நீண்ட வயிரெங்கே முன்னிரண்டு
காலெங்கே யுட்குழிந்த கண்ணெங்கே – சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்கா ணீவிர்
கவிராயரென் றிருந்தக் கால் .(64 )
நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்
பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் – உச்சதமாங்
காளனேன் குஞ்சரமேன் கார்க்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராசாங்க மேன் .(65)

பாடல் 66 முதல் 70[தொகு]

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலட வெள்ளி யெழும் .(66)

Once he went to a chatram , in Nagapatnam - near Tuticorin ( motel in those days ) . , asked for food . The owner /keeper delayed / took lot of time to prepare . Hence he got wild & sang this . fIRST MEANING - kadal sooz= the ocean sourrended by in Nagapattnam -you will get food only during sun set ,when he serves in your plate - the whole city wwould have slept,, the momnet he puts rice in your plate -(the next day ) sun will come. Hearing this the owner came running , touched his feet , begged for mercy. Pulavar said - dont worry it will be same - & read again - which will give a different meaning 2 line --> even if every this is lost , or set oof - RICE will be available , if the owner puts rice in the plate - the entire city - will get food / their hunger will go, - Annam IDA velli ----- the rice will be like a bright silver -will be served in the plate. After this the owner was happy.

மாயனார் போற்றுமது ராபுரிச் சொக்க
நாயனார் பித்தேறி னாரென்றே –நேயமாங்
கன்னன்மொழி யங்கயற்கட் காரிகையா ளையையோ
அன்னமிறங் காமலிருந் தாள் . (67)
எட்டொருமா வெண்காணி மீதேயிருந் தகலை
பட்டொருமா நான்மாவிற் பாய்ந்தே – சிட்டர்தொழுந்
தேவாதிதேவன் றிருவொற்றி யூருடையான்
மாவேறி வீதிவரக் கண்டு.(68)
மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பாப்பான் கதையும் பறிபோச்சே- மாப்பார்
வலமிகுத்த மும்மத்தது வாரணத்தை யையோ
எலியிழுத்துப் போகின்ற தென் .(69)
முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக கண்டஞ்சாமுன் –விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
எருமாவின் கீழரையின் றோது . (70)

before you get the third leg( walking stick ) before you are kept in the front room ( after dead - people will not take the body in side )before you see the yamaraj, before you cough, -- Makani - means - burial ground, worship the shiva who is below the Mango tree in KANCHIPURAM , NEXT MEANING - IN THOSE DAYS - THE FRACTIONS ARE 1, 3/4- mUKKAL, 1/2 ARAI, 1/4 -KAL, , ARAI-KAL=1/8,,1 MAA IS 1/5 -SO 2 MAA -1/10, MAKANI -1/16, 1 MAA-1/20, KIZARAI-1/640.. NOW YOU SEE THE FRACTIONS==>3/4,1/2,1/4,1/8, 1/10,1/16,1/20,1/640 - ALL THESE ARE IN ORDER..

பாடல் 71 முதல் 75[தொகு]

வண்ணங்கரிய னென்றும்வாய் வேதநாறி யென்றுங்
கண்ணனிவ னென்றுங் கருதாமன் – மண்ணை
அடிப்பது மத்தாலே யளந்தானை யாய்ச்சி
அடிப்பது மத்தாலே யழ .(71)
வண்ணம் கரியன் என்றும் வாய் வேதம்நாறி என்றும் கண்ணன் இவன் என்றும் கருதாமல் மண்ணை அடிப் பதுமத்தாலே அளந்தானை ஆய்ச்சி அடிப்பது மத்தாலே யழ.
ஆய்ச்சி கண்ணனை மத்தால் அடித்த கதை.
மேனி வண்ணம் கருமையன் என்றும்,
வாயில் வேதம் மணப்பவன் என்றும்.
கண்ணன் இவன் என்றும் கருதாமல்
மூவுலக மண்ணைக் காலடித் தாமரையாலே அளந்தானை, ஆய்ச்சி மத்தாலே அழ அழ அடித்தாள்.
காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையுங் கொன்றபழி போமோ –சீலமுட
னாட்டிலே வீற்றிருந்த நாதரேநீர் திருச்செங்
காட்டிலே வற்றிருந்தக் கால் .(72)
காலனையும் காமனையும் காட்டு சிறுத்தொண்டர் தரு பாலனையும் கொன்ற பழி போமோ?சீலமுடன் நாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர் திருச்செங்காட்டிலே வீற்றிருந்தக் கால்
செங்காட்டங்குடி சிவனை வழிபட்டபோது பாடியது.
மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, சிவபெருமான் எமனைக் காலால் உதைத்துக் கொன்றார்.
சிவன் தன் தவத்தைக் கலைத்த காமனை எரித்தார்.
திருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டன் பிள்ளையைக் கறியுண்ணவேண்டி சிவன் கொல்லச்செய்தார்
நாட்டுக் கோயில்களில் குடிகொண்டுள்ள நாதரே! சிவபெருமானே! நீர்
திருச்செங்காட்டங்குடியில் (செங்காடு என்னும் சுடுகாட்டில்) குடிகொண்டிருந்தால் நீ கொன்ற பழியெல்லாம் உன்னை விட்டுப் போய்விடுமா?
பூனைக்கி யாறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்
ஆனைக்குக் கால்பதி னேழானதே –மானேகேள்
முண்டகத்தின் மீதுமுழு நீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண் .(73 )
பூனைக்கி(கு) ஆறு கால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால் ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே மானே கேள் முண்டு அகத்தின் மீது முழு நீலம் பூத்ததுண்டு கண்டது உண்டு கேட்டது இல்லை காண் .::பூனைக்கு 6 கால், புள்-இனத்துக்கு 9 கால், யானைக்கு 17 கால் என்று இல்லாததைச் சொல்லி இருப்பதை உறுதிப்படுத்தியது.
பூ(ன்) நக்கி ஆறு கால் = பூ நக்கி உண்ணும் தேனீக்கு ஆறு கால்
புள்ளினத்துக்கு ஒன்பது கால் = புள்ளினத்துக்கு இரண்டேகால் (9 பெருக்கல் ¼ = 2¼)
ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே = யானைக்கு நாலே கால் ஆனதே (17 பெருக்கல் ¼ = 4¼)
மானே கேள்
முண்டு அகத்தின் மீது முழு நீலம் பூத்தது உண்டு = ஒளி முன் அமர்ந்துகொண்டு கண்ணை மூடித் தவம் செய்தால் அகத்தில் (உள்ளே) நீலநிலம் பூக்கும். | முண்டகம் என்னும் செந்தாமரை மேல் நீலமலர் பூத்தது – சிவன் நிறம் சிவப்பு. பார்வதி நிறம் நீலம்.
கண்டது உண்டு கேட்டது இல்லை காண் = இவற்றை எண்ணிப் பார்த்துக் கண்டது உண்டு.
பூனைக்கு 6 கால் என்றும்,
பறவைகளுக்கு 9 கால் என்றும்,
யானைக்கு 17 கால் என்றும்,
முண்டகத் தாமரை மீது முழு நீலமலர் பூத்தது என்றும்
சொல்லக் கேட்டது இல்லை.
அப்பனி ரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி – சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்
கெண்ணும் பெருமை யிவை . (74)
அப்பன் இரந்து உண்ணி ஆத்தாள் மலை நீலி ஒப்பு அரிய மாமன் உறி திருடி சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கு இங்கு எண்ணும் பெருமை யிவை .
ஆறுமுகக் கடவுள் உலா வரக் கண்டு, அவன் பெருமைகளை அடுக்கிக் கூறியது.
இவன் அப்பன் சிவபெருமான் பிச்சை எடுத்து உண்பவன்.
இவன் தாய் பார்வதி மலையில் பிறந்த பேய்.
இவன் அண்ணன் ஆனைமுகன் சப்பைக்காலன், பெரிய வயிற்றிறினை உடையவன்
ஆறுமுகத்தானுக்கு நாம் எண்ணிப் பார்க்கும் பெருமைகள் இவை.
கூத்தாள் விழிகநெடுங் கூர்வேலாங் கூத்தாள்தன்
மூத்தாள் விழிகண் முழுநீலம் – மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள ரவிந்த மாத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண் டம்பு. (75)
கூத்தாள் விழிகள் நெடும் கூர்வேல் ஆம் கூத்தாள்தன் மூத்தாள் விழிகள் முழுநீலம் மூத்தாள்தன் ஆத்தாள் விழிகள் அரவிந்தம் ஆத்தாள்தன் ஆத்தாள் விழிகள் இரண்டு அம்பு.
கண்ணின் உவமைகளை அடுக்கிப் பாடியது.
கூத்தாடுகின்றாளே ஒருத்தி அவன்தன் விழிகள் நீண்ட வேலாகப் பாய்கின்றன.
அவளுக்கு மூத்தவள் ஒருத்தி இருக்கிறாளே அவள் விழிகள் முழுமையான நீலமலராகத் தோற்றம் தருகின்றன.
மூத்தவளின் தாயின் விழிகள் தாமரை மலராகத் தோன்றுகின்றன.
இந்தத் தாய்க்குத் தாயின் விழிகள் இரண்டு அம்புகளாகப் பாய்கின்றன.

பாடல் 76 முதல் 80[தொகு]

என்னைக் கொடுத்தா லிரக்கமுனக் குண்டாமோ
வன்னக் கமலமுக வல்லியே –துன்னுமதக்
காட்டானைக் கோட்டுமுலைக் காரிகையே நீபயந்த
கோட்டானைத் தானே கொடு .(76)
என்னைக் கொடுத்தால் இரக்கம் உனக்கு உண்டாமோ வன்னக் கமல முக வல்லியே துன்னும் மதக் காட்டு ஆனைக் கோட்டு முலைக் காரிகையே நீ பயந்த கோட்டானைத் தானே கொடு .(76)
வேண்டாதவர்கள் காளமேகப்புலவரைக் களிதேவிக்குப் பலிகொடுக்க நிறுத்தினர். அப்போது இந்தப் பாடலைப் பாடினார். தப்பித்துக்கொண்டார்.
என்னைப் பலி கொடுத்தால் உனக்கு இரக்கம் உண்டாகுமா?
அழகிய தாமரை போன்ற முகம் கொண்ட காளிதேவியே! மதம் கொண்ட யானையின் கொம்பு போன்று நிமிர்ந்த முலை கொண்டவளே! நீ பெற்ற கோட்டானை (ஆனைமுகனை) எனக்குக் கொடு.
முன்னே கடிவாள மூன்றுபேர் தொட்டிழுக்கப்
பின்னே யிருந்திரண்டு பேர்தள்ள – எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம்போங் காத வழி . (77)
முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டு இழுக்கப் பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள எந்நேரம் வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை மாதம் போம் காதம் வழி.
வேதம் சொல்லும் வாயை உடையவன் வேங்கடராமன். அவன் வாங்கத் தெரியாமல் ஒரு குதிரையை வாங்கி அதன் மேல் ஏறி அமர்ந்துகொண்டான். அதன் கடிவாளத்தை மூன்று பேர் முன்னேயிருந்துகொண்டு இழுத்தனர். பின்னே நின்றுகொண்டு குதிரையை இரண்டுபேர் தள்ளினர். அப்படியும் அந்தக் குதிரை ஒரு மாத காலத்திற்கு ஒரு காத தூரம்தான் சென்றது.
வேதம் போம் வாயான் ஒரு உடம்பை எனக்குத் தந்தான். அந்த உடம்புக் குதிரையில் என் உயிர் அமர்ந்துகொண்டது. காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று பேர் இழுத்தனர். இன்பம், துன்பம் என்னும் இரண்டு பேர் பின்னே இருந்து தள்ளினர். அது சண்டிக் குதிரை.
ஆறும் பதினாறு மாமூரில் வேங்கட்டன்
ஏறும்பரி மாவா யேற்றமா – வேறுமாs
எந்தமா சும்மா வெறுமா களிகிளற
வந்த மாசந்த மாமா .(78)
ஆறும் பதினாறும் ஆம் ஊரில் வேங்கட்டன் ஏறும் பரி மாவா ஏற்ற மா வேறுமா எந்த மா சும்மா வெறுமா களிகிளற வந்த மா சந்தம் ஆமா.
மா, மா – என்று வரப் பாடியது.
வேகும் கட்டையை உடையவன் வேங்கட்டன். ஆறு வயதிலும், பதினாறு வயதிலும் அவன் குதிரை ஏறுவான். அவன் ஏறும் குதிரை பரிமா என்னும் குதிரையா? அவனுக்கு ஏற்ற குதிரை வேறு குதிரை. அது எந்தக் குதிரை? அது களி கிளற வந்த வெறும் களிமா. களி கிளறும்போது வரும் கொதி ஒலி சந்த-இசை ஆகுமா?
ஆடாறோ பின்னையவ ரன்பரெலாம் பார்த்திருக்க
நீடாரூர் வீதியிலே நின்றுதான் –தோடாரும்
மெய்க்கே பரிமளங்கள் வீசுந் தியாகேசர்
கைக்கே பணமிருந்தாக் கால் .(79)
ஆடாறோ பின்னை அவர் அன்பர் எலாம் பார்த்திருக்க நீடு ஆரூர் வீதியிலே நின்றுதான் தோடு ஆரும் மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர் கைக்கே பணம் இருந்தாக் கால்.
திருவாரூர் திருவிழா கண்டு பாடியது.
கையில் பணம் (படமெடுத்து ஆடும் பாம்பு) இருந்தால், தியாகேசர் மாலை சூட்டிய உடம்பெல்லாம் மணக்கும் வாசனைப் பொருள்களைப் பூசிக்கொண்டு, அன்பர் எல்லாரும் பார்த்திருக்கும்படி, திருவாரூர் வீதியிலே ஆடாரோ, பின்னை.
வள்ளலெனும் பெரிய மாயூர நாதருக்கு
வெள்ளிமலை பொன்மலையு மேயிருக்கத் –தெள்ளுமையாள்s
அஞ்சலஞ்ச லென்றுதின மண்டையிலே தானிருக்க
நஞ்சுதனை யேனருந்தி னார் .(80)
வள்ளல் எனும் பெரிய மாயூர-நாதருக்கு வெள்ளிமலை பொன்மலையுமே இருக்கத் தெள் உமையாள் அஞ்சல் அஞ்சல் என்று தினம் அண்டையிலே தானிருக்க நஞ்சுதனை ஏன் அருந்தினார்?
மயிலாடுதுறை ஈசரை வழிபட்டபோது பாடியது.
மயிலாடுதுறை மயூரநாதருக்கு வள்ளல் என்னும் பெயரும், வெள்ளிமலையும் (இமயமலை), பொன்மலையும் (திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பொன்மலை) உடைமையாய் இருக்க, நல்ல தெளிந்த மனத்துடன் நாள்தோறும் “அஞ்சாதே, அஞ்சாதே” என்று கூறிக்கொண்டு அண்டையிலே உமையாள் இருக்க, நஞ்சுதனை (விடத்தை) ஏன் அருந்தினார்?

பாடல் 81 முதல் 85[தொகு]

நல்லதொரு புதுமை நாட்டிற்கண்டே னதனைச
சொல்லவா சொல்லவா சொல்லவா –தொல்லை
மதுரைவிக்கி னேச்சரனை மாதுமையாள் பெற்றாள்
குதிரைவிற்க வந்தவனைக் கூடி .(81)
நல்லது ஒரு புதுமை நாட்டில் கண்டேன் அதனைச் சொல்லவா சொல்லவா சொல்லவா, தொல்லை மதுரை விக்கினேச்சரனை மாது உமையாள் பெற்றாள் குதிரைவிற்க வந்தவனைக் கூடி.
மதுரை விக்கினேசுவரன் கோயிலின் வழிபட்டபோது பாடியது.
நல்லதொரு புதுமையை நாட்டில் கண்டேன். அதனைச் சொல்லவா? குதிரை விற்க வந்தனை கூடி உமை மதுரை விக்கினேசுவரனைப் பெற்றாள்.
மதுரைச் சொக்கநாதர் நரியைப் பரியாக்கி, மாணிக்கவாசகருக்காகக் குதிரை விற்பவராக வந்த கதை.
வெள்ளையா னேறும் விமலரடி பணியும்
பிள்ளையார் வாழும் பெருந்தெருவில் –வள்ளை
இலைக்கறி விற்பாண் மருங்குலிற்று விடுமென்று
முலைக்கறி விப்பாரிலை யேமுன் .(82)
வெள்ளையான் ஏறும் விமலர் அடி பணியும் பிள்ளையார் வாழும் பெருந்தெருவில் வள்ளை இலைக்கறி விற்பாள் மருங்குல் இற்றுவிடும் என்று முலைக்கறி விப்பார் இலையே முன்.
அவன் வள்ளைக் கீரை (இலை) விற்கிறாள்.
நல்லவர்கள் அடிபணியும் மதுரைப் பிள்ளையார் கோயில் தெருவில் விற்கிறாள்.
அவள் வெள்ளையான் ஏறும் பெண்.
அவளுக்குப் பருத்த முலை.
அவள் இலைக்கறி (கீரைக் கறி) விற்கிறாளே.
முலை தாங்காமல் அவளது இடை இற்று முறிந்துவிடும் என்று அவளது முலைக்கறியை விற்பார் இல்லையே.
எண்ணிப் பாருங்கள் (முன்னு).
சட்டியிலே பாதியந்தச் சட்டுவத்தி லேபாதி
இட்டகலத் திற்பாதி யிட்டிருக்கத்- திட்டமுடன்
ஆடிவந்த சோசோமேசன் அழைத்தபோ தேபிள்ளை
ஒடிவந்த தெவ்வா றுரை .(83)
சட்டியிலே பாதி அந்தச் சட்டுவத்திலே பாதி இட்ட கலத்தில் பாதி இட்டிருக்கத் திட்டமுடன் ஆடிவந்த சோசோமேசன் அழைத்தபோதே பிள்ளை ஒடிவந்தது எவ்வாறு உரை.
சோமேசன் (சிவன்) பிள்ளைக்கறி கேட்டார். சிறுத்தொண்டரும் (சிறுமைப்பட்ட தொண்டர்) அவரது மனைவி திருவெண்காட்டு-நங்கையும் தன் மகன் சீராளனை அறுத்துக் கறி சமைத்துத் தந்தனர்.
அந்தக் கறி சட்டியிலே பாதி (ஒருபகுதி) இருந்தது.
அகப்பையில் பாதி இருந்தது.
உண்ணுவதற்காக இட்ட உண்கலத்தில் பாதி இருந்தது.
கறி உண்ண ஆடிக்கொண்டு வந்த சோமேசர் “சீராளா” என்று அழைத்தார்.
சீராளன் உயிர் பெற்று ஓடிவந்தான்.
எப்படி? சொல்லுங்களேன்.
நேற்றிரா வந்தொருவ னித்திரையிற் கைப்பிடித்தான்
வேற்றூரா னென்று விடாயென்றேன் –ஆற்றியே
கஞ்சிகுடி யென்றான் களிதின்று போவென்றேன்
வஞ்சியரே சென்றான் மறைந்து .(84)
நேற்றிரா வந்து ஒருவன் நித்திரையில் கைப்பிடித்தான் வேற்றூரான் என்று விடாய் என்றேன் ஆற்றியே கஞ்சிகுடி என்றான் களி தின்று போ என்றேன் வஞ்சியரே சென்றான் மறைந்து.
நேற்று இரவு தூங்கும்போது கனவில் வந்த ஒருவன் என் கையைப் பிடித்தான். அவன் வேறு ஊர்க்காரன் என்று “விட்டுவிடு” என்றேன். அவன் என்னைத் தேற்றிக் “கஞ்சிகுடி” என்றான். நான் “களி, தின்று போ” என்றேன்.
கஞ்சிகுடி = கஞ்சியைக் குடி (குடிக்கக் கஞ்சி வேண்டும்) - என்றான். நான் “கஞ்சி வேண்டாம், களி தருகிறேன். தின்றுவிட்டுப் போ” என்றேன்.
கஞ்சிகுடி = காஞ்சிபுரம் – என்றான். கச்சி ஏகம்பன் என்பதால், “என்னோடு களித்திரு, என்னைத் தின்னு, பின் போ” என்றேன்.
கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டிர் தமைச்சுமந்த பித்தனார் – எட்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை யேறினா ராம் . (85)
கண்டீரோ பெண்காள் கடம்பவனத்து ஈசனார் பெண்டிர் தமைச் சுமந்த பித்தனார் எண் திசைக்கும் மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார் அக்காளை ஏறினாராம் .
பெண்களே! இப்படி ஒருவரைப் பார்த்தது உண்டா!
கடம்பவனத்தில் இருக்கும் ஈசனார் பெண்ணைத் தலையில் சுமந்துகொண்டு ஆடும் பித்துப் பிடித்தவன். தங்கை மேல் நெருப்பை மூட்டினார். அக்காளை ஏறினாராம் (அக்காளைப் புணர்தல்)
தலையில் கங்கை வைத்துள்ளார். அழகிய கையில் தீச்சட்டி வைத்துள்ளார். அந்தக் காளைமாட்டின் மீது ஏறி அமர்ந்துகொண்டு உலா வருகிறார்.

பாடல் 86 முதல் 90[தொகு]

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப் பெண்டாயினாள் –கேட்டிலையோ
குட்டிமறிக்க வொருகோட்டானை யும்பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண் .(86)

மாட்டுக்கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைநகர் ஆட்டுக்கோனுக்குப் பெண்டு ஆயினாள் கேட்டிலையோ குட்டி மறிக்க ஒரு கோட்டானையும் பெற்றாள் கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்.
மதுரையில் வாழ்ந்த மாடு மேய்க்கும் கோனார் ஒருவனின் தங்கை நில்லைநகர் எனப் போற்றப்படும் சிதம்பரத்தில் உள்ள ஆடு மேய்க்கும் கோனார் ஒருவனை மணந்துகொண்டு அவனுக்குப் பெண்டு (மனைவி) ஆயினாள். இந்தச் செய்தியை நீ கேள்விப்பட்டது இல்லையா. அவனது ஆட்டுக்குட்டிகளை மறித்து மேய்க்க கையில் கோல் தாங்கும் ஒரு பிள்ளையையும் பெற்றாள். அவள் சிற்றிடையர் குலச் சிற்றிடைச்சி. உருண்டு திரண்ட கட்டிமணி போன்றவள்.
மாடு மேய்க்கும் கோன் கண்ணன். அவன் தங்கை உமை. மதுரைச் சொக்கனுக்கு மனைவியாக இருந்த அவள் தில்லையில் நடனமாடும் அம்பலவாணனுக்கும் பெண்டு என்று ஆயினாள். இந்தச் செய்தியை நீ கேள்விப்பட்டது இல்லையா. தலையில் கைகளை மாற்றிக் குட்டிக்கொள்ளுபடி ஒரு கோட்டுப் (தந்தம்) பிள்ளையாரையும் பெற்றெடுத்தாள். அவள் கட்டிமணி போன்ற கண்களையும், சிறிய இடையையும் உடையவள். (மீனாட்சி)

நாட்டுக்கு ளாட்டுக்கு நாலுகா லையாநின்
ஆட்டுக் கிரண்டு காலானாலும் – நாட்டமுள்ள
சீர்மேவு தில்லைச் சிவனேயிவ் வாட்டைவிட்டுப்
போமோசொல் ஆயப் புலி .(87)

நாட்டுக்குள் ஆட்டுக்கு நாலு கால் ஐயா நின் ஆட்டுக்கு இரண்டு கால் ஆனாலும் நாட்டம் உள்ள சீர் மேவு தில்லைச் சிவனே இவ் ஆட்டைவிட்டுப் போமோ சொல் ஆயப் புலி.
சிறப்பு தேடிவரும் தில்லை (சிதம்பரம்) வாழ் சிவனே! நாட்டுக்குள் எல்லா ஆட்டுக்கும் நான்கு கால். உன் ஆட்டுக்கு (ஆட்டத்துக்கு) இரண்டு கால். (நாலுகால் ஆட்டையே பிடிக்கும் புலிக்கு இரண்டுகால் ஆட்டைப் பிடிப்பது எளுதன்றோ) இந்த ஆட்டைப் பிடிக்காமல் விட்டுவிட்டுப் புலி போய்விடுமா?
புலிக்கால் முனிவர் உன் ஆட்டத்தை விட்டுவிட்டுப் போவாரா?

தாண்டி யொருத்தி தலையின் மேலேறாளோ
பூண்டசெருப் பாலொருவன் போடானோ – மீண்டொருவன்
வையானோ வண்முறிய மாட்டானோ தென்புலியூர்
ஐயாநீ யேழை யானால் .(88)

தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ பூண்ட செருப்பால் ஒருவன் போடானோ மீண்டு ஒருவன் வையானோ வண் முறிய மாட்டானோ தென்புலியூர் ஐயா நீ யேழை ஆனால்.
தென்புலியார் அம்பலவாணனே! நீ பிச்சை எடுத்து உண்ணும் ஏழையாய் இருந்தால், உன்னைத் தாண்டி ஒருத்தி உன் தலையின் மேல் ஏறிக்கொள்ள மாட்டாளோ? (கங்கை சிவன் தலையில்). அணிந்திருக்கும் செருப்பால் உன்னை ஒருவன் அடிக்கமாட்டானா? (கண்ணப்பர் தன் கண்ணைப் பிடுங்கி அப்புவதற்காகத் தன் செருப்புக்காலால் கண்ணில் உதைத்துக்கொண்டது) மீண்டும் மீண்டும் உன்னை ஒருவன் வையமாட்டானோ? (சுந்தரமூர்த்தி அடிமை என்று எழுதியிருந்த ஓலையை கிழித்ததற்காக வைதார்)

கொங்குலவுந் தென்தில்லைக் கோவிந்தக் கோனிருக்கக்
கங்குல்பக லண்டர்பலர் காத்திருக்கச் – செங்கையிலே
ஓடெடுத்த வம்பலவா வோங்குதில்லை யுட்புகுந்தே
ஆடெடுத்த தெந்தவுபா யம் . (89)

கொங்குலவும் தென்தில்லைக் கோவிந்தக் கோன் இருக்கக் கங்குல்பகல் அண்டர் பலர் காத்திருக்கச் செங்கையிலே ஓடு எடுத்த அம்பலவா ஓங்கு தில்லையுள் புகுந்தே ஆடு எடுத்தது எந்த உபாயம்.
மகரந்தத் துகள்கள் கொட்டிக் கிடக்கும் தென்தில்லையாகிய சிதம்பரத்தில் கோவிந்தக்கோன் (சிதம்பரம் சித்திரக்கூடம் கோவிந்தராசப் பெருமாள்) உன் முன் இருக்கும்போது, இரவு பகல் என்று பார்க்காமல் உன்னை அண்டியிருக்கும் தொண்டர்கள் பலர் காத்திருக்கும்போது, உன் செந்நிறக் கைகளிலே சோறு வாங்கி உண்ணும் ஓட்டை எடுத்துக்கொண்டு, அம்பலவாணா! தில்லை அம்பலத்துக்குள் புகுந்து ஆட்டம் காட்டுகிறாயே! அது எங்களுக்குச் செய்யும் எந்த வகையான உதவி?

ஆடுந் தியாகரே யாட்டமேன் றாநுமக்கு
வீடுஞ் சமுசார மேலிட்டுக் –கூடிச்
செருக்கி விளையாடச் சிறுவரிரண் டாச்சே
இருக்குமூ னொற்றியாச் சே . (90)

ஆடும் தியாகரே ஆட்டமேன் தாம் நுமக்கு வீடும் சமுசாரம் மேலிட்டுக் கூடிச் செருக்கி விளையாடச் சிறுவர் இரண்டு ஆச்சே இருக்கும் ஊன் ஒற்றி ஆச்சே.
ஆட்டம் காட்டும் தியாகரே! நுமக்கு ஆட்டங்கள்தாம் ஏன்? உனக்கு வீடு இருக்கிறது. சமுசாரம் (மனைவி) இருக்கிறாள். அவள் மேல் கண்டதையெல்லாம் இட்டு, செருக்குடன் விளையாட இரண்டு சிறுவர்கள் இருக்கிறார்கள். உன்னிடம் இருக்கும் உடம்பை மட்டும் உன் மனைவியிடம் ஒற்றிக்கு ஈடாக வைத்துவிட்டாய். பின் நீ மட்டும் எப்படி ஆடுகிறாய்? எதற்காக ஆடுகிறாய்?

பாடல் 91 முதல் 95[தொகு]

திங்க ணுதலார் திருமனம்போ லேகீறிப்
பொங்குகட லுப்பைப் புகட்டியே – எங்களிட
ஆச்சாளுக் கூறுகா யாகா மலருக்காக்
காய்ச்சாய் வடுகமாங் காய் .(91)

திங்கள் நுதலார் திருமனம் போலே கீறிப் பொங்குகடல் உப்பைப் புகட்டியே எங்கள் இட ஆச்சாளுக்கு ஊறுகாய் ஆகா மலருக்காக் காய்ச்சாய் வடுக மாங்காய் .(91)
பிறைநிலா போன்ற நெற்றி கொண்டவர் மகளிர். அவர்களின் மனம் புரண்டு புரண்டு பொங்கும் கடலலை போல விழும். உப்பை ஊட்டும். இதயமே! நீயும் அப்படித்தான் செய்கிறாய். எங்கள் இட-ஆச்சாள்(ஆத்தாள்) உமை. சிவபெருமானின் இடப்பக்கம் இருப்பவள். அவளுக்கு எங்கள் இதய மாங்காய் ஊறுகாயாக மலரவேண்டும். அப்படி அவளுக்காக ஊறும் காயாக மாறாமல் வெறும் காயாக இருக்கவா, இதய மாங்காயே! நீ மலர்ந்தாய்?

அம்பேந்துங் கையா னவன்பதியி லைம்மாவைக்
கொம்பேந்தி தந்தைபணி கொண்டதோ –அன்பா
யரிந்த மகவை யமுதுக் கழையென்
றிருந்தவன்றன் செங்காட்டி லே .(92)

அம்பு ஏந்தும் கையான் அவன் பதியில் ஐம் மாவைக் கொம்பேந்தி தந்தை பணி கொண்டதோ அன்பாய் அரிந்த மகவை அமுதுக்கு அழை என்று இருந்தவன் தன் செங்காட்டிலே.
ஐம்புல யானைகளை வென்றவன் ஆனைமுகன். ஒரு கொம்பை ஏந்திய கொம்பேந்தி ஆனைமுகன். அவன் குடிகொண்டிருக்கும் ஊர் செங்காட்டங்குடி. அரிந்த மகனை அமுதுண்ண அழை என்று சிறுத்தொண்டனிடம் கூறிக்கொண்டு இருந்த இடம் செங்காட்டங்குடி. ஆனைமுகன் தன் ஒரு தந்தத்தை முறித்து எழுதிக் காட்டியதும், சிறுத்தொண்டர் பிள்ளைக்கறி கொடுத்ததும் ஐம்புல(ஐம்மா) வெற்றிகள்.

முற்றாத காஞ்சியினு முல்லையினும் பாலையினுங்
கற்றான்பின் சென்ற கருணைமால் –பெற்றான்றன்
ஆலைப் பதித்தா ரகளத்தி யாட்கயனார்
வேலைப் பதித்தார் விழி . (93)

முற்றாத காஞ்சியினும் முல்லையினும் பாலையினும் கற்றான் பின் சென்ற கருணைமால் பெற்றான் தன் ஆலைப் பதித்தார் அகளத்தி யாட்கயனார் வேலைப் பதித்தார் விழி .
முற்றாத காஞ்சியினும் = சின்னகாஞ்சியிலும் முல்லையினும் = முல்லைநிலத்திலும், பாலையினும், = பாலைநிலத்திலும், கற்றான் = கணிகண்ணன், பின் சென்ற கருணைமால் = பின்னே சென்ற கருணை கொண்ட (சொன்னவண்ணம் செய்த) பெருமாள், பெற்றான் தன் ஆலைப் பதித்தார் = படுத்துறங்கப் பெற்ற ஆலிலையில் கறியமுது பதித்தார், அகளத்தி யாட்கயனார் = காளத்திநாதருக்கு, (பாடப்பிழை), வேலைப் பதித்தார் விழி = கண் தர தன் விழியில் வேலைப் பதித்தார், கண்ணப்பர்.

கஞ்ச மகையுங் களிற் றானை யின்கொம்புன்
அஞ்சுமுலை நாலுமுலை யானதுவும் – மிஞ்சுபுகழ்
பெற்றான்றன் மாலை பிறர்களித்த துங்குதலை
கற்றான் பிறந்தபின்பு காண் .(94)

கஞ்சம் அகையும் களிற்று ஆனையின் கொம்பு உன் அஞ்சுமுலை நாலுமுலை ஆனதுவும் மிஞ்சு புகழ் பெற்றான் தன் மாலை பிறர் களித்ததும் குதலை கற்றான் பிறந்த பின்பு காண்.
பருவப் பெண் அஞ்சுமுலையாள் மகனைப் பெற்ற பின்னர் நாலுமுலையாள் ஆனாள் என்றது.
தங்கப்பூண் செருகப்பட்ட களிற்று ஆனையின் கொம்பு உன்னைக் கண்டு அஞ்சும் நிமிர்ந்த முலை தொங்கும்(நாலும்) முலை ஆனதுவும் மிகுதியான புகழ் பெற்றான் தன் மாலையைக் கண்டு பிறர் களித்ததும் குதலை கற்றான்(மகன்) பிறந்த பின்பு காண். மகன் பிறந்த பின் பெண் மார்பு தொங்கும். ஆண் மார்பில் மாலை விழும்.

தந்தை பிறந்திறவாத் தன்மையினாற் றன்மாமன்
வந்து பிறந்திறக்கும் வண்மையினால் – முந்தொருநாள்
வீணுக்கு வேளை யெரித்தான் மகன்மாமன்
காணிக்கு வந்திருந்தான் காண் .(95)

தந்தை பிறந்து இறவாத் தன்மையினால் தன் மாமன் வந்து பிறந்து இறக்கும் வண்மையினால் முந்து ஒருநாள் வீணுக்கு வேளை எரித்தான் மகன் மாமன் காணிக்கு வந்திருந்தான் காண்.
வேளனை (காமனை) எரித்தவன் மகன் முருகன்.
அவன் தந்தை சிவன் பிறந்து இறவாத் தன்மையை உடையவன்.
மாமன் (திருமால்) வந்து பிறந்து இறக்கும் (10 அவதாரம்) தன்மை உடையவன்.
முன்பு ஒருநாள் மாமனின் காணிக்கு உரியவனாக முருகன் வந்திருந்தான். முருகன் திருமாலைப் போல அணிகல உடைமைகளைப் பெற்றவன்.
காணிக்கு (காணும் உடைமைக்கு) ஒரு பிள்ளை – என்பது பழமொழி.

பாடல் 96 முதல் 100[தொகு]

96[தொகு]

தாதீது தோதீது தத்தை தூதோதாது
தூதிதூ தொத்தி தத் தூததே – தாதொத்த
துத்திதத் தாதேது தித்தித்தேத் தொத்தீது
தித்தித் ததோதித் திதி (96)

தாதீ துதோ தீது | தத்தை தூதோ தாது | தூது இது | ஊது ஒத்து இதத் தூது | அதே தாது ஒத்தது | இத்து இதத்து | ஆது ஏது தித்தித்து | ஏத்து ஒத்து | ஈது தித்தித்தது | ஓதித் திதி
த-வரிசை எழுத்துக்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட பொருள் பொதிந்த வெண்பா.
தாதீ! (தோழியே) என் தலைவனிடம் சொல்லும் உன் தூதோ தீது.
தத்தை (கிளி) தூதோ தாது (மூலப்பொருள் போன்றது).
தூது என்பது கிளித் தூதுதான்.
இதமான தூதாகிய இதனை ஊது (ஓது).
அதே தாதுப் பொருள் போல் எனக்கு ஒத்தது.
இது என் தலைவன் உள்ளத்தை இத்துப் போகச் செய்து இதமாக்க வல்லது.
அதைவிட (ஆது) ஏது தித்தித்தது (தித்தித்து)?
ஒத்துக்கொண்டு இதனை ஏத்து (போற்று).
ஈது (இதுதான்) தித்தித்தது.
இதனை ஓதித் திதி (திதி = நினைவுநாள் | அவரை நினைக்கும்-நாள் கடமையைச் செய்)

97[தொகு]

மந்நான்கி லொன்றுடையான் முந்நான்கி லொன்றெடுத்து
முந்நான்கி லொன்றின்மேன் மோதினான் – முந்நான்கில்
ஒன்றிருந்தா லாகுமோ ஒ ஒ மடமயிலே
அன்றணைந் தான்வாரா விட்டால் .(97)

மம் நான்கில் ஒன்று உடையான் முந்நான்கில் ஒன்று எடுத்து முந்நான்கில் ஒன்றின் மேல் மோதினான் முந்நான்கில் ஒன்று இருந்தால் ஆகுமோ ஒ ஒ மடமயிலே அன்று அணைந்தான் வாராவிட்டால்.
நான்கு என்னும் சொல் பலமுறை வரப் பாடிய வெண்பா இது. மன்நான்கு என்றது எதுகை நோக்கி மந்நான்கு என நின்றது. மன்னி நிலைபெற்றவை அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு. இவற்றில் ஒன்றாகிய வீடு உடையவன் சிவன். முந்நான்கு பன்னிரண்டு. பன்னிரண்டு இராசிகளில் ஒன்று மேழம் (ஆடு). சிவபெருமான் ஆடுதல் (ஆட்டம்) எடுத்து ஆடுகிறான். அந்த முந்நான்கு இராசிகளில் ஒன்று ரிசபம் (விடை என்னும் காளைமாடு) இந்த விடையின் மேல் சிவன் ஏறினான் (மோதினான்) அதே முந்நான்கில் ஒன்று கன்னி. ஓ ஓ மயில் போன்றவளே! உன்னிடத்தில் கன்னித்தன்மை ஒன்று மட்டும் இருந்தால் போதுமா, அன்று உன்னை அணைத்துக்கொண்டவன் வராவிட்டால்? தலைவன் அரவணைப்பு தலைவிக்கு வேண்டும். சிவன் அருள் அனைவருக்கும் வேண்டும்.

98[தொகு]

ஆனா ரிலையே யயனுந் திருமாலும்
கானாரடி முடிமுன் காண்பதற்கு –மேனாள்
இரவுதிரு வாரூரி லெந்தைபிரான் சென்ற
பரவைதிரு வாயிற் படி . (98)

ஆனார் இலையே அயனும் திருமாலும் கான் ஆர் அடி முடி முன் காண்பதற்கு மேல் நாள் இரவு திருவாரூரில் எந்தைபிரான் சென்ற பரவை திரு வாயிற்படி.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலியார் என்பரை மணந்து சில காலம் வாழ்ந்தார். இதனை அறிந்த சுந்தரரின் முதல் மனைவி பரவையார் மனம் நொந்துபோயிருந்தார். சுந்தரமூர்த்தி திருவாரூர் மீண்டு பரவையார் இல்லம் சென்றபோது பரவையார் கதவைத் தாளிட்டுக்கொண்டு அவரை உள்ளே விடவில்லை. சுந்தரர் பரவையாரின் ஊடலைத் தீர்த்துவைக்கும்படிச் சிவபெருமானை வேண்டினார். தன் தோழனுக்காகச் சிவபெருமானே சென்றபோது பரவையார் ஊடல் தீர்ந்து சுந்தரருக்கு இடம் கொடுத்தார். பரவையாரின் ஊடலைத் தீர்க்க பிரமனும், திருமாலும் பரவையார் வாசற்படிக்குச் செல்லவில்லையே. ஊடல் தீர்க்க அயனும் திருமாலும் ஆனார் இல்லையே. கான் ஆர் அடி முடி = சுடுகாட்டில் ஆடும் சிவபெருமான் அடி, முடி.

99[தொகு]

சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை
ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம்
பிடித்தோர்க்கு மாறுதலை பார் . (99)

சங்கரர்க்கும் ஆறு தலை | சண்முகர்க்கும் ஆறுதலை | ஐங்கரர்க்கும் மாறு தலை ஆனதே | சங்கைப் பிடித்தோர்க்கு மாறு தலை பித்தாநின் பாதம் பிடித்தோர்க்கு மாறுதலை பார் .
எல்லாருக்கும் ஆறு தலை என்று பாடியது.
சங்கரன் தலையில் கங்கை ஆறு உள்ளது.
சண்முகனுக்கு ஆறு தலைகள் உள்ளன.
ஐந்து கை கொண்ட பிள்ளையார்க்கு மாறுபட்ட யானைத்தலை உள்ளது.
சங்கைப் பிடித்த திருமாலுக்கும் பத்துப் பிறவிகளிலும் மாறுபட்ட தலை இருந்தது.
பித்தா! (சிவனே)
உன் திருவடிகளைப் பற்றிய அடியவர்களுக்கும் ஆறுதல் இருப்பதை நீயே பார்.

100[தொகு]

வாதக்காலாந் தமக்கு மைத்துனற்கு நீரிழிவாம்
போதப்பெரு வயிறாம் புத்திரனுக் –கோதக்கேள்
வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர்
எந்தவினை தீர்த்தா ரிவர் . (100)

வாதக்காலாம் தமக்கு | மைத்துனற்கு நீரிழிவாம் | போதப் பெருவயிறாம் புத்திரனுக்கு | ஓதக் கேள் | வந்தவினை தீர்க்க வகை யறியார் வேளூரர் | எந்தவினை தீர்த்தார் இவர் .
தஞ்சைப் பகுதி புள்ளிருக்கு வேளூரில் வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள சிவன் வழிபட்டவரின் நோய்களையெல்லாம் தீர்ப்பார் என்பது ஐதீகம். தனக்கும் தன் உறவினர்களுக்கும் இருக்கும் நோய்களையே தீர்த்துக்கொள்ளாத வைத்தியநாதர் நமது எந்தத் தீவினைகளைத் தீர்த்துவைப்பார் என்று வேடிக்கையாகப் புலவர் வினவும் பாடல் இது.
இவருக்கோ வாதக்கால். ஆடும்போது ஒருகால் வரவில்லை.
மைத்துனன் திருமாலுக்கு நீரிழிவு. பாற்கடல் நீரிலேயே கிடக்கிறார்.
மகன் பிள்ளையாருக்குப் பொதுபொது என்று இருக்கும் பெரிய வயிறு.
சொல்கிறேன் கேளுங்கள்.
தமக்கும் தம்மவருக்கும் வந்த தீவினைகளைப் போக்கிக்கொள்ள முடியாத இவர் நமக்கு வந்திருக்கும் எந்த வினையைத் தீர்த்துவைப்பார்?

பாடல் 101 முதல் 105[தொகு]

101[தொகு]

சீரங்கத் தாருந் திருவானைக் காவாரும்
போரங்க மாகப் பொருவதேன் – ஓரங்கள்
வேண்டாமி தென்ன விபரந் தெரியாதோ
ஆண்டானுந் தாதனுமா னால் . (101)

சீரங்கத்தாரும் திருவானைக்காவாரும் போர் அங்கமாகப் பொருவதேன் ஓரங்கள் வேண்டாம் இது என்ன விபரம் தெரியாதோ ஆண்டானும் தாதனும் ஆனால்.
சீரங்கம், திருவானைக்கா இரண்டும் அருகருகில் உள்ள இரண்டு ஊர்கள். சீரங்கம் பெருமாள் தலம். திருவானைக்கா சிவன்-தலம். சீரங்கத்தில் வாழ்பவர் வைணவர். திருவானைக்காவில் வாழ்பவர் சைவர். எந்தத் தெய்வம் பெரியது என்று வாதிட்டுக்கொண்டு இரண்டு ஊராரும் சண்டையிட்டுக்கொண்டனர். இருவரும் ஒருவரே என்று காளமேகப் புலவர் கூறி இரு ஊராரையும் அமைதிகொள்ளச் செய்த பாடல் இது.
சீரங்கத்தாரும் திருவானைக்காவாரும் போரை ஒர் உறுப்பாக எண்ணிக்கொண்டு சண்டையிட்டுக்கொள்வது ஏன்? ஒருபக்கம் பேசும் ஓரங்கள் வேண்டாம். இது என்ன? விபரம் தெரியாதோ? ஆண்டிப்பண்டாரமும் தாதனும் பயன்படுத்தும் இசைக்கருவிகளைப் பாருங்கள். சங்கு திருமால் கருவி. சிகண்டி சிவன் கருவி. ஆண்டிப்பண்டாரம் சிவன் புகழ் பாடுபவன். தாதன் பெருமாள் புகழ் பாடுபவன். இருவரும் சங்கு, சிகண்டி ஆகிய இரண்டு இசைக்கருவிகளையும் கையில் வைத்துக்கொண்டு சங்கு ஊதியும், சிகண்டி அடித்தும் அவரவர் தெய்வங்களைப் பாடுகின்றனர்.

102[தொகு]

உத்திரத்துக் கோர்நாளும் ரோகணிக்குப் பத்தாநாள்
சித்திரைக்கு நேரே சிறந்தநாள் – எத்திசையும்
காராரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ்சவரி
நாராயணன் பிறந்த நாள் . (102)

உத்திரத்துக்கு ஓர் நாளு ரோகணிக்குப் பத்தாம் நாள் சித்திரைக்கு நேரே சிறந்த நாள் எத்திசையும் கார் ஆரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ் சவரி நாராயணன் பிறந்த நாள்.
ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில்(அட்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் திருமால் பிறந்த நாள். (ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாள்)திருக்கண்ணபுரம் சவரிநாராயணன் பிறந்த நாளைக் காளமேகப்புலவர் குறிப்பிடும் வெண்பா இது

103[தொகு]

சிரித்துப் புரமெரித்தான் செந்துரத்தைப் பற்றி
உரித்துதிரம் பாய வுடுத்தான் – வருத்தமுடன்
வாடுமடி யாருடனே வானவருந் தானவரும்
ஓடுபயந் தீர்த்தநஞ் சுண்ணி .(103)

சிரித்துப் புரம் எரித்தான் செந்துரத்தைப் பற்றி உரித்து உதிரம் பாய உடுத்தான் வருத்தமுடன் வாடும் அடியாருடனே வானவரும் தானவரும் ஓடுபயம் தீர்த்த நஞ்சு உண்ணி .
சிவன் தன் வாயால் சிரித்ததும் அவனது நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீ முப்புரம் எரித்தது.
செந்தூரப் பொடி தரும் மரத்தை உரித்து அதன் செந்நிறப் பட்டை ஆடையை உடுத்தான்.
வருத்தமுடன் வாடும் அடியாரின் பயத்தைப் போக்கி அவர்களுடன் இருந்தான்.
அமுதம் கடையும்போது நஞ்சு (ஆலகால விஷம்) வெளிப்பட்டது. அதனைக் கண்டதும் இருபுறமும் நின்று பாம்புக் கயிற்றை இழுத்துக் கடைந்த வானவரும் தானவரும் அஞ்சி ஓடினர். சிவன் அந்த நஞ்சை எடுத்து உண்டு அவர்கள் ஓடும் பயத்தைத் தீர்த்தான்.

104[தொகு]

ஆலங்குடி யானை யாலால முண்டானை
ஆலங்குடியா னென்றார் சொன்னார் – ஆலங்
குடியானே யாயிற் குவலையத்தா ரெல்லாம்
மடியாரோ மண்மீ திலே . (104)

ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் ஆலம் குடியானே ஆயின் குவலையத்தார் எல்லாம் மடியாரோ மண் மீதிலே .
ஆலங்குடியான் என்னும் சொல்லைப் பிரிமொழிச் சிலேடையாக அமைத்து வியப்பு தோன்றப் பாடிய வெண்பா. திருவாலங்குடியில் கோயில் கொண்டுள்ள சிவன் ஆலாலம் (ஆலகால விடம்) உண்டான். அவனை ஆலம் (விடம்) குடிக்காதவன் என்று ஆர் சொல்லிவைத்தார்கள்? அவன் நஞ்சினைக் குடிக்காவிட்டால் மண்ணுலகில் உள்ள மக்களெல்லாம் அந்த நச்சுக் காற்றை உட்கொண்டு மடிந்துபோவார்கள் அல்லவா?

105[தொகு]

காவல னெங்கள் கனவைப்பாஞ் சோணேசன்
மாவலி கங்கை மணிவாரி – ஆவனலென்
றப்புளங்கை தோய்க்குமதில் வாரி யமுத்தைக்
கொப்புளமென் றூதுங் குரங்கு . (105)

காவலன் எங்கள் கனவைப் பாம் சோணேசன் மாவலி கங்கை மணி வாரி ஆ அனல் என்று அப்புள் அங்கை தோய்க்கும் அதில் வாரிய முத்தைக் கொப்புளம் என்று ஊதும் குரங்கு .
இது ஒரு கற்பனை விளையாட்டு. சோணேசன் (சோமேசன், நிலவு-அழகன், சிவன்) எங்கள் காவலன். எங்கள் கனவைப் பாவிப்பவன். அவன் தலையில் பெருவலிமை கொண்ட மணிநிற வாரியாகிய கங்கை உள்ளது. குரங்கு ஒன்று அவனிடம் சென்றது. அவன் கையில் உள்ள நெருப்பில் கையைச் சுட்டுக்கொண்டது. உடனே அவன் தலையில் உள்ள கங்கை நீரில் கையை விட்டது. கங்கை நீரில் இருந்த முத்துக்களைக் கையில் வாரிக்கொண்டது. தன் கையில் இருந்த அந்த முத்துக்களைப் பார்த்து, கையில் கொப்புளம் என்று அதனைத் தன் வாயால் ஊதியது.

பாடல் 106 முதல் 110[தொகு]

106[தொகு]

பொன்னஞ் சடையறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும்
தன்னெஞ் சுவகையுறத் தாவுமே – அன்னங்கள்
செய்க்கமலத் துற்றுலவுந் தில்லை நடராசன்
கைக்கமலத் துற்றமான் கன்று . (106)

பொன் அம் சடை அறுகம்புல்லுக்கும் பூம் புனற்கும் தன் நெஞ்சு உவகை உறத் தாவுமே அன்னங்கள் செய்க் கமலத்து உற்று உலவும் தில்லை நடராசன் கைக் கமலத்து உற்ற மான் கன்று.
சிவன் புகழ் பாடும் விளையாட்டுப்பாடல் இது. வயல்வெளிகளில் தாமரை பூத்துக்கிடக்கும் ஊர் தில்லை. அந்தப் பூக்களை விரும்பி (நெஞ்சு உவந்து) அன்னப்பறவை தாவும். அந்தத் தில்லையில் இருக்கும் சிவன் தலையில் உள்ள சடை பொன்நிறம். அதில் அறுகம்புல்லும் தண்ணீரும் (கங்கை) உள்ளன. புல்லை மேய்ந்து தண்ணீர் பருகுவதற்காக அச் சிவன் கையில் உள்ள மான் தாவும்.

107[தொகு]

ஏய்ந்த தனங்க ளிரண்டுமிரு பாகற்காய்
வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமே –தேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக்
குக்கலிச்சிக் குங்கலைச் சிக்கு. (107)

ஏய்ந்த தனங்கள் இரண்டும் இருபாகற்கு ஆய் வாய்ந்த விடை செக்கு உலக்கை மாத்திரமே தேய்ந்த குழல் முக்கலச் சிக்கும் பிடிக்கும் மூதேவியாள் கமலைக்குக் கலிச்சிக்கும் கலைச்சிக்கு.
பாகற்காய், செக்குலக்கை என்றெல்லாம் வரப் பாடியது. உமையாகிய அவளுக்கு இரண்டு முலைகள். அவை இரண்டும் தன்னை அம்மையப்பர் என்று, ஆண்பெண் என்று, இரண்டு பாகங்களாக வைத்துக்கொண்டிருக்கும் சிவனுக்கென்று உருவாகி இருக்கின்றன. அவளுக்கு வாய்த்திருக்கும் இடையோ செக்கில் இருக்கும் உலக்கை போல் மட்டுமே உள்ளது. அவள் கூந்தலில் மூன்று கலச் சிக்குப் பிடித்திருக்கும். (சடை போட்டிருக்கும்) மூதேவியான கமலைக்குகும், கலிச்சியாகிய திருமகளுக்கும், கலைச்சியாகிய சரசுவதிக்கும் இதே தலைச்சிக்கு-தான்.

108[தொகு]

நஞ்சுகுடி கொண்டகணை நாலுந் தெரிந்துமதன்
இஞ்சிகுடி தன்னிலும்வந் தெய்வானோ –விஞ்சு
முலைச்சிகரத் தாலழுத்தி முத்தமிட்டுச் சற்றே
கலைச்சிகரத் தாலணைத்தக் கால் . (108)

நஞ்சு குடிகொண்ட கணை நாலும் தெரிந்தும் அதன் இஞ்சிகுடி தன்னிலும் வந்து எய்வானோ விஞ்சு முலைச் சிகரத்தால் அழுத்தி முத்தமிட்டுச் சற்றே கலைச் சிகரத்தால் அணைத்தக்கால் .
நஞ்சுகுடி, இஞ்சிகுடி – என்று பாடியது. முப்புரம் எரித்த சிவபெருமானின் கணை நஞ்சு (விடம்) கொண்டது. நாலும் (எல்லாம்) தெரிந்தவன் சிவன். அவன் இஞ்சிகுடி ஊருக்கும் வந்து அந்தக் கணையை எய்வானோ? மாட்டான். இங்கு உமையம்மை தன் முலைமுகட்டால் அழுத்தி, முத்தமிடுவாள். தன் முந்தானைக்குள் (கலைச்சிகரம்) அணைத்து வைத்திருப்பாள். கடகம்பாடி, பூந்தோட்டம், இஞ்சிகுடி, மேனாங்குடி, கந்தன்குடி என்பன திருவாரூர் மாவட்டத்தில் காவிரி பாயும் ஊர்.

109[தொகு]

தீத்தானுன் கண்ணிலே தீத்தானுன் கையிலே
தீத்தானு முன்றன் சிரிப்பிலே –தீத்தானுன்
மெய்யெலாம் புள்ளிருக்கு வேளூராவுன்னையிந்தத்
தையலா ளெப்படிச் சேர்ந்தாள் .(109)

தீத்தான் உன் கண்ணிலே தீத்தான் உன் கையிலே தீத்தான் னும் உன்றன் சிரிப்பிலே தீத்தான் உன் மெய் எலாம் புள்ளிருக்கு வேளூரா உன்னை இந்தத் தையலாள் எப்படிச் சேர்ந்தாள்
புள்ளிருக்கு வேளூர் சிவனே! உன் கண்ணிலே தீ, கையிலே தீ, சிரிப்பிலே நீ, உடம்பெல்லாம் தீ. இப்படி இருக்கும் உன்னை இந்தப் பெண் உமையம்மை உன்னோடு எப்படி அம்மையப்பர் நிலையில் சேர்ந்திருக்கிறார்.

110[தொகு]

வெண்ணெய் திருடியுண்ட வேணியர னாரிருக்கக்
கண்ணன்மேல் வைத்த களவேது –பெண்ணைத்
தலையிற்சுமந் தான்மால் சரப்பத்தி லேறி
அலையிற் றுயின்றா னரன் . (110)

வெண்ணெய் திருடி உண்ட வேணி அரனார் இருக்கக் கண்ணன்மேல் வைத்த களவு ஏது பெண்ணைத் தலையில் சுமந்தான் மால் சரப்பத்தில் ஏறி அலையில் துயின்றான் அரன் .
தெய்வத்தின் கோலங்களை மாற்றி வைத்துப் பாடிக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளுமாறு பாடிய வெண்பா.
வெண்ணெய் திருடி உண்ட கண்ணன் மேல் களவு ஏது? கண்ணன் பாம்பின் மீது ஏறிப் பாற்கடல் அலையில் துயின்றான்.
அரன் வேணியான். பெண்ணைத் தலையில் சுமந்தான்.
சரபம் = பாம்பு
வேணி = சடைமுடி

பாடல் 111 முதல் 115[தொகு]

111[தொகு]

எட்டி குளத்தி லிருந்து சரக்குவிற்கும்
குட்டிசெட்டி தன்மகளைக் கொண்டுபோய் – நொட்டுதற்கே
ஆயிரம் யானை யெழுநூறு கூன்பகடு
பாயும்பக டெண்பத் தைந்து . (111)

எட்டிகுளத்தில் இருந்து சரக்கு விற்கும் குட்டிசெட்டி தன்மகளைக் கொண்டுபோய் நொட்டுதற்கே ஆயிரம் யானை எழுநூறு கூன் பகடு பாயும் பகடு எண்பத்தைந்து .
எட்டிகுளம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளதோர் ஊர். அங்கு இருந்துகொண்டு தன் சரக்குப் பண்டங்களை விற்பவன் குட்டிசெட்டி என்னும் வணிகன். அவன் தன் மகளை மணம் முடித்துத் தர, 1000 யானை, 700 பசு, 85 களை ஆகியவற்றை அவளுடன் தந்தான்.
நொட்டுதல் = உடலுறவு போன்ற வாயுறவு (இடக்கரடக்கல்)

112[தொகு]

தண்டங்கூர் மாசனங்காள் சற்குணர்நீ ரென்றிருந்தேன்
பண்டங்குறைய விற்ற பாவிகாள் –பெண்டுகளைத்
தேடியுண்ண வட்டீர் தெருக்கள் தெருக்கடொறும்
ஆடிமுத லானிவரைக் கும் . (112)

தண்டங்கூர் மாசனங்காள் சற்குணர் நீர் என்று இருந்தேன் பண்டம் குறைய விற்ற பாவிகாள் பெண்டுகளைத் தேடியுண்ண வட்டீர் தெருக்கள் தெருக்கள் தொறும் ஆடி முதல் ஆனி வரைக்கும் .
ஆனி மாதத்துக்கு அடுத்த மாதம் ஆடி. புலவர் கூறுவது ஆடி முதல் ஆனி வரைக்கும். ஆண்டு முழுவதும் என்பதை இப்படி நயமாகத் தெரிவிக்கிறார். தண்டங்கூர் என்னும் ஊரில் வாழும் மக்களே! நீங்கள் நல்ல பண்புடையவர்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நீங்களோ விலைக்குப் பண்டங்களை விற்கும்போது அளவையில் குறைத்து விற்கும் பாவிகளாக இருக்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் வட்டி சோறு தின்பதற்குப் பயன்படவில்லை. அது முதல் கொடுத்து வட்டி வாங்கும் வட்டி. அந்த வட்டியும் பெண்களைத் தெருத் தெருவாகத் தேடி வட்டியாக வாங்கி உண்ணும் வட்டி. – கொடுமையைக் கடியும் பாடல்

113[தொகு]

நாரா யணனை நரணனென் றேகம்பன்
ஓராமற் சொன்ன வுறுதியால் – நேராக
வாரென்றால் வர்ரென்பேன் வாளென்றால் வள்ளென்பேன்
நாரென்றால் நர்ரென்பேன் நான் . (113)

நாராயணனை நரணன் என்றே கம்பன் ஓராமல் சொன்ன உறுதியால் நேராக வார் என்றால் வர் என்பேன் வாள் என்றால் வள் என்பேன் நார் என்றால் நர் என்பேன் நான் .
நாராயணனைக் கம்பன் நாரணன் என்றான். அவன் சொன்ன வழியில் நான் வார் என்றால் வர் என்பேன். (சொல்வார் > சொல்வர்) வாள் என்றால் வள் என்பேன் (வருவாள் > வருவள்) நார் என்றால் நர் என்பேன் நான்.
கம்பர் சொல்லாட்சி
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட - பால:24 35/2
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் - அயோ:3 94/2
நல்லாறு உடை வீடணன் நாரணன் முன் - யுத்2:18 54/3
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் - யுத்2:19 120/1
நாரணன் படை நாயகன் உய்ப்புறா - யுத்4:37 185/1
நாரணன் திரு உந்தியில் நான்முகன் - யுத்4:37 191/1

114[தொகு]

வாழ்த்து திருநாகை வாகான தேவடியாள்
பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் - நேற்றுக்
கழுதைகெட்ட வண்ணான் கண்டேன் கண்டேனென்று
பழுதையெடுத் தோடிவந்தான் பார் . (114)

வாழ்த்து திருநாகை வாகான தேவடியாள் பாழ்த்த குரல் எடுத்துப் பாடினாள் நேற்றுக் கழுதை கெட்ட வண்ணான் கண்டேன் கண்டேன் என்று பழுதை எடுத்து ஓடிவந்தான் பார்.
பலரும் வாழ்த்தும் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த தேவடியாள் ஒருத்தி தன் குரலால் பாடினாள். அன்றைக்கு முதல்நாள் தன் கழுதை காணாமல் போயிருந்த வண்ணான் தன் கழுதைதான் கத்துகிறது என்று எண்ணிக்கொண்டு தன் பழுதைக் கயிற்றை எடுத்துக்கொண்டு கட்டிப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்வதற்காக என் கழுதையைக் கண்டேன் கண்டேன் என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்தான்.
தேவடியாள் – பணத் தெய்வத்துக்கு அடிமைப்பட்டுத் தன்னை எந்த ஆணுக்கும் தருபவள்
பாழ்த்த குரல் – மென்மை அல்லாத குரல்
பழுதை – பழங்கயிறு

115[தொகு]

காலையிலும் பாலை கடையக் கயிறாகும்
மாலையிலும் பூமுடித்து வாழுமே –சோலைசெறி
செய்யிலா ரம்பயிலும் செந்துருத்தி மாநகர்வாழ்
பொய்யிலா மெய்யரிடும் பூண் .(115)

காலையிலும் பாலை கடையக் கயிறாகும் மாலையிலும் பூமுடித்து வாழுமே சோலை செறி செய்யில் ஆரம் பயிலும் செந்துருத்தி மாநகர் வாழ் பொய் இலா மெய்யர் இடும் பூண்.
செந்துருத்தி மாநகர் என்பது திருக்கழுக்குன்றம் (பெரியபூராணம் 3027). இந்த மாநகரில் குடிகொண்டுள்ள பொய் இல்லாத மெய்யர் ஆகிய சிவபெருமான் அணிந்திருக்கும் பூண்-ஆரம் காலையில் பாலைக் கடையக் கயிறாகப் பயன்படும். மாலையில் பூ முடிந்த ஆரமாக அச் சிவபெருமான் கழுத்தில் இருக்கும்.

பாடல் 116 முதல் 120[தொகு]

116[தொகு]

மண்டலத்தி னாளும் வயித்தியராய்த் தாமிருந்தும்
கண்டவினை தீர்க்கில்லார் கண்டீரோ –தொண்டர்
விருந்தைப்பார்த் துண்டருளும் வேளூரென் னாதர்
மருந்தைப்பார்த் தாற்சுத்த மண் .(116)

மண்டலத்தில் நாளும் வயித்தியராய்த் தாம் இருந்தும் கண்ட வினை தீர்க்கில்லார் கண்டீரோதொண்டர் விருந்தைப் பார்த்து உண்டு அருளும் வேளூர் என் நாதர் மருந்தைப் பார்த்தால் சுத்த மண்.
புள்ளிருக்குவேளூர் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான் வைத்தியநாதர். இவர் பூமண்டலத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் நாள்தோறும் வயித்தியம் செய்பவராக இருந்தாலும் அவரது தொண்டைக் கண்டத்தில் இருக்கும் நஞ்சாகிய வினையைத் தீர்க்கமுடியாதவராக இருக்கிறார், பாருங்கள். தொண்டர் தரும் விருந்தைப் பார்த்து உண்டு அவர்களுக்கு அருள் பாலிக்கும் அவர் தரும் மருந்தைப் பார்த்தால் சுத்தமான வெறும் மண். புள்ளிருக்கு வேளூர் மண்ணை மிதித்தால் நோய் தீர்ந்துவிடுமாம்.

117[தொகு]

கூடல் புனவாயில் குற்றாலம் ஆப்பனூர்
ஏடகநெல் வேலி யிராமேசம் –ஆடானை
தென்பரங்குன் றஞ்சுழியல் தென்திருப்புத் தூர்காசி
வன்கொடுங்குன் றம்பூ வணம் .(117)

கூடல் | புனவாயில் | குற்றாலம் | ஆப்பனூர் | ஏடகம் | நெல்வேலி | இராமேசம் | ஆடானை | தென்பரங்குன்றம் | சுழியல் | தென்திருப்புத்தூர் | காசி | வன்கொடுங்குன்றம் | பூவணம் |
சிவபெருமான் குடிகொண்டுள்ள பல ஊர்களின் பெயர்களை ஒன்றாக அடுக்கிக் கூறிய வெண்பாப் பாடல் இது.
கூடல் என்னும் மதுரை | புனவாயில் என்னும் பொன்பெற்றி | குற்றாலம் | ஆப்பனூர் | ஏடகம் | நெல்வேலி | இராமேசம் | ஆடானை | தென்பரங்குன்றம் | சுழியல் | தென்திருப்புத்தூர் | காசி | வன்கொடுங்குன்றம் | பூவணம் |

118[தொகு]

பண்புளர்க் கோர்பறவை பாபத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கா னாற்காலி –திண்புவியை
ஆள்வார் மதுரை யழகிய சொக்கர்க் கரவம்
நீள்வா கனநன் னிலம் .(118)

பண்புளர்க்கு ஓர் பறவை | பாபத்திற்கு ஓர் இலக்கம் | நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி | திண்புவியை ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு அரவம் | நீள் வாகனம் நன்னிலம் .(118)
பிசி என்னும் விடுகதைப் பாடல்.
பண்பு உள்ளவர்க்கு அன்னம் கொடு.
பாபம் செய்பவர்களுக்குப் பத்து போடும் நிலையைக் கொடு
நட்பு இல்லாத பகைவரைக் கண்டால் நாற்காலி போட்டு அமரச் செய்து நண்பராக்கிக்கொள்.
உலகை ஆளும் மதுரைச் அழகிய சொக்கநாதப் பெருமான் கையில் கங்கணம் பாம்பு.
அந்தச் சிவபெருமானுக்கு வாகனம் நீண்ட நிலவுலகம்.

119[தொகு]

சதுரரங்கர் சங்கத்தழ கர்செங்கைச் சங்கை
அதரமிசை வைத்திலரே யாயின் - முதலை
வருங்குளத்தின் முண்டகக்கை வைப்பரன்றே யன்று
பொருங்களத்தி னூற்றுவர்முன் போய் .(119)

சதுர் அரங்கர் சங்கத்து அழகர் செங்கைச் சங்கை அதரம் மிசை வைத்திலரே ஆயின் முதலை வருங்குளத்தின் முண்டகக் கை வைப்பர் அன்றே அன்று பொரும் களத்தில் நூற்றுவர் முன் போய் .(119)
சதுர் அரங்கர் சங்கத்து அழகர் என்னும் தொடரகள் சிவனையும் திருமாலையும் குறிக்கும் சிலேடையாக வைத்துச் சிவன் ::சங்கு ஊதினான் என்பது போல் பாடியது
சதுர் அரங்கர் = சதுர அரங்கில் ஆடும் சிவன்
சங்கத்து அழகர் = சங்கப் புலவனாக இருந்த சொக்கநாதர்
சதுராடி மாயம் செய்து எமாற்றும் அரங்கர் - திருமால்
சங்கைக் கையில் வைத்திருக்கும் அழகர் - திருமால்
அவர் தன் சிவந்த கையிலுள்ள சங்கைத் தன் வாயிதழில் வைத்து ஊதாமல் இருந்திருந்தால் நூற்றுவர் (துரியோதனன்-ஆதியர்) போர்களம் செல்வதற்கு முன்னர் முதலை வாழும் தாமரைக் குளத்தில் கை வைத்துப் போர் நின்றிருக்கும் அல்லவா? (தாமரைக் குளத்தில் நீராடுவோர் போரிடமாட்டார் போலும்)

120[தொகு]

கண்டங்காற் கிட்டுங் கயிலாயங் கைக்கொண்டுட்
கொண்டக்கான் மோட்சங் கொடுக்குமே – கொண்டத்தூர்
தண்டைக்கா லம்மை சமைத்துவைத்த பூசுணிக்காய்
அண்டர்க்கா மீசருக்கு மாம் .(120)

கண்டம் காற்கு இட்டும் கயிலாயம் கைக்கொண்டு உட்கொண்டக்கால் மோட்சம் கொடுக்குமே கொண்டத்தூர் தண்டைக்கால் அம்மை சமைத்து வைத்த பூசுணிக்காய் அண்டர்க்கு ஆம் ஈசருக்கும் ஆம்.
இராவணன் தன் கழுத்தை அறுத்துச் சிவன் காலடியில் வைத்தான். சிவன் இருக்கும் கயிலாய மலையைத் தன் கைகளால் தூக்கினான். சிவன் தன் காலால் அழுத்தியபோது அந்த மலைக்குள்ளே அகப்பட்டுக்கொண்டான். இப்படிச் செய்தால் மோட்சம் கொடுப்பவர் சிவெருமான். மகளிர் காலில் அணியும் தண்டையைக் கால்-காரை என்றும் கூறுவர். எனவே தண்டைக்கால் அம்மை என்னும் தொடர் காரைக்கால் அம்மையைக் குறிக்கும். காரைக்கால் அம்மையார் சமைத்து வைத்த பூசுணிக்காய்க் கூட்டு (பாடல்) உலகிலுள்ள அனைவர்க்கும் பயன்படும். காய்க்கூட்டு அவர் படைத்த ஈசனுக்கும் பயன்படும்.

பாடல் 121 முதல் 125[தொகு]

121[தொகு]

போலநிற மாவார்க்குப் பூணார மாவாரை
ஏலவதை செய்தா லியல்பாமோ –சாலப்
பழிக்கஞ்சுந் தென்மதுரைப் பாவையிரு நான்கு
விழிக்கஞ்சன் சோமனலை வேந்து .(121)

போல நிறம் ஆவார்க்குப் பூண் ஆரம் ஆவாரை ஏல வதை செய்தால் இயல்பாமோ சாலப் பழிக்கு அஞ்சும் தென்மதுரைப் பாவை யிருநான்கு விழிக் கஞ்சன் சோமன் அலை வேந்து.
சிவன் தன் போலப் பொன்னிறம் கொண்ட பூணாக ஆவாரம்பூவை அணிந்திருப்பவன். அதனை ஏலக்காய் போட்டு வதக்கினால் உண்ணும் இயல்பு வந்துவிடுமா? தென்மதுரைப் பாவை மீனாட்சி. அவள் பழிக்கு அஞ்சுபவள். நான்கு தலை கொண்டவன் பிரமன். நான்கு தலைக்கு எட்டு கண் (இருநான்கு). கஞ்சம் என்னும் தாமரை மேல் இருக்கும் கஞ்சன் அவன். கஞ்சன் மகன் சோமன் (நிலா). அலை – கங்கையாற்று நீரலை. சோமனையும், அலையையும் தலையில் தாங்கிக்கொண்டிருக்கும் வேந்தன் சிவன். நிலாவும், கங்கையும் இவன் தலையில் ஏறிப் பெருமை பெறுவது போல ஆவாரம்பூ பெருமை அடைவதில்லை. சிவன் தலையில் இருந்தால் மட்டும் பெருமை வந்துவிடாது என்பது கருத்து.

122[தொகு]

கண்ண னிடுங்கறியுங் காட்டுசிறுத் தொண்டரன்பிற்
பண்ணுசிறு வன்கறியும் பற்றாதோ –தண்ணோடு
மட்டியையும் சோலை மருதீச ரேபன்றிக்
குட்டியையேன் தீத்தீர் குறித்து .(122)

கண்ணன் இடும் கறியும், காட்டு சிறுத்தொண்டர் அன்பில் பண்ணு சிறுவன் கறியும், பற்றாதோ, தண்ணோடு மட்டியையும் சோலை மருதீசரே பன்றிக் குட்டியை ஏன் தீத்தீர் குறித்து.
புராணக் கதை விளையாட்டு.
வஞ்சப்புகழ்ச்சி அணி.
கண்ணன் தன் கண்ணைப் பிடுங்கிப் பூவாகப் போட்டு உன்னை அருச்சனை செய்தான். | கண்ணப்பர் பன்றிக்கறி தந்து பூசனை செய்தார்.
நீ காட்டியபடி சிறுத்தொண்டர் தன் அன்பின் அடையாளமான மகன் கறியைப் படையலாக உனக்குத் தந்தார்.
இவை உனக்குப் போதவில்லையா?
தேன் மிக்க குளிர்ந்த சோலையில் வாழும் மருதீசரே!
அருச்சுனன் எய்த பன்றிக் குட்டியை ஏன் எய்தீர்?

123[தொகு]

மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான் கொல்லனே – தேடி
இரும்படிப்பான் செக்கானெண் ணெய்விற்பான் வண்ணான்
பரும்புடைவை தப்பும் பறை .(123)

மாடு தின்பான் பார்ப்பான் மறை ஓதுவான் குயவன் கூடி மிக மண் பிசைவான் கொல்லனே தேடி இரும்பு அடிப்பான் செக்கான் எண்ணெய் விற்பான் வண்ணான் பரும்புடைவை தப்பும் பறை.
மாடு தின்பான் பார்ப்பான் – என்பது போல் வேடிக்கையாகப் பாடியது. | பறை(யன்) மாடு தின்பான் | பார்ப்பான் மறை ஓதுவான் | குயவன் கூடி மிக மண் பிசைவான் | கொல்லனே தேடி இரும்பு அடிப்பான் | செக்கான் எண்ணெய் விற்பான் | வண்ணான் பரும்புடைவை தப்பும்
இந்தப் பாடல் பூட்டுவிற்-பொருள்கோள் யாப்பு வகையில் அமைந்துள்ளது. இதனை விற்பூட்டுப்-பொருள்கோள் எனவும், பூட்டுவிற்-பொருள்கோள் எனவும் குறிப்பிடுவர்.
செய்யுளைச் சொற்கள் உள்ளவாறே பொருள் கொள்ளாது, அதன் இறுதியில் உள்ள சொல்லைச் செய்யுளின் முதலில் உள்ள சொல்லோடு கொண்டு வந்து இணைத்துப் பொருள் கொள்வது பூட்டுவிற்-பொருள்கோள் எனப்படும்.
வில்லில் கயிறு கட்டப்படும். அவ்வாறு கட்டும்போது வில்லின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றைக் கொண்டு வந்து வில்லின் மேற்பகுதியில் இணைப்பர். அதுபோல் செய்யுளின் கடைசி அடியின் இறுதியில் உள்ள சொல்லை அதன் முதல் அடியில் முதலில் உள்ள சொல்லோடு கொண்டுவந்து சேர்த்துப் பொருள் கொள்வது, பூட்டுவிற் பொருள்கோள் எனப்படும்.

124[தொகு]

ஆயனுக்குக் கண்மூன்றா மாதிசிவ னுக்கிருகண்
மாயனுக்குச் செங்கையிலே மான்மழுவாம் – நேயமுடன்
சங்கரற்குச் சங்காழி தான்மாலுக் காலமாம்
மங்கையிடத் தாற்காகு மண் .(124)

ஆயனுக்குக் கண் மூன்றாம் ஆதிசிவனுக்கு இருகண் மாயனுக்குச் செம் கையிலே மான் மழுவாம் நேயமுடன் சங்கரற்குச் சங்கு ஆழி தான் மாலுக்கு ஆலம் ஆம் மங்கை இடத் தாற்கு ஆகும் மண் .
ஆயன் | காளமேகப்புலவர் KalamekapPulavar 124
ஆயனுக்கு இருகண்
ஆதிசிவனுக்குக் கண் மூன்றாம்
மாயனுக்கு ஆகும் மண் .
சங்கரற்கு செம் கையிலே மான் மழுவாம்
மாலுக்கு நேயமுடன் சங்கு ஆழி தான்
மங்கை இடத் தாற்கு ஆலம் ஆம்
என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளவேண்டிய பாடல் இது.
கொண்டுகூட்டுப் பொருள்கோள் என்று இதனைக் கூறுவர்.

125[தொகு]

கண்ணபுரங் கோயிற் கதவடைத்துத் தாழ்போட்டார்
மண்ணையுண்டார் வெண்ணெயுண்ட மாயனார் – எண்ணும்
சிரக்கொப் பரையேந்திச் செங்காட்டி லீசர்
இரக்கப் புறப்பட்டா ரென்று .(125)

கண்ணபுரம் கோயில் கதவு அடைத்துத் தாழ் போட்டார் மண்ணை உண்டார் வெண்ணெய் உண்ட மாயனார் எண்ணும் சிரக் கொப்பரை ஏந்திச் செங்காட்டில் ஈசர் இரக்கப் புறப்பட்டார் என்று.
காளமேகப் புலவர் திருக்கண்ணபுரம் கோயிலுக்குச் சென்றபோது கோயில் கதவை அடைத்துவிட்டனர். அவர்கள் கோயில் கதவை அடைத்ததற்குக் காரணம் இது என்று வேடிக்கையாகப் பாடிய பாடல் இது.
வெண்ணெய் உண்ட மாயன் மண்ணை உண்டான். செங்காடு என்னும் ஊரில் (சிறுத்தொண்டர் பிள்ளைக்கறி சமைத்துத் தந்த ஊர்) ஈசன் தலைக்கொப்பரை (தலைமண்டைத் திருவோடு) ஏந்தி இரக்கப் (பிச்சை எடுக்கப்) புறப்பட்டார் என்றெல்லாம் வருந்திக் கோவில் கதவை அடைத்துவிட்டார்களாம். – இப்படி ஒரு தற்குறிப்பேற்ற அணி.

பாடல் 126 முதல் 130[தொகு]

126[தொகு]

கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழ லூதினா னீள்சடையோன் –பொன்திகழும்
அக்கணிந்தான் மாய னரவணையிற் கண்வளர்ந்தான்
சிக்கலிலே வாழுஞ் சிவன் .(126)

கொன்றை மலர் தரித்தான் கோபாலன் கோல் எடுத்து நின்று குழல் ஊதினான் நீள் சடையோன் பொன் திகழும் அக்கு அணிந்தான் மாயன் அரவணையில் கண்வளர்ந்தான் சிக்கலிலே வாழுஞ் சிவன்.
சிவன் சிக்கலில் வாழ்கிறான் என்று வேடிக்கையாகப் பாடியது.
கடைசியில் வரும் [சிக்கலிலே வாழும் சிவன்] என்பதை முதலில் வைத்துப் பொருள் கூட்டினால் போதும். பொருள் விளங்கிவிடும்.
இது பூட்டுவில் பொருள்கோள்
சிக்கலிலே வாழுஞ் சிவன் கொன்றை மலர் தரித்தான் (சிக்கல் – சிக்கல் என்னும் ஊர்)
கோபாலன் கோல் எடுத்து நின்று குழல் ஊதினான்
நீள் சடையோன் பொன் திகழும் அக்கு அணிந்தான் (அக்கு – சடை போட்டிருக்கும் தலைமுடி)
மாயன் அரவணையில் கண்வளர்ந்தான்

127[தொகு]

திருந்தா டரவணியுந் தென்கமலை யீசர்
இருந்தாடா தென்செய் திடுவார் –பொருந்த
ஒருகாலே யல்லவே யொண்டொடிக் காவன்
றிருகாலுஞ் சந்து போனால் .(127)

திருந்து ஆடு அரவு அணியும் தென் கமலை ஈசர் இருந்து ஆடாது என் செய்திடுவார் பொருந்த ஒரு காலே அல்லவே ஒண்தொடிக்கா அன்று இரு காலும் சந்து போனால்.
கமலை என்னும் திருவாரூரில் பாம்பைத் தலையில் அணிந்துகொண்டிருக்கும் ஈசன் தன் தோழன் சுந்தரருக்காக இரு காலாலும் நடந்து தூது போனால் ஆட்டம் போடாமல் வேறு என்ன செய்வார்?
சுந்தரர் இரண்டாவது மனைவியாகச் சங்கிலியார் என்பவரைத் திருவொற்றியூரில் திருமணம் செய்துகொண்டார். இந்தச் செயலுக்காக, திருவாரூரில் வாழ்ந்த முதல் மனைவி ஊடினாள். அவளது ஊடலைத் தீர்க்கத் தன் இரண்டு காலாலும் நடந்து தூது போனார். இரண்டு காலும் போனால் (போய்விட்டால்) ஆடாமல் இருக்கமுடியுமா?

128[தொகு]

உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற வொருகோடி
வெள்ளங்கா லந்திரிந்து விட்டோமோ – உள்ளபடி
ஆமூர்முதலி யமரர்கோ னிங்கிருக்கப்
போமூ ரறியாமற் போய் .(128)

உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற ஒரு கோடி வெள்ளம் காலம் திரிந்து விட்டோமோ உள்ளபடி ஆமூர் முதலி அமரர் கோன் இங்கு இருக்கப் போம் ஊர் அறியாமல் போய்.
திருவாமூரில் குடிகொண்டிருக்கும் முதல்வனாகிய சிவபெருமான் அமரர்களின் தலைவன். அவன் இங்கே திவாமூரில் இருக்கிறான். நாம் போகவேண்டிய ஊரும் இதுதான். இதனை அறியாமல் நம் உள்ளங்கால் தேய்ந்து, அதில் உள்ள வெள்ளை எலும்பு தெரியும்படி, பிறவி பிறவியாக, பல வெள்ளம் ஊழிக்காலம் நடந்து நடந்து திரிந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. சரிதானே? வெள்ளம் என்னும் எண்ணிக்கையைத் தொல்காப்பியம் “அல்பெயர் எண்” என்று குறிப்பிடுகிறது.

129[தொகு]

கம்மாள னங்கிக் கணக்கனென வேதுதித்தார்
செம்மான் சதுரைத் திருவரசை –அம்மாகேள்
வாணியனும் பொன்னேரி வாழும்வெள் ளாளனுமே
சேணியனு மன்றே தெரிந்து .(129)

திருப்பதி பொன்னேரியில் வாழும் அரசாகிய வேங்கடவனை பல்வேறு சாதிக்காரர்களும் வழிபட்டனராம்.
அம்மா கேள் பொன்னேரி வாழும் செம்மான் சதுரைத் திரு அரசை எனவே அன்றே தெரிந்து கம்மாளன் அங்கிக் கணக்கன் வாணியனும் வெள்ளாளனுமே சேணியனும் துதித்தார் - கொண்டுகூட்டு
அம்மா கேள்! திருப்பதி பொன்னேரியில் வாழும் செம்மாப்பினை உடையவன், சதுரகிரித் திரு அரசு என, அன்றே தெரிந்துகொண்டு கம்மாளன், அங்கிக் கணக்கன், வாணியன், வெள்ளாளன் சேணியன் முதலானோர் துதித்தனர்.

130[தொகு]

பாரளக்குந் தூதுசெல்லும் பையரவின் மேனடிக்கும்
சீரகலி சாபத்தைத் தீர்க்குமே .- ஊருலகில்
சண்டச் சகடுதைக்குந் தையலாய் கார்நீல
கண்டத்தா ரூரான் கழல்.(130)

பார் அளக்கும் தூது செல்லும் பை அரவின் மேல் நடிக்கும் சீர கலி சாபத்தைத் தீர்க்குமே ஊர் உலகில் சண்டச் சகடு உதைக்கும் தையலாய் கார் நீலகண்டத்து ஆரூரான் கழல்.
திருவாரூரில் உள்ள சிவபெருமானைத் திருமால் என்று வைத்து, திருமாலின் செயல்களை ஆரூரான் மேல் வைத்துப் பாடியது, இந்தப் பாடல்.
சிவனாக, உலகமெல்லாம் படியளக்கும். | திருமாலாக, வாமன உருவில் மூன்று உலகங்களையும் மூன்று அடியால் அளக்கும்.
சிவனாக, பரவையாரின் ஊடலைத் தீர்க்க, சுந்தரமூர்த்திக்காக, தூது செல்லும். | திருமாலாக, துரியோதனனிடம் தூது செல்லும்.
சிவன், மால், இருவருமே பாம்பின் மேல் ஏறி ஆடுவர்.
சிவன், மால், இருவருமே சிறப்புக்குரிய சனி (கலி) பகவானின் சாபத்தைத் தீர்த்துவைப்பர்.
சிவன், மால், இருவருமே சண்டையிடும்போது தேர்ச்சக்கரத்தை உதைப்பர்.
பெண்ணே! கழுத்தில் நஞ்சு வைத்திருக்கும் திருவாரூர் சிவனது திருவடி இப்படிச் செய்யும்.

பாடல் 131 முதல் 135[தொகு]

131[தொகு]

காலாற் படியளக்குங் கண்ணிடந்து பூசிக்கும்
சேலாங்க மடமாஞ் சிங்கமாம் –பாலாகும்
ஆழியப்பி லேதுயிலு மைவர்க்குத் தூதாகும்
வீழியப்ப ரேறும் விடை .(131)

காலால் படி அளக்கும், கண் இடந்து பூசிக்கும், சேலாங்க மடம் ஆம், சிங்கம் ஆம், பால் ஆகும் ஆழி அப்பிலே துயிலும், ஐவர்க்குத் தூது ஆகும், வீழியப்பர் ஏறும் விடை .
திருமால் விடை (காளை) உருவம் தாங்கி, சிவனைச் சுமக்கின்றார் என்பது ஒரு புராணக் கதை. அதன்படி திருமாலின் செயல்களை, சிவன் ஏறும் விடை செய்ததாக இந்தப் பாடல் கூறுகிறது.
உலகத்தைப் காலால் அளக்கும்.
ஆயிரம் பூ போட்டு, சிவனைப் பூசனை செய்யும்போது பூ ஒன்று குறைந்ததால் தன் கண்களில் ஒன்றைப் பிடுங்கிப் போட்டுப் பூசை செய்யும்.
சேல் மீனை அங்கமாகக் கொள்ளும். மச்சாவதாரம்
மாடத்துத் தூணில் சிங்கம் ஆகும். நரசிம்மம்
பால் நீர்க் கடலில் துயில் கொள்ளும்.
பாண்டவர் ஐவருக்காக, தூது செல்லும்.

132[தொகு]

கடம்பவனச் சொக்கருக்குக் கண்ணன் றான்வேறோ
இடம்பெரிய கண்ணொன்றை யீந்தான் –உடம்பதனில்
செம்பாதி யானான் சுமக்கவெரு தானான்
அம்பானான் தேவியு மானான் .(132)

கடம்பவனச் சொக்கருக்குக் கண்ணன் தான் வேறோ, இடம் பெரிய கண் ஒன்றை ஈந்தான், உடம்பதனில் செம்பாதி ஆனான், சுமக்க எருது ஆனான், அம்பு ஆனான், தேவியும் ஆனான் .
கடம்பவனம் கோயிலில் குடி கொண்டுள்ள சொக்கநாதப் பெருமானுக்குக் கண்ணன் வேறு இல்லை. கண்ணனே தன் கண் ஒன்றைச் சொக்கநாதனுக்குக் கொடுத்து அவன் உடம்பில் பாதி உடம்பாகிக் கிடக்கிறான். சிவனைச் சுமக்கும் எருதாகவும் இருக்கிறான். சிவன் முப்புரம் எரித்தபோது அம்பாகப் பயன்பட்டான். சிவனின் மனைவியாகவும் இருக்கிறான்.

133[தொகு]

கன்னபுர மாலே கடவுளிலு நீயதிகம்
உன்னிலுமே யானதிக மொன்றுகேள் –முன்னமே
உன்பிறப்போ பத்தாம்முயர் சிவனுக் கொன்றுமில்லை
என்பிறப் பெண்ணத் தொலையாதே (133)

கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம், உன்னிலுமே யான் அதிகம் ஒன்றுகேள், முன்னமே உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமில்லை, என் பிறப்பு எண்ணத் தொலையாதே
திருக்கண்ணபுரம் கோயிலில் குடிகொண்டிருக்கும் திருமாலே! நான் சொல்வது ஒன்றைக் கேள். எல்லாக் கடவுள்களிலும் நீ பெரியவன். உன்னைக் காட்டிலும் நான் பெரியவன். எப்படி? உனக்கு பத்தே பத்து பிறப்புதான். சிவனுக்கோ ஒன்றுகூட இல்லை. எனக்கோ எண்ணமுடியாத பிறப்பு. அதனால் நான் பெரியவன். எதுகை நோக்கிக் ‘கண்ணபுரம்’ > ‘கன்னபுரம்’ ஆயிற்று.

134[தொகு]

ஆனை குதிரைதரு மன்னைதனைக் கொன்றகறி
சேனைமன் னரைக்காய்துன் றீயவரை – பூநெயுடன்
கூட்டியமு திட்டான் குருக்களம ராபதியான்
வீட்டிலுண்டு வந்தேன் வருந்து .(134)

ஆனை குதிரை தரும் மன்னைதனைக் கொன்ற கறி சேனை மன் அரைக்காய் துன்று ஈ அவரை பூ நெயுடன் கூட்டி அமுது இட்டான் குருக்கள் அமராபதியான் வீட்டில் உண்டு வந்தேன் வருந்து .
அமராபதியான் என்னும் குருக்கள் வீட்டில் விருந்து உண்டு வந்தேன். ஆனையும், குதிரையும் தன் மேல் ஏற்றிக்கொண்டு வந்து தந்த மன்னைக்கிழங்கைக் கொன்ற கறி, சேனைக் கிழங்கு, மன்னைக் கிழங்கு, அரைக்காய் நிலையில் முற்றாமல் இருக்கும் ஈ-அவரைப்-பூ, ஆகியவற்றை நெய்யுடன் கூட்டிச் சமைத்து விருந்து படைத்தான் அந்தக் குருக்கள். அதனை நான் உண்டுவந்தேன்.

135[தொகு]

அன்னவயல் சூழ்ந்திருக்கு மாரூரா னெஞ்சத்தில்
இன்ன மகவயிர மிருப்பதா –முன்னமொரு
தொண்டன்மக னைக்கொன்றுஞ் சோழன்மக னைக்கொன்றுஞ்
சண்டன்மக னைக்கொன்றுந் தான் –(135)

அன்னம் வயல் சூழ்ந்திருக்கும் ஆரூரான் நெஞ்சத்தில் இன்னம் அக வயிரம் இருப்பதா முன்னம் ஒரு தொண்டன் மகனைக் கொன்றும் சோழன் மகனைக் கொன்றும் சண்டன் மகனைக் கொன்றுந்தான்
சிவபெருமான் செய்த கொலைகளை அடுக்கிச் சிவன்மீது பாய்கிறார். சிவன் ஆரூரில் வாழ்பவன். அன்னம் வயலில் சூழ்ந்திருக்கும் ஊர் திருவாரூர். அவனுக்கு இன்னுமா வயிர நெஞ்சம் இருக்கவேண்டும்? பிள்ளைக்கறி கேட்டுச் சிறுத்தொண்டன் மகனைக் கொன்றான். மகனைத் தேர்க்காலில் ஏற்றிக் கொல்லும் நிலைமையை மனுநீதிச் சோழனுக்குத் தந்தான். சண்டன் என்பவன் தன் மகனைக் கொல்லும்படிச் செய்தான். இவையெல்லாம் போதாதா. என்னையும் பட்டினியால் சாகவைக்கிறானே!

பாடல் 136 முதல் 140[தொகு]

136[தொகு]

வாலி மடிந்ததுவும் வல்லரக்கர் பட்டதுவுங்
கோலமுடி மன்னர் குறைந்ததுவுஞ் சால
மதியுடைய நூற்றொருவர் மாண்டதுவு மையோ
சதவிகரத் தால்வந்த தாழ்வு .(136)

வாலி மடிந்ததுவும் வல் அரக்கர் பட்டதுவும் கோல முடிமன்னர் குறைந்ததுவும் சால மதியுடைய நூற்றொருவர் மாண்டதுவும் ஐயோ சத விகரத்தால் வந்த தாழ்வு .
திருமாலின் கொலைகள் இப் பாடலில் அடுக்கப்படுகின்றன.
வாலியைக் கொன்றான்.
இலங்கை அரக்கர்களைக் கொன்றறான்.
முடிமன்னர் பலரைக் கொன்றான்.
துரியோதனன் முதலான 100 பேர், கன்னன் ஆகிய 101 பேரைக் கொன்றான்.
சத விகரம் = தஞ்சம் அடைந்தவருக்கும் வஞ்சம் செய்தல்.
கண்ணன் பெற்ற வாழ்வெல்லாம் வஞ்சனையால் வந்த வாழ்வு.

SADH VIGARAM = SAA + THI = SADHI - =CHEATING

137[தொகு]

கோளரிருக்கு மூர்கோள் கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் –நாளையே
விண்மாரியற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான் .(137)

கோளர் இருக்கும் ஊர் கோள் கரவு கற்ற ஊர் காளைகளாய் நின்று கதறுமூர் நாளையே விண்மாரி அற்று வெளுத்து மிகக் கறுத்து மண்மாரி பெய்க இந்த வான்.
தன் பொருளை வழிப்பறி செய்த ஊரைப் புலவர் காளமேகம் சபிக்கிறார்.
வழிப்பறி செய்யும் கோளர் இருக்கும் ஊர். பிடுங்கிக்கொள்ளும் திருட்டுத் தொழிலைக் கற்ற ஊர். காளைகளாய் ஆண்கள் நின்று கதறும் ஊர். இந்த ஊர் நாளை முதல் விண் பொழியும் மாரி அற்று வெளுத்துப் போகட்டும். வானம் கறுத்து மண்மழை பொழியட்டும். (மண்மாரி = சூறாவளி, Tropical cyclone)

138[தொகு]

கம்பத்தானைக் கடையிற் கட்டினான் கால்சாய
அம்பைத் தாவித்தான் காலானதே –வம்புசெறி
பூவைகாள் கிள்ளைகாள் பூங்குயில்கா ளன்றில்காள்
பாவையா ளாண்ட பதி .(138)

கம்பத்தானைக் கடையிற் கட்டினான் கால் சாய அம்பைத் தாவித் தான் கால் ஆனதே வம்பு செறி பூவைகாள் கிள்ளைகாள் பூங்குயில்காள் அன்றில்காள் பாவையாள் ஆண்ட பதி
காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏகம்பத்தானைக் காஞ்சி காமாட்சி தன் கடைக்கண்ணால் கட்டிப்போட்டாள். காஞ்சிபுரத்தில் ஓடிய ஆற்று வெள்ளத்தில் (அம்பு) மணல் லிங்கமாக இருந்த ஏகம்பன் கால் சாயும்படி ஓடித், தன் காலைப் பதித்தாள். வம்பளந்து பேசிக்கொண்டிருக்கும் பூவைகளே (மைனா), கிளிகளே, பூ உண்ணும் குயிலகளே, அன்றில்களே தெரிந்துகொள்ளுங்கள். காமாட்சி ஆண்ட ஊர்தான் காஞ்சி.

139[தொகு]

சாரங்க பாணியாஞ் சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த வுகிர்வாளர் –தாரெங்கும்
ஏத்திடுமை யாகரினி தாயிவரும்மைக்
காத்திடுவ ரெப்போதுங் காண் .(139)

சாரங்க பாணியாம் சக்கரத்தர் கஞ்சனை முன் ஓரங்கம் கொய்த உகிர் வாளர் தார் எங்கும் ஏத்திடும் ஐ யாகர் இனிதாய் இவர் உம்மைக் காத்திடுவர் எப்போதும் காண்.
சாரங்கபாணியாம் (கையில் வில் ஏந்திய இராமர்) சக்கரத்தர் (சக்கரத்தைக் கையிலே உடைய திருமால்) கஞ்சனின் (கம்சனை) உறுப்பு ஒன்றை வெட்டி வீழ்த்தினார். மலரும் மாலையை அணிந்தவர். தலைவனாக நின்று யாகப் பலியை ஏற்ப ஏற்பவர். இனிதாக உன்னை (நம்மை) எப்போதும் பாதுகாப்பார்.

கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்[தொகு]

கட்டளைக்கலித்துறை - கட்டளைக் கலித்துறையால் ஆன பாடல்.

’நேர்’ அசையில் தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும் ஒற்றும் குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும், ’நிரை’ அசையில் தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு அடியும் 5 சீர் கொண்டதாக இருக்கும். இடைப்பட்ட 4 தொடைகள் ‘வெண்டளை’ யாப்பில் அமையும். 5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாடு கொண்டதாக இருக்கும்.

இந்தப் பாடலில் இந்த இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.

140-145[தொகு]

140[தொகு]

விண்ணீரும் வற்றிப் புவிநீரும் வற்றி விரும்புமழைத்
தண்ணீரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற காலத்திலே
உண்ணீருண்ணீ ரென்றுபசாரஞ் சொல்லி யுபசரித்துத்
தண்ணீருஞ் சோறுந்தருவான் திருப்பனந்தாட் பட்டனே .(140)

விண் நீராகிய ஈரப்பதம் வற்றி, நிலத்தடி நீரும் வற்றி, உயிரினம் விரும்பும் மழைத் தண்ணீரும் வற்றி, புலவர்கள் தவிக்கின்ற காலத்திலே உண்ணீர் உண்ணீர் என்று உபசாரம் சொல்லி, உபசரித்துத் தண்ணீரும் சோறும் தருவான் திருப்பனந்தாள் பட்டனே.
விண் நீரும் வற்றிப் புவி நீரும் வற்றி விரும்பும் மழைத் தண்ணீரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற காலத்திலே உண்ணீர் உண்ணீர் என்று உபசாரம் சொல்லி உபசரித்துத் தண்ணீரும் சோறும் தருவான் திருப்பனந்தாள் பட்டனே .
திருப்பனந்தாள் ஊரில் வாழ்ந்த பட்டன் (கோயில் படைப்பவன்) உணவு வழங்கும் வள்ளலாகவும் விளங்கிய செய்தியைக் காளமேகப்புலவர் இந்தப் பாடலில் போற்றியுள்ளார்.

141[தொகு]

விள்ளப் புதுமையொன் றுண்டால் வாயினின் மேவுதென்னம்
பிள்ளைக் கொருகுலை மூன்றே குரும்பை பிடித்ததிலே
கொள்ளிக் கணன்றீட்டி யாலோர் குரும்பை குறைந்தமிர்தம்
உள்ளிற் பொதிந்த விரண்டிள நீர்கச் சறைந்ததுவே .(141)

விள்ளப் புதுமை ஒன்று உண்டால் வாயினின் மேவு தென்னம்பிள்ளைக்கு ஒருகுலை மூன்றே குரும்பை பிடித்து அதிலே கொள்ளிக்கண் நன்று ஈட்டியால் ஓர் குரும்பை குறைந்து அமிர்தம் உள்ளில் பொதிந்த இரண்டு இளநீர் கச்சு அறைந்ததுவே
சொல்லத்தக்க புதுமை ஒன்று உண்டு. என் வாயில் வந்து நிற்கும் சிவனுக்கு (தென்னம்பிள்ளைக்கு – தென்னாடுடைய சிவனுக்கு – தட்சிணாமூர்த்திக்கு) ஒரு சடைமுடி (ஒரு குலை). மூன்று தலை (அம்மையின் தலை, அப்பனின் தலை, கங்கையாள் தலை – மூன்றறு குரும்பை) அதில் இருக்கும் கொள்ளிக்கண் (நெற்றிகண்) நன்று. கையிலே ஈட்டி (சூலம்). கச்சு அணிந்த அம்மை முலைகளில் (இரண்டு இளநீர்) ஒன்று குறைந்து (ஓர் குரும்பை குறைந்து) மிஞ்சியிருக்கும் ஒரு முலையிலும் அமிழ்த ஊற்று உள்ளே இல்லாமல் இருக்கிறது.

142[தொகு]

ஆட்டுக்கிசைந்த வரம்பல வாணரவர்க் கெதிரே
நீட்டிற்றுமால் வடபாலினிற் காலெனநீ நினையேல்
சூட்டுற்றமுப் புரஞ்செற்றவர் தம்மைச் சுமந்தலுத்த
மாட்டுக்கென்னோ விடங்கானீட்டல் சொல்லவழக் கில்லையே .(142)

ஆட்டுக்கு இசைந்தவர் அம்பலவாணர் அவர்க்கு எதிரே நீட்டிற்று மால் வடபாலினில் கால் என நீ நினையேல் சூட்டுற்ற முப்புரம் செற்றவர் தம்மைச் சுமந்து அலுத்த மாட்டுக்கு என்னோவிடம் கால் நீட்டல் சொல்ல வழக்கு இல்லையே .
சிவபெருமான் முன் காலை நீட்டலாமா என்று கேட்காதே. ஆடுவதற்கு இசைந்து அம்பலத்தில் ஆடிக்கொண்டிருப்பவர் அம்பலவாணர். அவருக்கு எதிரே திருமால் என்னும் காளைமாடு வடபால் இருக்கும் தன் காலை நீட்டிற்று என்று நீ நினைக்காதே. சிவபெருமான் சினம் கொண்டு முப்புரம் எரித்தவர். அவரைச் சுமந்து அலுத்துப்போன மாட்டுக்குக் கால் நீட்ட என்ன இடம் இருக்கிறது? இதனை முறையிட்டுச் சொல்ல என்ன வழக்கு இருக்கிறது?

143[தொகு]

பாரூரறியப் பலிக்குழன்றீர் பற்றிப் பார்க்குமிடத்
தோரூருமில்லை யிருக்கவென்றாலு முள்ளூரு மொற்றி
பேரூரறியத் தியாகரென்றே பெரும்பேரும் பெற்றீர்
ஆரூரிலேயிருப்பீ ரினிப்போய் விடுமம் பலத்தே . (143)

பார் ஊர் அறியப் பலிக்கு உழன்றீர் பற்றிப் பார்க்குமிடத்து ஓர் ஊரும் இல்லை இருக்க என்றாலும் உள்ளூரும் ஒற்றி பேரூர் அறியத் தியாகர் என்றே பெரும் பேரும் பெற்றீர் ஆரூரிலே இருப்பீர் இனிப் போய்விடும் அம்பலத்தே .
உலகமெல்லாம் ஊரறியப் பிச்சை எடுத்துத் துன்புற்றீர். உன்னை எண்ணிப் பார்க்கும்போது நீ இருப்பதற்கென்று ஒரு ஊரும் இல்லை. என்றாலும் உள்ளத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் திருவொற்றியூர் என்னும் பேரூர் அறியும்படி தியாகேசர் என்னும் பெயருடன் திருவாரூரிலே இருக்கின்றீர். இனி, சிதம்பரம் திருச்சிற்றம்பலம் சென்றுவிடு. அங்கு ஆடலாமல்லவா.

144[தொகு]

வாணியன்பாடிட வண்ணான்சுமக்க வடுகன்செட்டி
சேணியன்போற்றக் கடற்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
கோணியன்வாழ்த்தக் கருமான் றுகிறனைக் கொண்டணிந்த
வேணியனான வன்றட்டான் புறப்பட்ட வேடிக்கையே .(144)

வாணியன் பாடிட வண்ணான் சுமக்க வடுகன் செட்டி சேணியன் போற்றக் கடல் பள்ளி முன் தொழத் தீங் கரும்பைக் கோணியன் வாழ்த்தக் கருமான் துகில் தனைக் கொண்டு அணிந்த வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே.
சாதிப் பெயர்களின் அடுக்கால் சிவபெருமான் ஊர்வலம் வரும் காட்சி போற்றப்படுகிறது.
வாணியன் பாடினான். வண்ணான் சுமந்து சென்றான். வடுகன் செட்டி சேணியன் ஆகியோர் போற்றினர். கடலிலே பள்ளி கொண்டிருக்கும் திருமால் முன்னே தொழுதுகொண்டு சென்றான். யாரை? இனிய கரும்பாகிய சிவனை. கோணத்தெய்வங்கள் வாழ்த்தின. கருமான் துகில்-கொடி பிடித்துக் கொண்டு சென்றான். சடாமுடி தரித்த சிவபெருமான் அவர்களின் சொல்லைத் தட்டாமல் உலாப் புறப்பட்ட வேடிக்கை இதுதான். எல்லாச் சாதியினரும் சிவனை வழிபட்டனர்.

145[தொகு]

கழியும்பிழை பொருட்டள்ளி நன்னூலங் கடலினுண்டு
வழியும்பொதி யவரையினிற் கால்கொண்டு வன்கவிதை
மொழியும்புலவர் மனத்தே யிடித்து முழங்கி மின்னிப்
மொழியும்படிக்குக் கவிகாளமேகம் புறப்பட்டதே .(145)

கழியும் பிழை பொருட்டு அள்ளி நன்னூலம் கடலின் உண்டு வழியும் பொதிய வரையினிற் கால்கொண்டு வன் கவிதை மொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கி மின்னிப் மொழியும்படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே .
பிழை கழியும் பொருட்டு, நல்ல நூலகக் கடலில் அறிவு நீரை அள்ளி உண்டு, வழியும் நீர் பொதியமலையில் அகத்தியராகக் காலூன்றியது. அவர் தந்த தமிழில் வல்லமை மிக்க கவிதை மொழியும் புலவர் மனத்தில் இடித்து, முழங்கி, மின்னிக் கவிதைமழை மொழியும்படிக்குக் கவிஞனாய் காளமேகம் புறப்பட்டு வந்திருக்கிறது.

பாடல் 146 முதல் 150[தொகு]

146[தொகு]

வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லாலெறியப் பிரம்பாலடிக்க விக்காசினியில்
அல்லார்பொழிற் தில்லையம்பல வாணற்கோ ரன்னைபிதா
இல்லாததாழ் வல்லவோ விங்கனே யெளிதானதுவே .(146)

வில்லால் அடிக்கச் செருப்பால் உதைக்க வெகுண்டு ஒருவன் கல்லால் எறியப் பிரம்பால் அடிக்க இக் காசினியில் அல் ஆர் பொழில் தில்லை அம்பலவாணற்கு ஓர் அன்னை பிதா இல்லாத தாழ்வு அல்லவோ இங்கனே யெளிது ஆனதுவே.
சிவபெருமான் திருவிளையாடல்கள் நகைச்சுவையாக இப் பாடலில் கூறப்பட்டுள்ளன. அருச்சுணன் வில்லால் அடிக்கவும், கண்ணப்பன் செருப்பால் உதைக்கவும், சாக்கிய நாயனார் என்னும் ஒருவன் வெகுண்டு கல்லால் எறியவும், பிட்டுக்கு மண் சுமந்தபோது பாண்டியன் பிரம்பால் அடிக்கவும், இந்த உலகில், இரவு போல் இருண்ட பொழில் சூழ்ந்திருக்கும் தில்லையில் உள்ள அம்பலவாணற்கு ஓர் தாயோ தந்தையோ இல்லாத தாழ்வுதானே காரணம்? இப்படி அடியும் உதையும் படும்போது அரவணைக்க ஆருமில்லாதவன் சிவபெருமான்.

147[தொகு]

பாங்குபெறுந் திருவைந் நூற்றிரட்டிப் பணவிடையில்
தூங்குமதி லொருமாவேற்ற முண்டுசுரர் முனிவர்
ஆங்கவர் செப்பிற்கடங்கா துலகமனைத் தும்பெறுமா
ஓங்குமரங்கத் திருப்பெட்டகத்து ளொருமணியே .(147)

பாங்கு பெறும் திரு வைந் நூற்று இரட்டிப் பண இடையில் தூங்கும் அதில் ஒரு மாவேற்றம் உண்டு சுரர் முனிவர் ஆங்கு அவர் செப்பிற்கு அடங்காது உலகம் அனைத்தும் பெறுமா? ஓங்கும் அரங்கத்துத் திருப் பெட்டகத்துள் ஒரு மணியே.
மூன்று பக்கம் நீர் ஓடும் அரங்க நிலப் பகுதிப் பெட்டகக் கோயிலில் (திருவானைக்கா) பொதிந்திருக்கும் மணியாகிய சிவனே! பாம்பு (பணம்) பங்கு போட்டுக்கொண்டிருக்கும் ஆயிரம் தலைக்கு இடையில் தூங்கும் திருமால் என்னும் காளை உனக்கு ஒன்று உண்டு (சிவனது நந்தி திருமால் என் ஒரு கதை). தேவர்களும் முனிவர்களும் போற்றும் சொல்லுக்கு அடங்காதவன் நீ. உனக்கு இந்த உலகம் அனைத்தும் ஈடாகுமா?

148[தொகு]

சத்தாதியைந்தையுந் தாங்காத தெய்வந்தணி மறையும்
கத்தாவெனுந் தெய்வமம் பலத்தேகண்டு கண்களிரு
பத்தானவன் மைந்தன்பொய்த் தேவியைக்கொல்லப் பார்த்தழுத
பித்தானவன் றனையோ தெய்வமாகப் பிதற்றுவதே .(148)

சத்து ஆதி ஐந்தையும் தாங்காத தெய்வம் தணி மறையும் கத்தா எனும் தெய்வம் அம்பலத்தே கண்டு கண்கள் இரு பத்து ஆனவன் மைந்தன் பொய்த் தேவியைக் கொல்லப் பார்த்து அழுத பித்தானவன் தனையோ தெய்வமாகப் பிதற்றுவதே.
சிவன்தான் தெய்வம். திருமாலையோ தெய்வம் என்று பிதற்றுவது? சத்தம் முதலாகிய புலன்கள் ஐந்தையும் தாங்காத தெய்வம் தணிந்து மறைந்துவிடும். கர்த்தா என்னும் செய்வம் அம்பலத்தே ஆடுகின்றது. அதனைக் கண்டு இருபது கண் கொண்ட இராவணன் மைந்தன் இந்திரசித்து பொய்யான சீதையைக் கொல்லப் பார்த்து இராமன் அழுது பித்தானான். அப்படி அழுது, பித்தானவனையோ தெய்வம் என்று பிதற்றுவது?

149[தொகு]

திரண்டிமையோர் தொழுந்தென் னரங்கேசர்முன் செங்கைகளா
றிரண்டுடையோனு மெதிர்சென்றதா லெதிர்ந்தார் தமைக்கண்
டருண்டெழு மைவர்க்குத் தேரூர்பவன் கொளனைவெருண்டு
புரண்டொரு பற்றைக் கடந்தொரு புற்றிற் புகுந்ததுவே .(149)

திரண்டு இமையோர் தொழும் தென் அரங்கேசர் முன் செங்கைகளால் திரண்டு உடையோனும் எதிர்சென்றதால் எதிர்ந்தார் தமைக் கண்டர் உண்டு எழும் ஐவர்க்குத் தேர் ஊர்பவன் கொளனை வெருண்டு புரண்டு ஒரு பற்றைக் கடந்து ஒரு புற்றில் புகுந்ததுவே.
இமையோர் திரண்டு தொழும் தென் அரங்க ஈசனார் (திருவரங்க நாதர்) கை கூப்பி நல்லாடை அணிந்துகொண்டு எதிர் சென்றதால், புற்றிடம் கொண்ட திருவாரூர்த் தியாகேசர் எதிர்கொண்டார். ஐவருக்காகத் தேர் ஓட்டியவர் (அரங்கநாதர்) அன்றோ? தியாகேசர் வெறுண்டு, புரண்டு ஒரு பற்றும் இல்லாமல் புற்றில் நுழைந்துகொண்டார்.

150[தொகு]

மாக்கைக்கிரங் குங்குருகும் வளர்சக்ரவாகப் புள்ளுந்
தாக்கச்சர பங்குழைந்த தெவ்வாறு சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித்திரு வறச்சாலையி லன்னமிட்டுக்
காக்கைக்கொரு கொக்கின்கீழே யிருக்குங் கருங்குயிலே .(150)

மாக் கைக்கு இரங்கும் குருகும் வளர் சக்ரவாகப் புள்ளும் தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு சக தலத்தை ஆக்கிப் பெருக்கித் திரு அறச்சாலையில் அன்னம் இட்டுக் காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங் குயிலே.
பறவைகளின் பெயர்கள் பெயர்களை அடுக்கி, திருமாலின் செயல்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன.
பெரிய கைகளுக்காக வருந்தும் குருகுப் பறவையைத் திருமால் கொன்றான். உன் சக்கரவாளப் புள் தாக்க நீ உறங்கும் பாம்பு குழைந்துபோயிற்றே அது எவ்வாறு? உலகை உண்டாக்கிக் காப்பாற்றுபவன் நீ. அறச்சாலையில் அன்னமிட்டு உயிரினங்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு மாமரத்தின் கீழே இருக்கும் கருங்குயிலே! (கருநிறக் கண்ணன்)

பாடல் 151 முதல் 155[தொகு]

151[தொகு]

தென்னொக்குஞ் சோலைக்கமலைப் பிரான்செஞ் சடாடவிதான்
என்னொக்கு மென்னிலெரி யொக்குமந்த வெரியிலிட்ட
பொன்னொக்குங் கொன்றைகரி யொக்கும்வண்டு நற்பொற்பணிசெய்
மின்னொக்குங் கங்கைகிழக் கொல்லனொக்கு மவ்வெண்பிறையே .(151)

தென் ஒக்கும் சோலைக் கமலைப் பிரான் செம் சடை அடவி தான் என் ஒக்கு மென்னில் எரி ஒக்கும் அந்த எரியில் இட்ட பொன் ஒக்கும் கொன்றை கரி ஒக்கும் வண்டு நல் பொன் பணி செய் மின் ஒக்கும் கங்கை கிழக் கொல்லன் ஒக்கு அவ் வெண் பிறையே .
தென்னை மரத்தை ஒக்கும் சோலைகளைக் கொண்டது கமலை என்று போற்றப்படும் திருவாரூர். கமலை வாழ் சிவன் செந்நிறச் சடைமுடியைக் கொண்டவன். அந்தச் செந்நிறம் எரியும் தீ போல இருக்கும். சடைமுடி எரியும் தீயில் காயும் பொன் போல் இருக்கும். கொன்றை மரம் பூத்திருப்பது போல இருக்கும். பொன்னொளி விசும் மின்னல் போல் இருக்கும். பொன்னணி செய்யும் பொற்கொல்லன் போல கங்கை அங்கே இருக்கும். பொன்னணி போல வெண்பிறை நிலாவும் அங்கு இருக்கும்.

152[தொகு]

கரியொன்று பொன்மிகும்பை யேறக்கற்றவர் சூழ்ந்துதொழ
எரியொன்று சென்றுலாத் தினிலேற விருண்டமஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினிலேறித் தொடர்ந்துவர
நரியொன்று சொந்தக்கன லேறிவந்தது நங்களத்தே .(152)

கரி ஒன்று பொன் மிகும் பையேறக் கற்றவர் சூழ்ந்து தொழ எரி ஒன்று சென்று உலாத்தினில் ஏற இருண்ட மஞ்சு சொரிகின்ற நாகம் மின் சோற்றினில் ஏறித் தொடர்ந்து வர நரி ஒன்று சொந்தக் கனல் ஏறி வந்தது நம் களத்தே.
கரி (யானை), நரி, நாகம் (பாம்பு) வாகனங்களில் சாமி உலா வருகையில் கற்றவர்கள் சூழ்ந்து வந்து தொழுவர். எரியும் தீப்பந்தங்கள் எரியும். சூடத்தில் எரி வைத்து ஆரத்தி காட்டுவர். – இது செய்தி
(யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி) யானை ஒன்று பொன்னை மிகுவிக்கும். அந்தப் பொன் பையில் ஏறும். பொன் பையுடன் கற்றவர் சூழ்ந்து தொழுவர். எரி ஒன்று சென்று உலாவும் மேகத்தில் ஏறும். அது மின்னும். மின்னல் தாக்கி மலை தீப்பற்றி எரியும். எரிந்து கிடக்கும் உயிரினத்தை உண்ண நலி ஒன்று தன் காலை எரியில் ஊன்றி நடந்துவரும். – இது ஒருவகை நிகழ்வு.

153[தொகு]

இருந்தாரை கேள்வனையோங் குமராவை யெழுபுனலைத்
திருந்தாரை வன்னியைமுன் மடித்தோன்செய்ய வேளைப்பண்டு
தருந்தாதை நாயகன் சுந்தரன்தூதன் சமரிலன்று
பொருந்தார்புரத் திட்டதீப்போன் மதியம் புறப்பட்டதே .(153)

இருந்தாரை கேள்வனை ஓங்கும் அராவை எழு புனலைத் திருந்தாரை வன்னியை முன் மடித்தோன் செய்ய வேளைப் பண்டு தரும் தாதை நாயகன் சுந்தரன் தூதன் சமரில் அன்று பொருந்தார் புரத்து இட்ட தீப்போல் மதியம் புறப்பட்டதே .(153)
தலைவன் தன்னிடம் இல்லாதபோது நிலா தீயைப் போல் புறப்பட்டு வந்து காய்கிறதே என்று சொல்லித் தலைவி வருந்துகிறாள். சிவபெருமான் பெரிய தாரையாகக் கொட்டும் கங்கையின் கணவன். படமெடுத்துக்கொண்டு ஓங்கும் பாம்பு, ஏழு கடல், பகைவர், தீ, ஆகியவற்றை முன்பு அழித்தவன். முருகனைத் தரும் தந்தையாகிய நாயகன். சுந்தரமூர்த்தி நாயனாரின் தூதன். போரில் அன்று பகைவர் மூவரின் முப்புரத்தில் தீயை இட்டவன். அவன் இட்ட தீ போல மதியம் புறப்பட்டு என்னைக் காய்கிறதே!

154[தொகு]

ஆராயு முத்தமி ழாற்றூரிற் சோமி யழகுகண்டு
நாரா யணனெடு மாலாகி னான்மற்றை நான்முகனும்
ஓரா யிரமட லூர்ந்தான் விண்மார னுருவழிந்தான்
பேரான வானவர் கோனுங்கண் ணாயிரம் பெற்றனனே .(154)

ஆராயும் முத்தமிழ் ஆற்றூரில் சோமி அழகு கண்டு நாராயணன் நெடு மாலாகினான் மற்றை நான்முகனும் ஓராயிரம் மடலூர்ந்தான் விண் மாரன் உரு அழிந்தான் பேரான வானவர் கோனும் கண் ஆயிரம் பெற்றனனே .(154)
காதல் படுத்திய பாடு | ஆராயும் முத்தமிழ் ஓர் ஆறு. அந்த ஆற்றூரில் இருப்பவள் சோமி. அவளது அழகைக் கண்டு நாராயணன் நீண்ட காதல் மயக்கத்தவன் ஆனான். மற்றைய நான்முகனாகிய பிரம்மாவும் அவளை அடையும்பொருட்டு மடலூரும் மரபினைப் பின்பற்றினான். விண்ணாக இருக்கும் மன்மதனும் தன் உருவத்தை இழந்தான். வானவர் தலைவனான இந்திரன் ஆயிரம் கண் படைத்தவன் ஆனான். (சோமி = அழகி)

155[தொகு]

பறவாத தும்பி கருகாத வெங்கரி பண்புரண்டே
இருகாத தந்தி யுருகாத மாதங்கம் இந்துநுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களப நெடுஞ்சுனையிற்
பிறவாத வாம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனனே(155)

பறவாத தும்பி கருகாத வெங்கரி பண் புரண்டே இருகாத தந்தி உருகாத மாதங்கம் இந்து நுதல் நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும் சுனையில் பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே(155)
தும்பி, கரி, தந்தி, மாதங்கம், இந்து, சிந்துரம், களபம், ஆம்பல், வலஞ்சுழி ஆகிய சொற்கள் யானையையும், ஆனைமுகக் கடவுளையும் குறிக்கும். இதனைப் புலவர் இப்படித் தெளிவுபடுத்துகிறார்.
தும்பி பறக்கும். இந்தத் தும்பி பறக்காது | பறவாத தும்பி
கரி என்பது சான்று. இந்தக் கரி கருதாத ஒன்று | (வெம் = கொடிய) கருகாத வெங்கரி
தந்தி என்பது யாழ் நரம்பு. இதில் பண் புரண்டு இருகும். யானையாகிய தந்தியில் பண் புரண்டு இருகாது | பண் புரண்டே இருகாத தந்தி
பெரிய தங்கம் உருகும். இந்த மாதங்கம் உருகாது | உருகாத மாதங்கம்
இந்து என்பது நிலா. இது நிலா அன்று | இந்து
சிந்துரமாகிய குங்குமம் நெற்றியில் நிறக்கும். யானையாகிய சிந்துரம் நெற்றியில் நிறக்காது | நுதல் நிறவாத சிந்துரம்
களபம் என்பது சந்தனம். இது பூசாத களபம் | பூசாக் களபம்
ஆம்பல் சுனையில் பூக்கும். ஆம்பலாகிய யானை சுனையில் பிறக்காது | நெடும் சுனையில் பிறவாத ஆம்பல்
வலஞ்சுழி என்பது சிவபெருமானை வலம்வந்த யானை | வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே(155)

பாடல் 156 முதல் 159[தொகு]

156[தொகு]

கம்பமதக் கடகளிற்றான் தில்லைவாழும் கணபதிதன் பெருவயிற்றைக் கண்டுவாடி
உம்பரெலாம் விழித்திருந்தா ரயில்வேற் செங்கை உடையவறு முகவனுங் கண்ணீ ராறானான்
பம்புசுடர்க் கண்ணனுமோநஞ் சுண்டான்மால் பயமடைந்தா னுமையுமுடல் பாதியானாள்
அம்புவியைப் படைத்திடுவ தவமதேயென் றயனுமன்ன மிறங்காம லலைகின்றானே .(156)

சொல்லோட்டம்
கம்ப மதக் கட களிற்றான் தில்லை வாழும் கணபதி தன் பெருவயிற்றைக் கண்டு வாடி
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செங்கை உடைய அறுமுகவனும் கண் ஈ ர் ஆறு ஆனான்
பம்பு சுடர்க் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள்
அம் புவியைப் படைத்திடுவது அவமதே என்று அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே .(156)
தில்லையில் குடிகொண்டுள்ள கணபதி தள்ளாடி நடக்கும் ஆண்யானை. மதம் கன்னத்தில் ஒழுகும் யானை. அவன் பெரு வயிற்றைக் கண்டு தங்களுக்கு இல்லையே என்று யார் யார் என்ன ஆனார்கள். புலவர் கூறுகிறார். இயல்பாக அவர்களுக்கு இருக்கும் பண்புகளைக் கணபதியைக் கண்டதால் நிகழ்ந்ததாகக் கூறுவது புலவர் கற்பனை. வானவர்கள் எல்லாம் விழித்துக்கொண்டே இருக்கிறார்கள். கையில் வேலை உடைய ஆறுமுகன் கண் 12 உடையவன் ஆனான். பரந்து பாயும் மூன்றாவது கண்ணை உடைய சிவன் நஞ்சை உண்டான். திருமால் பயந்துபோனான். உமையம்மை பாதி உடலாகி நிற்கின்றாள். அழகிய உலகைப் படைப்பதே அவம் என்று பிரமனும் அன்னப்பறவையை விட்டு இறங்காமல் அலைகின்றான்.

157[தொகு]

பாளைமணங் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாராகேள்
வேளையென்றா லிவ்வேளைபதி னாறுநாழிகைக்கு மேலாயிற்றென்
தோளைமுறித் ததுமன்றிநம்பி யானையுங்கூடச் சுமக்கச்செய்தாய்
நாளையினி யார்சுமப்பா ரென்னாளுமுன் கோயினாசந்தானே .(157)

பாளை மணம் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாரா கேள் | வேளை யென்றால் இவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேல் ஆயிற்று என் தோளை முறித்ததும் அன்றி நம்பியானையும் கூடச் சுமக்கச் செய்தாய் நாளை இனி யார் சுமப்பார் என்னாளும் உன் கோயில் நாசந்தானே .(157)
கயிற்றாறு (கயத்தாறு) என்னும் ஊரிலுள்ள பெருமாளே! பழிகாரா! இது என்ன வேளை என்றால் 16 நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. உன்னைச் சுமந்து என் தோளும் முறிந்தது. உன்னை நம்பியவனைக் கூடச் சுமக்கச் செய்தாய். நாளைக்கு உன்னை யார் சும்பபார்? எந்த நாளும் உன் கோயில் நாசமாகப் போகட்டும்.

158[தொகு]

வீமனென வலிமிகுந்த திருமலை ராயன்கீர்த்தி வெள்ளம்பொங்கத்
தாமரையி னயனோடிச் சத்திய லோகம் புகுந்தான் சங்கபாணி
பூமிதொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான் சிவன் கயிலைப்பொருப்பில்
சோமனையுந் தலைக்கணிந்து வடவரைத் தண் டாலாழஞ் சோதித்தானே .(158)

வீமன் என வலி மிகுந்த திருமலைராயன் கீர்த்தி வெள்ளம் பொங்கத் தாமரையின் அயன் ஓடிச் சத்திய லோகம் புகுந்தான் சங்க பாணி பூமி தொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான் சிவன் கயிலைப் பொருப்பில் சோமனையும் தலைக்கு அணிந்து வடவரைத் தண்டால் ஆழம் சோதித்தானே .(158)
(என்னைக் காப்பாற்றிவரும்) திருமலைராயன் வீமன் போல வலிமை மிக்கவன். அவன் புகழ் எங்கும் பொங்கி வழிகிறது. அதனைப் பார்த்த பிரமன் தன் இருக்கை தாமரையை விட்டுவிட்டு ஓடிச் சத்திய லோகத்தில் புகுந்துகொண்டான். கையில் சக்கரத்தை உடைய திருமால் பூமியிஇருந்து வானம் தொடும்படி வளர்ந்தான். சிவன் கயிலை மலையில் அமர்ந்து நிலாவைச் சூடிக்கொண்டான். தன் தண்டாயுதத்தால் கடலின் ஆழத்தைப் பார்த்தான்.

அதிமதுரகவிராயர் தாக்கு[தொகு]

மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்
ஆச்சென்றா லாயிரம்பாட் டாகாதோ – பேச்சென்ன
வெள்ளக் கவிகாள மேகமே நின்னுடைய
கள்ளக் கவிக்கடையைக் கட்டு .(159)

மூச்சு விடும் முன்னே முந்நூறும், நானூறும், “ஆச்சு” என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? பேச்சு என்ன வெள்ளக் கவி காளமேகமே நின்னுடைய கள்ளக் கவிக் கடையைக் கட்டு .(159)

காளமேகம் எதிர்-தாக்கு[தொகு]

இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய் . (160)

“இம்” என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் “அம்” என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? சும்மா இருந்தால் இருந்தேன் எழுந்தேனே ஆயின் பெரும் காளமேகம் (கரிய மழைமேகம்) பிளாய் . (59)

⅜i==வேறு பாடல்கள்==

விருத்தம்[தொகு]

தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 150 முதல் 152 வரை உள்ளவை
பாடல் 1

1[தொகு]

ஏறு கட்டிய கொட்டிலரங்கமே யீரிரண்டு முகன் வாயிலாயமே
மாறு கண்ணப்பன் வாய்மடைப் பள்ளியே வாய்த்த வோடைத் திருமால் வதனமே
வீறுசேர் சிறுத்தொண்ட னில்லாளுந்தி வேட்ட நற்கறி காய்க்கின்ற தோட்டமே
நாறு பூம்பொழில் சூழ்தில்லை யம்பல நாரி பாகற்கு நாடக சாலையே.

நடுவெழுத்து அலங்காரம்[தொகு]

விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:
பாடல் 5
நடுவெழுத்து விளக்கம்

நாராயணாய - இதில் நடுவெழுத்து 'ய'
சிவாயநம - இதில் நடுவெழுத்து 'ய'

அரியும் சிவனும் ஒன்று என்பதன் விளக்கம் இது.

இந்த உண்மை விளங்குமாறு பாடப்பட்ட பாடல் நடுவெழுத்து அலங்காரம்
இதில் காணம்படும் ஐந்து பாடல்களில் திருமாலும் சிவனும் மாறி மாறிப் போற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.

2[தொகு]

திருமால் வாகன நாவா யிராசி யொன்று
சினை தெவிட்டார் மாதுலன் கோகிலமிவ் வேழின்
உருவா மேலெழுத்தி நடு வெனக்குச் செய்தான்
உகந்து பதினான் கினையுந் தானே கொண்டான்
ஒருபாகத் திருத்தினான் கையில் ஏற்றான்
ஒருமதலை தனக் களித்தான் உண்டான் பூண்டான்
பரிவா யொண் கரத் தமைத்தான் உகந்தான் இந்தப்
பைம்பொழிற் தில்லையுள் ஆடும் பரமன்றானே.

3[தொகு]

கூற்றுவனை வின்மதனை யரக்கர் கோவைக்
கூனிலவைக் குஞ்சரத்தை யிஞ்சி மூன்றை
ஏற்றுலகின் புறவுருவ மாளத் தோள்க
ளிறவெறிப்ப விமையப் பெண் வெருவ வேவக்
காற்றொழிலா னயனத்தால் விரலாற் கற்றைக்
கதிர் முடியாற் கரதலத்தாற் கணையாற் பின்னும்
ஊற்றழியத் உதைத் தெரித்து நெரித்துச் சூடி
உரித் தெரித்தான் அவன் என்னை யுடைய கோவே.

4[தொகு]

பொன்னனை வாளரக்கனை நூற்றுவரைக் காவைப்
பொரு சிலையைக் கனை கடலைப் பொன்ன னீன்ற
நன் மகற்காய்ச் சுரர்க்கா யைவருக்காய்க் காதல்
நட்பினுக்காய்ச் சானகிக்காய் நடவைக்காக
மன்னுகிறால் வடிக்கணையால் வளையாற் புள்ளால்
வயங்கு தோள் வலியால் வானரங்க ளாலும்
முன்னுடற் கீறிச் சிரங் கொண்டமரில் வீழ்த்தி
முதலொடுங் கொண்டிறுத் தடைத்த மோகூரானே.

=[தொகு]

5===[தொகு]

இந்து முடிக்குஞ் சடையா ளரிக்குந் தொண்டை வளநாட்டிற்
சிந்து படிக்கக் கவிபடிக்கத் தெரியா மடவாயுன் றனுக்குக்
கெந்தப் பொடியேன் பூமுடியேன் கிழமாய் நரைத்து முகந் திரைந்தும்
இந்த முறுக்கேன் வீறாப்பே னெடுப்பே னுன்னைக் கொடுப்பேனே.

6[தொகு]

ஏழாளை யடித்த புலிதனை யடித்தான் வீரசென்ன னென்றே காட்டில்
வாழாமற் சிறுபுலிக ளீப்புலி யோடெலிப் புலியாய் வடிவங் கொசடு
பாலாகிக் காடெல்லாம் பரதவிக் கவடுகரடுப் படியில் வந்து
கூழாகி வயிற்றினிற் போம்பொழுது குணம் போகாமற் குமுறுந் தானே.

கட்டளைக் கலித்துறை[தொகு]

பாடல் 1

7[தொகு]

காவென்றுஞ் சிந்தாமணி யென்றுஞ் சொல்லி யென்கையில் அள்ளித்
தாவென்று கேடகத் தரித்திரம் பின்னின்று தள்ளி யென்னைப்
போவென் றுரைக்கவு நாணமங்கே யென்ன போவதிங்கு
வாவென் றிழுக்கவும் வந்தேன் விராலி மலைக் கந்தனே.

கொச்சகம்[தொகு]

பாடல் 5
இவை ஐந்தும் கைக்கிளை என்னும் சிற்றிலக்கிய வகை ஆகும்
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

8[தொகு]

காரென்று பேர் படைத்தாய் ககனத் துரும்போது
நீரென்று பேர் படைத்தாய் நெடுந் தரையில் வந்ததற் பின்
வாரொன்று மென்முலையா ராய்ச்சியர் கை வந்ததற் பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.

9[தொகு]

முன்னாக நீரளக்கு முடிமன்னர் காத்திருக்கு முனிக ளென்னை
மன்னாம லோட்டுவிக்கு மாதரைச் சொற் கேட்பிக்கு மடக்கு மாட்டைப்
பன்னாகந் தலை நறுக்கும் பாலரைச் சொற் கேடகுவிக்கும் படிப்புண்டாக்கும்
என்னாளுங் கிழவருக்கோ ரிடுப்பாகு நடை கொடுக்கு மென்கைக் கோலே.

10[தொகு]

கருந்தலை செந்தலை தங்கான் றிக்கால் கடையிற் சுற்றி
வருந்திக் குடவைக்குந் தாட்டிக்குங் கொத்திட்டு மாய்வ தல்லால்
கரந்தைக ளாண்டி லொருக் கால் வருவது கண்டி ருந்தும்
அரும்புக்கும் கொத்துக்கும் வந்தார் பிழைப்ப தரிதென்பரே.

11[தொகு]

சங்கையிலா மதன் விடுத்த பகழி தைத்த புண் வருத்தந் தன்னை நோக்கிக்
கொங்கையை யொத்திடங் கொடுத்துக் குங்குமச் சாந்தப் பற்றுங் குளிரப் பூசிப்
செங்கனி வாயிதழ் மருந்து முள்ளுக்கே கொடுத் தெனக்குச் செய்த நன்றி
மங்கையரே யிந்திரவி தெற்கு வடக் குதித்திடினு மறந்திடேனே.

12[தொகு]

ஏமிரா வோரி யென்பா னெந்துண்டி வஸ்தி யென்பாள்
தாமிராச் சொன்ன தெல்லாந் தலை கடை தெரிந்த தில்லை
போமிராச் சூழுஞ் சோலை பொருங் கொண்டைத் திம்மி கையில்
நாமிராப் பட்ட பாடு நமன் கையிற் பாடு தானே.