கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/கீர்த்தி பெற்ற கிளியோமிடஸ்

விக்கிமூலம் இலிருந்து

22. கீர்த்தி பெற்ற கிளியோமிடஸ்


கிளியோமிடஸ் என்பவன் சிறந்த குத்துச்சண்டை வீரன். அஸ்திபாலா எனும் நகரத்தைச் சேர்ந்தவன். ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்துடன் வென்றவனுக்கு எத்தனை எத்தனை அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருந்தன தெரியுமா?

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் இகஸ் (lccus) என்பவனுடன் பொருத நேர்ந்தது. இறுதிப் போட்டியான அந்தப் போட்டியில், இருவரும் கடுமையாகக் குத்திக் கொண்டனர்.

படாத இடத்தில் அடிபட்டு இகஸ் மரணமடைந்து விட்டான். எதிர்பாராத விதமாக இது நடக்கவில்லை என்று ஒலிம்பிக் அதிகாரிகள் முடிவு செய்து, கிளியோமிடிசை அந்தப் போட்டியிலிருந்து விலக்கி விடுகின்றார்கள்.

வெற்றிக்கு வெற்றியும், புகழும் புனிதமும் மிக்கப் பரிசும் பறிபோன நிலையில், கிளியோமிடஸ் மனமுடைந்து ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். போட்டியில் பரிசிழந்த கலக்க நிலை. முகத்திலே பட்ட குத்துக்களினால் ஏற்பட்ட மயக்கநிலை.

தன்னை மறந்த நிலையில் வந்துகொண்டிருந்த கிளியோமிடஸ் வழியிலே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அதனருகில் ஆடி அசைந்து சென்றான். அசந்துபோய் நின்றான்.

என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலையில் அவன் அந்த பள்ளிக்கூடக் கூரையைப் பிடித்து இழுக்க, கூரை இடிந்து விழுந்தது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த 60 குழந்தைகளும் உள்ளேயே நசுங்கி இறந்து போகின்றனர். கிளியோமிடிஸ் திகைத்துப் போய் நிற்கிறான்.

செய்தியறிந்த அந்த ஊர்மக்கள், அவனை பிடித்துத் தாக்கிட விரட்டிக்கொண்டு ஓடிவருகின்றனர். பயந்து போன கிளியோமிடிஸ், முடிந்த வரை ஓடி இனி ஓட முடியாது என்ற நிலையில், அதீன் (Athene) எனும் கோயிலுக்குள் ஓடி நுழைந்து கொள்கிறான்.

அடைக்கலம் என்று கோயிலுக்குள் புகுந்தவன், மறைவாகப் பதுங்கிக் கொள்ள இடம் பார்க்கிறான். இடம் அமையவில்லை. அருகே ஒரு பெரிய கனமான பெட்டி ஒன்று இருப்பதைப் பார்க்கிறான்.

அதுவே அவனுக்கு, அந்த நேரத்தில் பாதுகாப்பான இடமாகத் தெரிகிறது.

பெட்டியைத் திறந்து அதனுள் புகுந்து மூடிக் கொள்கிறான்.

ஆத்திரத்துடன் விரட்டிக் கொண்டு வந்த அஸ்திபாலா நகரத்தினர், கோயிலுக்கு வெளியே வந்து நிற்கின்றனர். கதவு உள் தாழ்ப்பாள் போட்டிருப்பதைக் காண்கின்றனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடுகின்றனர்.

அவனைக் காணவில்லை என்ற கோபத்தில் பெட்டிக்குள் தான் அவன் இருக்கிறான் என்று கத்திக், கொண்டே கனத்த பெட்டியை வெகுநேரம் கஷ்டப்பட்டுத் திறக்கின்றனர். பெட்டியும் காலியாகக் கிடைக்கிறது.

என்ன ஆச்சரியம் கிளியோமிடஸ் அங்கும் இல்லை கோயிலுக்குள் நுழைந்ததைப் பார்த்தோம். வேறு எங்கே போயிருப்பான்! வெளியே செல்ல வழி ஏதும் இல்லை? என்று வியப்பாலும் அச்சத்தாலும் சிலையாகி நின்றனர் அனைவரும்.

பிறகு, தங்களது முக்கியமான மனிதர்களில் சிலரை டெல்பி எனும் இடத்திற்கு அனுப்பி, அருள்வாக்குக் கேட்டு வருமாறு அனுப்புகின்றனர். கிளியோமிடஸ் என்ன ஆனான், எங்கே போனான் என்று கேட்ட அஸ்திபாலா நகர முக்கியஸ்தர்களுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சி.

குத்துச் சண்டைக்காரர்கள் என்றால் கடவுளுக்குக் கருணையுள்ளம் உண்டு. இப்பொழுது அவன் குட்டிக் கடவுள். (Demigod) ஆகிவிட்டான். ஆகவே, அவனுக்குள்ள மரியாதை எல்லாம் நீங்கள் செய்ய வேண்டும் என்று அந்த அசரீகூறியது. கேட்டவர்கள் கலங்கிப் போனார்கள்.

அவர்களும் வேறு வழியின்றி அசரீரீ வாக்கை தேவவாக்காக ஏற்றுக் கொண்டு, கிளியோமிடஸை குட்டித் தெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

சாதாரண வாழ்க்கையிலே சரித்திரப் புகழைப் பெற முடியாத கிளியோமிடஸ், குட்டித் தேவதையாக மாறுகின்ற பெரும் பேரினை பெற்றுக் கொண்டான்.

சிறந்த வீரர்களுக்கு வரலாற்றில் மந்திர தந்திர சக்தியை புனைந்து, பரபரப்பு ஊட்டும் மாயா ஜாலக் கதைகளை கற்பனை சாதுர்யத்துடன் படைத்துவிடுகின்ற ஆற்றலை, கிரேக்கர்கள் சற்று அதிகமாகவே பெற்றிருந்தார்கள் போலும்.

அக்காலத்தில் அத்தகைய கதைகள் ஆனந்த உலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் இது போன்ற மாயாஜாலக் கதைகள் நம்மை ஒரு புதிரான, புரியாத புதிய உலகிற்குத்தான் அழைத்துச் செல்கின்றன. இத்தகைய வீரக்கதைகள் சில சமயங்களில் நமக்கு கோரக் கதைகளாகவும் தெரிகின்றன.