கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/வீரமாமுனிவர்

விக்கிமூலம் இலிருந்து



கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்


1. வீரமாமுனிவர்

மேலை நாட்டு நல்லறிஞர் பலர் தமிழ் நாட்டிற் போந்து சிறந்த தமிழ்ப் பணி செய்துள்ளார்கள். அவருள் இத்தாலிய தேசத்து வித்தகர் சிலர் ; ஜெர்மானிய தேசத்தவர் சிலர் ; ஆங்கில நாட்டைச் சேர்ந்தவர் சிலர். அவர்களால் தமிழ் மொழி பெற்ற நன்மைகள் பலவாகும்.

ஏறக்குறைய இருநூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னே இத்தாலிய தேசத்தில் பிறந்த பெரியார் ஒருவர் தமிழ் நாட்டுக்கு வந்தார். அவர் [1] யேசுநாதர் சங்கத்தைச் சேர்ந்தவர் ; இளமையிலேயே துறவறத்தை மேற்கொண்டவர். பெஸ்கி என்பது அவர் பெயர். தமிழ் உலகம் அவரை வீரமாமுனிவர் என்று போற்றுகின்றது.

தமிழ் நாட்டில் யேசு மத போதகம் செய்வதற்காகத் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினார் வீரமாமுனிவர் ; அந்நாளில் சிறந்த தமிழாசிரியர்களாக விளங்கிய சுப்பிரதீபக் கவிராயர் முதலியோரிடம் முறையாகத் தமிழ் நூல்களை ஓதி உணர்ந்தார். திருக்குறளின் தெள்ளிய நயமும், சிந்தாமணியின் செழுஞ்சுவையும், கம்ப ராமாயணத்தின் கவியின்பமும் அவர் மனத்தைக் கவர்ந்தன. சிந்தாமணியைப் போல் கிருஸ்து மதச் சார்பாக ஒரு பெருங்காவியம் செய்ய அவர் ஆசைப்பட்டார். அவ்வாசையின் கனியே [2]தேம்பாவணி என்னும் அருங்காவியம்.

யேசுநாதரைக் கைத்தாதை சூசையப்பர் சரித்திரம் தேம்பாவணியில் விரித்துரைக்கப் படுகின்றது. சிந்தாமணிையைப் பின்பற்றி எழுந்த அக்காவியத்தில் திருக்குறளின் மணம் கமழ்கின்றது; கம்பரது கவிநலம் திகழ்கின்றது: கதைப் போக்கிலும் பலவிடங்களில் தேம்பாவணி கம்பரது காவியத்தைத் தழுவிச் செல்கின்றது. இதற்கு ஒரு சான்று காண்போம்.

மிதிலைமா நகரில் இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் புரிந்த செய்தியை மிக நயமாக எழுதியுள்ளார் கம்பர். மன்னன் மாளிகையில் மலைபோற் கிடந்தது மண வில். அதனை எடுத்து வளைப்பதற்காக இராமன் சென்றான். இமை கொட்டாமல் எல்லோரும் பார்த்து நின்றார். அவ்வில்லை எளிதில் கையால் எடுத்தான் இராமன். அவ்வளவுதான் தெரிந்தது. அப்பால் அது ஒடிந்து விழுந்த ஓசை இடிமுழக்கம் போல் கேட்டது. வில்லை எடுத்ததற்கும் ஒடித்ததற்கும் இடையே இராமன் என்ன செய்தான் என்பதை எவரும் அறிந்திலர். [3]'எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்' என்று கூறுகின்றார் கம்பர்.

தேம்பாவணியில் முனிவர் இந் நயத்தை வடித்தெடுத்து வைத்துள்ளார். இளம் பாலனாகிய தாவீது கொடிய கோலியாத்து என்பவனைக் கொன்ற செய்தி கிருஸ்தவ ஆகமங்களிற் கூறப்பட்டுள்ளது. கோலியாத்து என்பவன் தேக வலிமை வாய்ந்தவன்; ஆனால் தெய்வ நிந்தனை செய்தவன். அவனது செருக்கையும் சிறுமையையும் அறுத்து ஒழிக்கக் கருதினான் தாவீது. ஆண்டவன் அருளைத் துணைக்கொண்டு, கவணும் கல்லும் கையில் எடுத்துப் பகைவனை நோக்கி நடந்தான். குன்று போல நின்ற கோலியாத்து, பகைத்துப் போர் செய்யத் துணிந்து வந்த பாலனை உருத்து நோக்கினான் ; கோடையிடி போல் முழங்கினான்; "அடா, மடையா மதயானையின் முன்னே சிறு நாயின் வேகம் செல்லுமா ? என்று ஏளனம் பேசினன். அப்பொழுது அக் கொடியவனது நெற்றியில் திண் என்று ஒரு கல்வத்து அடித்தது. திடீரென்று அவன் மண் மேல் விழுந்தான். அக்கல்லை விட்டெரிந்தவன் தாவீதனே என்று எல்லோ எல்லோரும் அறிந்தனர். அவன் எப்போது கல்லைக் கவணில் ஏற்றானான்? எப்படிச் சுழற்றினுன் ? எவ்வாறு வீசினான் ? இவற்றை எல்லாம் அங்கு நிறைந்து நின்றவருள் எவரும் அறிந்திலர் ; எல்லோரும் கல்லடித்த ஓசையைக் கேட்டார் ; வல்லுருவம் மண்ணிடை வீழக் கண்டார் என்று வீரமாமுனிவர் பாடியுள்ளார்.[4]

முனவரது கவித்திறனைக் குறித்து வழங்கும் கதைகள் பலவாகும். அவர் விரைவாகக் கவி சொல்லும்போது நான்கு மாணவர் வரிசையாக அமர்ந்து ஒவ்வொரு வரிசையை ஒவ்வொருவர் ஏட்டில் எழுதுவாரென்றும், ஐந்தாவது மாணவன் அந்நான்கு அடிகளையும் சேர்த்தெழுதிப் பாட்டு வடிவத்தில் காட்டுவானென்றும் ஒரு கதை வழ்ங்குகின்றது. இன்னும் தேம்பாவணிக் காவியத்தை முனிவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய பொழுது அதன் நயங்களை உணர்ந்த சங்கப் புலவர்கள் அவருக்கு வீரமா முனிவர் என்னும் பட்டம் அளித்தார்கள் என்று மற்ருெரு கதை கூறும். இத்தகைய கதைகளின் உதவியில்லாமலே தேம்பாவணிக் கவிதையின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளக்கூடும்.

கிருஸ்து மத சேவையில் சிறந்த ஆர்வம் வாய்ந்த வீரமாமுனிவர் கொள்ளிட நதியின் வட கரையில் உள்ள ஏலாக்குறிச்சி என்ற சிற்றைரில் சிறந்த கோயில் ஒன்று கட்டினர் ; தேவ மாதாவாகிய மரியம்மையின் திருவுருவத்தை அக்கோயிலில் நிறுவினர்; அடியாரைக் காத்தருளும் மாதாவை அடைக்கல மாதா என்று அழைத்தார் ; அம்மாதாவின் அருட்காவலில் அமைந்த இடத்திற்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; அவ்வூரின் பெருமையை அன்பர்கள் அறிந்து இன்புறும் வண்ணம் "திருக்காவலூர்க் கலம்பகம்“ என்னும் பிரபந்தம் பாடினார். அடைக்கல மாதாவின் திருவடிகளில் வீரமாமுனிவர் அணிந்த கலம்பகப் பாமாலை சிறந்த தமிழ் மணம் கமழ்வதாகும்.

திருக்காவலூரில் வீரமாமுனிவருக்கு இருந்த காதல் திருவேங்கடத்தில் குலசேகர ஆழ்வார் கொண்டிருந்த காதலை ஒத்ததாகும்; அரசர் குலத்திற் பிறந்த குலசேகர ஆழ்வார் மண்ணரசையும் விண்ணரசையும் விரும்பவில்லை; திருமால் நின்றருளும் திருவேங்கடமலையில் ஒரு மரமாக நிற்கவும், படியாகக் கிடக்கவும், ஆறாகப் பாயவும் மீனகத் திரியவும் ஆசைப்படுகின்றார்[5] . இத்தகைய ஆசை வீரமாமுனிவரது பாட்டிலும் வெளிப்படுகின்றது. அடைக்கல மாதாவின் அருட்காவலில் அமைந்த திருக்காவலூர்ச் சோலையில் புல்லாக நிற்கவும், வண்டாகத் திரிந்து தேன் உண்டு தெள்ளிய கீதம் பாடவும் விரும்புகின்றர் முனிவர்[6]. எனவே, திருவேங்கடமலையில் கல்லாய்க் கிடக்க விரும்பும் குலசேகர ஆழ்வாரும் திருக்காவலூர்ச் சோலையில் புல்லாய்க் கிடக்க ஆசைப்படும் வீரமாமுனிவரும் தத்தம் சமய வழிபாட்டில் தலைசிறந்த அன்பு வாய்ந்தவர் என்பது இனிது விளங்கும்.

இத்தகைய கவஞராகிய வீரமா முனிவர் தமிழ் அகராதியின் தந்தையாகவும் விளங்குகிறார். தமிழ்ச் சொற்களை அகரம் முதலாகத் தொகுத்தும் வகுத்தும் பொருள் எழுதியவர் அவரே. அவர் காலத்துக்கு முன்பு தமிழ்ப் பதங்களின் பொருள் தெரிந்து கொள்வதற்குப் பல நிகண்டுகள் இருந்தன. திவாகரம் என்பது ஒரு நிகண்டு. அது திவாகர முனிவரால் செய்யப்பட்டது. பிங்கலம் என்பது மற்றொரு நிகண்டு. அவை இரண்டும் மிகப் பழமை வாய்ந்தன. பிற்காலத்தில் சூடாமணி என்னும் நிகண்டு பெயர் பெற்று விளங்கிற்று. அந்நிகண்டுகள் எல்லாம் செய்யுள் நடையிலே அமைந்திருந்தன ; மனப்பாடம் செய்து கொள்வதற்கு ஏற்ற வகையிலே இயற்றப்பட்டிருந்தன. கவிபாடும் புலவர்களும் உரை காணும் அறிஞர்களும் அவற்றைக் கற்றுப் பயனடைந்தார்கள். ஆயினும் கற்றவரேயன்றி மற்றவரும் தமிழ்ப் பதங்களே எளிதாக உணர்வதற்கு மேல் நாட்டு அகராதி முறையே சிறந்ததென்று வீரமாமுனிவர் கருதினர். பண்டை நிகண்டுகளில் அமைந்த பதங்களை வரிசைப்படுத்திச் சதுர் அகராதி என்னும் பெயரால் அரியதோர் நூலை அவர் வெளியிட்டார். அதுவே பிற்காலத்தில் எழுந்த பேரகராதிகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.

இன்னும் தமிழ் நூல்களுள் தலைசிறந்து விளங்கும் திருக்குறளை மேலே நாட்டார்க்கு முதன் முதற் காட்டியவர் வீரமாமுனிவரே என்பது பலர் கொள்கை. முப்பாலாக அமைந்த திருக்குறளின் அறத்துப்பாலேயும், பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார் முனிவர். அந்நூலே ஏனைய ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் வழங்குவதற்கு வழிகாட்டிற்று. ஜெர்மானிய மொழியில் திருக்குறளே முற்றும் மொழி பெயர்த்த கிரால் என்பவர்க்கும், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எல்லீசர், போப்பையர் முதலிய அறிஞர்க்கும் அது பெருந்து திணையாயிருந்தது.

இவ்வாறு பல துறைகளில் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவர், தமிழ் வசன நடையையும் வளர்ப்பாராயினர். கிருஸ்து மத போதகம் செய்யும் உபதேசியார்களுக்காக அவர் ஒரு வசன நூல் எழுதினர்; அதற்கு வேதியர் ஒழுக்கம் என்று பெயரிட்டார். அந்நூலே வீரமாமுனிவர் இயற்றிய உரைநடை நூல்களுள் தலை சிறந்தது என்று போப்பையர் கூறுகின்றார்.

சமயத்துறையில் எழுத்துவாதம் நிகழ்த்துவதிலும், வாக்குவாதம் செய்வதிலும் வீரமாமுனிவர் சிறிதும் தளர்ந்தவரல்லர். தரங்கம்பாடியில் அமைந்த[7] தேனிய சங்கத்தார்க்கும், வீரமாமுனிவர்க்கும் பெரியதோர் வாதம நிகழ்ந்தது. தேனிய சங்கத்தாரது கொள்கைகளை மறுத்து ஒரு நூல் எழுதினார் முனிவர். அதற்கு வேத விளக்கம் என்பது பெயர். தேனிய சங்கத்தார் வேத விளக்கத்தை மறுத்துத் திருச்சபை பேதகம் என்னும் பெயரால் ஒரு சிறு நூல் வெளியிட்டார்கள். அதற்கு மறுப்பாக முனிவர் பேதகம் அறுத்தல் என்று பெயரிட்டு ஒரு கட்டுரை எழுதினர். இவ்வாறாக வாதம் வளர வளரத் தமிழ் வசன நடையும் திருந்தி வளர்வதாயிற்று. இது வாதத்தால் விளைந்த நலம்.

இன்னும் முனிவர் பல வாக்கு வாதங்களும் செய்ததாக அவர் சரித்திரம் கூறுகின்றது. ஒருகால் முனிவரை வாதிலே வெல்லக்கருதி, ஒன்பது சடைப்பண்டாரங்கள் திருக்காவலூரில் போந்து ஒரு மாதகாலம் அவரோடு பெருவாதம் செய்து தோற்றார்கள் என்றும், தோற்றவர்களில் அறுவர் யேசு மதத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்றும், ஏனைய மூவரும் தம் சடையை அறுத்தெறிந்துவிட்டுப் போயினர் என்றும் சொல்லப்படுகின்றது.

பின்னொரு சமயம் சிவப்பிரகாச முனிவர் என்னும் வீர சைவப் பெரியார்க்கும், வீரமாமுனிவர்க்கும் ஒரு வாதம் நிகழ்ந்ததாம். கிருஸ்து மதக் கொள்கைகளை எடுத்துரைத்தாராம் வீரமாமுனிவர். அவற்றைச் செம்மையாக மறுத்து வெற்றி பெற்ற சிவப்பிரகாசர் 'ஏசு மத நிரா கரணம்' என்னும் பெயரால் ஒரு நூல் இயற்றினர் என்று அவர் சரித்திரம் கூறுகின்றது. இக்கதைகளை யெல்லாம் முற்றும் நம்ப முடியாவிட்டாலும் வீரமாமுனிவர் வாது செய்வதில் விருப்புடையவர் என்பது நன்கு விளங்குவதாகும்.

வீரமாமுனிவர் தமிழ் மொழியின் இலக்கணத்தையும் நன்றாக ஆராய்ந்தார். தொல்காப்பியம் முதலாக நன்னூல் ஈறாகவுள்ள இலக்கண நூல்களேயெல்லாம் கற்றார் ; 'தொன்னூல் விளக்கம்: என்னும் பெயரால் ஒரு செந்தமிழ் இலக்கணம் செய்தார். அது பெரும்பாலும் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலை ஒத்திருக்கின்றது. ஆயினும் நன்னூலில் எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும் மட்டுமே உண்டு. வீரமாமுனிவரது தொன்னூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணமும் அடங்கியுள்ளன. "அருந்தமிழ் இலக்கணம் ஐந்தையும் விரித்து விளக்கினன் வீரமாமுனியே“ என்பது தொன்னூலின் சிறப்புப் பாயிரம். மேலைநாட்டுச் சிறந்த கருத்துக்களும் அந்நூலில் அமைந்து அழகு செய்கின்றன. இன்னும் ஏட்டுத் தமிழுக்கும் [8]பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்த முனிவர் அவ்விரு தமிழுக்குமுரிய இலக்கணத்தைத் தனித்தனியாக லத்தீன் மொழியில் எழுதினார். அந்நூல் இரண்டும் இப்பொழுது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இருவகைத் தமிழின் இலக்கணத்தையும் கிருஸ்தவ வேதியர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டார் முனிவர்; திருக்காவலூரில் - ஒரு கல்லூரி அமைத்தார்; அங்குத் தாமே ஆசிரியராக அமர்ந்து இலக்கணம் போதித்தார் ; கிருஸ்து மத வேதியர்கள் பிழையின்றித் தமிழ் மொழியில் பேசவும் எழுதவும் வல்லவராக விளங்குதல் வேண்டுமென்று பெரிதும் முயன்றார்.

இன்னும் நகைச்சுவை நிரம்பிய கதைகளும் எழுதினார் வீரமாமுனிவர். அவற்றுள் 'பரமார்த்த குரு கதை’ என்பது சாலச் சிறந்தது.

இத்தகைய தமிழ்த்தொண்டு புரிந்த முனிவர் அறுபதாம் வயதில் அம்பலக்காட்டிலுள்ள கிருஸ்தவ மடத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் ஆக்கிய நூல்களால் தமிழ்த்தாய் அழகு பெற்றாள். தேம்பாவணி, தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது. தொன்னூல் பொன்னூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களில் ஒருவராக விளங்குகின்றார்.




குறிப்புகள்

  1. யேசுநாதர் சங்கம்-Society of Jesus (S J ) 41—2
  2. தேம்பாவணி என்னும் சொல்லுக்கு வாடாத மாலை என்பது பொருள்.
  3. ”தடுத்திமை யாமல் இருந்தவர் தாளின்
    மடுத்ததும் நாண் துதி வைத்ததும் நோக்கார் கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
    எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்”

    என்பது கம்பர் கவி.
  4. ”கல்லை ஏற்றலும் கவணினைச் சுழற்றலும் அக்கல்
    ஒல்லை ஒட்டலும் ஒருவரும் காண்கிலர் இடிக்கும் செல்லை ஒத்தன. சிலேதுதல் பாய்தலும் அன்னான் எல்லை பாய்ந்திருள் இரிந்தென வீழ்தலும் கண்டார்.”

    என்பது முனிவர் பாட்டு.

  5. ஆதை செல்வத் தரம்பையர்கள் தற்குழ
    வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
    தேனார் பூஞ்சோலைத் திருவேங் கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

    –குலசேகர ஆழ்வார்
  6. "தாள் அணிந்த மதிமுதலாத் தமியனும் அக்
    கமலத்தாள் தாங்கி லேனோ
    கோள் அணிந்த குழலணிதார் குடைவண்டாப்
    புகழ்பாடி மதுவுண் ணேனோ
    வாள் அணிந்த வினைப்படைவெல் வலிச்சிங்கம்
    ஈன்ற ஒரு மானாய் வந்தாள்
    கேள் அணிந்த காவல்நலூர்க் கிளர்புனத்துப்
    பசும்புல்லாய்க் கிடவேன் நானோ“

    –வீரமாமுனிவர்
  7. The Danish Mission at Tranquebar.
  8. பேச்சுத் தமிழின் இலக்கணத்திற்குக் 'கொடுந் தமிழ் இலக்கணம்' என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.