கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/தனிவரம் பெற்ற தயாகரஸ்

விக்கிமூலம் இலிருந்து



25. தனிவரம் பெற்ற தயாகரஸ்

ஒருவர் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெறுவது என்பதுவே மிகவும் ஆச்சரியமான அதிசயமான செய்தி. அதிலும் ஒரு பரம்பரையே ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெறுகின்றது என்றால், அது வீரப் பரம்பரையாகத்தானே இருக்கமுடியும்!

அத்தகைய திறமை மிக்கப் பரம்பரையை தொடங்கி வைத்துச் சிறப்படைந்தவன் தயாகரஸ் என்ற வீரன். இவன் குத்துச் சண்டையில் கி.மு. 464ஆம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தான். இவன் செய்த சண்டையின் சிறப்பினையும் நுண் திறனையும் அறிந்த பிண்டார் எனும் பெரும் கவிஞர், எழுச்சி மிக்கப் பாடலால் இவனது வீரத்தைப் புகழ்ந்து பாடினார். அந்தப் புகழ்ச்சி வரிகள், அன் எனும் கோயில் சுவர்களில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்தன என்று ஒரு வரலாற்றுக் குறிப்புக் கூறுகிறது.

இத்தகைய இணையிலா வீரனின் பரம்பரையும் இவனைப் போலவே, வீரமிக்கவர்களாக, வெற்றியாளர்களாகவே விளங்கியிருக்கிறார்கள்.

தயாகரசின் மூத்த மகன் டமாகெடஸ் (Damagetus) என்பவன். பங்கராசியம் எனும் போட்டியில், 452ம் ஆண்டில் வென்றான், அதனைத் தொடர்ந்து கி.மு. 448ம் ஆண்டிலும் வென்று தன் வெற்றியின் மேன்மையை நிலைநாட்டினான்.

மூத்தவனுக்கு இளையவன் சளைத்தவன் அல்லன் என்று நிரூபிப்பது போல், தயாகரசின் இரண்டாவது மகன் அகுசிலாஸ் (Acusilaus) என்பவனும் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்றான்.

கி.மு. 464ஆம் ஆண்டில் ஒலிம்பிக் பந்தய மைதானத்திற்குள் நுழைந்த தயாகரஸ், தன் மைந்தர்கள் வெற்றியைக் காண 16 ஆண்டுகள் கழித்தே வந்திருந்தான் பந்தய மைதானத்திற்கு, இரண்டு மைந்தர்களும் வெற்றிபெற்ற பிறகு, தங்களது தந்தையை தங்கள் தோள்களில் சுமந்து வலம் வந்து பொழுது, வீரமக்களைப் பெற்ற மாவீரன் தயாகரஸ் என்று எல்லோரும் வாயார வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

இந்த பரம்பரையின் வீரம் இத்துடன் முடிந்துபோய் விடவில்லை; தயாகரசின் மூன்றாவது மகன் டோரியஸ் (Doreeus) என்பவன், பங்கராசியம் எனும் போட்டியில் கி.மு. 432 கி.மு. 428 கி.மு. 424 ஆம் ஆண்டுகளில் நடந்த மூன்று பந்தயங்களிலும் தொடர்ந்தாற் போல வென்று, தன் தந்தையின் புகழ் வரலாற்றில் மேலும் பல இனிய வாழ்த்துக்களைச் சேர்த்தான்.

மகன்களின் வீரம் தயாகரசை பேரானந்தத்தில் ஆழ்த்தியது என்றால், தயாகரசின் மகள் பிரனிஸ் என்பவள், ஒலிம்பிக் பந்தய வரலாற்றிலே பெரும் புரட்சியையே செய்துவிட்டாள்.

பிரனிஸ் (Psrenics) என்பவளும் ஒரு ஒலிம்பிக் பந்தய வெற்றி வீரனைத் தான் மணந்து கொண்டிருந்தாள். அவர்களுக்கு ஒரு அண் குழந்தை பிறந்தது. அவர்க்ள அவனுக்கு பிசிடோரஸ் என்று பெயரிட்டார்கள். அவனைக் குத்துச் சண்டை வீரனாக்கி, ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்று. வீர பரம்பரையின் பெருமையைக் காக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சியளித்துக் கொண்டிருந்தான் அவனது தந்தை, தன் கணவன் அகால மரணமடைந்து விடவே அவனுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை தாயான பிரனிஸ் ஏற்றுக்கொண்டாள்.

பிசிடோரசும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் தகுதி பெற்று விட்டான். பந்தயத்தில் நடக்கும் போட்டியில் தன் மகன் எப்படி சண்டை இடுகிறான் என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை, தாய்க்குத் தாயாயும் சண்டை பயிற்சிக்குக் குருவாகவும் விளங்கிய அவளுக்கு இருக்கதா என்ன? அவள் ஆசைக்குக் குறுக்கே நின்றது கிரேக்க நாட்டுச் சட்டம்.

பந்தய மைதானத்திற்குள் பெண்கள் நுழையக் கூடாது என்பது தான் கடுமையான சட்டம். மீறி யாராவது வந்ததையோ, மறைந்திருந்துப் பார்ப்பதையோ கண்டுபிடித்து விட்டால், பிடிபட்டவர்களுக்கு உடனே மரண தண்டனை என்பது தான் அந்தக் கொடுமையான சட்டம்.

பிரனிஸ் தன் உயிரைத் துச்சமாக மதித்தாள். தன் மகன் சண்டையிடுவதைப் பார்த்தேயாக வேண்டும் என்று முடிவெடுத்தாள், ஆணைப்போல மாறு வேடம் அணிந்தாள். பந்தய அரங்கிற்குள் நுழைந்து, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கொண்டாள். பந்தயங்கள் தொடங்கின. பிரனிஸ் மைந்தன் பிசிடோரஸ் குத்துச் சண்டை தொடர்ந்தது. தன் மகன் வெற்றி பெற்றான் என்று அறிந்ததும், பார்வையாளர்கள் பகுதியிலிருந்த பிரனிஸ், பாய்ந்து சென்று, தன் மகனை ஆரத் தழுவி, முத்தமிட்டுக் களிகூர்ந்தாள்.

அந்த வேகத்திலும் ஆவேசத்திலும் தன்னை மறந்தாள். அத்துடன் நின்றால் பரவாயில்லையே! அவளது ஆடை குலைந்தது. மாறுவேடம் கலைந்தது. பெண்ணொருத்தி உள்ளே வந்துவிட்டாள் என்ற பெருங்குரல் அரங்கிற்குள்ளே அலறியது. சட்டத்தை மீறிய பெண்ணைத் தண்டிக்க வேண்டுமென்ற நிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டாள்.

பிரனிஸ் தன் கதையைக் கூறினாள். தன் பரம்பரையைப் பற்றிக் கூறினாள். தன் மகனுக்குத் தான் பயிற்சி அளித்த விதத்தை விவரித்தாள். தன் மகன் சண்டையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை விளக்கினாள். தன் கடமை முடிந்தது. தன் உயிரைத் தர தனக்கு ஆட்சேபனை இல்லை. மரண தண்டனையை மனமார வரவேற்கிறேன் என்று வாக்குமூலம் அளித்தாள்.

அப்பொழுதுதான் ஒலிம்பிக் அதிகாரிகளுக்கு உணர்வு வந்ததுபோலும், பெண்களுக்கும் போட்டியில் இவ்வளவு ஆர்வமா என்று தெரிந்து கொண்டனர். கடுமையான விதிகளைத் தளர்த்திட விரும்பினர். பெண்களும் பந்தய மைதானத்திற்குள் வரலாம் என்று அனுமதி அளித்தனர். பின்னர் பெண்கள் பந்தயத்தில் கலந்து கொண்ட வரலாறும் தொடர்ந்தது.

இவ்வாறு உயிரையும் திரணமாக மதித்து, ஒலிம்பிக் விதிகளையே மீறி புரட்சியையும் புது மாற்றத்தையும் அளித்த பிரனிஸ், தன் தந்தை தயாகரசுக்கு மேலும் புகழினையே அளித்திருக்கிறாள்.

ஆரம்ப காலத்தில், பெண் குலத்திலிருந்து ஒரே ஒரு பெண்ணை மட்டும் பார்க்க அனுமதித்திருந்தனர். அவள் கோயில் தலைமைப் பூசாரியான பிரிஸ்டஸ் ஆப் டெமிடர் (Priestesc of Demeter). அதன் பின் ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்கின்ற வீரனுடைய தாய் தந்தை, மகன் என்பவர்கள் மட்டுமே வரலாம் என்று அனுமதித்திருந்தனர்.

வருபவர்கள் ஆணா பெண்ணா என்பதை அறிய பந்தயத்தில் போட்டியிடும் வீரர்களைப் போலவே, பயிற்சியாளர்களும் பிறந்தமேனியுடனே வரவேண்டும் என்ற கடுமையான வழியையும் ஏற்படுத்தினார்கள்.

இவ்வாறு தயாகரஸ் பரம்பரையினர், ஒலிம்பிக் பந்தயங்களில் தோன்றி, ஒரு புது சகாப்தத்தையும் பெரும் புரட்சியையும் உண்டு பண்ணிவிட்டார்கள். தயாகரஸ் தனி வரம்பெற்ற வீரன் போலவே கிரேக்க வரலாற்றில் கீர்த்தியுடன் இன்றும் விளங்குகிறான். ஏனெனில்.

தக்கார் தகவிலார் என்பார் அவரவர்தம்
எச்சத்தார் காணப்படும் என்பது பொய்யா மொழியின்
பொன்மொழியல்லவா!